சபாஷ்! சிவ.கார்த்திகேயன்! அப்படிச் சொல்லுங்க! அப்படியே நில்லுங்க!


சிவ.கார்த்தி -நல்ல பையன்..?!
  இன்றைய தினமணி (06-04-2014-ஞாயிறு “கொண்டாட்டம்“ பகுதி) யில் சிவ.கார்த்திகேயன் சொல்லியிருந்தது  ரொம்பப் பிடிச்சிருந்தது!
    “கோடிகள் புழங்கும் திரையுலகில் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்“என்ற சிவ.கார்த்தி, நிறைய திரைப்படங்கள் பார்க்கும் கனவோடு சென்னை வந்து இப்படித் தானே ஒரு திரைப்பட நடிகனாவதை எதிர்பார்க்க வில்லை என்றும், “சிலவாய்ப்புகளில் எதையும் எதிர்பார்க் காமல் உழைத்துக் கொண்டே இருந்தேன்.. உழைப்புக்குக் கிடைத்த இடம்தான் இதுஎன்றார்.
     “விஜய் தொலைக்காட்சியின் வர்ணனையாளர் குரல்தேர்வுக்காக காத்திருந்த போது இருந்த படபடப்பு இப்போதும் இருக்கிறது“ என்றதோடு, புதுமுக இயக்குநர்களின் திறமையைப் புகழ்ந்து தள்ளியிருந்தார்.
“சார், உங்களுக்கான இடம் பெருசு! உங்க டைமிங், காமெடி சென்ஸ் எல்லாருக்கும் வராது – என கைவலிக்கக் குலுக்கியவர்களை நினைத்தால் கும்பிடத் தோன்றுகிறது“ என்றார். தொடர்ந்து-
 “தொழிலுக்குக் கொடுக்குற அதே மரியாதையை என் பெர்சனல் வாழ்க்கைக்கும் கொடுக்கிறேன், அதனால், சினிமா தவிர வேற எந்த நினைப்பும் இல்லை. ஷூட்டிங் முடிந்தால் வீடு என்பதில் கவனமாக இருக்கிறேன். இந்த சினிமா வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் தவம் மாதிரித் தான் பார்க்கிறேன். எந்த இடத்திலும் தவறுகளைச் சுட்டிக் காட்ட ஆள்கள் இருக்கிறார்கள்..யாரையும் அன்னியமாகப் பார்க்க முடியாது என்றது ரொம்பப் பிடித்திருந்தது. இன்றளவும், “தமிழ்த்திரையுலக மார்க்கண்டேயன்“ எனறு புகழப்படும் நடிகர் திரு.சிவக்குமாரின் நற்பெயருக்குக் காரணமே இதுதான்!
இதன் உச்சமாக, கடைசியில் சிவா சொன்னதுதான் அருமை –
“டாஸ்மாக் பாட்டு வேண்டாம், ப்ளீஸ்“ எனக் கேட்டுக் கொண்டார்கள், அந்த அக்கறையான வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுக்கத் தோன்றுகிறது. “அடுத்தடுத்த படங்களில் அப்படி இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்“ என்று வாக்குக் கொடுத்திருக்கிறேன்“ என்றது அண்மையில் கேட்டிராத குரல்!
இதற்காகவே சிவ.கார்த்தியைப் பாராட்ட வேண்டும், பாராட்டுவோம்!
அட! உண்மையிலயே இது பாராட்டு தாங்க! 
வஞ்சப்புகழ்ச்சி இல்ல!
இந்த இடத்தில், புகைப்பது போல இனி நடிக்கமாட்டேன் என்பதாக ஒரு நடிகர் வாக்குக் கொடுத்தது நினைவுக்கு வருகிறது... ஆமா..ல்ல? 
தொடர்ந்து, “அழகான வாழ்க்கை இருக்கிறது, நிறைய சினிமாக்கள் காத்திருக்கின்றன. வழிநடத்த நண்பர்கள் இருக்கிறார்கள், இதுவே போதும், நிறைய நடிகர்கள் தவற விடுகிற இடங்களை விஷயங்களைத் தேடிப்பிடிக்க வேண்டும், கனவுகளைத் தேடி அடையவேண்டும்என்று  கவிதைபோல அவர் முடித்ததுதான், என்னை மிகவும் கவர்ந்தது.
அடடே! சிவ.கார்த்திகேயன்!
அப்படிச் சொல்லுங்க, அப்படியே நில்லுங்க!
“பாபா கௌண்டிட்ங் ஸ்டார்ட்ஸ்..ஒன்-ட்டூ-த்ரீ...எய்ட்-நைன்-டென்  சொல்லி, பான்பராக்கைப் போட்டு, சிகரெட்டைப் பற்ற வைத்து, சாராயத்தை கடகடவென்று குடித்துக் கிளம்பினால்... (அடாடா.. ஷூ பொறிபறக்கும் தமிழ்ச் சினிமாதான் எத்தனை எத்தனை?!! -- நல்லவேளை அந்தப் படம் “டென்“ நாள்தான் ஓடிச்சு!)
“ஒய் திஸ் கொலைவெறி கொலைவெ றிடி“ த்ரீ படத்தில், தான் செய்த தவறை காதலிமேல் தள்ளிவிட்டு, பெண்கள் அனைவரையும் கேவலப்படுத்தும் பாட்டு ஒன்றை –தமிழையும் கேவலப்படுத்தி- டாஸ்மாக்கில் இருந்து பாடிப்புகழ்ந்த சினிமா தான் எத்தனை? (நல்லவேளையாக இதுவும் “த்ரீ“நாள்தான் ஓடிச்சு! படம் அதானே?)
“வேணாம் மச்சான் வேணாம் இந்தப் பொண்ணுங்க காதலே – மூடி திறக்கும்போதே நம்ம கவுக்கும் குவாட்டருஎன்று, தன்காதலி பிரிந்ததற்கு ஊரிலுள்ள அத்தனை பெண்களையும் கேவலப்படுத்தி ஒரு பெரும் தலைவர் பேரன், அடுத்த தலைவரின் மகனே ஒரு டாஸ்மாக் பாரில் பாடிவிட்டார்! (ஆனா அவரு குடிக்கமாட்டாராம்..படத்தில் வருது!)
இதையெல்லாம் தணிக்கையில் தடைசெய்ய முடியாதுதான்! ஆனால் மக்கள் மனத்தில் ஆழப் பதிவது பாட்டு, நடிப்புடன் செய்தியும்தானே?  
இதனால்தான் எம்ஜிஆர் கடைசிவரை குடிகாரனாக நடித்ததில்லை. ஒரு படத்தில் (ஒளிவிளக்கு?) குடித்துவிடுவார், உடனே அவரது மனச்சாட்சி வெளி வந்து அவரைப் பார்த்துப் பாடும் பாருங்க ஒரு பாட்டு-
“தைரியமாகச் சொல்நீ மனிதன் தானா? மனிதன் தானா? –இல்லை...    நீதான் ஒருமிருகம், இந்த மதுவில் விழும்நேரம்“ இது பிரபல பாட்டு!
அப்படி எம்ஜிஆர் மாதிரி தண்ணியடிக்காம, பெண்களைக் கிண்டல் பண்ணிப் பாடாம சிவ.கார்த்திகேயன் மட்டும் நடிச்சார்னா அடுத்த எம்ஜிஆர் சிவ.கார்த்திகேயன்தான்! (எம்ஜிஆர், தன்காதலிய மட்டும் உருட்டி, பெரட்டிக் காதலிச்சது வேற! காதலிக்கிற பொண்ணத் தவிர மத்த பொண்ணெல்லாம் அவருக்குத் தங்கச்சிதான். ஏன், உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் ஓடிஆடிக் காதல்பாட்டுப் பாடி முடித்தவுடன் “நீ என் தங்கச்சிமாதிரி“ என்பார்! எப்படினா கனவுகண்டது அந்தப் பொண்ணுதானே?!)
எம்.ஜி.ஆருக்கும் ப்ளஸ், மற்றும் மைனஸ் உண்டு. அதை இப்பவே சொல்லக் கூடாது. சிவ கார்த்தி சின்ன வயசுலயே பெரிய விவரமானவர். இவருக்கே தெரியும். இல்லன்னா, இவரு அவரு மாதிரி வரட்டும் அப்பறம் சொல்லுவோம் என்ன...?
மீண்டும் சொல்கிறேன்-
சிவ.கார்த்திகேயன்! அப்படிச் சொல்லுங்க!  
அப்படியே நில்லுங்க! 
நன்றி-தினமணி-06-04-2014-ஞாயிறு-கொண்டாட்டம்பகுதி 
http://www.dinamani.com/weekly_supplements/sunday_kondattam/2014/04/06/

--------------------------------------------

32 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா.
    மனித சமூகத்தை திருத்தும் வகையில் தங்கள் நடிப்புக்களை வெளிக்காட்டும் போதுதான்..நன் மதிப்பு கிடைக்கிறது.அதனால்தான் நடிகர் சிவகுமார் அந்த புகழ்லோடு வாழ்கிறார்...
    மிக அருமையான கட்டுரை...வாழ்த்துக்கள் ஐயா...


    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தான் ஏற்றுக் கொள்ளும் நடிகருக்குத் தமிழர்கள் தரும் மரியாதை இருக்கே... அடாடா.. அதில்தான் சகல பலமும் பலவீனமும் என உணர்ந்த முதல் நடிகர் எம்ஜிஆர். இரண்டாவது நடிகர் கலைஞர்

      நீக்கு
  2. டாஸ்மாக் காட்சி பாடல் போன்றவற்றை தவிர்க்க சந்தானமும் முடிவு எடுத்தால் நன்றாக இருக்கும். பிரிக்க முடியாதது எது என்றால் சந்தானமும் தண்ணி அடிக்கும் காட்சியும்
    சவா தன் முடிவி ல் நிலைத்திருப்பார் என்று நம்புவோம். நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரிக்க முடியாதது எது என்றால் சந்தானமும் தண்ணி அடிக்கும் காட்சியும் - ஆமாம் முரளி அய்யா. இ்ந்தத் தலைமுறை இதை ரொம்ப விரும்புவதாகச் சொல்லி வழிகாட்டிய பெருமை சந்தானத்தையே சாரும். முதுகெலும்பில்லாத திரைக்கலைஞர்!

      நீக்கு
  3. சொன்னதோடு இல்லாமல் செயல்படுத்தினால் நல்லது... செயல்படுத்துவார் என்று நம்புவோம்...

    பதிவில் நீங்கள் குறிப்பிட்ட பாடல்களையும் சேர்த்து பல சமீபத்திய பாடல்களும் இன்றைய குழந்தைகள் எப்படிப் பாடுகிறார்கள் தெரியுமா...? அதை சொல்லும் போது, "அடேங்கப்பா... என்னவொரு பெருமிதம் பெற்றோர்களின் முகத்திலும் அகத்திலும்...!"

    அந்தக் குழந்தை "வாங்கும்" பலப்பல (+ பளபள) பாராட்டுக்கள்...

    அதே குழந்தை சாயங்காலம் செமத்தியாக "வாங்கும்" முதுகில் - வீட்டுப் பாடங்களினால்...! ம்...

    வாழ்க பாரதம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "அடேங்கப்பா... என்னவொரு பெருமிதம் பெற்றோர்களின் முகத்திலும் அகத்திலும்...!" ஆமாம் டிடி அய்யா. நானும் பல பள்ளி-கல்லூரி நிகழ்ச்சிகளில் பார்த்து நொந்துபோயிருக்கிறேன். என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

      நீக்கு
  4. அய்யா...அரசாங்கமே சாராயம் விற்கும் போது சினிமாக்காரங்க இப்படி செய்வதால் யாரை குறை சொல்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “தந்தைக்கு சாராயம் தந்து,
      பிள்ளைக்கு சத்துணவு போடும்
      திட்டங்கள்“ - என்ற கவிதையுடன் கூடிய எனது முந்திய பதிவை நீங்கள் பார்க்கவில்லை என்று தெரிகிறது. பார்க்க - http://valarumkavithai.blogspot.in/2014/04/blog-post_3.html நன்றி

      நீக்கு
  5. நல்ல முடிவு எடுத்திருக்கார்! தொடர்ந்தால் நிச்சயம் பாராட்டப்பெறுவார்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதானே நமக்கு வேணும்... நல்லது நடந்தால் சரிதான்.
      அவரது படம் அப்படியும் ஓடினால் சரியோ சரிசரிதான்.

      நீக்கு
  6. \\இதனால்தான் எம்ஜிஆர் கடைசிவரை குடிகாரனாக நடித்ததில்லை. \\ ஆனால் அவரது ஆட்சியில் ஏன் சாராயக் கடைகளைத் திறந்து விட்டார்? அவர் கொள்கை சினிமாவுக்குத்தானா, உண்மையில் அதில் அவர் உறுதியாய் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் குடிக்க மாட்டார் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, குடிப்பதைத் தடுக்கவும் மாட்டார் என்பதும். ஏற்கெனவே கலைஞர் திறந்த கடைகளில் விற்ற சாராயக்காசுதானே அவரைச் சத்துணவு போட வைத்தது! பத்தாததுக்கு கல்விக் கடைகள் வேறு ஆங்கில வழி மெட்ரிக் பள்ளிகள் அவர்காலத்தில்தான் புற்றீசலாய்ப் பல்கிப் பெருகின.

      நீக்கு
  7. நீங்கள் சொல்கிற மாதிரி "டாஸ்மார்க் இல்லாமல் ஒரு பாடல்",பெண்களை கேலி செய்யாமல் ஒரு பாடல்" இதெல்லாம் இல்லாமல் வெளி வரும் படங்கள் மிக மிக குறைவு. அப்படி வரும் படங்களுக்கு மக்கள் ஆதரவு கொடுக்கிறார்களா என்றால் இல்லை . இப்படி இருக்கும்போது, இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாம் படத்தில் சம்பந்தமே இல்லாமல் இம்மாதிரியான பாடல்களை (குத்துப்பாடல்களை) வைக்கிறார்கள். அப்பொழுது தான் படம் ஓடும் என்பதற்காக. முதலில் மக்கள் தங்கள் ரசனையை மாற்றிக் கொள்ளவேண்டும்.

    அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி வந்த படங்களையெல்லாம் மக்கள் ஆதரிக்கவில்லை என்பதையும் பாருங்கள். 3 என்னாச்சு? (ஆடியோ வில் கொலைவெறிப்பாடல் உலக ரெக்கார்டு என்றார்கள்... படம் 3நாள் கூட ஓடலயே?) இந்தப்பக்கம், மைனா, அங்காடித்தெரு போலும் படங்கள் ஓடத்தானே செய்தன? மக்கள் தெளிவுதான். தயாரிப்பாளரையும், நடிகரையும் குழப்புவதில் மன்னர்கள்... என்ன.. குத்துப்பாட்டு படங்கள் “மினிமம் கியாரண்டி“ என்று பெயர் எடுத்துவிட்டன... பெரிய வெற்றின்னா கதை, நடிப்பு, பாட்டு எல்லாம் நல்லபடி சேரணும்ல... அதுவும் உண்டுதானே?

      நீக்கு
  8. //இதனால்தான் எம்ஜிஆர் கடைசிவரை குடிகாரனாக நடித்ததில்லை.//இப்படி சொன்னவுடன் ஒரு பட்டாளமே என்னுடன் சண்டைக்கு வந்தது. அட பக்கிகளா தலைவனின், நடிகனின் தனிப்பட்ட வாழ்க்கையை பிரித்து பார்க்க தெரியாத ஒரு அப்பாவி கூட்டம் தான் தன்னையும் தன் குடும்பத்தையும் கெடுத்துக்கொண்டு சீரழிகிறது, ஒவ்வொருத்தர்கிட்டையும் கத்துக்க நூறு விஷயம் இருக்கும் அது மாதிரி இது m.g.rட கத்துகவேண்டிய விஷயம் என்று நான் என் வாதத்தை முடித்தேன். அதன் தொடர்ச்சி போலவே இருக்கு அண்ணா இந்த பதிவு. சாமானிய மாந்தர்களில் இருந்து, தன் திறமையால் வளரும் நடிகர் சிவாவின் வார்த்தைகள் அருமை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 90விடயம் தவறானவர்களிடமும் கற்றுக்கொள்ள 2இருக்கும். 10விடயம் தவறானவர்களிடமும் கற்றுக்கொள்ள 70இருக்கும். எங்கிருந்து எதைக் கற்பது என்ற தெளிவு கற்போருக்கு வேண்டும். பள்ளி, க்லலூரிகள் தவிர ஏனைய ஊடகங்களில்தான் இந்தக் கல்வி நடக்கும். இதில் கற்றுக்கொள்பவரின் பங்கே அதிகம் இருப்பதால் இது பலருக்கும் புரிவதில்லை. மார்க்? வாழ்க்கையின் வெற்றி தோல்விதான்.
      “குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
      மிகைநாடி மிக்க கொளல்” - குறள்-504

      நீக்கு
  9. என்னவோ நல்ல விசயத்தைக் கூட சினிமாக்காரன் சொல்லித் தான் கற்றுக்க வேண்டும் என்பது தமிழர்களின் தலைவிதியாப் போச்சு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா வாங்கண்ணா... தமிழ்நாட்டுக்கு இப்பத்தான் வந்திருக்கிங்க போல.. நாங்க சினிமாப் பாக்குறதே அடுத்த முதல்வரைத் தேர்வு செய்யத்தானே? தெரியாதா உங்களுக்கு? சரி சரி.. கமல் சொல்றபடி ஓட்டுப் போடடு, ஆச்சி சொல்றபடி குழந்தைக்கு சொட்டு மருந்து போட்டு சித்தி சொல்றபடி கோக் குடிச்சி.. அட ஏன் சார் வயித்தெரிச்சலைக் கிளறுகிறீர்கள்...

      நீக்கு
  10. நாந்தான் ஹீரோன்னு சொல்லிக்கிட்டு தன் தலையில் மண் அள்ளிப் போட்டுக் கொள்ளாமல் இருந்தால் சரி...

    மிகச் சிறப்பான பேட்டி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால், நண்பர் சே.குமார், சின்ன வயசுலயே நல்ல முதிர்ச்சியான பேச்சும் செயல்களுமாகத்தான் சிவ.கார்த்தி தோன்றுகிறார். பார்க்கலாம், காலமும் சூழலும் எப்படி மா(ற்)றுகிறது என்று. மாறாமல் இருந்தால் அவருக்கும் தமிழ்த்திரையுலகுக்கும் நல்லது

      நீக்கு
  11. வணக்கம் ஐயா
    மதுபானம், பெண்களைக் கேவலமாக சித்தரிக்கும் காட்சிகள், வசனங்கள் என தமிழ் சினிமா தரம் கெட்டு போனது உண்மை ஐயா. ஆனாலும் சிவகார்த்திகேயன் போன்ற இளைஞர்கள் நினைத்தால் எதிர்காலத்தில் திரைப்படம் நல்ல நிலைக்கு திரும்பும். செய்வார்களா என்பதற்கு காலம் தான் பதில் தர வேண்டும். நல்லவற்றைத் தேடி பகிரும் உங்கள் குணத்திற்கும். பகிர்வுக்கும் மிக்க நன்றீங்க ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளைஞர்கள் நினைத்தால் எதிர்காலத்தில் திரைப்படம் நல்ல நிலைக்கு திரும்பும். செய்வார்களா என்பதற்கு காலம் தான் பதில் தர வேண்டும் - நல்லாச் சொன்னீங்கய்யா. என் நிலையும் இதுதான் நன்றி பாண்டியன். (நமது கட்டுரைப் போட்டி -ஆறுதல் பரிசு புத்தகவிருப்பம் ஏதும் வந்தால் எனக்குத் தெரிவியுங்கள்)

      நீக்கு
  12. அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்! சிவ கார்த்திகேயன் அப்படியே இருந்தால் நல்லதுதான்! செய்வாரா? நம்புவோம்! சாதாரண மனிதனாக இருந்து தன் தனித் திறமையால் இன்று புகழ் வெளிச்சத்தில் வந்திருக்கும் சிவகார்த்திகேயன், தன் இதே கருத்துக்களை இறுதிவரை நிலைனிறுத்து, தன்னை இன்னும் மேலும் மெருகூட்டிக் கொள்ள வாழ்த்துவோம்!

    பதிலளிநீக்கு
  13. அண்ணா என்ன திரைத்துறைக்குள் ரொம்ப ஆழமா... இறங்கி அதகளம் செய்றீங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “பாக்கத்தான் சுள்ளான் மாதிரி... சும்மா எறங்கினேன்னு வையி.” அடச்சே... திரைப்பட வீர வசனம்ல வருது! ( கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டமோ மது?) நடைய மாத்து...மாத்துவோம்

      நீக்கு
  14. அருமையான பதிவு.எல்லா நடிகர்களும் இப்படி முடிவெடுத்தா சமுதாயத்தில் நல்ல மாற்றம் வந்துடுமே,வாழ்த்துக்கள் சிவாவிற்கும் உங்களுக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா. நல்லவற்றைப் பாராட்டுவதும், அல்லவற்றைச் சுட்டிக் காட்டுவதும் தானே நம் வேலை? அதைத்தான் செய்தேன். நன்றி

      நீக்கு
  15. நல்ல முடிவு ஐயா! எனக்கும் சிவகார்த்திகேயனைப் பிடிக்கும் . இது போல எல்லா நடிகர்களும் முடிவு எடுத்தால் நன்றாக இருக்கும், இதில் நீங்கள் ரஜினியை இழுத்திருப்பது( இதற்குப் பெயர்தான் உள்குத்து என்பதோ ) எனக்கு ?????????ஆனால் நல்ல பதிவு ஐயா!

    பதிலளிநீக்கு
  16. evarai parthu matravargal therunthenal nanraga erukkum.athodu padalasiriyargalum mara vendum .marinal padangalum padalgalum mulumayaga elakiyamagum. nanri ayya

    பதிலளிநீக்கு