ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின் “ஒரு பண்பாட்டின் பயணம் - சிந்துமுதல் வைகை வரை” நூல் அறிமுக விழா (முழுமையான உரைகள் காணொலி இணைப்பு)

 



“ஒரு பண்பாட்டின் பயணம் - சிந்து முதல் வைகை வரை”
நூலாசிரியர் திருமிகு ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு 
நினைவுப் பரிசு வழங்குபவர் மாவட்டத் தலைவர்
ராசி.பன்னீர் செல்வம். இடமிருந்து வலமாக மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், மாவட்டச் செயலர் ஸ்டாலின் சரவணன், எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், மாநிலத் துணைத்தலைவர் நா.முத்துநிலவன், மாநிலச் செயலர் ஸ்ரீரசா, மாவட்டப் பொருளர் எழுத்தாளர் ஜெயபாலன்,       மாநிலக் குழு உறுப்பினர் கவிஞர் தனிக்கொடி ஆகியோர்                     
உடன் உள்ளனர். 
------------------------------------------------------ 



            ஆர்வம் மிகுந்த வாசகர்கள், கலந்துரையாடலில் பங்கேற்றோர்-



                        காணொலிகள் இணைப்புகள்

சிந்துவெளி ஆய்வாளர்

திருமிகு ஆர்.பாலகிருஷ்ணன் இஆப., 

ஒருமணி நேர உரையாடல்


-------------------------------------------------------- 

தமுஎகச மேனாள் மாநிலத் தலைவர்

எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வன் அவர்கள் 

சிறப்புரை - 83நிமிடம்

https://youtu.be/QzPggnyWqyc?si=UxYKUsjESfmqfm44

-----------------------------------------------------------------

தமுஎகச மாநிலத் தலைவர் 

கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்கள் 

வாழ்த்துரை - 15நிமிடம்

https://youtu.be/c9BVfiGU5O8?si=E2D285zCCBLmKHLD

----------------------------------------------------------------- 

தமுஎகச மாவட்டத் தலைவர்

எழுத்தாளர் ராசி.பன்னீர்செல்வன் 

தலைமை உரை - 12நிமிடம்

https://youtu.be/BPlTJLiFbpk?si=eur-eue9viPKMVrN   

----------------------------------------------------------------- 

தமுஎகச மாவட்டச் செயலர்

கவிஞர் ஸ்டாலின் சரவணன் 

வரவேற்புரை - 13நிமிடம்

 https://youtu.be/fDA0jx1XowM?si=Jqr_rUO5iHy3rYuE 

-----------------------------------------------------------------  

தமுஎகச மாநிலத் துணைத்தலைவர்

நா.முத்துநிலவன் 

தொடக்கவுரை- 14நிமிடம்

https://youtu.be/1XOZVbVjz7w?si=B2j8BlAKhUWiYs5n

---------------------------------------------- 

நிகழ்ச்சி ஏற்பாடு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,

புதுக்கோட்டை மாவட்டக் குழு.

காணொலி ஆக்கம்  -

கண்மணி கலை ஊடகம், புதுக்கோட்டை &

Reporters TV

--------------------------------------  

பொறியியல் வகுப்புத் தொடக்கவிழா - நா.முத்துநிலவன் உரை

வித்தியாசமான உழைப்பும் 
வேறுபட்ட சிந்தனையும் தேவை! 

பொறியியல் வகுப்புத் தொடக்கவிழாவில் 
நா.முத்துநிலவன் உரை 

புதுக்கோட்டை-செப்.12 கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் பொறியியல் கல்லூரியில் பாரதி நினைவுநாளன்று -11-9-2023- நடந்த முதலாண்டு வகுப்புகள் தொடங்கி வைத்து, மாணவிகளிடம் உரையாற்றும்போது பேசிய கவிஞர் நா.முத்துநிலவன், “வெறும் உழைப்பால் பயனில்லை, வித்தியாசமான உழைப்புடன் கூடிய வேறுபட்ட சிந்தனையே இப்போதைய தேவை” என்று பேசினார் 
              பாரதி பொறியியல் கல்லூரியின் பதினைந்தாம் ஆண்டு நிகழ்வாக, முதலாண்டு பொறியியல் வகுப்புகளைத் தொடங்கி வைத்துப் பேசிய எழுத்தாளர் நா.முத்துநிலவன் மேலும் பேசியதாவது- “உழைப்பே உயர்வு தரும் என்பது உண்மைதான் என்றாலும், வெறும் கடின உழைப்பால் மட்டும் பலன் கிடைக்காது. வித்தியாசமான உழைப்போடு, வேறுபட்ட சிந்தனைகளும் சேரும்போதுதான் அதன் பலன் வீட்டுக்கும் நாட்டுக்கும் பயன் தரும். இன்று உலகம் முழுவதும் நம் நாட்டு இளைஞர்கள் உலகப் பெரும் நிறுவனங்களின் முக்கியமான பொறுப்புகளில் இருப்பதன் ரகசியம் இதுதான்! ஒரு நாட்டின் அடையாளமாக அந்த நாட்டின் பெருநகரக் கட்டுமான வளர்ச்சியே முன்னிற்கிறது. சிங்கப்பூர், அரபு நாடுகளின் அடையாளம் அங்குள்ள வானளாவிய கட்டடங்களே கண்ணையும் கருத்ததையும் கவர்ந்து நெஞ்சில் நிற்கின்றன. வளரும் நாடுகளில் இவை போலும் பெரும் கட்டுமானப் பணிகள் நிறைய உருவாகின்றன. 
        ஏட்டளவில் படித்துப் பட்டம் பெற்றால் அதற்குப் பலனிருக்காது. மாறாக, படிப்போடு, கற்பனை ஆற்றலையும் கலந்து புதிய புதிய மென்- பொருள்களை உருவாக்கி, “கற்பனையைக் கருவியாக்கி விற்பனை செய்த ஆற்றல்”தான் பில்கேட்ஸை உலகப் பணக்காரர் வரிசையில் பல ஆண்டுகள் உட்கார வைத்தது. இப்போதும் உலகம் முழுவதும் கணினி மென்பொருள் வன்பொருள் பொறியாளர்க்கான தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. வேலைக்குப் போன பிறகும் மக்களுக்கான பணிகளைத் தொடரும் யாரையும் மக்கள் மறப்பதில்லை. அப்துல் கலாம், கல்பனா சாவ்லா, தாமஸ் ஆல்வா எடிசன், கலிலியோ என மறைந்த பிறகும் வாழ்பவராக மக்கள் பயன்பாட்டுக்கான அறிவியலைக் கண்டுபிடித்துத் தந்தவர்கள் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்.        
            பாரதியும் அப்படித்தான் “நான் வீழ்வேன் என நினைத்தாயோ?” என்று கேட்டதுபோல இந்த 103ஆவது நினைவு நாள் அன்றும் நினைக்கப் படுகிறான். தான்பெற்ற கல்வியால் வீடும், நாடும், உலகமும் பயனடையும்படி, இன்று தொடங்கும் உங்கள் கல்வி அமையவேண்டும் அதிலும் குறிப்பாகப் பெண்கள் படிப்பதே அவர்கள் வாழ்க்கையை முன்னேற்றும். பெற்றோர்கள் தம் பெண்களுக்கு வேறு சொத்து ஏதும் சேர்த்து வைக்க வேண்டியதில்லை, கல்வி தந்தால் அதுவே மிகப் பெரிய திருமணச் சீராக இருக்கும் எனவே இங்குள்ள பெற்றோரை இடையில் “பொருந்தி வருகிறது” என்று, படிப்பை முடிக்கும் முன்னரே திருமணம் செய்து, படிப்பை நிறுத்திவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு எழுத்தாளர் நா.முத்துநிலவன் உரையாற்றினார். 
        வகுப்புகள் தொடக்கவிழாவுக்கு, ஸ்ரீ பாரதி கல்விக் குழுமங்களின் தலைவர் குரு.தனசேகரன் தலைமை ஏற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் ச.திலகவதி வரவேற்புரையாற்றினார். தாளாளர் கனகராஜன், அறங்காவலர் கிருஷ்ண மூர்த்தி, பஷீர் முகமது வாழ்த்துரையாற்றினர். கல்லூரி மாணவியரின் கலை-நிகழ்ச்சி நடனமும் நடைபெற்றது. விழாவில் முதலாண்டு மாணவியர், அவர்களின் பெற்றோர் உட்பட சுமார் 400பேர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். நாட்டுப் பண்ணுடன் விழா நிறைவு பெற்றது. 
    மகாகவி பாரதியின் 103ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, கல்லூரி வளாகத்திலிருந்த பாரதியின் உருவச் சிலைக்கு கல்லூரித் தலைவர், தாளாளர்கள், முதல்வர்கள், பணியாளர்கள், மாணவியர் முன்னிலையில் எழுத்தாளர் நா.முத்துநிலவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தியபின் விழா தொடங்கியது. 
------------------------------------------------ 




நன்றி - தீக்கதிர் நாளிதழ் -12-9-2023


புகைப்படங்கள் - நன்றி அருண் ஸ்டுடியோ, புதுக்கோட்டை


நன்றி - புதுகை வரலாறு நாளிதழ் -13-9-2023

நினைவா? நனவா?! - தமிழ் இந்து -தொடர் கட்டுரை-15


நன்றி - தமிழ் இந்து -12-9-2023 
--------------------------------------------------- 
”உங்கள் சொந்த வீடு கட்டும் கனவு, இந்த ஆண்டு நினைவாகும்” என்று சோதிடம் சொல்கிறார்கள்! சொல்லாலும் தவறான விளம்பரம் இது! நிறைவேறாத கனவு தானே நினைவாக இருக்கும்? தமிழறிஞர் பெருமாள் முருகன், 02-01-2023 நாளிட் தனது வலைப்பதிவில்,கற்பனையானது  கனவு; உண்மை நனவு”  என்கிறார். கனவு நனவாக வேண்டும் என்பதே சரி.

ஓட்டுநர், நடத்துநர் - “போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர்  பணியிடங்களை நிரப்ப முடிவு” என்ற அறிவிப்பை ஊடகங்கள் சரியாகவே வெளியிட்டிருந்தாலும், மாலைச் செய்தித்தாள் ஒன்று, ‘ஓட்டுனர்’ ‘நடத்துனர்’ என்றே வெளியிட்டிருந்தது.  இந்தக் குழப்பம் பலருக்கும் இருக்கிறது.   

‘பொருநர் ஆற்றுப்படை’ சங்க நூல்களில் ஒன்று. செருநர்-குறள்-759. தொழிற்பெயர் (நடத்துதல்), பெயர்ச்சொல் (நடத்தும் ஒருவர்) ஆகி, கட்டளை (நடத்து) ஏற்கும் போது,  நடத்துநர் என வரும். அனுப்புதல்-அனுப்புநர், ஆளுதல்-ஆளுநர் என்பன சரி. வந்தனர், போயினரில் வரும் அர் விகுதி வேறு.  ஓட்டுனர், ஆளுனரில் வரும் அர்/னர் விகுதி பொருத்தமற்றது. பொருத்தம், மரபு அற்றவற்றைத் தொடர்வது மொழியைச் சிதைத்து விடும். அனுப்புநர், பெறுநர், இயக்குநர், ஆளுநர், நடத்துநர், ஓட்டுநர்  என்பன சரியான சொற்கள்

கோர்வை, கோவை பள்ளி ஆண்டுவிழாக்களில் “ஊசி நூல் கோர்த்தல் போட்டி” அறிவிக்கிறார்கள். கோர்த்தல் என்பது தவறு. கோத்தல் என்பதே சரியானது. ஜலதோஷம்- நீர்க்கோவை என்பது அழகான நெல்லை வழக்கு! பேச்சு வழக்கில் விடுபட்ட ர், எழுத்திலும் விடுபட்டது! (நல்ல வேளை, ‘கோர்வை’ என்று எழுதாத, ‘கோவை’ நண்பர்கள் மகிழ்ச்சி தருகிறார்கள்!)

கழட்டி – கழற்றி - “என்ன சாதிச்சுட்டே?” எனும் பொருளில் “என்ன கழட்டிட்டே?” என்கிறார்கள். அது தவறு.  கழற்று  என்பதே சரி. தன் சக மனிதனை அழைத்து, “செருப்பைக் கழட்டுடா” என்பது இரட்டைத் தவறு!  சானட்-சானற் என, ட் வல்லினத்தை, ற் என்றே ஈழத்தமிழ் சொல்வதை ஆய்வு செய்தல் நன்று.        

பட்டினமும் பட்டணமும் – கடற்கரையில் அமைந்துள்ள ஊர்கள் ‘பட்டினம்’   எனும் பின்ஒட்டுப் பெற்று வரும். அதிராம் பட்டினம், நாகப் பட்டினம், விசாகப் பட்டினம் போல. ‘பட்டினப் பாலை’ நமது  சங்க இலக்கியங்களில் ஒன்று.

நகரத்தைப் பட்டணம் என்பார்கள். “கெட்டும் பட்டணம் போ” என்பது பழமொழி! “பட்டணம் தான் போகலாமடி பொம்பள பணம் காசு தேடலாமடி”  என்பது உடுமலை நாராயண கவியாரின் திரைப்பாட்டு. “டவுனுப் பக்கம் போகாதீங்க மாப்பிளே டவுனாகிப் போயிடுவீங்க” என்று, அதிலேயே பட்டணம் என்றால் நகரம் (டவுன்) என்பதையும் சொல்வார்! சென்னை, பட்டணம், பட்டினம் - இரண்டு வகையிலும் வழங்கும் பெருமைக்குரிய பேரூர்!

பிண்ணிட்டான் – சரியா? –“போலீசு அடி பிண்ணிருச்சு” என்கிறார்கள். கூடை ‘பிண்ண’ இணையத்தில் சொல்லித் தருகிறார்களாம்! பிண்ணு என்பது தவறு! சடை பின்னுதல், கூடை பின்னுதல் என்பன போல, “அடி பின்னிருச்சு“ என்பதே சரி. ஆனால், ‘என்ன பண்ணுச்சு தெரியுமா? அடி பிண்ணிருச்சு” என்பது போல இரண்டு சொற்களையும் குழப்பிக் கொள்வது தவறானது. சடை, சண்டை எதுவாயினும் ஒன்றன் பின் ஒன்றாக -பின் பின்னாக- பின்னுதல்தான் சரி,

---------------------------------------------------  



ர, ழ எழுத்துகள், எண்களை எழுதும் முறை (தமிழ் இனிது -13,14)

 தமிழ் இனிது-13 

(இந்து தமிழ்-29-8-2023)

ன்றைய தமிழில் ,  எழுத்துகள் சிதைந்து வருகின்றன! ர எழுத்தின் வரி வடிவமும்,     எழுத்தின்   ஒலி வடிவமும்   ஆபத்தில்   உள்ளன! 

 எழுத்து, கணினி அச்சில் படாத பாடு படுகிறது. அரசு ஏற்பு பெற்ற  செந்தமிழ்  உள்ளிட்ட   சில எழுத்துருக்களில்    தனது   துணைக்   காலின்கீழ்  ஒரு கோடு  எனும்  சரியான  வடிவத்தில்   இல்லை!   துணைக்காலாக மட்டுமே உள்ளது! தொலைக்காட்சிச் செய்தி எழுத்துகளை, இனி கவனித்துப் பாருங்களேன்..  கடைசி எழுத்து,   துணைக்கால்   போட்டு, புள்ளி வைத்திருக்கும்.

ஒருங்குறி (யுனிக்கோடு) எழுத்துருவில் இது சரியாகவே இருப்பதால் இன்னும் உயிர் இருக்கிறது. அச்சகங்களில் பெரும்பாலும் செந்தமிழ் எழுத்துருவே பயன்பாட்டில் இருப்பதால், கண்ணில் படும் இடங்களில் எல்லாம் ர எழுத்து, துணைக் காலாகவே தெரிகிறது.  தற்போது  பாடநூல்களில்  மாற்றி விட்டாலும் வினாத் தாள்களில் தொடர்கிறது! இணைப்பில் உள்ள படங்களைப்  பாருங்கள் ---- சரி இதை என்னதான் செய்வது?

இதை நிலையாகச் சரி செய்ய  ஓர் எளிய வழி உள்ளது -

ஒருங்குறி எழுத்துகளை மட்டுமே பயன்படுத்த அரசாணை வெளியிட வேண்டும்.  ஏற்கெனவே ஒரு தலைமுறை பாடநூல், இதழ்கள்,  நூல்கள்,  செய்தித்தாள்கள் உள்ளிட்ட - அச்சு வடிவங்களில் தவறாகப்  பழகியதை  மாற்ற முயல்வது,  தமிழ்  எழுத்து  வடிவைக்  காக்கும்  பணியாகும்.

 எழுத்து, உச்சரிப்பில் பலபாடு படுவது ஊர்அறிந்த ரகசியம்! மிகப் பெரிய பேச்சாளர், தமிழறிஞர், எழுத்தாளர், அரசியல் தலைவர்களும் கூட இதில் கவனம் செலுத்துவதில்லை!

ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுக்க வந்தவர், “நான் தமிளை   எப்படி பிளையில்லாமல் பேசுவது, எளுதுவது எனும் தலைப்பில் ஆய்வு செய்கிறேன் என்றார். இது மிகையல்ல, நடந்த நிகழ்ச்சி!  ஏற்கெனவே எனது இலக்கணம் இனிது நூலிலும் பதிவு செய்திருக்கிறேன்.

தமிழ்  மொழியின் சிறப்புகளில் ஒன்று, தமிழ் எனும் சொல் அமைப்பு! வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று ஒலி வடிவமும் கொண்டது. அதோடு, குறிகளற்ற எழுத்து, குறி கொண்ட எழுத்து, மெய்யெழுத்து என, வரி வடிவத்திலும் நுட்பம் காட்டி நிற்பது.

மிகச் சிலரே இந்த எழுத்தின் தனிச் சிறப்பை அறிந்து அழுத்தம் திருத்தமாக தமிழின் உயர்வறிந்து- சரியாக உச்சரிக்கிறார்கள்.  இதை,  பள்ளி  வகுப்பிலிருந்து,  மேடைப் பேச்சு,  ஒலிப்பதிவுக் கூடங்களில்  மட்டுமின்றி  அச்சிலும்  கண்காணிப்பது  அவசியம்.  இல்லாவிடில்   அடுத்த தலைமுறையில் தமிள் வலர்வதை தவிர்க்க முடியாது!

தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் அமைப்புகள் வழியாக, இவ்வாறான தமிழ் அழிக்கும்  பிழைகளைச் சரி செய்யலாம். செய்தருள்க அரசே!

-----------------------------------------------------------------------------------------  


(நன்றி - இந்து தமிழ் - 29-8-2023)
------------------------------------------------ 

தமிழ்இனிது (14)

எண்களை எழுதும் முறை சரியா?

எண்களை  1, 2 என எண்களாகவே  எழுதும்போது வராத சிக்கல், ஒன்று இரண்டு என எழுத்தில் எழுதும்போது சிலருக்கு வந்துவிடுகிறது. அதிலும் 10-பத்து, 11-பதினொன்று வரை வராத   குழப்பம், 12,13 எண்களை எழுத்தில் எழுதும் போது பனிரெண்டா பன்னிரண்டா? பதிமூன்றா, பதின்மூன்றா? என சந்தேகம் வந்து விடுகிறது! குழப்பமே இல்லாமல் தவறாக எழுதுவதை விட, குழப்பம் நல்லதுதான்.

பனிரெண்டு என்பது தவறு பத்து+இரண்டு பன்னிரண்டு என்று எழுதுவதே சரி. இதேபோல பதிமூன்று என்பதும் தவறு. பத்து+மூன்று பதின்மூன்று என்பதே சரி.

இதேபோல எண் 23,  இருபத்தி மூன்று என்று எழுதுவது தவறு. இருபத்து மூன்று என்பதே சரி. இவ்வாறே இவை போன்ற 33, 44, 55, போன்ற எண்களையும்  எழுதுக

எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர்

செப்பினர் அப்படிச் செப்புதல் மரபு -எந்தப் பொருளை, எந்தச் சொல்லால் எவ்வாறு உயர்ந்தோர் சொன்னார்களோ  அவ்வாறே நாமும் சொல்வதே மரபு என்று இதையும் சொல்லி வைத்திருக்கிறார்கள்! (நன்னூல்-பொதுவியல்-37)

முன்னூறா முந்நூறாமுன்னூறு என்பது முன் நூறு என்றாகிமுந்திய நூறு என்று பொருள் தரும். எனவே, மூன்று நூறு எனப் பொருள் தரக்கூடிய முந்நூறு என்பதே சரி.  

நான்கு +நூறு நால் நூறு நானூறு என்பதே சரி. நாநூறு என்பது தவறாகும்.

ஐந்து+ நூறு ஐந்நூறு என்றே வரும். ஐநூறு என்றும் எழுதுகிறார்கள். செய்ந்நன்றி என்பதை, செய்நன்றி என்றே இக்கால வழக்கில் எழுதுவது போல, பொருள் மாறாத வகையில் இதை ஏற்கலாம் என்பதே என் கருத்து. அதற்காக எட்டு நூறு எண்ணூறு என்பதை என்னூறு என்பது எழுத்துப் பிழையுடன் கருத்துப் பிழையும் சேர்ந்துவிடும்.

ஒன்பது+நூறு தொள்ளாயிரம் இதை தொல்லாயிரம் என்று எழுதுவது தவறு. (ஒன்பது+நூறு தொண்ணூறு ஒன்பது+ஆயிரம் தொள்ளாயிரம் என்றுதான் பழைய மரபு இருந்தது அது தனிப்பெரும் ஆய்வு). இன்றைய வழக்கு தொள்ளாயிரம் என்பதே.

ண்கள் அனைத்தும் அஃறிணைப் பொருளில் வரும். எனவே 20ஆடுகள், 30மாடுகள் என்பன போல, 5பேர், 10பேர், 100பேர் என மனிதர்களைக் குறிப்பது தவறு . ஒருவர், இருவர், மூவர், நால்வர், ஐவர், அறுவர், எழுவர், எண்மர், ஒன்பதின்மர், பதின்மர், இருபதின்மர், முப்பதின்மர், நூற்றுவர், ஆயிரவர் என்னும் வழக்கே சரியானது

ஆயினும், 15,752பேரை எழுத நேரும்போது, “பதினையாயிரத்து எழுநூற்று ஐம்பத்திருவர்என நீளும். இதனால் இயல்பாக எழுதும் வேகம் குறைவது நல்லதல்ல.

தமிழ் எண்கள் தனித்தனியே சுருக்கமாகவும் கூட்டெழுத்தாகவும் புழக்கத்தில் இருந்ததை இப்போது இழந்துவிட்டோம். அதை மீட்டல் எளிதல்ல. எனவே 50பேர் 100பேர் என்று எழுதுவதை ஏற்கலாம் என்பதே எனது கருத்து.

மூன்று சுழி என்பதைப் பேச்சு வழக்கில் மூணுசுழி என்றும், ஒன்றாம் வகுப்பு என்பதை ஒண்ணாம் வகுப்பு என்றும் எழுதப் பழகிவிட்டோம். மூன்று-மூனு, ஒன்று-ஒன்னு என்றுதான் பேச்சு வழக்கில் வரும். இந்த இரண்டு சுழிகள் எப்படியோ மூன்று சுழிகளாகிவிட்டன! இரண்டுஎனும் சொல்லில் மூன்றுசுழி! “மூன்று எனும் சொல்லில் இரண்டுசுழி! இதுதான் இனிய தமிழ் விளையாட்டு!

பேச்சு வழக்கு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யாரும் சட்டம் இயற்ற முடியாது, எனினும் நமது எழுத்து மரபாவது தெரிந்திருக்க வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு! இளைஞர்களின் மொழியில் செம்மை, சிறப்பு (சூப்பர்?) என்பதை செம என்பதும் நன்றாகத்தானே இருக்கிறது!

----------------------------------------------------------------------------------- 


(நன்றி - தமிழ் இந்து - 05-9-2023)

--------------------------------------------------------------------------------