இந்து தமிழ் நாளிதழ் தொடர் - தமிழ் இனிது (2) 13-6-2023

 தமிழ் இனிது(2) - (நன்றி - இந்து தமிழ் - 13-6-2023)  

க,ங,ச,ஞஎனும் வரிசைக்கு அர்த்தம் உண்டு!

  உயிர் எழுத்து நமக்குத் தெரியும். மெய் எழுத்துகளைத் தெரிந்தாலும், வரிசையாகச் சொல்லும் போது தடுமாறுவோம்!

   மெய்யெழுத்து வரிசைக்கு அர்த்தம் உண்டு என்பதைப் புரிந்து கொண்டால் மறக்காது, எழுத்துப் பிழைக் குழப்பம் தீரவும் வாய்ப்புள்ளது.     க்-ங், ச்-ஞ், ட்-ண், த்-ந், ப்-ம் என, பத்து எழுத்துகள் --வல்லினத்தை அடுத்து மெல்லினம் எனவரிசை அமையும்.  ய்,ர்,ல்,வ்,ழ்,ள்  ஆறும் வரிசையாக இடையில் வருவது இடையினம்! மீண்டும் ற்-ன்! மொத்தம்-18! இதில் ஒரு நுட்பம் உண்டு   

தமிழ்ச் சொற்களில் க எனும் உயிர்மெய் இடம்பெறும் சொற்களுக்கு முன் அமையும் மெய்யெழுத்து ங் ஆகவே இருக்கும்உதாரணம்  சங்கம். அதனால், எழுத்து வரிசை முதலில் க், அடுத்து ங் என அடுக்கப்பட்டுள்ளது.              

ச இடம்பெறும் சொல்லில், ஞ் முன்னிற்கும்(நெஞ்சு), அதனால்தான் ச் எழுத்தை அடுத்து ஞ் வைக்கப்பட்டுள்ளது  ட-வுக்கு முன் ண் வரும் துண்டு,  -வுக்கு முன் ன் வரும்-தென்றல். இவ்வாறே த்-ந்(பந்து), ப்-ம்(அம்பு) எழுத்துகளும்  அடுத்தடுத்து அடுக்கப்பட்டுள்ளன.

இந்த வரிசைக்குக் காரணம் தமிழ் எழுத்து மரபு! இதன் அடிப்படை. தமிழ்ச் சொற்களின் அமைப்பு முறை! என்ன நுட்பம்! பாட நூல்களில் இவற்றை இன எழுத்துகள் என்று மட்டும் சொல்லித் தந்திருப்பார்கள். அதைத் தாண்டிய வரிசை நுட்பத்தில் தமிழ் மரபு உள்ளது.

மண்டபம் என்பதில்மூனு சுழி ண வா, ரெண்டு சுழி ன வா என்று சந்தேகம் வரும்போது, அடுத்த எழுத்து ட வருதா? அப்படின்னா இது டண்ணகரம் () தான் என்றும், தென்றல் என்பதில் இதே சந்தேகம் வந்தால் அடுத்த எழுத்து ற வருதா? அப்படின்னா இது றன்னகரம் (ன்) தான் என்றும் புரிந்து கொண்டால் இன்னும் எளிது.

ஆனால், இது நான்கு,  வான்மதி மற்றும் என்னப்பா கண்ணம்மா  போலும் சொற்களில் பொருந்தவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  இதற்கு, தொடர்  வாசிப்பு அவசியம். இலக்கணத்தை விட நடைமுறைக்கு முன்னுரிமை கொடுத்துத்தான் தொல்காப்பியத்துக்குப் பாயிரம் (முன்னுரை) எழுதிய பனம்பாரனார், “வழக்கும் செய்யும் ஆயிரு முதலின்..” என, வழக்கு மரபை முன்வைத்தார். மொழி, ஓடும் நீர் போன்றது, ஒவ்வொரு முறை குளிக்கும்போதும் புதிய நீரில்தான் குளிப்போம்!  

கல்+கின்று+ஆர்=கற்கின்றார், ஆனால் செல்+கின்று+ஆர்=செல்கின்றார். இந்த இரண்டு சொற்களும் ஏன் எவ்வாறு மாறுகின்றன என்பதை இலக்கணத்தை விடவும் வழக்கில்தான் புரிந்து கொள்ள முடியும்.  

தமிழ்ச் சொற்களில் புழக்கம் இருந்தால் பிழை நேராது, தமிழ் இனிது

---------------------------------------------------  

 (நன்றி - இந்து தமிழ் - 13-6-2023) 

----------------------------------------------------------------------- 

இந்து தமிழ் நாளிதழ் - தொடர் - தமிழ் இனிது (1) -06-06-2023

 தமிழ் இனிது (1) 

நா.முத்துநிலவன் 

      உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழின் உண்மையான பெருமை, அதன் தொடர்ச்சி தான்! தொல்காப்பியரின் சங்கப் பலகையில் கிடந்த தமிழ், இப்போது பில்கேட்சின் (விண்டோஸ்-எனும்) சன்னல் பலகையிலும் கிடைப்பது தான் உண்மையான பெருமை!

      குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து திணைகளில் கிடந்த தமிழ், இப்போது அனைத்துக் கண்டங்களையும் கடந்து  ஆறாம்  திணையாக  -இணையத் தமிழாக- வளர்வது பெருமை!  

ஜனநாயகத் தமிழ்!

       உலகமொழிகள் பலவற்றுக்கு இல்லாத பெருமை, தமிழுக்கு உண்டு என்றால், அனைத்து மதங்களுக்கும் இடம்கொடுத்து, அனைத்து மக்களுக்குமான ஜனநாயக மொழியாகத் திகழ்வதைச் சொல்ல முடியும்.

சமணத்திற்குச் சிந்தாமணி, பவுத்தத்திற்கு மணிமேகலை, சைவத்துக்குத் திருமுறைகள், வைணவத்திற்குப் பிரபந்தங்கள், இஸ்லாத்திற்குச் சீறாப்புராணம், கிறிஸ்தவத்திற்குத் தேம்பாவணி,  மதஒற்றுமைக்குத் திருக்குறள், சிலப்பதிகாரம், தற்கால இலக்கியங்கள்! இவற்றோடு, எதிர் நாயக நிலைக்கு இராவண காவியம் என, அனைத்து மக்களுக்குமான ஜனநாயக மொழி தமிழ்! இதுதான் உண்மைப் பெருமை!  

காவிய காலத்திற்கு முந்திய சங்கப் பாடல்களைப் பற்றிய கருத்து ஒன்று, இன்னும் அருமையானது. .எல்.பாஷம் அவர்கள் தொகுக்க, ஆக்ஸ்ஃபோர்டு கிளாரெண்ட்டன் அச்சக வெளியீடாக (1975) வந்திருக்கும் இந்தியாவின் பண்பாட்டு வரலாறு (A CULTURAL HISTORY OF INDIA) எனும் 600-பக்க நூலின் 34ஆம் பக்கம், சங்க இலக்கியம் பற்றி, “இவை சமயச் சார்பற்றவைஎன்கிறது. இதன் அடிநாதம் இன்று வரை தொடர்கிறதே!    

தமிழ், வெறும் இலக்கிய இலக்கணமல்ல! வாழ்வியல்!

தமிழறிவு என்பது பலதுறைஅறிவு என்பதே உண்மை! இரண்டாயிரம் ஆண்டு நிறைந்த கல்லணையும், ஆயிரமாண்டு நிரம்பிய தஞ்சைப் பெரிய கோவிலும் தமிழின் அறிவியல், கணக்கு, பொறியியலுக்கு அடையாளம்! வணிகம் இல்லையென்றால் ஒரு மொழி வளர முடியாது. யவனர் எனும் சங்கச் சொல் தமிழரின் வணிக மரபுச் சொல்(அகநானூறு-149). கல்வி, மருத்துவம் என்பவற்றையும் தாண்டி, வாழ்வியல் மொழி தமிழ்!

தமிழ்நாட்டில் பாகற்காய் எனும் ஒரு காய் உண்டு அது கசப்பானது! அதை, கசப்புக்காய் என்று சொல்லாமல் பாகு(இனிப்பு)அல்லாதபாகுஅல்-காய் என்றது பாகற்காயையே இனிப்பாக்கும் பண்பாட்டுச் சொல்லல்லோ!

ஊழல்எனும் சொல்லுக்கான பொருள் வியப்பானது! ஊழ் என்றால் விதி, அரசு விதி! அதற்கு மாறான, ஊழ்அல்லாத, அரசு விதிக்குப் புறம்பானது, ஊழல்! சரியா? (ஊழல் சரியல்ல, விளக்கம் சரிதானே?)

இப்படி, தொல்காப்பியம் முதல் அறிஞர் தொ..வரை அலசுவோம்! முன்னைத் தமிழிலிருந்து, சென்னைத் தமிழ்வரை பேசுவோம்! அரசுத் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர், சாதாரண வாசகர் என, அனைவரும் வாழ்வியல் நுட்பங்களை அறிய, தமிழால் முயல்வோம்! தமிழ் இனிது!

------------------------------------------------------------------------------------------------ 
             
நன்றி - இந்து தமிழ்-06-06-2023 செவ்வாய்க்கிழமை

வாசகர்களின் கருத்துகளை வரவேற்கிறேன்-- நா.மு.,
(இந்து தமிழ் நாளிதழுக்கும் எழுதலாம்)
மின்னஞ்சல் - thisaikaatti@hindutamil.co.in