தமிழ் இனிது (3) “சென்னைப் பேச்சில் சங்கத் தமிழ்“

சென்னைப் பேச்சில் சங்கத் தமிழ்!

(அலப்பர, மொள்ளமாறி)

   லர் எனும் சொல் சங்கத் தமிழில் வரும். மலர்ந்த பூ என்பது பொருள். காதலரிடையே பூத்து மலர்ந்திருக்கும் காதலைப் பற்றிப் பேசுவதைஅலர் தூற்றுதல்என்று சங்க இலக்கியம் சொல்லும். “சின்னஞ் சிறுசுங்க சந்திச்சிட்டுப் போறாங்க, நீங்க ஏன்பா சம்பந்தமில்லாம அதுகளத் தூத்துறீங்கஎன்பது போல, “அலர் தூற்றுதல்எனும் சொல்லின் அழகைக் கவனியுங்கள்!. சிலர் தமக்குள் மறைவாகப் பேசிக் கொள்வதைஅம்பல்என்பார்கள் (இதுவே பிறகு அம்பலம் ஏறியிருக்க வேண்டும்!) சிலர் அறிந்த ரகசியமான அம்பல், பலர் அறியப் பகிரப் பட்டால், அலராகிஊர் அறிந்த ரகசியம்ஆகிவிடும்! அலர்அம்பல்அலம்பல் துணியை நீரில் அலசுவது 

பறை என்பது ஊரறியச் சொல்வது. ஈழத்தமிழிலும் மலையாளத்திலும் பறை என்றால் பேசுதல்தான்.  என்னடீ? ஊரெல்லாம் போயி பறையடிச்சிட்டு வந்திட்டியில்ல…”  இப்படி, போட்டு உடைப்பதே அலர்ப்பறை! இதுதான் இப்போது மதுரைத் தமிழில்அலப்பர” ஆகிவிட்டது! அலர்ப்பறை எனும் சங்கத் தமிழே அலப்பரஎனும் மதுரைத் தமிழானது! அலப்பரைஎன்று (ரை -இடையினம் இட்டு) “க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதிசொல்கிறது,

குறிஞ்சியிலிருந்து முல்லைக்கு வந்த மனித குலம் விலங்குகளுக்கு இல்லாத சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு, நாகரிகம் வளர்த்தது. பாலியல் உள்ளிட்ட சில ஒழுக்க வரையறைகளை உருவாக்கிக் கொண்ட காலம். இதைமுல்லை சான்ற கற்புஎன்று சங்க இலக்கியம் சொல்லும். (இதுவே பெண்ணடிமையின் தொடக்கப் புள்ளி என்பதையும் கவனிக்க!)

வரையறைஒழுக்கம்சொல் தவறாமை! இவற்றை மீறி, மாறி நடந்தால்முல்லைமாறிதானே? ஆக, முல்லைமாறி எனும் சங்கத் தமிழ்தான் “மொள்ள மாரி” என சென்னைத் தமிழானது. கடன்வாங்கி ஏமாற்றுவதை, “மொல்ல மாறித்தனம்என்பது, தமிழ்நாடு முழுவதுமே சொல்வதுதான். இதுபற்றி மேலும் அறிய இ.பு.ஞானப்பிரகாசம் எழுதிய, சென்னைத் தமிழ், அன்னைத் தமிழ் இல்லையா?” எனும் வலைப் பதிவைப் பார்க்கலாம்.  

சோமாரி- (சோம்பேறி, திட்டமில்லாதவன்) கசுமாலம் –(கசுமாலர்-திருப்புகழ்) ஒழுக்கமற்ற, வூட்டாண்ட, கயிதை, பயம்(பழம்), கீசிடுவேன், உலாத்தினு கீறே, பன்னாட, ஒண்யும் பிரியிலபோலும் ஏராளமான சொற்கள் தமிழின் சிதைவு என்பதும் பிற பல்வேறு சொற்கள் ஆங்கிலம், உருது, இந்தி, வட்டாரச் சொற்களின் கலப்படச் சிதைவு! இதன் இசை வடிவமே கானாப் பாடல், இது தனி வகையாக வளர்ந்து வருவதும் குறிப்பிடத் தக்கது.  

பல்வேறு பண்பாட்டு மக்கள் சேர்ந்து வாழும் நிலையில் அரசியல் பொருளியல் பண்பாட்டுக் கலப்பு, வாழ்க்கை வழியாக மொழியில் தெரிகிறது.

----------------------------------------------------------------------------- 

நன்றி - இந்து தமிழ் நாளிதழ் (20-6-2023)

செவ்வாய் தோறும் வளரும் தொடர்!

நண்பர்கள் இந்து தமிழ் நாளிதழைப் படித்துக் 

கருத்துக் கூறினால், நல்ல கருத்துகளை, 

இக்கட்டுரைகள் நூலாகும் போது 

அந்தக் கடிதங்களையும் சேர்த்துக் கொள்வேன்.

(வெறும் பாராட்டு அல்ல, பாராட்டோ விமரிசனமோ 

ஆக்கபூர்வமான விளக்கத்துடன்) 

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிகள் -

இந்து தமிழ் நாளிதழுக்கு - thisaikaatti@hindutamil.co.in 

இக்கட்டுரை ஆசிரியருக்கு - கட்டுரைகளின் பின்னூட்டத்தில் 

----------------------------------------------

பொள்ளாச்சியிலிருந்து சிற்பி பேசுகிறேன்..” என்று நமது மதிப்பிற்குரிய கவிஞர் சிற்பி அவர்கள் சொன்ன கருத்தும், தமிழறிஞர் முனைவர் நா.அருள்முருகன் அவர்களின் ஆக்கபூர்வமான ஆலோசனையும் முதல் சேமிப்பில் உள்ளன!

--------------------------------------------------------

4 கருத்துகள்:

  1. நல்ல சுவாரஸ்யமான தகவல்களை சுவையான மொழியில் பரிமாறுகிறீர்கள்.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா.. மகிழ்ச்சியைச் சொல்ல உதாரணம் கொஞ்சம் பழைய புராணம் என்றாலும் நாம் பழசையும் பயன்படுத்த வேண்டும் தானே?
      .“வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி” ! நன்றி தமிழ்

      நீக்கு
  2. ஆழமாக ஆய்வுசெய்து எளிய காட்டுகளுடன் தரும்கட்டுரை!

    பதிலளிநீக்கு
  3. மதுரைத்தமிழ் - அலப்பறை :-) பள்ளி பருவத்திலும் கல்லூரி காலத்திலும் நிறைய கெட்டிருக்கிறேன் அண்ணா. :-)

    பதிலளிநீக்கு