தமிழ் இனிது (12) மருவியது மரூஉ (11)வேண்டா சொல் வேண்டாம்

நன்றி - தமிழ் இந்து -நாளிதழ் 

செவ்வாய் - திசைகாட்டி பகுதி

---------------------------------------------------------- 

தமிழ் இனிது (கட்டுரை -12) 

அதெப்படி மருவி வருகிறது?

நா.முத்துநிலவன் 

(15-8-2023 தமிழ்இந்து)

பிற்காலச் சோழர்கள் பரகேசரி ராஜகேசரி  என்றும், பாண்டியர்கள் ஜடாவர்மன், மாறவர்மன் என்றும் முன்னோர் பெயரில் பட்டம் சூட்டிக் கொண்ட வரலாறு தமிழ்நாட்டில் உண்டு. செட்டிநாட்டுப் பெரியோர் உள்ளிட்ட தமிழர் சிலரிடம் இவ்வழக்கம் இன்றும் உள்ளது. இதில் தந்தைவழிப் பெயர்கள்தான் இருக்கும். தாய்வழிச் சமூகத்தை மாற்றி, தந்தைவழிச் சமூகமாக நிலைநிறுத்திய ஆணரசியலும் இதிலுள்ளது.

இந்த வகையில் வந்ததுதான் தாத்தா பெயரைப் பெயரனுக்கும், அரிதாகப் பாட்டி பெயரைப் பெயர்த்திக்கும் வைக்கும் வழக்கம். பெயரைத் தாங்கியவன்/ள் என்று பொருள். பெயரோடு, ‘முன்னோர் பெருமையைத் தாங்கிய’ எனும் உட்பொருளும் உண்டு!

பேச்சுவழக்கில் பெயரன் பேரன் ஆனான்.  இதை இலக்கணத்தில் “மரூஉ” என்பர்.  பேச்சு வழக்கில் மருவி –மாறி- ஒலிப்பதே மரூஉ.   

இரு குறில் எழுத்துகளின் ஓசை, ஒரு நெடில் ஓசைக்குச் சமம். அ+அ=ஆ, இ+இ=ஈ முதலான இன எழுத்துகளின் தோற்றத்தை இந்த வழக்கில் வரும் ‘மரூஉ’ உணர்த்தி நிற்பது, தனி ஆய்வுக்குரியது.

 “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” (பெயரியல்-640) தொல்காப்பிய இலக்கணத்தின்படி, சொற்கள் மருவியதற்கும் வரலாறு இருக்கலாம்!  ஆய்வதும் புதிய பொருள்காண்பதும் ஆய்வாளர் கடன்.

பெயர்த்து – பேத்து  “பேத்துருவேன்“

வெயர்த்து – வேர்த்து  “வேர்த்து விறுவிறுத்து“

மிகுதி – மீதி  எஞ்சி நிற்பது

பகுதி – பாதி. பாதியை அரை என்பதே எழுத்து வழக்கு. அரையை,   -இடுப்பு எனும் பொருளில்- “புலித்தோலை அரைக்கசைத்து” என்கிறது சுந்தரர் தேவாரம். உடலின் கால் பகுதியைக் கால் என்றதும், உடலின் நடுவில் இடையில் உள்ள இடுப்பை அரை என்றதும் தமிழ் நுட்பம்!

இந்தப் பாதிப்பில், குறிலும் ஒற்றும் சேர்ந்து  நெடிலாவதும் உண்டு!

செய்தி – சேதி – “அப்பறம், வேறென்ன சேதி?“

பொழுது- போது, போழ்து. பொழுது சாயும் காலம் -சாய்ங்காலம், பொழுது சாயும்-நேரம் -சாயந்தரம் என்பன வழக்கு. இரவு, பகலைச் சந்திக்கும் விடிகாலைப் பொழுதே சந்தி, பகல் முடியும்  காலமே  அந்தி. “இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுது”-வைரமுத்து இப்போது-இப்பொழுது என்பன எழுத்து, இப்ப-என்பது வழக்கான மரூஉ.

உறவுப் பெயர்களில் மரூஉ

புதிதாக மணமாகி வந்தவள், ‘கணவரின் உடன்பிறந்தாளை எப்படி அழைப்பது?’ என்று விழிக்கிறாள், அதற்கு, ‘நாத்தூண் நங்கை’ என எடுத்துக் கொடுக்கிறார்,  இளங்கோவடிகள்! (சிலப்பதிகாரம்-கொலைக்களக் காதை- வரி-19) இதுவே பிறகு ‘நாத்தனார்’ என மருவியிருக்கலாம். இதிலும் ஒரு நுட்பம், நாற்று - இளம் பயிரை- பிடுங்கி வேறு வயலில் நடுவது வழக்கம். “இந்த வீட்டில் பிறந்து, வேறொரு வீட்டில் வாழப்போகும் பெண்” எனும் பொருளில் நாற்று-அன்னாள் –நாத்து-அன்னாள்– நாத்தனாள் - நாத்தனார் ! தமிழ் இனிக்கிறதல்லவா?

இதற்கு இணையான மற்றொரு சொல் ‘கொழுந்தியாள்’. ‘இவள், இந்த வீட்டில் துளிர்விட்ட கொழுந்து அன்னாள் -கொழுந்தனாள், கொழுந்தியாள்- மற்றொரு வீட்டிற்குப் போய்  வாழ்ந்து, பிள்ளைக் கனி தருவாள்’ எனும் பொருள்தான் எவ்வளவு சிறப்பு! ஆங்கில உறவுப் பெயர்கள் -in-law என்றே வருவதை ஒப்பிட்டு, சொல்லின் வரலாறு, தமிழ்ச் சமூக வரலாற்றைச்  சொல்வதைத் தனியே ஆய்வு செய்யலாம்.

-------------------------------------------------------------- 

                                        (நன்றி – தமிழ் இந்து – நாளிதழ் – 22-8-2023)
                                  ------------------------------------------------------------------------ 

தமிழ் இனிது - கட்டுரை - 11 - நா.முத்துநிலவன்

( தமிழ் இந்து -15-8-2023 )

வேண்டா சொல் வேண்டாம்! 

அருகில் – அருகாமையில்

            அருகில் என்பதே சரியான சொல். அருகண்மை எனும் ஒருபொருட் பன்மொழி, திரிந்து அருகாமை ஆகிவிட்டது, ஆனால் இது அருகு எனும் சொல்லுக்கு எதிரான பொருளையே தருகிறது. வழக்கில் உள்ளது என்பதாலேயே, சரியான சொல்லை விட்டுவிட்டு, நாம் தூரத்தில் நிற்க வேண்டாம்!  ‘அருகில்’ எனும் சொல்லையே  புழங்குவோமே!

எத்தனை – எத்துணை

எத்தனை – எண்ணைக் குறிக்கும். ”எத்தனை வயது?” எத்துணை – அளவைக் குறிக்கும். “எத்துணை வெள்ளம்?  “எத்துணையும் பேதமுறாது” -திருவருட்பா-5298. ஆனால், கால- வெள்ளத்தையே நுணுகி எண்ணும் இக்காலத்தில் “எத்துணை” எனும் சொல் வழக்கிழந்தது. “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?” எனும் பட்டுக் கோட்டையார் தொடங்கி, “எத்தனை பேர் கூடி இழுத்தும் என்ன? சேரிக்குள் வரவில்லை தேர்” எனும் செ.ஆடலரசன் வரை,”எத்தனை“ என்பதே வழக்கில் உள்ளது.

எல்லாரும் - எல்லோரும் - எல்லீரும்

வள்ளுவர் “எல்லார்க்கும் நன்றாம் பணிதல்” என்கிறார்(125), கம்பர், “எல்லாரும்” என்கிறார் ( கம்ப ராமாயணம்-பால-நகரப் படலம்-167), இவ்வாறு முன்னரே, “எல்லாரும்” ”எல்லோரும்” இரண்டு வழக்கும் இருந்ததை, “ஆ ஓ ஆகலும் செய்யளில் உரித்தே”  (தொல்-680) என ஏற்கச் சொன்னார் தொல்காப்பியர்.  இப்போதும் இலக்கிய வழக்கில் இவ்விரண்டு சொற்களையுமே பாரதி பயன்படுத்தி எழுதியிருக்கிறார்.

‘எல்லாரும்’ எனும் சொல்லே மக்கள் வழக்கில் இப்போது உள்ளது.  ‘எல்லீர்’ எனும் சொல், பழந்தமிழில் இருந்ததாகத் தெரிகிறது.

கட்டிடம் – கட்டடம்

          “கட்டிடத் திறப்பு விழா” என்பது தவறு. கட்டும் இடமே கட்டிடம்-மனை(Plot/Site). கட்டி முடிக்கப்பட்டது கட்டடம் (Flat/Building). கட்டு-அடம்- அடுத்து-அடுக்கிக் கட்டுவது.   Apartment என்பதை, “அடுக்ககம்” எனலாம்.

நம்மைப் பொறுத்ததா?-யாரைப் பொருத்தது?

பொருத்திப் பார்ப்பது பொருத்தம். திருமணத்தில் பொருத்தம் பார்க்கிறோம். பொறுத்தம் என தமிழ்ச்சொல் ஏதும் இல்லை. ஆனால், ”கொஞ்ச காலம் பொறுத்துச் செய்யலாம்” என்பதற்கு, “காலம் தாழ்த்தி பொறுமையாகச் செய்யலாம்“ என்பது பொருள். ஆனால், “இதற்கு நான் பொறுப்பல்ல” என்பது, பொறுப்புத் துறப்பு. இரண்டு சொற்களும் வேறு வேறு ஒப்பீட்டுப் பொருளில் ஒன்று போல வழக்கில் உள்ளன என்றே புரிந்து கொள்ள வேண்டும். இலக்கணத்தில் பொருத்தமே பொருத்தம்!  ஆக சொல் மட்டுமல்ல, தமிழ் வளர்ச்சி நம் அனைவரையும் பொருத்ததே!

இரண்டு மாதிரியும் புழக்கத்தில் உள்ள சொற்கள் சில -

வெயில் – வெய்யில் : வெப்பத்தின் காரணமாக வருவது வெயில். குறளும் “என்பில் அதனை, வெயில்போல” என்றே சொல்கிறது (குறள்-77). “மாலை வெயில் மயக்கத்திலே மயங்கிடலாமோ?” என்றுதான் கேட்கிறார் பட்டுக் கோட்டை கலியாண சுந்தரம்.

ஆனால் “வெய்யிற் கேற்ற நிழலுண்டு” என்கிறார் கவிமணி தேசிக வினாயகர்.  “வெய்யில்” எனும் பெயரில் நல்ல கவிஞர் ஒருவரும் எழுதி வருகிறார்.  பேச்சில் வெய்யில் அடிப்பதாகத் தான் சொல்கிறோம்.

வேண்டா- வேண்டாம் : “வேண்டா” என்பதே இலக்கண வழக்கு (குறள்-37). இச்சொல் இப்போது, “வேண்டாம்”என்றே எழுத்திலும் பேச்சிலும் புழங்கி வருகிறது. இனி, ‘வேண்டா’ இலக்கணத்தைத் தெரிந்து கொண்டாலும், யாரும் அப்படி எழுதுதல் வேண்டாம் அல்லவா? “ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்” உலகநாதரின் உலகநீதி.

--------------------------------------------------

இதில் கடைசி வரியை உலகநாதரின் உலக நீதி என்பதே சரியானது. இதைத் தவறுதலாக நான், ஔவையார் என்று எழுதிவிட்டதைச் சுட்டிக்காட்டிய நண்பர் வடுவூர் சிவ.முரளி அவர்களுக்கு நன்றி.


-------------------------------------------------------------------------- 

தமிழ் இனிது (9)“காவிரியா? காவேரியா,? (10) “மங்கலமா? மங்களமா?

நன்றி - தமிழ் இந்து நாளிதழ் - செவ்வாய் - திசை காட்டிப் பகுதி

தமிழ் இனிது கட்டுரைத் தொடர் - 10

மங்கலமும் மங்களமும் 

          நிகழும் மங்களகரமானஎன்று நமது அழைப்பிதழ்கள் வருவதைப் பார்க்கலாம். இசையரங்குகளில் நிகழ்ச்சி முடிந்ததை,மங்களம் பாடியாச்சுஎன்கிறார்கள். இதில் எது சரியான சொல்?   மங்களம் எனும் சொல், நிறைவு எனும் பொருளில் புழங்குவதை அறியாமல், அழைப்பிதழில் போடுவது தவறு!மங்கலம்என்பது தான் சரியான வழக்கு! “மங்கலம் என்ப மனைமாட்சிகுறள்-எண்-60. இந்த “மங்கலம்”,  இனாமாகத் தரப்பட்ட ஊர்ப் பெயர்களிலும் வருவதைப் பார்க்கலாம்.    

ஆகிய, முதலிய வேறுபாடு என்ன?

ஒன்றில் தொடங்கி, தொடரும்போது, முதலிய எனும் சொல் வரும். “கல்வி முதலிய சமூகத் தேவைகளை நிறைவேற்றுவது அரசின் கடமைசொல்ல வேண்டியவற்றை முழுவதுமாகச் சொல்லி முடிக்கும் இடத்தில் ஆகிய எனும் சொல் வரும் – “இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழிலும் வல்லவர்இவற்றை இடம் மாற்றிப் போட்டால், பொருள் மாறிப் போகும்!

துவக்கப்பள்ளியா? தொடக்கப்பள்ளியா?

இவ்விரண்டையும்ஆசிரியர் சிலரும் கூட- பயன்படுத்துகிறார்கள்! தொடு- தொடங்கு- தொடர்- எனும் பொருளில் தொடக்கப் பள்ளி என்பதே சரி. துவக்கு என்றால் ஈழத்தமிழில் துப்பாக்கி என்று பொருள்!  

முன்னால்முன்னாள், மேனாள், முன்னை?

          வரிசையில் முன்னால் இருக்கலாம். பதவியில் முன்னாள் அல்லது மேனாள் என்பதே பணிநிறைவு பெற்றவர் அல்லது அந்தப் பணியில் முன்னாள் இருந்தவர் என்று பொருள்தரும். முன்னை என்பது இலக்கிய மரபு.   

ஒரு, ஓர்  

          எழுதும்போது, இந்த இடத்தில்ஒரு போடுவதா? ஓர் போடுவதா? என்று பலருக்கும் சந்தேகம் வந்துவிடுகிறது.  அடுத்துவரும் சொல் உயிர்எழுத்தில்  வந்தால், ஓர் எனும் எண்ணுப் பெயர் வரும். மற்ற எழுத்து வந்தால், ஒரு வரும்என்பது இலக்கணம். ஓர் உயிர், ஒரு வாழ்க்கை என்பதுதான் சரி. ஆனால், வழக்கிலும், இலக்கியத்திலும் கூட   இது மாறி வருவதுண்டு. “ஒரு ஊருல ஒரு நரியாம்கதை நாம் கேட்டதுதான். “மேல் ஓர் நாள்என்பது கலித்தொகை(51). “ஒரு மனிதன் ஒரு வீடு, ஒரு உலகம்ஜெயகாந்தன் எழுதிய புதினம். இவற்றில், ஒரு ஓர் இலக்கணம் இல்லை!  

இதில் கவனம் பெறாத மற்றொன்றும் உண்டு! ஒன்று எனும் எண்ணுப் பெயரே ஒரு ஆகும். இஃது, அஃறிணைக்கு உரியது. இந்த அஃறிணை பற்றிய தெளிவில்லாமல் உயிர் எழுத்தை மட்டும் நினைத்து, “ஓர் அமைச்சர்என்று எழுதுகிறார்கள் -என்னதான் தனிப்பட்ட பிரச்சினை இருந்தாலும்- அமைச்சரை அஃறிணையாக்குவது சரியல்லவே! அமைச்சர் ஒருவர் என்பதே சரி.    

புதிய மரபாக ஒரு ஓர் இரண்டையும் ஒன்றேபோலப் பயன்படுத்தும் பழக்கம் தொடர்ந்து வழக்கமாகி விட்டது. எனினும் இப்படி ஒரு மரபு தமிழில் உள்ளது என்பதையாவது கவனத்தில் கொள்வது நல்லது!

தொடர்புடைய மற்றொன்று - அது இது எனும் சுட்டுச் சொற்களை அடுத்து வரும் சொற்களுக்கும் இதே மரபு உண்டு! –அது வந்தது, அஃது என்ன? ஆனால் தமிழில் கிட்டத்தட்ட ஆய்த எழுத்துப் பயன்பாடு அழிந்தே வருகிறது! வன்முறைக்கு எதிரானவராக இருந்தால் ஆயுதத்தை ஒழிக்கலாம், ஆய்த எழுத்தை ஒழித்து விடலாமோ?

-------------------------------------------------------  


------------------------------------------------------------ 

நன்றி - தமிழ் இந்து நாளிதழ் - செவ்வாய் - திசை காட்டிப் பகுதி

தமிழ் இனிது கட்டுரைத் தொடர் - 09

தமிழ்இனிது-(9)

காவிரியா? காவேரியா?

          சில சொற்களைப் பேசும்போது வராத குழப்பம், எழுதும்போது வரும்! “கோவிலா, கோயிலா?” என்பது போல! ஏனெனில், பேச்சுமொழி வேறு, எழுத்துமொழி வேறு! உலகம் முழுவதும் இந்த வேறுபாடு உண்டு!

எழுதுவோர்நமக்கு இதுகூடத் தெரியலையேஎன்று சுய ஆற்றாமை கொள்ள வேண்டியதில்லை! “சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்அல்லவா?  பேசப் பேச, எழுத எழுதத்தான்,  தவறு சரியாகும்!

          பள்ளி கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு, யாரும் பயிற்சி செய்வதில்லை, அதனால்தான் தமிழ்நாடு அரசு, அரசுப் பணிகளுக்குத் தமிழில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்று ஆணையிட்டிருக்கிறது. இது மிகவும் நல்லது! பாடத்துக்காகவும் படிக்கலாம், வாழ்க்கைக்காகவும் தெரிந்து கொள்ளலாம்.

அங்கயற்கண்ணியும் மங்கையர்க்கரசியும்:அங்கயற்கண்ணி என்றால், அழகான கயல்(மீன்)போலும் கண்களை உடையவள் என்று பொருள். இதை அங்கயர்க் கண்ணி என்பது தவறு. அதேபோல, மங்கையர்க்கு+அரசி எனும் பொருள் தரும், மங்கையர்க்கரசி என்பதே சரி, மங்கையற்கரசி என்பது தவறு.

அரசு கலை, அறிவியல் கல்லூரி என்பதே சரியானது. இதை அரசினர் கல்லூரி என்று எழுத வேண்டியதில்லை. தேனீர் எனில், தேன்+நீர் என்று தவாறகிவிடும். தேயிலை நீர் எனும் பொருளில் தேநீர் என்பதே சரி!

ஆற்காடா? ஆர்க்காடா?

ஆர் என்றால் ஆத்திமரம், சோழர்களின் அடையாளப் பூ

போந்தை வேம்பே ஆர் என வரூஉம்

மாபெரும் தானையர் மலைந்த பூஎன்பது தொல்காப்பியம் (புறத்திணை-5) ஆத்திமரங்கள் நிரம்பிய ஊர் ஆர்க்காடுஎன்றிருக்கலாம். மாறாக, “ஆலமரம் நிரம்பிய ஊர்எனில் ஆற்காடுஎன்பதும் சரிதான்! (இதில், ஆத்திமரம் சிவனுக்குரியது, ஆலமரம் திருமாலுக்குரியது! ஊரை மதம் மாற்றலாமா?!)

கோயிலா? கோவிலா? – குடியிருந்த கோயில், கோவில், இதயக் கோயில், அண்ணன் ஒரு கோவில் என, இரண்டும் வரும் திரைப்படப் பெயர்கள் பல உள! ஆனால், “ வழி, வரும், ஏனை உயிர்வழி, வரும்எனும் உடம்படு மெய்” (நன்னூல்-162) இலக்கணத்தின் படி, மணி+ஓசை= மணியோசை, கோ+இல்=கோவில் என்பதே சரி. உயிரும் மெய்யும் இணையுமே அன்றி உயிருடன் உயிர் இணையாது. அப்படி உயிர் எழுத்துடன் மற்றோர் உயிரெழுத்து சேரும்படி நேர்ந்தால் இவற்றைஉடன்படுத்தவரும் எழுத்தைஉடம்படு மெய்என்ற பழந்தமிழறிவு வியப்பளிக்கிறது!

காவிரியா? காவேரியா? காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை ஒருபக்கம் இருக்க, சொற்களில் எது சரி என்றும் சிலர் பிரச்சினை செய்கிறார்கள்! இரண்டு வழக்கும் இருப்பதாகச் சிலப்பதிகாரமே சொல்கிறது! எடுத்த எடுப்பில் வரும் மங்கல வாழ்த்துப் பகுதி -அடி5இல்- “காவிரி நாடன்என்று வரும். பிறகு, அதே சிலம்பின்கானல்வரியில், “நடந்தாய் வாழி காவேரிஎன்று பலமுறை வரும்! ஆக இருவழக்குகளுமே வரும், எந்தச் சிக்கலும் இல்லை!  

இதுபோலவே, பழைமை-பழமை, உடைமை-உடமை, புடைவை-புடவை என இரண்டும் (வழக்கு மொழிக்குரிய ஐகாரக்குறுக்கம் எழுத்தில் ஏறிவருவதும்) வழக்கில் வந்துவிட்டது! ஆக இலக்கணத்தை மாற்றுவதும் வழக்கில் உள்ளது. “மாறுவது மரபு, இல்லையேல் மாற்றுவது மரபுதானே? அப்படி மாறிய சொற்களையும் அடுத்தடுத்துப் பார்க்கலாம்.


நன்றி - தமிழ் இந்து நாளிதழ் - செவ்வாய் - திசை காட்டிப் பகுதி

-------------------------------------------------------------------------------