தமிழ் இனிது -28


எழுத்துக்கள் சரியெனில் வாழ்த்துக்கள்?

          ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்த நண்பர் கேட்டார்- “வாழ்த்துக்களா? வாழ்த்துகளா?” தமிழ்ப் புத்தாண்டில் “ஏப்பி நியூ இயர்” சொன்ன ‘கொடுந்தமிழர்’ இடையே, இப்படிக் கேட்டவரை வாழ்த்தினேன்!

            ‘கள்’ விகுதி பழந்தமிழில் இல்லை! “ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவி“யோடு ஒட்டி, உயர்திணை ஒருமைக்கே மரியாதைப் பன்மை வந்து விட்டது – ”அமைச்சர் அவர்கள் வருகிறார்கள்” போல!  

நாள்கள், ஆள்கள், வாழ்த்துகள் என, இயல்பாகவே எழுதலாம். ‘நாட்கள்’ என்பதற்கு, ‘நாட்பட்ட கள்’ என்று பொருள் எனினும், இப்போது அப்படி யாரும் புரிந்து கொள்வது இல்லை என்பதால் நாட்கள் என்பதை ஏற்கலாம் என்பதே என் கருத்து. தாட்கள், ஆட்கள் என்பது செயற்கை. “எத்தன ஆளுக(ஆள்கள்)?“எனும் சிற்றூர் மக்களிடம் இதைக் கற்கலாம்.   

பரிமேலழகர் முதலாக, தமிழண்ணல் வரை ‘எழுத்துக்கள்’ என்றும் எழுதியுள்ளனர். எழுத்துக்கள் சரியெனில் வாழ்த்துக்களும் சரிதானே? 

ஆக, நாட்காட்டி- நாள்காட்டி, வாழ்த்துக்கள்-வாழ்த்துகள் இரண்டும் வழக்கத்தில் இருப்பினும், நாள்காட்டியே எளிது என்பதை கவனத்தில் கொள்ளலாம், ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளையும் சொல்லலாம்!       

பழமுதிர்ச்சோலையா? - பழமுதிர் சோலையா?  

 “ஃப்ருட் ஸ்டால்“ என்பதை, “பழமுதிர் சோலை“ எனப் பார்ப்பது மகிழ்ச்சி தருகிறது! பன்னாட்டுப் பண்பாட்டுக் கலப்பில், உலகத் தாய்மொழிகள் பலவும் அழிந்துவரும் சூழலில், இது மகிழ்ச்சிதானே?

முருகாற்றுப் படை,  “பழமுதிர் சோலை மலைகிழ வோனே“ என்று முடிவடையும். “பழமுதிர் சோலையிலே தோழி” எனும் கண்ணதாசனின் திரைப்பாடலை, சுசிலாம்மாவின் இனிய குரலில்  கேட்டு மகிழுங்கள்.  

பழம் உதிர் சோலை! கேட்கவே இனிக்கும் பழந்தமிழ்ச் சொல்! இதை, பழமுதிர்ச் சோலை என்று எழுதுவது முதிர்ச்சியற்ற செயல்!

அண்ணார்? அன்னார்?  

இறப்புச் செய்தி அறிவிப்புகள், “…அன்னாரின் இறுதி ஊர்வலம்..” என்று வரும். இதையே எழுதும்போது, ‘அண்ணாரின்’ என்பது தவறு. அன்னார் என்பது, ‘ஏற்கெனவே குறிப்பிட்டவர்’ எனப் பொருள் தரும்.  குறள் (667,969,1323), சங்க இலக்கியத்திலும் வரும். ‘தேம்பாவணி’யில் மட்டும் இச்சொல், 72இடங்களில் வருவதாகப் பட்டியலைத் தருகிறது “தமிழ்மரபு அறக்கட்டளை“யின் “சங்கம்பீடியா”!

 ‘அண்ணார்’ என்றால் ‘பகைவர்’ என்று பொருள்! இறந்தவரை அறிந்தவர், அன்னாரைப் ‘பழிவாங்க’ அண்ணார் என்று சொல்லலாம்!  

தேநீர் குடிப்பதா? சாப்பிடுவதா?

தேயிலை நீர் தேநீர். இதைத் தேனீர் என்பது சரியல்ல.  

தேநீரை, காப்பியை  குடிப்பதா? சாப்பிடுவதா? அருந்துவதா?

 “இடைப் பலகாரம் சாப்பிடுங்க” இது, செட்டிநாட்டு மக்களின் மாலைச் சிற்றுண்டியைக் குறிக்கும் அழகு தமிழ் அழைப்பு! இதுதான் சரியானது. பலவகை உணவுகளுக்கான பொதுச் சொல் சாப்பிடுவது.

உண்ணல், தின்னல், கடித்தல், குடித்தல், பருகுதல் உள்ளிட்ட ஏறத்தாழ 40 உணவருந்தும் சொற்கள் தமிழில் உள்ளன! ‘பர்கர்’, ‘பீசா’ என, செயற்கையைச் சாப்பிடுவோர் இதை அறிந்திருக்க வாய்ப்பில்லை!    

தேநீரில்தான் எத்தனை வகைகளைக் கண்டு பிடித்தனர் நம் கரோனாக் காலத் தமிழர்!  தமிழறிஞர் ஆ.இரா.வேங்கடாசலபதி “அந்தக் காலத்தில் காப்பி இல்லை” என்றொரு நூல் எழுதி வியக்க வைக்கிறார்! 

“டீ குடிக்கலாமா’க்கா?”, 

“டீ சாப்பிடலாமா சகோ?” 

“தேநீர் அருந்தலாமா நண்பா?” - 

--இவற்றை வாழ்நிலை வழக்கு என்றே ஏற்கலாம். 

----------------------------------------------------------------------  

நன்றி - இந்துதமிழ் நாளிதழ் - 26-12-2023 

(26-12-2023 செவ்வாய் 

பிற்பகல் 2-45மணிக்கு 

வெளியிடப் பட்டது) 

தமிழ் இனிது - 27

எது பெரும் பிழை?

ஆவண செய்வதா? – ஆவன செய்வதா?

          அரசு அலுவலரிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்து, ‘ஆவண’ செய்யுமாறு கேட்கிறார்கள். பதிலும் ‘ஆவண’ செய்வதாகவே வருகிறது! ‘ஆவணம்’ என்பதற்கு,  நிலையான பதிவு (Document) என்பது பொருள்!  

            ‘ஆவன’ என்பதே,  ‘ஆக வேண்டியன’ என்னும் பொருள்தரும் சொல். இதுபோலும் சொற்களைப் பற்றி, தமிழ் வளர்ச்சித் துறையினர், மாவட்டம் தோறும், ஆண்டுதோறும் அரசு ஊழியர்களுக்குப் பயிற்சி தருகிறார்கள். ஆனாலும், ஒப்பமிடும் அரசு உயர்அலுவலர் அதைப் பார்த்துத் திருத்தினால்தான் மற்றவர்களும் திருத்தமாக எழுதுவார்கள். இதைச் சரிசெய்ய, அரசு தான் ‘ஆவன’ செய்ய வேண்டும்.

ஆத்திச்சூடியா ஆத்திசூடியா?

            குழந்தைகளுக்கு எழுத்துகளை அறிமுகம் செய்வது, கல்வியின் தொடக்கம். ஔவையாரின் “ஆத்திசூடி“, புகழ் பெற்ற சிறுநூல். இந்த வடிவ நூல்கள் அவ்வப்போது தமிழில் வந்துகொண்டே இருக்கின்றன! (ஆத்திசூடியின் முதல்தொடர் –அறம்செய விரும்பு! அறத்தின் வடிவமான குழந்தைகளுக்கு, அறத்தைப் பற்றி விளக்க முடியுமா என்பது வேறு!)

ஆனால், இன்றைய இணையத் தமிழில், ஆத்திசூடி படும்பாடு, பெரும்பாடு!  ஆமாம்! பிறகு, “ஆத்திச்சூடி“ என்று எழுத்துப் பிழையோடு, கல்வி தொடங்கினால்?  அது விளங்குமா?

            ’ஆத்திச்சூடி’  செயலிகள்(Aaps) சிலவும்(!) இருக்கின்றன!  ’இன்ஸ்டா’,  ’யூட்யூப்’,  முகநூல், புலனம் போலும் இணைய ஊடகங்களில் ‘ஆத்திச்சூடி’ என்றே பலரும் எழுதுகிறார்கள்!  இதைப் பார்த்து, “இணையத்தில் தமிழ் ஔவையா! அடடா“ என்று மகிழ்வதா? “நான் எழுதிய ஆத்திசூடியை எழுத்துப் பிழையுடன் எழுதுகிறாயா?” என்று -கையில் கம்போடு- உருட்டி விழிக்கும் ஔவையைப் பார்த்து அஞ்சுவதா?!  

 “நன்மை கடைப்பிடி” என்னும் ஆத்திசூடிக்கு, “நல்லவற்றைப் பின்பற்று”  என்று பொருள். ஆனால் ‘விக்கிப்பீடியா’வில் “கடைபிடி” என்று உள்ளதைப் பார்த்தோ என்னவோ, நமது இரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாட நூலிலும் அவ்வாறே உள்ளது! இதற்கு, ‘கடையைப் பிடி’ என்று பொருளாகும்! விக்கிப்பீடியரும், பாடநூல் எழுதியவரும், அடுத்த முறை திருத்திவிட அன்போடு வேண்டுகிறேன்.  

வாய்ப்பாடும் வாய்பாடும்

‘வாய்பாடு’ வாயால் சொல்லிச் சொல்லி, மனப்பாடமாகக் கற்பது. கணித, அறிவியல், வாய்பாடுகளை  ஆங்கிலத்தில் ‘Formula’ என்பர். கணக்கு வகுப்பில், வாய்பாடு சொல்லத் தெரியாமல், வாங்கிய பிரம்படியை, எழுபது வயதிலும் மறக்காதவர் இன்றும் உண்டு!  

‘கணக்கி’ (Calculator) வந்தபின், ஐந்தையும் பதினொன்றையும் பெருக்க, கணக்கியைத் தேடுகிறாள் ஆறாம் வகுப்புக் கலைவாணி!  ‘மனப்பாடம் மட்டுமே கல்வியல்ல’ என்பது, எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை, ‘மனப்பாடம் இல்லாமலும் கல்வியில்லை’ என்பதும்! இப்போது வாய்பாடு எனும் அந்தச் சொல்லும் ‘வாய்ப்பாடு’ என்று பிழையாகவே புழங்குகிறது! வாயால் இசைக்கப்படும் வாய்ப்பாட்டின் ‘பக்க –வாத்திய- விளைவாக’த்தான் வாய்ப்பாடு வந்திருக்குமோ?!   

பிழைத்திருத்தமா? பிழைதிருத்தமா?

            பேச்சில் பிழைநேர்ந்தால் ‘வாய்தவறி வந்துவிட்டது’ என்கிறோம். எழுத்தில் பிழை நேர்ந்தால், திருத்தம் செய்து கொள்கிறோம். கை /வாயின் வேகத்துக்கும் மன வேகத்துக்குமான இடைவெளியே எழுத்து /பேச்சில் நேரும் பிழை என்றும் சொல்லலாம். ஆனால், அந்தப் பிழையைத் திருத்த, முயற்சிகூடச் செய்யாமல் இருப்பதுதான் பெரும் பிழை!  

பிழையைத் திருத்திக் கொள்வதில் ‘பிழை திருத்தம்’ செய்வதில் பிழையில்லை!  

‘பிழைத்திருத்தம்’ என்று எழுதுவது தான் பெரும்பிழை!

--------------------------------- 

                 --------நன்றி - இந்து தமிழ் -19-12-2023)--------

                 (பதிவிட்டது - 19-12-2023 மாலை 5.45)

-------------------------  

தமிழ்இனிது-26

 

    அவனன்றி ஓரணுவும் அசையாது’  என்பது சரியா?

உயர்ந்துவிட்டதும், கூடிவிட்டதும்!

‘அந்தக் கட்சி ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை ‘உயர்ந்து’ இந்தக் கட்சி ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது’, என்கிறது செய்தி!  

‘உயர்ந்து’ என்பதன்  எதிர்ச்சொல்,  ‘தாழ்ந்து’ தானே? ‘குறைந்து’ விட்டதன்  எதிர்ச்சொல்  ‘கூடிவிட்டது’ தானே?

சாவில் ‘உயர்வு-தாழ்வு’ இருக்கிறதா என்ன!? எண்ணிக்கையைச் சொல்லும் போது கூடுதல், குறைதல் என்பதே தமிழ் மரபு. ஆனால் ‘உயர்ந்து’விட்டது என்று, சாவைக்கூட ‘உயர்த்திய சமத்துவர்’ யாரோ!?

எண்ணிக்கை  கூடியது /  குறைந்தது என்பதே சரியானது.     

சிலவும்  செலவும்

            சிலவா? செலவா? ‘வரவு சிலவுச் சிட்டை’ என்கிறார்களே!  

செல்-செல்வது-பயணம். இலங்கைப் பயணம் பற்றி திரு.வி.க. எழுதிய நூல்- “இலங்கைச் செலவு”.  

செல்-செலவு - செலவழிப்பது - பணம். ‘ஓரிடம் தனிலே, நிலை இல்லாதுலகினிலே உருண்டோடிடும் பணம் காசெனும் உருவமான பொருளே“ - உடுமலை நாராயண கவி சொன்னது எவ்வளவு உண்மை!  நிலையாக யாரிடமும் நின்று கொண்டே இருக்காமல் சென்றுகொண்டே இருப்பது செலவுதானே!

ஆக, செலவு என்பதே சரியான சொல். சிலவு என்பது, தவறாகப் புழங்கும் சொல். ‘அது எப்படிங்க, தவறான சொல் புழக்கத்தில் இவ்வளவு காலம் இருக்கும்?’என்று கேட்போர்க்கு ஒரு குறளும் ஒரு குறுங்கதையும்  : 

சிலர் மனிதரைப் போலவே இருப்பார்கள், ஆனால் மனிதர் அல்ல! “மக்களே போல்வர் கயவர்” என்னும் வள்ளுவர், மக்களைப் போலவே இருக்கும் கயவர்களின் ஒப்புமையை வியந்து எழுதுகிறார்! குறள்-1071.

சார்லி சாப்ளின் போல மாறுவேடம் போடும் போட்டியில் கலந்து கொண்ட உண்மையான சாப்ளினுக்கு இரண்டாம் பரிசு கிடைத்ததாம்! குறள் எவ்வளவு உண்மையானது! உண்மையை விட, பொய் அழகானது!   

அன்றியும் இன்றியும்

அன்றி-அல்லாமல், இன்றி- இல்லாமல்  என்று பொருள். கல்வியைக் கற்பது அன்றியும் வாழ்வில் அதன்படி நிற்பது நல்லது -குறள்-391. “குதிரை கீழே தள்ளியதன்றி, குழியும் பறித்ததாம்“ பழமொழி.

“அவனன்றி ஓரணுவும் அசையாது” என்பதும் தவறு! அறிவின்றி வேலை கிடைக்காது, அன்பின்றி வாழ முடியாது என,  இன்றி எனும் சொல்லே இன்றியமையாத தன்மையைக் குறிக்கும். தமிழ்ச் சொற்களைப் பொருளின்றிப் பயன்படுத்துவது, தவறன்றி வேறில்லை!   

திருவளர் செல்வன் – திருநிறை செல்வி

தமிழர் திருமண நிகழ்வு நுட்பங்களில் ஒன்று : திருமண விருந்தில் அல்லது  கையில் தரும் பையில் தேங்காய், பழம் /  நல்லதொரு நூலுடன், –கோவில் பட்டிக் கடலைஉருண்டை- போட்டுக் கொடுத்தால், ‘இவ்வீட்டில் இத்துடன் இனிப்பான மணநிகழ்வு நிறைவடைந்தது’ என்று பொருள்!  

இதே நுட்பம், திருமண அழைப்பிதழில் கூட  உண்டு! மணமகன்/ மணமகள் பெயருக்கு முன்னால் ‘திருவளர்’செல்வன்/செல்வி என்று போட்டால், “இந்த வீட்டில் இவரின் இளையோர் -திருமணத்துக்குக் காத்திருப்போர்- உண்டு” என்று பொருள்!  திரு வளர வாய்ப்புள்ளது!

திருநிறை செல்வன்/செல்வி என்றிருந்தால் “இவரே இந்த வீட்டுக் கடைக்குட்டி“ (இனிமேல் திருமணத்திற்கான காத்திருப்புப் பட்டியல் இவர்கள் வீட்டில் இல்லை)  என்று பொருள்!  திரு நிறைவடைந்தது!  

திருவளர்ச்செல்வன், திருநிறைச்செல்வி என்று, பிழைபடக் குறிப்பிடுவோர், இந்த நுட்பம் அறிந்தால் தமிழருடன் தமிழும் வாழும்!

-------------------------------------

 வெளியீட்டுக்கு நன்றி:

“இந்து தமிழ்” நாளிதழ் -12-12-2023 செவ்வாய்

பதிவிட்டது, 12-12-2023 இரவு-9.50

--------------------------------- 

இன்று கடந்து நாளைய தினம்

இந்த வலைப்பக்கத்தின்

பார்வையாளர் எண்ணிக்கை

ஒரு மில்லியன் (10,00,000) கடந்திருக்கும்

என்று நம்புகிறேன்.

12ஆண்டுகளின் சீரான வளர்ச்சி!

நன்றி நன்றி நன்றி 

நன்றி நன்றி

நண்பர்களே!

----------------------------- 


தமிழ் இனிது-25


(நன்றி - இந்து தமிழ் -05-12-'23)

சம்மந்தி – சம்பந்தி

திருமண உறவால் இரண்டு குடும்பங்கள் இணைவதே சம்பந்தம். புதிய உறவின் குடும்பத் தலைவர்கள் சம்பந்தி ஆகின்றனர். சமமான பந்தம் (உறவு)- சம பந்தம் - சம்பந்தம் ஆனது. ‘மருமகனின் / மருமகளின் பெற்றோர்“ எனும்  பொருள் தரும் சொல் இது. “சமன் செய்து“(குறள்-118), “சரிநிகர் சமானம்“-பாரதி, “சமச்சீர்க் கல்வி“ போல, சம்பந்தியும் –ஏற்றத் தாழ்வில்லாத- சமத்துவம் கருதிய சொல்லே.   

இரண்டு முழங்காலையும் சமமாக மடக்கி அமர்வது சம்மணம். (ச(ம்)மணர் இவ்வாறே அமர்வர்). பந்தி எனில் விருந்து வரிசை.  ஊரார் இதனை “கொண்டான் - கொடுத்தான்” என்றே சொல்கிறார்கள்!

கம்பு எனும் சிறுதானியக்
கூழ் -கம்பங்கூழ்- கம்மங்கூழ் ஆனது போல, ப,ம இனஎழுத்துகள் மயங்கி ஒலிக்கும் மயங்கொலிச் சொல்லே சம்மந்தி என்பது.  எனவே, சம்பந்தி சொல்லே பொருளோடு வாழட்டும்!  

அறுவெறுப்பும் –கண்றாவியும் !

அருவரு என்றால் வெறுத்து ஒதுக்குதல் என்று பொருள். அராவுதல்- அருவுதல். இன்னது என்னும் தெளிவு இல்லாமல், உடலை/மனத்தை (அ)ராவுதல் அருவுதல்- அருவருப்பு. கண்ணை வருத்தும் காட்சியை  கண்ணை (அ)ராவுதல் –உரசுதல் - கண்ணராவி என்போம்! (கண்றாவி அல்ல!) அருவருப்பாக உணர்தலை அருவருப்பு என்பதே சரி. என்ன தான்  வெறுப்பாக இருந்தாலும்,  அருவெறுப்பு என்பது பிழையான சொல்லே.

உடன்பாடும்  உடம்பாடும்

கூட்டணிக் கட்சிகளிடையே “உடன்பாடு ஏற்பட்டது” என்கிறார்கள்! இணையாத ஈரெழுத்துகள் இணைய, உடம்படு மெய் வரும் என்பது இலக்கணம். (நன்னூல்-162) உடம்படுத்தல் தான் சொல்!  

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை, குடங்கருள் பாம்போடு உடன் உறைந்த அற்று” (குறள்-890) என்கிறார் வள்ளுவர், ஆனால் இப்போது கடப்பாடு,  ஒருமைப்பாடு போல, உடன்பாடும் நிலைத்து விட்டது! நாமும் உடன்பாடு எனும் சொல்லோடு, உடன்பட வேண்டியதுதான்! 

நொடி வேறு, வினாடி வேறு!   

இயல்பாகக் கண் இமைக்கும் நேரமும், கைவிரலை நொடிக்கும்         -சொடுக்கும்- நேரமுமே ஒரு மாத்திரை எனும் கால அளவு என்பார் தொல்காப்பியர்  (‘கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை“- தொல்-07).கண்ணையும், விரலையும் எடுத்துக் காட்டாகச் சொன்னது ஏன் எனில், “காது கேளாதவர் புரிந்து கொள்ளக் கண் இமைப்பதையும், பார்வை அற்றவர் அறிந்து கொள்ளக் கை நொடித்தலையும் சொன்னார்” என்று திருச்சியைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர், தமிழறிஞர் ஜோசப் விஜூ நயம்படச் சொல்வது சிறப்பு. ஆனால், தமிழ்க் கணக்கின்  அளவான         –அழகான?- நொடி என்பது இன்றைய உலகக் கணக்களவில் இல்லை!

நாழிகை பழந்தமிழ்க் கணக்கு. (அதனால்தான் “நாழியாச்சு” என்று பறக்கிறார்கள்!) தமிழ் எண்கள் மறைந்து, ரோம எண்களே வழக்கில் இருப்பதால் வணிகத்தில் இன்றியமையாத எண்களில் நொடிக் கணக்கு இப்போது வழக்கில் இல்லை!

60வினாடி ஒரு நிமிடம். ஒரு வினாடிக்கு 24நொடி! நொடியும்,  வினாடியும் வேறு வேறு!  வினாடி/விநாடி என்பன வடமொழி! நிமிட(minute) கணக்கை மணித்துளி என்கிறோம், நொடியை வினாடி என்கிறோம், அப்படித்தான் அகராதிகளும் சொல்கின்றன!  வாழ்க்கைக் கணக்கில், தமிழ்க் கணக்கு மாறியதை யார் அறிவார்?  

-----------------------------------------------------------------------