30-03-2024 சனி மாலை, அமெரிக்காவுடன் இணைவோமா?

      

       

வட அமெரிக்காவில் கடந்த 36ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும்   

                                “வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை”                                    

(Federation of Tamil sangams of North America – FeTNA) 

தனது 37ஆவது ஆண்டுப் பேரவை நிகழ்ச்சிகளுக்குத் 

தயாராகி வருகிறது.

அதையொட்டி, முன்னோட்ட விழாக்கள் நடக்கின்றன

               வரும் 30-04-2024 சனிக்கிழமை மாலை    

இலக்கியத் திருவிழா  நடைபெற உள்ளது.

(-----------அமெரிக்காவிற்கு காலை 10மணி,    

இந்தியாவிற்கு அதே நாள் மாலை 7.30மணி!---------)

உரைவீச்சு, கவியரங்கம், 

சுழலும் சொல்லரங்கம், தமிழிசை நிகழ்ச்சி 

என சுமார் 3 மணி நேரத்திற்குத் 

                   திட்டமிடப்பட்டுள்ள இந்த நிகழ்வில்,                         

  எனது தலைமையில் -சுமார் 50நிமிட அளவிற்கு-     

சுழலும் சொல்லரங்கம் நடக்க உள்ளது

அதற்கு முன் கவிஞர் ஜெயபாஸ்கரன் உரை, 

பிறகு கவியரங்கம், தமிழிசைப் பாடல்கள் என 

வரிசை கட்டி நிற்கும் இலக்கிய நிகழ்ச்சிகள் 

தலைப்பு, இணைய இணைப்பு விவரங்கள் கீழே உள்ளன

இலக்கிய ஆர்வலர்கள் வருக! வருக!!

இணையத் தமிழால் இணைவோம்

FeTNAவின் முகநூல் இணைப்பு-

https://www.facebook.com/share/p/u5hgRkw5eb1Goo3S/?mibextid=xfxF2i

அன்றைய முழு நிகழ்ச்சி நிரல் விவரம் -

-- இதோ கவியரங்கப் பதாகை --

Ayya சூம் நேரலை - Zoom Live : https://tinyurl.com/FETNAIK2022




நிகழ்ச்சி நிரல் நேரத்தைக் கவனித்து

குறித்த நேரத்திற்கு குவிய வழி (Zoom) வந்து சிறப்பிக்க

அன்புடன் அழைக்கிறேன்

------------------------------------------




தமிழ் இனிது-40---- நன்றி - இந்து தமிழ்26-03-2024

 


தடியடியும் அடிதடியும்

            “மக்களிடையே அடிதடி! காவல்துறை தடியடி” என்னும் செய்தியை ஊடகங்களில் பார்க்கிறோம். ஒன்று போலவே இருந்தாலும் இரண்டு சொற்களுக்கும் வேறுபாடு உண்டு! தடியடி (Lathi Charge) கூட்டத்தைக் கலைக்க, அரசால் திட்டமிட்டு நடத்தப் படுவது. இதற்குக் காவல்துறை உயர் அலுவலரின் முன்அனுமதி தேவைப்படும். அடிதடி என்பது வேண்டாதவரை திட்டமிடாமலே தாக்குவது அல்லது அந்தக் குழுத் தலைவரால் திட்டமிட்டு நடத்தப் படுவது. அடிதடி, கலவரம்  நடக்கும் இடத்தின் நிலவரம் அறிந்து காவல் துறை நடத்துவது தடியடி! 

செல்வர் சரி, அது என்ன செல்வந்தர்?

செல்வம் உடையவர் செல்வர். எனவேதான் தமிழர் பெயர்களில் செல்வன், செல்வி, தமிழ்ச்செல்வன், கலைச்செல்வியர் பலர் உள்ளனர். செல்வர் என்பதை, வடமொழியில் ‘தன்வந்தர்’ என்பர். அது, தனவந்தர்- செல்வந்தர்- எனும் பொருளற்ற சொல்லாகி, நூறாண்டுக்கு முந்திய “மணிப் பிரவாள நடை” காலத்தில், கலப்புத் தமிழாக நுழைந்து விட்டது.

 செல்வம் என்பதற்குத் தமிழில் வேறு பொருளும் உள்ளது. “பொருட் செல்வம், பண்புகள் இல்லாதவரிடமும் சேரும். அருள் என்னும் செல்வமே சிறந்த செல்வம்”என்பது குறள்(241). அருட்செல்வர், கருணைச் செல்வி, குழந்தைச் செல்வம், போதும் செல்வம் (கடைசிக் குழந்தையாக இருக்கட்டும் என்று வைக்க, அதன் பிறகும் குழந்தை பிறப்பதுண்டு!) இப்படியான பொருள் விளக்கம் தனவந்தர், தன்வந்தர், செல்வந்தர் எனும் சொற்களில் இல்லையே! எனவே, செல்வர் என்பதே நுட்பமான பொருள் கொண்ட இனிய தமிழ்ச் சொல். செல்வந்தர் எனும் கலப்படம் வேண்டாம். 

குறிப்பாக – சிறப்பாக

            எதிர்ச் சொற்களைக் கையாளும் போது, நம்மை அறியாமலே சில தவறுகளைச் செய்கிறோம். காலை-மாலை, ஒளி-இருள் என்பது போல, ஆண்-பெண் சொற்களை எதிர்-எதிர்ச் சொல்லாகக் கருதுவது, ‘ஆணும் பெண்ணும் சமம்’ என்னும் இக்காலக் கருத்திற்கு எதிரான தவறல்லவா?  

            இதுபோலவே, ‘பொதுவாக’ என்னும் சொல்லின் எதிர்ச்சொல்லாக ‘குறிப்பாக’ என்னும் சொல்லைப் பயன் படுத்துகின்றனர். “அவர் பொதுவாக எல்லாரிடமும் அன்பு காட்டுவார், குறிப்பாக என்னிடம் மிகுந்த அன்பு காட்டினார்” என இரங்கல் தெரிவிக்கிறார்கள். இது தவறு. “வெளிப்படையாகச் சொல்ல  முடியாத பலவற்றை, குறிப்பாக எனக்கு உணர்த்துவார்“ என்பதுதான் சரி.  ‘குறிப்பு’ என்பதன் எதிர்ச்சொல் ‘வெளிப்படை’ என்பதே. அதேபோல, ‘பொதுவாக’ என்பதன் எதிர்ச்சொல் ‘சிறப்பாக’ என்பதே. இதை உணர்ந்து, பொதுவாக அல்லாமல் சிறப்பாகப் பயன்படுத்துவது, வெளிப்படையாக எல்லார்க்கும் குறிப்பாகத் தமிழுக்கு நல்லது!

மன்னன் - நிலைபெற்றவனா?

            மன்னன்’ எனில் ‘நிலையானவன்’ என்பது பொருள். இதனால்தான் “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்றது புறநானூறு(186). எனினும், ‘முடிசார்ந்த மன்னரும் முடிவில் ஒரு பிடிசாம்பல் ஆவர்’ என்பதை உணர்ந்து, ‘மக்களே உயிர், மன்னன் உடல்தான்’ என்று மன்னராட்சிக் காலத்திலேயே மக்களாட்சிக் கோலத்திற்கு புள்ளியிட்டார் கம்பர்! உலகில் யாரும் ‘நிரந்தரமானவர்‘ இல்லை என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறது. ஆக, தமிழ் மன்னன் உடலால் அல்ல, புகழால் நிலைத்தவன் என்றே புரிந்துகொள்ள வேண்டும்! “மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே”(புறநா-165)

--------------------------------------------------------------------

தமிழ்இனிது-39 - (நன்றி -இந்துதமிழ்-19-03-2024 )

 


அயற்சி – அயர்ச்சி

அயர் - அயர்வு – அயர்ச்சி,  தளர்ச்சி எனப் பொருள் தரும் சொல்.  ‘அயர்ந்த’ என்பதே, ‘அசந்த’ எனப் புழங்குகிறது. அயர்தி –அசதி. இதில், அயர்ச்சி என்பதே சரியான சொல். அயற்சி என்பது தவறானது.

அது என்ன கால்நடை?

            காலால் நடக்கும் ஆடு மாடுகளைத்தான் கால்நடை என்கிறோம். ‘மனிதர்களும் காலால் தானே நடக்கிறார்கள்?’ எனில், “மனிதர்கள் மனத்தாலும், காலத்தை மீறியும் நடப்பர்!“ என்கிறார் கவிஞர் நந்தலாலா!  

“காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்“ என்ற பாரதி காலத்தில் தொலைப்பேசி இல்லை! “அடுத்த நூற்றாண்டில் சோதனைக் குழாய்க் குழந்தை பிறக்கும்” என்று பெரியார் சொன்னபோது பலர் அதை நம்பவில்லை!  சிந்தனையாளர், மனத்தால் காலம் கடந்து, நடந்து விட்டார்கள் அல்லவா? ஆடு, மாடுகள் அப்படி அல்லவே! காலால் மட்டும் நடப்பதால் அவை கால்நடை ஆயின!

உடம்பு- உடலம் – சடலம்   

‘உடம்பு’ என்பதே, பழந்தமிழ்ச் சொல் (குறள்-1122, நன்னூல்-59) “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” – திருமந்திரம். உடல், உடலம் என்பன, இருந்தாலும் இறந்தாலும் சொல்லப்படும் சொற்களே. ஆனால், ‘சடலம்’ அப்படியல்ல. அது உயிரற்ற உடல்,  பிணம் என்பதையே குறிக்கும். தமிழில் உயிர், மெய் எனும் சொற்கள் எழுத்து இலக்கணத்தை மீறி, ஆய்வுக்குரிய ஒரு தத்துவ மரபில் அமைந்துள்ளன.

மெய் என்பது உருவம், உயிர் என்பது உள்ளடக்கம். உயிரும் மெய்யும் சேர்வதே உயிர்மெய் என்பது தமிழர்களின் மொழியும் வாழ்வும் இணைந்த கருத்து! ‘க்’ என்னும் மெய்யும் ‘அ’ என்னும் உயிரும் சேர, ‘க’ எனும் உயிர்மெய் எழுத்தின் உருவம் மெய்யிலிருந்தும், ஓசை உயிரிலிருந்தும் வருகிறது அல்லவா!

அழுகணிச் சித்தர், “ஊத்தைச் சடலம்” என்று பாடியிருந்தாலும், உடலுக்கும் உரிய மதிப்பைத் தந்திருப்பதே தமிழ் மரபு!  

பெரிய பதவியிலோ, பெரும் பணக்காரனாகவோ இருந்தாலும், இறந்தபின் ‘பிணம்’ என்ற அஃறிணைப் பெயர்தானே சூட்டப் படுகிறது! உயிரற்ற உடம்பு மட்டுமல்ல, அறிவற்ற குழந்தையும் அஃறிணைதான் என்கிறது தொல்காப்பியம்(540). உயிருடன், அறிவும் இருந்தால்தான் உயர்திணை! இது வெறும் இலக்கணமா? வாழ்வியல் நுட்பமல்லவா?!    

“பேரினை நீக்கிப் ‘பிண’மென்று பேரிட்டு“ (திருமந்திரம்-145) நிலையாமை சொல்லி, அறவழிப் படுத்தினர் முன்னோர். மெய் என்றால், ‘உடம்பு’ என்றும், ‘உண்மை’ என்றும் இரு பொருள் உண்டு! ‘உடம்பு உண்மையானது’ என்பதை அறியாத பலர், இந்த ‘உண்மை’ /’மெய்’யை  ‘நிஜம்’ /’சத்யம்’ என்கிறார்கள்,  தமிழ் நுட்பம் அறியாதவரே!

“காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா!“ என்ற கருத்திற்கு எதிராக, “காயமே இது மெய்யடா இதில் கண்ணும் கருத்தும் வையடா!” என்ற பட்டுக்கோட்டையார் கருத்தே தமிழ் மரபுக் கருத்து. இதையே “உயிருறும் உடலையும், உடலுறும் உயிரையும் அயர்வறக் காத்தருள்” என்னும் வள்ளலார் அகவலிலும் (368)  காணலாம்.  

            எனவேதான் “ஆளும் வளரணும் அறிவும் வளரணும்“ என்று, ஆள்(மெய்) வளர சத்துணவும், அறிவு(உயிர்) வளரக் கல்வியும் கொடுத்து, மனிதரை உயர் திணையாகவே  வளர்க்கிறது தமிழ்ச் சமூகநீதி மரபு!  

---------------------------------------------------------

சிலம்புப் பட்டிமன்றம் - காண கேட்க வருக

 என்னவோ தெரியவில்லை!

இந்த -2023-2024- கல்வியாண்டில்

கல்லூரிகள் பலவற்றில் பேசும் வாய்ப்புகள் வந்தன

எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி-

முன்னர்

அரசு கல்வியியல் கல்லூரி, புதுக்கோட்டை,

கவிதைப் பயிலரங்கமாக

கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி, புதுக்கோட்டை,

பின்னர்

மன்னர் அரசு கலை அறிவியல் கல்லூரி புதுக்கோட்டை.

என, புதுக்கோட்டையின் முக்கியமான

முப்பெரும் கல்லூரிகளிலும் ஒரே மாதத்துக்குள் 

எனது உரையுடன் கூடிய நல்ல விழாக்கள்!

இதோ இப்போது 

புதிதாகத் தொடங்கிய

ஆலங்குடி அரசு கலை-அறிவியல் கல்லூரி!

அழைத்த எனது மதிப்பிற்குரிய 

முதல்வர்கள், துறைத்தலைவர்களுக்கு

எனது நெஞ்சு நெகிழும் நன்றி.

பத்தாண்டுக்கு முன் வரை

புதுக்கோட்டையில் மட்டுமே 

அரசுக் கல்லூரிகள் எனும் நிலையில்

அடுத்தடுத்து கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி

அறந்தாங்கி, திருமயம் என 

அரசுக் கல்லூரிகளை வழங்கி

கிராமத்துப் பிள்ளைகள் உயர்கல்வி கற்க 

உதவிவரும் தமிழ்நாடு அரசுக்கு 

எனது நெஞ்சார்ந்த நன்றி.

இளைய தமிழர் முன்னேறட்டும்!

இவை தவிர்த்து,

இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தினர்

நல்லதொரு ஆய்வுத் தலைப்பில்

இலக்கியப் பட்டிமன்றம் நடத்த 

அழைத்துள்ளனர்

நெடுநாள் கழித்து 

நல்லதொரு தலைப்பில்

இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம்!

வருக நண்பர்களே!

16-03-2024 சனிக்கிழமை மாலை
----------------------------------------------------- 


இது 19-03-2024 செவ்வாய் காலை  

இரண்டு நிகழ்வுக்கும் 

வாய்ப்புள்ள நண்பர்கள் 

வருக, வணக்கம்

தமிழ்இனிது-38 - நன்றி - இந்துதமிழ் 12-03-2024 .

 


வாழைத்தார் – வாழைத்தாறு

            அடையாறு, அடையார் ஆனது! வாழைத்தாறு வாழைத்தார் ஆகிவிட்டது! ‘தாறு’, யானையை ஏவும் கைக்கருவி(படம்), குறிஞ்சிப் பாட்டு-150. இதை இப்போது ‘அங்குசம்’ என்பர். யானையை வேலை வாங்குவது குறைந்து, மாட்டைப் பயன்படுத்தும் இக்காலத்தில், உலோகத் தாறு, மரத்‘தாறு’ ஆகி, ‘தார்க்கோல்’ – ‘தார்க்குச்சி’  ஆகிவிட்டது! ‘தாறு’, ஒழுங்கான  வடிவம் கொண்டது. முறையற்ற பேச்சைத் “தாறு மாறாக” பேசுவதாகச் சொல்வதில் இச்சொல் புரியும். வாழைத் தாறும் ஓர் ஒழுங்கில், அழகிய வடிவில் ஆனது தானே?

சொற்களைப் பிரிப்பது  

தாறுமாறாகச் சொற்களைப் பிரிப்பதும், நிறுத்தக் குறிகளைத் தேவையின்றி இடுவதும், சொல்ல வருவதைப் புரியவிடாமல் செய்துவிடும். இவையற்ற ஓலைச் சுவடியிலிருந்து அச்சில் பதிப்பித்த தமிழறிஞர்கள், எவ்வளவு சிக்கல்களை எதிர்கொண்டு நமக்குத் தந்திருக்கிறார்கள்! புரிந்து – புரியும்படி – எழுத வேண்டும்  அல்லவா? 

‘’கட்டுண்டோம்‌, பொறுத்திருப்போம்என்பதைக்கட்டு உண்டோம்‌, பொறுத்து இருப்போம்எனப்பிரிப்பது பிழையாகி விடும்‌. 'பன்மணிமாலை' என்பது ஒரு நூல்வகை. அதைப்‌ 'பல்மணி மாலை' என்று சொல்லிப் பாருங்கள்‌. சிரிப்புக்கு இடமாகும்‌” என்கிறார் தமிழண்ணல். கணினியில் வடிவமைப்போர் (page maker) அச்சில் சமன் செய்து காட்டுவதில் (Left, Centre, Right and Justify)  இந்தச் சிக்கல் வரும்.

‘காலச்சுவடு’ வெளியிட்டுள்ள “பாரதி கவிதைகள்“ நூலை, பதம்(சொல்) பிரித்து, தந்திருக்கிறார் பழ.அதியமான். “பதம் பிரிக்கும் போது, ஓசை இன்பம் தடைபடும். எனினும் பொருள் உணர அப்படிப் பிரிப்பது தவறாகாது” என்னும் இவரது முன்னுரையை இன்றைய எழுத்தாளர்கள் அவசியம் படிக்க வேண்டும். தமிழ் வளர்ச்சித் துறையும், பாடநூல் கழகமும் இணைந்து வெளியிட்டுள்ள “செவ்வியல் நூல்கள் -உரை வரிசை“ பயன் தரும் தொகுப்பு. இலக்கிய வாசிப்பு, சொற்களைப் பிரித்துப் பயன்படுத்தும் முறை என இரண்டு பயன் கிடைக்கும்.

ஔ – துணையெழுத்து சரிதானா?

ஓவிய எழுத்து, ஒலியெழுத்து, வட்டெழுத்து, பிராமி (எ) தமிழி எழுத்து என தமிழ் எழுத்துகளின் வரிவடிவம் மாறி மாறி வந்துள்ளது. இதை வேடிக்கையாக, “இன்றைய திருக்குறளை, வள்ளுவருக்கே படிக்கத் தெரியாது!” என்பார்கள். 

17ஆம் நூற்றாண்டு வரை, எ ஒ தலையில் புள்ளி வைத்து குறில் என்றும், புள்ளியில்லாத எ ஒ எழுத்துகளே நெடில் என்றும் இருந்தன.  இவற்றை மாற்றி, இப்போதைய - எ(குறில்), ஏ(நெடில்), ஒ(குறில்), ஓ(நெடில்) எழுத்து வடிவ மாற்றத்தை நமக்குத் தந்தவர் இத்தாலியப் பாதிரியார், வீரமாமுனிவர் எனும் தமிழறிஞர்!  

            எனினும் தமிழின் துணையெழுத்துகளில் இன்னும் தெளிவு தேவை. ளகர வர்க்கத்திலுள்ள ள எழுத்து  ஊ, ஓள எனும் கூட்டெழுத்துகளிலும் உள்ளது. ஆனால், கூட்டெழுத்தில் வரும் ள எழுத்து தன் ஒலியை இழப்பதன் அடையாளமாக, சிறிதாகப் போட வேண்டும். கணினி, செல்பேசி  எழுத்துருக்களில்,  ஊ வசதி,  ஔ எழுத்துக்கு இல்லை! எனவே, ஆரம்பப் பள்ளி மாணவர், ஔவையாரை, ஒ-ள-வை-யா-ர் என்றே படிக்கிறார்கள்! 

       கையால் எழுதும் போது ஊ, ஔ எழுத்தில் வரும் ள எழுத்தைச் சிறிதாக எழுதிப் பழ(க்)க, வேண்டும். வீரமாமுனிவரின் ‘ர’, ர் இன்னும் -ஒருங்குறி தவிர்த்த- பல எழுத்துருக்களில் துணைக் காலாகவே உள்ளதும் கவலைக்குரியது.

-----------------------------------------------------------------------------------   

தமிழ்இனிது-37 - நன்றி - இந்து தமிழ் -05-3-2024.

 'முதற்கண்' பாவம் இல்லையா?!

தடையமா? – தடயமா?

            வரலாறு கொந்தளித்து எரிந்து அணைகிறது. தடையங்களாக இடிபாடுகளை.. விட்டுச் செல்கிறது” - குறுங்கதை ஒன்றில் வரும் தொடர்.  

தடயம்  -துப்பு / அறிகுறி எனப் பொருள்தரும் சொல். தடையம்  'தடை' என்பதிலிருந்து தோன்றும் சொல் என்கிறது ‘விக்ஷனரி’. இப்போது, அந்தத் தொடரை மீண்டும் பாருங்கள்.  ஐகாரக் குறுக்கம், புடைவை-புடவை, உடைமை-உடமை என வழக்கில் வரும். இல்லாத ஐ-யை ஏற்றி “தடையம்” என்பது தவறான சொல், தடயம் என்பதே சரி.    

ஒருவற்கு, ஒருவர்க்கு

          அனைவர்க்குமான கருத்துகளை, கற்பனையான ஒருவரை முன்னிறுத்திச் சொல்வது, உலக அளவிலான ஓர் இலக்கிய உத்தி! “உன்னிடம் சொல்கிறேன், நீ எல்லாருக்கும் சொல்லிவிடு” என்பது போல! நம் கிராமத்து மக்களிடம் இந்த உத்தி இப்போதும் புழங்குகிறது! அந்த இடத்தில் இல்லாத ஒருவரைக் கற்பனையாக முன்னிறுத்தி, “நீ வண்டியில காட்டுத் தனமாப் பறப்ப, எங்கிட்டாவது மோதி, அநியாயமாப் போய்ச் சேந்துருவ? உன் அலப்பறைக்கு உன் குடும்பம் பலியாகணுமா’டா?” என்று மகனைப் பற்றி அப்பாவிடம் பேசும் பெரியவர் உண்டு!

யாப்பருங்கலக் காரிகை” எனும்  இலக்கண நூலே இப்படி உள்ளது!  “ஒருவற்கு” என்பது, “ஒருவனுக்கு” என்னும் பொருளில் இலக்கியங்களில் வரும். குறளில்  பலப்பல இடங்களில் வந்துள்ளது-40,95,398,400,454,600. மூதுரை-01, நாலடி-73,142. இவற்றில் ‘ஒருவற்கு’, என ஒருமையில் சொன்னாலும் பால்கடந்து அனைவர்க்கும் சொல்லும் அந்த உத்திதான்.

அவர்கள், அவைகள் - 

நமது தொடரில் “திரு எனும் முன்னொட்டு, பெயருக்கு முன்னால் தான் வரும், பதவிக்குப் முன்னால் வராது“ என்றதை  ஏற்றுக்கொண்ட பலரும் கேட்ட கேள்வி, ”பெயருக்குப் பின்னால் ‘அவர்கள்’ போடுவது சரியா“, ”அது எப்படி ஒருமைப் பெயருக்குப் பன்மையைச் சேர்ப்பது?”.  ‘அவர்கள்’ என்னும் சொல், சொல்லளவில் பன்மைதான் எனினும் தொடரில் வரும்போது ஒருவரையே குறிப்பதால் ஏற்கலாம் என்பதே பதில். “அமைச்சர் அவர்கள்  வருகிறார்கள்“ என்பதை “அமைச்சர் வருகிறார்“ என்பது மரியாதைக் குறைவானது என்பது புரியாதா என்ன? புரியாதவர்க்கு, ‘நியூட்டனின் மூன்றாம் விதி’ புரிய வைக்கும்!

இதனை,“ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கின் ஆகிய உயர்சொற் கிளவி”என, தொல்காப்பியம் ஏற்கிறது. (சொல்-கிளவியாக்கம்-510) எனினும் இதை, “பால்வழு அமைதி” என்னும் தலைப்பிலேயே சொல்லியிருப்பது, இது, பொதுப்படை அல்ல என்பதையும் புரிய வைக்கும் நுட்பம்!

அதற்காக, ‘அவை’ என்னும் சொல்லோடு, மேலும் ஒரு கள் விகுதி போட்டு ‘அவைகள்’ என்பது தவறு!  ஆக, ‘அவர்கள்’ சரி!  ‘அவைகள்’ தவறு ! கள் போடும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டுமல்லவா?!  

முதற்கண் வணக்கம்?

            பேச்சாளர் சிலர், ”…அவர்களுக்கு எனது முதற்கண் வணக்கம்“   என்று தொடங்குவதைப் பார்க்கலாம். நல்ல வேளையாக, “இரண்டாம் கண் வணக்கம் யாருக்கு?” என்று யாரும் அவரிடம் கேட்பதில்லை!  At first எனும் பொருளில் முதற் கண்ணைப் பயன்படுத்தும் போது,  “முதற்கண் எனது வணக்கம்“ என்று சொல்வதே சரியானது. ‘எனது முதல் வணக்கம்’ என்பது இன்னும் தெளிவானது.  இதில்,  தேவையில்லாமல் கண்ணை ஏன் இழுக்க வேண்டும்! பெண்பாவம் போல கண்பாவம் இல்லையா?!

------------------------------------------------

புதுக்கோட்டை கவிதைத் திருவிழாவுக்கு 25வயது!

                             2000ஆம் ஆண்டு, 202கவிஞர்களைக் கொண்ட

மகா-கவியரங்கம்

புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடந்தது.

20 அமர்வுகளில் 202 கவிஞர்கள்!

கந்தர்வன், பாலா இருவரும் 

சிறப்புக் கவிதை வழங்க

அப்துல் ரகுமான் வாழ்த்துச் செய்தி அனுப்ப

காலை10மணி தொடங்கி,

இரவு11மணி முடிய

13மணிநேரத் தொடர் கவியரங்கம்!

முதல் அமர்வுக்கு

கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்க

20ஆவது அமர்வுக்கு

நா(ன்).முத்துநிலவன் தலைமையேற்க

ஒவ்வோர் அமர்விலும் 10கவிஞர்கள் பங்கேற்ற

வரலாற்றுச் சிறப்பு நிகழ்வு அது!

கவிதைத் திருவிழா!

அந்தக் கவிதைகள் பின்னர்

'கவிதைப் பயணம்' எனும் பெயரில்

தமுஎகச புதுக்கோட்டை மாவட்ட 

வெளியீடாக நூலாகவும் வெளிவந்தது!

புதுக்கோட்டை கவிதைக்கோட்டையானது!

அது நடந்து 25ஆம் ஆண்டு இது!

---------------------------- 

இதோ,  2024 பிறந்த இரு மாதத்தில்

அதாவது 

புதுக்கோட்டை கவிதைத் திருவிழாவின்

வெள்ளிவிழா ஆண்டில்...

கவிஞர் அகன் (எ) அமிர்தகணேசன்,

கவிஞர் மைதிலி கஸ்தூரிரெங்கன்,

இரண்டு நாள்முன் கவிஞர் தங்கம் மூர்த்தி

இப்போது கவிஞர் ரேவதி ராம்!

எல்லாம் கவிதை கவிதை மற்றும் 

கவிதை சார்ந்த விழாக்கள்!

புதுக்கோட்டை மீண்டும்

கவிதைக் கோட்டையாகத் தொடர்வதைச் 

சொல்லி நடக்கும் விழாக்கள்!

-----------------------------

வரும் 03-03-2024 ஞாயிறு காலை10மணிக்கு

மகளிர் கல்லூரி எதிரில் உள்ள தாஜ்அரங்கில்!

புதுக்கோட்டை நண்பர்கள் வருக!

சுற்றுவட்டாரத்தில் உள்ள சுவைஞர்கள் வருக!

வாய்ப்புள்ள கவிஞர்கள் எங்கிருந்தாலும் வருக! வருக!


அன்புடன் அழைப்பது

வீதி - கலைஇலக்கியக் களம்,

புதுக்கோட்டை

கவிஞர் மு.கீதா, ஒருங்கிணைப்பாளர்.

------------------------------- 

 ரூ.600 விலையுள்ள

மூன்று கவிதைத் தொகுப்புகளும்

வெளியீட்டு விழாவுக்காக

நேற்றுமுதல் ரூ.500விலையில் கிடைக்கிறது.

இப்போதே தொகை செலுத்தி 

விழா அன்று 3தொகுப்புகளையும்

கையிலேயே பெற்றுக் கொள்ளலாம்!

ஜி.பே., ஃபோன் பே - எண் :

+91 95974 02010 

(ராம்தாஸ் என்று இருக்கும்)

பி.கு.-

கவிதைப் புத்தகத்தை

விலைகொடுத்து வாங்குவதை விடவும்

அந்தக் கவிஞரைப் பாராட்டக் கூடிய

சிறந்த விமர்சனம் வேறென்ன இருக்கமுடியும்?

நன்றி, வணக்கம்,

மற்றவை நேரில்.

-----------------------------------------