சிலம்புப் பட்டிமன்றம் - காண கேட்க வருக

 என்னவோ தெரியவில்லை!

இந்த -2023-2024- கல்வியாண்டில்

கல்லூரிகள் பலவற்றில் பேசும் வாய்ப்புகள் வந்தன

எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி-

முன்னர்

அரசு கல்வியியல் கல்லூரி, புதுக்கோட்டை,

கவிதைப் பயிலரங்கமாக

கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி, புதுக்கோட்டை,

பின்னர்

மன்னர் அரசு கலை அறிவியல் கல்லூரி புதுக்கோட்டை.

என, புதுக்கோட்டையின் முக்கியமான

முப்பெரும் கல்லூரிகளிலும் ஒரே மாதத்துக்குள் 

எனது உரையுடன் கூடிய நல்ல விழாக்கள்!

இதோ இப்போது 

புதிதாகத் தொடங்கிய

ஆலங்குடி அரசு கலை-அறிவியல் கல்லூரி!

அழைத்த எனது மதிப்பிற்குரிய 

முதல்வர்கள், துறைத்தலைவர்களுக்கு

எனது நெஞ்சு நெகிழும் நன்றி.

பத்தாண்டுக்கு முன் வரை

புதுக்கோட்டையில் மட்டுமே 

அரசுக் கல்லூரிகள் எனும் நிலையில்

அடுத்தடுத்து கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி

அறந்தாங்கி, திருமயம் என 

அரசுக் கல்லூரிகளை வழங்கி

கிராமத்துப் பிள்ளைகள் உயர்கல்வி கற்க 

உதவிவரும் தமிழ்நாடு அரசுக்கு 

எனது நெஞ்சார்ந்த நன்றி.

இளைய தமிழர் முன்னேறட்டும்!

இவை தவிர்த்து,

இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தினர்

நல்லதொரு ஆய்வுத் தலைப்பில்

இலக்கியப் பட்டிமன்றம் நடத்த 

அழைத்துள்ளனர்

நெடுநாள் கழித்து 

நல்லதொரு தலைப்பில்

இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம்!

வருக நண்பர்களே!

16-03-2024 சனிக்கிழமை மாலை
----------------------------------------------------- 


இது 19-03-2024 செவ்வாய் காலை  

இரண்டு நிகழ்வுக்கும் 

வாய்ப்புள்ள நண்பர்கள் 

வருக, வணக்கம்

தமிழ்இனிது-38 - நன்றி - இந்துதமிழ் 12-03-2024 .

 


வாழைத்தார் – வாழைத்தாறு

            அடையாறு, அடையார் ஆனது! வாழைத்தாறு வாழைத்தார் ஆகிவிட்டது! ‘தாறு’, யானையை ஏவும் கைக்கருவி(படம்), குறிஞ்சிப் பாட்டு-150. இதை இப்போது ‘அங்குசம்’ என்பர். யானையை வேலை வாங்குவது குறைந்து, மாட்டைப் பயன்படுத்தும் இக்காலத்தில், உலோகத் தாறு, மரத்‘தாறு’ ஆகி, ‘தார்க்கோல்’ – ‘தார்க்குச்சி’  ஆகிவிட்டது! ‘தாறு’, ஒழுங்கான  வடிவம் கொண்டது. முறையற்ற பேச்சைத் “தாறு மாறாக” பேசுவதாகச் சொல்வதில் இச்சொல் புரியும். வாழைத் தாறும் ஓர் ஒழுங்கில், அழகிய வடிவில் ஆனது தானே?

சொற்களைப் பிரிப்பது  

தாறுமாறாகச் சொற்களைப் பிரிப்பதும், நிறுத்தக் குறிகளைத் தேவையின்றி இடுவதும், சொல்ல வருவதைப் புரியவிடாமல் செய்துவிடும். இவையற்ற ஓலைச் சுவடியிலிருந்து அச்சில் பதிப்பித்த தமிழறிஞர்கள், எவ்வளவு சிக்கல்களை எதிர்கொண்டு நமக்குத் தந்திருக்கிறார்கள்! புரிந்து – புரியும்படி – எழுத வேண்டும்  அல்லவா? 

‘’கட்டுண்டோம்‌, பொறுத்திருப்போம்என்பதைக்கட்டு உண்டோம்‌, பொறுத்து இருப்போம்எனப்பிரிப்பது பிழையாகி விடும்‌. 'பன்மணிமாலை' என்பது ஒரு நூல்வகை. அதைப்‌ 'பல்மணி மாலை' என்று சொல்லிப் பாருங்கள்‌. சிரிப்புக்கு இடமாகும்‌” என்கிறார் தமிழண்ணல். கணினியில் வடிவமைப்போர் (page maker) அச்சில் சமன் செய்து காட்டுவதில் (Left, Centre, Right and Justify)  இந்தச் சிக்கல் வரும்.

‘காலச்சுவடு’ வெளியிட்டுள்ள “பாரதி கவிதைகள்“ நூலை, பதம்(சொல்) பிரித்து, தந்திருக்கிறார் பழ.அதியமான். “பதம் பிரிக்கும் போது, ஓசை இன்பம் தடைபடும். எனினும் பொருள் உணர அப்படிப் பிரிப்பது தவறாகாது” என்னும் இவரது முன்னுரையை இன்றைய எழுத்தாளர்கள் அவசியம் படிக்க வேண்டும். தமிழ் வளர்ச்சித் துறையும், பாடநூல் கழகமும் இணைந்து வெளியிட்டுள்ள “செவ்வியல் நூல்கள் -உரை வரிசை“ பயன் தரும் தொகுப்பு. இலக்கிய வாசிப்பு, சொற்களைப் பிரித்துப் பயன்படுத்தும் முறை என இரண்டு பயன் கிடைக்கும்.

ஔ – துணையெழுத்து சரிதானா?

ஓவிய எழுத்து, ஒலியெழுத்து, வட்டெழுத்து, பிராமி (எ) தமிழி எழுத்து என தமிழ் எழுத்துகளின் வரிவடிவம் மாறி மாறி வந்துள்ளது. இதை வேடிக்கையாக, “இன்றைய திருக்குறளை, வள்ளுவருக்கே படிக்கத் தெரியாது!” என்பார்கள். 

17ஆம் நூற்றாண்டு வரை, எ ஒ தலையில் புள்ளி வைத்து குறில் என்றும், புள்ளியில்லாத எ ஒ எழுத்துகளே நெடில் என்றும் இருந்தன.  இவற்றை மாற்றி, இப்போதைய - எ(குறில்), ஏ(நெடில்), ஒ(குறில்), ஓ(நெடில்) எழுத்து வடிவ மாற்றத்தை நமக்குத் தந்தவர் இத்தாலியப் பாதிரியார், வீரமாமுனிவர் எனும் தமிழறிஞர்!  

            எனினும் தமிழின் துணையெழுத்துகளில் இன்னும் தெளிவு தேவை. ளகர வர்க்கத்திலுள்ள ள எழுத்து  ஊ, ஓள எனும் கூட்டெழுத்துகளிலும் உள்ளது. ஆனால், கூட்டெழுத்தில் வரும் ள எழுத்து தன் ஒலியை இழப்பதன் அடையாளமாக, சிறிதாகப் போட வேண்டும். கணினி, செல்பேசி  எழுத்துருக்களில்,  ஊ வசதி,  ஔ எழுத்துக்கு இல்லை! எனவே, ஆரம்பப் பள்ளி மாணவர், ஔவையாரை, ஒ-ள-வை-யா-ர் என்றே படிக்கிறார்கள்! 

       கையால் எழுதும் போது ஊ, ஔ எழுத்தில் வரும் ள எழுத்தைச் சிறிதாக எழுதிப் பழ(க்)க, வேண்டும். வீரமாமுனிவரின் ‘ர’, ர் இன்னும் -ஒருங்குறி தவிர்த்த- பல எழுத்துருக்களில் துணைக் காலாகவே உள்ளதும் கவலைக்குரியது.

-----------------------------------------------------------------------------------   

தமிழ்இனிது-37 - நன்றி - இந்து தமிழ் -05-3-2024.

 'முதற்கண்' பாவம் இல்லையா?!

தடையமா? – தடயமா?

            வரலாறு கொந்தளித்து எரிந்து அணைகிறது. தடையங்களாக இடிபாடுகளை.. விட்டுச் செல்கிறது” - குறுங்கதை ஒன்றில் வரும் தொடர்.  

தடயம்  -துப்பு / அறிகுறி எனப் பொருள்தரும் சொல். தடையம்  'தடை' என்பதிலிருந்து தோன்றும் சொல் என்கிறது ‘விக்ஷனரி’. இப்போது, அந்தத் தொடரை மீண்டும் பாருங்கள்.  ஐகாரக் குறுக்கம், புடைவை-புடவை, உடைமை-உடமை என வழக்கில் வரும். இல்லாத ஐ-யை ஏற்றி “தடையம்” என்பது தவறான சொல், தடயம் என்பதே சரி.    

ஒருவற்கு, ஒருவர்க்கு

          அனைவர்க்குமான கருத்துகளை, கற்பனையான ஒருவரை முன்னிறுத்திச் சொல்வது, உலக அளவிலான ஓர் இலக்கிய உத்தி! “உன்னிடம் சொல்கிறேன், நீ எல்லாருக்கும் சொல்லிவிடு” என்பது போல! நம் கிராமத்து மக்களிடம் இந்த உத்தி இப்போதும் புழங்குகிறது! அந்த இடத்தில் இல்லாத ஒருவரைக் கற்பனையாக முன்னிறுத்தி, “நீ வண்டியில காட்டுத் தனமாப் பறப்ப, எங்கிட்டாவது மோதி, அநியாயமாப் போய்ச் சேந்துருவ? உன் அலப்பறைக்கு உன் குடும்பம் பலியாகணுமா’டா?” என்று மகனைப் பற்றி அப்பாவிடம் பேசும் பெரியவர் உண்டு!

யாப்பருங்கலக் காரிகை” எனும்  இலக்கண நூலே இப்படி உள்ளது!  “ஒருவற்கு” என்பது, “ஒருவனுக்கு” என்னும் பொருளில் இலக்கியங்களில் வரும். குறளில்  பலப்பல இடங்களில் வந்துள்ளது-40,95,398,400,454,600. மூதுரை-01, நாலடி-73,142. இவற்றில் ‘ஒருவற்கு’, என ஒருமையில் சொன்னாலும் பால்கடந்து அனைவர்க்கும் சொல்லும் அந்த உத்திதான்.

அவர்கள், அவைகள் - 

நமது தொடரில் “திரு எனும் முன்னொட்டு, பெயருக்கு முன்னால் தான் வரும், பதவிக்குப் முன்னால் வராது“ என்றதை  ஏற்றுக்கொண்ட பலரும் கேட்ட கேள்வி, ”பெயருக்குப் பின்னால் ‘அவர்கள்’ போடுவது சரியா“, ”அது எப்படி ஒருமைப் பெயருக்குப் பன்மையைச் சேர்ப்பது?”.  ‘அவர்கள்’ என்னும் சொல், சொல்லளவில் பன்மைதான் எனினும் தொடரில் வரும்போது ஒருவரையே குறிப்பதால் ஏற்கலாம் என்பதே பதில். “அமைச்சர் அவர்கள்  வருகிறார்கள்“ என்பதை “அமைச்சர் வருகிறார்“ என்பது மரியாதைக் குறைவானது என்பது புரியாதா என்ன? புரியாதவர்க்கு, ‘நியூட்டனின் மூன்றாம் விதி’ புரிய வைக்கும்!

இதனை,“ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கின் ஆகிய உயர்சொற் கிளவி”என, தொல்காப்பியம் ஏற்கிறது. (சொல்-கிளவியாக்கம்-510) எனினும் இதை, “பால்வழு அமைதி” என்னும் தலைப்பிலேயே சொல்லியிருப்பது, இது, பொதுப்படை அல்ல என்பதையும் புரிய வைக்கும் நுட்பம்!

அதற்காக, ‘அவை’ என்னும் சொல்லோடு, மேலும் ஒரு கள் விகுதி போட்டு ‘அவைகள்’ என்பது தவறு!  ஆக, ‘அவர்கள்’ சரி!  ‘அவைகள்’ தவறு ! கள் போடும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டுமல்லவா?!  

முதற்கண் வணக்கம்?

            பேச்சாளர் சிலர், ”…அவர்களுக்கு எனது முதற்கண் வணக்கம்“   என்று தொடங்குவதைப் பார்க்கலாம். நல்ல வேளையாக, “இரண்டாம் கண் வணக்கம் யாருக்கு?” என்று யாரும் அவரிடம் கேட்பதில்லை!  At first எனும் பொருளில் முதற் கண்ணைப் பயன்படுத்தும் போது,  “முதற்கண் எனது வணக்கம்“ என்று சொல்வதே சரியானது. ‘எனது முதல் வணக்கம்’ என்பது இன்னும் தெளிவானது.  இதில்,  தேவையில்லாமல் கண்ணை ஏன் இழுக்க வேண்டும்! பெண்பாவம் போல கண்பாவம் இல்லையா?!

------------------------------------------------

புதுக்கோட்டை கவிதைத் திருவிழாவுக்கு 25வயது!

                             2000ஆம் ஆண்டு, 202கவிஞர்களைக் கொண்ட

மகா-கவியரங்கம்

புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடந்தது.

20 அமர்வுகளில் 202 கவிஞர்கள்!

கந்தர்வன், பாலா இருவரும் 

சிறப்புக் கவிதை வழங்க

அப்துல் ரகுமான் வாழ்த்துச் செய்தி அனுப்ப

காலை10மணி தொடங்கி,

இரவு11மணி முடிய

13மணிநேரத் தொடர் கவியரங்கம்!

முதல் அமர்வுக்கு

கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்க

20ஆவது அமர்வுக்கு

நா(ன்).முத்துநிலவன் தலைமையேற்க

ஒவ்வோர் அமர்விலும் 10கவிஞர்கள் பங்கேற்ற

வரலாற்றுச் சிறப்பு நிகழ்வு அது!

கவிதைத் திருவிழா!

அந்தக் கவிதைகள் பின்னர்

'கவிதைப் பயணம்' எனும் பெயரில்

தமுஎகச புதுக்கோட்டை மாவட்ட 

வெளியீடாக நூலாகவும் வெளிவந்தது!

புதுக்கோட்டை கவிதைக்கோட்டையானது!

அது நடந்து 25ஆம் ஆண்டு இது!

---------------------------- 

இதோ,  2024 பிறந்த இரு மாதத்தில்

அதாவது 

புதுக்கோட்டை கவிதைத் திருவிழாவின்

வெள்ளிவிழா ஆண்டில்...

கவிஞர் அகன் (எ) அமிர்தகணேசன்,

கவிஞர் மைதிலி கஸ்தூரிரெங்கன்,

இரண்டு நாள்முன் கவிஞர் தங்கம் மூர்த்தி

இப்போது கவிஞர் ரேவதி ராம்!

எல்லாம் கவிதை கவிதை மற்றும் 

கவிதை சார்ந்த விழாக்கள்!

புதுக்கோட்டை மீண்டும்

கவிதைக் கோட்டையாகத் தொடர்வதைச் 

சொல்லி நடக்கும் விழாக்கள்!

-----------------------------

வரும் 03-03-2024 ஞாயிறு காலை10மணிக்கு

மகளிர் கல்லூரி எதிரில் உள்ள தாஜ்அரங்கில்!

புதுக்கோட்டை நண்பர்கள் வருக!

சுற்றுவட்டாரத்தில் உள்ள சுவைஞர்கள் வருக!

வாய்ப்புள்ள கவிஞர்கள் எங்கிருந்தாலும் வருக! வருக!


அன்புடன் அழைப்பது

வீதி - கலைஇலக்கியக் களம்,

புதுக்கோட்டை

கவிஞர் மு.கீதா, ஒருங்கிணைப்பாளர்.

------------------------------- 

 ரூ.600 விலையுள்ள

மூன்று கவிதைத் தொகுப்புகளும்

வெளியீட்டு விழாவுக்காக

நேற்றுமுதல் ரூ.500விலையில் கிடைக்கிறது.

இப்போதே தொகை செலுத்தி 

விழா அன்று 3தொகுப்புகளையும்

கையிலேயே பெற்றுக் கொள்ளலாம்!

ஜி.பே., ஃபோன் பே - எண் :

+91 95974 02010 

(ராம்தாஸ் என்று இருக்கும்)

பி.கு.-

கவிதைப் புத்தகத்தை

விலைகொடுத்து வாங்குவதை விடவும்

அந்தக் கவிஞரைப் பாராட்டக் கூடிய

சிறந்த விமர்சனம் வேறென்ன இருக்கமுடியும்?

நன்றி, வணக்கம்,

மற்றவை நேரில்.

-----------------------------------------  

தமிழ்இனிது-36 – நன்றி - 27-02-2024 இந்துதமிழ்

சொல் இருப்பதும் மறைவதும் எதனால்?

வாய்ப்பா? ஆபத்தா?  

“புயல் உருவாக  வாய்ப்பு” “கனமழை நீடிக்க வாய்ப்பு“ என, அவ்வப்போது எச்சரிக்கிறது நமது வானிலை ஆய்வு மையம்! நோய் ஆபத்துக் காலங்களில் “கொரோனா பரவக்கூடிய வாய்ப்புள்ளது“, “புற்றுநோய் வர வாய்ப்புள்ளது“ என்று மருத்துவர்களே எழுதுகின்றனர்! ஆபத்து வாய்ப்புக் கேட்டு வருமா என்ன?

‘வாய்ப்பு’ என்பதை ஆங்கிலத்தில் ‘Opportunit’y, ‘Chance’ என்னும் சொற்களால் சொல்கிறார்கள்.  கெடுவாய்ப்பை – Bad luck என்றும் நல்வாய்ப்பை- Good luck என்றும் சொன்னால் இன்னும் எளிதாக விளங்கும். தமிழில் வாய்ப்பு என்பதை இன்றைய தமிழில் நல்வாய்ப்பு எனும் பொருளில் சொல்வதே சரியானது. ஆனால் கெடுவாய்ப்பாக, ஆபத்து வருவதைக் கூட ‘வாய்ப்பு’ என்ற சொல்லால் தெரிவிக்கும் நிலையே உள்ளது! “புயல் வரும் ஆபத்து உள்ளது“, “நோய்வரக் கூடிய ஆபத்து உள்ளது” என்று எச்சரிக்கையாகவே சொல்லலாம். இதை, வானிலை ஆய்வில், மருத்துவத் துறையில், ஊடகங்களில் பணியாற்றும் தமிழர்கள் புரிந்து கொண்டால் தமிழுக்கு நல்வாய்ப்பு!

திரு - எங்கே வரும்?

ஒருவர் பெயரைக் குறிப்பிடும் போது, ‘மரியாதைக்குரிய’ என்னும் பொருளில் ‘திரு’ என்னும் முன்னொட்டுச் சேர்ப்பது வழக்கம். பெயருக்கு முன் மட்டுமே திரு போட வேண்டும், பதவிக்கு முன் போடுவது சரியல்ல. ‘உயர்திரு வட்டாட்சியர்’ என்பது தவறு. ‘திரு ப.சிவகுரு, வட்டாட்சியர்’ என்று தனிப்பட்ட தருணங்களில் போடலாம். அலுவலக முறையில் தவறு.

திருமணம் ஆன பெண்ணை, ‘திருமதி’ என்கிறோம். திருமணம் ஆனாலும் ஆகாவிட்டாலும் ஆணுக்குத் ‘திரு’ அடைமொழியே நீடிக்கிறது! எப்போதும் திருதிரு என்று இருப்பது (முழிப்பது) ஆண்கள்தானா என்ன?  

இப்போது இதை மாற்றி, திருமணம் ஆன - ஆகாத, ஆண் - பெண் என யாவருக்கும் ‘திருமிகு’ எனும் ஒற்றைச் சொல்லையே பயன் படுத்தும் புதிய சிந்தனை பரவி வருவது பாராட்டுக்குரியது.   

 ‘உப்பக்கம்’ தெரியுமா?  

‘அப்பக்கம்’ புரியும், ‘அ’ சேய்மைச் சுட்டு, தூரத்தில் உள்ளதைச் சுட்டிக் காட்டுவது,   ‘இப்பக்கம்’ தெரியும் ‘இ’ அண்மைச் சுட்டு, அருகில் உள்ளதைக் குறிப்பது.  தமிழில் ‘அ’ ‘இ’ ‘உ’ என, சுட்டிக் காட்டும் எழுத்துகளைச் ‘சுட்டெழுத்துகள்’ என்பார்கள். அந்த இந்த உந்த, அப்படி இப்படி என்றும் இவை வழக்கில் உள்ளன. அ, இ தவிர எஞ்சியுள்ள ‘உ’ எதைக் குறிக்கிறது? அது புழக்கத்தில் இல்லையே ஏன்? தமிழகத்தில் புழக்கம் இழந்த சொல், ஈழத்தமிழில் உள்ளது எப்படி? தமிழகத்தில் மறைந்ததற்கும் ஈழத்தில் இருப்பதற்கும் சமூகக் காரணம் உள்ளது! 

அருகில், நம் எதிரில் இல்லாமல், முதுகு காட்டி நிற்கும் ஒருவரை எப்படிக் குறிப்பது? – ‘உ’ப்பக்கம் இருப்பவர் என்கிறது குறள்-620. ‘உந்த’ என்பதை இப்படித்தான் ஈழத்தமிழர் சொல்கின்றனர்! அண்மையில் பல பத்தாண்டுகளாகப் போரில் மாண்டவரும், பற்பலரைப் புறமுதுகு கண்டு மீண்டவருமான ஈழத் தமிழரிடம் இருப்பது இயல்புதானே!

ஒரு சொல் புழக்கத்தில் இருப்பதும், தொடர்வதும், மறைவதும், புதிதாகத் தோன்றுவதும் அந்தச் சமூகத்தின் சூழலைப் பொறுத்தது என்பதற்கு இந்த ஓர் எழுத்தே நல்ல சான்று! வேறென்ன சொல்ல?

---------------------------------------------------------------------------- 

தமிழ்இனிது-35 , நன்றி-இந்துதமிழ்-20-02-2024

 

வல்லியும், வள்ளியும்

            ‘வள்ளி, வல்லி இரண்டும் ஒன்றல்ல’ எனினும் இவற்றின் வேறுபாடு பற்றி விளக்க வேண்டினார் முனைவர் கு.தயாநிதி. கலப்பையால் மண்ணை உழுதபோது வள்ளிக் கிழங்குடன் கிடைத்த குழந்தையே கு(ன்)றவர் மகள் வள்ளி! ‘வள்ளி திருமணம்’ புகழ்மிகு மரபுக் கதை!   

            தமிழ்‘வள்ளி’, புராணங்களின் வழியாக ‘வல்லி’ ஆனார்! வல்லி, வலிமையான கொடி!  காமவல்லி (கற்பகத் தருவில் படரும் கொடி), மரகதவல்லி (தரும தேவதை/பார்வதி) போலும் பெண் தெய்வங்கள் பல! “கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்” என்பது பக்திப் பாடல். “இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீயிருந்தா, இந்துமகா சமுத்திரத்தை இங்கிருந்தே தாண்டிடுவேன்” – பட்டுக்கோட்டையாரின் காதல் பாடல்.

பாரியின் பறம்பு மலையில் தானாக விளையும் நால்வகைப் பொருளில் வள்ளிக் கிழங்கையும் சொல்கிறார் கபிலர்! “கொழும்கொடி வள்ளி கிழங்கு வீழ்க்கும்மே“-புறம்-109/6. இத்துடன், வள்ளி எனும் சொல், சங்க இலக்கியத்தில் பல இடங்களில் வருகிறது, வல்லி – கொடி-கிழங்கு எனும் பொருளில் ஓரிடத்திலும் இல்லை! ஆக, வள்ளி என்பது தமிழ் மரபில் வந்த பெயர், வல்லி என்பது பின்வந்த புனைவுப் பெயர்!   

புறமும், புரமும்

            இராமநாத புரம், விழுப்புரம் இவற்றில் இடையின ர வருகிறது. புறநானூறு, நகர்ப்புறம் இவற்றில் வல்லின ற  வரும்.  வேறுபாடு என்ன?     

கையின் உள்பக்கத்தை -உள்அகம்கை –உள்ளங்கை என்றும், வெளிப் பக்கத்தைப் -புறம்கை- புறங்கை என்றும் சொல்கிறோம். சங்க இலக்கியத்தில் ‘அகம்’ (காதல்)அல்லாத வீரம், அறிவு, பண்பு போல்வன ‘புறம்’ எனப்படும். அப்படியான 400பாக்களின் தொகுப்பே புறநானூறு. பேருந்து சிலவற்றில், “கரம் சிரம் புரம் நீட்டாதே” என எழுதியவர், டி.ராஜேந்தர் நண்பராக இருக்கலாம்!  இங்கு, ‘புறம்’ என்பதுதான் சரி.   

‘புரம்’ என்பது நகரில் மக்கள் வாழும் பகுதி. பெங்களுரில் ‘கே.ஆர்.புரம்’, கோவையில் ‘ஆர்.எஸ்.புரம்’ புதுக்கோட்டையில் காமராச புரம் போல, ‘புரம்’ என முடியும் ஊர்கள் 90உள்ளதாக, சொல்லறிஞர் கவிஞர் மகுடேசுவரன் சொல்கிறார்! சான்றோர் நினைவாக வைக்கப்பட்ட இடப் பெயர்கள் இவை! கலைஞர்  கருணாநிதி நகரை கே.கே.நகர் என்பது போலச் சுருக்கி, நம் வரலாற்றை, அடுத்த தலைமுறை அறியாதபடி நாமே மறைக்கலாமா?!   

பளபள கலகல

“பங்குச் சந்தை  ‘மளமள’வென்று சரிந்தது“ என்று செய்தியில் வருவது சரிதானா?” எனில்,  சரிதான். சரசரவென்று சரிவதுதான் சரி. எனினும், விரைவுப் பொருளில் இப்படிச் சொல்லலாம். இரட்டைக்கிளவி என்பது, இரட்டைச் சொல்லாக மட்டுமே வரும், பிரித்தால் பொருள் தராது, குறிப்பாகவே பொருள் தரும். “இரட்டைக் கிளவி இரட்டிற் பிரிந்து இசையா”-தொல்காப்பியம்-531. “மளமளன்னு வேலைய முடிச்சா, விறுவிறுன்னு கிளம்பிட்டா! ”கலகலன்னு இருப்பான்” “வழவழன்னு பேசுவான்”- என்பன நடைமுறைப் பேச்சில் இலக்கணம்!

ஆனால், “சுள்ளு சுள்ளுனு கோவம் வருது” என்றால் அது “அடுக்குத் தொடர்”! ஏனெனில் 'சுள்' என்ற ஒரு சொல்லே பொருள் தந்து விடுகிறதே!   “ஜல்ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி”, “சலசல சலசல இரட்டைக் கிளவி“ போலும் திரைப் பாடல்கள் அடுக்கி வந்தாலும் பிரித்தால் பொருள்தரா! ஓசை இனிமை கருதி, இலக்கணத்தை மீறி வந்த இரட்டைக் கிளவிகள் இவை எனலாம்!    

----------------------------------------------------------------------------- 

திரைக் கலைஞர் சூர்யாவுடன் நான் பேசிய நிகழ்வும், குறிஞ்சிப் பாட்டின் 99பூக்களும்

புதுக்கோட்டையின் பெருமை மிகுந்த சமஸ்கிருத” ஓரியண்டல் வித்யாலயாவின் மாணவர் இலக்கியமன்றத் தொடக்க விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகப் போயிருந்தேன்.  

எங்கள் புதுக்கோட்டையின் புகழ்மிகுந்த தொண்டைமான் மன்னர் குடும்பத்தினரின் பள்ளிக்கூடம் அது. மதிப்பிற்குரிய ராணியார் ரமாதேவியாரும் வந்திருந்தார்கள். அதன் பின் சிலமாதம் கழித்து ஆண்டுவிழாவிற்கும் என்னையே அழைத்தார்கள். நான்தான் தொடக்கவிழாவிற்கு வந்தேனே?!” என்று தயக்கம் காட்டினேன்.

(அவர்கள் விளையாட்டுத் துறையில் ஆர்வம் மிகுந்தவர்கள்பல விளையாட்டு வீரர்களுக்குப் பல உதவிகளும் செய்திருக்கிறார்கள் கடந்த 2023ஆம் ஆண்டு காலமானார்கள்)

ராணியார் சொன்னதாக எனக்குச் சொன்னதென்ன தெரியுமா?
ராணியாரின் மகனுடன் படித்த நடிகர் சூர்யா ஆண்டுவிழாவிற்கு வருகிறார். அவர்தான் அதிகம் பேசமாட்டாரே! எனவே பேச நான்வர வேண்டும் என்று ராணியாரே அழைத்ததாக என்னிடம் சொல்லப்பட்டது.

நடிகர் திரு சூர்யா, புகழ்பெற்ற நடிகரான திரு.சிவக்குமாரின் மகன் என்பது எல்லாருக்கும் தெரியும். சூர்யாவும் விஜய்யும் நடித்த நேருக்கு நேர்” படம் வந்து வெற்றிகண்ட பின் சூர்யா தனி நாயகனாகக் காலூன்றிவந்த காலமது. 

இளம் கதாநாயகன்!!

பள்ளியில் இடம் போதாதென்று புதுக்கோட்டை நகரின் மையமான நகர்மன்ற” வளாகத்தில் வெளியில் பெரிய மேடைபோட்டு பள்ளிவிழா... சரியான கூட்டம்!  அதிலும் இளம்பெண்கள் கூட்டம் அலைமோதியது...

சூர்யா வந்திருந்தார். சிக்கென்று... ஜீன்ஸ் போட்டு... சின்னப் பையனாய்... மேடையில் என்னருகில் அமர்ந்திருந்தவரிடம் அவரது மார்க்கண்டேய” அப்பா பற்றியும், “நேருக்கு நேர்” அறிமுகப் படத்தில் சூர்யாவின் நடிப்புப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன்.

சற்று நேரத்தில் என்னைப் பேச அழைத்தார்கள்...  நானும் கொஞ்சநேரம் இடமறிந்து நகைச்சுவை கலந்து பேசிவிட்டு உட்கார்ந்தவுடன்... அடுத்து மாணவர்களுக்குப் பரிசு தந்து நடிகர் சூர்யா பேசுவார்” என்றார்கள்... மக்கள் ஒரே ஆரவாரம்! சூர்யா என்னிடம் மெதுவாகக் குனிந்து, “சார்... நீங்க சூப்பராப் பேசிட்டீங்க... எனக்கு உங்க மாதிரிப் பேச வராது... நான் என்ன சார் பேச..?” என்று வெகு இயல்பாக ---புகழ்மகுடம் சூடிய பலருக்கு இல்லாத இயல்புத் தன்மையுடன் --சாதாரணமாகக் கேட்டார்!

நான் உடனே சொன்னேன்...உங்க பேச்சக் கேக்கவா வந்திருக்காங்க... சும்மா பாக்கத் தானே வந்திருக்காங்க என்னவாச்சும் பேசுங்க... இல்லன்னா சமீபத்துல வந்த ஒரு படத்துல நீங்க 99மல்ர்களின் பேரை வரிசையாச் சொல்வீங்களே அதச் சொல்லுங்க...”  என ஒரு யோசனை சொல்லவும்...  ஆகா நல்ல யோசனை சார்... ஆனா 99 பூக்களின் பெயரும் வரணுமே! நடுவுல மறந்திட்டா...?”  என்று கேட்டார். அட சும்மா சொல்லிட்டே வாங்கசார்... என்ன பரிட்சையா நடக்கப் போகுதுமறந்தா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க” என்று தைரியப் படுத்தி அனுப்பினேன்...  

மக்களின் தொடர்ந்த ஆரவாரத்திற்கிடையே கொஞ்ச நேரம் பேசிய சூர்யா பிறகு மலர்கள் பெயரை வரிசையாகச் சொல்லத் தொடங்கினார்.. ஒரு 40, 45 சொல்லியிருப்பார்... அவ்வளவுதான்.. கூட்டம் மகிழ்ந்து போய் ஒரே கைதட்டல்தான்...  சூர்யாவும் மகிழ்ந்து போய் உட்கார்நதவுடன் எனக்கும் நன்றி சொன்னார்... எனக்கும்  மகிழ்ச்சியானது...  

இது நடந்து 20ஆண்டுகளுக்கு மேலாகிறது...

பத்தாண்டுக்கு முந்திய எனது பதிவின் பகுதியிது –

அந்தப் பதிவின் சுட்டி-

https://valarumkavithai.blogspot.com/2014/05/blog-post_5.html

---------------------------------------------------------

என்றாலும்,

தஞ்சை மாவட்டம் வலங்கை மானில், “தமிழ்த் தாத்தா உவேசா” பிறந்தநாளை ஒட்டி நடக்க இருக்கும் தமுஎகச நிகழ்வு நாளைய தினம் நடக்க இருக்கிறது. அதற்கான தயாரிப்பில் நினைவு வந்தது!


குறிஞ்சிப்பாட்டில் கபிலர் அடுக்கி வைத்த 99 பூக்களில் சில பூக்கள் பெயர் கண்டுபிடிக்க முடியாமல் அவர் பட்ட பாடு நினைவுக்கு வந்தது, கூடவே சூர்யாவும் நினைவுக்கு வந்தார்.

இந்தக் கட்டுரை பிறந்த “வரலாறு“ இதுதான்!

---------------------------------------------------------------------

இனிமேல்

ஆய்வு நோக்கில்

பூக்களைத் தெரிந்து கொள்ள

விருப்பம் உள்ளவர்கள் மட்டும்

மேலே படிக்கலாம் -------

கபிலரின் “குறிஞ்சிப் பாட்டு“ கூறும் 99 பூக்கள்-

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,  65
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,
பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா,   70
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,
குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,   75
கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் தாள் தாமரை   80
ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை,
காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம்,   85
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி,   90
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங்குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள்நாறி,
மாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும்,   95
அரக்கு விரித்தன்ன பரு ஏர் அம் புழகுடன்
மால் அங்கு உடைய மலிவனம் மறுகி,
வான்கண் கழீஇய அகல் அறைக் குவைஇப், (61-98)

(எண்கள் - குறிஞ்சிப்பாட்டு அடி எண்கள்)

99 பூக்களுக்கான பெயர்கள்,

 ஆங்கிலப் பெயர்களுடன் -

பொருள்: 1. செங்காந்தள் Red malabar Glory Lily, Gloriosa Superba, 2. ஆம்பல் White Water lily, Nymphaea lotus, அல்லி 3. அனிச்சம் possibly Anaallis arvensis Linn, 4. குவளை – Nymphaea stellate/Nymphaea odorata, Blue Nelumbo, 5. குறிஞ்சி Square branched conehead, Strobilanthes kunthiana, 6. வெட்சி Scarlet Ixora, Ixora Coccinea, 7. செங்கொடுவேரி Rosy-flowered leadwort, Plumbago rosea, 8. தேமா மாமரம், Mango tree, Mangifera indica, 9. மணிச்சிகை Ipomoea sepiaria, Koenig ex Roxb, 10. உந்தூழ் பெருமூங்கில், Bambusa arundinaca, 11. கூவிளம் வில்வம் மரம், Bael, Aegle marmelos, 12. எறுழம்பூ Calycopteris floribunda, 13. சுள்ளி Barleria prionitis,  14. கூவிரம் Crateva religiosa, 15. வடவனம் Ocimum sanctum/Ocimum gratissimum/Ocimum tenuiflorum, holy basil, 16. வாகை மரம், Albyzzia Lebbeck, 17. குடசம் Holarrhena antidysentrica,  18. எருவை நாணல், Typha angustata, reed, 19. செறுவிளை White-flowered mussel-shell creeper, Clitoria ternatea-albiflora, 20. கருவிளம், Mussell-shell creeper, Clitoria ternatea, 21. பயினி Vateria indica, hill country tree, 22. வானி Euonymus dichotomous, 23. குரவம் Webera corymbosa, 24. பசும்பிடி பச்சிலை, மரம், Mysore gamboge, Garcinia xanthochymus, 25. வகுளம் மகிழ் மரம், Pointed-leaved ape-flower, Mimusops elengi, 26. காயா காசாமரம், Ironwood tree, Memecylon edule, 27. ஆவிரை செடி, Tanners senna, Cassia auriculata, 28. வேரல் சிறுமூங்கில்- Swollen node-ringed semi-solid medium bamboo, Arundinaria wightiana Nees, 29. சூரல் Calamus rotang R. Panchavarnam, சூரை செடி  Oblique-leaved jujube or small-fruited jujube, Zizyphus oenoplia, P.L. Sami and Palaniappan Vairam Parthasarathy, 30. குரீஇப்பூளை, சிறுப் பூளை களை, A common weed, Aerua lanata, 31. குறுநறுங்கண்ணி குன்றி, குன்னி முத்து, Crabs eye, Abrus precatorius, 32. குருகிலை Butea frondosa/ficus virens, 33. மருதம் மருதமரம், நீர்மருது, Black winged myrobalan, கருமருது, Terminalia elliptica/Terminalia arjuna, 34. கோங்கம் இலவு மரம், False tragacanth, Cochlospermum gossypium, 35. போங்கம் மரம், Osmosia travancorica, 36. திலகம் Adenanthera pavonina, 37. பாதிரி மரம், yellow flower trumpet tree, Stereospermum chelonoides, 38. செருந்தி மரம், Panicled golden-blossomed pear tree, Ochna squarrosa, 39. அதிரல் Derris Scandens மல்லிகைவகை, Wild jasmine, 40. சண்பகம் மரம், champak, Michelia champaca, 41. கரந்தை Spaeranthus indicus, 42. குளவி பன்னீர் பூ, மரமல்லிகை, Millingtonia hortensis, 43. மா மாமரம், Mango tree, Mangifera indica, 44. தில்லை மரம், Excoecaria agallocha, Blinding tree, 45. பாலை Wrightia tinctoria/Mimusops kauki, 46. முல்லை Jasminum sambac, 47. கஞ்சங்குல்லை Cannabis sativa, 48. பிடவம் Bedaly emetic-nut, Randia malabarica, 49. சிறுமோரோடம், செங்கருங்காலி, Acacia sundra/Acacia catechu, 50. வாழை plantain, Musa paradisiaca, 51. வள்ளி கிழங்கு கொடி, Dioscorea alata/Convolvulus batatas, 52. நெய்தல் Nymphaea Stellata, Blue waterlily, 53. தாழை Coconut tree, Cocos nucifera, 54. தளவம் மஞ்சள் முல்லை, Jasminum elongatum/Jasminum polyanthum, 55. தாமரை Lotus, Nelumbium speciosum, 56. ஞாழல் University of Madras Lexicon புலிநகக்கொன்றை, Cassia sophera, Tigerclaw tree, Heritiera Littoralis/ Caesalpinia, 57. மௌவல் Jasminum officinale,  58. கொகுடி Jasminun pubescens, முல்லைக்கொடி வகை, 59. சேடல் Nyctanthes arbor-tristis, Night-flowering jasmine, பவளமல்லிகை,  60. செம்மல் சாதிப்பூ, Jasminum grandiflorum, முல்லைப்பூ வகை, 61. சிறுசெங்குரலி Trapa bispinosa Roxb, 62. கோடல் வெண் காந்தள், Gloriosa superba, 63. கைதை தாழ், தாழம்பூ, Pandanus odoratissimus, 64. வழை சுரபுன்னை, Long-leaved two-sepalled gamboge, Ochrocarpus longifolius, 65. காஞ்சி பூவரச மரம், portia tree, Thespesia populnea, 66. கருங்குவளை மணிக் குலை, குவளை வகை, Blue Nelumbo, Nymphaea Stellata/Nymphaea rubra, 67. பாங்கர் Tooth-brush tree, Salvadora persica; ஓமை, Sandpaper-tree, Dillenia indica, உவாமரம், 68. மரவம் வெண்கடம்பு, Seaside Indian oak, Barringtonia racemosa, 69. தணக்கம் நுணா என்னுங் கொடி, Small ach root, Morinda umbellate University of Madras Lexicon, 70. ஈங்கை ஈங்கு செடி, Mimosa rubicaulis, 71. இலவம் மரம், Red-flowered silk-cotton tree, Bombax malabaricum, 72. கொன்றை சரக்கொன்றை, Indian laburnum, Cassia fistula, 73, அடும்பு  கொடி, Ipomaea pes caprae, 74. ஆத்தி மரம், Common mountain ebony, Bauhinia racemosa/Bauhinia tomentosa, 75. அவரை கொடி, Field-bean, Dolichos lablab, 76. பகன்றை சிவதை கொடி, Indian jalap, Operculina turpethum, 77. பலாசம் புரசமரம், Palas-tree, Butea frondosa, 78. பிண்டி Asōka tree, Saraca indica, 79. வஞ்சி Salis tetrosperma, இலுப்பை மரம், Bassia malabarica, 80. பித்திகம் பித்திகை, Jasminum augustifolium, 81. சிந்துவாரம் கருநொச்சி, Three-leaved Chaste tree, Vitex negundo/Vitex trifolia, 82. தும்பை செடி, White dead nettle, Leucas, Bitter toombay, Leucas aspera, 83. துழாய், tulasī, Sacred basil, Ocimum sanctum, 84. தோன்றி Gloriosa superba, Red Malabar glory lily, செங்காந்தள், 85. நந்தி நந்தியாவட்டம், East Indian rosebay, Tabernaemontana coronaria, 86. நறவம் நறுமணக்கொடி, Luvunga scandens, 87. புன்னாகம் சிறு மரம், Callophylum elatum, 88. பாரம் பருத்தி செடி, Indian cotton-plant, Gossypium herbaceum, 89. பீரம் பீர்க்கு, Luffa acutangula, 90. குருக்கத்தி மாதவிக்கொடி, Hiptage madablota, 91. ஆரம் சந்தனம், Sandalwood tree, Santalum album, 92. காழ்வை அகில், Eagle-wood, Aquilaria agallocha, 93. புன்னை மரம், Mast-wood, Calophyllum inophyllum, 94. நரந்தம் நாரத்தை, Bitter orange or Cymbopogon flexuosus grass, 95. நாகப்பூ Iron wood of Ceylon, Mesua ferrea, 96. நள்ளிருணாறி இருவாட்சி, big jasmine variety, Jasminum sambac, 97. குருந்தம் புனவெலுமிச்சை, wild lime, Atlantia monophylla, wild orange, citrus indica, 98. வேங்கை East Indian kino tree, Pterocarpus marsupium, 99. புழகு Calotropis gigantea,  

நன்றி -  :  வைதேகி – இவரது சுட்டி  -https://sangamtranslationsbyvaidehi.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/

------------------------------------------------

99 பூக்களை அவற்றின் வண்ணத்தில் 

பார்க்க விரும்புவோர் பார்க்க - நன்றி -  

https://www.youtube.com/watch?v=nsbEIDUY8wQ  

-----------------------------------------------