திரையிசைப்பாடகர் திரு பி.பி.சீனிவாசுக்கு ஓர் அஞ்சலிக் கட்டுரை


திரு பி.பி.சீனிவாஸ் 60களில் தொடங்கி 90கள் வரையும் கூடத் தமிழ்த்திரையுலகில் தேனாய் ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரர். சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கும் எப்படி வித்தியாசப்படுத்தி டிஎம்எஸ் பாடுகிறார் என்று பள்ளி-கல்லூரியில படித்தபோது எங்கள் நண்பர்கள் குழு ஆச்சரியப்பட்டுப் பேசிக்கொள்வோம்.
அதே வேளையில் ஜெமினி கணேசனுக்கென்றே செய்து வந்தது போல இருக்கும் பிபிஎஸ்சின் தனிக்குரல். பிறகு முத்துராமன்(காதலிக்க நேரமில்லை), நாகேஷ்(பலபடங்கள்) போன்றவர்களுக்கும் அதே குரல் பொருத்தமாகவே பட்டது.
காலங்களில் அவள் வசந்தம், மயக்கமா கலக்கமா, அழகிய மிதிலை நகரினிலே 
எந்த ஊர் என்றவளே முதலான அவரது பாடல்கள் கண்ணதாசன் வரிகளில் 
மறக்க்க் கூடியதா என்ன?

திரு டி.எம்.எஸ்., பி.சுசீலாம்மா  இருவரின் பாடல்களில் விஞ்சி நிற்பது காதலா தத்துவமா 
எனும் தலைப்பில் நகைச்சுவைத்தென்றல் திண்டுக்கல் திரு ஐ.லியோனி அவர்களின் தலைமையில் நான் கலந்துகொண்டு சென்னையில் பேசிய ஒரு பட்டிமன்றத்தில் பார்வையாளராக வந்திருந்த 
திரு பிபிஎஸ் அவர்கள் மேடைக்கு  வந்து எங்களையெல்லாம் வாழ்த்திவிட்டுப் போனது 
ஆறேழு ஆண்டு ஆனாலும் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. 
அப்போது, நானும் திரு லியோனி அவர்களுடன் இணைந்து,  புகழ்பெற்ற டிஎம்எஸ் பிபிஎஸ் பாடிய ”பொன்ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை“ பாடலை பாடி பார்வையாளர்களின் கைத்தடடலை அள்ளியிருந்தோம்... அடாடா... அது மறக்கக் கூடிய நினைவா என்ன?
பார்வையாளர்களாக வந்திருந்தோர் டிஎம்எஸ், சுசிலாம்மா, பிபிஎஸ் அல்லவா?

இவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று நினைத்திருந்த நேரத்தில், 
நண்பரும் எழுத்தாளருமான திரு எஸ்.வி.வி. அவர்களின் மின்னஞ்சல் வந்த்து....
அடாடா... இதைவிட நா என்னத்த எழுத? என்று எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டு,
அவரது கட்டுரையையே இங்குத் தருகிறேன்.  அவர் இன்னும் வலைப்பக்கம் தொடங்காமல் இருப்பது ஏன் என்று அவரையே கேளுங்கள்... 
நண்பர் திரு எஸ்.வி.வி. அவர்களின் மின்னஞ்சல்-
sv.venu@gmail.com  
--------------------------------------------------------------------------
மௌனமே பார்வையால் ஒரு 
பாட்டு பாட மாட்டாயா....
எஸ் வி வேணுகோபாலன் 

அற்புதமான பாடகர் பி பி ஸ்ரீநிவாஸ் இன்று காலமாகிவிட்டார். 

காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம் என்று முணுமுணுக்காத பழைய தலைமுறை இருப்பது அபூர்வம். மெல்லிசை என்று அழைக்கப்படும் திரை இசையை அதனினும் மெல்லிய இசையாகத் தமது குரல் வழி பொழிந்தவர் பி பி எஸ். 

மிகக் குறைந்த எண்ணிக்கையில் கவிஞர்கள், இசை அமைப்பாளர்கள், கதாநாயகர்கள் இருந்த அந்த அறுபதுகளில் சிவாஜி, எம் ஜி ஆர் என்ற பெரிய நடிகர்களுக்கு டி எம் சவுந்திரராஜன் நிரந்தர பாட்டுக்காரராகத் திகழ்ந்தார். எங்கே நிம்மதி என்று வானொலியில் பாடல் புறப்படுகையிலேயே ரசிகன் சிவாஜி படம் என்று முடிவுக்கு வந்துவிடுவான். அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு என்று தொடங்கும் பாடலை வாத்தியார் பாட்டுடா என்று கூத்தாடத் தொடங்கிவிடுவான்...

பி பி எஸ் அவர்களது அலை வரிசை வேறு தளத்தில் இயங்கியது. பிறந்த குழந்தையின் கள்ளம் கலவாத புன்னகைக் கோடு போலவோ , ஒரு முதியவரின் பற்றற்ற உலர்ந்த சிரிப்பைப் போலவோ இருக்கும் பாடல்கள் அவருக்கு வாய்த்தது வியப்புக்குரிய விஷயம். துள்ளலான காதலைக் கூட அவரது கொஞ்சும் மொழி இலக்கியப் படுத்தியதை, தாமரைக் கன்னங்கள் தேன்மலர்க் கிண்ணங்கள் என்னும் எதிர் நீச்சல் படத்தின் பாடலில் கேட்க முடியும். வாலியின் அருமையான வார்த்தை விளையாட்டு நிறைந்த அந்தப் பாடலில் (மங்கை நான் கன்னித் தேன், காதலன் தீண்டும் போது கைகளை மன்னித்தேன் என்று பி சுசீலா இழைக்கும் இடம் அத்தனை அழகு), நாகேஷின் சேட்டை நிறைந்த உடல் மொழிக்கு ஏற்ப ஏற்ற இறக்கங்களோடு அமைந்திருக்கும் சரணங்களைப் பாடியிருப்பார் பி பி எஸ். 

ரோஜா மலரே ராஜகுமாரி என்ற பாடல் காதல் உருக்கத்திற்கு இலக்கணம் எழுதுபவர்கள் கேட்டுக் கொண்டே எழுத வேண்டிய சாகித்தியம். உதடுகளை அவர் எப்படிப் பிரித்து எப்படி மூடி பாடலின் சொற்களை உச்சரித்தார் என்று யோசிக்க வைக்கும் எழில் அவரது குரலில் நெளிகிறது. வீரத் திருமகன் படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடலிலும் சுசீலா அவருக்கு ஏற்ற இணை குரலாய் ஒலித்தார் 

எம் எஸ் விஸ்வநாதன் தமது எந்த மெல்லிசைக் கச்சேரியிலும் முதல் பாடலை இசைக் கருவிகளைக் கொண்டு தான் தொடங்குவார். எண்பதுகளில் நான் பார்த்தவரையில் அது காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் நாளாம் நாளாம் திருநாளாம் என்ற இனிமை நிறைந்த பாடலாகத் தான் இருக்கும். அதில், இளைய கன்னிகை என்ற சொற்களை அத்தனை கிறக்கமாக எடுத்துக் கொடுப்பார் பி பி எஸ். அதே கதியில் சரணங்களை இசைக்கும்போதும், ஹம்மிங் செய்கையிலும் அப்படி ஒரு சுகானுபவத்தை அளிப்பார் கேட்போர்க்கு. 

அவருக்கே உரித்தான வெல்வெட் குரலில் ஜானகியோடு இணைந்து அவர் பாடிய போலீஸ்காரன் மகள் படத்தின், பொன் என்பேன் சிறு பூ என்பேன் என்ற கீதம், வித்தியாசமான திரை இசைப் பாடல்களைத் தொகுத்தால் அதில் முக்கிய இடத்தில் இருக்கும். 

சொற்களை அவர்   கொஞ்சம் நகாசு வேலை செய்து சொகுசாக்கி உருட்டி விடுவது போல் வந்து நமது இதயத்தைத் தொடும்....சோகப் பாடல்களோ இதயத்தை வருடும். ஜெமினி கணேசனுக்கென்றே அவர் குரல் கொடுத்த கண்ணதாசனின் தத்துவ முத்துக்கள் இரவின் தனிமையில் நம்மை வேறு ஒரு கிரகத்திற்குக் கொண்டு போய்க்  குடியமர்த்தும். அப்படியான பாடல்களில் மயக்கமா கலக்கமா ஒரு தினுசான வித்தை காட்டும் என்றால் அசர வைக்கும் வேறொரு பாடலான யார் சிரித்தால் என்ன, இங்கு யார் அழுதால் என்ன என்பது கற்பனையான ஒரு சோகத்தைக் கேட்பவருள் உருவாக்கி அதில் ஒரு பரவசத்தை ஏற்படுத்தி நிறைவுறும் 

டி எம் சவுந்திரராஜனோடு இணைந்து பி பி எஸ் கொடுத்த அருமையான பாடல்களில், மறக்க முடியாதவை, பொன் ஒன்று கண்டேன், பெண் அங்கு இல்லை என்பது தனி ராகம். புல்லாங்குழல் இசையின் ஒத்த கதியில் மிகவும் அமைதியான பரஸ்பர காதல் பகிர்வின் இரண்டு வெவ்வேறு குரல்கள் கலந்து மிதக்கும் அந்தப் பாடலில், ஸ்ரீநிவாஸ் அழுத்தமான டி எம் எஸ் குரலினூடே ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு போல மென்சிதறலாய்த் தமது குரலைப் பொழிவார். அவள் பறந்து போனாளே பாடல் வேறொரு பாவத்தில் இதே இருவரின் குரல்களை இணைக்கும் பாடல். எம் எஸ் வி தேர்ச்சியான கருவிகளைப் பயன்படுத்தி மேற்கத்திய சூழலை மனத்திற்குள் படரவிடும் அழகே தனி.

தவப் புதல்வன் படத்தில், சிவாஜிக்காக உலகின் முதலிசை தமிழிசையே என்று டி எம் எஸ் பாடுவதற்குப் போட்டியாக, திக்குரிசி சுகுமாரன் நாயர் என்ற நடிகர் பாடுவதற்கு பி பி எஸ் பாடிய, சங்கீத குலோமினி பஹியாகே என்ற சங்கீதம் ருசியானது 

என்ன சொன்னாலும் பி பி ஸ்ரீநிவாஸ் பாடிய தத்துவப் பாடல்களில்,  கண்ணதாசனின் சிறந்த பாடல்களில் ஒன்றான காட்டு ரோஜாவில் வரும் எந்த ஊர் என்றவனே பாடல் ரசனைக்கு ஏற்ற சரக்கு. அதில் காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள், 

கன்னியூர் மறந்தவுடன் 
கடலூரில் விழுந்துவிட்டேன், 
பள்ளத்தூர் தன்னில் என்னை 
பரிதவிக்க விட்டுவிட்டு 
மேட்டூரில் அந்த மங்கை 
மேலேறி நின்று கொண்டாள்....

என்று ஓர் இழு இழுத்து ஒரு நொடி pause கொடுப்பார்....இசையின் அழகு, இடைக்கு நடுவே கடந்து போகும் ஓசையற்ற மவுன இடங்கள் என்பதன் இலக்கணம் அந்த இடம்...

'அழகிய மிதிலை நகரத்திலே யாருக்கு ஜானகி காத்திருந்தாளை' விட்டுவிட முடியுமா.அல்லது ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து, ஆதி மனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இது தான், என்னருகே நீ இருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன், என்ற எந்தப் பாடலைத் தான் விட்டுவிட முடியும்?

கர்ணன் படத்தில், மழை கொடுக்கும் கொடையுமொரு என்று கம்பீர நாவுக்கரசர் சீர்காழி கோவிந்தராஜன் தொடங்கும் பாடலில், பி பி எஸ் நுழையும் என்ன கொடுப்பார் எதைக் கொடுப்பார் என்றிவர்கள் எண்ணும் முன்னே வரிகளும் சரி, குழந்தைக்காக  படத்தில் ராமன் என்பது கங்கை நதி என்று அதே போல சீர்காழி தொடங்கி வைக்கும் பாடலில், இயேசு என்பது பொன்னி நதி என்று பி பி எஸ் அடி எடுத்து, அப்புறம் சரணங்களிலும் மென்குரலில் இசைக்கும் இடங்களும் சரி ரசிகர்களுக்கு போனஸ் பரிசு. 

இதெல்லாம் கடந்த காலத்தின் மனிதர்களுக்கானவை...இடையே திடீரென்று எதிர்பாராத இன்ப அதிர்ச்சி, எண்பதுகளின் பிற்பகுதியில் ஊமை விழிகள் படத்தில், மிகப் பரவலாகக் கொண்டாடப் பட்ட, தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா என்ற இரத்தினத்தை  பி பி எஸ் வழங்கியது 

மிக மிக எளிய மனிதராகவே அறியப்பட்ட அவர், கிட்டத் தட்ட ஒரு குழந்தையைப் போலவே நடந்து கொண்டவர். எப்போதும் பல நிறங்களில் விதவிதமான பேனாக்களை பாக்கெட்டில் வைத்திருப்பார் அவர். உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டல் இடிக்கப்பட்டு அங்கே செம்மொழி பூங்கா வரவிருப்பதாக செய்தி வந்ததும் முதலில் அதிர்ச்சி அடைந்தவர் அவர் தான்....கால காலமாக மாலை நேரங்களை அவர் அங்கே தான் கழித்து வந்தார். அவரைப் பார்க்க விரும்பும் யாரும் அந்த நேரத்தில் அவரை அங்கே பிடித்துவிட முடியும். 

எந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப் பட்டாலும் அவரது கவிதை ஒன்று தயாராக இருக்கும்....ஆங்கிலத்திலும் தமிழிலும் தம்மை சிறப்பித்த மனிதரின் பெயரில் உள்ள எழுத்துக்களை முதல் எழுத்துக்களாக வைத்து அத்தனை வரிகளில் ஒரு கவிதை எடுத்து விடுவார் அல்லது அந்த அமைப்பின் பெயரில்.! இந்தியன் வங்கியில் ஒரு பாடல் போட்டிக்கு அவர் அழைக்கப்பட்டபோது வங்கியைப் பெருமைப் படுத்தி அப்படியான ஒரு கவிதையை வாசித்தார் அவர். 

தம்மை விட இளைய வயது பாடகர்கள் அல்லது போட்டிகளில் தமது பாடலைப் பாடும் சிறுவர்கள் யாரையும் அத்தனை சிறந்த குரல் வளம் மிக்கவர்களாக வாழ்த்துவார். தலைக் கனத்தோடு அவர் யாரையும் மட்டம் தட்டிப் பேசியதாக ஒரு நிகழ்வும் நினைவில் இல்லை. 

அவரது குரல் ஓர் அலங்காரம் என்றால், அவரது உடை அலங்காரம் இன்னும் தடபுடலாக  இருக்கும்....சரிகைக் குல்லாய் சட்டை மீது ஓர் சால்வை, பவர் அதிகமான லென்ஸ் கொண்ட கண்ணாடி, நெற்றியில் திருநாமம்.

சில மாதங்களுக்குமுன் பாண்டி பஜாரில் ஓர் ஓட்டலில் இருந்து அவர் வெளியே வருவதைப் பார்த்தேன்...உடன் வந்த குடும்ப உறுப்பினர்களில் இளைய தலைமுறைக்கு அவர் பெயரைச் சொல்லத் தெரியாமல் திணறிய போது வருத்தமாக இருந்தது...அவரைத் தெரியும் என்றால் அருகே போய்ப் பேசுங்களேன் என்றார்கள். எனக்குத் தான் அவரைத் தெரியும், அவருக்கு என்னைத் தெரியாது. .இந்த முதிய வயதில் அவர் தேடித் தேடி அவசரமாக வெளியேறிக் கொண்டிருக்கும் நேரத்தில், வெறும் அற்ப ரசனையுடன் குறுக்கிட எனக்கு தயக்கமாக இருந்தது....வழக்கமாக இத்தனை யோசிக்கவே மாட்டேன். 

அவரை இனி ஒரு போதும் அருகே சென்று பார்த்துப் பேசவோ அவரது பாடல்களை அணு அணுவாய் நான் எப்படி ரசித்தேன் என்று நடுங்கும் அவரது கைகளை எடுத்து எனது இதயப் பக்கத்தில் அழுத்தியவாறு பகிர்ந்து கொள்ளவோ முடியாது என்று இன்று நினைக்கும்போது அன்றைய தயக்கம் இப்போது வேதனை மிகுந்ததாக மாறுகிறது.....

வணக்கம் பி பி எஸ்.....எங்களை உங்களது வசீகர குரலின்வழி புதிய கனவுகளுக்கு கற்பனைகளுக்கு வெவ்வேறு உணர்வுகளுக்கு ஆட்படுத்திய கலைஞனே, நீங்கள் வாழ்வாங்கு வாழ்வீர்கள் - தமிழில் மட்டும் அல்ல கன்னடம் தெலுங்கு என நீங்கள் ஒலித்த அத்தனை மொழிகளிலும்.....

************************* 

நண்பர் திரு எஸ்.வி.வி. அவர்களின் மின்னஞ்சல்-
sv.venu@gmail.com   
---------------------------------------------------------------------------------------------------------

கோடை விடுமுறை தேவையில்லையா?!

-நா.முத்து நிலவன்-
ங்கிலேயர் ஆரம்பித்ததுதான், ஆனாலும் நமது “பள்ளிகளுக்கான கோடை விடுமுறை“ என்பது நமது மண்சார்ந்த வகையில் -பள்ளிமாணவர் உளவியலும் உடல்நிலையும் சார்ந்த வகையில்- சரியானது தானே? அப்புறம் ஏன் தமிழகத்தின் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான நம் பிள்ளைகளுக்கு மட்டும் கோடை விடுமுறை மறுக்கப்படுகிறது?
தனியார் பள்ளி விடுதிகளில் தங்கிப் படிக்கும் நமது தமிழகப் பிள்ளைகளில்  9,11ஆம் வகுப்புப் பிள்ளைகள் மட்டும் அவர்களின் ஆண்டு இறுதித்தேர்வு முடிந்ததும், “அம்மா... இந்த வருசம் சம்மர் லீவே இல்லையாம்மா...எனப் பேசுவதும், இந்த விடயம் முன்னரே தெரிந்த பெற்றோர் “ஆமாடா கண்ணு. அடுத்த வருசம் நீ பப்ளிக் எக்ஸாம் எழுதப்போறயில்ல..? கொஞ்சம் கஷ்டப்பட்டுப படிச்சுறுப்பா... உன்ன அடுத்த வாரம் அப்பாவோட பாக்க வர்ரேன்”....  என்று தொலைபேசியில் கெஞ்சுவது இப்போது நடந்து வருகிறது.
ஏன் இப்படி?
குழந்தைகள் “ஓடி விளையாடு பாப்பா”  பாடலை ஓர் அறைக்குள் உட்கார்ந்து மனப்பாடம் செய்வதற்கா பாரதி எழுதினான்? இது தகுமா? இது சரியா?  நியாயம்தானா?

பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தை வகுத்தவர்கள்- ஒருநாளைக்கு இவ்வளவு நேரம் பாடம் நடக்க வேண்டும், விளையாட்டு, கலைவகுப்புகள் நடக்க வேண்டும் எனத் திட்டமிட்டுத் தந்தவர்கள் - என்ன முட்டாள்களா? அறிவியல் ரீதியாக அவர்கள் சொன்னதை மீறி, சிறப்பு வகுப்பு நடத்துவதே மாணவர் உளவியலுக்கு எதிரானது. குதிரை கீழேதள்ளி குழியும் பறித்த கதையாக,  கோடை விடுமுறையையே மறுத்துத் வகுப்புகள் நடத்துவதுகுழந்தைகள் மீது நடத்தும் வன்முறைஅல்லவா? 

யார் இதைக் கேட்பது? பல்லாயிரக் கணக்கான குழந்தைகள், லட்சக் கணக்கிலான பெற்றோர் சார்பில் தமிழக அரசுதான் தலையிட்டுக் கேட்க வேண்டும்! உடனே இதைத் தடுத்து நிறுத்தவும் வேண்டும்.

ங்கள் தாத்தா தன்காலத்துப் பெருமைகளைச் சொல்லும்போது "அந்தக் காலத்துலயே நான் ரெண்டாம்ப்புலருந்து 'டபுள்-ப்ரமோஷன்' வாங்கி நேரா நாலாம்ப்புக்குப் போனவன்டா! அதுமட்டுமில்ல, மூணுவருச பி.ஏ.,டிகிரிய ஒரேவருசத்துல முடிச்சு 'ஹானர்ஸ்' வாங்குனவன் தெரியுமில்ல?" என்று தனது வெள்ளை மீசையை நீவி விட்டுக்கொண்டே வீறாப்பாகச் சொல்வார்.
அதுபற்றி அப்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தாலும், வேறு ஒன்றும் கேட்டதில்லை. ஆனால். இப்போது நமது பிள்ளைகள் --9,11ஆம் வகுப்புகளில் படிப்பதாகச் சொல்லும் குழந்தைகள்-- அந்த வகுப்புப் பாடங்களையே படிக்காமல் அப்படியே முறையே 10, 12 வகுப்புப் பாடங்களையே இரண்டுவருடம் படிப்பதைப் பார்த்ததும் எனக்குத் தாத்தாவின் நினைவுதான் வந்தது! இந்த 'டபுள் ப்ரமோஷன்' ஏன்?  இது நமது குழந்தைகளுக்குச் சரியானதுதானா?   இது ஊரறிந்த ரகசியமாகப் பல்லாண்டுகளாகத் தொடர்வது ஏன்?
தமிழ்நாட்டின் அனைத்து மெட்ரிக்-பள்ளிகளிலும், பெரும்பாலான தனியார் பள்ளிகளிலும் 9,11ஆம் வகுப்புகளை  நடத்தும் வழக்கமே இல்லை! இந்த வியாதி –பலபள்ளி மாணவரும் ஒரே ஆசிரியரிடம் தனிப்பயிற்சி படிப்பதால் தொற்றிக்கொள்ளும் வியாதி- இப்போது அரசுப் பள்ளிகளுக்கும் விடம்போலப் பரவி, குறைந்தது அரையாண்டுக்குப் பிறகாவது அடுத்தவருடப் பாடத்தைத் தொடங்கிவிடுவது என்னும் கைங்கரியம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆக, அரசுப்பள்ளிகளில் 9,11ஆம் வகுப்புகளுக்கு அரைப்படிப்புத்தான்! மெட்ரிக், தனியார் பள்ளிகளில் அதுவும் இல்லைபோ என்னும் நிலைமை! ஏன் இப்படி?

மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் பலவற்றில், எட்டாம் வகுப்பு ஆண்டுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர், 9ஆம் வகுப்பில் சேர்ந்தவுடனேயே, 10ஆம் வகுப்புப் பாடப்புத்தகங்களும் சேர்த்துத் தரப்படுகின்றன. தரப்படுவது என்ன, 'மெட்ரிக்குலேஷன்' பள்ளிகளில்-ஆங்கில வழியில் -படிக்கும் மாணவர்கள் 9,10ஆம் வகுப்புப் பாடநூல்கள் இரண்டையும் ஒரே நேரத்தில் வாங்கிவிட வேண்டும்! 'மெட்ரிக்குலேஷன்' பள்ளிகளில்தான் வெளியில் புத்தகங்களை வாங்க முடியாதே! வாங்கவும் கூடாதில்ல? அப்படி வாங்கிய 9ஆம் வகுப்புப் பாடப்புத்தகங்கள் சில, ஒரு சில வாரங்களே நடத்தப்படும்! 'பெருந்தன்மை'யான சில பள்ளிகளில் காலாண்டு வரை நடப்பதுண்டு! அதற்குமேல் நிச்சயமாக 10ஆம் வகுப்புப் பாடங்கள் துவங்கி விடும்! அதிலிருந்து அந்த மாணவர்கள் 10-ஆம்வகுப்புப் பாடங்களையே இருமுறை -அதாவது சுமார் ஒன்னே முக்கால் ஆண்டுகளும் படிக்கிறார்கள்! (அப்படின்னா, +2 படிப்பு இரண்டு வருடம் மாதிரி,  பத்தாம் வகுப்பும் ரெண்டுவருடம் தானோ? என்மகன் பி.ஏசெகண்ட் இயர் படிக்கிறான்னு சொல்லிக்கிற மாதிரி என் மகள் டென்த் செகண்ட் இயர் படிக்கிறான்னு பெருமையா சொல்லிக்கலாம் ஆனா யாரும் சொல்லிக்கிறதில்லயே! ஏன்னா தன் மகன்ஃமகள் “நல்ல“ பள்ளியில் படிக்கும் ரகசியத்தைக் காப்பாற்ற வேண்டுமல்லவா?)
இதே கதை(கதி)தான் 11ஆம்வகுப்பு (+1) மாணவ-மாணவிகளுக்கும்! இதில் கூத்து என்னவென்றால், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளைப் போலவே  பெரும்பான்மையான அரசு மேல்நிலைப்பள்ளிகளில் -11ஆம் வகுப்பின் அரையாண்டுத் தேர்வுக்குப் பிறகு 12ஆம் வகுப்புப் பாடங்களைத் தொடங்கிவிடுவது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது என்பதுதான்!     
இப்படி --ஒன்பதாம் வகுப்பு மாணவர், 10ஆம் வகுப்புப் பாடத்தையே இரண்டுவருடமும், 11ஆம் வகுப்பு மாணவர், 12ஆம் வகுப்புப் பாடத்தையே இரண்டுவருடமும்- ஒரேபுத்தகத்தை 'உருப்போட்ட' மாணவர், தொழிற்கல்வி நுழைவுத் தேர்வுகளின்போது, 'உருப்படாத' மதிப்பெண் எடுத்த ரகசியமும் இதுதான்! (எங்கள் மாவட்டத்தில் மெட்ரிக் பள்ளியில் படித்து மாவட்ட முதலிடம் பெற்ற மாணவி ஒருவருக்கு நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டின் அரசுப பொறியியல் கல்லூரி எதிலும் இடம் கிடைக்காமல் நாக்பூர் போய்ப் படித்தது இங்குள்ள பலருக்கும் தெரிந்த ரகசியம்தான்!)
அந்தந்த வயதிற்கும் இருக்கக்கூடிய உளவியல், சொல்லாற்றல், பொருளுணர்தல், உலகஅறிவு பொதுகவனிப்புத் தன்மைக்கும் ஏற்பத்தான் பாடங்கள் தயாரிக்கப்படுவதாகக் கல்வியாளர்கள் சொல்கிறார்கள். உலகளவில் இது கடைபிடிக்கப்படுகிறது. இது உண்மைதான் எனில், இந்த வகுப்புகளைப்புறக்கணித்துவிட்டு -ஒரே தாண்டாகத் தாண்டி- அடுத்த வகுப்புக்கு மாணவர்களைக் 'கடத்தி' கொண்டு போவது ஏன்?
இப்படியான பள்ளிகளில், மாணவர்கள் மனப்பாட எந்திரமாக மாற்றப்படுவதன்றி வேறு வழியென்ன? பாடமும் புரியாமல், மனப்பாடமும் செய்ய முடியாமல் மாணவர்கள் படும் அவதியும், 'முடியாத'மாணவர்கள் கடுமையான தண்டனைக்கு ஆளாவதும் பள்ளிக் கூடத்தையே வெறுப்பதும், வாழ்க்கையே வெறுத்துப் போவதுமான நிலைமை தொடர்கதையாவதும் இப்படித்தானே! எப்படியாவது மதிப்பெண் வாங்கும் எந்திரமாக மாணவர்களை ஆக்கிவிடும் அவசரம்தானே இது?  மூன்றாவது கண்ணைத் திறக்கும் அவசரத்தில் இருக்கும் இரண்டு கண்களையும் ஒன்றரைக் கண்ணாக்கிவிடுவதன் விளைவு பற்றி யார் கவலைப்படுகிறார்கள்?       
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை தன் கட்டுப்பாட்டில் இருக்கும் பள்ளி அனைத்தும்  9,11ஆம் வகுப்புப் பாடநூல் முழுவதும் நடத்தி, ஆண்டுத் தேர்வும் நடத்தி, கோடை விடுமுறைக்கு பிறகே அடுத்தவகுப்புப் பாடங்களைத் தொடங்க வேண்டும் என்பதை  நடைமுறைப்படுத்த ஆணையிட வேண்டும்.
அதுவரை,மொழிப்பாடங்களில் செய்யுள்-உரைநடை-இலக்கணம், மொழிப்பயிற்சி மற்றும் கட்டுரை ஆகிய அனைத்தையும் ஒரே தேர்வில் எழுதிவந்த மாணவர்க்கு, 9ஆம்வகுப்பில்தான் இரண்டு தேர்வுத் தாள்களாகப் பிரிக்கப் படுகிறது. தமிழ் முதல்தாள்,  இரண்டாம் தாள் என்பது போலவே, ஆங்கிலத்திலும் 9ஆம் வகுப்பிலிருந்துதான் இரண்டு தாள்களுக்கும் தனித்தனித் தேர்வுகள் வைக்கப்படுகின்றன. அப்போதுதான் மொழிப்பயிற்சி சற்று மேம்படும் என்பதே இதன் நோக்கம். எனக்குத் தெரிந்து பல மெட்ரிக் பள்ளிகளில் கட்டுரை ஏடு என்னும் ஒன்றை மாணவர்கள் பார்த்த்தே இல்லை! அப்புறம் எப்படி மொழிவளம் கிடைக்கும்?
14 வயதில் -ஒன்பதாம் வகுப்பில்- இந்த மொழிப்பயிற்சிகள் விரிவாகத் தொடங்கப் படுவதற்கு அந்த வயதிற்கான கல்வி உளவியலே முக்கியமான காரணமென்பது கல்வியாளர் கருத்து.
இப்படி, முறையே 9,11 வகுப்பில் 10,12ஆம் வகுப்புப் பாடங்களை நடத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் அதையே தமது 'பாடக் குறிப்பேடு'களில் (Notes of Lesson) எழுத முடியாது!  அப்போதுதான், 'பூனை வெளியே வந்துவிடுமே?' இந்த நிலையை மாற்றி, முறைப்படுத்துவதன் மூலமாக ஆசிரியர்கள் அந்தந்த வாரமும் மாணவர்களுக்கு நடத்துவது ஒன்று, ஏடுகளில் எழுதிவைப்பது ஒன்று என்னும் 'ஏமாற்று' வேலைக்கும் இடந்தரவேண்டியதில்லையே?
இதோடு, மொழிப்பாடங்களில் அந்தந்த வயதிற்குரிய மொழிப்பயிற்சிகள் மீறப்படும் போது, அல்லது விடப்படும்போது, அதன் தொடர்ச்சி எவ்வாறு மாணவர்களுக்குக் கிடைக்கும்? மொழிப்பயிற்சி முழுமையாகமலே எப்படி அந்த மாணவர்கள் 10, 12 ஆம் வகுப்புத் தேர்வை எழுத முடியும்? கணிதப்பாடத்திலும், அறிவியல், வரலாற்றுப் பாடங்களிலும் முந்திய வகுப்பின் தொடர்ச்சியாகப் பல பாடங்கள் வருகின்றன. 9,11ஆம் வகுப்புப் பாட நூல்களையே பார்க்காத மாணவர் எப்படி அவற்றை உள்வாங்கமுடியும்?  எந்திரகதியாக 'உருப்'போடுவதன்றி வேறு என்ன செய்ய முடியும்?
கல்வியாளர் கருத்தையும், மாணவர் உளவியல் சார்ந்த உடல் நலனையும் பற்றிக் கவலைப் படாதவர்கள்தான் இந்தப் புதியவகையிலான 'டபுள் ப்ரமோஷனை' நடத்துகிறார்கள். விடுதிகளில் தங்கிப் படிக்கும் பல்லாயிரக் கணக்கான 9,11ஆம் வகுப்பு  மாணவரையும் பாடாய்ப் படுத்தி, பெற்றோரிடமும் “கோடைக்கால சிறப்புத் தொடர்வகுப்பு“ எனும் என, லட்சக்கணக்கில் கொள்ளையடிக்கவும் செய்கிறார்கள்.
இந்தச் செயல் சரிதான் எனில், 9,11 ஆம் வகுப்பையே கல்வித்துறை எடுத்துவிடலாமே?
அப்படி எடுத்துவிடலாமெனில், இப்போது நடைமுறையில் இருக்கும் 15 வயதுக்குப் பதிலாக, 14 வயதிலேயே பள்ளி இறுதித்தேர்வை (SSLC) எழுதச் சொல்லிவிடலாமே? அதேபோல 17 வயதுக்குப் பதிலாக 16வயதிலேயே மேல்நிலைத் தேர்வை (+2) எழுதச்சொல்லிவிடலாமே? (இல்லை இல்லை தவறாகச் சொல்லிவிட்டேன், 14வயதில் SSLC, அடுத்த வருடமே+2, 15வயதில் கல்லூரிக்கே போய்விடலாம்!பிறகு 18 வயதில் இளங்கலை(BA), 20 வயதில் முதுகலை (MA) முடித்துவிடலாம்... வாழ்க்கையிலேயே இரண்டு வயதை 'மிச்சம்'பிடிக்கலாம்ங்கோ...!)
மாணவர்கள் 9,11ஆம் வகுப்புகளை இழப்பதன்மூலம் அந்தந்த  வருட அமைதியை இழக்கிறார்கள். 'அடுத்த வருடம்தான் அரசுத்தேர்வு' எனும் நினைவு தரும் மனஅமைதி முதலில் போய்விடுகிறது. முதலில் 10ஆம் வகுப்பு அரசுத்தேர்வுக்கு ஒன்பதாம் வகுப்பிலிருந்தும், பிறகு 12ஆம்வகுப்பு அரசுத்தேர்வுக்கு 11ஆம் வகுப்பிலிருந்தும் -ஒவ்வோராண்டுக்காலம்- முன்தயாரிப்பு எனும் நிதானம் மலையேறி 2+2 ஆக 4 ஆண்டுகளுமே பரபரப்புத்தான்! எதையுமே பரபரப்பாகச் செய்தால், அதன் ஆழ அகலப் பரிமாணங்கள் தெரியாமலேபோகும் என்பது எல்லா விஷயங்களுக்குமே பொருந்தும்தானே? 'அவசரத்தில் அண்டாப் பானையில்கூட கை நுழையாது'தானே?
 
அந்த மாணவ -மாணவிகளைப்  பார்த்திருக்கிறீர்களா? உண்மையிலேயே நன்றாகப் படிக்க வேண்டும் என்று நினைக்கிற மாணவர்கள்தான் அதிகமாகச் சிரமப்படுகிறார்கள்! (இந்தத் தத்துவத்தை அறிந்த சிலர்தான், 'பாடமே இது பொய்யடா-வெறும் 'மார்க்'கடைத்த பையடா' என்று 'வேறு'வழிகளில் பயிற்சிபெறுகிறார்கள்!)  'நன்மாணாக்கர்'களோ பாவம் -பரிதாபமாக அதிகாலை 4-1/2மணிக்கே எழுந்து, 5-6கணக்கு, 6-7இயற்பியல்,  7-8வேதியல். பிறகு 9-5 பள்ளிக்கூடம். பிறகு 5-1/2 மணிக்கு வீட்டுக்கு வந்தவுடன் உடை மாற்றிக்கொண்டே ஒருவாய் காப்பியை வாயில் ஊற்றிக்கொண்டே பரபரப்பார்கள்! மீண்டும்,-"மாலை முழுதும் விளை யாட்டு"என்றெழுதிய பாரதியை மனசாரத் திட்டிக்கொண்டே 6-7தாவரவியல், 7-8விலங்கியல் என்று சென்றிடுவார் எட்டுத்திக்கும்! அப்படி ('ட்யூஷன்') சென்றால்தானே (மதிப்பெண்) செல்வங்கள்யாவும் கொணர்ந்திங்கு சேர்க்க முடியும்?
"இந்தப் பரபரப்பான உலகத்தில் எல்லாம் சகஜமப்பா!" என்று எதிலும் ஒட்டாதவர்களாக - கண் அங்கேயிங்கே பாவாமல், குதிரைக்கு ஒரு கண்பட்டையைப் பூட்டி விடுவார்களே அதுமாதிரி -உலக நியாய, அநியாயங்களைக் கண்டுகொள்ளாமல், இப்படி, 'தானுண்டு, தன்ட்யூஷன்உண்டு' என்று, அப்போதே அவர்களுக்கு பிரச்சினைகளிலிருந்து 'அந்நியமாதல்-ஞானம்' வந்துவிடாதா என்ன?
இது நம் தமிழகஅரசு பள்ளிக்கல்வித்துறைக்குத் தெரிந்தோ தெரியாமலோ நடக்கிறது. நிச்சயமாகத் தெரிந்து-அனுமதியுடன் நடக்கவாய்ப்பில்லை. ஆனால், நடப்பது நிச்சயம்  ஊரறிந்த ரகசியம்! இப்படி நடப்பது சரியா, சரியில்லையா எனும் விவாதத்திற்கே உளவியலில் இடமில்லை.
இது தொடர்வது சரிதானா?  என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் கேள்வி.
      அதிகமில்லை கனவான்களே! ''அந்தந்த ஆண்டு மாணவர்க்கு, அந்தந்த ஆண்டுக்குரிய பாடங்களில் மட்டுமே தேர்வு நடத்தப் படவேண்டும். இதைமீறி, ஓராண்டு நடத்த வேண்டிய பாடங்களை 3மாதம், 6மாதத்தில் நடத்துவதாகத்தெரிந்தாலோ, அடுத்த வகுப்புக்குரிய பாடங்களை முந்திய ஆண்டிலேயே நடத்தினாலோ, மாணவர் நலன்சார்நத கோடை விடுமுறை மறுக்கப் பட்டாலோ, அந்தக் கல்வி நிறுவனங்கள் மீது தமிழக அரசு - பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ளும்'' என  சுற்றறிக்கை  அனுப்பினால் மட்டும் போதாது. கண்காணிப்பும் தொடர் நடவடிக்கைகளும் தேவை.
------------------------------ ( மீள் பதிவு ) ----------------------------
வெளிட்டமைக்கு நன்றி – தினமணி – (சென்னைப் பதிப்புக் கட்டுரைப் பகுதி கருத்துக்களம்- First Published : 22 April 2013 04:20 AM IST
http://dinamani.com/specials/karuthuk_kalam/2013/04/22/
---------------------------------------------------------------------------

கவிஞர் கந்தர்வன் நூலகத்துக்கு நூல்கள் அனுப்புங்கள்..முத்துநிலவன் வேண்டுகோள்


       நூலக வளர்ச்சிக் குழுக் கூட்டம்

--நன்றி -தினமணி நாளிதழ், The Hindu (Trichy Edition), & தினகரன் நாளிதழ், தீக்கதிர் நாளிதழ்.
புகைப்படம்-நன்றி திரு.சு.மதியழகன் 
----------------------------------------------------- 



















ஆரியபட்டா
வானத்தைக் கிழித்தது,
அணுகுண்டு சோதனை 
பூமியைக் கிழித்தது,
அரைக்கைச் சட்டை
கிழிந்தது மட்டுமே
நெஞ்சில் நிற்கிறது.
பிள்ளை வேண்டாமென்று
கருப்பையைக்கிழித்தார்கள்,
இனி
உணவும் எதற்கென்று
இரைப்பையைக்
கிழிப்பார்கள்,
எல்லாம் கிழிந்த
எங்கள் தேசத்தில்
வாய்கிழிவது மட்டும்
வகைவகையாய் இருக்கும்
      --கவிஞர் கந்தர்வன்
--------------------------------------------- 
30-03-2013 அன்று நூல்கள் சேகரிப்பைத் தொடங்கிவைத்து,  கவிஞர் நா.முத்துநிலவன்  வழங்கிய நூல்கள் பட்டியல்
புதிய நூல்கள் -
பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள்-ஆனைமுத்து-
20 நூல்கள் -       மதிப்பு ரூ.5,800-
காலந்தோறும் பிராமணியம் – அருணன் –
7 நூல்கள்  -        மதிப்பு ரூ.2,000-
பழைய நூல்கள் –  
மூலதனம் – தமிழில் தியாகு -NCBH வெளியீடு      
5 நூல்கள்-         மதிப்பு ரூ.  900-
லெனின் தேர்வு நூல்கள் – 12 பாகங்கள் -         
12 நூல்கள்-         மதிப்பு ரூ.  500-
இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு 
பாரதிபுத்தகாலயம்-  மதிப்பு ரூ.  180-
கம்ப ராமாயணம் -6காண்டம்- வர்த்தமான்ன் -
9நூல்கள் –         மதிப்பு ரூ. 1,000-
காந்தியின் கடைசி 200நாட்கள்
மொழிபெயர்ப்பு      மதிப்பு ரூ.  200-
 ---------------------------------------------------
ஆக மொத்தம் 54 நூல்கள் மதிப்பு ரூ.10,000 +     
---------------------------------------------
இச்செய்தியைப் படிக்கும் யாவரும் “கவிஞர் கந்தர்வன் நூலகம்வளர நூல்கள்வழங்கி உதவலாம். தொடர்பிறகு – நா.முத்துநிலவன்-94431 93293, கவிவர்மன்-94434 20444
---------------------------------------------------