எனது ஆசிரியப்பணியில் ஒரு நல்ல நாள்...நிறைவுப் பகுதி

 25-02-2012, 
எனது ஆசிரியப்பணியில் ஒரு நல்ல நாள்... நிறைவுப் பகுதி
     காலை எழுந்ததும், யார்யாரிடமிருந்து குறுஞ்செய்தி எத்தனை மணிக்கு வந்திருக்கிறது என்று பார்த்தேன்.கோமதி(4.05), தினேஷ்(4.15), கணேஷ்(4.27), அபி(4.37), நாகலட்சுமி(4.40), இணையதுல்லா(4.40), பாண்டி-சித்ரவேலு(இருவரும் அண்ணன்-தம்பிகள் ஒரேவகுப்பு-(4.52)) என்று பட்டியல் நீண்டது. இன்னும் சிலர் 5மணிக்கு மேல் எழுந்து படித்தால் குறுஞ்செய்தி தரவேண்டாம் என்று சொன்னாலும் கேட்பதில்லை.
     நேற்றிரவு, இவர்களோடு நிவேதிதா(10.47) சுவாதி(10.42) தமிழ்ச்செல்வி (10.35)என்று மாணவியர் அளவிற்கு மாணவர்கள் இரவு10மணிக்கு மேல் படிப்பதாகக் குறுஞ்செய்தி ஏதும் சொல்லவில்லை. அவர்கள் 37பேருக்கும் “நன்று. விடிகாலையில் எழுந்து படித்துவிட்டு எழுதிப்பார், இரவு வணக்கம்“ என்று (ஆங்கிலத்தில்தான்) பதில்செய்தி அனுப்பும் போது மணி இரவு 11.12. மணிகண்டன் விடுதியில் இருப்பதால் செய்தி தரமுடியவில்லை என்று வருத்தப் பட்டுக்கொண்டது ஞாபகத்திற்கு வந்தது.(இதற்காகவே அவன் 3நாள் விடுமுறையில் ஊருக்குப் போயிருந்த நாள்களில் இரவு 10மணிக்குப் பிறகும் விடிகாலை 5மணிக்கு முன்னதாகவும் குறுஞ்செய்திகள் அனுப்பியிருந்ததை வகுப்பில்  பாராட்டியிருந்தேன்.)
     பிறகு, நாளை மறுநாளைக்கு மறுநாள் (28.02.2012) புதுக்கோட்டை மாவட்டம் முழுவதுமுள்ள -9,10ஆம்வகுப்பு நடத்தும்- தமிழாசிரியர்களுக்கு அனைவர்க்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் நடத்தவுள்ள 5நாள் பயிற்சி முகாமில் உரையாற்ற, யார்-யாரையெல்லாம் அழைக்கலாம் என்று நேற்றுப் போட்டு வைத்திருந்த திட்ட வரைவை மீண்டும் எடுத்துச் சரிசெய்து, விட்டுப்போனவர்களைத் தொலை பேசியில் பிடித்து, உறுதி செய்து கொண்டு, செய்தித்தாளை மேய உட்காரும் போது காலை மணி 7.
     காலை 10 மணிக்கு பள்ளிக்கூடம் போனேன். நேற்றைய நிகழ்வுப் படி நான் போக வேண்டியதில்லை என்றாலும், பள்ளிக்கு அருகிலேயே என்வீடு என்பதால், விடுமுறை நாளில் வேறு முக்கிய வேலை இல்லை என்றால் பள்ளிக்கூடப் பக்கம் வந்துவிடும் வழக்கப்படிப் போய்விட்டேன். முதல்வர், “நல்லவேளை வந்தீர்கள், கணினிஆசிரியர் மருத்துவவிடுப்பு.“என்று சொல்லி, நாளை(26-02-2012) நடக்கவுள்ள உதவிக் கல்வி அலுவலர் அரசுத் தேர்வுக்கு கொஞ்சம் “தேர்வுஎண் அறை ஒதுக்கீட்டுப் பட்டியல் அடித்துத் தரமுடியுமா?“ என்று கேட்க, அதை அடித்துக் கொடுத்துவிட்டு வெளியே வந்தால் மணி 11.
     ள்ளியில் இருந்து, 10-இ தினேஷை அலைபேசியில்  அழைத்தேன்.
“அய்யா வணக்கம்யா. சொல்லுங்கய்யா
“வணக்கம் பா. எங்கய்யா இருக்கே?
அய்யா வீட்ல ங்கய்யா
“சரி நீ வீட்லயே இரு நா உங்க வீட்டுக்கு வர்ரேன்
என்னங்கய்யா சேதி? எங்கய்யா இருக்கீங்க? நான் வரட்டுங்களாய்யா?
“இல்லப்பா நானே வர்ரேன்என்று பேச்சைத் துண்டித்தேன்.
அவன்வீடு ரெண்டுதெரு தள்ளித்தான் இருக்கிறது என்று அவன் அப்பா மனோகரனும் சொல்லியிருந்தார்.  நான் இரவு நேரத்தில் 10மணிக்கு மேல் 10.30க்குள் பேசுவேன், “அய்யா படிக்கிறேன்யாஎன்ற பதிலைத் தவிர அப்பா அம்மா எடுத்தால் பேசமாட்டேன்“ என்று வகுப்பில் சொல்லி, எல்லாருடைய அலைபேசி எண்ணையும் வாங்கிக்கொண்டு என் எண்ணையும் தந்திருந்தேன். ஒருநாள் இரவு 10.20க்கு நான் தினேஷை அழைக்க, அவன் அப்பா எடுத்து, “அய்யா வணக்கம்யா. அவன் படிக்கிறான் யா. இப்பல்லாம் என்னடா இரவு 10மணிக்கு மேலயும் படிக்கிற மாதிரி இருக்கு?னு கேட்டப்ப தான் யா நீங்க போன் பண்ணுவீங்கன்னு சொன்னான், ரொம்ப நன்றிங்கய்யா. ஒருநாள் வீட்டுக்கு வர்ரதா சொன்னீங்களாம், அவசியம்  வாங்கய்யா, இந்தா இருங்க அவன்கிட்ட குடுக்கிறேன்என்று சொல்லியிருந்த்து நினைவுக்கு வந்தது..
எல்லாருக்கும் பேச முடியாதென்றாலும், வேறுவேறு பத்துப்பேருக்கு அவ்வப்போது இரவு 10மணிக்கு மேல் பேசுவதால் நல்ல பலன் கிடைத்த்து. குறுஞ்செய்தி அனுப்ப நூறு ரூபாய்க்கு ஏற்றினால்தான் மாதம் 3000 பேருக்கு அனுப்பலாமே! இதில் நான்கு பிரிவுப் பத்தாம்வகுப்பின் - 192 பேரையும்  கொஞ்ச நேரம் கூடுதலாகப் படிக்க வைக்க முடிகிறதே!
தினேஷ் வீட்டுக்குப் போனால், அவன் தம்பியும் அம்மாவும் திருவப்புர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அப்பா வெளியில் போய்விட்டாராம். அய்யா வாங்கய்யா இருங்கய்யா டேய் ஓடுரா  பாய் கடையில போயி ஒரு கூல் டிரிங்ஸ் வாங்கிட்டு வாடா என அவன் அம்மா பரபரப்பாக, நான் அன்போடு மறுத்து  விட்டு, ஒரு குவளை தண்ணீர் கொண்டுவரச் சொல்லிக் குடித்துவிட்டு, தினேஷை வெளியில் அழைத்துப் போக அனுமதி கேட்டேன்.
எனது ஆக்டிவா வண்டியில் பின்னால் ஏறிக்கொண்ட தினேஷ் புரிந்து கொண்டான். அய்யா யார் வீட்டுக்கய்யா போறோம்?“ “இணையதுல்லா வீடு“ என்றதும் “இங்க தான்யா ஆசாரி காலனி (விஸ்வகர்மா நகர்)“ என்றான்.
அண்டக்குளம் வழியில் சாலையோரத்தில் இருந்த தேநீர்க்கடை வாசலில் கூட்டித் தள்ளிக்கொண்டிருந்தது நம்ப பத்தாம் வகுப்பு இ கவிதா மாதிரி இருந்தது. தினேஷிடம் கேட்டேன்.
“ஆமாங்கய்யா கவிதா தாங்கய்யா.. இது அவங்க கடைதான்–தினேஷ்.
வண்டியை நிறுத்தி இறங்கும் போதே கையில் இருந்த விளக்குமாற்றை மறைத்துக் கொண்டு, “அய்யா வாங்கய்யாஎன்ற கவிதாவின் முகத்தில் திகைப்பு. அவங்க அப்பா, அம்மா ரெண்டு பேரும் வாசலுக்கு வந்து, கடை பெஞ்சில் உட்காரச் சொன்னார்கள். “நான் கவிதாவோட தமிழய்யா, கவிதா வீட்ல எப்டிப் படிக்குது? எவ்வளவு நேரம் படிக்குது?“ என்றதும் “படிக்குது. பாஸ் பண்ணீரும்ல?“ “என்ன அப்படிக் கேட்டுட்டீங்க? 400க்கு மேல வாங்கும். மேல நல்லா படிக்க வையுங்கஎன்று சொல்லிக் கிளம்பப் போக, “காபி சாப்பிடுங்கய்யா“ என்று போர்ன் விட்டாவை நீட்டினார். அந்தக் கடையில் அது 10ரூபாய் இருக்கும்ல என்று நினைத்துக் கொண்டே தயக்கத்துடன் வாங்கி பாதியை தினேஷிற்குக் கொடுக்கக் குவளை கேட்டேன். அதை கவனிக்காத மாதிரி கவிதா “அப்பா அவன் அய்யா கூட வந்திருக்கான் என் கிளாஸ்தான்“ என்று மெதுவாகச் சொல்ல, அதற்குள் அவனுக்குப் போட்ட தேநீரை கவிதாவிடமே கொடுத்துக் கொடுக்கச் சொன்னார் அவர்.
“இன்னும் 36நாள்தான்“ என்று அரசுப் பொதுத்தேர்வுக்கு மீதம் உள்ள நாள்களைச் சொல்லி, நல்லாப் படிக்கச் சொல்லுங்க என்று கிளம்பினேன். கவிதா முகத்தில் மகிழ்ச்சியும் பெருமையும். அதுதானே எனக்கு வேண்டும்!
அடுத்த வீதிக்கு அடுத்த திருப்பத்தில் திரும்பிக் கடைசியில் இருந்த இணையதுல்லா வீட்டு வாசலில் வண்டிய்யை நிறுத்தி இருவரும் இறங்கினோம். ஒற்றைக் குடிசை. வீட்டில் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அப்பா அம்மா இரண்டு பேரும் வேலைக்குப் போய் விட்டார்களாம். இவன்தான் சமைத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். அவன் என்னை உள்ளே அழைக்காமலே நான் போய்விட்டேன்.
அவன் எழுத்து மணிமணியாய் இருக்கும். எல்லாப் பாட வகுப்பிலும் ஆசிரியர்கள் தருவதைக் கரும்பலகையில் எழுதிப் போடுவது அவன்தானே! நான் கேட்காமலே ஒரு சொம்பு தண்ணீர் கொண்டுவந்து தந்தான் இணையா. அப்போதுதான் கழுவிச் சுத்தமாக்க் கொண்டுவந்திருந்தான். நல்ல பய!
அலைபேசி அழைத்தது. சித்ரா டீச்சர். ஆர்எம்எஸ்ஏ யில் தமிழகச் சுற்றுலா செல்லக் கடைசி நேரத்தில் ஒருசிலர் வராததால், கடைசி நேர வாய்ப்பை இரவு 8மணிக்கு என்னிடம் அவர்கள் சொல்ல, நான் இவர்களுக்குச் சொல்ல, சித்ரா போயிருந்தார்கள். இதனால், எனக்கு நன்றி சொல்ல, என்னிடம் சொன்னது சரி. நம் பள்ளி முதல்வரிடம் சொல்லி என்னைப் போட்டுக் கொடுத்துடாதீங்க என்று சிரித்துக் கொண்டே சொல்லி வைத்தேன். இப்படி நான் சொல்லி அனுப்பி வைத்த ஓவிய ஆசிரியர் புகழேந்தியைக் காலையிலிருந்து நான் தொடர்பு கொள்ள முயன்றும் அவர் எடுக்கவில்லை!
ணையதுல்லா,தினேஷ் இருவரையும் ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டை நகர எல்லையில் வந்து, தஞ்சைச் சாலையில் வண்டியைத் திருப்பினேன்.
“அய்யா முள்ளுர் தானே போறோம்?“
“ஆமாம்பா, பத்தாம்ப்பு பிள்ளைங்க யார் யார் வீடு அங்க இருக்கு?“
“நிறைய பசங்க இருக்காங்கய்யா... ஆனா நாங்க அங்கல்லாம் போனது இல்லங்கய்யா...“ “ஓகோ! அவுங்க தாழ்த்தப்பட்டவுங்க..ங்கிறதாலயா?“ “அப்படில்லாம் ஒன்னும் இல்லய்யா..“ இணையதுல்லா சொல்ல, தினேஷ் இதற்கு ஒன்றும் சொல்லவில்லை. “அய்யாகூட போறதுனால அப்பா ஏதும் சொல்லமாட்டாங்க இல்லடா“
எங்கள் பள்ளியிலிருந்து தஞ்சைச் சாலையில் 4கி.மீ.சென்று இச்சடிக்கு முன்னாலேயே சடக்கென்று திரும்பியது முள்ளுர். கப்பிச்சாலையில் ஒரு கி.மீ. சென்றதும் முன்பு இதேபோல -4வருடங்களுக்கு- முன் பத்தாம் வகுப்பு மாணவர்களைப் பார்ப்பதற்காகவும், அதற்கு முன் 1990இல் அறிவொளி இய்க்கக் கலை நிகழ்ச்சிக்காகவும் இங்கு வந்தது நினைவுக்கு வந்தது.
எங்களைப் பார்த்துவிட்ட எங்கள் பள்ளியிலேயே பதினோராம் வகுப்புப் படிக்கும் மாணவர் சிலர் – மதியம் தேர்வுக்காக வந்துகொண்டிருந்தவர்கள் – எங்களைப் பார்த்த்தும் நின்று “அய்யா என்னங்கய்யா இங்க?“ என்றார்கள். சிலர் பார்த்துக்கொண்டே வண்டியை வேகவேகமாக மிதித்துப் பறந்தார்கள்....!
“சும்மா தாம்பா... பத்தாம்ப்பு படிக்கிற பசங்க-புள்ளைங்க வீடுகளுக்கு பரிச்சைக்குள்ள எப்பவாச்சும் வருவேன்னு சொல்லியிருந்தேன்... இன்னைக்கு நேரம் கிடைச்சுது...என்றதும், யார்யார் வீடு எந்தெந்தப்பக்கம் என்று அடையாளம் சொன்னது ஒன்றும் புரியவில்லை என்றாலும் கேட்டுக்கொண்டு, கிளம்பினோம். “கோவில் மடத்துல கொஞ்சம் பசங்க உக்காந்து கல்லாங்காய் ஆடிக்கிட்டிருக்காய்ங்க... இப்பப் போனா படிச்சுரலாம்“ என்று சொல்லியவாறு சில 11ஆம் வகுப்பு மிதிவண்டிகள் பறந்தன...!
கோவில் முக்கத்தில் திரும்பும்போது, எதிரே வந்த விஜயலட்சுமி (11ஆம் வகுப்பு) நின்று, “வணங்கங்கய்யா... என்னங்கய்யா... இவ்ளோ தூரம்?என்று கேட்டு விட்டு, “அய்யா வீட்டுக்கு வாங்கய்யா... அப்பா உங்கள பாக்கணும்னு சொன்னாங்கய்யா... வீட்டுக்கு வாங்கய்யா... இல்லன்னா இங்க எங்க போறீங்கன்னு சொல்லுங்க நான் அப்பாவ அங்கக் கூட்டியாறேன்என்று சொல்லவும், “இல்லப்பா இன்னொரு நாள் வர்ரேன்.. அப்பா கிட்ட சொல்லு“ அந்த மாணவி, நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தில் (அண்டர்-19) மாநில அளவில் 2,3ஆம் இடங்களை சில முறை வென்று வந்திருந்தார்! ஒருமுறை என்னைப் பேச அழைத்திருந்த புதுகை-ரோட்டரி சங்கத்தினரிடம் சொல்லி இவரோடு பத்துப்பேருக்கு “ஸ்போர்ட்ஸ் ஷீவாங்கித் தர ஏற்பாடு செய்திருந்தேன்...
கோவில் முக்கத்தில் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் செய்தி அந்தச் சின்னக் கிராமத்தில் உடனடியாகப் பரவி விட்டது போல... எங்கள் பள்ளியில் படிக்கும் 20,30 பயல்கள் வந்து கூடிவிட்டார்கள்... வண்டியைத் தள்ளிக் கொண்டு ஊர்வலம் போவது போலப் போக நேர்ந்தது சங்கடமாக இருந்தது.
மரத்தடியில் வண்டியை நிறுத்தினேன்.
பத்தாம் வகுப்புப் படிக்கும் அந்த ஊர் மாணவர்களை மட்டும் இருக்கச் சொல்லிவிட்டு மற்ற -6,7,8.9 வகுப்புகளில் படிக்கும் பசங்களை அவரவர் வீடுகளுக்குப் போகச் சொன்னால் அவர்கள் போனால் தானே...?
சரி விஷ்ணு உங்க வீடு எங்கடா“ 
“ந்தா அதுதாங்கய்யா வாங்கய்யா“
“சரி நீங்கள்ளாம் போங்க நாங்க போய்க்கிறோம்“ யாரும் போகவில்லை
விஷ்ணுவின் அம்மா 1989-90இல் புதுக்கோட்டைமாவட்ட அறிவொளிக் கலைக்குழுவில் இருந்தவர். பள்ளியில் இவனைச் சேர்க்க வந்தபோதே சொல்லியிருந்தார்.  அவர்கள் வீட்டுக்கு முதலில் போனோம். வீட்டுக்குள் ஓடி சட்டையைப் போட்டுக்கொண்டு சிட்டாய்ப பறந்து வெளியில் வந்த விஷ்ணு சைக்கிளை எடுக்க ஓடினான். நான் புரிந்து கொண்டு, “அம்மா அதெல்லாம் ஒன்னும் வேணாம். அவனக் கூப்பிடுங்க எப்டிப் படிக்கிறான்?“ “நீங்க தான் சொல்லணும்... வீட்ல படிச்சிக்கிட்டேதான் இருக்கான்“ “விஷணு நல்லாப் படிக்கிறான்மா  அவன்தானே ரெண்டாவது மார்க்? முதல்மார்க்கே எடுக்கலாம் இன்னும் நல்லாப் படிக்கச் சொல்லுங்க அதச் சொல்லிட்டுப் போகத்தானே இப்ப வந்தேன். சங்கீதா நல்லாப் படிக்குதா?“ அதற்குள் விஷ்ணுவின் சித்தி எல்லாருக்கும் காப்பி போட்டு எடுத்துக்கொண்டு வந்துவிட்டது.
அடுத்தடுத்து 10ஆ ரெங்கராஜ், 10அ கோகிலா வீடுகளில் இல்லை. காட்டு வேலைக்குப் போய்விட்டார்களாம்... அவர்களின் சின்னத்தம்பி தங்கை விவரம் சொன்னார்கள். தூண்டிலில் மாட்டிய மீனைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு சிங்கவேட்டைக்குப் போய்வரும் ராஜா மாதிரி நடை அவர்களின் பெருமித்த்தில் தெரிந்த்து. எல்லாம் பெர்முடாசில் திரிந்தார்கள்- சட்டையின்றி! கிராமத்துப் பசங்களிடம் கூட, கைலி இருந்த இடத்தை இப்போது மெல்ல மெல்ல பெர்முடாஸ் பிடித்து விட்டது புரிந்தது.  
“சார் அதான் சார் 10 சி அபி வீடு“ ஒரு பயல் கத்தினான். ஊர்வலம் அந்தப்பக்கம் திரும்பியதும் கடையில் இருந்தவர்கள் ஒருமாதிரி பார்த்தார்கள். வாசலில் நைட்டியைப் போட்டுக்கொண்டு ஒரு சிறுமி பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தவள் கும்பலைப் பார்த்து அதில் என்னைப் பார்த்த்தும் கையைக் கழுவி உதறியவாறே உள்ளே ஓடினாள். போன வேகத்தில் –மேலே ஒரு துண்டைப் போட்டுக்கொண்டு- வெளியேவந்து வாய்நிறைய “அய்யா வாங்கய்யா“ என்றதும் எனக்கு ஒரே சிரிப்பு “அட நம்ம அபியாடா இது?“
கூரைக் கொட்டகை வாசலில் ரெண்டுபக்கமும் வாசமலர்ச் செடிகள்! நான் ஒன்றும் சொல்லாமலே ஊர்வலம் கொஞ்சம் எட்டி நின்று கொண்டது! இணையதுல்லா, தினேஷ் இருவரையும் மட்டும் அழைத்துக் கொண்டு  போனேன். “வீட்ல யாருப்பா இருக்கா?“ “நானும் அக்காவும் தான்யா இருக்கோம் அம்மா வேலைக்குப் போயிருக்காங்க..“ என்று சொல்லும் போதே அபி அக்கா வெளியில் வந்து “அய்யா வாங்கய்யா...“ என்றது. அதுவும் எங்கள் பள்ளியில்தான் பன்னிரண்டாம் வகுப்பு! “நீ எப்படிப் படிக்கிற? அம்மா பள்ளிக்கூடத்துக்கு வந்தப்ப நீதான் அபி மாதிரிப் படிக்கிறதில்லன்னு வருத்தமாச் சொன்னாங்க“ என்றதும் அருகில் நின்றிருந்த வால் ஒன்று
“சார்...அபிமாதிரி இது ரேங்க் வாங்காது...ஆனா பாஸ் பண்ணீரும்“ “இதுயாரு,“
“என் தம்பிங்கய்யா.. ஏழாம்ப்பு படிக்கிறான்... ரொம்ப நல்லாப் படிப்பான்“
அபி, அவனிடம் காசுகொடுத்து கூல்டிரிங்க்ஸ் வாங்கிவரச் சொல்ல  -
“நான்தான் குடிக்கமாட்டேன்னு தெரியும்ல ஏன்பா இதெல்லாம்.. ஒருடம்ளர் தண்ணி கொடு“ என “அய்யா நீங்க கோக், பெப்சி தான குடிக்கமாட்டேன் னு சொல்வீங்க இது நம்ம ஊரு கலரு சும்மா குடிங்க... முதன் முதலா எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க...“ இவ்வளவு விவரத்தோடு அபி சொல்லவும் என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.. வீட்டிலிருந்து ஒரு குவளை எடுத்து வரச்சொல்லி அதில் பாதியை ஊற்றி நான் எடுத்துக் கொண்டு, மீதியை அபி தம்பியிடமே கொடுத்தேன் தினேஷ் இணையா இருவரும் ஆளுக்கொரு கூல் டிரிங்ஸ் பாட்டிலை அண்ணாத்திக் கொண்டிருந்தார்கள்!
அபி அக்காவை அழைத்து, “அப்பா கிட்ட சொல்லுப்பா அபி நல்லா படிக்கும் நல்லா படிக்க வைக்கணும்னு நா சொன்னதா சொல்லு என்ன?“ என்று சொன்னதோடு அபி கையை உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு, “டாக்டரம்மா வரட்டுமா?“ என, “இருங்கய்யா அம்மா வந்துருவாங்க மதியானம் சாப்பிட்டு போகலாம்யா“ “ஆமா... உங்க ஊர்ல டீ காப்பி கலரு எல்லாம் அடுத்தடுத்து குடிச்சிருக்கேன் மதியச்சாப்பாடே முடியாது வரட்டா..“
அடுத்து கனகராஜ், நாகலட்சுமி, மாரிமுத்து, வீடுகளில் அப்பா அம்மா
இருவருமே காட்டு வேலைகளுக்குப் போய்விட இவர்கள் படித்துக் கொண்டிருந்த்தாகவும் நான் வந்தது கேள்விப்பட்டு வந்ததாகவும் சொல்ல அவர்களின் வீடுகளின் திண்ணைகளில் ஒரு நிமிடமாவது உட்கார்ந்துவிட்டு வந்தேன். இருந்த பெரியமனிதர்கள் தான் என் பின்னால் சுற்றுகிறார்களே!
     “அய்யா வினோதாவித்யா (அக்கா-தங்கை) வீடு அந்தக் கம்மாக்கரைல தான்யா இப்டியே குறுக்க போயிடலாம்..“  மணியைப் பார்த்தேன் 12.30
நாலைந்து சைக்கிள்கள் இதற்குள் தயாராகிவிட்டன...
அபி தம்பி குரங்கு பெடலுடன் நின்று கொண்டிருந்தான்.  
“நீ அடுத்த வருசம் எட்டாம்ப்புக்கு எங்க பள்ளிக்குடத்துக்கு வந்துரு என்ன?“ “இங்கதான் ஒம்பதாம்ப்பு வந்திருச்சே... டீசி யெல்லாம் தரமாட்டாங்களாம்“
“சரி சரி இங்கயே நல்லா படி... பன்னண்டாம்ப்புக்கு மாடல் ஸ்கூல் வரலாம்“ “நா அங்க தான் பத்தாம்ப்புக்கே வரலாம்னு நினைச்சேன்...“
அட என்னபேச்சு பேசுறான் இவன் என  நான் அவனைப் பார்க்க --
“இல்ல நா பத்தாம்ப்பு படிக்கும்போது நீங்க ரிட்டையராகிடுவீங்களாம்ல?
அபி சொன்னிச்சு அதான் நா இங்கயே படிச்சுக்கிறேன்னு சொல்ட்டேன்“
சைக்கிள் பறந்தது குரங்கு பெடலில்தான் என்ன வேகம்!
இந்தா பக்கத்துலதான்...பக்கத்துலதான் என்று சொல்லியே குளத்துக்கரை, வயக்காட்டு நடுவில் கிடந்த பாதை, கிராமத்திலிருந்து தப்பித்து ஓடிய வண்டிப் பாதை என எல்லா வழியிலும் பசங்களின் சைக்கிள்கள் வழிகாட்ட எங்கள் வண்டியும் பின் தொடர்நதது...  பின்னால் இருந்த இணையதுல்லா சொன்னான்... “அய்யா இந்த ரோட்டுல எல்லாம் போனா பஞ்சர்தான் இங்க பஞ்சர் பாக்க்க் கூட கடை கிடையாது... புதுக்கோட்டையிலர்நதுதான் ஆள் வரணும்...“ “டேய் சும்மாவாடா அதெல்லாம் ஒன்னும்ஆகாது“ ஊர்ப்பாசத்தில் சைக்கிளில் வந்த பசங்க சொல்லிக்கொண்டே முன்னால் வழிகாட்டினார்கள்...
“தம்பி இது என்ன ஊர்ரா?“
அய்யா இதாங்கய்யா பழைய ராசாப்பட்டி நம்ம கிளாஸ் வினோதா வித்யா ரெண்டு பேரு அப்பறம் அருண், கார்த்தி, சுந்தராம்பாள், சீனி, அப்பறம் அக்கா கல்யாணம்னு ஒரு வாரமா வரலயில்ல அந்த ரஞ்சனி எல்லாம் இந்தப் பக்கந்தாய்யா“
அதற்குள் சின்ன சைக்கிள் ஊர்வலம் போறதைப் பார்த்துட்டு ஊர்ப்பெரியவர் ஒருத்தர் நிறுத்தி விவரம் கேட்டார். சொல்லிவிட்டுப் புறப்பட்டோம்.
“எல சார ஏண்டா வயக்காட்டு ஒத்தயடிப் பாதையில போட்டு இழுக்கிறீங்க இங்கனயே வண்டிய நிப்பாட்டிட்டு குறுக்க நடந்தா டக்குனு போயிறலாம்ல?“
பசங்க மௌனமாக இருக்க நான்தான் தொடர்ந்தேன்... “இல்லிங்க அய்யா அப்படியே போனம்னா புதுராசாப்பட்டி போயி அண்டக்குளம் ரோட்டப் புடுச்சி புதுக்கோட்டை போயிரலாம்ல...“ “ஓகோ அப்பிடியின்னா போங்க“
     போகும் வழியில் வந்த ஒரு அம்மாவைக் காட்டி ரகசியமாக என்னிடம் வந்த பயக “இதான்யா ரஞ்சனி அம்மா“ நான் திரும்பி அவர்களை நிறுத்தி அறிமுகம் செய்துகொண்டு, “ஏம்மா ரஞ்சனி அக்கா கல்யாணம்தான் முடிஞ்சிருச்சில்ல பரிச்சை நேரத்துல லீவு எடுக்கச் சொல்லாதிங்கம்மா“ என, “ரஞ்சனி இனிமே பள்ளிக்குடம்லாம் வரமாட்டா நீங்க போங்க“ என்று வெடுக் கென்று சொல்லிவிட்டு வேகமாகப் போய்விட்டது... நான் திகைத்தேன். கிராம மக்களிடம் பிரச்சினைகளை நாம் புரிந்துகொண்டு உதவி செய்ய முடியாத நிலையில் அவர்களிடம் என்னபேசி எப்படிப் புரிய வைக்க...?
புளிய மரத்து நிழலில் வண்டியை நிறுத்திவிட்டு மணி பார்த்தேன் 1.00! திரும்பும்போதே வினோதா–வித்யாவின் (இரட்டையர்) அப்பா ஓடிவந்தார். “அய்யா வாங்கய்யா உங்களப் பத்தித்தான்யா புள்ளய்ங்க சொல்லிக்கிட்டே இருக்கும் டீவி யில நீங்க பேசுறத எல்லாருக்கும் போன் போட்டு எங்க அய்யா பேசுறாங்கனு சொல்லி வச்சிப் பாக்கச் சொல்லும் ரொம்பச் சந்தோசம்யா.“ என்னைப பேச விடாமல் வீட்டிலிருந்தவர்கள் எல்லாரும் பேசிக்கொண்டே இருந்தார்கள். “எப்படிய்யா இதுல வந்திங்க... ரோடு போடுறதா சொல்லிச் சொல்லியே ஏமாத்திட்டு இருக்காங்கய்யா.. இதுலதான் எங்க புள்ளைக நடந்தே வந்து ரோட்டப் புடுச்சி பள்ளிக்குடம் வருதுங்கய்யா நேரமாயிட்டா சைக்கிள்ல நான் கொணாந்து விடணும்யா அடுத்த வருசம் பதினொன்னாம் வகுப்புக்கு சைக்கிள் தருவீங்களாம்...”  என்னால் ஒன்றும் பேச முடியாமல் போனது.
ஓட்டு வீட்டில ஒருபக்கம் கூரை போட்டிருந்தது.
எல்லாருக்கும் நீர்மோர் வந்தது. எட்டிநின்ற பசங்களிடம் ஒரே சத்தம்.
“மாங்கா பறிச்சுத் தரவாய்யா கொண்டு போறீங்களா?“ என்ற ஒரு பாட்டியின் அன்பை மெதுவாக மறுத்துவிட்டு  பிள்ளைகளை அழைத்தேன் வினோதா-வித்யா இருவரும் எனக்குமட்டும் போட்டிருந்த நாற்காலிப் பக்கத்தில் வந்து எனக்கு மட்டும் சிலவர் சொம்பில் தந்த மோரில் இஞ்சியும் கறிவேப்பிலையும் கிடந்தது! அவர்கள் இருவரும் ஒரு வார்தையும் பேசவில்லை. “என்ன உங்க வீட்டுக்கு வந்திருக்கேன்... எல்லாரும் பேசுறாங்க நீங்க ரெண்டு பேரும் ஒன்னுமே பேசல? நல்லாப் படிக்கிறீங்களாடா“ 
வித்யா மெதுவாகச் சொன்னது “ரொம்ப நன்றிங்கய்யா
எதுக்கு? எனக்கு எதுவும் சொல்லத்தெரியவில்லை. எந்த மேடையிலும் தடுமாறாத எனக்கு வார்த்தைகள் தடுமாறின.
இரவுமுழுவதும் தூக்கமில்லை.
ஒருமடங்கு அன்பு காட்டுவோரிடம் பல மடங்கு அன்பைப் பொழியும் கள்ளமில்லாப் பிள்ளைகள், கிராமத்து மக்களின் தீராத பிரச்சினைகளின் மத்தியிலும் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று வந்திருக்கும் விழிப்புணர்வு! மேற்படிப்புக்கு வழியில்லாத தவிப்பு ...
வருடம் தோறும் பத்தாம் வகுப்புப் பிள்ளைகளின் வீடுகளுக்கு நானும் சகஆசிரியர்களும் சென்றுவருவது வழக்கம்தான் என்றாலும் இந்த ஆண்டு நான்மட்டும் சென்றது எனக்கு மறக்க முடியாத வாழ்க்கைப் பாடமாகவே இருந்தது. பார்த்தது என்னவோ பத்து-இருபது குழந்தைகளைத்தான் ஆனால் படித்த்தென்னவோ பல புத்தகங்களில் கிடைக்காத வாழ்க்கைப் பாடம்!
--------------------------------------------------  

எனது ஆசிரியப் பணியில் ஒரு நல்ல நாள்!


இன்று 25-02-2012 
எனது ஆசிரியப் பணியில் ஒரு நல்ல நாள்!
     தொடர்ச்சியாகப் பெரும்பாலான சனிக்கிழமைகள் பள்ளி நாளாகவே கடந்து போனதில் நம் மாணவர்களுடன் ஆசிரியர்களும் பெரிதும் வருந்தியிருக்கின்றனர் என்பது நேற்றுத்தான் எனக்குத் தெரிந்தது!(“எந்த வேலையை எடுத்துக்கிட்டாலும் “மாங்கு மாங்கு“ன்னு அவன் பாட்டுக்கு மாடுமாதிரி வேலை பார்ப்பான்“என்ற என்மீதான குற்றச்சாட்டு சரிதான் போல! மற்றவர்களின் கருத்தைக் கேட்டே செய்வதாக நினைத்துக்கொள்ளும் நினைப்பு வேறு!)
      நேற்று மதிய உணவுக்குப் பின், மெதுவாக எனது –துணை முதல்வர்- மேசையின் முன்னால் வந்து உட்கார்ந்தனர் எமது –புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி- ஆசிரியர்கள் மூவர். நான்கு பிரிவுப் பத்தாம் வகுப்புகளில், மூன்று வகுப்பாசிரியர்கள் அவர்கள். ஆங்கிலவழி வகுப்பாசிரியர் லலிதா வரவில்லையே என அந்தப் பக்கம் எட்டிப்பார்த்தேன் அவர் எப்போது பார்த்தாலும் மாணவர்களுடனேயே இருப்பார். இப்போதும் அப்படித்தான் போல! சனிக்கிழமைகளில் மட்டுமல்லாமல், காலை 8.30-9.30 சிறப்பு வகுப்புகளோடு, அன்று யாராவது ஆசிரியர்கள் விடுப்பு என்றால் அந்த வகுப்பையும் சேர்த்து எடுத்துக் கொண்டு சலிக்காமல் நடத்தும் அந்தச் சகோதரிகள் மேல் எனக்கு எப்போதுமே நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு.
     “சொல்லுங்கம்மா என்ன எல்லாரும் சேர்நத மாதிரி வந்திருக்கீங்க...! என்றேன்.
    அறிவியல் ஆசிரியரும் பத்து அ பிரிவு வகுப்பாசிரியருமான கே.எஸ்(சுசிலா) டீச்சர்தான் சொல்ல ஆரம்பித்தார்கள்... “இல்லங்கய்யா.. காலையில பசங்க உங்க கிட்ட “நாளைக்கு (சனிக்கிழமை) சிறப்புவகுப்பு உண்டுங்களாய்யா?“னு கேட்டப்ப “ஆமாமா“ன்னு சொன்னீங்களாம்.. அவிங்க கேக்க வந்தது பள்ளிக்கூடம் உண்டாங்கிறத்ததான்.. முன் முழு ஆண்டுத் தேர்வுக்கு தேர்வுஉள்ள வகுப்பு மாணவர்கள் மட்டும் வந்தாப் போதும்னு சுற்றறிக்கை வந்துதுல்ல..?நாளை பத்தாம்வகுப்புக்குத் தேர்வுஇல்ல..அதான் வரணுமா னு...?
     “பத்தாம் வகுப்பு மாணவ-மாணவியர் மட்டும் தேர்வு இல்லாவிட்டாலும் வகுப்புக்கு வரணும்“னு சுற்றறிக்கை –கட்டம்கட்டி- எழுதி, முதல்வரிடம் கையெழுத்து வாங்கி அனுப்பி வைத்ததே நான்தான் என்பது என் கையெழுத்திலேயே அவர்களுக்குத் தெரிந்திருந்தது புரிந்தது!
     இப்போது புரிந்து விட்டது. தமிழாசிரியர் கலா மெதுவான சிரிப்போடு என்னைப் பார்த்தது நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்பதைப் புரிந்துகொண்டது போல இருந்தது! அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டுதான் வந்திருப்பார்கள் போல! இது புரிந்தும் புரியாதது போல, “இல்லம்மா... விட்டா, நாளைக்குத் திருவப்புர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா... ஊரெல்லாம் கூடிரும்... அங்க போயிட்டு விடியவிடிய நின்னு கரகாட்டத்த வேடிக்கை பார்த்துட்டு திங்கக்கிழமை இங்கவந்து பரிச்சைய எப்படி எழுதுவாங்கெ? அதான் யோசிக்கிறேன் எதுக்கும் முதல்வர் கிட்ட கேட்டுடுங்களேன்“ என்று பட்டும் படாமலும் சொல்லிப் பார்த்தேன்.
     “அது தெரியாமத்தான் உங்ககிட்ட வந்தமாக்கும்“ என்று உடன் பதில் வந்தது!
      அனேகமாக எல்லா சனிக்கிழமையும் வேலை பார்த்தாகி விட்டதும் அதில் பெண்கள் படும் சிரமமும் கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. வேலைக்குப் போகும் பெண்களுக்கு “இரண்டு ஷிப்ட் வேலை“ என்ற கந்தர்வனின் சிறுகதை நினைவுக்கு வந்தது.
      பிறகு முதல்வரிடம் பேசி நாளைவரவேண்டாம் என்றதும் எல்லாருக்கும் மகிழ்ச்சி.
      ஆனால், நான் ஒரு திட்டத்தோடுதான் இதற்கு ஒப்புக் கொண்டிருந்தேன் என்பது என் மாணவப் பிள்ளைகளுக்கு இன்றுதான் தெரிந்ததாம்! இன்று -25-02-2012- எனது 32 ஆண்டுக்கால ஆசிரியப் பணியில் எனக்கு மட்டுமல்ல,  என் பிள்ளைகளுக்கும் தம் வாழ்வில் மறக்க முடியாத நாள்களில் ஒன்றாகப் போகிறது என்பது நேற்றே எனக்குத் தெரியும்!
அது நல்ல படியாக இன்று நடந்தது என்பதில்தான் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி!
அதுதான் என்ன...? உடனே சொல்லிவிட்டால் எப்படி? என் மாணவ-மாணவிகளைப் போல ஒரு நாள் பொறுத்திருங்களேன்...! நாளை விரிவாகச் சொல்கிறேன். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவர்கள் முகத்தில்தான் என்ன ஒரு மகிழ்ச்சி! என்னையும் அவர்கள் அன்பில் திக்குமுக்காட வைத்த இந்தப் பணியில் நல்லாசிரியர் விருது என்னங்க பெரிய விருது...   
இதுமாதிரி ஒரு அனுபவம் போதும் போங்க...!  
நாளை பார்ப்போம்.
-------------------------------------------------------------------------  

எனது புதிய மரபுகள் கவிதைத் தொகுப்பிலிருந்து...

எனது புதிய மரபுகள் கவிதைத் தொகுப்பிலிருந்து... கவிதை எண் - 4

          எல்லாச் சாமியும் ஒண்ணு தான்!

ஒண்ணை ஒண்ணு இழுத்துக்கிட்டு
                  உருண்டக் கிரகம் போகுது - இதை
உணராத மனுசக் கூட்டம்
                   உருண்டு பெரண்டு சாகுது!

ரம்சான் பண்டிகை பிரியாணி
                  ரத்தினம் வீடு போகுது! – அந்த
ராமு வீட்டுப் பொங்கச் சோறு
                   ராவுத்தர் வீடு போகுது!


சாகுலோட சங்கரனும்
                 ஜானும் போறான் பாருங்க – ஆகா
சாகும் வரைக்கும் இப்படியே,
                 சார்ந்திருந்தா போறும்ங்க!

கையக் கோத்து திரியிது பார்
                 கள்ளமில்லாப் பிள்ளைக – பின்னே
பையப் பைய பிரிச்சு வச்ச
                 பாவிகயார் சொல்லுங்க? (ஒண்ணை…)

நாகூர் ஆண்டவர் மண்டபத்துல
                  நல்லக்கண்ணு கிடக்குது – சீக்கு
போகணுமின்னு வேண்டி அந்த
                  வேண்டுதலும் நடக்குது!

அம்மைப் பாத்த கொடுமை போக
                 அவுலுகலாம் பொஞ்சாதி – மாரி
அம்மனுக்கு நேந்துக் கிட்டு
                 உப்புக்கடன் செஞ்சாக! (ஒண்ணை…)

இருக்கும் நொம்பலம் தாங்கலய்யா
                 எந்தச் சாமி தீர்த்தது? – அட
எது வாச்சும் செய்யட்டுமேனு
                 ல்லாத்தையும் பார்த்தது!

ஏழ பாழ சனங்களுக்கு
                எல்லாச்சாமியும் ஒண்ணுதான் - இதுல
ஏற்றத் தாழ்வ சொல்லிக் கெடுத்தது
               ஏவன்டா? அவன் மண்ணுதான்.!(ஒண்ணை…)

(1993 - “புதிய மரபுகள்” -- சிவகங்கை - மீரா வின் “அன்னம்“ பதிப்பக வெளியீடு)

நம்ம வலைப்பக்கதிற்கு இன்னிக்கு முதல் பர்த் டே ங்கோ...!


இன்றுடன் ஓராண்டு!  நமது வலைப் பக்கத்திற்கு ஒரு வயது ஆகிவிட்டது!

இல்ல இல்ல... அதெல்லாம் வேண்டாம்...
ஒரு வலைப்பக்கத்திற்கு ஒரு வயது முடிந்து இரண்டாம் வயது தொடங்குவதற்கு “பிறந்த நாள் கேக் வெட்டி வாழ்த்து“ சொல்வது நல்லாயிருக்காதுங்க... சரி விடுங்க...

இருந்தாலும் பாருங்க...

பதிவுகள் - 76
பின்னூட்டம் - 172
 “பின்தொடர்பவர்” எண்ணிக்கை - 47.
இதுவரை “எட்டிப்பார்த்தவர்கள்” - 1637
இன்று வரை நமது வலை விவரம் பார்த்தவர்கள் - 570
(இது மட்டும் எப்படி குறையுது!?
எட்டிப் பார்த்தபின் “வெவரம்”  பார்த்துட்டு
“ப்ச் அடப்போடா”ன்னு போனவங்களா இருக்குமோ?)
இன்று வரை படிக்கப்பட்ட பக்கங்கள் - 8492

இது உண்மையிலேயே நல்ல எண்ணிக்கைதானுங்களே?

வள்ளலார் -
 “கடைவிரித்தேன், கொள்வாரில்லை கட்டிக்கொண்டேன்” என்று சொன்னதாகச் சொல்வார்கள் (ஆனால் அவரது எழுத்து எங்கிலும் இந்த வரிகள் இல்லை என்று வள்ளலார் ஆய்வாளர்கள் அடித்துச் சொல்கிறார்கள். ஏதோ வள்ளலாரால் இந்த வரியும் பிரபலமாகிவிட்டது!)

பாரதியோ -
தான்சும்மா எழுதிய “பாக்ஸ் வித் த கோல்டன் டெய்ல்” எனும் ஆங்கிலப் படைப்புக்கு வந்த வரவேற்பைப் பார்த்து அதை மீண்டும் அச்சிடவேண்டும் என்ற நண்பர்களிடம் எரிச்சலாகி, “போகச் சொல்லு விடலைப் பசங்களை, நான் என் உயிரையே உருக்கி எழுதி வைத்திருக்கும் தமிழ் எழுத்துகளைப் படிக்கமாட்டாமல் ஆங்கிலத்தில் இருக்கிறது என்பதற்காகவே இதை வாங்கும் இந்த அடிமைப் புத்தியை எங்கு போய்ச் சொல்ல...!” என்று ஆத்தாத்துப் போனதையெல்லாம் நினைக்கும் போது நம்ம கதை பரவாயில்ல போல இல்ல? (இல்லையோ?...சரி விடுங்க பாரதி எங்கே நாம எங்கே...?!!)

ஒரு நடிகையைப் பற்றி எழுதாமல், ஒரு நடிகனைப் படம் போட்டு விளக்காமல் (மாத்திச் சொல்லிட்டேனா?) இந்த அளவுக்கு இளைஞர்கள்(?) நம்மை கவனிக்கிறார்கள் என்றால்
நாமும் ஏதோ செய்து கொண்டுதான் இருக்கிறோம்
நம் மக்களும் இதற்குச் செவி (கண்?) கொடுக்கிறார்கள் என்று ஆறுதல் படலாம்தானோ? படலாம்... படுவோம்...!

அன்புடன்,
நா.முத்து நிலவன்,
புதுக்கோட்டை
19-02-2012

எனது புதிய கவிதை - என்னைக் கைது செய்யுங்கள் அரசே!

கைது செய்யுங்கள்! அரசே!
என்னைக் கைது செய்யுங்கள்!

ஆசிரியரை வகுப்பறையில்
குத்திக் கொன்ற வழக்கில் –
அரசே! என்னைக் கைது செய்யுங்கள்!

நான் என்ன செய்தேன் என்றா
கேட்கிறீர்கள்?
மௌனமாக இருந்தேனே?
மௌனம் சம்மதத்திற்கு அறிகுறிதானே?

வாழ்க்கையைக் கற்றுக்கொடுக்க
வழியில்லாமல்,
மனப்பாடம் செய்யும்
மதிப்பெண்ணுக்கே மதிப்புக் கொடுத்து,
அவன் நெஞ்சை
நஞ்சாக மாற்றியதில்
ஆசிரியர்க்குப் பங்கில்லையா?
என்னைக் கைது செய்யுங்கள்!  அரசே!
என்னைக் கைது செய்யுங்கள்!

முப்பது ரூபாய் கொடுத்து
வாங்க வேண்டிய சீட்டுக்கு
முந்நூறு ரூபாய் கொடுத்து
லஞ்ச ஒழிப்புப் படத்தைக்
குடும்பத்தோடு பார்த்தேனே? -
அநீதிக்கு எதிராகப் போராடாமல்,
அநீதியையே வாழ்க்கை முறையாக
அவனுக்குக் கற்பித்ததில்
தந்தைக்கும் பங்குண்டுதானே!
என்னைக் கைது செய்யுங்கள் அரசே!
என்னைக் கைது செய்யுங்கள்!

ஒருவரை ஒருவர்
அடுதலும் கெடுதலுமே வாழ்க்கை எனும்
நெடுந்தொடர்களில் மூழ்கி,
பிள்ளைகளின் உணர்வுகளை
நல்லவிதம் நடத்தாமல்
பாசத்திற்கு அந்தப்
பச்சை மண்ணை ஏங்கவிட்டுப்
பார்த்திருக்கும் தாய்க்கும்
கொலையில் பங்குண்டு தானே?
என்னைக் கைது செய்யுங்கள் அரசே!
என்னைக் கைது செய்யுங்கள்!

ஒன்றைப் பத்தாக்கி
நன்றைப் புறந்தள்ளி –
பரபரப்புத் தேடியே
பதரைக் கதிராக்கி
வழிகாட்டு மரமே
வழிகெட்டுக் கிடக்கின்ற
ஊடகக் காரருக்கும்
உண்டல்லோ கொலைப்பங்கு!
என்னைக் கைது செய்யுங்கள்! அரசே!
என்னைக் கைது செய்யுங்கள்!

வாருங்கள்!
வந்துவிட்டீர்களா?
கைதுசெய்யுங்கள் –

ஒரு நிமிடம்!

எங்களையெல்லாம்
ஆட்டிவைத்துப் பார்த்திருக்கும்
அரசு மட்டும் விதிவிலக்கா?

நெஞ்சில் கைவைத்து
நேர்மையாகச் சொல்லுங்கள்!
எங்களின் குற்றத்தில்
உங்களுக்கும் பங்கில்லை?

அதனால் அரசே!
கைது செய்யுங்கள்! அரசே!
உங்களையும் நீங்களே கைதுசெய்யுங்கள்!

செத்துப் போனதும் உமா அல்ல!
நம் அனைவராலும்
அன்றாடம்
பதறப் பதறக்
குத்துப் பட்டுக் கிடக்கும்
சுயநலக் கல்வி முறை!

இர்பான் எனும் அம்பை
ஏவிவிட்ட நமக்கெல்லாம் -
உமா -


ரத்தம் பீறிடக்
கத்திக் கதறிய நேரத்தை
ஒரு கணமேனும் -
உணர்ந்தால்தான் விடுதலை!
-----------------------------
( சென்னை - பாரிமுனை - அரண்மனைக்காரன் தெருவில் உள்ள செயிண்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் இந்தி மற்றும் வேதியியல் ஆசிரியராக வேலைபார்த்தவர் உமா மகேஸ்வரி. இரண்டு பெண் குழந்தைகளின் தாய். 39 வயது. பி.எச்.டி.படித்த இவருக்கு வங்கியில் வேலைகிடைத்தும் அதைப் புறந்தள்ளிவிட்டு, ஆசிரியப் பணியை விரும்பி ஏற்று, ஈடுபாட்டுடன் செய்துவந்த இவர்,  கடந்த 09-02-2012 வியாழன் அன்று காலை 10.30மணியளவில் அவரிடம் 9ஆம் வகுப்புப் படித்துவந்த இர்பான் எனும் மாணவனால், வகுப்பு அறையிலேயே -நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே- கதறக் கதற 14 முறை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட செய்தியின் பின்னணியில், அழுதுகொண்டே எழுதிய கவிதை இது. 
இதே ஆசிரியர் உமா கொலைதொடர்பான எனது கட்டுரையைப் படிக்கச் சொடுக்குக -
http://valarumkavithai.blogspot.com/2012/03/blog-post_10.html 
– நா.முத்துநிலவன், 19-02-2012) 


           நமது வலையில் வந்த இந்தக் கவிதையைப் படித்துவிட்டு, இதனைத் தமது “தொலைத் தொடர்புத் தோழன்” மாத இதழில் எடுத்து வெளியிட்டுக் கொள்ள அனுமதியும் கேட்டு, மார்ச்-2012 இதழின் கடைசி முழுப்பக்கக் கவிதையாக எனக்கு “நன்றி“ தெரிவித்து வெளியிட்ட அந்த இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளவரும் அவர்களின் -- பி.எஸ்.என்.எல்.இ.யு. சங்கத்தின்-- மாநில நிர்வாகிகளில் ஒருவருமான தோழர் பாபு ராதா கிருஷ்ணன் அவர்களுக்கும் இதழாசிரியர்களுக்கும் நானல்லவா நன்றி தெரிவிக்கவேண்டும்? நன்றி நண்பர்களே!
          இதில் ஒரு சிறப்பு என்ன வெனில், கல்வியுடன் நேரடித் தொடர்புடைய ஆசிரிய அமைப்புகள் எதுவும் இதுவரை இதுபற்றி என்னிடம் வாய் திறக்காத போது, ஒரு பொதுத்துறை அமைப்பு எடுத்து வெளியிட்டதுதான்! மீண்டும் நன்றி நண்பர்களே!
 - நா.முத்து நிலவன் - 11-03-2012)

“புதிய மரபுகள்” - எனது கவிதைத் தொகுப்புக் கவிதைகள் - 3


என்சீர் வருத்தம்!

காப்பித்தூள் கடைமாற்றி வாங்க, வழியில்
               காய்கறிக்காரன் பார்க்க, பல்லைக் காட்ட
 “சாப்பாடு இல்லை, ‘கேஸ்’ இல்லை மதியம்
               சமாளியுங்கள்” என மனைவி முகத்தைப் பார்க்க
‘மோப்பெட்டில்’ ரிசர்வு வர, பிள்ளை முணு முணுக்க,
                மூன்றாம் தவணை டீவிக் காரன் திட்ட,
நாய்ப்பாடு பட்டு வரும் நடுத்தர வர்க்கம்
                 நாளொரு பொழுதாகி வரும் நடுத்தெரு வர்க்கம்.

நா.முத்துநிலவன் பேச்சு


திருமணத்திற்குப் பின் பெண்களின் திறமைகள் முடக்கப்படுகின்றன!

கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு 


(செய்திகளை அவரவர் கோணத்தில் படத்துடன் எழுதி அனுப்பிய செய்தியாளர்கள் தீக்கதிர் மதி, தினகரன் கண்ணன், தினமணி சுரேஷ். ஆகியோருக்கும் வெளியிட்ட நாளிதழ்களுக்கும் நன்றி. ஆனால், அந்தப் படங்களை நமது வலையில் ஏற்றும் தொழில் நுட்பம் எனக்குத் தெரியவில்லையே! -விரைந்து அதையும் கற்போம்.)

புதுக்கோட்டை -பிப்.4.
              அரசு ஊழியராக இருக்கும் பெண்கள் கூட திருமணத்திற்குப் பிறகு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்துவதில்லை.இந்த நிலை மாறவேண்டும் என்றார் கவிஞர் நா.முத்துநிலவன்

              புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வெள்ளிக் கிழமையன்று நடந்த இலக்கியமன்ற ஆண்டுவிழா வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அவர் மேலும் பேசியதாவது

            படிக்கும் காலங்களில் பெண்கள் கல்வியிலும், ஏனைய தனித் திறமைகளிலும் ஆண்களை விடவும் சிறந்து விளங்குகின்றனர். ஆனால்  திருமணத்திற்குப் பிறகு இவர்களின் திறமைகள் மதிப்பிழக்கச் செய்து முடக்கப்படுகின்றன. அரசு வேலைக்குச் செல்லக் கூடிய பெண்களுக்கும் இதே நிலைமைதான் நீடிக்கிறது. அவர்களின் திறமையான பங்களிப்புகள் இந்தச் சமூகத்திற்குப் பயன்பட வேண்டும்.
          ஒரு கருத்தை ஆண்கள் எதிர்த்துப் பேசினால் அவர்களைத் தைரியசாலி என்கின்றனர். அதையே பெண்கள் பேசினால், வாயாடி என்கின்றனர்.அதையும் பெண்களை விட்டே பேசவைக்கின்றனர். பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பது அழிவையே தரும். எனவே பெண்கள் இந்தத் தடைகளை முறியடித்து முன்னுக்கு வரவேண்டும் என சமூகம் எதிர் பார்க்கிறது.
         சமூகத்தை உயர்த்தும் பொறுப்பு ஆண்-பெண் என இரு பாலருக்கும் உள்ளது. இதற்குப் படிப்பே அடித்தளமாக இருக்க முடியும்
         இவ்வாறு பேசிய கவிஞர் நா.முத்து நிலவன் முன்னதாக நடத்தப்பட்ட ஆண்டுவிழா இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கும், தேர்ச்சி விழுக்காட்டில் திறமை காட்டிய ஆசிரியர்களுக்கும் பரிசுப் புத்தகங்களை வழங்கினார்.

         விழாவிற்குப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.ஞான சேகரன் தலைமை ஏற்றார்.முன்னதாக உதவித் தலைமை ஆசிரியர் எம்.சின்னத்தம்பி வரவேற்க. ஆசிரியர் பி.வெள்ளைச் சாமி நன்றி கூறினார். மாணவியரின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளோடு விழா இனிது நிறைவேறியது. ஆண்டு விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவியரும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.  

- செய்தியாளர் -சு.மதியழகன் தீக்கதிர்மதுரைப்பதிப்பு பக்கம்-6,  05-02-2012 - 
                            --------------------------------------------------------- 
ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில்
கவிஞர் முத்துநிலவன் பேச்சு.
ஆலங்குடி பிப் 5.
     புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் ஞானசேகரன் தலைமை வகித்தார். முதுகலைத் தமிழாசிரியர் பரமசிவம் ஆண்டறிக்கை வாசித்தார். முதுகலை ஆசிரியை கேசவி அனைவரையும் வரவேற்றார். ஓவியர்கள் கருப்பையாபுகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     இந்நிகழ்ச்சியில் பட்டி மன்றப் பேச்சாளர் கவிஞர் முத்துநிலவன் சிறப்புரையாற்றினார். அப்போது "பள்ளிப் படிப்பில் தேர்ச்சி விகிதம் மட்டுமல்லாது அதிக மதிப்பெண்கள் பெறுவதிலும் பெண்கள் முன்னணியில் இருக்கிறார்கள். அதே நேரத்தில் கல்வியில் முன்னணியில் இருந்தபோதிலும் பிற்காலத்தில் அந்தப் பெண்கள் இருக்குமிடம் தெரியாத அளவிற்கு தங்கள் திறமைகளை வெளிக் கொண்டு வருவதிலும் தங்களை சமூகத்தில் நிலைப் படுத்திக் கொள்வதிலும் கவனம் செலுத்தாமல் இருந்து விடுகிறார்கள். இது மாணவிகள் மட்டுமில்லை. ஆசிரியர் பணிக்குச் சென்று விட்ட பெண்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். அவர்கள் கணவர்பிள்ளைகள்சமையல்பணி என்று தங்களுக்குள் ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டு இருந்து விடுகிறார்கள்.
     உலகிலேயே மிகவும் அழகான பெண்மணி அன்னை தெரசாதான். அவர் இறந்தபோது உலகமே அவருக்காகக் கண்ணீர் சிந்தியது. அவரது இறுதி ஊர்வலத்தில் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றார்கள். பெண்வர்க்கம் எப்போது எதிர்த்துப் போராடத் துவங்குகிறதோ அப்போதுதான் ஆண்களின் கொடூரக் குணம் குறையும். தாக்குதலும் குறையும். பிற்போக்குத் தனங்களைக் கைவிட்டு விட்டு முற்போக்காகச் சிந்தக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
     தனது பள்ளிப் பருவத்தில் ஒன்பதாம் வகுப்பில் படிப்பு ஏறாததால் வகுப்பறையிலிந்து ஆசிரியர்களால் வெளியேற்றப் பட்டார். அவர்தான் இசையுலகில் இருமுறை ஆஸ்கார் விருதினைப் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.  இந்தச் சமூகம் பெண்கள் நிறையக் கற்றிருக்க வேண்டும் என்று பெண்களிடமிருந்து நிறையவே எதிர் பார்க்கிறது.
     ஆண்கள் பேசினால் திறமை என்கிற சமூகம் பெண்கள் பேசினால் வாயாடி என்கிறது. பேச வேண்டிய நேரத்தில் பேச வேண்டும். பேசாமல் இருந்து விட்டால் அதுவே முழுதாக அழித்து விடும். குழந்தைகளை வளர்ப்பதில் ஆண்களுக்கும் சமமாக கடமை உள்ளது. நியாயமும் உரிமையும் பெண்களுக்குக் கிடைக்க வேண்டுமெனில் பெண்கள் படிக்க வேண்டியது அவசியமாகும். சமூக சிந்தனையும் அக்கறையும் பொறுப்பும் உள்ளவர்கள் மட்டும்தான் சமூகத்தில் உயர்ந்து நிற்க இயலும். பெண்கள் படிப்பில் மட்டுமல்லாது பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும்." இவ்வாறு பேசினார்.
            ------------------------------------------ 
செய்தியாளர் - கண்ணன்,“தினகரன்05-02-2012-திருச்சிப்பதிப்பு பக்கம்-15 
              -------------------------------------------


“குறுகிய வட்டத்தை விட்டுப் பெண்கள் வெளியே வரவேண்டும்“ 
ஆலங்குடி-பிப்-5.
   குடும்பத்தில் கணவர், பிள்ளைகள், சமையல், பணி என்பதுதான் வாழ்க்கை என்ற குறுகிய வட்டத்தை விட்டுப் பெண்கள் வெளியேங வரவேண்டும் என்றார் கவிஞர் நா.முத்துநிலவன்.
  ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்ற ஆண்டுவிழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளைப் பாராட்டி அவர் பேசியது - 
   பள்ளி கல்லூரிக் காலங்களில் சிறப்பிடம் பெறும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அதன் பிறகு அந்தத் திறமைகளைச் சமூகத்தில் நிலைப்படுத்திக் கொள்வதில் தவறவிடுவதால் இளமையில் முயன்று பெற்ற திறமைகள் வீணாகி விடுகின்றன.
  ஆகையால், தனக்கான உரிமைகளைப் பெறவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் சமூக நலன் சார்ந்த கல்வி அவசியம் என்பதால் பாடப்புத்தகங்களோடு பிற புத்தகங்களையும் வாசிக்க வேண்டும் என்றார் அவர். 
   விழாவுக்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானசேகரன் தலைமை வகித்தார். ஓவியர்கள் கருப்பையா, புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகலைத் தமிழாசிரியர் பரமசிவம் ஆண்டறிக்கை வாசித்தார். முதுகலை ஆசிரியர் கேசவி வரவேற்றார். 
   -- செய்தியாளர்-சுரேஷ், 
தினமணி- நாளிதழ் பக்-2, 06-02-2012 -திருச்சி பதிப்பு
-------------------------------------------------------------- 
                  


            

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள்(5) அரசு வெளியீடு

சமச்சீர்க் கல்வி -பத்தாம் வகுப்பு - 
ஐந்து மாதிரி வினாத்தாள்கள் (அரசு வெளியீடுகள்)

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு மட்டும் அரசுத்தேர்வுகள் என்பதால் இந்தத் தேர்வுகளை எழுதும் மாணவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் -தேர்வு நடைபெறும் மார்ச் ஏப்ரல் மாதங்களுக்கு 100 நாள்களுக்கு முன்பே பதற்றமாகவே இருப்பார்கள் (தேர்வெழுதும் மாணவர்கள் அமைதியாகவே இருப்பார்கள் என்பது வேறு!)

இந்த ஆண்டு தாமதமாக வந்த புத்தகமும் புதிது, வினாத்தாள் அமைப்பும் புதிது என்பதால் மாதிரி வினாத்தாள்களும் தாமதமாகவே வந்தன.
அதிலும் மாற்றங்களைச் செய்த தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இறுதிப்படுத்தப் பட்ட ஐந்துவகையான மாதிரி வினாத்தாள்களை இறுதியாக வெளியிட்டிருப்பது தேர்வெழுதும் மாணவர்க்குப் பெருமகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.

இந்த மாதிரி வினாத்தாள்கள் ஐந்தையும் மாணவர்களுக்குத் தந்து பயிற்சி செய்துவிட்டால் வெற்றி மட்டுமல்ல, நல்ல மதிப்பெண்ணும் பெறலாம் என்பது உறுதி.

இத்தோடு மெல்லக் கற்கும் (ஸ்லோ லேனர்ஸ்) மாணவர்க்கான பயிற்சிகளையும் (ஸ்டடி மெட்டீரியல்ஸ்) சேர்த்து, சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு தயாரித்துத் தந்திருக்கும் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு பொன்.குமார் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இந்த மாதிரி வினாத்தாள்கள் ஐந்தோடு, பயிற்சிக்கான பகுதிகளையும் தமது வலைப்பக்கத்தில் வெளியிட்டிருக்கும் கல்விச்சோலை வலைப்பக்கத்தின் ஆசிரியர் திரு தேவதாஸ் அவர்களின் சேவையை மாணவர்களின் சார்பாகப் பாராட்டுகிறோம். நமது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உடனடியாகக் கிடைக்கச் செய்ய வேண்டும்
(பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு இன்னும் 57நாள்களே உள்ளன!)

தொடர்புடையவர்கள் பார்வைக்கு இவை கிடைக்கட்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய வலைப்பக்கம் --
 http://www.smartclass.kalvisolai.com/ 

நன்றியுடன்,
நா.முத்து நிலவன்
புதுக்கோட்டை - 622 004
05-02-2012

யார் இந்த ராவணன்? மண்டையைக் குடையும் இந்தக் கேள்விக்கு உரிய பதிலை யாரிடம் கேட்பது?

யார் இந்த ராவணன்? 
மண்டையைக் குடையும் இந்தக் கேள்விக்கு
உரிய பதிலை யாரிடம் கேட்பது?

அண்மையில் தமிழக ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் செய்தி - ராவணன் கைது, திவாகரன் தலைமறைவு இத்தியாதி இத்தியாதிகள்...

எனக்கு ஆச்சரியமாகவும், சந்தேகமாகவும் இருப்பதெல்லாம் இந்த ராவணனுக்கும் தமிழக அரசுக்கும் என்ன தொடர்பு? தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவும் சசிகலாவும் உடன்பிறவாச் சகோதரிகள் என்னும் அளவுக்கு நட்பு பாராட்டுபவர்கள் - சாரி பாராட்டியவர்கள். சரி. அவர் ஆளும் கட்சியின் செயற்குழுவிலோ பொதுக்கடீர் --சாரி-- பொதுக்குழுவிலோ உறுப்பினராக இருக்கிறார்கள் --சாரி-- இருந்தார்கள்... என்கிறார்கள் இது சரி.


அது அவர்களது சொந்த விவகாரம்.
அதில் தலையிட நமக்கு -அவர்கள் தவிர்த்த யாருக்குமே - உரிமையில்லை அதுவும் மெத்தச் சரி.


ஆனால், அமைச்சராகவோ ஆளும் கட்சியில் முக்கியப் பொறுப்பிலோ இல்லாத ராவணன், திவாகரன் போன்ற பலருக்கு இவ்வளவு அதிகாரங்களை யார் கொடுத்தது?  எந்த ஆளுநரும் பதவிப் பிரமாணம் செய்துவைக்காமலே எந்தக் காளியும் வந்து சூலத்தால் நாக்கில் எழுதாமலே இவ்வளவு “சூட்சும வலிமை“ எங்கிருந்து வந்தது?


திவாகரன் நினைத்தால் அதிகாரிகளைப் பந்தாடுவார், ராவணன் நினைத்தால்தான் மந்திரி இல்லையென்றால் எந்திரி என்றெல்லாம் இப்போது வரும் செய்திகள் உண்மைதானா? அப்படியெனில் அவர்களுக்கும் நமது -மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட- தமிழக அரசுக்கும் என்ன சம்பந்தம்?

இதை இன்றைய நமது தமிழக அரசின் முதல்வரான செல்வி ஜெயலலிதா விளக்க வேண்டும். கருணாநிதியின் “குடும்பம்“ அய்ந்தாண்டுகளில் எட்டடி பாய்ந்த செய்தியே நமக்கு எரிச்சலைத் தந்தது என்றால் ஜெயலலிதாவின் “நட்பு“ ஆறே மாதத்தில் பதினாறடி பாய்ந்திருக்கிறதே இதை எப்படி ஏற்பது?

இந்த “நட்பு“ வட்டத்தில் இன்னும் யார் யாரெல்லாம் எத்தனை ஆயிரம் கோடியை ஏப்பமிட்டிருக்கிறார்கள் இதற்கும் தமிழக அரசுதான் பொறுப்பென்றால் அதன் மீது நடவடிக்கை எடுக்க என்ன தடை?
என யாராவது வழக்குத் தொடுக்க மாட்டார்களா?

எந்த ஊடகத்திலும் இந்தக் கேள்வி எழுப்பப் படாதது ஏன்?

ஏன் திமுக கூட இதுபற்றிப் பேசுவதில்லை?

மண்டையைக் குடையும் இந்தக் கேள்விக்கு உரிய பதிலை யாரிடம் கேட்பது?

அய்யா சாமிகளே அம்மா மாமிகளே யாராச்சும் சொல்லுங்களேன்?

நா.முத்து நிலவன்,
03-02-2012


க.நா.சுப்பிரமணியம் - ஒரு முழு விமரிசனம்


நன்றி திரு கோமல் சுவாமி நாதன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு  வெளிவந்த ‘சுபமங்களா’ மாத இதழ்
(மார்ச், எப்ரல், மே – 1994)
---------------------------------------------------------------------------------------
க.நா.சு.
என்கிற
க.நா.சுப்ரமண்யமும்
திலகாட்ட 
மகிட பந்தனமும் 
-- நா.முத்து நிலவன்
---------------------------------------------------------------------------------------

ஒரு பெரும் படிப்பாளி நாடு நாடாகப் போனான்.
நான் படிக்காத புத்தகமில்லை. என்னோடு வாதம் செய்து ஜெயிக்க
        யாருண்டு?” – என்று சவால் விட்டான் விஜய நகரத்துக்கும் போனான்.
  ராஜா கிருஷ்ண தேவராயர் தெனாலிராமனைத் தேர்ந்தெடுத்தார்.
“நீதான் அவனோடு வாதம் செய்து ஜெயிக்க வேண்டும்” என்றார்.

அவை கூடியது.
ராஜாவும் பெரிய பெரிய அறிஞர்களும் சூழ்ந்திருந்தனர்.
அந்தப் பக்கம் ‘படிப்பாளி’ அருகில் ஏராளமான புத்தக மூட்டைகள்,
இந்தப்பக்கம் தெனாலிராமன் - அருகில் ஒரே ஒரு – பெரிய புத்தகம்!
அந்தப் பெரிய அளவில் ஒரு புத்தகத்தை ‘படிப்பாளி’ அதுவரை
         பார்த்ததில்லை. சந்தேகம் வந்தது. ‘நாம் இதுவரை படிக்காத புத்தகமாக
         இருக்கிறதே!’ யோசித்தபின் கேட்டான். ”அது என்ன புத்தகம்?” தெனாலி
        சொன்னான் - “திலகாட்ட மகிட பந்தனம்”.
மேலும் சொன்னான் - “இதிலிருந்துதான் நான் கேள்விகளைக் கேட்கப்
        போகிறேன்.”

படிப்பாளி பரபரப்பானான்.
‘இது என்னடாது, வம்பாப் போச்சு, இப்படி ஒரு புத்தகத்தை இதுவரை நாம்
         படித்ததில்லையே! எல்லா நாடும் சுற்றி – ஏராளமான மொழி கற்று வந்த
         நமக்கு இன்று என்ன சோதனை?’ இருந்தாலும் சொன்னான்.
“திலகாட்ட மகிட பந்நதனம்தானே!” ஹஹ்ஹா! நான் படித்து விட்டேன்,
          ஆனால் இன்றைக்கு எடுத்து வரவில்லை நாம் நாளை சந்திப்போம்”
         என்றான்.

அவ்வளவுதான் -
அன்றிரவே சொல்லிக்கொள்ளாமல்; போய்ச் சேர்ந்தான் அந்த உலகப்புகழ்
         படிப்பாளி!

ராஜா கிருஷ்ண தேவராயருக்கு சந்தோசம்.
தனது நாட்டின் மானம் காப்பாற்றப் பட்டதற்கு நன்றிகூறி,
       தெனாலிராமனுக்கு பரிசுகளும் தந்தார். பிறகு ஆவலை அடக்க முடியாமல்
       கேட்டார். “அந்தப் புத்தகத்தைக் கொடு”.
‘பெரும் படிப்பாளிக்கே தண்ணி காட்டிய புத்தகமல்லவா?”
        திறந்து பார்த்தார்.
புத்தகத்தைச் சுற்றிச் கட்டியிருந்த மணிக்கயிற்றை அவிழ்த்தால், புத்தகம்
        போல செய்யப்பட்ட ஒரு மரப்பெட்டி அது! அதோடு ஒரு மாடுகட்டும் கயிறு
         கொஞ்சம் எள்ளு சில காய்ந்த குச்சிகள்! ஆவ்வளவுதான் உள்ளே இருந்தது!

        அது புத்தகமே அல்ல!
“என்ன இது?” என்பது போலத் தெனாலியைப் பார்த்தார். தெனாலி
          சொன்னான்:
“திலகம்(எள்) காட்டம் (விறகு) மகிடபந்தனம் (எருமை கட்டும் கயிறு)

கதை போதும்.
க.நா. சுப்ரமணியம் தெனாலிராமனா? படிப்பாளியா? ரெண்டு குணத்திலும் கொஞ்சம் கொஞ்சம் சேர்ந்த ஒரு புது மாதிரியா?
இந்தக் கட்டுரையைப் படித்த பிறகு நீங்களேதான் முடிவு கட்ட வேண்டும்.
இறந்து போன இலக்கியவாதியைப் பற்றி 1912 – ஜனவரி 21 ஆம் தேதி தஞ்சை மாவட்டம் வலங்கைமானில் கந்தாடை நாராயண ஸ்வாமி அய்யரின் மகனாகப் பிறந்தார் க.நா.சுப்ரமணியம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் பாடத்தில் பட்டம் பெற்றும் வேலைக்கு போக முயற்சி செய்யாமல் தந்தை கொடுத்த உற்சாகத்தில் ஆங்கிலத்தில் ‘எழுத’ ஆரம்பித்தார்.
அவரது சிறுகதைகள், கட்டுரைகள் பல இந்திய-மேலைநாட்டு இதழ்களில் வெளியாயின.
‘சமயப்பிரச்சாரம் போல இலக்கியப் பிரச்சாரம் செய்கிறேன் என் வாழ்க்கையே இலக்கியப் பிரச்சாரம்தான்’எனச் சொல்லியவர் கடைசி வரை முழுநேர எழுத்தாளராக வாழ்ந்து மறைந்தார்.
தனது திருமணத்திற்குப் பிறகு இளம் மனைவியைப் பிறந்த வீட்டில் விட்டு விட்டு அப்பாவின் பென்ஷன் வரும் தைரியத்தில் 1934இல் சென்னைவாசியானார்.
1958 முதல் --‘சரஸ்வதி’யில் வெளிவந்த அவர் வார்த்தையில் சொன்னால்-- ‘இலக்கிய வாழ்வு பற்றிய தீர்மானத்தோடு, ஒரு டைப்ரைட்டருடன் சென்னை வந்து’ தங்கசாலைத் தெருவில் உள்ள ஹிண்டு ஹோட்டலில் ரூம் எடுத்துக் கொண்டு தங்கினார்.
இடையில் ‘மணிக்கொடி’ ‘சரஸ்வதி’ ‘எழுத்து’ போன்ற சிறு பத்திரிகைகளில் எழுதியதோடு
‘பசி’ தொடங்கி, ‘பித்தப்பூ’ வரை பன்னிரண்டு நாவல்கள் நான்கு சிறுகதை தொகுதி இரண்டு கவிதைத் தொகுதிகளுடன் ஏராளமான விமரிசனக் கட்டுரைகளும் சில மொழிபெயர்ப்புகளும் அவர் தந்தவை. அவரே சொன்னது போல ‘தமிழ் இலக்கியப் பண்பாட்டுத் தளத்தின் வீழ்ச்சியைக் காணச் சகிக்காமல்’ இருபது வருடம் டெல்லிக்கு ‘வனவாசம்’ போனார்.
என்றாலும் அது ‘அஞ்ஞாதவாசம்’ அல்ல. வடஇந்திய ஆங்கிலப் பத்திரிகைகளில் இலக்கியக் கட்டுரைகள் எழுதி வந்தார். எண்பதுகளின் தொடக்கத்தில் சென்னை திரும்பி குமுதம் குங்குமம் தினமணி நாளிதழ் போன்ற பெரிய பத்திரிகைகளில் எழுதிக் தொண்டே ஞானரதம் முன்றில் போன்ற சிறு பத்திரிகைகளுக்கு கௌரவ ஆசிரியராகவும் இருந்தார்.
மீண்டும் பேத்தி, மகள்-மருமகனைப் பார்க்க டெல்லி போனபோது அங்கேயே  காலமானார்.

க.நா.சு.வின் மொழிபெயர்ப்புப் பணிகள்
சி.சு.செல்லப்பா (எழுத்து – மே’60) சொல்வது போல ‘க.நா.சு.வைச் சுற்றி வீசியது முழுக்க முழுக்க மேல்நாட்டுக் காற்று அதனால் தமிழுக்கு சில நல்லது நடந்தது. தமிழ் இலக்கியப் போக்குகள் குறித்து வடஇந்திய ஆங்கிலப் பத்திரிகைகளில் நிறைய எழுதினார். அதைவிடவும் சிலப்பதிகாரத்தையும் திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது நினைவில் நிற்கக் கூடியது.
அதே போல வெளிமாநில மேல்நாட்டு ஆங்கில இலக்கியங்களைத் தமிழர் படிக்க அறிமுகம் செய்ததுதான் அவர் தமிழருக்குச் செய்த பெரிய இலக்கியத் தொண்டு. உலகத்துச் சிறந்த நாவல்களை – 15 ஆசிரியர்களைப் பற்றிய அறிமுகத்தோடு-சுருக்கித் தமிழில் தந்ததும் ‘சிறந்த பத்து நாவல்கள்’ என ஆங்கிலத்தில் தந்ததும் மிக நல்ல காரியம்.
தான் படித்ததில் பிடித்த இலக்கியங்களைப் பற்றி ‘படித்திருக்கிறீர்களா’ என்று தொடர்ந்து எழுதினார். பின்னர் இது ஒரு தொகுப்பாகவும் வந்தது.
‘நோபல் பரிசு பெற்ற கண்டக்டர்’ என்றதும் ஆச்சரியமாக இருக்கும். நார்வே எழுத்தாளர் நட்ஹாம்சன், தான் எழுதிய ‘நிலவளம் நாவலுக்குப் பரிசு பெற்றதைத்தான் க.நா.சு. தன் பாணியில் அப்படிக் குறிப்பிடுகிறார். அதைவிட ஹிட்லரின் பாசிஸத்துக்கு நட்ஹாம்சன் ஆதரவு தெரிவித்த காரணத்தால் போர் முடிந்ததும் அவர் எழுதிய நாவல்களையெல்லாம் அவர் வீட்டில் கொண்டு போய் வீசியெறிந்து வாசகர்கள் எதிர்ப்பைக் காட்டிய செய்திகளையும் க.நா.சு எழுதிய பின்தான் தமிழ் வாசகர்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.
எல்லாம் சரி. தனது ஆங்கில-பிறமொழி அறிவைக் கொண்டு மொழிபெயர்த்ததை விடவும், தமிழரை விமரிசனம் எனும் பெயரிலும், நாவல்-கவிதை-சிறுகதைப் படைப்பு எனும் பெயரிலும் அவஸ்தைப் படுத்தியதே க.நா.சுவை பற்றிய வடிவமாக நம் கருத்தில் பதிந்திருப்பதுதான் யோசிக்க வைக்கிறது.

மேல்நாட்டு ‘ஜம்பமே’ விமரிசனமா?
தமிழ்நாட்டின் நாலாந்தர மனிதன் ஒருவன். அமெரிக்காவுக்குப் போய் வரும் வாய்ப்பு கிடைத்துவிட்டால் அதன் பிறகு வாய் திறக்கும் போதெல்லாம் - ‘ளுநந.. றாநn ஐ  றயள in  யுஅநைசiஉய’ என்று ‘பந்தா’ காட்டுவது இயல்பு.
நிறைய ஆங்கில இலக்கியம் படித்த க.நா.சுவிடம் நாம் எதிர்பார்த்ததற்கு மாறாக, அங்கே இருப்பதில் ஒரு சதவீதமும் தமிழில் இல்லை என்பது போலவே பெரும்பாலும் எழுதியது. அவர் படிப்புக்குத் தகுதியானது தானா?
‘வெற்றிகரமான --முழுக்க முழுக்க-- காந்திய நாவலைப் படிக்க வேண்டுமானால் நாம் அமெரிக்காவுக்குத்தான் போக வேண்டும்’ என்கிறார். தமிழில் இருக்கட்டும், இந்தியாவிலேயே எந்த மொழியிலும் இல்லையா?
‘உலக மொழிகளில் சிறந்த நாவல்கள் பட்டியல் போட்டால் இந்திய நாவல் ஏதும் அதில் இருக்குமா என்பதே சந்தேகம்தான். தமிழ் நாவலைப் பற்றி அந்தச் சந்தேகத்துக்கும் இடம் கிடையாது’ என்கிறார்.
இதுதான் க.நா.சு. என்றால் இதுதான் விமரிசனம் என்றால் இது சரிதானா? என்பதை விமரிசகர்களும் வாசகர்களும்தான் சொல்ல வேண்டும்.
தமிழில் மொழிப் பாடம் படித்த ஆசிரியர் - பேராசிரியர்களின் (யுஉயனயஅiஉயைளெ) இலக்கியப் பணி போதாது. மற்ற மொழியில் கலை இலக்கியங்களைப் படித்தவர்கள் வளர்த்திருப்பது போல நாம் சிரத்தை எடுக்கவில்லை என்பது நம் எல்லோர்க்கும் உள்ள கருத்துதான். ஆனால் இந்த விமரிசனத்தையும் ஆக்கபூர்வமாக நம் எதிர்பார்ப்பை உற்சாகமூட்டும் வகையில் எழுதமாட்டார்.
தமிழில் பெண் கவிஞர்கள் எனும் தலைப்பில் ஒருவர் ஆய்வு செய்தார். க.நா.சு அவரைப் பார்த்து ‘ஒளவையார் கிரோக்க ஸாஃபோ போன்றவர் என்று உங்களால் ருசுப்பிக்க முடியுமா? என்று கேட்டாராம். ஆய்வாளர் ‘ஸாபோவா யாரது?’ என்று கேட்டாராம். அவ்வளவுதான். ‘அவரிடம் பேச இனி ஏதும் இல்லை’ என்று வந்துவிட்டாராம் - தினமணியில் எழுதுகிறார்.
சுந்தர ராமசாமி சொல்வது போல அவர்படித்த அளவிலும் வகையிலும் முறையிலும் படிக்கக் கூடாது என்பதை அவரது ஒவ்வொரு விமரிசனத்திலும் வெளிப்படுத்துவது என்ன பயனைத் தரும்? அவர் எழுதிய விமரிசனக் கட்டுரைகள் பெரும்பாலானவற்றில் ஊடுபாவாக ஓடும் கருத்து என்ன? –
படிப்பவருக்குப் புதிய புதிய செய்திகளை அறிமுகப்படுத்தும் வகையில் ‘பயனுறுத்துவது (பயன்படுத்துவது) அல்ல, படிப்பவரைப் பயமுறுத்துவதே எனில் அது தேவையா?
‘1827 இல் எக்சர்பான் என்கிற தன் நண்பரோடு பேசும்போது ஜோஹன் வுகாங் கதே என்ற இலக்கியவாதி…’ – என்று ஒரு பெரும் கட்டுரையைத் தொடங்குகிறார். கவனியுங்கள் அந்த எழுத்தாளர் எழுதிய செய்தி அல்லவாம். ‘அவர் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்த செய்து கூட எனக்குத் தெரியுமாக்கும்’ எனும் தொனி, பயன்படுவதா பயமுறுத்துவதா?
நமக்கு பாரதியைத் தெரியும் வ.வே.சு.வையும் தெரியும். ஆனால், இந்த இரண்டு பேரில் அதிகப் படிப்பாளி யார்? என்று யோசித்திருக்கிறோமா?
படிப்பு என்ன படிப்பு! நம் நாட்டில் படித்தவர்களின் லட்சணம் நமக்குத் தெரியாமலா இருக்கிறது? என்று சலித்துக் கொள்வோம். ஆனால் வ.வே.சு.வுக்கு பாரதியை விட அதிகப் படிப்பு இருந்தது என்கிறார் க.நா.சு. ஏன் இப்படிக் சொல்கிறார்? என்ன ஆதாரம்? இந்த ஒப்பீட்டால் இலக்கிய வளர்ச்சிக்கு என்ன பயன்?
இதையெல்லாம் அவர் யோசிப்பது கிடையாது. நாம் யோசிக்கவேண்டும்தானே?
‘எதுதான் நல்ல கவிதை! என்று கேட்டால் அதற்கும் உடனே வெளிநாட்டைத்தான் கை காட்டுவார் க.நா.சு. (ஊர்ஊருக்கும் அண்ணா சிலை மாதிரி க.நா.சுவுக்கும் சிலை வைக்க விரும்புவோர், மேல்நாடுகளை நோக்கி, ‘தூக்கியதிருக்கர’ பாவத்தில் சிலையைத் தேர்ந்தெடுக்கலாம்) எஸ்ரா பவுண்ட் என்ன? வால்ட் விட்மன் என்ன டி.எஸ்.எலியட் என்ன என்ன என்ன என்று சுந்தரம்பாள் பாணியில் சுதி நீட்டுவார். நாம் அந்த சுதியில் சொக்கிவிடுவோம்!

பொத்தாம் பொதுவாய் ஒரு போடு போடு!
‘இன்னின்ன காரணங்களால் இது இது சிறந்தது’ என்று எதையும் ஒப்பிடுவது நம் பழக்கம். எதையும் பொத்தாம் பொதுவாக ஒரு போடு போடுவதே க.நா.சு.வின் வழக்கம்.
இந்தியாவின் ‘சாதனை ஊர்கள்’ பற்றிய அவரது போடு ஒரு ‘தனீ’ போடு பாருங்கள் - அதற்கு முன்பு, இந்தியாவில் உள்ள நகரங்களில் விஞ்ஞானத்திலும் அரசியலிலும் சமூக விஞ்ஞானத்திலும் சாதனை புரிந்த ஊர்கள் எவையெவை என்று ஒரு சிறிது யோசித்து வைத்துக் கொள்ளுங்கள் என்ன? அப்படியெல்லாம் தனித்தனியாகப் பிரிக்க முடியாதே என்கிறீர்களா? சரி-க.நா.சு.வின் ‘சாதனை பூமி’ பட்டியலைப் பாருங்கள்.
1. கல்கத்தா – விஞ்ஞானம்
2. லக்னோ – அரசியல்
3. பம்பாய் - சமூக விஞ்ஞானம்
என்ன விழிக்கிறீர்கள்? ‘ஒன்றும் மூன்றும் இடம் மாறினால் தேவலையே’ என்று யோசிக்கிறீர்களா? க.நா.சு. ‘பரவாயில்லை அப்படியும் வைத்துக் கொள்ளலாம்’ என்பார். அதுதான் க.நா.சு. அதுதான் க.நா.சு.வின் விமரிசன பாணி. பொத்தாம் பொதுவாகச் சொல்லும் பொது காரணம் சொல்ல வேண்டியதில்லை. பின்னால் மாற்ற வேண்டியிருந்தால் சரி வைத்துக் கொள்ளுங்கள் என்பார்.
இந்தப் பொத்தாம் பொதுவான விமரிசன பாணியால்தான் ‘சி.சு. செல்லப்பா 1956 இல் தொகுத்த ‘புதுக்குரல்கள்’ தொகுப்பைத் தாண்டி ஒரு புதுக்கவிதைத் தொகுதியும் தமிழில் தேறவில்லை’ என்று 24.2.88 ல் கூட க.நா.சு.வால் எழுத முடிந்தது.
நவீன கவிதையில் மட்டுமல்ல க.நா.சு. தனக்கு அதிகப் பரிச்சயமில்லை என்று அவரே ஒத்துக்கொள்ளும் பழந்தமிழ் இலக்கியம் பற்றியும் இப்படித்தான்.
“சங்க இலக்கியம் என்று சொல்லப்படுவது சுமார் 27,000 வரிகள். இதில் 6,000 வரிகளாவது நல்ல கவிதையாகத் தேறும்” என்கிறார். (தினமணி 24.3.88)


 சங்க இலக்கியத்தை வரிக்கணக்கில் பிரிப்பவர் கவிஞராகவோ, விமரிசகராகவோ இருப்பது சந்தேகம். வேண்டுமானால் வருமான வரித் துறைஞராக இருக்கலாம். அதுவும் பத்துப்பாட்டும், எட்டுத் தொகையும் ஆக 18 தொகுப்புகளின் தொகுப்பு இரண்டு. இதில் எது கவிதை நயமிகுந்தது? எது குறைவானது? என்று கூறும் பொறுமையோ, அதில் ஆங்கில இலக்கியத்தில் அவருக்கிருந்தது மாதிரியான – பரிச்சயமோ நிச்சயமாக அவருக்கில்லை. பிறகு ஏன் இப்படி பொத்தாம் பொதுவான ஒரு போடு?

இங்குதான் காலஞ்சென்ற இலக்கிய விமரிசகர் க. கைலாசபதி சொல்வது சரியாகப் போருந்துகிறது. வாழ்க்கையில் செல்லப்பிள்ளையாக வளர்ந்து வாழ்ந்த அவரது எழுத்திலும் செல்லப்பிள்ளைத்தனம் பிரதிபலிக்கிறது. குறும்பும் பொறுப்புணர்வு இன்மையும் மட்டு மதிப்பின்றி தூக்கியெறிந்து பேசும் மனோபாவமும் இவரது வாழ்க்கையிலும் இலக்கியத்திலும் காணப்பட்டன.

க.நா.சு. எனும் கவிஞர் - சிறுகதையாளர் -  நாவலாசிரியர்…..                          
இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டவர். கேரளாவின் குமாரன் ஆசான்’ நினைவுப் பரிசை கவிதைக்காகப் பெற்றவர். இவரது கவிதையில் இவருக்கே பிடித்ததாக இவரே கூறும் ஒரு கவிதையைப் படித்துப் பாருங்கள்.
இல்லை இல்லை இவர் கூறுவது போல கவிதை படிப்பதல்ல அனுபவிப்பது –
அனுபவியுங்கள்!
வைகுண்டம்

  வைகுண்டத்து      
                                  வாசல்                
                                  செல்லரித்தது  
                                  போக
                                  பாக்கி
                                  க்றீச்
                                 சிட்டுத்          
                                 திறந்து
                                 நிற்க
                                 சிங்க
                                ராச்சாரி
                                 யார் - யார்
                               அவர்?
                                அவர் யாரோ
                                 தெரு  
                                வெல்லாம்
                                மூ
                                 ணு
  வ
                                  ரி
                                 சை
                                 க்யூ
                                நிற்க
                               ஆண்
                               டொன்
                               றொன்
                               றொன்
                                றாகக்
                                கழிய
                                ஐம்
                                 பத்
                                திரண்டும்
                                போக
                                எஞ்சிய
                                 இரு
                                 பத்  
                                தெட்டும்
                                நீண்டு
                                 வை            
                                 குண்டத்து
                                 வாசல்
                                 செல்லரித்து
                                 போக
                                 பாக்கி
                                 கூட்டத்திலே
                                  அவளை
                                 கை
                                 விட்டுவிட்டேன்.
இந்த இடத்தில் இந்தக் கவிதை பற்றிய எனது கருத்தைச் சொல்வதை விடவும், க.நா.சுப்ரமண்யம் - புதுக்கவிதைகள் நூலுக்கு முன்னுரை எழுதிய ஞானக் கூத்தன் சொல்வதே பொருத்தமாகத் தோன்றுகிறது.
அவர் சொல்கிறார்:
“க.நா.சு. வகுத்துக் கொண்ட கோட்பாடுகளுக்கு ஏற்ற மாதிரியே அவரது கவிதைகள் அமைந்துள்ளன. தத்துவரீதியாகவும், தூய இலக்கியக் கோட்பாட்டு ரீதியாகவும்
இன்றைய (முழு அளவில் இல்லாவிட்டாலும் முக்கால் அளவில் இன்றைய) க.நா.சு. என்று மதிக்கத்தக்க சுந்தர ராமசாமி, க.நா.சு.கவிதைகள் பற்றி என்ன சொல்கிறார்? ‘இவரது கவிதைகளை இவரது சிறுகதைகளின் தரத்தில் சேர்க்கலாம்”. என்கிறார்.
ரொம்பசரி,
அப்படியானால் இவரது சிறுகதைகள் எப்படி? அவரே சொல்கிறார். ‘இவருடைய பெரும் பாலான கதைகள் நம் மனத்தைத் தொடுவதில்லை நினைவில் பற்றி நிற்பதும் இல்லை.’

சரி. சிறுகதைகள் - கவிதைகளை விட்டு விடுவோம் நாவல்களில் அவர் நிச்சயமாகச் சாதித்திருக்கிறார் என்கிறார்கள். ‘1940களில் வெளியான ‘சர்மாவின் உயில்’ என்ற நாவலில் காணப்படும் கட்டுக்கோப்பும் உணர்ச்சியும் வேகமும் 1988ல் வெளியான அவரது கடைசி நாவல்களின் ஒன்றான ‘தாமஸ் வந்தா’ரிலும் காணப்படுகிறது. அடக்கிச் சொல்வது சொல்லாமல் சொல்வது என்ற மரபுதான் அவர் மரபாக இருந்து வந்தது’ என்கிறார் சா.கந்தசாமி.
1986-நடுவில் ‘கணையாழி’ பத்திரிக்கையில் (க.நா.சு. அதில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்த போது) தமிழில் சிறந்த பத்து நாவல்களைக் குறிப்பிடக் கேட்டு வாசகர் பட்டியல்களை வெளியிட்டது. சுமார் நாற்பது பட்டியல்களில் ஏறத்தாழ 350 நாவல்களை வாசகர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். இதில் க.நா.சு.வின்  ஒரே ஒரு நாவல் (பொய்த்தேவு) மட்டுமே இடம்;பெற்றதை இங்கு நினைவுபடுத்துகிறேன்.
மொழிபெயர்ப்பு நாவல்களையும் சேர்த்தால் இதுவரை க.நா.சு. வின் இருபது நாவல்கள் வெளிவந்துள்ளன. இவரும் தமிழ் நாவலில் சோதனை செய்த நாவலாசிரியர்கள் பட்டியலில் தன் பெயர் தவறாமல் இடம்பெறும்படி-(தனது பட்டியலில்தான்) பார்த்துக்கொள்வார். சுந்தர ராமசாமியும் இவரது கவிதை, சிறுகதைகளை விட நாவலில் ‘சாதித்திருப்பதா’கவே கூறுகிறார்.
தஞ்சை ப்ரகாஷ் ஒரு படி மேலேறி ‘இலக்கிய ஆசிரியப் பணியில் ஒரு கலைஞனாய்த் தனது நாவல்களின் மூலம் பலமுறை நிறுவியும் கூட அதனைப் போதிய அளவில் பாராட்டாத சாகித்ய அகாடமி, அவரது விமரிசனப் புத்தகத்துக்குப் பரிசு கொடுத்ததற்கு’ ரொம்பவும் வருத்தப்படுகிறார்.

பானைச் சோற்றுக்கு ஒரு பதம் பார்ப்போமா?
க.நா.சு.வின் கடைசி நாவல் ‘பித்தப் பூ’
ஒரு பைத்தியக்கார ஐ.ஏ.எஸ்.ஸைப் பற்றிய கதை! இதன் சுருக்கம் வேண்டுமானால் சின்னக் குழந்தைகள் சொல்லும் ஒரு சின்னக் கதைதான் - பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கும் பைத்திய வைத்தியருக்குப் பைத்தியம் பிடிச்சா, அந்தப் பைத்தியக்கார வைத்தியர், எந்தப் பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கும் பைத்திய – வைத்தியர் கிட்டப் போயி, தன் பைத்தியத்துக்கு வைத்தியம் பார்த்துக்கிட்டு…
என்ன தலை சுற்றுகிறதா? சரி விடுங்கள்.
நடந்த சம்பவங்களை வைத்து தானே கதை சொல்பவராக வரும் க.நா.சு. தன் பெயரான ‘சாமா’ வை (பக். 9,13,33) மறந்து விட்டு கதையோடு அவரே ஒன்றிப் போய் சுப்ரமண்யம் என்றே (பக்.91,92) கூறிவிடுவது சிரிப்பு.
பக்கத்துக்குப் பத்து எழுத்துப் பிழை (உண்மை! வெறும் இகழ்ச்சியில்லை) என்றால் பத்து பக்கத்துக்கு ஒருமுறை கதை நிகழ்ச்சி திரும்பி வரும்! நடுவில் இரண்டு இடத்தில் (பக். 20), கதையை விட்டு விட்டு க.நா.சு. தன் வரலாற்றை ஆரம்பித்து பிறகு விழித்துக்கொண்டு இது இந்தக் கதைக்கு அவசியமில்லை என்று வேறு கூறிப் போகிறார்.
இவர் பேசும் ‘உலக இலக்கியத்தர’ நாவல் எங்கே? இவர் எழுதும் நாவலின் தரம் எங்கே? இப்படி இவர் எழுதும் விமரிசனத்திற்கு அர்த்தமேது?
க.நா.சு.வின் இலக்கிய நடை                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
வார்த்தைச் செட்டு, கலைத்தன்மை, தெளிவு, தரம் என்றெல்லாம் பேசி, அடிக்கடி மாறக்கூடிய தன் பட்டியல்களை வெளியிட்ட க.நா.சு.வின் இலக்கிய நடை மிகவும் செயற்கையானது போலியானதும் கூட.
‘எதையும் தைரியமாகச் சொல்லும் கறார் இலக்கியவாதி’ (‘முன்றில்’ க.நா.சு. நினைவு மலர்க் கட்டுரைகள்), எனும் பெயரை எப்படியோ அவருக்குச் சூட்டி விட்டார்கள்.
எனக்கென்னவோ அவரது இலக்கியம் பற்றிய கருத்தும் - இலக்கிய நடையைப் போலவே தெளிவில்லாமல் இருப்பதாகத்தான் தோன்றுகிறது.
இலக்கியம் என்றால் என்ன? இந்த எளிய கேள்விக்கு க.நா.சு.வின் பதில் என்ன என்பதைப் படித்தாலே போதும் (தினமணி:25.6.88)
‘இலக்கியம் என்று சொல்லப்படுவது சுலபமாக இலக்கியத் தரத்தை எட்டியதாகவே என் படிப்பின் அளவில் என் இலக்கிய நினைப்புகளில் பூர்த்தி செய்வதாகவும் இருக்க வேண்டும். அறிவுத் தனமும் உணர்ச்சித் தனமும் ஒரு சமன நிலையில் செயல்பட வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். நமது நினைவுகளையும் கற்பனைகளையும் அறிவுப் போக்கையும் ;அந்தப் போக்குக்குக் காரணமாக அமைத்து செயல்படுகிற உணர்ச்சித் தனத்தையும் ஒருங்கே ஆழப்படுத்தி விசாலப்படுத்தி, எட்டாததையும் எட்டுகிற மாதிரி தருவதைத்தான் நான் இலக்கியம் என்று எடுத்துக் கொண்டு பார்க்கிறேன்.’
இது மொழிபெயர்ப்பு அல்ல. அவரே தமிழில் எழுதியது.

வாக்கிய அமைப்பு பத்தி பிரிப்பதற்கான தேவை எளிய சொற்களின் தேவையெல்லாம் க.நா.சு.வுக்குத் தெரியாது என்று சொல்ல மாட்டேன். வார்த்தைச் செட்டு இலக்கியத்தில் எழுத்தில் எப்படி வரவேண்டும் என்று பெரியதொரு கட்டுரையே எழுதியவர் அவர்!
‘கவிதையிலும் சரி. வசனத்திலும் சரி. வார்த்தைகளை அளவோடு பயன்படுத்த பாரதிக்குத் தெரியவில்லை’ என்றவர் அவர்! கலிங்கத்துப் பரணியிலும், கம்பராமாயணத்திலும், நாயன்மார்-ஆழ்வார் பாடல்களிலும், ஆண்டாள் பாடலிலும் வார்த்தைகள் தாராளமாக இருந்தன என்று விமர்சித்தவர் அவர்! (தினமணி:4.5.88) அவர்தரும் இலக்கியம் பற்றிய விளக்கம் எத்தனை தெளிவாக இருக்கிறது பாருங்கள்.

க.நா.சு.வின் அரசியல்
‘அரசியல் பேசாதே!-என்பதற்குள் இருக்கும் அரசியல்’ எல்லார்க்கும் தெரிந்ததுதான். இதையே க.நா.சு. இலக்கியத் தரமாகச் சொல்லுவார்: “விமரிசகன், கலைத்தரமாகச் செயல்பட வேண்டுமானால், சித்தாந்தம் கொள்கை என்று தேடிப் போகக் கூடாது” (தினமணி:27.7.88).
ஆனால், இவர் அப்படி இருந்தாரா? எனில், யாரும் அப்படி இருக்க முடியாது என்பதே உலகளாவிய பதில், இருக்கக்கூடாது என்பதும் கூட. மனிதன் சாப்பிடுவது அவசியம்தான் எனில், அதைத் தீர்மானிக்கும் எதையும் - அரசியல் உட்பட- பேசித்தான் ஆக வேண்டும். ‘எதிலும் சார்ந்து விடாதே’ எனும் எழுத்தும், இவரது வாழ்க்கையைச் சார்ந்ததுதான். வாழ்க்கையில் எதிலும் சேராமல் (வேலையில்-கூட) சுதந்திர எழுத்தாளராகவே இருந்தவர். அதுகூட மேலைநாட்டு - இவரது ‘ஆதர்ஸ புருஷர்’களிடமிருந்து தெரிந்து கொண்டதுதான்!
இவர் அடிக்கடி, மேற்கோள் காட்டும் எஸ்ரா பவுண்ட் அமெரிக்காவில் பிறந்தாலும் ஊர் ஊராகச் சுற்றி ‘இலக்கியமே’ வாழ்வாக பாசிஸ்ட் ஆதரவாளராயிருந்தவர். அயர்லாந்துக்காரரான ஜேம்ஸ் ஜாய்ஸ் மனிதப் பிரச்னைகளிலிருந்து விடுபட்டு ‘தூய இலக்கிய’ வாழ்வு நடத்தியவர்.
இவர்களைப் போலவோ – வேலைக்குப் போகாத ‘சுதந்திர’ எழுத்தாளராக, பெரும்பாலும் ஹோட்டல்களில் தங்குபவராக, தனிமனிதவாதியாக, ‘தூய இலக்கிய’ விரும்பியாக, அரசியல் சாராதவராக வாழ்வும் எழுத்தும் பொருந்துவது சரிதானா?
“சுதந்திர எழுத்தாளராக, எத்தனை தியாகங்கள்.. நுஎநn வழ னயல” என்று (பித்தப் பூ பக்:61) அவரே கூறிக்கொண்டாலும், இந்த விஷயத்தில் அவரது ‘கலைத்தன்மை’ வெளுத்து, தனது சார்புத்தன்மையைக் காட்டி விடுகிறார்.
பாருங்கள்!
‘ஜனநாயகத்தின் இருப்பிடம் அமெரிக்கா. சமத்துவத்தின் பிறப்பிடம் பிரான்ஸ்’ என்கிறார் (தினமணி–13.7.88). ‘பற்றுக பற்றற்றான் பற்றினை’மாதிரி. “சித்தாந்தம் கொள்கை விமரிசகனுக்குக் கூடாது” என்பதும் ஒரு சித்தாந்தம்தானே? அது எப்படி ஒத்துக் கொள்ளும்? இதே ரீதியில்தான், “முற்போக்குவாதிகளுக்கெல்லாம் முற்போக்குவாதியான ஜே.கே. (ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி) தியாகம் செய்திருக்கிற அளவு, உலகில் ஏசு கிறிஸ்துவைத் தவிர வேறு யாரும் தியாகம் செய்ததில்லை” என்கிறார்.
                                                                                                                                                                                                                                                                                                                                                            இன்னும் தெளிவாக – கறாராகக் கூறவேண்டுமானால் - “அரசியலிலும் கூட எத்தனையோ சித்தாந்தங்கள், கொள்கைள் என்று (இந்தியாவில்) ஆட்சி செலுத்தினாலும் கூட அவ்வளவும் அன்னிய மண்ணில் விளைந்தவை. இப்படிப் பார்க்கும்போது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் ஒன்றுதான் நமது மண்ணில் விளைந்த சித்தாந்தமாகப் படுகிறது” என்கிறார் க.நா.சு. (தினமணி:17.10.87)

  அவ்வளவுதான் அங்கு சுற்றி, இங்கு சுற்றி ரெங்கனைச் சேவித்து விட்டார். எப்படி இருக்கிறது பாருங்கள் தூய – சார்பில்லாத - இலக்கியவாதம்! இதுபற்றி க. கைலாசபதி 1973-ல் எழுதிய நூல் இன்னும் பொருத்தமாகவே உள்ளது.
க.நா.சு.வின் முரண்பாடுகள்
தனது இலக்கிய முடிவுகளை – ‘சிறந்த எழுத்துப் பட்டியல்’ களை – அடிக்கடி மனம் போனவாறு மாற்றிக் கொள்வதில், பேர் போனவர் க.நா.சு!
‘இலக்கியத்தை எட்டுவதுதான் இலக்கியத்தின் இலக்கு’ (10.2.88) என்பார். உடனே முற்போக்கு இலக்கியவாதிகள் முறைப்பார்களே என்று யோசித்தோ என்னமோ, ‘கலை-கலைக்காக என்று ஒரு கட்சி இருக்க முடியாது’ என்பார் (தினமணி: 18.5.88)
‘தமிழைத் தமிழ் நோக்குடன் விமரிசனம் செய்ய வேண்டும்’ – என்பார். ஆனால் ஒவ்வொரு உதாரணத்துக்கும் மேல்நாட்டோடு கொஞ்சிக் கொண்டு நிற்பார்.
அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்த ‘எழுத்து’ பத்திரிக்கை பற்றி, “முதல் ஆறு மாத காலம் ‘ஸ்டர்’ இருந்தது, பின்னர் செத்துப் போயிற்று’ என்பார். யோசித்தால், அவ்வளவுதான் அவர் அதில் எழுதிய காலமாம்!
வெங்கட்சாமிநாதன் ‘யாத்ரா’–28.3.86--இதழ்க் கடிதத்தில் சொல்வது போல “அச்சில் வரும் க.நா.சு.வுக்கு நேர்மாறானவர் - நேர்ப் பேச்சில் வரும் க.ந.சு.!” எந்த விஷயத்திலும், அவர் மற்றவர்களிடம் இருப்பதாகச் சொல்லி கண்டனம் செய்யும் சுபாவம் அத்தனையும் அவரிடமே இருப்பதைக் காணலாம்.”
நவீன கவிதையில் ‘சோதனை’ (யாருக்கு) முயற்சிகளை வெற்றிகரமாகச் செய்து வருபவர் பட்டியலில் தன் பெயரோடு தருமு சிவராமுவின் பெயரையும் சேர்த்துப் போடுவார் க.நா.சு.
ஆனால் தருமு சிவராமுவோ, “இலக்கியம் தெரிந்த மாதிரி வேஷம் போடுவதில் வெற்றி பெற்றவர்களுள் ஒருவர் க.நா.சு” என்கிறார் (ஞானரதம், மார்ச்’73).
நவீன விமரிசனத்திற்கும், புதுக்கவிதைக்கும் பெரும் பங்காற்றிய பெரியவர் சி.சு. செல்லப்பாவை – விட்டு விலகிய காரணத்திற்காகவே – காய்ந்தவர் க.நா.சு. இதற்காக ‘தன்னை எடுத்தெறிந்து பேசுவது தகாத செயல்’ என்று கட்டுரையே எழுதினார் சி.சு.செ. (எழுத்து ஜுன்’63)

க.நா.சு.வின் முரண்பாடுளிலேயே முக்கியமானதும், பலரும் கவனிக்காததும் ஒன்றுண்டு. உலகப் புகழ்பெற்று நாவல்களை எல்லாம் மொழிபெயர்த்தார் என்று அவசரப்பட்டு பாராட்டிவிட முடியாது. நட்உறாம்சனின் ‘நிலவளம்’-நார்வே, ஸெல்மா லாகர் லோஃபின் ‘மதகுரு’வும், பேர் லாகர் குஸ்ட்டின் ‘அன்பு வழி’யும்-ஸ்வீடன், மார்டின் துகார்டின் ‘தபால்காரன்’- பிரெஞ்ச், தாமஸ்மானின் ‘மந்திர மலை- ஜெர்மன், ப்ளடிஸ்லா ரேமாண்டின் குடியானவர்கள் - போலந்து என தமிழில் அவர் அறிமுகப்படுத்திய இவர்கள் அனைவரும் நோபல் இலக்கியப் பரிசு பெற்ற எழுத்தாளர்கள்தான்.
ஆனால், மக்கள் போராட்டங்களில் நேரடியாகப் பங்கேற்று இலக்கிய நோபல் பரிசும் பெற்ற சிலிநாட்டு மக்கள் கவி பாப்லோ நெருடாவையும், ஷோலகாவ், மாக்ஸிம் கார்க்கி, செக்காவ், மாயகாவ்ஸ்கி போன்ற சோவியத்தின் மாபெரும் இலக்கியவாதிகளையும் ஞாபகமாக க.நா.சுப்பிரமணியம் ‘மறந்து’விட்டாரா? அல்லது மறைத்து விட்டாரா?
டால்ஸ்டாய், கோகால், டாஸ்டாவ்ஸ்கி போன்ற சோவியத் எழுத்தாளர்களை இவர் புகழ்ந்து ‘போனால் போகிறது’ என்று தனது ‘உலகத்துச் சிறந்த நாவல்’களில் அறிமுகப்படுத்தினாலும், இம்மூவரும் சோவியத்துப் புரட்சிக்கு மிக முந்திய எழுத்தாளர்களே என்பதைக் கவனிக்க வேண்டும்.

இதே போலத்தான் உள்நாட்டு விவகாரமும்.
‘இலக்கியத்தில் என்ன முற்போக்கு?” என்று எகத்தாளம் செய்வார். நாம் பாராட்டிப் புகழ வேண்டிய --‘ஓ! அமெரிக்கா!’வுக்கு முந்திய – ஜெயகாந்தனைக் கூட ஒத்துக்கொள்ளமாட்டார். சிறந்த தமிழ்ச் சிறுகதைகளுக்கான தொகுப்பில் ஜெயகாந்தனையும், சுந்தர ராமசாமியையும் மூன்றாம் பட்சமாகத்தான் வைப்பாராம்! (எழுத்து – ஜன’59)
இலக்கியவாதிக்கு ‘இஸம்’ கூடாது என்பவர், ‘ஜே.கே.யிசமும், ஆர்.எஸ்.எஸ்.-இந்து பழமைவாதமும் நல்லது’ என்பது மட்டும் என்ன இஸமோ?
ஒரு சமயம் கரைகடந்த உற்சாகமும், எழுச்சியும், கிண்டலும், கேலியும் இரவது எழுத்துக்களில் பொங்கிப் பிரவகிக்கும், பிறிதொரு சமயம் உலகமே உருப்படாது என்பது போல ‘இந்த ஜனங்கள் திருந்தமாட்டார்கள்’ என்று சோகமே உருவாக சோர்ந்து, தனித்து நின்று கொண்டு, புலம்புவார்.
தனது மகா சந்நிதானத்தில் சேர்ந்த சில இலக்கியவாதிகளை அவ்வப்போது தன் பட்டியலில் சேர்த்து கௌரவிப்பார். பிறகு அவர்களை நாலாந்தர நடையில் ‘மூத்திர வாடை அடிக்கும் கதைகளை எழுதியவர்’ என்றும் ‘விபச்சாரக் கதை எழுதுபவர்’ என்றும் மொத்துவார்.
ஏன் இந்த முரண்பாடுகள்? என்று கேட்க முடியாது. கேட்டால் ‘நான் சுதந்திர இலக்கியவாதி’ என்பார். ‘நாளை வேறு ஒரு மூடில் வேறு ஒரு பட்டியல் போடுவேன்’ என்பார் (கணையாழி-ஆகஸ்டு’86)
வெங்கட் சாமிநாதன் ‘யாத்ரா’வில் எழுதியது போல- “க.நா.சு. எழுதியுள்ளதை வாசிப்பவர் யாருக்கும் அன்றைய விவரங்கள் தெரியாது படிக்கக் கிடைக்காது என்ற தைரியத்திலா? எவன் தேடிப் போகப் போகிறான் - தன் புரட்டல் பேச்சுத்தான் நிலைக்கும் என்ற தைரியமா? அவருடைய நம்பிக்கை வீண் போகாது. அவர் பேச்சுத்தான் செல்லுபடியாகும் என்பது எனக்குத் தெரியும். மக்கள் சுபாவம் அது” என்று நாம் நம்பிக்கை இழக்க வேண்டியது இல்லை.
காலமாற்றத்தில் க.நா.சு.வின் சில நல்ல விஷயங்களே நிற்கும். அவரது இலக்கியம் பற்றிய தூப்;போதனைகளை அப்படியே ஏற்க மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.

க.நா.சு.வுக்கு உரிய இடம்:                                                  
குண்டுச்சட்டியில் குதிரை ஒட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு க.நா.சு. ஒரு அட்சய பாத்திரம்தான். அதில்ஒன்றும் சந்தேகமில்லை. உலகின் முதல்நாவல், முதல் சிறுகதையிலிருந்து, இந்தியாவின் முதல் சிறுகதை ஆசிரியர் தாகூர், தமிழின் முதல் ஐந்து நாவல்கள், சிறுகதைகள் என்று ஏராளமாக மிகமிக அதிகமாகப் படித்து, அதுபற்றி எழுதியவர், ’88-இல் எழுதத் தொடங்கிய உதயசங்கரையும், கௌதம சித்தார்த்தனையும் படிப்பார் - பாராட்டி எழுதுவார்.
கண் பார்வை குறைந்த 76 வயதிலும், எங்கே போனாலும் நல்ல காபி, டிபன் ருசித்துச் சாப்பிட ஏங்குவது போலவே புதிய – பழைய நூல்களை தேடிப் பிடித்துப் படிப்பார். (அச்சு எந்திரம் பெருகிவிட்ட இந்தக் காலத்தில், எதைப் படிக்க வேண்டும் என்று தேர்வு செய்யத் தெரியாதவன் படிக்க, பல ஆயுளுக்கும் போதுமான போலிப் புத்தகங்கள் பெருகிவிட்டதையும் நாம் மறந்துவிடக் கூடாது)
இறந்து போகும் முதல் நாள் (15.12.88) அன்று கூட ‘கல்வி பற்றிய அடுத்த கட்டுரையை அனுப்புகிறேன்’ என்று தினமணிக்கும், தேவகி குருநாத்துக்கும் எழுதக்கூடிய அளவுக்கு அயராத எழுத்து அவருடையது!
இதெல்லாம் அவரது பலம்.
இதைக் கொண்டுதான், க.நா.சு.வுக்கென்று ஒரு தனிஇடம் தமிழ் இலக்கிய உலகில் நிரந்தரமாக உள்ளது. அவரைப் பின்பற்றக் கூடிய பெரும் எழுத்தாளர் - வாசகர் கூட்டமும் உள்ளது.
அவரது சகபாடியாக எழுதத் தொடங்கி இன்னும் எழுதிவரும் சி.சு.செல்லப்பா முதல், சுந்தர ராமசாமி, இந்திரா பார்த்தசாரதி, வெங்கட்சாமிநாதன், அசோகமித்ரன், ந.முத்துசாமி, நகுலன் எனும் டி.கே.துரைஸ்வாமி, தருமு சிவராமு, விக்கிரமாதித்யன், ஞானக்கூத்தன், ப்ரகாஷ், தேவதேவன், ஜெயதேவன், தேவரசிகன், நா.விச்வநாதன் வரை இன்னும் பலரும் அவர் வழியில் செல்வதால்தான் இறந்து போனவரைப் பற்றி எழுத வேண்டிய அவசியமும் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
மாறவேண்டிய – மாறிவரும் சமூகச் சூழலில், மக்களுக்குத் தேவையானதை, அவர்கள் ரசித்து ஏற்கும் விதத்தில் எழுதுவதே மகத்தான இலக்கியச் சேவை.
இதற்காக, ஒவ்வொருவரும் படிக்க – எழுத வேண்டியவற்றைப் பட்டியல் இட்டுக் கையில் வைத்தருப்பதுதான் க.நா.சு.விடம் நாம் கற்க வேண்டிய கருத்து.
மற்றபடி, வைத்துக் கொண்டே, எழுதி – படித்துக்கொண்டே இருப்பதல்ல, எழுதுவது – படிப்பது - இயங்குவது - இயக்குவதுதான் இலக்கியத்தையும், சமூகத்தையும் அதன் மூலம் தனி மனிதனையும் உயர்த்தும் என்பது நிச்சயம்.
--------------------------------------------------------------------------------------------------------

வாசகர் கடிதம்
(சுபமங்களா மாத இதழ் ஏப்ரல் 1994)

க.நா.சு. தெனாலிராமனா?
முத்துநிலவன் கட்டுரைக்கு ஆதரவும் எதிர்ப்பும்…

காலஞ்சென்ற எழுத்தாளர் க.நா.சு. எழுதிய எழுத்துக்களின் தரத்தையும் - தன்மையையும் பற்றியும், அவரது கருத்துக்களில் நிலவிய முரண்பாடுகளைப் பற்றியும் முத்துநிலவன் தக்க மேற்கோள்களோடு நன்றாகவே அலசி ஆராய்ந்திருக்கிறார். ‘மெத்தப் படித்த மேதாவியான’ அவரது சுயரூபத்தைத் திறம்படத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.
காலம் சென்ற ஒரு எழுத்தாளரைப் பற்றி இவ்வளவு காட்டமாக இடம் பெறுவதா விமரிசனம், செத்த பாம்பை அடிப்பதுவா வீரம் என்று சிலர் முகம் சுளிக்கலாம். ஆனால் அதன் வாரிசுகளான பாம்புக் குட்டிகள் சில இன்னும் உலவிக் கொண்டிருக்கின்றனவே. அவற்றுக்கேனும் இந்த விமரிசனம் உறைக்கும் அல்லவா?
  -தொ.மு.சி. ரகுநாதன், திருநெல்வேலி.
05-03-1994
-------------------------------------------------------------------------------------------------
க.நா.சு. குறித்து முத்துநிலவன் ஒரு கழைக் கூத்தாட்டம் நிகழ்த்தியிருக்கின்றார். க.நா.சு.விடம் விவாதிக்க எத்தனையோ விஷயங்கள் உள்ளபோது, இவருக்கோ அவரின் ‘படிப்பு’ மட்டுமே பிரச்னையாகிப் போனது விந்தையான நகைச்சுவை. க.நா.சு.வின் படிப்புப் பிராபல்யத்தை, நேற்றைக்கு சிறு பத்திரிகைகளை வாசிக்கத் துவங்கிய கிலுகிலுப்பை வாசகன் கூட நன்கு அறிவான். அவர் என்றுமே தன் படிப்பைக் கொண்டு அடுத்தவரை மிரட்டியதில்லை. அது அவருக்காக அவரே விரும்பி மேற்கொண்ட தவம்.
லா.ச.ரா.வுக்கும், மௌனிக்கும் எழுத்து எப்படித் தவமானதோ அதுபோல க.நா.சு.விற்கு அவரின் வாசிப்பு. அந்த நெடிய தவத்தின் விளைவுதான் அவர் தந்த ‘தரப்பட்டியல்கள்!” அந்தப் பட்டியல்களுக்குக் கூட, இலக்கியத் தரம் மட்டுமே அடிப்படையானதே ஒழிய சாதி இத்யாதிகள் மையமாகவில்லை. கல்கிக்கும் ராஜாஜிக்கும் க.நா.சு. பட்டியலில் இடமில்லை. சொ.வி.யும்;, சண்முக சுந்தரமும் இவற்றின் நிரந்தர உறுப்பினர்கள். இதுதான் க.நா.சு.
கூட்டத்தில் பேசிவிட்டு கொடுத்த பணத்திற்குப் புத்தகமாக வாங்கி நடந்துபோன, பிழைக்கத் தெரியாத மனிதரவர். அம்புப் படுக்கையில் கிடந்த பீஷ்மரைப் போல், அந்திமக் காலத்தில் அவர் புதுவையில் இருந்தபோது, கண்கள் இரண்டும் பழுதான நிலையிலும் பூதக்கண்ணாடி கொண்டு எப்பொழுதும், புத்தகங்களுடன் மல்லாடிக் கொண்டிருந்ததைப் பலமுறை நான் கண்டிருக்கிறேன்.
எதையும் நேராகப் பார்க்கமால் திரித்து, கொச்சையாகப் பார்த்தே பழக்கப்பட்டுவிட்டு நமக்கு – முத்து நிலவன் கூற்றுகளில் ஒன்றும் வியப்பில்லை.
க.நா.சு.வின் அணுகுமுறைகளிலும் சில குறைபாடுகள் உண்டு. அவற்றுள் ஒரு சிலவற்றை உணர்ந்து, இறுதியில் அவர் திருத்திக் கொள்ள முற்பட்டிருக்கிறார். பண்டித பேராசிரியர்களைக் காரணமில்லாமல் இறுதிவரை தாக்கி வந்த க.நா.சு., இறப்பதற்கு ஒரு சில மாதங்களுக்குமுன் பேராசிரியர் எழில் முதல்வனைச் சந்தித்தபோது ‘எனது விமரிசனத்தில் பேராசிரியர்களைத் தொடர்ந்து கடுமையாகத் தாக்கி வந்திருக்கின்றேன். ஆனால் கடைசியில் எனக்குச் சோறு போடுவது தமிழ்ப் பேராசிரியர்கள்தாம்’ என்றாராம். அதுதான் க.நா.சு.
க.நா.சு. ஒரு சிறந்த படைப்பாளியா? இதனைக் காலம்தான் நிர்ணயிக்கும் இப்போது நாம் ஒன்று வேண்டுமானால் கட்டலாம் க.நா.சு.வின் படைப்புக்களில் பெரும்பாலானவை (கவிதை, நாவல்) சோதனையின் பாற்பட்டவை. அவரின் ‘ஒருநாள்’ ஆகட்டும், ‘அசுரகணம்’ ‘பித்தப்பூ’ வாகட்டும் எல்லாமே இவற்றுள் அடங்கும்! இலக்கியத்தில் சோதனை முயற்சிகளுக்கென என்றுமே தனித்த ஒரு இடம் உண்டு. சோதனைகளின் தன்மைகளை உணராதவர்களுக்கு வேண்டுமானால் அது ‘அவஸ்தைகளுக்கு உள்ளாக்கல்’ ஆக இருக்கலாம். நவீன தமிழ் இலக்கியத்தின் பரப்பினைக் க.நா.சு. தம் சோதனை முயற்சிகளின் மூலம் விஸ்தரிக்க முயன்றிருக்கின்றார்.
  - வ. நாராயணநம்பி, திருச்சி.
--------------------------------------------------------------------------------------------
கட்டுரையாளர், க.நா.சு.வின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளையும், அவ்வப்போது தனது பட்டியலில் பெயர்களை மாற்றிக் கொள்ளும் இயல்புகளையும் சற்றுக் காட்டமாகவே சாடியிருக்கிறார் என்றாலும் ஒரு சொல்: க.நா.சு. என்று ஒரு விமரிசகர் தோன்றுவதற்கு முன்பு நமது அருமைத் தமிழ் நாட்டில் இலக்கியம் என்றால் அகநானூறும் புறநானூறும்தான் என்கிற பண்டித மனப்பான்மையே கோலோச்சி வந்துள்ளது என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. அவரது ஆங்கில இலக்கியப் படிப்பு தமிழுக்கு ஆதாயமாகவே அமைந்ததையும் நாம் நினைவுகொள்ள வேண்டும்.
-ராஜாமணி, ஏ.ஆர். புதுடில்லி.
----------------------------------------------------------------------------------------------

1.6.88 தினமணி இலக்கியக் கண்ணோட்டப் பகுதியில், உலக இலக்கியம் பற்றிய கட்டுரையில், மகாகவி பாரதி பற்றி ‘பாரதியின் தேசியக் கவிதைகளில் கார்டுச்சி என்கிற இத்தாலியக் கவியின் பாதிப்பு இருப்பது கண்கூடு’ என்று தன் அபிப்பிராயத்தை க.நா.க கூறுகிறார். அதற்கு வாசகர் இரா. வீரராகவன் ‘இத்தாலி என்றாலே முகம் சுளிக்கும் நிலை இருந்த கால கட்டத்தில் ஒரு பிரஞ்சு மொழிபெயர்ப்பையோ’ ஒரு ஆங்கில மொழி பெயர்ப்பையோ படித்து, பாரதி தேசியம் பாடியிருக்க முடியாது பாரதியின் தேசிய உணர்வு இயல்பானது, சுயம்புவானது’ என்று பதிலளித்திருக்கிறார்.
விமரிசனத்திற்கு வரும் எதிர் விமரிசனத்திற்கு பதிலளிக்கும் விமரிசன நேர்மையோ இலக்கிய ஆதாரமோ இவரிடம் இல்லை. ஏனெனில் க.நா.சு.வின் விமரிசனபாணியே, முத்துநிலவன் கூறுவது போல, பொத்தாம் பொதுவில் போடுவதும், கைலாசபதி கூறுவதுபோல அபிப்பிராயங்களை அள்ளி வீசுவதுமே’யாகும்.
-ஜனநேசன், பொன்னமராவதி.
------------------------------------------------------------------------------------------------

வெகுநாட்கள் காழ்ப்பை அடக்கி வைத்திருந்துவிட்டு தளம் கிடைத்தவுடன் கொட்டுகிறார், முத்துநிலவன். தெனாலிராமன் கதையை – திலகாட்ட மகிடபந்தனம் - பாதியில் நிறுத்திவிடுவது எதில் சேர்த்தி, தெனாலிராமன் பதிலையும் சேர்ந்திருக்க வேண்டும்: ‘ஞானத்தை ஞானத்தால் சந்திக்க வேண்டும் போலிகளை விவேகத்தால் சந்தித்தால் போதும்’. க.நா.சு. சிலரை ஒதுக்கியது, அவர்கள் மீதுகொண்ட வெறுப்பினால் அல்ல. அவர்களின் அறிவுத்திறத்தின் அறிவினைத் துல்லியயமாகக் கணக்கிட்டதினாலேதான். இலக்கிய விமரிசனத்தில் இந்தப் போக்கு அவசியமானதே.
சிறிதளவாவது இலக்கிய அறிவை தமிழனின் மண்டையைப் பிளந்தாவது ஏற்றிவிட வேண்டும் என்று அவர் பிரளயத்தனப்பட்டதே உண்மை. இன்றைய விமரிசனப் பரவல் க.நா.சு. போட்ட பிச்சையே. படிப்பு முடிந்து வாழ்க்கையில் ஸ்திரமாகிவிட்ட பிறகு, நாலு பேர் சேர்ந்து கூடிக் கொண்டு தங்கள் பள்ளிக்கூட வாத்தியாரை, அவரது மூக்கு வளைசல், முதுகு கூனல், கால் நொண்டி என்று விமரிசனம் செய்வதும், புலம்புவதும் தமிழர்களுக்கு சகஜமே.
   -நா.விசுவநாதன், அரசூர்.
---------------------------------------------------------------------------------------------
முத்தனைய முத்துநிலவன் திறனாய்வுக் கட்டுரையைப் படித்து, பிரமிப்பிலிருந்து விடுபட வெகுநேரம் பிடித்தது. என் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும், சூட்டுக்கோல் கொண்டு விமரிசனம் எழுதுபவருமான நண்பர் க.நா.சு. பற்றி இவ்வளவு தெளிவாக, நானறிந்த வரையில் எவரும் எழுதியதில்லை என்றே நினைக்கிறேன். இன்றைய இலக்கிய பூச்சாண்டிகளுக்கும் நாளைய முத்துநிலவன்கள் உதயமாவார்களாக.
      -கோவி.மணிசேகரன், சென்னை-93
04-03-1994
------------------------------------------------------------------------------------------------
க.நா.சு. விமரிசனம் விவகாரத்தில் மேலும் சில குரல்கள்
(சுபமங்களா மாதஇதழ் மே’1994)
க.நா.சு. வாசகரா? நிச்சயம் மாபெரும் வாசகர். ஆனால் வாசிப்பை வைத்துப் பயமுறுத்தியவர் என்ற வாதம் செல்லுபடியாகாது. தேவைக்கு மேல் எங்கும் அவர் நூல்களையும், நூலாசிரியர் பட்டியலையும் தூக்கி வைத்தவர் அல்லர். அவருடைய கட்டுரைகளை அவருக்கிணையாகக் கூறப்படும் பிற விமரிசகர்களின் கட்டுரைகளுடன் வெறுமே ஒப்பிட்டுப் பார்த்தாலே போதும். அவருடைய புத்தக அறிவின் ஓரத்தைக் கூட தொடமுடியாதவர்கள் இன்று, கட்டுரையை விடவும் பெரிய நூற்பட்டியலை வெளியிடுகிறார்கள்.
க.நா.சு.வின் பட்டியலில் ஊசலாட்டம் உண்டா? உண்டு. அவருடைய முடிவுகளில் பிழைகள் உண்டா? ஆம், உண்டு. அவர் பலவீனங்களும், தனிநபர் சார்ந்த பிரிவுகளும் உடையவரா? ஆம், நிச்சயமாக.
ஆனால் இதையெல்லாம் அவருடைய எதிரிகளை விட பரமசீடர்களே வெளிப்படுத்தி யிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சீடர்களை தமிழில் உருவாக்கியதே அவருடைய சிறப்பு.
க.நா.சு.வின் முடிவுகளுக்குப் பின்னால் எந்த அழகியல் சித்தாந்தமும் இல்லை. எனவே அவரை விமரிசகர் என்று கூறலாகாது என்கிறார் சுந்தரராமசாமி. அது முற்றிலும் உண்மை. “அவற்றில் பெரும்பகுதி சுயரசனையின் வெளிப்பாடுகள். சிறுபகுதி நடைமுறைத் தந்திரங்கள் சார்ந்தவை” என்கிறார். இதுவும் வெளிப்படை.
ஆயினும் க.நா.சு. தமிழில் இன்றும் ஒரு சக்தி. அதற்கான காரணங்கள்: தாட்சண்யமின்றிக் கூறப்படும் கருத்துக்களின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். படைப்பு என்பது முதன்மையாக ஓர் அழகியல் நிகழ்வு. அதை அப்படியே அணுக வேண்டும் என்று அவர் வலியுத்தினார்.
அரசியல் - சமூக கருத்துக்களின் அடிப்படையில் இலக்கியத்தை மதிப்பிட்ட, மதிப்பிடுகிற தமிழ்ச் சூழலில், மெய்யான வாசிப்பனுபவத்திலிருந்து கிளைத்த இத்தகைய ஆணித்தரமான குரலுக்கு இன்றும் மதிப்புள்ளது. க.நா.சு.வின் இக்குரலையே இன்று பெரும்பாலான படைப்புலகவாதிகள் முன் வைக்கிறார்கள். இயக்கம் சாராமல், நிறுவனம் சாராமல், அதிகாரத்துக்கு தலைவணங்காமல், பல்லிளிக்காமல், கைநீட்டாமல் படைப்பாளி வாழமுடியும் என வாழ்ந்து காட்டியவர்.
படைப்பாளியாக க.நா.சு. ஒரு சக்தி அல்ல. அதை மதிப்பிட்டுக் கூறியதாக முத்துநிலவன் குறிப்பிடும் விமரிசகர்கள், க.நா.சு.வின் அளவுகோல்களை ஏற்று உருவானவர்கள் என்பது நினைவிருக்கட்டும். தன் அளவுகோல்கள் தன்னை நிராகரிக்குமளவு வளர்ந்தன என்றால், அது க.நா.சு.விற்குப் பெருமையே!
இன்றைய இலக்கிய விமரிசன உலகில் அவருடைய இடம் ஈடிணையற்றதாக இருப்பதற்கு ஒரே காரணம். தன் வாசிப்பனுபவத்திற்குத் தந்த முக்கியத்துவத்தை எந்த சித்தாந்தத்துக்கும், எந்த அமைப்புக்கும், எந்த நிர்ப்பந்தத்துக்கும் அவர் தராததுதான்.
   -கே. விஸ்வநாதன், நாகர்கோவில்.
----------------------------------------------------------------------------------------------
எனது குறிப்பு :
க.நா.சு.பற்றிய இந்தக் கட்டுரையும், ஜெயகாந்தன் பற்றிய --நமது வலைப்பூவில் உள்ள-- கட்டுரையும் சேர்ந்து ‘இருபதாம் நூற்றாண்டின் இலக்கியச் சிற்பிகள்’ எனும் சிறு நூலாக 1999இல் (அட்டைப் படம் காண்க) வெளிவந்த போது எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்கள் எழுதிய கடிதம் : (இந்தக் கட்டுரைகள் இரண்டையும் அந்தப் புத்தக அட்டை இருக்கும் பக்கத்தில் சேர்க்க எனக்குத் தெரியவில்லை. எனது இந்தத் தொழில் நுட்பக் கணினி அறிவுக்குறைவை அறிந்தவர் வழி சொன்னால் தெரிந்து செய்வேன்)

அன்பு நண்பர் முத்துநிலவன்,
வணக்கம்.
கோவையில் த.மு.எ.ச. மாநாட்டின்போது உங்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது மகிழ்ச்சியான விஷயம். ‘இருபதாம் நூற்றாண்டு இலக்கியச் சிற்பிகள்’நூலை நீங்கள் அன்புடன் அளித்ததற்காக நன்றி.
‘அதிகம் பேசப்பட்டவர்கள்பற்றி அதிகம் பேசப்படாதவிஷயம் கோணம்தான் என் நோக்கம்’ என்று குறிப்;பிட்டிருப்பது வரவேற்புக்கும் பாராட்டிற்கும் உரியது.
ஜெயகாந்தன்-கதைகள் க.நா.சு விமர்சனம் எனும் இரண்டு கட்டுரைகளும் இக்கோணத்தில் நன்கு அமைந்துள்ளன.
ஜெயகாந்தன் கதைகள் பற்றி அவர் படைத்துவிட்ட கதைமாந்தரே உரையாடுவதாக எழுதியிருப்பது புதுமையானது, சுவாரசியமானது.
ஜெயகாந்தன் சாதாரண நிலையிலிருந்து தனது உள் உந்துதலால் ஆர்வத்தால் ஆசையால் பெரும் உழைப்பால் தனது ஆற்றலை வளர்த்துக்கொண்டு வேக வளர்ச்சி பெற்றார். அவரது கூரிய பார்வையும் சுய சிந்தனைத் திறனும் கற்பனை வளமும் அவருடைய படைப்புகளுக்கு நல்ல ஆதாரமாகத் இருந்தன. அவருடைய வக்கிரத் தனங்களும் குதர்க்க புத்தியும் தான் எனும் அகந்தையும் குறுகிய காலத்தில் பெற்ற வெற்றிகளும் அவரைக் கோணல் பாதையில் நடைபோடச் செய்துவிட்டன.
அவருடைய பிறழ்ச்சிகளையும் சரிவுகளையும் பின்னடைதலையும் தேக்கத்தையும் சரியானபடி எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.
க.நா.சு.சிறுகதையில் வெற்றிபெறவில்லை. நாவல்களில் அவருடைய முயற்சிகள் பாராட்டுதலுக்கு உரியன. மொழிபெயர்ப்பு சாதனைகளும் வரவேற்புக்கு உரியனவையே. விமர்சனத்தில் அவர் காட்டிய வழி கோளாறானது குறைபாடுகள் உடையது. ஆரோக்கியத் தன்மைகள் இல்லாதது. அவர் காலத்திலம் பின்னரும் விமர்சனத்தில் ஈடுபட்டவர்களை கோளாறான தடத்திலேயே போகத் தூண்டியது. க.நா.சு.பற்றிய உங்கள் விமர்சனம் நியாயமானது.
இவ்விரு கட்டுரைகளையும் அவை வெளிவந்தபோதே அந்தந்த சமயங்களில் படித்து ரசித்திருக்கிறேன். இப்ப படித்தபோதும் புதுமை குன்றாத தன்மையில் ரசமாகவே உள்ளன.
உங்கள்  விமர்சனஈடுபாடும் விமர்சன முயற்சிகளும் வளர்ந்து செழிக்கட்டும். வாழ்த்துகள்.
அன்பு,
வ.க.
19-5-1999
--------------------------------------------------------------------------------------------------------