கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆசிரியர் உமாவைக் கொலை செய்தது யார்?


chennai_teacher_uma
அருச்சுனன் விட்ட அம்புமழையில் கர்ணன் குற்றுயிரும் குலைஉயிரும் ஆகிவிட்டான். ஆனால்,சாகவில்லை. அவனால், சாக முடியவில்லை. தரும தேவதை அவன் சாவைத் தடுத்து அருச்சுனன் விடும் அம்புகளை யெல்லாம் மலர்மாலையாக மாற்றி அவன் கழுத்தில் விழுமாறு செய்கிறாள் 

 அருச்சுனன் திகைக்கிறான்! கண்ணனோ சிரிக்கிறான். அப்போது அங்கே ஓடோடி வந்த தன் தாய் குந்திதேவி, "அய்யோ மகனே!என்று கர்ணனைப் பார்த்துக் கதறித் துடிப்பதைப் பார்த்து, மேலும் அருச்சுனன் குழம்ப, கண்ணன், கர்ணன்தான் குந்திதேவியின் மூத்தமகன் எனும் கதையைச் சொல்ல, சிறிது நேரம் கழித்துக் கர்ணன் உயிர்விடுகிறான். 
 இப்போது அருச்சுனனும் கதறியவாறு கர்ணன் அருகில் ஓடிச் சென்று "அய்யோ அண்ணா! நானே உன்னைக் கொன்று விட்டேனே! நானே உன்னைக் கொன்று விட்டேனே" என்று சொல்லி அழுதபோது, கண்ணன் அவனைக் கிண்டலாகப் பார்த்துச் சொன்னானாம்
 "நான் கொன்றேன் நான் கொன்றேன் என்கிறாயே! அருச்சுனா! நீ மட்டுமா கர்ணனைக் கொன்றாய்? அவனது குருநாதர் "சரியான நேரத்தில் உன் அம்புக்குறி தவறட்டும்" என்று கொடுத்த சாபம்தான் முதலில் அவனைக் கொன்றது. பின்னர், மாறு வேடத்தில் சென்ற இந்திரன், கவச குண்டலங்களைத் தானம்கேட்டு வாங்கிக்கொண்ட போது கர்ணன் மீண்டும் கொல்லப்பட்டு விட்டான். பிறகு உங்களின் தாய் குந்தி, "போரின்போது இரண்டாவது முறையாக நாகபாணத்தை அருச்சுனன் மீது ஏவுவதில்லை" எனும் வரத்தைக் கேட்டு அவனை இறுதியாகவும் கொன்று முடித்தாள். பிறகுதான் இந்த பாரதப் போரே தொடங்கியது. போதாத குறைக்கு இதோ நானும் இப்போது அவனது புண்ணியத்தையெல்லாம் தானமாகக் கேட்டு வாங்கிய பிறகே அவனது உயிரைத் தரும தேவதை விட்டுத்தந்தாள். இப்படி ஏற்கெனவே மாதா-பிதா-குரு-தெய்வம் ஆகிய நான்குபேருமே அவனைக் கொன்று முடித்த பிறகுதான் உன் அம்பு அவனைத் துளைத்தது. என்னவோ நீயே உன் வீரத்தால் அவனைக் கொன்றுவிட்டதாக நினைத்துக் கொண்டு, "நான் கொன்றேன் நான் கொன்றேன்" என்று பிதற்றுகிறாய்! செத்தபாம்பை அடித்த உன்னாலா அவன் கொல்லப்பட்டான்?" என்று சொன்னதாக ஒரு பாரதக் கதை உண்டு.

இப்போது சொல்லுங்கள்
 ஆசிரியர் உமாமகேஸ்வரியை வகுப்பறையிலேயே குத்திக் கொன்றது யார்?
 இர்பான் வெறும் அருச்சுனன் மாதிரி செத்த பாம்பை அடித்தவன் தான்!
  அந்தச் சகோதரியின் உடலில் கத்திக் குத்து மீண்டும் மீண்டும் விழ விழக் கத்திக் கதறிய கதறலில், பொங்கிப் பெருகிய ரத்தத்துளியின் கறைபட்டு யார் யாரெல்லாம் குற்றவாளி களாகி நிற்கிறார்கள் தெரியுமா? நாம் எல்லாரும்தான்! இது, உண்மை வெறும் இகழ்ச்சி இல்லை!

 இந்தக் கட்டுரையை எழுதுகிற நானும், இதை வெளியிடும் இதழாசிரியரும், படிக்கும் நீங்களும் என இந்தச் சமூகத்தில் வாழும் நாமெல்லாருமே ஆளுக்கு ஒரு வகையில் குற்றவாளிகள் தாம்"யு டூ புரூட்டஸ்?"  என ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்ளத்தான வேண்டும். ஏனெனில் -
அனைத்து ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும், அதிர்ந்து கூடப் பேசத் தெரியாத புதுக்கோட்டை ஆசிரியர் சாரதாவை முதல் களப்பலியாக்கி, தமிழகம் முழுவதும் 36 ஆசிரியர்களை இழந்து பல லட்சம் ஆசிரியர்- அரசு ஊழியர் அதிகபட்சமாக 56 நாள் வரை சிறையிருந்து, --1986இல் "ஜேக்டீஎன்றும் 1989இல் "ஜேக்சாட்டோ" என்றும்-- கத்திக் கதறிப் பெற்றதுதான் இன்று கைநிறைய வாங்கும் மத்திய அரசுக்கு நிகரான சம்பளம் என்று, இன்று வேலைக்கு வரும் எத்தனை பேருக்குச் சொல்லியிருக்கின்றன நம்ஆசிரியர்-அரசுஊழியர் இயக்கங்கள்
 வரலாற்றை மறந்தவர் அதில் திரும்பவும் வாழ சபிக்கப்படுவர் என்பது உண்மைதானே? நாம் சபிக்கப்பட்டு விட்டோம்! இப்போது சம்பளம் கிடைக்கிறது! மரியாதை போய்விட்டது!

 போராடக் கற்றுத்தந்த சங்கம், பாடம் நடத்தவும் பள்ளிக்கு வரும் பிள்ளைகளை நம் சொந்தப் பிள்ளைகளாகப் பார்த்துக் கொள்ளவும், அலுவலகத்திற்கு வரும் பாமரனை மரியாதையாக நடத்தி அவனது நியாயமான கோரிக்கைகளைப் பரிவோடு பரிசீலிக்கவும் கற்றுத் தந்திருந்தால் இன்றைய ஆசிரியர்கள் மதிப்பிழந்து, வெண்ணிறஆடை மூர்த்தி, லூசுமோகன்களாக நமது ஊடகங்களால் கிண்டலாகவும் கேலியாகவும் சித்திரிக்கப்படும் நிலைக்கு ஆளாகி யிருப்பார்களா என்ன? "பணிப் பண்பு" (work culture) பற்றிய கவலை எந்த ஆசிரியர்-அரசு ஊழியர் அமைப்புகளுக்கு இருக்கிறது

 பதவி உயர்வின்போதும், புதிய புத்தகம் வரும்போதும், பணியிடைப் பயிற்சியை அரசு மேற்கொள்வதை விட, அந்தந்தச் சங்கங்களே மேற்கொள்வது தானே சரி? இதை ஏன் எந்த ஆசிரியர் சங்கமும் செய்வதில்லை? புதிய புதிய விஷயங்களில் அது பாடப்பகுதியாக இருந்தாலும் சரி, மாணவர் உளவியல் சார்ந்ததாக இருந்தாலும் சரி- ஆசிரியர் களுக்குச் சந்தேகம் வந்தால் கேட்டு, பொறுப்பான பதில்பெறும் இடம் என்று ஏதாவது உண்டா? உமாவுக்கு இரங்கல் ஊர்வலம் நடத்தினால் மட்டும் போதாது, இனி உமாக்கள் கொல்லப்படாமல் தவிர்க்கவும் யோசிக்க வேண்டும்.

 அதிகாரிகளைக் கால்கை பிடித்தால் போதும், பாடங்களைப் பள்ளிக்கூடத்தில் நடத்துவதை விட ஏழை மாணவர்களானாலும் தன் வீட்டில் நடத்தும் தனிப்பயிற்சிக்கு எப்படியாவது இழுத்து மாணவனின் தன்மானத்தை சிதைத்து, எதையும் செய்து கொள்ளலாம் எனும் துணிச்சலை வளர்த்ததும் சங்கங்கள் தானே?

 கடமை பற்றிப் பாடம் நடத்தும் ஆசிரியர், தன் கண்ணெதிரில் நடந்து கொள்வதைப் பார்த்துத் தானே மாணவர் கற்றுக் கொள்வர்? மனச்சாட்சிக்கு மட்டுமே பயந்து பணியாற்ற வேண்டிய ஆசிரியர்களுக்குள் சாதி-மத-குழுபேதம், பணிமூப்பு-பதவிபேதம், பள்ளிக்கு வந்தும் சொந்தவேலை பார்ப்பது, வகுப்பு நேரத்தில் கதைபேசுவது, பெரிய இடத்துப் பழக்கம் தரும் துணிவில் பொறுப்பின்றி நடந்துகொள்வது, புதிதாக வந்திருக்கும் கல்வி முறை தொடர்பான செய்திகளைப் பேசும் "பிழைக்கத் தெரியாத" ஆசிரியரை அணிசேர்ந்து கொண்டு கிண்டல்செய்வது இவ்வளவையும் மாணவர் முன்பே அரங்கேற்றுவது என எத்தனை எத்தனை அசிங்கம்! இவற்றைக் களைவதில் ஆசிரியர் அமைப்புகளுக்குப் பொறுப்பில்லையா?

 இவ்வளவு ஏன், ஏதாவது ஒரு செய்தித் தாளையாவது காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் ஆசிரியர் எத்தனை பேர்? என்று புள்ளிவிவரம் எடுத்தால் கதை கந்தல்தான்! இதில் நல்ல மனசோடும், ஈடுபாட்டோடும் தன் கைக்காசு போட்டுப் பணியாற்றும் ஆசிரியர்களை நீண்ட நாளாகவே அரசுகள் கண்டு கொள்வதில்லை. ஆசிரியர் அமைப்புகளோ தவறு செய்பவரைக் காப்பாற்ற மட்டுமே இருப்பதாகத் தோன்றுகிறது!

 நூறு விழுக்காடு தேர்ச்சிக்காகப் பல தனியார் பள்ளிகளும் சில அரசுப்பள்ளிகளும் கூட எடுக்கும் நடவடிக்கைகளை மனச்சாட்சியுள்ள ஆசிரியர் எவரேனும் தட்டிக் கேட்டால் கல்வித்துறை பேரைச் சொல்லியே அவர்களை ஓரங்கட்டி விட்டு மாணவர்களைப் படுத்தும்பாடு கொஞ்சமா நஞ்சமா? காலை 4மணிக்கே எழுப்பி விட்டு வீட்டுப்பாடம், பிறகு தனிப்பயிற்சிக்கு ஓடி, பிறகு வந்து பள்ளிக்கூடம் ஓடி, பிறகு மாலை பள்ளியிலிருந்து வந்ததும் எதையோ வாயில் கொட்டிக் கொண்டே உடைமாற்றிக் கொண்டு, மீண்டும் தனிப் பயிற்சிக்கு ஓடி, இரவு 8மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து மீண்டும் மாடுபோல அன்று நடந்த, முந்திய நாள்களில் படிக்க விட்டுப்போன பகுதிகளை அசைபோட்டு- இரவு படுக்க 11மணி யாகிவிடும் குழந்தைக்கு வயது 15! "ஓடி விளையாடு பாப்பா" என்ற பாரதி பாட்டைப் படித்து ஒப்பிக்காமல் விளையாடப்போன குழந்தைக்கு கடுமையான தண்டனை தரும் நமது பள்ளிக் கூடங்களால் மனஅழுத்தம் வராதா என்ன? அந்த அழுத்தம் கட்டாயப் படுத்தி சிரித்துக்கூடப் பேசாத ஆசிரியரால்- அதிகமாகாதா என்ன?

 இதில் பெற்றோர் வந்து பார்க்கக் கூட அனுமதி கேட்டு அரை மணிநேரம் நின்றபின் அனுமதி மறுக்கப்படும் "ஸ்ட்ரிக்ட்"ஆன பள்ளிக்கூடம்தான் சிறப்பான பள்ளிக்கூடம் என்று பெற்றோரே பீற்றிக்கொள்ளும் மனநிலையை எங்குபோய்ச் சொல்வது? கவிஞர் நந்தலாலா சொல்வதுபோல- "மாணவர்களிடம் வெளியே விட்டுவிட்டு வரச்சொல்லும் தின்பண்டத்தையும் தண்ணீர் பாட்டிலையும் எப்போது உள்ளே மாணவரோடு வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, உள்ளே அவர்கள் சுமக்கும் புத்தகக் கட்டைத் தூக்கி வெளியே வீசுகிறார்களோ அப்போது தான் மாணவர்கள் சுதந்திரமாய் உணர்வார்கள்" என்பது நூறு விழுக்காடு உண்மை அல்லவா?

 நான் ஒருமுறை மாணவரிடம் பேசும்போது, "புத்தகம் நோட்டே இல்லாத, வீட்டுப் பாடம் இல்லாத, பரிட்சை இல்லாத பள்ளி வகுப்பறை எப்படி இருக்கும்?" என்று கேட்க, அவர்கள் ஓவென்ற சத்தத்துடன் "ரொம்ப நல்லா இருக்கும் சார், ஆசிரியரும் இல்லை என்றால் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் சார்என்றது இன்னும் காதில் ஒலிக்கிறது! பள்ளி விடுமுறை என்றால் மாணவர் எழுப்பும் மகிழ்ச்சிக் கூச்சல் கூட ஒருவகையில் கல்விமுறை மீதான மாணவர் விமர்சனம்தானே?

 பாடத்திட்டத்தில் மதிப்பெண்ணை மட்டுமே விரட்டும் போட்டியில், மாணவரின் மற்ற பல திறமைகள் கண்டுகொள்ளப் படாததில் விரக்தி அடைவது இயல்பு அல்லவா? "மாணவர் முன்னேற்ற அறிக்கை" (Progress Card) இல் அவனது பாடும் திறமை, பேசும் திறமை, ஓவியத் திறமை, விளையாட்டு, சேர்ந்து செயலாற்றுவது, முக்கியமாக அடுத்தவருடன் அன்பாக இருப்பது என, இதர பல பண்பு-திறமைகளையும் பாராட்டி அவற்றுக்கும் மதிப்புப் போட்டு, பெற்றோர்க்கு அறிக்கை தருவதாக இருந்தால், "இதில் நான் இல்லை, இதோ இதில் நான் இருக்கிறேன்" என்னும் நிறைவு மாணவர்க்குக் கிடைக்கும். இப்போது மதிப்பெண்ணை மட்டும் காட்டும் முறையை நிச்சயமாக மாற்றியாக வேண்டும். அங்கீகாரம் தரப்படும் ஒவ்வொரு திறமையும்-பண்பும் மற்ற திறமைகளையும் வளர்க்கும் என்பதைக் கல்வித்துறை நிச்சயமாகப் பரிசீலிக்க வேண்டும்!

 நமது தேர்வுமுறை தோல்வியடைவதை மையமாகக் கொண்டிருப்பதாகவே எனக்குப் படுகிறது. தாள் திருத்தும் மையங்களில் தரப்படும் மாதிரி விடைத்தாள் (key)களைக் கட்டிக்கொண்டு அழாமல், சிந்தித்து எழுதும் மாணவர்க்கே சிறந்த மதிப்பெண் கொடுக்கும்படி ஆசிரியர்களுக்கும் பயிற்சிதர வேண்டும். மாணவர் எழதியதை தரப்பட்ட விடைக்குறிப்போடு ஒப்பிட்டு "சரியாக இருக்கிறது" என்று எந்தவித சிந்தனையும் இல்லாமலே திருத்தப்படும் தேர்வுக்குத்தான் நோட்ஸ் தேவைப்படும். சிந்தித்து எழுதப்படும் விடைக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்றால் ஆசிரியர்களையே அசர அடிக்கும் விடைகளை மாணவர் தருவார் என்பதில் நம்பிக்கை வேண்டும்.

 தேர்வு முறை மட்டுமல்லாமல், திருத்தும் முறையும் மாறவேண்டும். அல்லது, ஒவ்வொரு மாணவருக்கும் கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான வினாத்தாள்களில் ஒன்றைத் தந்து, அவரே விடையை இட்டு, கணினியால் உடனுக்குடன் திருத்தப்படும் விடைத்தாள் மதிப்பெண் படியை அவரே எடுத்துக்கொண்டு செல்லும் தேர்வு முறையை அறிமுகப் படுத்தலாம். இப்போது நடக்கும் தேர்வுகளால் மனித உழைப்பு விரயம் மட்டுமல்ல, மனஅழுத்தம், தேர்வு அறைக் கண்காணிப்பாளர்-மாணவர் மோதல் களையும் தவிர்க்கலாம். இதில் தனியார் பள்ளி நிர்வாகங்களின் நேரடிப் பங்களிப்பும் உண்டு! சொல்லும்விதம் நடந்துகொண்டால் தனிக்கவனிப்பும், நேர்மையுடன் நடந்து கொண்டால் அவரது வாகனம் சேதப்பட்டுக் கிடக்கும் பரிதாபத்தையும் தவிர்க்கலாம்.

தாய்-தந்தை இருவரில் ஒருவராவது தன் குழந்தையின் மீது அன்பு செலுத்த நேரம் ஒதுக்கி அதை வெளிப்படையாகக் காட்டவும் வேண்டும். இரண்டுபேரும் கண்டிப்பாக இருக்கும் இடம் குழந்தையின் கல்வி குறித்தே என்பதை மாற்றியாக வேண்டும். மருத்துவராகவும், பொறியாளராகவும், வழக்குரைஞராகவும் வரவேண்டும் எனும் கனவில் அவன் மனிதனாகவும் இருக்க வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்களே! பணம் கறக்கும் படிப்பாகப் பிள்ளை படிக்கவேண்டும் என்ற ஆசையில் 9ஆம் வகுப்பிலிருந்தே அந்தக் குழந்தையின் தலையில் தன் பேராசையை ஏற்றிவிட்டு, பாடாய்ப் படுத்தும் பெற்றோர், என்ன சம்பாதித்தாலும் அவன் வாழும் முறையைக் கற்றுக்கொள்ளாமல் எப்படி வாழ்வான் என்பதை எப்போதுதான் யோசிப்பார்கள்?

 குழந்தை பள்ளிக்கு வருவது நல்ல மதிப்பெண் வாங்குவதற்காக மட்டுமல்ல. இதை வீட்டிலிருந்து தனிப்பயிற்சி வழியாகவும் கற்றுக்கொள்ள முடியும். பலருடன் பழகி இந்த உலகத்தோடு ஒட்டி வாழக் கற்பதுதான் உண்மையான கல்வி! ஆசிரியர்கள்- பள்ளியில் இருக்கும் பெற்றோராகவும், பெற்றோர்- வீட்டிலிருக்கும் ஆசிரியராகவும் நடந்து கொள்வதுதான் ஒரு குழந்தையை அறிவோடும் பண்போடும் வளர்க்கும் ஒரே வழி!

கண்டிப்பும் கனிவும் சரிவிகித்த்தில் காட்டவேண்டிய பெற்றோர் இரண்டில் ஒன்றை மட்டுமே காட்டுவதில் குழந்தையின் மன அழுத்தம் நிச்சயமாகப் பாதிக்கப்படும். இது வெளிப்படும் இடமாக வகுப்பறை இருக்கும்போது, மனப்பிறழ்ச்சி அதிகமாகி தோல்விகளைத் தாங்காத மனநிலை இயல்பாகச் சிந்திக்க விடுமா?
அரசுகளின் முதல்பார்வை படவேண்டிய கல்விக்கு ஓரப்பார்வையே கிடைக்கிறது! ஒவ்வோராண்டும் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி விழுக்காடு குறைந்துகொண்டே வருவதை கல்வியாளர் மட்டுமல்ல, நாட்டு வளர்ச்சியில் அக்கறை கொண்ட யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தின் பலனை முதலில் கல்வித்துறைக்கல்லவா வழங்க வேண்டும்? அதுதானே உடனடித் தேவை! ஆனால், நமது நாட்டில் தலைகீழாக அல்லவா நடக்கிறது?

சுவையாக இனிக்க வேண்டிய பாடம் கசப்பதும், வெறுக்கத் தகுந்த சீரழிவு ஊடகங்கள் பலவண்ணத்திலும்-பலமடங்கு முன்னேறிய வாய்ப்பு-வசதிகளோடும் பல்லை இளிப்பதில் பலியாவது நம் சந்ததிகள் தானே என அரசுகள் கவலைப்பட வேண்டாமா?
மக்களுக்கு இலவசமாகத் தரப்படவேண்டிய கல்வியும் மருத்துவமும்தானே நம்நாட்டில் ஏழைக்கு எட்டாக் கனியாக இருக்கிறது?! மற்ற இலவசங்களையெல்லாம் நிறுத்திவிட்டு அனைவருக்கும் உயர்கல்வி வரை இலவசம், அனைத்து மருத்துவமும் இலவசம் என்று கொண்டுவரட்டும், கல்விவள்ளல்கள் கடையை மூடி-ஓடிவிட மாட்டார்களா? மற்றவற்றை இலவசமாகக் கொடுக்க முன்வரும் அரசுகள், ஏழைக்கு எட்டாக் கனியாகிவிட்ட கல்வி-மருத்துவம் இரண்டையும் எப்படியாவது வாங்கிவிடும் போட்டியில்தான் இளைய தலைமுறை பலியாகிறது என்பதை உணர வேண்டாமா?

திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடரிலும் வரும் குழந்தைகள் "பிஞ்சிலே பழுத்தது"போலப் பேசும்பேச்சுகளைப் பார்த்தால், வியப்புக்குப்பதிலாக நமக்கு வேதனை தான் மிஞ்சுகிறது. அதிலும் சில காட்சிகளில் நகைச்சுவை எனும் பெயரில் குழந்தைகள் பேசும் சிலவசனங்கள் எரிச்சலையும் ஆற்றாமையையும் அல்லவா எழுப்புகின்றன?

"தமிழகத்தின் தங்கக் குரல்” "செல்லக்குரல்" "குட்டிக்குரல் தேடல்" என்று ஒவ்வொரு தொலைக்காட்சியும ஒவ்வொரு பெயர் வைத்துக்கொண்டாலும் போட்டிக்கு வரும் குழந்தைகள் பாடும் பாடல் குழந்தைள் பாடக் கூடியதாக இருக்கிறதா என்று எந்த நடுவராவது கவலைப் படுகிறாரா? 5வயதுக் குழந்தை முக்கி முணகிப் பாடும் காமரசப் பாடல்களைப் பாடும் குழந்தையின் வயதுக்கு இது சரிதானா என்று யோசிக்க வேண்டாமா? இவர்களின் வணிக நோக்கத்திற்கு, பாடிக்கொண்டிருக்கும் சில நூறு குழந்தைகள் மட்டுமல்லாமல், பார்த்துக் கொண்டிருக்கும் பல கோடிக் குழந்தைகளும் பலியாகி ஒரு தலைமுறையே "குழந்தைமை"யை இழந்து பிஞ்சிலே பழுத்து உதிரவேண்டியதுதான் விதியா?பேச்சு பாட்டு நடிப்பு மூன்றையும்தான் கேட்கிறேன்.
 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், "வாடா மாப்பிள வாழப்பழத் தோப்புல வாலிபால் ஆடலாமா?” என்பன போலும் பாடல்களை ஏராளமான முகபாவங்களுடனும் தாராளமான இடுப்பாட்டத்தோடும் ஐந்து வயதுக் குழந்தை அனுபவித்துப் பாடுவதைப் பார்வையாளர்கள் பார்த்து பரவசப்படுவதும், நடுவர்கள் பார்த்துப் பாராட்டுவதும் சரியானதுதானா? இர்பான் கூட இப்படி ஒரு இந்தி திரைப்படம் பார்த்த்தாகச் சொன்னானே?
 ஒரு சிலர் மிகச் சரியான விமரிசனங்களோடு அந்த 'மீத்திற'க் குழந்தைகளின் அபாரத் திறமையை மனம்விட்டுப் பாராட்டும்போது நமக்கும் ஏற்படும் மகிழ்ச்சி, இதுபோன்ற வயதை மீறிய விஷயங்களோடு வரும்போது அதற்குப் பயிற்சி கொடுக்கும் பெற்றோரிடம் "இப்படிச் செய்வது தவறு, இது குழந்தைகளுக்கும் நல்லதல்லஎன்று எடுத்துக் கூறித் திருத்துவதல்லவா கலைத் தாய்மையின் கடமையாக இருக்கும்? அவர்களே இதைப் பாராட்டிவிட்டால் பிறகு பெற்றோர்களின் குழந்தைப் பயணம் அந்தத் திசையில் தானே அதிவேகமாக இருக்கும்!
இப்போது சொல்லுங்கள்
 ஆசிரியர் உமாமகேஸ்வரியை வகுப்பறையிலேயே குத்திக் கொன்றது யார்?
கல்விமுறை, ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், அரசுகள் ஆகிய நாம் எல்லாரும்தானே?

செத்துப் போன உமாவை உலகம் தெரிந்து கொண்டது.

குற்றுயிரும் குலை உயிருமாகத் திரியும் ஆயிரக்கணக்கான உமாக்களும் இர்பான்களும் சாகுமுன், நாமெல்லாரும் ஏதாவது செய்தாக வேண்டும். அதுதான் உமாவின் ரத்தம் நமக்குச் சொல்லியிருக்கும் செய்தி.
----------------------------------------------------------------- 
நன்றி,  கீற்று இணைய இதழ்  
http://www.keetru.com/ ஞாயிறு, 11 மார்ச் 2012
--------------------------------------------------------------- 
இக்கட்டுரையை விரும்பி எடுத்து வெளியிட்ட அறந்தாங்கி மண்வாசம்சிறப்பு மலர்க்குழு -சிபிஐ(எம்) தோழர்கள்  குறிப்பாக அதன் தலைவர்-கவிஞர் கவிவர்மன் அவர்களுக்கு எனது நன்றி. இதே நிகழ்வு  தொடர்பான  எனது கவிதையைப் படிக்க -http://valarumkavithai.blogspot.com/2012/02/blog-post_7985.html

----------------------------------------------------------------------------------------------------------------------------------------- 

எனது ஆசிரியப் பணியில் ஒரு நல்ல நாள்!


இன்று 25-02-2012 
எனது ஆசிரியப் பணியில் ஒரு நல்ல நாள்!
     தொடர்ச்சியாகப் பெரும்பாலான சனிக்கிழமைகள் பள்ளி நாளாகவே கடந்து போனதில் நம் மாணவர்களுடன் ஆசிரியர்களும் பெரிதும் வருந்தியிருக்கின்றனர் என்பது நேற்றுத்தான் எனக்குத் தெரிந்தது!(“எந்த வேலையை எடுத்துக்கிட்டாலும் “மாங்கு மாங்கு“ன்னு அவன் பாட்டுக்கு மாடுமாதிரி வேலை பார்ப்பான்“என்ற என்மீதான குற்றச்சாட்டு சரிதான் போல! மற்றவர்களின் கருத்தைக் கேட்டே செய்வதாக நினைத்துக்கொள்ளும் நினைப்பு வேறு!)
      நேற்று மதிய உணவுக்குப் பின், மெதுவாக எனது –துணை முதல்வர்- மேசையின் முன்னால் வந்து உட்கார்ந்தனர் எமது –புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி- ஆசிரியர்கள் மூவர். நான்கு பிரிவுப் பத்தாம் வகுப்புகளில், மூன்று வகுப்பாசிரியர்கள் அவர்கள். ஆங்கிலவழி வகுப்பாசிரியர் லலிதா வரவில்லையே என அந்தப் பக்கம் எட்டிப்பார்த்தேன் அவர் எப்போது பார்த்தாலும் மாணவர்களுடனேயே இருப்பார். இப்போதும் அப்படித்தான் போல! சனிக்கிழமைகளில் மட்டுமல்லாமல், காலை 8.30-9.30 சிறப்பு வகுப்புகளோடு, அன்று யாராவது ஆசிரியர்கள் விடுப்பு என்றால் அந்த வகுப்பையும் சேர்த்து எடுத்துக் கொண்டு சலிக்காமல் நடத்தும் அந்தச் சகோதரிகள் மேல் எனக்கு எப்போதுமே நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு.
     “சொல்லுங்கம்மா என்ன எல்லாரும் சேர்நத மாதிரி வந்திருக்கீங்க...! என்றேன்.
    அறிவியல் ஆசிரியரும் பத்து அ பிரிவு வகுப்பாசிரியருமான கே.எஸ்(சுசிலா) டீச்சர்தான் சொல்ல ஆரம்பித்தார்கள்... “இல்லங்கய்யா.. காலையில பசங்க உங்க கிட்ட “நாளைக்கு (சனிக்கிழமை) சிறப்புவகுப்பு உண்டுங்களாய்யா?“னு கேட்டப்ப “ஆமாமா“ன்னு சொன்னீங்களாம்.. அவிங்க கேக்க வந்தது பள்ளிக்கூடம் உண்டாங்கிறத்ததான்.. முன் முழு ஆண்டுத் தேர்வுக்கு தேர்வுஉள்ள வகுப்பு மாணவர்கள் மட்டும் வந்தாப் போதும்னு சுற்றறிக்கை வந்துதுல்ல..?நாளை பத்தாம்வகுப்புக்குத் தேர்வுஇல்ல..அதான் வரணுமா னு...?
     “பத்தாம் வகுப்பு மாணவ-மாணவியர் மட்டும் தேர்வு இல்லாவிட்டாலும் வகுப்புக்கு வரணும்“னு சுற்றறிக்கை –கட்டம்கட்டி- எழுதி, முதல்வரிடம் கையெழுத்து வாங்கி அனுப்பி வைத்ததே நான்தான் என்பது என் கையெழுத்திலேயே அவர்களுக்குத் தெரிந்திருந்தது புரிந்தது!
     இப்போது புரிந்து விட்டது. தமிழாசிரியர் கலா மெதுவான சிரிப்போடு என்னைப் பார்த்தது நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்பதைப் புரிந்துகொண்டது போல இருந்தது! அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டுதான் வந்திருப்பார்கள் போல! இது புரிந்தும் புரியாதது போல, “இல்லம்மா... விட்டா, நாளைக்குத் திருவப்புர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா... ஊரெல்லாம் கூடிரும்... அங்க போயிட்டு விடியவிடிய நின்னு கரகாட்டத்த வேடிக்கை பார்த்துட்டு திங்கக்கிழமை இங்கவந்து பரிச்சைய எப்படி எழுதுவாங்கெ? அதான் யோசிக்கிறேன் எதுக்கும் முதல்வர் கிட்ட கேட்டுடுங்களேன்“ என்று பட்டும் படாமலும் சொல்லிப் பார்த்தேன்.
     “அது தெரியாமத்தான் உங்ககிட்ட வந்தமாக்கும்“ என்று உடன் பதில் வந்தது!
      அனேகமாக எல்லா சனிக்கிழமையும் வேலை பார்த்தாகி விட்டதும் அதில் பெண்கள் படும் சிரமமும் கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. வேலைக்குப் போகும் பெண்களுக்கு “இரண்டு ஷிப்ட் வேலை“ என்ற கந்தர்வனின் சிறுகதை நினைவுக்கு வந்தது.
      பிறகு முதல்வரிடம் பேசி நாளைவரவேண்டாம் என்றதும் எல்லாருக்கும் மகிழ்ச்சி.
      ஆனால், நான் ஒரு திட்டத்தோடுதான் இதற்கு ஒப்புக் கொண்டிருந்தேன் என்பது என் மாணவப் பிள்ளைகளுக்கு இன்றுதான் தெரிந்ததாம்! இன்று -25-02-2012- எனது 32 ஆண்டுக்கால ஆசிரியப் பணியில் எனக்கு மட்டுமல்ல,  என் பிள்ளைகளுக்கும் தம் வாழ்வில் மறக்க முடியாத நாள்களில் ஒன்றாகப் போகிறது என்பது நேற்றே எனக்குத் தெரியும்!
அது நல்ல படியாக இன்று நடந்தது என்பதில்தான் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி!
அதுதான் என்ன...? உடனே சொல்லிவிட்டால் எப்படி? என் மாணவ-மாணவிகளைப் போல ஒரு நாள் பொறுத்திருங்களேன்...! நாளை விரிவாகச் சொல்கிறேன். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவர்கள் முகத்தில்தான் என்ன ஒரு மகிழ்ச்சி! என்னையும் அவர்கள் அன்பில் திக்குமுக்காட வைத்த இந்தப் பணியில் நல்லாசிரியர் விருது என்னங்க பெரிய விருது...   
இதுமாதிரி ஒரு அனுபவம் போதும் போங்க...!  
நாளை பார்ப்போம்.
-------------------------------------------------------------------------  

க.நா.சுப்பிரமணியம் - ஒரு முழு விமரிசனம்


நன்றி திரு கோமல் சுவாமி நாதன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு  வெளிவந்த ‘சுபமங்களா’ மாத இதழ்
(மார்ச், எப்ரல், மே – 1994)
---------------------------------------------------------------------------------------
க.நா.சு.
என்கிற
க.நா.சுப்ரமண்யமும்
திலகாட்ட 
மகிட பந்தனமும் 
-- நா.முத்து நிலவன்
---------------------------------------------------------------------------------------

ஒரு பெரும் படிப்பாளி நாடு நாடாகப் போனான்.
நான் படிக்காத புத்தகமில்லை. என்னோடு வாதம் செய்து ஜெயிக்க
        யாருண்டு?” – என்று சவால் விட்டான் விஜய நகரத்துக்கும் போனான்.
  ராஜா கிருஷ்ண தேவராயர் தெனாலிராமனைத் தேர்ந்தெடுத்தார்.
“நீதான் அவனோடு வாதம் செய்து ஜெயிக்க வேண்டும்” என்றார்.

அவை கூடியது.
ராஜாவும் பெரிய பெரிய அறிஞர்களும் சூழ்ந்திருந்தனர்.
அந்தப் பக்கம் ‘படிப்பாளி’ அருகில் ஏராளமான புத்தக மூட்டைகள்,
இந்தப்பக்கம் தெனாலிராமன் - அருகில் ஒரே ஒரு – பெரிய புத்தகம்!
அந்தப் பெரிய அளவில் ஒரு புத்தகத்தை ‘படிப்பாளி’ அதுவரை
         பார்த்ததில்லை. சந்தேகம் வந்தது. ‘நாம் இதுவரை படிக்காத புத்தகமாக
         இருக்கிறதே!’ யோசித்தபின் கேட்டான். ”அது என்ன புத்தகம்?” தெனாலி
        சொன்னான் - “திலகாட்ட மகிட பந்தனம்”.
மேலும் சொன்னான் - “இதிலிருந்துதான் நான் கேள்விகளைக் கேட்கப்
        போகிறேன்.”

படிப்பாளி பரபரப்பானான்.
‘இது என்னடாது, வம்பாப் போச்சு, இப்படி ஒரு புத்தகத்தை இதுவரை நாம்
         படித்ததில்லையே! எல்லா நாடும் சுற்றி – ஏராளமான மொழி கற்று வந்த
         நமக்கு இன்று என்ன சோதனை?’ இருந்தாலும் சொன்னான்.
“திலகாட்ட மகிட பந்நதனம்தானே!” ஹஹ்ஹா! நான் படித்து விட்டேன்,
          ஆனால் இன்றைக்கு எடுத்து வரவில்லை நாம் நாளை சந்திப்போம்”
         என்றான்.

அவ்வளவுதான் -
அன்றிரவே சொல்லிக்கொள்ளாமல்; போய்ச் சேர்ந்தான் அந்த உலகப்புகழ்
         படிப்பாளி!

ராஜா கிருஷ்ண தேவராயருக்கு சந்தோசம்.
தனது நாட்டின் மானம் காப்பாற்றப் பட்டதற்கு நன்றிகூறி,
       தெனாலிராமனுக்கு பரிசுகளும் தந்தார். பிறகு ஆவலை அடக்க முடியாமல்
       கேட்டார். “அந்தப் புத்தகத்தைக் கொடு”.
‘பெரும் படிப்பாளிக்கே தண்ணி காட்டிய புத்தகமல்லவா?”
        திறந்து பார்த்தார்.
புத்தகத்தைச் சுற்றிச் கட்டியிருந்த மணிக்கயிற்றை அவிழ்த்தால், புத்தகம்
        போல செய்யப்பட்ட ஒரு மரப்பெட்டி அது! அதோடு ஒரு மாடுகட்டும் கயிறு
         கொஞ்சம் எள்ளு சில காய்ந்த குச்சிகள்! ஆவ்வளவுதான் உள்ளே இருந்தது!

        அது புத்தகமே அல்ல!
“என்ன இது?” என்பது போலத் தெனாலியைப் பார்த்தார். தெனாலி
          சொன்னான்:
“திலகம்(எள்) காட்டம் (விறகு) மகிடபந்தனம் (எருமை கட்டும் கயிறு)

கதை போதும்.
க.நா. சுப்ரமணியம் தெனாலிராமனா? படிப்பாளியா? ரெண்டு குணத்திலும் கொஞ்சம் கொஞ்சம் சேர்ந்த ஒரு புது மாதிரியா?
இந்தக் கட்டுரையைப் படித்த பிறகு நீங்களேதான் முடிவு கட்ட வேண்டும்.
இறந்து போன இலக்கியவாதியைப் பற்றி 1912 – ஜனவரி 21 ஆம் தேதி தஞ்சை மாவட்டம் வலங்கைமானில் கந்தாடை நாராயண ஸ்வாமி அய்யரின் மகனாகப் பிறந்தார் க.நா.சுப்ரமணியம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் பாடத்தில் பட்டம் பெற்றும் வேலைக்கு போக முயற்சி செய்யாமல் தந்தை கொடுத்த உற்சாகத்தில் ஆங்கிலத்தில் ‘எழுத’ ஆரம்பித்தார்.
அவரது சிறுகதைகள், கட்டுரைகள் பல இந்திய-மேலைநாட்டு இதழ்களில் வெளியாயின.
‘சமயப்பிரச்சாரம் போல இலக்கியப் பிரச்சாரம் செய்கிறேன் என் வாழ்க்கையே இலக்கியப் பிரச்சாரம்தான்’எனச் சொல்லியவர் கடைசி வரை முழுநேர எழுத்தாளராக வாழ்ந்து மறைந்தார்.
தனது திருமணத்திற்குப் பிறகு இளம் மனைவியைப் பிறந்த வீட்டில் விட்டு விட்டு அப்பாவின் பென்ஷன் வரும் தைரியத்தில் 1934இல் சென்னைவாசியானார்.
1958 முதல் --‘சரஸ்வதி’யில் வெளிவந்த அவர் வார்த்தையில் சொன்னால்-- ‘இலக்கிய வாழ்வு பற்றிய தீர்மானத்தோடு, ஒரு டைப்ரைட்டருடன் சென்னை வந்து’ தங்கசாலைத் தெருவில் உள்ள ஹிண்டு ஹோட்டலில் ரூம் எடுத்துக் கொண்டு தங்கினார்.
இடையில் ‘மணிக்கொடி’ ‘சரஸ்வதி’ ‘எழுத்து’ போன்ற சிறு பத்திரிகைகளில் எழுதியதோடு
‘பசி’ தொடங்கி, ‘பித்தப்பூ’ வரை பன்னிரண்டு நாவல்கள் நான்கு சிறுகதை தொகுதி இரண்டு கவிதைத் தொகுதிகளுடன் ஏராளமான விமரிசனக் கட்டுரைகளும் சில மொழிபெயர்ப்புகளும் அவர் தந்தவை. அவரே சொன்னது போல ‘தமிழ் இலக்கியப் பண்பாட்டுத் தளத்தின் வீழ்ச்சியைக் காணச் சகிக்காமல்’ இருபது வருடம் டெல்லிக்கு ‘வனவாசம்’ போனார்.
என்றாலும் அது ‘அஞ்ஞாதவாசம்’ அல்ல. வடஇந்திய ஆங்கிலப் பத்திரிகைகளில் இலக்கியக் கட்டுரைகள் எழுதி வந்தார். எண்பதுகளின் தொடக்கத்தில் சென்னை திரும்பி குமுதம் குங்குமம் தினமணி நாளிதழ் போன்ற பெரிய பத்திரிகைகளில் எழுதிக் தொண்டே ஞானரதம் முன்றில் போன்ற சிறு பத்திரிகைகளுக்கு கௌரவ ஆசிரியராகவும் இருந்தார்.
மீண்டும் பேத்தி, மகள்-மருமகனைப் பார்க்க டெல்லி போனபோது அங்கேயே  காலமானார்.

க.நா.சு.வின் மொழிபெயர்ப்புப் பணிகள்
சி.சு.செல்லப்பா (எழுத்து – மே’60) சொல்வது போல ‘க.நா.சு.வைச் சுற்றி வீசியது முழுக்க முழுக்க மேல்நாட்டுக் காற்று அதனால் தமிழுக்கு சில நல்லது நடந்தது. தமிழ் இலக்கியப் போக்குகள் குறித்து வடஇந்திய ஆங்கிலப் பத்திரிகைகளில் நிறைய எழுதினார். அதைவிடவும் சிலப்பதிகாரத்தையும் திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது நினைவில் நிற்கக் கூடியது.
அதே போல வெளிமாநில மேல்நாட்டு ஆங்கில இலக்கியங்களைத் தமிழர் படிக்க அறிமுகம் செய்ததுதான் அவர் தமிழருக்குச் செய்த பெரிய இலக்கியத் தொண்டு. உலகத்துச் சிறந்த நாவல்களை – 15 ஆசிரியர்களைப் பற்றிய அறிமுகத்தோடு-சுருக்கித் தமிழில் தந்ததும் ‘சிறந்த பத்து நாவல்கள்’ என ஆங்கிலத்தில் தந்ததும் மிக நல்ல காரியம்.
தான் படித்ததில் பிடித்த இலக்கியங்களைப் பற்றி ‘படித்திருக்கிறீர்களா’ என்று தொடர்ந்து எழுதினார். பின்னர் இது ஒரு தொகுப்பாகவும் வந்தது.
‘நோபல் பரிசு பெற்ற கண்டக்டர்’ என்றதும் ஆச்சரியமாக இருக்கும். நார்வே எழுத்தாளர் நட்ஹாம்சன், தான் எழுதிய ‘நிலவளம் நாவலுக்குப் பரிசு பெற்றதைத்தான் க.நா.சு. தன் பாணியில் அப்படிக் குறிப்பிடுகிறார். அதைவிட ஹிட்லரின் பாசிஸத்துக்கு நட்ஹாம்சன் ஆதரவு தெரிவித்த காரணத்தால் போர் முடிந்ததும் அவர் எழுதிய நாவல்களையெல்லாம் அவர் வீட்டில் கொண்டு போய் வீசியெறிந்து வாசகர்கள் எதிர்ப்பைக் காட்டிய செய்திகளையும் க.நா.சு எழுதிய பின்தான் தமிழ் வாசகர்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.
எல்லாம் சரி. தனது ஆங்கில-பிறமொழி அறிவைக் கொண்டு மொழிபெயர்த்ததை விடவும், தமிழரை விமரிசனம் எனும் பெயரிலும், நாவல்-கவிதை-சிறுகதைப் படைப்பு எனும் பெயரிலும் அவஸ்தைப் படுத்தியதே க.நா.சுவை பற்றிய வடிவமாக நம் கருத்தில் பதிந்திருப்பதுதான் யோசிக்க வைக்கிறது.

மேல்நாட்டு ‘ஜம்பமே’ விமரிசனமா?
தமிழ்நாட்டின் நாலாந்தர மனிதன் ஒருவன். அமெரிக்காவுக்குப் போய் வரும் வாய்ப்பு கிடைத்துவிட்டால் அதன் பிறகு வாய் திறக்கும் போதெல்லாம் - ‘ளுநந.. றாநn ஐ  றயள in  யுஅநைசiஉய’ என்று ‘பந்தா’ காட்டுவது இயல்பு.
நிறைய ஆங்கில இலக்கியம் படித்த க.நா.சுவிடம் நாம் எதிர்பார்த்ததற்கு மாறாக, அங்கே இருப்பதில் ஒரு சதவீதமும் தமிழில் இல்லை என்பது போலவே பெரும்பாலும் எழுதியது. அவர் படிப்புக்குத் தகுதியானது தானா?
‘வெற்றிகரமான --முழுக்க முழுக்க-- காந்திய நாவலைப் படிக்க வேண்டுமானால் நாம் அமெரிக்காவுக்குத்தான் போக வேண்டும்’ என்கிறார். தமிழில் இருக்கட்டும், இந்தியாவிலேயே எந்த மொழியிலும் இல்லையா?
‘உலக மொழிகளில் சிறந்த நாவல்கள் பட்டியல் போட்டால் இந்திய நாவல் ஏதும் அதில் இருக்குமா என்பதே சந்தேகம்தான். தமிழ் நாவலைப் பற்றி அந்தச் சந்தேகத்துக்கும் இடம் கிடையாது’ என்கிறார்.
இதுதான் க.நா.சு. என்றால் இதுதான் விமரிசனம் என்றால் இது சரிதானா? என்பதை விமரிசகர்களும் வாசகர்களும்தான் சொல்ல வேண்டும்.
தமிழில் மொழிப் பாடம் படித்த ஆசிரியர் - பேராசிரியர்களின் (யுஉயனயஅiஉயைளெ) இலக்கியப் பணி போதாது. மற்ற மொழியில் கலை இலக்கியங்களைப் படித்தவர்கள் வளர்த்திருப்பது போல நாம் சிரத்தை எடுக்கவில்லை என்பது நம் எல்லோர்க்கும் உள்ள கருத்துதான். ஆனால் இந்த விமரிசனத்தையும் ஆக்கபூர்வமாக நம் எதிர்பார்ப்பை உற்சாகமூட்டும் வகையில் எழுதமாட்டார்.
தமிழில் பெண் கவிஞர்கள் எனும் தலைப்பில் ஒருவர் ஆய்வு செய்தார். க.நா.சு அவரைப் பார்த்து ‘ஒளவையார் கிரோக்க ஸாஃபோ போன்றவர் என்று உங்களால் ருசுப்பிக்க முடியுமா? என்று கேட்டாராம். ஆய்வாளர் ‘ஸாபோவா யாரது?’ என்று கேட்டாராம். அவ்வளவுதான். ‘அவரிடம் பேச இனி ஏதும் இல்லை’ என்று வந்துவிட்டாராம் - தினமணியில் எழுதுகிறார்.
சுந்தர ராமசாமி சொல்வது போல அவர்படித்த அளவிலும் வகையிலும் முறையிலும் படிக்கக் கூடாது என்பதை அவரது ஒவ்வொரு விமரிசனத்திலும் வெளிப்படுத்துவது என்ன பயனைத் தரும்? அவர் எழுதிய விமரிசனக் கட்டுரைகள் பெரும்பாலானவற்றில் ஊடுபாவாக ஓடும் கருத்து என்ன? –
படிப்பவருக்குப் புதிய புதிய செய்திகளை அறிமுகப்படுத்தும் வகையில் ‘பயனுறுத்துவது (பயன்படுத்துவது) அல்ல, படிப்பவரைப் பயமுறுத்துவதே எனில் அது தேவையா?
‘1827 இல் எக்சர்பான் என்கிற தன் நண்பரோடு பேசும்போது ஜோஹன் வுகாங் கதே என்ற இலக்கியவாதி…’ – என்று ஒரு பெரும் கட்டுரையைத் தொடங்குகிறார். கவனியுங்கள் அந்த எழுத்தாளர் எழுதிய செய்தி அல்லவாம். ‘அவர் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்த செய்து கூட எனக்குத் தெரியுமாக்கும்’ எனும் தொனி, பயன்படுவதா பயமுறுத்துவதா?
நமக்கு பாரதியைத் தெரியும் வ.வே.சு.வையும் தெரியும். ஆனால், இந்த இரண்டு பேரில் அதிகப் படிப்பாளி யார்? என்று யோசித்திருக்கிறோமா?
படிப்பு என்ன படிப்பு! நம் நாட்டில் படித்தவர்களின் லட்சணம் நமக்குத் தெரியாமலா இருக்கிறது? என்று சலித்துக் கொள்வோம். ஆனால் வ.வே.சு.வுக்கு பாரதியை விட அதிகப் படிப்பு இருந்தது என்கிறார் க.நா.சு. ஏன் இப்படிக் சொல்கிறார்? என்ன ஆதாரம்? இந்த ஒப்பீட்டால் இலக்கிய வளர்ச்சிக்கு என்ன பயன்?
இதையெல்லாம் அவர் யோசிப்பது கிடையாது. நாம் யோசிக்கவேண்டும்தானே?
‘எதுதான் நல்ல கவிதை! என்று கேட்டால் அதற்கும் உடனே வெளிநாட்டைத்தான் கை காட்டுவார் க.நா.சு. (ஊர்ஊருக்கும் அண்ணா சிலை மாதிரி க.நா.சுவுக்கும் சிலை வைக்க விரும்புவோர், மேல்நாடுகளை நோக்கி, ‘தூக்கியதிருக்கர’ பாவத்தில் சிலையைத் தேர்ந்தெடுக்கலாம்) எஸ்ரா பவுண்ட் என்ன? வால்ட் விட்மன் என்ன டி.எஸ்.எலியட் என்ன என்ன என்ன என்று சுந்தரம்பாள் பாணியில் சுதி நீட்டுவார். நாம் அந்த சுதியில் சொக்கிவிடுவோம்!

பொத்தாம் பொதுவாய் ஒரு போடு போடு!
‘இன்னின்ன காரணங்களால் இது இது சிறந்தது’ என்று எதையும் ஒப்பிடுவது நம் பழக்கம். எதையும் பொத்தாம் பொதுவாக ஒரு போடு போடுவதே க.நா.சு.வின் வழக்கம்.
இந்தியாவின் ‘சாதனை ஊர்கள்’ பற்றிய அவரது போடு ஒரு ‘தனீ’ போடு பாருங்கள் - அதற்கு முன்பு, இந்தியாவில் உள்ள நகரங்களில் விஞ்ஞானத்திலும் அரசியலிலும் சமூக விஞ்ஞானத்திலும் சாதனை புரிந்த ஊர்கள் எவையெவை என்று ஒரு சிறிது யோசித்து வைத்துக் கொள்ளுங்கள் என்ன? அப்படியெல்லாம் தனித்தனியாகப் பிரிக்க முடியாதே என்கிறீர்களா? சரி-க.நா.சு.வின் ‘சாதனை பூமி’ பட்டியலைப் பாருங்கள்.
1. கல்கத்தா – விஞ்ஞானம்
2. லக்னோ – அரசியல்
3. பம்பாய் - சமூக விஞ்ஞானம்
என்ன விழிக்கிறீர்கள்? ‘ஒன்றும் மூன்றும் இடம் மாறினால் தேவலையே’ என்று யோசிக்கிறீர்களா? க.நா.சு. ‘பரவாயில்லை அப்படியும் வைத்துக் கொள்ளலாம்’ என்பார். அதுதான் க.நா.சு. அதுதான் க.நா.சு.வின் விமரிசன பாணி. பொத்தாம் பொதுவாகச் சொல்லும் பொது காரணம் சொல்ல வேண்டியதில்லை. பின்னால் மாற்ற வேண்டியிருந்தால் சரி வைத்துக் கொள்ளுங்கள் என்பார்.
இந்தப் பொத்தாம் பொதுவான விமரிசன பாணியால்தான் ‘சி.சு. செல்லப்பா 1956 இல் தொகுத்த ‘புதுக்குரல்கள்’ தொகுப்பைத் தாண்டி ஒரு புதுக்கவிதைத் தொகுதியும் தமிழில் தேறவில்லை’ என்று 24.2.88 ல் கூட க.நா.சு.வால் எழுத முடிந்தது.
நவீன கவிதையில் மட்டுமல்ல க.நா.சு. தனக்கு அதிகப் பரிச்சயமில்லை என்று அவரே ஒத்துக்கொள்ளும் பழந்தமிழ் இலக்கியம் பற்றியும் இப்படித்தான்.
“சங்க இலக்கியம் என்று சொல்லப்படுவது சுமார் 27,000 வரிகள். இதில் 6,000 வரிகளாவது நல்ல கவிதையாகத் தேறும்” என்கிறார். (தினமணி 24.3.88)


 சங்க இலக்கியத்தை வரிக்கணக்கில் பிரிப்பவர் கவிஞராகவோ, விமரிசகராகவோ இருப்பது சந்தேகம். வேண்டுமானால் வருமான வரித் துறைஞராக இருக்கலாம். அதுவும் பத்துப்பாட்டும், எட்டுத் தொகையும் ஆக 18 தொகுப்புகளின் தொகுப்பு இரண்டு. இதில் எது கவிதை நயமிகுந்தது? எது குறைவானது? என்று கூறும் பொறுமையோ, அதில் ஆங்கில இலக்கியத்தில் அவருக்கிருந்தது மாதிரியான – பரிச்சயமோ நிச்சயமாக அவருக்கில்லை. பிறகு ஏன் இப்படி பொத்தாம் பொதுவான ஒரு போடு?

இங்குதான் காலஞ்சென்ற இலக்கிய விமரிசகர் க. கைலாசபதி சொல்வது சரியாகப் போருந்துகிறது. வாழ்க்கையில் செல்லப்பிள்ளையாக வளர்ந்து வாழ்ந்த அவரது எழுத்திலும் செல்லப்பிள்ளைத்தனம் பிரதிபலிக்கிறது. குறும்பும் பொறுப்புணர்வு இன்மையும் மட்டு மதிப்பின்றி தூக்கியெறிந்து பேசும் மனோபாவமும் இவரது வாழ்க்கையிலும் இலக்கியத்திலும் காணப்பட்டன.

க.நா.சு. எனும் கவிஞர் - சிறுகதையாளர் -  நாவலாசிரியர்…..                          
இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டவர். கேரளாவின் குமாரன் ஆசான்’ நினைவுப் பரிசை கவிதைக்காகப் பெற்றவர். இவரது கவிதையில் இவருக்கே பிடித்ததாக இவரே கூறும் ஒரு கவிதையைப் படித்துப் பாருங்கள்.
இல்லை இல்லை இவர் கூறுவது போல கவிதை படிப்பதல்ல அனுபவிப்பது –
அனுபவியுங்கள்!
வைகுண்டம்

  வைகுண்டத்து      
                                  வாசல்                
                                  செல்லரித்தது  
                                  போக
                                  பாக்கி
                                  க்றீச்
                                 சிட்டுத்          
                                 திறந்து
                                 நிற்க
                                 சிங்க
                                ராச்சாரி
                                 யார் - யார்
                               அவர்?
                                அவர் யாரோ
                                 தெரு  
                                வெல்லாம்
                                மூ
                                 ணு
  வ
                                  ரி
                                 சை
                                 க்யூ
                                நிற்க
                               ஆண்
                               டொன்
                               றொன்
                               றொன்
                                றாகக்
                                கழிய
                                ஐம்
                                 பத்
                                திரண்டும்
                                போக
                                எஞ்சிய
                                 இரு
                                 பத்  
                                தெட்டும்
                                நீண்டு
                                 வை            
                                 குண்டத்து
                                 வாசல்
                                 செல்லரித்து
                                 போக
                                 பாக்கி
                                 கூட்டத்திலே
                                  அவளை
                                 கை
                                 விட்டுவிட்டேன்.
இந்த இடத்தில் இந்தக் கவிதை பற்றிய எனது கருத்தைச் சொல்வதை விடவும், க.நா.சுப்ரமண்யம் - புதுக்கவிதைகள் நூலுக்கு முன்னுரை எழுதிய ஞானக் கூத்தன் சொல்வதே பொருத்தமாகத் தோன்றுகிறது.
அவர் சொல்கிறார்:
“க.நா.சு. வகுத்துக் கொண்ட கோட்பாடுகளுக்கு ஏற்ற மாதிரியே அவரது கவிதைகள் அமைந்துள்ளன. தத்துவரீதியாகவும், தூய இலக்கியக் கோட்பாட்டு ரீதியாகவும்
இன்றைய (முழு அளவில் இல்லாவிட்டாலும் முக்கால் அளவில் இன்றைய) க.நா.சு. என்று மதிக்கத்தக்க சுந்தர ராமசாமி, க.நா.சு.கவிதைகள் பற்றி என்ன சொல்கிறார்? ‘இவரது கவிதைகளை இவரது சிறுகதைகளின் தரத்தில் சேர்க்கலாம்”. என்கிறார்.
ரொம்பசரி,
அப்படியானால் இவரது சிறுகதைகள் எப்படி? அவரே சொல்கிறார். ‘இவருடைய பெரும் பாலான கதைகள் நம் மனத்தைத் தொடுவதில்லை நினைவில் பற்றி நிற்பதும் இல்லை.’

சரி. சிறுகதைகள் - கவிதைகளை விட்டு விடுவோம் நாவல்களில் அவர் நிச்சயமாகச் சாதித்திருக்கிறார் என்கிறார்கள். ‘1940களில் வெளியான ‘சர்மாவின் உயில்’ என்ற நாவலில் காணப்படும் கட்டுக்கோப்பும் உணர்ச்சியும் வேகமும் 1988ல் வெளியான அவரது கடைசி நாவல்களின் ஒன்றான ‘தாமஸ் வந்தா’ரிலும் காணப்படுகிறது. அடக்கிச் சொல்வது சொல்லாமல் சொல்வது என்ற மரபுதான் அவர் மரபாக இருந்து வந்தது’ என்கிறார் சா.கந்தசாமி.
1986-நடுவில் ‘கணையாழி’ பத்திரிக்கையில் (க.நா.சு. அதில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்த போது) தமிழில் சிறந்த பத்து நாவல்களைக் குறிப்பிடக் கேட்டு வாசகர் பட்டியல்களை வெளியிட்டது. சுமார் நாற்பது பட்டியல்களில் ஏறத்தாழ 350 நாவல்களை வாசகர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். இதில் க.நா.சு.வின்  ஒரே ஒரு நாவல் (பொய்த்தேவு) மட்டுமே இடம்;பெற்றதை இங்கு நினைவுபடுத்துகிறேன்.
மொழிபெயர்ப்பு நாவல்களையும் சேர்த்தால் இதுவரை க.நா.சு. வின் இருபது நாவல்கள் வெளிவந்துள்ளன. இவரும் தமிழ் நாவலில் சோதனை செய்த நாவலாசிரியர்கள் பட்டியலில் தன் பெயர் தவறாமல் இடம்பெறும்படி-(தனது பட்டியலில்தான்) பார்த்துக்கொள்வார். சுந்தர ராமசாமியும் இவரது கவிதை, சிறுகதைகளை விட நாவலில் ‘சாதித்திருப்பதா’கவே கூறுகிறார்.
தஞ்சை ப்ரகாஷ் ஒரு படி மேலேறி ‘இலக்கிய ஆசிரியப் பணியில் ஒரு கலைஞனாய்த் தனது நாவல்களின் மூலம் பலமுறை நிறுவியும் கூட அதனைப் போதிய அளவில் பாராட்டாத சாகித்ய அகாடமி, அவரது விமரிசனப் புத்தகத்துக்குப் பரிசு கொடுத்ததற்கு’ ரொம்பவும் வருத்தப்படுகிறார்.

பானைச் சோற்றுக்கு ஒரு பதம் பார்ப்போமா?
க.நா.சு.வின் கடைசி நாவல் ‘பித்தப் பூ’
ஒரு பைத்தியக்கார ஐ.ஏ.எஸ்.ஸைப் பற்றிய கதை! இதன் சுருக்கம் வேண்டுமானால் சின்னக் குழந்தைகள் சொல்லும் ஒரு சின்னக் கதைதான் - பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கும் பைத்திய வைத்தியருக்குப் பைத்தியம் பிடிச்சா, அந்தப் பைத்தியக்கார வைத்தியர், எந்தப் பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கும் பைத்திய – வைத்தியர் கிட்டப் போயி, தன் பைத்தியத்துக்கு வைத்தியம் பார்த்துக்கிட்டு…
என்ன தலை சுற்றுகிறதா? சரி விடுங்கள்.
நடந்த சம்பவங்களை வைத்து தானே கதை சொல்பவராக வரும் க.நா.சு. தன் பெயரான ‘சாமா’ வை (பக். 9,13,33) மறந்து விட்டு கதையோடு அவரே ஒன்றிப் போய் சுப்ரமண்யம் என்றே (பக்.91,92) கூறிவிடுவது சிரிப்பு.
பக்கத்துக்குப் பத்து எழுத்துப் பிழை (உண்மை! வெறும் இகழ்ச்சியில்லை) என்றால் பத்து பக்கத்துக்கு ஒருமுறை கதை நிகழ்ச்சி திரும்பி வரும்! நடுவில் இரண்டு இடத்தில் (பக். 20), கதையை விட்டு விட்டு க.நா.சு. தன் வரலாற்றை ஆரம்பித்து பிறகு விழித்துக்கொண்டு இது இந்தக் கதைக்கு அவசியமில்லை என்று வேறு கூறிப் போகிறார்.
இவர் பேசும் ‘உலக இலக்கியத்தர’ நாவல் எங்கே? இவர் எழுதும் நாவலின் தரம் எங்கே? இப்படி இவர் எழுதும் விமரிசனத்திற்கு அர்த்தமேது?
க.நா.சு.வின் இலக்கிய நடை                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
வார்த்தைச் செட்டு, கலைத்தன்மை, தெளிவு, தரம் என்றெல்லாம் பேசி, அடிக்கடி மாறக்கூடிய தன் பட்டியல்களை வெளியிட்ட க.நா.சு.வின் இலக்கிய நடை மிகவும் செயற்கையானது போலியானதும் கூட.
‘எதையும் தைரியமாகச் சொல்லும் கறார் இலக்கியவாதி’ (‘முன்றில்’ க.நா.சு. நினைவு மலர்க் கட்டுரைகள்), எனும் பெயரை எப்படியோ அவருக்குச் சூட்டி விட்டார்கள்.
எனக்கென்னவோ அவரது இலக்கியம் பற்றிய கருத்தும் - இலக்கிய நடையைப் போலவே தெளிவில்லாமல் இருப்பதாகத்தான் தோன்றுகிறது.
இலக்கியம் என்றால் என்ன? இந்த எளிய கேள்விக்கு க.நா.சு.வின் பதில் என்ன என்பதைப் படித்தாலே போதும் (தினமணி:25.6.88)
‘இலக்கியம் என்று சொல்லப்படுவது சுலபமாக இலக்கியத் தரத்தை எட்டியதாகவே என் படிப்பின் அளவில் என் இலக்கிய நினைப்புகளில் பூர்த்தி செய்வதாகவும் இருக்க வேண்டும். அறிவுத் தனமும் உணர்ச்சித் தனமும் ஒரு சமன நிலையில் செயல்பட வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். நமது நினைவுகளையும் கற்பனைகளையும் அறிவுப் போக்கையும் ;அந்தப் போக்குக்குக் காரணமாக அமைத்து செயல்படுகிற உணர்ச்சித் தனத்தையும் ஒருங்கே ஆழப்படுத்தி விசாலப்படுத்தி, எட்டாததையும் எட்டுகிற மாதிரி தருவதைத்தான் நான் இலக்கியம் என்று எடுத்துக் கொண்டு பார்க்கிறேன்.’
இது மொழிபெயர்ப்பு அல்ல. அவரே தமிழில் எழுதியது.

வாக்கிய அமைப்பு பத்தி பிரிப்பதற்கான தேவை எளிய சொற்களின் தேவையெல்லாம் க.நா.சு.வுக்குத் தெரியாது என்று சொல்ல மாட்டேன். வார்த்தைச் செட்டு இலக்கியத்தில் எழுத்தில் எப்படி வரவேண்டும் என்று பெரியதொரு கட்டுரையே எழுதியவர் அவர்!
‘கவிதையிலும் சரி. வசனத்திலும் சரி. வார்த்தைகளை அளவோடு பயன்படுத்த பாரதிக்குத் தெரியவில்லை’ என்றவர் அவர்! கலிங்கத்துப் பரணியிலும், கம்பராமாயணத்திலும், நாயன்மார்-ஆழ்வார் பாடல்களிலும், ஆண்டாள் பாடலிலும் வார்த்தைகள் தாராளமாக இருந்தன என்று விமர்சித்தவர் அவர்! (தினமணி:4.5.88) அவர்தரும் இலக்கியம் பற்றிய விளக்கம் எத்தனை தெளிவாக இருக்கிறது பாருங்கள்.

க.நா.சு.வின் அரசியல்
‘அரசியல் பேசாதே!-என்பதற்குள் இருக்கும் அரசியல்’ எல்லார்க்கும் தெரிந்ததுதான். இதையே க.நா.சு. இலக்கியத் தரமாகச் சொல்லுவார்: “விமரிசகன், கலைத்தரமாகச் செயல்பட வேண்டுமானால், சித்தாந்தம் கொள்கை என்று தேடிப் போகக் கூடாது” (தினமணி:27.7.88).
ஆனால், இவர் அப்படி இருந்தாரா? எனில், யாரும் அப்படி இருக்க முடியாது என்பதே உலகளாவிய பதில், இருக்கக்கூடாது என்பதும் கூட. மனிதன் சாப்பிடுவது அவசியம்தான் எனில், அதைத் தீர்மானிக்கும் எதையும் - அரசியல் உட்பட- பேசித்தான் ஆக வேண்டும். ‘எதிலும் சார்ந்து விடாதே’ எனும் எழுத்தும், இவரது வாழ்க்கையைச் சார்ந்ததுதான். வாழ்க்கையில் எதிலும் சேராமல் (வேலையில்-கூட) சுதந்திர எழுத்தாளராகவே இருந்தவர். அதுகூட மேலைநாட்டு - இவரது ‘ஆதர்ஸ புருஷர்’களிடமிருந்து தெரிந்து கொண்டதுதான்!
இவர் அடிக்கடி, மேற்கோள் காட்டும் எஸ்ரா பவுண்ட் அமெரிக்காவில் பிறந்தாலும் ஊர் ஊராகச் சுற்றி ‘இலக்கியமே’ வாழ்வாக பாசிஸ்ட் ஆதரவாளராயிருந்தவர். அயர்லாந்துக்காரரான ஜேம்ஸ் ஜாய்ஸ் மனிதப் பிரச்னைகளிலிருந்து விடுபட்டு ‘தூய இலக்கிய’ வாழ்வு நடத்தியவர்.
இவர்களைப் போலவோ – வேலைக்குப் போகாத ‘சுதந்திர’ எழுத்தாளராக, பெரும்பாலும் ஹோட்டல்களில் தங்குபவராக, தனிமனிதவாதியாக, ‘தூய இலக்கிய’ விரும்பியாக, அரசியல் சாராதவராக வாழ்வும் எழுத்தும் பொருந்துவது சரிதானா?
“சுதந்திர எழுத்தாளராக, எத்தனை தியாகங்கள்.. நுஎநn வழ னயல” என்று (பித்தப் பூ பக்:61) அவரே கூறிக்கொண்டாலும், இந்த விஷயத்தில் அவரது ‘கலைத்தன்மை’ வெளுத்து, தனது சார்புத்தன்மையைக் காட்டி விடுகிறார்.
பாருங்கள்!
‘ஜனநாயகத்தின் இருப்பிடம் அமெரிக்கா. சமத்துவத்தின் பிறப்பிடம் பிரான்ஸ்’ என்கிறார் (தினமணி–13.7.88). ‘பற்றுக பற்றற்றான் பற்றினை’மாதிரி. “சித்தாந்தம் கொள்கை விமரிசகனுக்குக் கூடாது” என்பதும் ஒரு சித்தாந்தம்தானே? அது எப்படி ஒத்துக் கொள்ளும்? இதே ரீதியில்தான், “முற்போக்குவாதிகளுக்கெல்லாம் முற்போக்குவாதியான ஜே.கே. (ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி) தியாகம் செய்திருக்கிற அளவு, உலகில் ஏசு கிறிஸ்துவைத் தவிர வேறு யாரும் தியாகம் செய்ததில்லை” என்கிறார்.
                                                                                                                                                                                                                                                                                                                                                            இன்னும் தெளிவாக – கறாராகக் கூறவேண்டுமானால் - “அரசியலிலும் கூட எத்தனையோ சித்தாந்தங்கள், கொள்கைள் என்று (இந்தியாவில்) ஆட்சி செலுத்தினாலும் கூட அவ்வளவும் அன்னிய மண்ணில் விளைந்தவை. இப்படிப் பார்க்கும்போது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் ஒன்றுதான் நமது மண்ணில் விளைந்த சித்தாந்தமாகப் படுகிறது” என்கிறார் க.நா.சு. (தினமணி:17.10.87)

  அவ்வளவுதான் அங்கு சுற்றி, இங்கு சுற்றி ரெங்கனைச் சேவித்து விட்டார். எப்படி இருக்கிறது பாருங்கள் தூய – சார்பில்லாத - இலக்கியவாதம்! இதுபற்றி க. கைலாசபதி 1973-ல் எழுதிய நூல் இன்னும் பொருத்தமாகவே உள்ளது.
க.நா.சு.வின் முரண்பாடுகள்
தனது இலக்கிய முடிவுகளை – ‘சிறந்த எழுத்துப் பட்டியல்’ களை – அடிக்கடி மனம் போனவாறு மாற்றிக் கொள்வதில், பேர் போனவர் க.நா.சு!
‘இலக்கியத்தை எட்டுவதுதான் இலக்கியத்தின் இலக்கு’ (10.2.88) என்பார். உடனே முற்போக்கு இலக்கியவாதிகள் முறைப்பார்களே என்று யோசித்தோ என்னமோ, ‘கலை-கலைக்காக என்று ஒரு கட்சி இருக்க முடியாது’ என்பார் (தினமணி: 18.5.88)
‘தமிழைத் தமிழ் நோக்குடன் விமரிசனம் செய்ய வேண்டும்’ – என்பார். ஆனால் ஒவ்வொரு உதாரணத்துக்கும் மேல்நாட்டோடு கொஞ்சிக் கொண்டு நிற்பார்.
அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்த ‘எழுத்து’ பத்திரிக்கை பற்றி, “முதல் ஆறு மாத காலம் ‘ஸ்டர்’ இருந்தது, பின்னர் செத்துப் போயிற்று’ என்பார். யோசித்தால், அவ்வளவுதான் அவர் அதில் எழுதிய காலமாம்!
வெங்கட்சாமிநாதன் ‘யாத்ரா’–28.3.86--இதழ்க் கடிதத்தில் சொல்வது போல “அச்சில் வரும் க.நா.சு.வுக்கு நேர்மாறானவர் - நேர்ப் பேச்சில் வரும் க.ந.சு.!” எந்த விஷயத்திலும், அவர் மற்றவர்களிடம் இருப்பதாகச் சொல்லி கண்டனம் செய்யும் சுபாவம் அத்தனையும் அவரிடமே இருப்பதைக் காணலாம்.”
நவீன கவிதையில் ‘சோதனை’ (யாருக்கு) முயற்சிகளை வெற்றிகரமாகச் செய்து வருபவர் பட்டியலில் தன் பெயரோடு தருமு சிவராமுவின் பெயரையும் சேர்த்துப் போடுவார் க.நா.சு.
ஆனால் தருமு சிவராமுவோ, “இலக்கியம் தெரிந்த மாதிரி வேஷம் போடுவதில் வெற்றி பெற்றவர்களுள் ஒருவர் க.நா.சு” என்கிறார் (ஞானரதம், மார்ச்’73).
நவீன விமரிசனத்திற்கும், புதுக்கவிதைக்கும் பெரும் பங்காற்றிய பெரியவர் சி.சு. செல்லப்பாவை – விட்டு விலகிய காரணத்திற்காகவே – காய்ந்தவர் க.நா.சு. இதற்காக ‘தன்னை எடுத்தெறிந்து பேசுவது தகாத செயல்’ என்று கட்டுரையே எழுதினார் சி.சு.செ. (எழுத்து ஜுன்’63)

க.நா.சு.வின் முரண்பாடுளிலேயே முக்கியமானதும், பலரும் கவனிக்காததும் ஒன்றுண்டு. உலகப் புகழ்பெற்று நாவல்களை எல்லாம் மொழிபெயர்த்தார் என்று அவசரப்பட்டு பாராட்டிவிட முடியாது. நட்உறாம்சனின் ‘நிலவளம்’-நார்வே, ஸெல்மா லாகர் லோஃபின் ‘மதகுரு’வும், பேர் லாகர் குஸ்ட்டின் ‘அன்பு வழி’யும்-ஸ்வீடன், மார்டின் துகார்டின் ‘தபால்காரன்’- பிரெஞ்ச், தாமஸ்மானின் ‘மந்திர மலை- ஜெர்மன், ப்ளடிஸ்லா ரேமாண்டின் குடியானவர்கள் - போலந்து என தமிழில் அவர் அறிமுகப்படுத்திய இவர்கள் அனைவரும் நோபல் இலக்கியப் பரிசு பெற்ற எழுத்தாளர்கள்தான்.
ஆனால், மக்கள் போராட்டங்களில் நேரடியாகப் பங்கேற்று இலக்கிய நோபல் பரிசும் பெற்ற சிலிநாட்டு மக்கள் கவி பாப்லோ நெருடாவையும், ஷோலகாவ், மாக்ஸிம் கார்க்கி, செக்காவ், மாயகாவ்ஸ்கி போன்ற சோவியத்தின் மாபெரும் இலக்கியவாதிகளையும் ஞாபகமாக க.நா.சுப்பிரமணியம் ‘மறந்து’விட்டாரா? அல்லது மறைத்து விட்டாரா?
டால்ஸ்டாய், கோகால், டாஸ்டாவ்ஸ்கி போன்ற சோவியத் எழுத்தாளர்களை இவர் புகழ்ந்து ‘போனால் போகிறது’ என்று தனது ‘உலகத்துச் சிறந்த நாவல்’களில் அறிமுகப்படுத்தினாலும், இம்மூவரும் சோவியத்துப் புரட்சிக்கு மிக முந்திய எழுத்தாளர்களே என்பதைக் கவனிக்க வேண்டும்.

இதே போலத்தான் உள்நாட்டு விவகாரமும்.
‘இலக்கியத்தில் என்ன முற்போக்கு?” என்று எகத்தாளம் செய்வார். நாம் பாராட்டிப் புகழ வேண்டிய --‘ஓ! அமெரிக்கா!’வுக்கு முந்திய – ஜெயகாந்தனைக் கூட ஒத்துக்கொள்ளமாட்டார். சிறந்த தமிழ்ச் சிறுகதைகளுக்கான தொகுப்பில் ஜெயகாந்தனையும், சுந்தர ராமசாமியையும் மூன்றாம் பட்சமாகத்தான் வைப்பாராம்! (எழுத்து – ஜன’59)
இலக்கியவாதிக்கு ‘இஸம்’ கூடாது என்பவர், ‘ஜே.கே.யிசமும், ஆர்.எஸ்.எஸ்.-இந்து பழமைவாதமும் நல்லது’ என்பது மட்டும் என்ன இஸமோ?
ஒரு சமயம் கரைகடந்த உற்சாகமும், எழுச்சியும், கிண்டலும், கேலியும் இரவது எழுத்துக்களில் பொங்கிப் பிரவகிக்கும், பிறிதொரு சமயம் உலகமே உருப்படாது என்பது போல ‘இந்த ஜனங்கள் திருந்தமாட்டார்கள்’ என்று சோகமே உருவாக சோர்ந்து, தனித்து நின்று கொண்டு, புலம்புவார்.
தனது மகா சந்நிதானத்தில் சேர்ந்த சில இலக்கியவாதிகளை அவ்வப்போது தன் பட்டியலில் சேர்த்து கௌரவிப்பார். பிறகு அவர்களை நாலாந்தர நடையில் ‘மூத்திர வாடை அடிக்கும் கதைகளை எழுதியவர்’ என்றும் ‘விபச்சாரக் கதை எழுதுபவர்’ என்றும் மொத்துவார்.
ஏன் இந்த முரண்பாடுகள்? என்று கேட்க முடியாது. கேட்டால் ‘நான் சுதந்திர இலக்கியவாதி’ என்பார். ‘நாளை வேறு ஒரு மூடில் வேறு ஒரு பட்டியல் போடுவேன்’ என்பார் (கணையாழி-ஆகஸ்டு’86)
வெங்கட் சாமிநாதன் ‘யாத்ரா’வில் எழுதியது போல- “க.நா.சு. எழுதியுள்ளதை வாசிப்பவர் யாருக்கும் அன்றைய விவரங்கள் தெரியாது படிக்கக் கிடைக்காது என்ற தைரியத்திலா? எவன் தேடிப் போகப் போகிறான் - தன் புரட்டல் பேச்சுத்தான் நிலைக்கும் என்ற தைரியமா? அவருடைய நம்பிக்கை வீண் போகாது. அவர் பேச்சுத்தான் செல்லுபடியாகும் என்பது எனக்குத் தெரியும். மக்கள் சுபாவம் அது” என்று நாம் நம்பிக்கை இழக்க வேண்டியது இல்லை.
காலமாற்றத்தில் க.நா.சு.வின் சில நல்ல விஷயங்களே நிற்கும். அவரது இலக்கியம் பற்றிய தூப்;போதனைகளை அப்படியே ஏற்க மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.

க.நா.சு.வுக்கு உரிய இடம்:                                                  
குண்டுச்சட்டியில் குதிரை ஒட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு க.நா.சு. ஒரு அட்சய பாத்திரம்தான். அதில்ஒன்றும் சந்தேகமில்லை. உலகின் முதல்நாவல், முதல் சிறுகதையிலிருந்து, இந்தியாவின் முதல் சிறுகதை ஆசிரியர் தாகூர், தமிழின் முதல் ஐந்து நாவல்கள், சிறுகதைகள் என்று ஏராளமாக மிகமிக அதிகமாகப் படித்து, அதுபற்றி எழுதியவர், ’88-இல் எழுதத் தொடங்கிய உதயசங்கரையும், கௌதம சித்தார்த்தனையும் படிப்பார் - பாராட்டி எழுதுவார்.
கண் பார்வை குறைந்த 76 வயதிலும், எங்கே போனாலும் நல்ல காபி, டிபன் ருசித்துச் சாப்பிட ஏங்குவது போலவே புதிய – பழைய நூல்களை தேடிப் பிடித்துப் படிப்பார். (அச்சு எந்திரம் பெருகிவிட்ட இந்தக் காலத்தில், எதைப் படிக்க வேண்டும் என்று தேர்வு செய்யத் தெரியாதவன் படிக்க, பல ஆயுளுக்கும் போதுமான போலிப் புத்தகங்கள் பெருகிவிட்டதையும் நாம் மறந்துவிடக் கூடாது)
இறந்து போகும் முதல் நாள் (15.12.88) அன்று கூட ‘கல்வி பற்றிய அடுத்த கட்டுரையை அனுப்புகிறேன்’ என்று தினமணிக்கும், தேவகி குருநாத்துக்கும் எழுதக்கூடிய அளவுக்கு அயராத எழுத்து அவருடையது!
இதெல்லாம் அவரது பலம்.
இதைக் கொண்டுதான், க.நா.சு.வுக்கென்று ஒரு தனிஇடம் தமிழ் இலக்கிய உலகில் நிரந்தரமாக உள்ளது. அவரைப் பின்பற்றக் கூடிய பெரும் எழுத்தாளர் - வாசகர் கூட்டமும் உள்ளது.
அவரது சகபாடியாக எழுதத் தொடங்கி இன்னும் எழுதிவரும் சி.சு.செல்லப்பா முதல், சுந்தர ராமசாமி, இந்திரா பார்த்தசாரதி, வெங்கட்சாமிநாதன், அசோகமித்ரன், ந.முத்துசாமி, நகுலன் எனும் டி.கே.துரைஸ்வாமி, தருமு சிவராமு, விக்கிரமாதித்யன், ஞானக்கூத்தன், ப்ரகாஷ், தேவதேவன், ஜெயதேவன், தேவரசிகன், நா.விச்வநாதன் வரை இன்னும் பலரும் அவர் வழியில் செல்வதால்தான் இறந்து போனவரைப் பற்றி எழுத வேண்டிய அவசியமும் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
மாறவேண்டிய – மாறிவரும் சமூகச் சூழலில், மக்களுக்குத் தேவையானதை, அவர்கள் ரசித்து ஏற்கும் விதத்தில் எழுதுவதே மகத்தான இலக்கியச் சேவை.
இதற்காக, ஒவ்வொருவரும் படிக்க – எழுத வேண்டியவற்றைப் பட்டியல் இட்டுக் கையில் வைத்தருப்பதுதான் க.நா.சு.விடம் நாம் கற்க வேண்டிய கருத்து.
மற்றபடி, வைத்துக் கொண்டே, எழுதி – படித்துக்கொண்டே இருப்பதல்ல, எழுதுவது – படிப்பது - இயங்குவது - இயக்குவதுதான் இலக்கியத்தையும், சமூகத்தையும் அதன் மூலம் தனி மனிதனையும் உயர்த்தும் என்பது நிச்சயம்.
--------------------------------------------------------------------------------------------------------

வாசகர் கடிதம்
(சுபமங்களா மாத இதழ் ஏப்ரல் 1994)

க.நா.சு. தெனாலிராமனா?
முத்துநிலவன் கட்டுரைக்கு ஆதரவும் எதிர்ப்பும்…

காலஞ்சென்ற எழுத்தாளர் க.நா.சு. எழுதிய எழுத்துக்களின் தரத்தையும் - தன்மையையும் பற்றியும், அவரது கருத்துக்களில் நிலவிய முரண்பாடுகளைப் பற்றியும் முத்துநிலவன் தக்க மேற்கோள்களோடு நன்றாகவே அலசி ஆராய்ந்திருக்கிறார். ‘மெத்தப் படித்த மேதாவியான’ அவரது சுயரூபத்தைத் திறம்படத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.
காலம் சென்ற ஒரு எழுத்தாளரைப் பற்றி இவ்வளவு காட்டமாக இடம் பெறுவதா விமரிசனம், செத்த பாம்பை அடிப்பதுவா வீரம் என்று சிலர் முகம் சுளிக்கலாம். ஆனால் அதன் வாரிசுகளான பாம்புக் குட்டிகள் சில இன்னும் உலவிக் கொண்டிருக்கின்றனவே. அவற்றுக்கேனும் இந்த விமரிசனம் உறைக்கும் அல்லவா?
  -தொ.மு.சி. ரகுநாதன், திருநெல்வேலி.
05-03-1994
-------------------------------------------------------------------------------------------------
க.நா.சு. குறித்து முத்துநிலவன் ஒரு கழைக் கூத்தாட்டம் நிகழ்த்தியிருக்கின்றார். க.நா.சு.விடம் விவாதிக்க எத்தனையோ விஷயங்கள் உள்ளபோது, இவருக்கோ அவரின் ‘படிப்பு’ மட்டுமே பிரச்னையாகிப் போனது விந்தையான நகைச்சுவை. க.நா.சு.வின் படிப்புப் பிராபல்யத்தை, நேற்றைக்கு சிறு பத்திரிகைகளை வாசிக்கத் துவங்கிய கிலுகிலுப்பை வாசகன் கூட நன்கு அறிவான். அவர் என்றுமே தன் படிப்பைக் கொண்டு அடுத்தவரை மிரட்டியதில்லை. அது அவருக்காக அவரே விரும்பி மேற்கொண்ட தவம்.
லா.ச.ரா.வுக்கும், மௌனிக்கும் எழுத்து எப்படித் தவமானதோ அதுபோல க.நா.சு.விற்கு அவரின் வாசிப்பு. அந்த நெடிய தவத்தின் விளைவுதான் அவர் தந்த ‘தரப்பட்டியல்கள்!” அந்தப் பட்டியல்களுக்குக் கூட, இலக்கியத் தரம் மட்டுமே அடிப்படையானதே ஒழிய சாதி இத்யாதிகள் மையமாகவில்லை. கல்கிக்கும் ராஜாஜிக்கும் க.நா.சு. பட்டியலில் இடமில்லை. சொ.வி.யும்;, சண்முக சுந்தரமும் இவற்றின் நிரந்தர உறுப்பினர்கள். இதுதான் க.நா.சு.
கூட்டத்தில் பேசிவிட்டு கொடுத்த பணத்திற்குப் புத்தகமாக வாங்கி நடந்துபோன, பிழைக்கத் தெரியாத மனிதரவர். அம்புப் படுக்கையில் கிடந்த பீஷ்மரைப் போல், அந்திமக் காலத்தில் அவர் புதுவையில் இருந்தபோது, கண்கள் இரண்டும் பழுதான நிலையிலும் பூதக்கண்ணாடி கொண்டு எப்பொழுதும், புத்தகங்களுடன் மல்லாடிக் கொண்டிருந்ததைப் பலமுறை நான் கண்டிருக்கிறேன்.
எதையும் நேராகப் பார்க்கமால் திரித்து, கொச்சையாகப் பார்த்தே பழக்கப்பட்டுவிட்டு நமக்கு – முத்து நிலவன் கூற்றுகளில் ஒன்றும் வியப்பில்லை.
க.நா.சு.வின் அணுகுமுறைகளிலும் சில குறைபாடுகள் உண்டு. அவற்றுள் ஒரு சிலவற்றை உணர்ந்து, இறுதியில் அவர் திருத்திக் கொள்ள முற்பட்டிருக்கிறார். பண்டித பேராசிரியர்களைக் காரணமில்லாமல் இறுதிவரை தாக்கி வந்த க.நா.சு., இறப்பதற்கு ஒரு சில மாதங்களுக்குமுன் பேராசிரியர் எழில் முதல்வனைச் சந்தித்தபோது ‘எனது விமரிசனத்தில் பேராசிரியர்களைத் தொடர்ந்து கடுமையாகத் தாக்கி வந்திருக்கின்றேன். ஆனால் கடைசியில் எனக்குச் சோறு போடுவது தமிழ்ப் பேராசிரியர்கள்தாம்’ என்றாராம். அதுதான் க.நா.சு.
க.நா.சு. ஒரு சிறந்த படைப்பாளியா? இதனைக் காலம்தான் நிர்ணயிக்கும் இப்போது நாம் ஒன்று வேண்டுமானால் கட்டலாம் க.நா.சு.வின் படைப்புக்களில் பெரும்பாலானவை (கவிதை, நாவல்) சோதனையின் பாற்பட்டவை. அவரின் ‘ஒருநாள்’ ஆகட்டும், ‘அசுரகணம்’ ‘பித்தப்பூ’ வாகட்டும் எல்லாமே இவற்றுள் அடங்கும்! இலக்கியத்தில் சோதனை முயற்சிகளுக்கென என்றுமே தனித்த ஒரு இடம் உண்டு. சோதனைகளின் தன்மைகளை உணராதவர்களுக்கு வேண்டுமானால் அது ‘அவஸ்தைகளுக்கு உள்ளாக்கல்’ ஆக இருக்கலாம். நவீன தமிழ் இலக்கியத்தின் பரப்பினைக் க.நா.சு. தம் சோதனை முயற்சிகளின் மூலம் விஸ்தரிக்க முயன்றிருக்கின்றார்.
  - வ. நாராயணநம்பி, திருச்சி.
--------------------------------------------------------------------------------------------
கட்டுரையாளர், க.நா.சு.வின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளையும், அவ்வப்போது தனது பட்டியலில் பெயர்களை மாற்றிக் கொள்ளும் இயல்புகளையும் சற்றுக் காட்டமாகவே சாடியிருக்கிறார் என்றாலும் ஒரு சொல்: க.நா.சு. என்று ஒரு விமரிசகர் தோன்றுவதற்கு முன்பு நமது அருமைத் தமிழ் நாட்டில் இலக்கியம் என்றால் அகநானூறும் புறநானூறும்தான் என்கிற பண்டித மனப்பான்மையே கோலோச்சி வந்துள்ளது என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. அவரது ஆங்கில இலக்கியப் படிப்பு தமிழுக்கு ஆதாயமாகவே அமைந்ததையும் நாம் நினைவுகொள்ள வேண்டும்.
-ராஜாமணி, ஏ.ஆர். புதுடில்லி.
----------------------------------------------------------------------------------------------

1.6.88 தினமணி இலக்கியக் கண்ணோட்டப் பகுதியில், உலக இலக்கியம் பற்றிய கட்டுரையில், மகாகவி பாரதி பற்றி ‘பாரதியின் தேசியக் கவிதைகளில் கார்டுச்சி என்கிற இத்தாலியக் கவியின் பாதிப்பு இருப்பது கண்கூடு’ என்று தன் அபிப்பிராயத்தை க.நா.க கூறுகிறார். அதற்கு வாசகர் இரா. வீரராகவன் ‘இத்தாலி என்றாலே முகம் சுளிக்கும் நிலை இருந்த கால கட்டத்தில் ஒரு பிரஞ்சு மொழிபெயர்ப்பையோ’ ஒரு ஆங்கில மொழி பெயர்ப்பையோ படித்து, பாரதி தேசியம் பாடியிருக்க முடியாது பாரதியின் தேசிய உணர்வு இயல்பானது, சுயம்புவானது’ என்று பதிலளித்திருக்கிறார்.
விமரிசனத்திற்கு வரும் எதிர் விமரிசனத்திற்கு பதிலளிக்கும் விமரிசன நேர்மையோ இலக்கிய ஆதாரமோ இவரிடம் இல்லை. ஏனெனில் க.நா.சு.வின் விமரிசனபாணியே, முத்துநிலவன் கூறுவது போல, பொத்தாம் பொதுவில் போடுவதும், கைலாசபதி கூறுவதுபோல அபிப்பிராயங்களை அள்ளி வீசுவதுமே’யாகும்.
-ஜனநேசன், பொன்னமராவதி.
------------------------------------------------------------------------------------------------

வெகுநாட்கள் காழ்ப்பை அடக்கி வைத்திருந்துவிட்டு தளம் கிடைத்தவுடன் கொட்டுகிறார், முத்துநிலவன். தெனாலிராமன் கதையை – திலகாட்ட மகிடபந்தனம் - பாதியில் நிறுத்திவிடுவது எதில் சேர்த்தி, தெனாலிராமன் பதிலையும் சேர்ந்திருக்க வேண்டும்: ‘ஞானத்தை ஞானத்தால் சந்திக்க வேண்டும் போலிகளை விவேகத்தால் சந்தித்தால் போதும்’. க.நா.சு. சிலரை ஒதுக்கியது, அவர்கள் மீதுகொண்ட வெறுப்பினால் அல்ல. அவர்களின் அறிவுத்திறத்தின் அறிவினைத் துல்லியயமாகக் கணக்கிட்டதினாலேதான். இலக்கிய விமரிசனத்தில் இந்தப் போக்கு அவசியமானதே.
சிறிதளவாவது இலக்கிய அறிவை தமிழனின் மண்டையைப் பிளந்தாவது ஏற்றிவிட வேண்டும் என்று அவர் பிரளயத்தனப்பட்டதே உண்மை. இன்றைய விமரிசனப் பரவல் க.நா.சு. போட்ட பிச்சையே. படிப்பு முடிந்து வாழ்க்கையில் ஸ்திரமாகிவிட்ட பிறகு, நாலு பேர் சேர்ந்து கூடிக் கொண்டு தங்கள் பள்ளிக்கூட வாத்தியாரை, அவரது மூக்கு வளைசல், முதுகு கூனல், கால் நொண்டி என்று விமரிசனம் செய்வதும், புலம்புவதும் தமிழர்களுக்கு சகஜமே.
   -நா.விசுவநாதன், அரசூர்.
---------------------------------------------------------------------------------------------
முத்தனைய முத்துநிலவன் திறனாய்வுக் கட்டுரையைப் படித்து, பிரமிப்பிலிருந்து விடுபட வெகுநேரம் பிடித்தது. என் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும், சூட்டுக்கோல் கொண்டு விமரிசனம் எழுதுபவருமான நண்பர் க.நா.சு. பற்றி இவ்வளவு தெளிவாக, நானறிந்த வரையில் எவரும் எழுதியதில்லை என்றே நினைக்கிறேன். இன்றைய இலக்கிய பூச்சாண்டிகளுக்கும் நாளைய முத்துநிலவன்கள் உதயமாவார்களாக.
      -கோவி.மணிசேகரன், சென்னை-93
04-03-1994
------------------------------------------------------------------------------------------------
க.நா.சு. விமரிசனம் விவகாரத்தில் மேலும் சில குரல்கள்
(சுபமங்களா மாதஇதழ் மே’1994)
க.நா.சு. வாசகரா? நிச்சயம் மாபெரும் வாசகர். ஆனால் வாசிப்பை வைத்துப் பயமுறுத்தியவர் என்ற வாதம் செல்லுபடியாகாது. தேவைக்கு மேல் எங்கும் அவர் நூல்களையும், நூலாசிரியர் பட்டியலையும் தூக்கி வைத்தவர் அல்லர். அவருடைய கட்டுரைகளை அவருக்கிணையாகக் கூறப்படும் பிற விமரிசகர்களின் கட்டுரைகளுடன் வெறுமே ஒப்பிட்டுப் பார்த்தாலே போதும். அவருடைய புத்தக அறிவின் ஓரத்தைக் கூட தொடமுடியாதவர்கள் இன்று, கட்டுரையை விடவும் பெரிய நூற்பட்டியலை வெளியிடுகிறார்கள்.
க.நா.சு.வின் பட்டியலில் ஊசலாட்டம் உண்டா? உண்டு. அவருடைய முடிவுகளில் பிழைகள் உண்டா? ஆம், உண்டு. அவர் பலவீனங்களும், தனிநபர் சார்ந்த பிரிவுகளும் உடையவரா? ஆம், நிச்சயமாக.
ஆனால் இதையெல்லாம் அவருடைய எதிரிகளை விட பரமசீடர்களே வெளிப்படுத்தி யிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சீடர்களை தமிழில் உருவாக்கியதே அவருடைய சிறப்பு.
க.நா.சு.வின் முடிவுகளுக்குப் பின்னால் எந்த அழகியல் சித்தாந்தமும் இல்லை. எனவே அவரை விமரிசகர் என்று கூறலாகாது என்கிறார் சுந்தரராமசாமி. அது முற்றிலும் உண்மை. “அவற்றில் பெரும்பகுதி சுயரசனையின் வெளிப்பாடுகள். சிறுபகுதி நடைமுறைத் தந்திரங்கள் சார்ந்தவை” என்கிறார். இதுவும் வெளிப்படை.
ஆயினும் க.நா.சு. தமிழில் இன்றும் ஒரு சக்தி. அதற்கான காரணங்கள்: தாட்சண்யமின்றிக் கூறப்படும் கருத்துக்களின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். படைப்பு என்பது முதன்மையாக ஓர் அழகியல் நிகழ்வு. அதை அப்படியே அணுக வேண்டும் என்று அவர் வலியுத்தினார்.
அரசியல் - சமூக கருத்துக்களின் அடிப்படையில் இலக்கியத்தை மதிப்பிட்ட, மதிப்பிடுகிற தமிழ்ச் சூழலில், மெய்யான வாசிப்பனுபவத்திலிருந்து கிளைத்த இத்தகைய ஆணித்தரமான குரலுக்கு இன்றும் மதிப்புள்ளது. க.நா.சு.வின் இக்குரலையே இன்று பெரும்பாலான படைப்புலகவாதிகள் முன் வைக்கிறார்கள். இயக்கம் சாராமல், நிறுவனம் சாராமல், அதிகாரத்துக்கு தலைவணங்காமல், பல்லிளிக்காமல், கைநீட்டாமல் படைப்பாளி வாழமுடியும் என வாழ்ந்து காட்டியவர்.
படைப்பாளியாக க.நா.சு. ஒரு சக்தி அல்ல. அதை மதிப்பிட்டுக் கூறியதாக முத்துநிலவன் குறிப்பிடும் விமரிசகர்கள், க.நா.சு.வின் அளவுகோல்களை ஏற்று உருவானவர்கள் என்பது நினைவிருக்கட்டும். தன் அளவுகோல்கள் தன்னை நிராகரிக்குமளவு வளர்ந்தன என்றால், அது க.நா.சு.விற்குப் பெருமையே!
இன்றைய இலக்கிய விமரிசன உலகில் அவருடைய இடம் ஈடிணையற்றதாக இருப்பதற்கு ஒரே காரணம். தன் வாசிப்பனுபவத்திற்குத் தந்த முக்கியத்துவத்தை எந்த சித்தாந்தத்துக்கும், எந்த அமைப்புக்கும், எந்த நிர்ப்பந்தத்துக்கும் அவர் தராததுதான்.
   -கே. விஸ்வநாதன், நாகர்கோவில்.
----------------------------------------------------------------------------------------------
எனது குறிப்பு :
க.நா.சு.பற்றிய இந்தக் கட்டுரையும், ஜெயகாந்தன் பற்றிய --நமது வலைப்பூவில் உள்ள-- கட்டுரையும் சேர்ந்து ‘இருபதாம் நூற்றாண்டின் இலக்கியச் சிற்பிகள்’ எனும் சிறு நூலாக 1999இல் (அட்டைப் படம் காண்க) வெளிவந்த போது எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்கள் எழுதிய கடிதம் : (இந்தக் கட்டுரைகள் இரண்டையும் அந்தப் புத்தக அட்டை இருக்கும் பக்கத்தில் சேர்க்க எனக்குத் தெரியவில்லை. எனது இந்தத் தொழில் நுட்பக் கணினி அறிவுக்குறைவை அறிந்தவர் வழி சொன்னால் தெரிந்து செய்வேன்)

அன்பு நண்பர் முத்துநிலவன்,
வணக்கம்.
கோவையில் த.மு.எ.ச. மாநாட்டின்போது உங்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது மகிழ்ச்சியான விஷயம். ‘இருபதாம் நூற்றாண்டு இலக்கியச் சிற்பிகள்’நூலை நீங்கள் அன்புடன் அளித்ததற்காக நன்றி.
‘அதிகம் பேசப்பட்டவர்கள்பற்றி அதிகம் பேசப்படாதவிஷயம் கோணம்தான் என் நோக்கம்’ என்று குறிப்;பிட்டிருப்பது வரவேற்புக்கும் பாராட்டிற்கும் உரியது.
ஜெயகாந்தன்-கதைகள் க.நா.சு விமர்சனம் எனும் இரண்டு கட்டுரைகளும் இக்கோணத்தில் நன்கு அமைந்துள்ளன.
ஜெயகாந்தன் கதைகள் பற்றி அவர் படைத்துவிட்ட கதைமாந்தரே உரையாடுவதாக எழுதியிருப்பது புதுமையானது, சுவாரசியமானது.
ஜெயகாந்தன் சாதாரண நிலையிலிருந்து தனது உள் உந்துதலால் ஆர்வத்தால் ஆசையால் பெரும் உழைப்பால் தனது ஆற்றலை வளர்த்துக்கொண்டு வேக வளர்ச்சி பெற்றார். அவரது கூரிய பார்வையும் சுய சிந்தனைத் திறனும் கற்பனை வளமும் அவருடைய படைப்புகளுக்கு நல்ல ஆதாரமாகத் இருந்தன. அவருடைய வக்கிரத் தனங்களும் குதர்க்க புத்தியும் தான் எனும் அகந்தையும் குறுகிய காலத்தில் பெற்ற வெற்றிகளும் அவரைக் கோணல் பாதையில் நடைபோடச் செய்துவிட்டன.
அவருடைய பிறழ்ச்சிகளையும் சரிவுகளையும் பின்னடைதலையும் தேக்கத்தையும் சரியானபடி எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.
க.நா.சு.சிறுகதையில் வெற்றிபெறவில்லை. நாவல்களில் அவருடைய முயற்சிகள் பாராட்டுதலுக்கு உரியன. மொழிபெயர்ப்பு சாதனைகளும் வரவேற்புக்கு உரியனவையே. விமர்சனத்தில் அவர் காட்டிய வழி கோளாறானது குறைபாடுகள் உடையது. ஆரோக்கியத் தன்மைகள் இல்லாதது. அவர் காலத்திலம் பின்னரும் விமர்சனத்தில் ஈடுபட்டவர்களை கோளாறான தடத்திலேயே போகத் தூண்டியது. க.நா.சு.பற்றிய உங்கள் விமர்சனம் நியாயமானது.
இவ்விரு கட்டுரைகளையும் அவை வெளிவந்தபோதே அந்தந்த சமயங்களில் படித்து ரசித்திருக்கிறேன். இப்ப படித்தபோதும் புதுமை குன்றாத தன்மையில் ரசமாகவே உள்ளன.
உங்கள்  விமர்சனஈடுபாடும் விமர்சன முயற்சிகளும் வளர்ந்து செழிக்கட்டும். வாழ்த்துகள்.
அன்பு,
வ.க.
19-5-1999
--------------------------------------------------------------------------------------------------------