கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பத்தாம்வகுப்பு தமிழ்வினாத்தாள் 
குழப்பத்தைத் தீர்க்க
தமிழாசிரியர் கழகம் அரசுக்குக் கோரிக்கை
     கடந்த 04-04-2012 அன்று நடந்த பத்தாம்வகுப்பு அரசுப் பொதுத்தேர்வின் தமிழ் முதல்தாள் தேர்வில், சில குழப்பமான வினாக்கள் இடம்பெற்றிருப்பதாகவும், அதனைத் தீர்த்து வைத்து அதற்கான பாதிப்பிலிருந்து தேர்வெழுதிய மாணவர்களை விடுவிக்க தமிழகஅரசு உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் எனவும் தமிழகத் தமழாசிரியர் கழகம் தமிழ்நாடு அரசுக்கும் பள்ளிக்கல்வித்துறைக்கும் கோரிக்கை வைத்துள்ளது.
வினாத்தாள் குழப்பம் -1
      அரசுத்தேர்வுக்குரிய மாதிரி வினாத்தாள்கள் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையால் இரண்டு மாதத்திற்கு முன்னர் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. வினாத்தாள் வடிவமைப்பு மாற்றமேதும் இணையதளத்தில் தரப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஐவகை மாதிரி வினாத்தாள்களின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு இறுதிப் பயிற்சிகள் தரப்பட்டன. எனவே அரசே வெளியிட்ட ஐவகை மாதிரி வினாத்தாள்களின் அடிப்படையில் பொதுத் தேர்வு வினாத்தாள் அமையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வினாத்தாள் குழப்பம் -2 ( எட்டு மதிப்பெண் வினா)
      அரசுத்தேர்வுக்குரிய வினாத்தாள் வடிவமைப்பு (BluePrint) ஒவ்வொரு பாடப்புத்தகத்தின் கடைசியிலும் தரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே மாணவர்களுக்கான காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வு முதலான பயிற்சித் தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால், அரசால் தரப்பட்ட வினாத்தாள் வடிவமைப்புக்கு மாறாக, கடந்த 04-04-2012அன்று நடந்த அரசுப் பொதுத் தேர்வில்  உரைநடை 8மதிப்பெண் நெடுவினா தமிழ் முதல்தாள் தேர்வில் கேட்கப்பட்டிருந்தது (வினா எண்-48 மதிப்பெண்-8) 8மதிப்பெண் கொண்ட வினாஎண்கள்-47,48 நெடுவினா இரண்டில், செய்யுள்பகுதிக்குரிய வினாமட்டும் வினாத்தாள் வடிவமைப்பின் படியே இருக்க, உரைநடைப் பகுதிக்குரிய வினாமட்டும் மாறிவந்தது ஏனென்று தெரியவில்லை. இது, மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் ஆசிரியர்களுக்கும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
வினாத்தாள் குழப்பம் -3 ( ஐந்து மதிப்பெண் வினா)
     செய்யுள் பகுதியில் “தமிழ்விடுதூது“  5மதிப்பெண் வினா ஒன்று அரசுப்பொதுத்தேர்வில் கேட்கப்பட்டுள்ளது. இந்தவினா புத்தகத்தில் இல்லாதது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்பகுதியில் இல்லாத வடிவத்தில் “இப்பாடல் ஆசிரியரின் பெயர் யாது?”  என்று தற்போது அரசுப் பொதுத் தேர்வில் (வினா எண்45இல், உள்பிரிவு வினா எண்-2) கேட்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் குழப்பம் -4 (இரண்டு மதிப்பெண் வினா)
      வினாத்தாள் வினா-எண்29இல் “வள்ளலாரின் முழக்கம் எது?என்னும் இரண்டு மதிப்பெண் வினா கேட்கப்பட்டுள்ளது. இதற்கு “அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை“ என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும் இதுபோல் எந்த வரியும் வள்ளலாரின் முழக்கமாகப் புத்தகப் பாடப்பகுதியில் குறிப்பிட்டுத் தரப்படவில்லை. இதற்கு ஒவ்வோர் ஆசிரியரும் ஒவ்வொரு விதமாகச் சொல்லித்தந்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே சந்தேகத்துக்குரிய வினா எதையும் பொதுத்தேர்வில் கேட்காமல் இருப்பதே மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.
எனவே மேற்கண்ட காரணங்களால், முழுமதிப்பெண் பெற உழைத்துப் படித்த மற்றும் சொல்லித்தந்த ஆசிரியர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர் என்பதே இன்றயை நிலைமை.
சந்தேகத்திற்குரிய இந்த (8+5+2) 15மதிப்பெண்களை  முழுமையாகவோ பகுதியாகவோ மாணவர்களுக்கு வழங்கிவிடுவதே இதற்கான நியாயமாக இருக்கும் என்பதோடு, இனிவரும் மீதமுள்ள ஆறு தேர்வுகளும் அரசு வெளியிட்ட வினாத்தாள் வடிவமைப்புக்கு ஏற்பவே அமைவதை அரசு உறுதிப்படுத்தி பத்துலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை இந்தக் குழப்பத்திலிருந்து விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழகத் தமிழாசிரியர் கழகம் தமிழக அரசைப் பணிவோடு கேட்டுக்கொளகிறது.
                             
சுப.காந்தி நாதன்
மாவட்டச் செயலர்,
தமிழகத் தமிழாசிரியர் கழகம்,
புதுக்கோட்டை மாவட்டம்                              
செல்பேசி-9842864674

மேலும் தொடர்புகளுக்கு – நா.முத்து நிலவன் - 9443193293
------------------------------------------------------------  
(இந்த அறிக்கையை வெளியிட்ட நாளிதழ்களுக்கு நன்றி - தினமணி திருச்சிப் பதிப்பு பக்கம்-05, தினமலர் திருச்சிப் பதிப்பு பக்கம்-09, தீக்கதிர் அனைத்துப் பதிப்புகள் பக்கம்-03 - நாள்-06-04-2012 மற்றும் தினகரன் திருச்சிப் பதிப்பு பக்கம்-15, நாள்-07-04-2012)
-----------------------------------------------------------------------------------------------------------------------

கல்வியில் ஜனநாயகம் தேவை! – நா.முத்து நிலவன்



                  தேர்வு எழுதிய மாணவர்க்கு திருத்தப்பட்ட விடைத்தாளின் நகல் தரப்படும் என முடிவெடுத்த மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை ஆசிரியர்களும் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் துணைவேந்தரும் பாராட்டுக்கு உரியவர்கள் கல்வியில்-நாட்டு முன்னேற்றத்தில்-ஜனநாயகத்தில் அக்கறையுள்ள யாரும் பாராட்ட வேண்டிய முடிவு இது.
உயிரைக் கொடுத்துப் படிக்கும் மாணவர்க்கு தமது விடைத்தாள்கள் எவ்வாறு திருத்தப்பட்டுள்ளன என அறிந்து கொள்ள முழு உரிமையும் உண்டு.
மதிப்பெண்ணிலேயே தமது குழந்தைகளின் எதிர்காலம் உள்ளதாக நம்பும் பெற்றோர்க்கு இதன்மூலம் மன உளைச்சல் குறையும் மிகச்சிறந்த அத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மிகுந்த நிதானம் அவசியம். திருத்தும் ஆசிரியர்க்கும் அரசுக்கும் பொறுப்பு கூடுதலாகும். இந்த  இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சுமத்தாத அளவில் ‘பழிவாங்கப்படுவார்கள்’ எனும் நியாயமான சந்தேகத்தைத் தனது செயல்பாடுகளின் மூலம் அரசு போக்க முன்வர வேண்டும்.
மூன்று மணி நேரத்தில் எழுப்படும் தேர்வுத்தாளை திருத்த குறைந்தது பதினைந்து நிமிஷமாவது தேவைப்படும். திருத்தும் ஆசிரியர் அதே பாடத்தைப் பல ஆண்டுகள் நடத்திய அனுபவசாலியாக இருப்பின் 3 மணி நேரத்தில் 12 தாள் திருத்தினால் மதிப்பீடு முறையாக இருக்கும். ஆனால் கசப்பான உண்மை என்னவெனில் திருத்துவோர் அவ்வளவு நேரம் எடுத்துப் பெரும்பாலும் திருத்துவதில்லை ‘ஆள் போதவில்லை’ என்று 50 தாள்களை ஒரே நாளில் தருவதை அரசும் நிறுத்துவதில்லை!  இதனால் இருவகைப் பாதிப்புகள் உண்டு. அரசு இதில் சிக்கனம் பார்ப்பதோ ஆசிரியர்கள் மெத்தனம் காட்டுவதோ சரியல்ல என்பதை உணர வேண்டும்.
மாணவர்கள் மற்றும் எதிர்காலத் தமிழகத்தின் நலன் கருதி திட்டமிட்டு மதிப்பீடு நடத்தப்படுமானால் தமிழகம்  இந்தியாவுக்கே வழிகாட்டியாக முடியும். மகத்தான வழியில் கல்வித்துறை உயர் அதிகாரிகளும் கல்வி அமைச்சரும். தமிழக முதல்வரும் மனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இதனால் மாணவர்-பெற்றோர் கவலை தீரவும் ஆசிரியர் பெருமை உயரவும் தமிழகமே தலைநிமிரவும் வழி பிறக்கும்.

வெளயிட்டமைக்கு நன்றி : ‘தினமணி’ நாளிதழ் நாள்: 07.06.1997
---------------------------------------------------------------
மதிப்பீட்டு முறை பற்றியே மறுமதிப்பிடு தேவை! – நா.முத்து நிலவன்
கல்விமுறை கெடுத்தது பாதி தேர்வுமுறை கெடுத்தது மீதி! மெக்காலே கல்வி முறையால் சிந்தனையை மழுங்கடித்து ‘கிளிப்பிள்ளை கிளார்க்கு’களையே இதுவரை உருவாக்கி வந்தோம். அதிலும் ‘தப்பித்து’ வந்த சிலரை மதிப்பீட்டு முறையால் மடக்கியிருக்கிறோம்! இரண்டு தலைமுறைகளின் இழப்புக்கு எப்படி ஈடுசெய்யப்போகிறோம்?
துணைவேந்தர் ப.க.பொன்னுசாமி கட்டுரைகளைப் படித்தபிறகு ‘மைய மதிப்பீட்டு முறையா? இல்ல மதிப்பீட்டு முறையா? என்பது பற்றி இனிமேலும் விவாதிக்க வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது. மதிப்பீட்டு முறையின் சமூக விளைவுகளைச் சரியாக மதிப்பிட்டு தேவையான மாற்றங்களைச் செய்வதே உடனடித் தேவையாகும்.
அதோடு இந்த மதிப்பீட்டுக் குறைபாடுகள் கல்லூரிக் கல்விக்கு மட்டுமல்ல நூறு சதவிதம் பள்ளிக்கல்வி புண் புரையோடி விட்டது இனியும் புனுகு ப+சுவதில் அர்த்தமில்லை. (10,12-ஆம் வகுப்புக்கும் பொருந்தக் கூடியதே! கடந்த  கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பல ஆயிரம் பேர் மறுகூட்டல் கேட்டார்களே! இங்கு மறுமதிப்பீட்டுக்கும் வழியில் லையாமே! இதை என்ன செய்வது?) மறுமதிப்பீடு மறுகூட்டல் கேட்டு அலையும் மாணவர்களின் எண்ணிக்கை நூறு சதவீதத்தை எட்டுவதற்குள் மதிப்பீட்டு முறையை மாற்றி அமைக்க வேண்டும். அதுவும் கூட முதற்கட்டம்தான். இறுதிக்கட்டம் செல்லரித்துப்போன நமது கல்வி முறையையே மாற்றியமைப்பதில் முடிய வேண்டும்.
கல்வி முறையில் கை வைக்காமல் சமூக மாற்றம் சாத்தியமேயில்லை. இந்த வகையில் ப+னைக்கு மணி கட்டும் வேலையைச் செய்திருக்கும் துணைவேந்தரை மனமாரப் பாராட்டுகிறேன்.
கல்வியாளர்களே கைகோத்து வாருங்கள. மூன்றாவது கண்ணைத் திறக்கும் அவசரத்தில் இருக்கும் கண்களையே குருடாக்கும் கல்வி முறை தேர்வு மதிப்பீட்டு முறைகளை மறுமதிப்பீடு செய்வோம்! புதிய தோர் உலகம் செய்வோம்!

வெளியிட்டமைக்கு நன்றி: ‘தினமணி’ நாளிதழ் 22.07.1997
--------------------------------------------------------------------------

தமிழாசிரியர்களுக்கான ஐந்துநாள் பயிற்சிமுகாம்


புதுக்கோட்டை ஆர்.எம்.எஸ்.ஏ. நடத்தியது – தமிழாசிரியர்கள் புத்துணர்வு!

                 புதுக்கோட்டை அருகில் உள்ள கைக்குறிச்சி சுபபாரதி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் -மாவட்டம் முழுவதிலும் இருந்து, 9,10ஆம் வகுப்புத் தமிழாசிரியர்கள் 210 பேர் கலந்துகொண்ட ஐந்துநாள் பயிற்சிமுகாம் நடந்தது. நேற்று-சனிக்கிழமையுடன் நிறைவடைந்த பயிற்சிமுகாமில் கலந்துகொண்ட தமிழாசிரியர்கள் பலரும் இந்தப் பயிற்சிமுகாம் தமக்குப் புத்துணர்வளித்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ஆர்.எம்.எஸ்.ஏ திட்டத்தில் ஐந்து நாள் தமிழாசிரியர் பயிற்சி முகாம்

                          ஆர்.எம்.எஸ்.ஏ. எனப்படும் ‘அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம்’ என்பது மத்திய மாநில அரசுகளின் நிதிஉதவியோடு நாடுமுழுவதும் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இத்திட்டத்தின் படி 9,10ஆம் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்களுக்கான ஐந்துநாள் புத்துணர்வுப் பயிற்சிமுகாம் தற்போது மாநிலம் முழுவதும் நடத்தப் பட்டு வருகிறது.
                          இதன் ஒருபகுதியாக கடந்த28ஆம்தேதி தொடங்கிய புதுக்கோட்டை மாவட்டத் தமிழாசிரியர் பயிற்சி முகாம் நேற்று நிறைவடைந்தது. பயிற்சிமுகாமில் கலந்து கொண்டு தொடங்கிவைத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுகுமார் தேவதாஸ், “பள்ளிகளில் பாடம்நடத்தும் ஆசிரியர்கள் தங்கள்திறiமைகளை வளர்த்துக்கொள்வதோடு மாணவர்களின்; பலவகைத் திறமைகளையும் கண்டறிந்து வளர்க்கவே இதுபோன்ற முகாம்களை அரசு தம்செலவில் நடத்துகிறது” என்று தெரிவித்தார். முகாமை ஏற்பாடு செய்திருந்த ஆர்எம்எஸ்ஏ பொறுப்பாளர் முனைவர் ரெ.கனகசபாபதி பேசும்போது, “மற்றப் பாட ஆசிரியர்களை விடவும் தமிழ்ப்பாடம் நடத்தும் ஆசிரியர்களின் பணி கூடுதல் சிறப்பு வாய்ந்தது, அதனால்தான் மற்ற ஆசிரியர்களை சார், டீச்சர் என்று அழைக்கும் பள்ளிக் குழந்தைகள் தமிழாசிரியர்களை மட்டும்தான் அம்மா என்றும் அய்யா என்றும் அழைக்கிறார்கள் இந்த வகையான மாணவர்களின் உளவியல் நுட்பத்தைத் தமிழாசிரியர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்றார். 
                              பயிற்சி நிகழ்ந்த ஐந்துநாட்களுக்கும், வகுப்பறைகள் மற்றும் கூட்ட அரங்கங்கள் மற்றும் ஒலி-ஒளி வசதிகளை நன்கொடையாக வழங்கிய சுப-பாரதி கல்விநிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன், செயலர் வீ.வைத்தியநாதன் ஆகியோர் பயிற்சிமுகாமில் கலந்து கொண்டு ஆசிரியர்களை வாழ்த்திப் பேசினர்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், சோலை!
                                 இம்முகாமின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கருத்தாளர்களாக புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியரும் துணைமுதல்வருமான நா.முத்து பாஸ்கரன், கொப்பனாப் பட்டி மு.நா.செ. உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் கு.ம.திருப்பதி, பெருங்குடி அரசு உயர் நிலைப் பள்ளித் தமிழாசிரியர் மகா.சுந்தர், காரையு|ர் மொ.அ.கா.மேல்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் சுப.கோபிநாத், ஆகிய நால்வரும் திறம்படப் பணியாற்றி பின்வருமாறு பயிற்சித் தலைப்புகளையும் பயிற்சிதரும் பேராசிரியரகள் மற்றும், தமிழறிஞர்களையும் ஒருங்கிணைத்திருந்தனர். மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த 160க்கும் மேற்பட்ட பெண்ஆசிரியர்கள் உள்ளிட்ட 210 தமிழாசிரியர் களையும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், மற்றும் சோலை என ஐந்து குழுக்களாகப் பிரித்து பெரும்பாலும் தனித்தனி வகுப்பாகவும், அவ்வப்போது இரண்டிரண்டு குழுக்களை மட்டும் இணைத்தும் பயிற்சி தரப்பட்டது.

பயிற்சிக் கையேடு, குறிப்பேடு எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன.
                           இம்முகாமில் கலந்துகொண்ட அனைத்துத்த தமிழாசிரியர்களுக்கும் மாநில அனைவர்க்கும் இடைநிலைக் கல்வித்திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள ‘தமிழாசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சிக் கையேடு’ எனும் நூலும், குறிப்பேடுகளுடன் எழுதுபொருளும் இலவசமாக வழங்கப்பட்டது. இதனை திட்டப் பொறுப்பாளர் முனைவர் ரெ.கனக சபாபதி அனைவருக்கும் வழங்கினார்.

பயிற்சித் தலைப்புகளும் பயிற்சிதந்த தமிழறிஞர்களும்
                            ‘தமிழாசிரியர் தகுதிகள்’, ‘வகுப்பறையும் தமிழாசிரியரும்’, ‘மாணவர்கள் நம் குழந்தைகள்’, ‘ஆசிரியர்-மாணவர் உறவு’, ‘செய்யுள் கற்பித்தல்’ ‘உரைநடை கற்பித்தல்’ ‘இனிக்கும் இலக்கணம்’ ‘மொழியாக்கமும் மொழிபெயர்ப்பும்’, ‘வாழ்வியல் திறன்கள்’, ‘கணினித்தமிழ் கற்போம்’ ‘இசையால்தமிழ்வளர்ப்போம்’,‘சங்க இலக்கியம்’, ‘காப்பிய இலக்கியம்’, ‘நீதி இலக்கியம்’, ‘பக்தி இலக்கியம்’, ‘சிற்றிலக்கியம்’, ‘நாட்டுப்புற இலக்கியம்’, ‘இலக்கண மாற்றங்கள்’ ‘காலந்தோறும்கல்வி’, ‘கதைகளும்கதைஆக்கமும்’, ‘மரபுக்கவிதையும் ஆக்கமும்’ ‘புதுக் கவிதையும் ஆக்கமும்’, ‘அய்க்கூவும் உருவாக்கமும்’, ‘பாநயம் மற்றும் பாவகைகள்’ ‘தமிழ்வளர்ச்சியில் சிற்;;றிதழ்கள்’, ‘பெரியாரின் கல்விச் சிந்தனைகள்’, ‘நாட்டுப் பற்றை வளர்க்கும் நற்கதைகள்’, ‘நன்னெறிக் கல்வி’ , ‘ஊடகத் தமிழ்’, ‘தமிழரும் தமிழும்’, ‘எழுத்துப் பிழை களைதல்’ ‘உச்சரிப்பில் குறைபாடு களைதல்’  ஆகிய 30க்கும்; மேற்பட்ட தலைப்புகளில், அந்தந்தத் துறை சார்ந்த கல்லூரி-பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், வல்லுநர்கள் மற்றும் தமிழறிஞர்களைக் கொண்டு ஐந்துநாள்களும் சிறப்பாகப் பயிற்சியளிக்கப் பட்டது. 
                             அரசு ஆசிரியர்பயிற்சிக் கல்லூரி முதல்வர் முனைவர் ம.அன்புச் செழியன் , ‘ஞானாலயா’ பா.கிரு~;ண மூர்த்தி, மதுரைக் கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம், சாகித்திய அகாதெமி ஆலோசனைக்குழு உறுப்பினர் கவிஞர் தங்கம் மூர்த்தி;, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் வெற்றிச் செல்வன், புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரிப் பேராசிரியர்கள் முனைவர் மு.பழனியப்பன், முனைவர் அ.செல்வராசு, முனைவர் ச.மாதவன், முனைவர் இரா.கலைச் செல்வி, மகளி;ர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் திராவிடராணி, ஜெ.ஜெ.கல்லூரிப் பேராசிரியர் முனைவர் அ.விமலா, மதுரை சூரியன் பண்பலை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஸ்டீபன், பெரியாரியல் அறிஞரும் பணிஓய்வுப் பேராசிரியருமான நெடுஞ்செழியன், புலவர் மு.பாலசுப்பிரமணியன் (சுபபாரதி கல்லூரி) கவிஞர் வி.கே.கஸ்தூரி நாதன் (வி.எஸ்.கே.ஆசிரியப்பயிற்சி நிறுவனம்), புலவர் மா.நாகூர் (உலகத் திருக்குறள் பேரவை) தமுஎகசவைச் சேர்ந்த படைப்பாளர்கள் ஜீவி, ஆர்,நீலா, ரமா ராமநாதன், ராசி.பன்னீர்;;ச்செல்வன்(அறிவியல் இயக்கம்)  பாவலர் பொன்.கருப்பையா (நல்லாசிரியர்) ச.குமார் (மு.க.ஆசிரியர்) சுதர்சன் கல்லூரிப் பேராசிரியர் அ.கருப்பையா விஜயலட்சுமி (மாவட்ட அரசு ஆசிரியப் .பயிற்சி நிறுவனம்), கவிஞர் இரா.தனிக்கொடி (திரைப்படப்பாடலாசிரியர்) முதலியோருடன் ஒருங்கிணைப்பாளர்களும் அவ்வப்போது  கலந்து கொண்டு வகுப்புகளை ஆழமாகவும் கலகலப்பாகவும் நடத்தியதாக பயிற்சி பெற்ற தமிழாசிரியர்கள் தெரிவித்தனர். 

மாவட்டக் கல்வி அலுவலர் கலந்துகொண்ட நிறைவு விழா நிகழ்ச்சிகள்:
                               சனிக்கிழமை மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் வெ.தமிழரசு, மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரெ.கனகசபாபதியுடன், சுபபாரதி கல்விநிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் மற்றும் செயலர் பேரா.வீ.வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
                               பயிற்சி முகாம் மற்றும் விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து, திட்ட அலுவலர்கள் ராஜேந்திரன் மற்றும் ரெத்தினகுமார் ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக கு.ம.திருப்பதி வரவேற்புரையாற்ற, நன்றியுரையை மகா.சுந்தர் நிகழ்த்த, நா.முத்துபாஸ்கரன் மற்றும் சுப.கோபிநாத் இருவரும் தொகுத்துவழங்கினர். 

                                பயிற்சி முகாமில் கலந்து கொண்ட தமிழாசிரியர்கள் இப்பயிற்சி தமக்குப் பெரிதும் புத்துணர்ச்சி ஊட்டியதாகக் கூறியதோடு கணினித்தமிழ் உள்ளிட்ட பல புதிய கற்பித்தல் முறைகளை மேலும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
------------------------------------------------------------------------------------

(இந்தச் செய்தியில் “பயிற்சித் தலைப்புகள்“ எனும் ஒரு பத்தியைத் தவிர, சற்றேறக்குறைய இந்தச் செய்தியை முழுவதுமாக -05-03-2012- வெளியிட்டிருந்த “தினமணி“, “தீக்கதிர்“  நாளிதழ்களின் புதுக்கோட்டைச் செய்தியாளர்கள் திரு.மோகன்ராம், திரு சு.மதியழகன் ஆகியோர்க்கும் இந்த நாளிதழ்களின் நிருவாகிகளுக்கும் நன்றி)

எனது ஆசிரியப்பணியில் ஒரு நல்ல நாள்...நிறைவுப் பகுதி

 25-02-2012, 
எனது ஆசிரியப்பணியில் ஒரு நல்ல நாள்... நிறைவுப் பகுதி
     காலை எழுந்ததும், யார்யாரிடமிருந்து குறுஞ்செய்தி எத்தனை மணிக்கு வந்திருக்கிறது என்று பார்த்தேன்.கோமதி(4.05), தினேஷ்(4.15), கணேஷ்(4.27), அபி(4.37), நாகலட்சுமி(4.40), இணையதுல்லா(4.40), பாண்டி-சித்ரவேலு(இருவரும் அண்ணன்-தம்பிகள் ஒரேவகுப்பு-(4.52)) என்று பட்டியல் நீண்டது. இன்னும் சிலர் 5மணிக்கு மேல் எழுந்து படித்தால் குறுஞ்செய்தி தரவேண்டாம் என்று சொன்னாலும் கேட்பதில்லை.
     நேற்றிரவு, இவர்களோடு நிவேதிதா(10.47) சுவாதி(10.42) தமிழ்ச்செல்வி (10.35)என்று மாணவியர் அளவிற்கு மாணவர்கள் இரவு10மணிக்கு மேல் படிப்பதாகக் குறுஞ்செய்தி ஏதும் சொல்லவில்லை. அவர்கள் 37பேருக்கும் “நன்று. விடிகாலையில் எழுந்து படித்துவிட்டு எழுதிப்பார், இரவு வணக்கம்“ என்று (ஆங்கிலத்தில்தான்) பதில்செய்தி அனுப்பும் போது மணி இரவு 11.12. மணிகண்டன் விடுதியில் இருப்பதால் செய்தி தரமுடியவில்லை என்று வருத்தப் பட்டுக்கொண்டது ஞாபகத்திற்கு வந்தது.(இதற்காகவே அவன் 3நாள் விடுமுறையில் ஊருக்குப் போயிருந்த நாள்களில் இரவு 10மணிக்குப் பிறகும் விடிகாலை 5மணிக்கு முன்னதாகவும் குறுஞ்செய்திகள் அனுப்பியிருந்ததை வகுப்பில்  பாராட்டியிருந்தேன்.)
     பிறகு, நாளை மறுநாளைக்கு மறுநாள் (28.02.2012) புதுக்கோட்டை மாவட்டம் முழுவதுமுள்ள -9,10ஆம்வகுப்பு நடத்தும்- தமிழாசிரியர்களுக்கு அனைவர்க்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் நடத்தவுள்ள 5நாள் பயிற்சி முகாமில் உரையாற்ற, யார்-யாரையெல்லாம் அழைக்கலாம் என்று நேற்றுப் போட்டு வைத்திருந்த திட்ட வரைவை மீண்டும் எடுத்துச் சரிசெய்து, விட்டுப்போனவர்களைத் தொலை பேசியில் பிடித்து, உறுதி செய்து கொண்டு, செய்தித்தாளை மேய உட்காரும் போது காலை மணி 7.
     காலை 10 மணிக்கு பள்ளிக்கூடம் போனேன். நேற்றைய நிகழ்வுப் படி நான் போக வேண்டியதில்லை என்றாலும், பள்ளிக்கு அருகிலேயே என்வீடு என்பதால், விடுமுறை நாளில் வேறு முக்கிய வேலை இல்லை என்றால் பள்ளிக்கூடப் பக்கம் வந்துவிடும் வழக்கப்படிப் போய்விட்டேன். முதல்வர், “நல்லவேளை வந்தீர்கள், கணினிஆசிரியர் மருத்துவவிடுப்பு.“என்று சொல்லி, நாளை(26-02-2012) நடக்கவுள்ள உதவிக் கல்வி அலுவலர் அரசுத் தேர்வுக்கு கொஞ்சம் “தேர்வுஎண் அறை ஒதுக்கீட்டுப் பட்டியல் அடித்துத் தரமுடியுமா?“ என்று கேட்க, அதை அடித்துக் கொடுத்துவிட்டு வெளியே வந்தால் மணி 11.
     ள்ளியில் இருந்து, 10-இ தினேஷை அலைபேசியில்  அழைத்தேன்.
“அய்யா வணக்கம்யா. சொல்லுங்கய்யா
“வணக்கம் பா. எங்கய்யா இருக்கே?
அய்யா வீட்ல ங்கய்யா
“சரி நீ வீட்லயே இரு நா உங்க வீட்டுக்கு வர்ரேன்
என்னங்கய்யா சேதி? எங்கய்யா இருக்கீங்க? நான் வரட்டுங்களாய்யா?
“இல்லப்பா நானே வர்ரேன்என்று பேச்சைத் துண்டித்தேன்.
அவன்வீடு ரெண்டுதெரு தள்ளித்தான் இருக்கிறது என்று அவன் அப்பா மனோகரனும் சொல்லியிருந்தார்.  நான் இரவு நேரத்தில் 10மணிக்கு மேல் 10.30க்குள் பேசுவேன், “அய்யா படிக்கிறேன்யாஎன்ற பதிலைத் தவிர அப்பா அம்மா எடுத்தால் பேசமாட்டேன்“ என்று வகுப்பில் சொல்லி, எல்லாருடைய அலைபேசி எண்ணையும் வாங்கிக்கொண்டு என் எண்ணையும் தந்திருந்தேன். ஒருநாள் இரவு 10.20க்கு நான் தினேஷை அழைக்க, அவன் அப்பா எடுத்து, “அய்யா வணக்கம்யா. அவன் படிக்கிறான் யா. இப்பல்லாம் என்னடா இரவு 10மணிக்கு மேலயும் படிக்கிற மாதிரி இருக்கு?னு கேட்டப்ப தான் யா நீங்க போன் பண்ணுவீங்கன்னு சொன்னான், ரொம்ப நன்றிங்கய்யா. ஒருநாள் வீட்டுக்கு வர்ரதா சொன்னீங்களாம், அவசியம்  வாங்கய்யா, இந்தா இருங்க அவன்கிட்ட குடுக்கிறேன்என்று சொல்லியிருந்த்து நினைவுக்கு வந்தது..
எல்லாருக்கும் பேச முடியாதென்றாலும், வேறுவேறு பத்துப்பேருக்கு அவ்வப்போது இரவு 10மணிக்கு மேல் பேசுவதால் நல்ல பலன் கிடைத்த்து. குறுஞ்செய்தி அனுப்ப நூறு ரூபாய்க்கு ஏற்றினால்தான் மாதம் 3000 பேருக்கு அனுப்பலாமே! இதில் நான்கு பிரிவுப் பத்தாம்வகுப்பின் - 192 பேரையும்  கொஞ்ச நேரம் கூடுதலாகப் படிக்க வைக்க முடிகிறதே!
தினேஷ் வீட்டுக்குப் போனால், அவன் தம்பியும் அம்மாவும் திருவப்புர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அப்பா வெளியில் போய்விட்டாராம். அய்யா வாங்கய்யா இருங்கய்யா டேய் ஓடுரா  பாய் கடையில போயி ஒரு கூல் டிரிங்ஸ் வாங்கிட்டு வாடா என அவன் அம்மா பரபரப்பாக, நான் அன்போடு மறுத்து  விட்டு, ஒரு குவளை தண்ணீர் கொண்டுவரச் சொல்லிக் குடித்துவிட்டு, தினேஷை வெளியில் அழைத்துப் போக அனுமதி கேட்டேன்.
எனது ஆக்டிவா வண்டியில் பின்னால் ஏறிக்கொண்ட தினேஷ் புரிந்து கொண்டான். அய்யா யார் வீட்டுக்கய்யா போறோம்?“ “இணையதுல்லா வீடு“ என்றதும் “இங்க தான்யா ஆசாரி காலனி (விஸ்வகர்மா நகர்)“ என்றான்.
அண்டக்குளம் வழியில் சாலையோரத்தில் இருந்த தேநீர்க்கடை வாசலில் கூட்டித் தள்ளிக்கொண்டிருந்தது நம்ப பத்தாம் வகுப்பு இ கவிதா மாதிரி இருந்தது. தினேஷிடம் கேட்டேன்.
“ஆமாங்கய்யா கவிதா தாங்கய்யா.. இது அவங்க கடைதான்–தினேஷ்.
வண்டியை நிறுத்தி இறங்கும் போதே கையில் இருந்த விளக்குமாற்றை மறைத்துக் கொண்டு, “அய்யா வாங்கய்யாஎன்ற கவிதாவின் முகத்தில் திகைப்பு. அவங்க அப்பா, அம்மா ரெண்டு பேரும் வாசலுக்கு வந்து, கடை பெஞ்சில் உட்காரச் சொன்னார்கள். “நான் கவிதாவோட தமிழய்யா, கவிதா வீட்ல எப்டிப் படிக்குது? எவ்வளவு நேரம் படிக்குது?“ என்றதும் “படிக்குது. பாஸ் பண்ணீரும்ல?“ “என்ன அப்படிக் கேட்டுட்டீங்க? 400க்கு மேல வாங்கும். மேல நல்லா படிக்க வையுங்கஎன்று சொல்லிக் கிளம்பப் போக, “காபி சாப்பிடுங்கய்யா“ என்று போர்ன் விட்டாவை நீட்டினார். அந்தக் கடையில் அது 10ரூபாய் இருக்கும்ல என்று நினைத்துக் கொண்டே தயக்கத்துடன் வாங்கி பாதியை தினேஷிற்குக் கொடுக்கக் குவளை கேட்டேன். அதை கவனிக்காத மாதிரி கவிதா “அப்பா அவன் அய்யா கூட வந்திருக்கான் என் கிளாஸ்தான்“ என்று மெதுவாகச் சொல்ல, அதற்குள் அவனுக்குப் போட்ட தேநீரை கவிதாவிடமே கொடுத்துக் கொடுக்கச் சொன்னார் அவர்.
“இன்னும் 36நாள்தான்“ என்று அரசுப் பொதுத்தேர்வுக்கு மீதம் உள்ள நாள்களைச் சொல்லி, நல்லாப் படிக்கச் சொல்லுங்க என்று கிளம்பினேன். கவிதா முகத்தில் மகிழ்ச்சியும் பெருமையும். அதுதானே எனக்கு வேண்டும்!
அடுத்த வீதிக்கு அடுத்த திருப்பத்தில் திரும்பிக் கடைசியில் இருந்த இணையதுல்லா வீட்டு வாசலில் வண்டிய்யை நிறுத்தி இருவரும் இறங்கினோம். ஒற்றைக் குடிசை. வீட்டில் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அப்பா அம்மா இரண்டு பேரும் வேலைக்குப் போய் விட்டார்களாம். இவன்தான் சமைத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். அவன் என்னை உள்ளே அழைக்காமலே நான் போய்விட்டேன்.
அவன் எழுத்து மணிமணியாய் இருக்கும். எல்லாப் பாட வகுப்பிலும் ஆசிரியர்கள் தருவதைக் கரும்பலகையில் எழுதிப் போடுவது அவன்தானே! நான் கேட்காமலே ஒரு சொம்பு தண்ணீர் கொண்டுவந்து தந்தான் இணையா. அப்போதுதான் கழுவிச் சுத்தமாக்க் கொண்டுவந்திருந்தான். நல்ல பய!
அலைபேசி அழைத்தது. சித்ரா டீச்சர். ஆர்எம்எஸ்ஏ யில் தமிழகச் சுற்றுலா செல்லக் கடைசி நேரத்தில் ஒருசிலர் வராததால், கடைசி நேர வாய்ப்பை இரவு 8மணிக்கு என்னிடம் அவர்கள் சொல்ல, நான் இவர்களுக்குச் சொல்ல, சித்ரா போயிருந்தார்கள். இதனால், எனக்கு நன்றி சொல்ல, என்னிடம் சொன்னது சரி. நம் பள்ளி முதல்வரிடம் சொல்லி என்னைப் போட்டுக் கொடுத்துடாதீங்க என்று சிரித்துக் கொண்டே சொல்லி வைத்தேன். இப்படி நான் சொல்லி அனுப்பி வைத்த ஓவிய ஆசிரியர் புகழேந்தியைக் காலையிலிருந்து நான் தொடர்பு கொள்ள முயன்றும் அவர் எடுக்கவில்லை!
ணையதுல்லா,தினேஷ் இருவரையும் ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டை நகர எல்லையில் வந்து, தஞ்சைச் சாலையில் வண்டியைத் திருப்பினேன்.
“அய்யா முள்ளுர் தானே போறோம்?“
“ஆமாம்பா, பத்தாம்ப்பு பிள்ளைங்க யார் யார் வீடு அங்க இருக்கு?“
“நிறைய பசங்க இருக்காங்கய்யா... ஆனா நாங்க அங்கல்லாம் போனது இல்லங்கய்யா...“ “ஓகோ! அவுங்க தாழ்த்தப்பட்டவுங்க..ங்கிறதாலயா?“ “அப்படில்லாம் ஒன்னும் இல்லய்யா..“ இணையதுல்லா சொல்ல, தினேஷ் இதற்கு ஒன்றும் சொல்லவில்லை. “அய்யாகூட போறதுனால அப்பா ஏதும் சொல்லமாட்டாங்க இல்லடா“
எங்கள் பள்ளியிலிருந்து தஞ்சைச் சாலையில் 4கி.மீ.சென்று இச்சடிக்கு முன்னாலேயே சடக்கென்று திரும்பியது முள்ளுர். கப்பிச்சாலையில் ஒரு கி.மீ. சென்றதும் முன்பு இதேபோல -4வருடங்களுக்கு- முன் பத்தாம் வகுப்பு மாணவர்களைப் பார்ப்பதற்காகவும், அதற்கு முன் 1990இல் அறிவொளி இய்க்கக் கலை நிகழ்ச்சிக்காகவும் இங்கு வந்தது நினைவுக்கு வந்தது.
எங்களைப் பார்த்துவிட்ட எங்கள் பள்ளியிலேயே பதினோராம் வகுப்புப் படிக்கும் மாணவர் சிலர் – மதியம் தேர்வுக்காக வந்துகொண்டிருந்தவர்கள் – எங்களைப் பார்த்த்தும் நின்று “அய்யா என்னங்கய்யா இங்க?“ என்றார்கள். சிலர் பார்த்துக்கொண்டே வண்டியை வேகவேகமாக மிதித்துப் பறந்தார்கள்....!
“சும்மா தாம்பா... பத்தாம்ப்பு படிக்கிற பசங்க-புள்ளைங்க வீடுகளுக்கு பரிச்சைக்குள்ள எப்பவாச்சும் வருவேன்னு சொல்லியிருந்தேன்... இன்னைக்கு நேரம் கிடைச்சுது...என்றதும், யார்யார் வீடு எந்தெந்தப்பக்கம் என்று அடையாளம் சொன்னது ஒன்றும் புரியவில்லை என்றாலும் கேட்டுக்கொண்டு, கிளம்பினோம். “கோவில் மடத்துல கொஞ்சம் பசங்க உக்காந்து கல்லாங்காய் ஆடிக்கிட்டிருக்காய்ங்க... இப்பப் போனா படிச்சுரலாம்“ என்று சொல்லியவாறு சில 11ஆம் வகுப்பு மிதிவண்டிகள் பறந்தன...!
கோவில் முக்கத்தில் திரும்பும்போது, எதிரே வந்த விஜயலட்சுமி (11ஆம் வகுப்பு) நின்று, “வணங்கங்கய்யா... என்னங்கய்யா... இவ்ளோ தூரம்?என்று கேட்டு விட்டு, “அய்யா வீட்டுக்கு வாங்கய்யா... அப்பா உங்கள பாக்கணும்னு சொன்னாங்கய்யா... வீட்டுக்கு வாங்கய்யா... இல்லன்னா இங்க எங்க போறீங்கன்னு சொல்லுங்க நான் அப்பாவ அங்கக் கூட்டியாறேன்என்று சொல்லவும், “இல்லப்பா இன்னொரு நாள் வர்ரேன்.. அப்பா கிட்ட சொல்லு“ அந்த மாணவி, நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தில் (அண்டர்-19) மாநில அளவில் 2,3ஆம் இடங்களை சில முறை வென்று வந்திருந்தார்! ஒருமுறை என்னைப் பேச அழைத்திருந்த புதுகை-ரோட்டரி சங்கத்தினரிடம் சொல்லி இவரோடு பத்துப்பேருக்கு “ஸ்போர்ட்ஸ் ஷீவாங்கித் தர ஏற்பாடு செய்திருந்தேன்...
கோவில் முக்கத்தில் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் செய்தி அந்தச் சின்னக் கிராமத்தில் உடனடியாகப் பரவி விட்டது போல... எங்கள் பள்ளியில் படிக்கும் 20,30 பயல்கள் வந்து கூடிவிட்டார்கள்... வண்டியைத் தள்ளிக் கொண்டு ஊர்வலம் போவது போலப் போக நேர்ந்தது சங்கடமாக இருந்தது.
மரத்தடியில் வண்டியை நிறுத்தினேன்.
பத்தாம் வகுப்புப் படிக்கும் அந்த ஊர் மாணவர்களை மட்டும் இருக்கச் சொல்லிவிட்டு மற்ற -6,7,8.9 வகுப்புகளில் படிக்கும் பசங்களை அவரவர் வீடுகளுக்குப் போகச் சொன்னால் அவர்கள் போனால் தானே...?
சரி விஷ்ணு உங்க வீடு எங்கடா“ 
“ந்தா அதுதாங்கய்யா வாங்கய்யா“
“சரி நீங்கள்ளாம் போங்க நாங்க போய்க்கிறோம்“ யாரும் போகவில்லை
விஷ்ணுவின் அம்மா 1989-90இல் புதுக்கோட்டைமாவட்ட அறிவொளிக் கலைக்குழுவில் இருந்தவர். பள்ளியில் இவனைச் சேர்க்க வந்தபோதே சொல்லியிருந்தார்.  அவர்கள் வீட்டுக்கு முதலில் போனோம். வீட்டுக்குள் ஓடி சட்டையைப் போட்டுக்கொண்டு சிட்டாய்ப பறந்து வெளியில் வந்த விஷ்ணு சைக்கிளை எடுக்க ஓடினான். நான் புரிந்து கொண்டு, “அம்மா அதெல்லாம் ஒன்னும் வேணாம். அவனக் கூப்பிடுங்க எப்டிப் படிக்கிறான்?“ “நீங்க தான் சொல்லணும்... வீட்ல படிச்சிக்கிட்டேதான் இருக்கான்“ “விஷணு நல்லாப் படிக்கிறான்மா  அவன்தானே ரெண்டாவது மார்க்? முதல்மார்க்கே எடுக்கலாம் இன்னும் நல்லாப் படிக்கச் சொல்லுங்க அதச் சொல்லிட்டுப் போகத்தானே இப்ப வந்தேன். சங்கீதா நல்லாப் படிக்குதா?“ அதற்குள் விஷ்ணுவின் சித்தி எல்லாருக்கும் காப்பி போட்டு எடுத்துக்கொண்டு வந்துவிட்டது.
அடுத்தடுத்து 10ஆ ரெங்கராஜ், 10அ கோகிலா வீடுகளில் இல்லை. காட்டு வேலைக்குப் போய்விட்டார்களாம்... அவர்களின் சின்னத்தம்பி தங்கை விவரம் சொன்னார்கள். தூண்டிலில் மாட்டிய மீனைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு சிங்கவேட்டைக்குப் போய்வரும் ராஜா மாதிரி நடை அவர்களின் பெருமித்த்தில் தெரிந்த்து. எல்லாம் பெர்முடாசில் திரிந்தார்கள்- சட்டையின்றி! கிராமத்துப் பசங்களிடம் கூட, கைலி இருந்த இடத்தை இப்போது மெல்ல மெல்ல பெர்முடாஸ் பிடித்து விட்டது புரிந்தது.  
“சார் அதான் சார் 10 சி அபி வீடு“ ஒரு பயல் கத்தினான். ஊர்வலம் அந்தப்பக்கம் திரும்பியதும் கடையில் இருந்தவர்கள் ஒருமாதிரி பார்த்தார்கள். வாசலில் நைட்டியைப் போட்டுக்கொண்டு ஒரு சிறுமி பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தவள் கும்பலைப் பார்த்து அதில் என்னைப் பார்த்த்தும் கையைக் கழுவி உதறியவாறே உள்ளே ஓடினாள். போன வேகத்தில் –மேலே ஒரு துண்டைப் போட்டுக்கொண்டு- வெளியேவந்து வாய்நிறைய “அய்யா வாங்கய்யா“ என்றதும் எனக்கு ஒரே சிரிப்பு “அட நம்ம அபியாடா இது?“
கூரைக் கொட்டகை வாசலில் ரெண்டுபக்கமும் வாசமலர்ச் செடிகள்! நான் ஒன்றும் சொல்லாமலே ஊர்வலம் கொஞ்சம் எட்டி நின்று கொண்டது! இணையதுல்லா, தினேஷ் இருவரையும் மட்டும் அழைத்துக் கொண்டு  போனேன். “வீட்ல யாருப்பா இருக்கா?“ “நானும் அக்காவும் தான்யா இருக்கோம் அம்மா வேலைக்குப் போயிருக்காங்க..“ என்று சொல்லும் போதே அபி அக்கா வெளியில் வந்து “அய்யா வாங்கய்யா...“ என்றது. அதுவும் எங்கள் பள்ளியில்தான் பன்னிரண்டாம் வகுப்பு! “நீ எப்படிப் படிக்கிற? அம்மா பள்ளிக்கூடத்துக்கு வந்தப்ப நீதான் அபி மாதிரிப் படிக்கிறதில்லன்னு வருத்தமாச் சொன்னாங்க“ என்றதும் அருகில் நின்றிருந்த வால் ஒன்று
“சார்...அபிமாதிரி இது ரேங்க் வாங்காது...ஆனா பாஸ் பண்ணீரும்“ “இதுயாரு,“
“என் தம்பிங்கய்யா.. ஏழாம்ப்பு படிக்கிறான்... ரொம்ப நல்லாப் படிப்பான்“
அபி, அவனிடம் காசுகொடுத்து கூல்டிரிங்க்ஸ் வாங்கிவரச் சொல்ல  -
“நான்தான் குடிக்கமாட்டேன்னு தெரியும்ல ஏன்பா இதெல்லாம்.. ஒருடம்ளர் தண்ணி கொடு“ என “அய்யா நீங்க கோக், பெப்சி தான குடிக்கமாட்டேன் னு சொல்வீங்க இது நம்ம ஊரு கலரு சும்மா குடிங்க... முதன் முதலா எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க...“ இவ்வளவு விவரத்தோடு அபி சொல்லவும் என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.. வீட்டிலிருந்து ஒரு குவளை எடுத்து வரச்சொல்லி அதில் பாதியை ஊற்றி நான் எடுத்துக் கொண்டு, மீதியை அபி தம்பியிடமே கொடுத்தேன் தினேஷ் இணையா இருவரும் ஆளுக்கொரு கூல் டிரிங்ஸ் பாட்டிலை அண்ணாத்திக் கொண்டிருந்தார்கள்!
அபி அக்காவை அழைத்து, “அப்பா கிட்ட சொல்லுப்பா அபி நல்லா படிக்கும் நல்லா படிக்க வைக்கணும்னு நா சொன்னதா சொல்லு என்ன?“ என்று சொன்னதோடு அபி கையை உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு, “டாக்டரம்மா வரட்டுமா?“ என, “இருங்கய்யா அம்மா வந்துருவாங்க மதியானம் சாப்பிட்டு போகலாம்யா“ “ஆமா... உங்க ஊர்ல டீ காப்பி கலரு எல்லாம் அடுத்தடுத்து குடிச்சிருக்கேன் மதியச்சாப்பாடே முடியாது வரட்டா..“
அடுத்து கனகராஜ், நாகலட்சுமி, மாரிமுத்து, வீடுகளில் அப்பா அம்மா
இருவருமே காட்டு வேலைகளுக்குப் போய்விட இவர்கள் படித்துக் கொண்டிருந்த்தாகவும் நான் வந்தது கேள்விப்பட்டு வந்ததாகவும் சொல்ல அவர்களின் வீடுகளின் திண்ணைகளில் ஒரு நிமிடமாவது உட்கார்ந்துவிட்டு வந்தேன். இருந்த பெரியமனிதர்கள் தான் என் பின்னால் சுற்றுகிறார்களே!
     “அய்யா வினோதாவித்யா (அக்கா-தங்கை) வீடு அந்தக் கம்மாக்கரைல தான்யா இப்டியே குறுக்க போயிடலாம்..“  மணியைப் பார்த்தேன் 12.30
நாலைந்து சைக்கிள்கள் இதற்குள் தயாராகிவிட்டன...
அபி தம்பி குரங்கு பெடலுடன் நின்று கொண்டிருந்தான்.  
“நீ அடுத்த வருசம் எட்டாம்ப்புக்கு எங்க பள்ளிக்குடத்துக்கு வந்துரு என்ன?“ “இங்கதான் ஒம்பதாம்ப்பு வந்திருச்சே... டீசி யெல்லாம் தரமாட்டாங்களாம்“
“சரி சரி இங்கயே நல்லா படி... பன்னண்டாம்ப்புக்கு மாடல் ஸ்கூல் வரலாம்“ “நா அங்க தான் பத்தாம்ப்புக்கே வரலாம்னு நினைச்சேன்...“
அட என்னபேச்சு பேசுறான் இவன் என  நான் அவனைப் பார்க்க --
“இல்ல நா பத்தாம்ப்பு படிக்கும்போது நீங்க ரிட்டையராகிடுவீங்களாம்ல?
அபி சொன்னிச்சு அதான் நா இங்கயே படிச்சுக்கிறேன்னு சொல்ட்டேன்“
சைக்கிள் பறந்தது குரங்கு பெடலில்தான் என்ன வேகம்!
இந்தா பக்கத்துலதான்...பக்கத்துலதான் என்று சொல்லியே குளத்துக்கரை, வயக்காட்டு நடுவில் கிடந்த பாதை, கிராமத்திலிருந்து தப்பித்து ஓடிய வண்டிப் பாதை என எல்லா வழியிலும் பசங்களின் சைக்கிள்கள் வழிகாட்ட எங்கள் வண்டியும் பின் தொடர்நதது...  பின்னால் இருந்த இணையதுல்லா சொன்னான்... “அய்யா இந்த ரோட்டுல எல்லாம் போனா பஞ்சர்தான் இங்க பஞ்சர் பாக்க்க் கூட கடை கிடையாது... புதுக்கோட்டையிலர்நதுதான் ஆள் வரணும்...“ “டேய் சும்மாவாடா அதெல்லாம் ஒன்னும்ஆகாது“ ஊர்ப்பாசத்தில் சைக்கிளில் வந்த பசங்க சொல்லிக்கொண்டே முன்னால் வழிகாட்டினார்கள்...
“தம்பி இது என்ன ஊர்ரா?“
அய்யா இதாங்கய்யா பழைய ராசாப்பட்டி நம்ம கிளாஸ் வினோதா வித்யா ரெண்டு பேரு அப்பறம் அருண், கார்த்தி, சுந்தராம்பாள், சீனி, அப்பறம் அக்கா கல்யாணம்னு ஒரு வாரமா வரலயில்ல அந்த ரஞ்சனி எல்லாம் இந்தப் பக்கந்தாய்யா“
அதற்குள் சின்ன சைக்கிள் ஊர்வலம் போறதைப் பார்த்துட்டு ஊர்ப்பெரியவர் ஒருத்தர் நிறுத்தி விவரம் கேட்டார். சொல்லிவிட்டுப் புறப்பட்டோம்.
“எல சார ஏண்டா வயக்காட்டு ஒத்தயடிப் பாதையில போட்டு இழுக்கிறீங்க இங்கனயே வண்டிய நிப்பாட்டிட்டு குறுக்க நடந்தா டக்குனு போயிறலாம்ல?“
பசங்க மௌனமாக இருக்க நான்தான் தொடர்ந்தேன்... “இல்லிங்க அய்யா அப்படியே போனம்னா புதுராசாப்பட்டி போயி அண்டக்குளம் ரோட்டப் புடுச்சி புதுக்கோட்டை போயிரலாம்ல...“ “ஓகோ அப்பிடியின்னா போங்க“
     போகும் வழியில் வந்த ஒரு அம்மாவைக் காட்டி ரகசியமாக என்னிடம் வந்த பயக “இதான்யா ரஞ்சனி அம்மா“ நான் திரும்பி அவர்களை நிறுத்தி அறிமுகம் செய்துகொண்டு, “ஏம்மா ரஞ்சனி அக்கா கல்யாணம்தான் முடிஞ்சிருச்சில்ல பரிச்சை நேரத்துல லீவு எடுக்கச் சொல்லாதிங்கம்மா“ என, “ரஞ்சனி இனிமே பள்ளிக்குடம்லாம் வரமாட்டா நீங்க போங்க“ என்று வெடுக் கென்று சொல்லிவிட்டு வேகமாகப் போய்விட்டது... நான் திகைத்தேன். கிராம மக்களிடம் பிரச்சினைகளை நாம் புரிந்துகொண்டு உதவி செய்ய முடியாத நிலையில் அவர்களிடம் என்னபேசி எப்படிப் புரிய வைக்க...?
புளிய மரத்து நிழலில் வண்டியை நிறுத்திவிட்டு மணி பார்த்தேன் 1.00! திரும்பும்போதே வினோதா–வித்யாவின் (இரட்டையர்) அப்பா ஓடிவந்தார். “அய்யா வாங்கய்யா உங்களப் பத்தித்தான்யா புள்ளய்ங்க சொல்லிக்கிட்டே இருக்கும் டீவி யில நீங்க பேசுறத எல்லாருக்கும் போன் போட்டு எங்க அய்யா பேசுறாங்கனு சொல்லி வச்சிப் பாக்கச் சொல்லும் ரொம்பச் சந்தோசம்யா.“ என்னைப பேச விடாமல் வீட்டிலிருந்தவர்கள் எல்லாரும் பேசிக்கொண்டே இருந்தார்கள். “எப்படிய்யா இதுல வந்திங்க... ரோடு போடுறதா சொல்லிச் சொல்லியே ஏமாத்திட்டு இருக்காங்கய்யா.. இதுலதான் எங்க புள்ளைக நடந்தே வந்து ரோட்டப் புடுச்சி பள்ளிக்குடம் வருதுங்கய்யா நேரமாயிட்டா சைக்கிள்ல நான் கொணாந்து விடணும்யா அடுத்த வருசம் பதினொன்னாம் வகுப்புக்கு சைக்கிள் தருவீங்களாம்...”  என்னால் ஒன்றும் பேச முடியாமல் போனது.
ஓட்டு வீட்டில ஒருபக்கம் கூரை போட்டிருந்தது.
எல்லாருக்கும் நீர்மோர் வந்தது. எட்டிநின்ற பசங்களிடம் ஒரே சத்தம்.
“மாங்கா பறிச்சுத் தரவாய்யா கொண்டு போறீங்களா?“ என்ற ஒரு பாட்டியின் அன்பை மெதுவாக மறுத்துவிட்டு  பிள்ளைகளை அழைத்தேன் வினோதா-வித்யா இருவரும் எனக்குமட்டும் போட்டிருந்த நாற்காலிப் பக்கத்தில் வந்து எனக்கு மட்டும் சிலவர் சொம்பில் தந்த மோரில் இஞ்சியும் கறிவேப்பிலையும் கிடந்தது! அவர்கள் இருவரும் ஒரு வார்தையும் பேசவில்லை. “என்ன உங்க வீட்டுக்கு வந்திருக்கேன்... எல்லாரும் பேசுறாங்க நீங்க ரெண்டு பேரும் ஒன்னுமே பேசல? நல்லாப் படிக்கிறீங்களாடா“ 
வித்யா மெதுவாகச் சொன்னது “ரொம்ப நன்றிங்கய்யா
எதுக்கு? எனக்கு எதுவும் சொல்லத்தெரியவில்லை. எந்த மேடையிலும் தடுமாறாத எனக்கு வார்த்தைகள் தடுமாறின.
இரவுமுழுவதும் தூக்கமில்லை.
ஒருமடங்கு அன்பு காட்டுவோரிடம் பல மடங்கு அன்பைப் பொழியும் கள்ளமில்லாப் பிள்ளைகள், கிராமத்து மக்களின் தீராத பிரச்சினைகளின் மத்தியிலும் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று வந்திருக்கும் விழிப்புணர்வு! மேற்படிப்புக்கு வழியில்லாத தவிப்பு ...
வருடம் தோறும் பத்தாம் வகுப்புப் பிள்ளைகளின் வீடுகளுக்கு நானும் சகஆசிரியர்களும் சென்றுவருவது வழக்கம்தான் என்றாலும் இந்த ஆண்டு நான்மட்டும் சென்றது எனக்கு மறக்க முடியாத வாழ்க்கைப் பாடமாகவே இருந்தது. பார்த்தது என்னவோ பத்து-இருபது குழந்தைகளைத்தான் ஆனால் படித்த்தென்னவோ பல புத்தகங்களில் கிடைக்காத வாழ்க்கைப் பாடம்!
--------------------------------------------------  

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள்(5) அரசு வெளியீடு

சமச்சீர்க் கல்வி -பத்தாம் வகுப்பு - 
ஐந்து மாதிரி வினாத்தாள்கள் (அரசு வெளியீடுகள்)

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு மட்டும் அரசுத்தேர்வுகள் என்பதால் இந்தத் தேர்வுகளை எழுதும் மாணவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் -தேர்வு நடைபெறும் மார்ச் ஏப்ரல் மாதங்களுக்கு 100 நாள்களுக்கு முன்பே பதற்றமாகவே இருப்பார்கள் (தேர்வெழுதும் மாணவர்கள் அமைதியாகவே இருப்பார்கள் என்பது வேறு!)

இந்த ஆண்டு தாமதமாக வந்த புத்தகமும் புதிது, வினாத்தாள் அமைப்பும் புதிது என்பதால் மாதிரி வினாத்தாள்களும் தாமதமாகவே வந்தன.
அதிலும் மாற்றங்களைச் செய்த தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இறுதிப்படுத்தப் பட்ட ஐந்துவகையான மாதிரி வினாத்தாள்களை இறுதியாக வெளியிட்டிருப்பது தேர்வெழுதும் மாணவர்க்குப் பெருமகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.

இந்த மாதிரி வினாத்தாள்கள் ஐந்தையும் மாணவர்களுக்குத் தந்து பயிற்சி செய்துவிட்டால் வெற்றி மட்டுமல்ல, நல்ல மதிப்பெண்ணும் பெறலாம் என்பது உறுதி.

இத்தோடு மெல்லக் கற்கும் (ஸ்லோ லேனர்ஸ்) மாணவர்க்கான பயிற்சிகளையும் (ஸ்டடி மெட்டீரியல்ஸ்) சேர்த்து, சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு தயாரித்துத் தந்திருக்கும் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு பொன்.குமார் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இந்த மாதிரி வினாத்தாள்கள் ஐந்தோடு, பயிற்சிக்கான பகுதிகளையும் தமது வலைப்பக்கத்தில் வெளியிட்டிருக்கும் கல்விச்சோலை வலைப்பக்கத்தின் ஆசிரியர் திரு தேவதாஸ் அவர்களின் சேவையை மாணவர்களின் சார்பாகப் பாராட்டுகிறோம். நமது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உடனடியாகக் கிடைக்கச் செய்ய வேண்டும்
(பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு இன்னும் 57நாள்களே உள்ளன!)

தொடர்புடையவர்கள் பார்வைக்கு இவை கிடைக்கட்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய வலைப்பக்கம் --
 http://www.smartclass.kalvisolai.com/ 

நன்றியுடன்,
நா.முத்து நிலவன்
புதுக்கோட்டை - 622 004
05-02-2012

‘நல்லாசிரியர்’ விருது

தினமணியில் வெளிவந்த எனது கட்டுரை - நா.மு.

விண்ணப்பித்து 
வாங்குவதா விருது? (தினமணி-02-8-2011)
                       
தமிழக அரசு தரும்  நல்லாசிரியர்’ விருது ஒவ்வோராண்டும் செப்டம்பர்-5ஆம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவரது பெயராலேயே வழங்கப்படுகிறது. இந்த விருது மட்டுமன்றி, ‘கலைமாமணி’; விருது பற்றிய செய்திகளும் வரும்போதெல்லாம் அட இவருக்கா இந்த விருது?’ எனச் சிலர் பெயர்களைப் பார்த்து ஆச்சரியப் படுவதும்சில பெயர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைவதும் தொடர்கதையாகிவிட்டது! இதனால்இவ்விருதுகள் வரவர கேலிக்கூத்தாகிவிருது பெற்றவர்க்கும்,-ஏன்விருதுக்குமே கூட- மரியாதையற்ற நிலை உருவாகி வருகிறது! அரசுகள் மாறலாம்கட்சி-அரசியல் மாறலாம்ஆனால் மரபுசார்ந்த சிலமாண்புகளைக் காப்பாற்றும் பொறுப்பு நம் அனைவருக்குமே உண்டு.
                       சொல்லப்போனால்திரைக் கலைஞர்க்கும் ஆசிரியர்க்கும் அரசு விருது தருவதுபோலஎடுத்துக்காட்டான உழவர்களுக்;கும்,பொதுநோக்கில் சேவைபுரியும் அரசு ஊழியர்-மருத்துவர்க்கும்,புதுமைசெய்யும் இளைஞர்க்கும்நல்லவற்றைத் தரும் இதழ் மற்றும் செய்தியாளர்க்கும் நமது அரசு விருது வழங்கி கௌரவம் செய்தால் பல துறைகளிலும் உற்சாக ஊற்றுக் கிளம்பாதா என்ன
                       அரசியல்கடந்துமக்களால் மதிக்கப்படும் சான்றோர்புனிதமான பணிகளில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டோர் ஆகிய பெருமக்களைஅரசு தானே முயன்று தகவல் சேகரித்து,தகுதியானவரை அடையாளம்கண்டுஅழைத்துப்பாராட்டிவிருதுபெறும் அவரது தகுதிகளை அனைவரும் அறியச்சொல்லிஅவரது பணிதொடர வாழ்த்தி பின்னர் விருது தந்து அனுப்ப வேண்டும்.
                          ஆனால் இன்றுள்ள நிலை? ‘நல்லாசிரியரோ, ‘கலைமாமணியோ அவரே தனது தகுதிகளை எடுத்து விளம்பி --அவற்றுக்கான சான்றுகளையும் இணைத்து-- விண்ணப்பித்த பிறகு, ‘சிபாரிசுகளின் அடிப்படையில் தேர்வுசெய்துநூற்றுக் கணக்கானோரை வரிசையாக வரச்சொல்லி இலவச விநியோகம் போல விருது’ கொடுத்து அனுப்புவதில் என்ன கௌரவம் இருக்கிறதுஇதன் பலன்தான் என்ன?
             கடந்த ஆண்டு தமிழே தெரியாத தமன்னாவுக்கும்ஸ்ரேயாவுக்கும் தமிழ்நாடு அரசு கலைமாமணி’ விருது தந்தது நகைப்புக்கு இடமானது. கலைக்கு மொழிகிடையாது எனும் பொத்தாம் பொதுவான விளக்கம் போதாது. மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதுதான் தகுதி’ என்றால்,சர்க்கஸ் கோமாளிகளுக்குக் கொடுப்பதுதான் சரியானது! அவர்கள்படும் பாட்டுக்கு அங்கீகாரமாவது கிடைக்கும்!
           சிலர்-பலரின் சிபாரிசுகளால்தகுதியற்றவர்க்கும் வாரிவழங்கப்படும் விருதுகளால்சான்றோர் பலரும் விருதுகளைப் பார்த்து எள்ளி நகைப்பதும் சற்றே தள்ளி நடப்பதும் நடக்கும் தானே
முதலில் ஒரு கேள்வி: எனக்குக் கடன் வேண்டும்உரியமுறையில் திரும்பக் கட்டிவிடுவேன்“ என்று ஆசிரியர் அரசிடம் விண்ணப்பம் செய்யலாம், “எனக்குப் பணிஇடமாறுதல் வேண்டும் இந்தஇடம் கிடைத்தால் நல்லது” என்று அரசிடம் விண்ணப்பிக்கலாம். இவற்றை விட்டு, ‘எனக்கு விருது கொடுங்கள்’ என்று சுயமரியாதை உள்ள யாரும் விண்ணப்பம்’ போடுவார்களா என்னஏன் இது நமது அரசுகளுக்குப் புரிவதில்லை?
இப்போதுஇந்த விருதுகளைப் பெற விண்ணப்பம் போடும் பலரும்,அதை எப்படியாவது வாங்கிவிடச் செய்யும் செலவு-உள்ளிட்ட செயல்கள்’ விருதுகளே வெட்கப்படும்படியல்லவா உள்ளன?
          அப்படியானால், “இதுவரை விருதுபெற்ற யாருக்கும் சுயமரியாதை கிடையாதா?” என்றுகேள்வியைத் திருப்பினால்அப்படி எல்லாரையும் சொல்லிவிட முடியாது. பெரும்பாலோர் அப்படி இருந்தாலும்,சுயமரியாரை உள்ள சிலர்தம் மீது அன்பு கொண்டவர்களின் தொந்தரவு தாங்காமல்கையெழுத்தைப் போட்டுக் கொடுத்துவிட்டு விருதுவாங்க மட்டுமே மேடைக்கு வந்ததும் உண்டு! இப்படியான விருதை அவர்கள் பெரிதுபடுத்தாமல் நண்பர்களின் மகிழ்ச்சிக்காக ஏற்றுக் கொள்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. அப்படியானவர்களைச் சந்திக்கும்போது --விருதாளர்களைத் தேர்வுசெய்யும் முறை மற்றும் விருதுவழங்கும்-- முறை சரியல்ல என்றே அவர்களும் மனம் கசந்து சொல்கிறார்கள்.
           இலக்கியத்தில் இன்றும் எல்லாராலும் மதிக்கப்படும் -இந்தியஅரசின் கௌரவம் மிகுந்த இலக்கிய விருதான-- சாகித்திய அகாதெமிவிருதுக்கான தேர்வுக் குழுவில் நான் சில முறை இருந்திருக்கிறேன். அவர்கள் பல படிகளை வைத்திருக்கிறார்கள். முதல்கட்டத் தேர்வின் போதுபத்துப்பேர்களைக் கேட்பார்கள். பரிந்துரைக்கான புத்தகங்களை அனுப்பிவைப்பதோடு, ‘இந்த நூல்கள் தவிரவும்உங்கள் பார்வையில் பட்டவிருதுக்குத் தகுதியான நூல் என்று கருதுவதை நீங்களே வாங்கிக்கொண்டுஅந்த நூலின் தகுதிகளை எங்களுக்குத் தெரிவியுங்கள் அந்த விலையை நாங்கள் தந்துவிடுவோம்’ என்றும் நடுவர்களுக்குத் தெரிவிக்கப்படும். அறிவிக்கப்படும் வரை எழுத்தாளருக்குத் தெரியாமலே இது நடக்கும்! பலகட்டத் தேர்வு செய்தோரை அவர்களுக்குத் தெரிய வழியுமில்லை!
          இதேமுறையில்தான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் என் தலைமையி லான தேர்வுக்குழு, 1997ஆம் ஆண்டின் சிறந்தநாவலாக சாய்வு நாற்காலி’ நாவலைத் தேர்வுசெய்தது. மதுரை - திருப்பரங்குன்றத்தில் பல்லாயிரம் மக்கள் கலந்துகொண்ட விழாவில் நானே என் கையால் அந்த விருதை எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் அவர்களுக்கு வழங்கியபோது விருதுபெற்றவரைப் போலவே விருது தந்தவர்களும் மகிழ்ந்தோம். ஆதன்பின்னரே சாகித்திய அகாதெமி விருதும் அதே நாவலுக்காகக் கிடைத்ததை மதிப்பிற்குரிய படைப்பாளியான அவரே கூறி மகிழ்ந்தார்!
          இதேபோல 1993இல் வெளிவந்த எனது புதிய மரபுகள்’ கவிதை நூலுக்கு அந்த ஆண்டின் சிறந்த கவிதைத்தொகுப்புக்கான விருதை வழங்கிய தமிழ்நாடு கலை-இலக்கியப் பெருமன்றம் என்னிடம் எந்தவிதமான விண்ணப்பத்தையும் கேட்கவில்லை. அவர்களாகவே அழைத்துத் தந்தார்கள்.
தனி அமைப்புகளே தகுதியானநூல்தகுதியான ஆசிரியர்தகுதியான இலக்கியவாதிமுதலான பல விருதுக்குரிய தகவல்களைத் திரட்டிவிடும்போதுநமது அரசால் திரட்ட முடியாதா என்ன?நிச்சயமாக முடியும்.. தேர்வுக்குழுவினர் கொஞ்சம் விவரமானவர்களாகவும்சிரமம் பாராத வராகவும் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவராகவும்’ இருக்கவேண்டும். அவ்வளவே! விருதுக்குத் தேர்வுசெய்யும் குழுவை முதலில் சரியாகத் தேர்வு செய்துவிட்டால் எல்லாம் சரியாக நடக்க வழியண்டு
இன்னொன்று விருதுபெறுவோரின் வயது சார்ந்தது
           ஆசிரியப் பணியில் ஓய்வுபெற ஒன்றிரண்டு ஆண்டுகளே உள்ள,அல்லது ஓய்வு பெற்றுப் பணி நீட்டிப்பில் உள்ளவர்களுக்கே பெரும்பாலும் நல்லாசிரியர்விருது என்று புகழ்பெற்றுவிட்ட மாநில அரசின் சிறந்த ஆசிரியர்க்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுவிண்ணப்பத்தின் அடிப்படையில் தரப்படுகிறது. இந்த விருதை நாற்பது வயதுக்கும் முன்னதாகத் தர முடிந்தால்அவரதுநல்லாசிரியப் பணியை’ மீதமுள்ள ஆண்டுகளில் பள்ளிக்குழந்தைகளும் பயன்பெற உதவியிருக்காதா என்ன?  நிச்சயம் அதற்கொரு பாதிப்பு அவர்களிடம் இருக்கும். இதைவிட்டு முதியோர் உதவித்தொகை’ போல விருதுகளை ஓய்வுபெறும் வயதில் தந்து வீட்டுக்கு அனுப்புவதால்அவர்வேண்டுமானால், ‘ஓய்வுபெற்ற-மற்றும்-விருதுபெற்’ என்று சாகும்வரை போட்டுக் கொள்ளலாமே தவிர,விருதுபெற்ற முதியவரால் சமுதாயத்துக்கு -பணிபுரிந்த துறைக்கு- என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது?
             பொள்ளாச்சியில் இருந்துகொண்டுகவிஞர் சிற்பிஅவர்கள்மூத்தபடைப்பாளி ஒருவருக்கும் இளைய படைப்பாளி ஒருவருக்குமாக -இரு பிரிவுகளாக- விருதுடன் கூடிய ரொக்கப்பரிசுகளை ஆண்டுதோறும் தந்து கௌரவிப்பது போல தமிழகஅரசும் கலைமாமணிநல்லாசிரியர் விருதுகளை இளையவர்க்குத் தனியாகவும்மூத்தவர்க்குத் தனியாகவும் கூட வழங்கலாமே
             சான்றோரை கௌரவிப்பது தேவை அதைவிடவும் அவரதுபணி விருதுபெற்;ற பின்னரும் சமூகத்திற்கும் பள்ளிக்குழந்தைகளுக்கும் கிடைக்குமாறு அரசு யோசிக்கவேண்டாமாஇளைஞர்க்குக் கொடுத்து,ஒருவேளை அவர் தவறு செய்துவிட்டால்...விருதுக்கு அவமரியாதையாகிவிடுமே! என்றால்இப்போது விருதுபெற்றோரில் -விருதுபெற்ற பிறகும்-- தவறுசெய்து தண்டனை பெற்றவர்களும் உண்டே! குற்றப் பட்டியலில் பெயர் இடம்பெற்ற ஒருவருக்கு மத்திய அரசுபத்மஸ்ரீ’ விருது தந்ததும் நடந்ததே!
            அதோடுஅரசு விருதுபெற்றோர் காலமாகும் போதுஅந்தந்தத் துறைசார்நத அரசு உயர் அலுவலர்கள்-- ஏன் மாவட்ட ஆட்சியரே கூட-- வந்துஅஞ்சலி செலுத்திஅரசின் சார்பாக கௌரவிப்பது,அல்லது அரசின் சார்பாக இரங்கல் செய்தி வெளியிடுவது விருதுபெற்றவரின் குடும்பத்துக்கு மட்டுமல்ல விருதுக்கே கௌரவமாக இருக்குமே! இதையும் அரசு யோசிக்கலாமே?
           பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜனைத் தொடர்ந்து எஸ்.பி.பால சுப்பிரமணியனும் பத்மஸ்ரீ விருது பெற்றுவிட்டார். சுசிலாம்மா பத்மப+ஷன் விருதே பெற்றுவிட்டார். இவர்களின் தகுதியறிந்து அந்த விருதுகளைத் தந்த மத்தியஅரசுஇவர்களுக்கு முன்னோடியான எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ஏன் இன்னும் பத்மஸ்ரீ விருதுகூடத் தரவில்லை எனும் கேள்வி எழுவது நியாயம் தானேபாவம், அவர் இந்த விருது வாங்கும்“ தொழில் நுட்பம் தெரியாதவரோ என்னவோ?
            அரசுவிழாக்களில் பாடப்படும் நீராரும் கடலுடுத்த’ எனும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு மட்டுமல்லாமல் பல்லாயிரம் திரைப்பாடல்களுக்கு இசையமைத்துத் தந்த இசைமேதை ஏம்.எஸ்.வி. போலும் எண்ணற்ற மேதைகளும்நல்ல ஆசிரியர்களும் மட்டுமல்ல,விருதுக்கத் தகுதிவாய்ந்த உழவர்களும்;, அரசு ஊழியர்-மருத்துவர்களும்எடுத்துக்காட்டான இளைஞர்களும்இதழாளர் மற்றும் செய்தியாளர்களுமாய்ப் பற்பலர் விளம்பர வெளிச்சமே இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறார்கள்விருதுகளுக்காக ஏங்கி அல்ல,விருதுகளை அலட்சியப்படுத்தி விட்டு!
           தான் தரும் விருதுகளின் கௌரவத்தைக் காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை!அரசின் கடமையை உரிமையோடு எடுத்துச்சொல்ல வேண்டியது நம் கடமை! 
-------------------------------------
நன்றி : தினமணி – நாளிதழ் - 02-8-2011  
--------------------------------- 

சமச்சீர்க் கல்வி


வாராது போல்வந்த மாமணியைத் தோற்போமோ?’
-- நா.முத்து நிலவன் --
மிழ்நாட்டுப் பள்ளிகளில் சற்றேறக்குறைய ஒன்றரைக் கோடி மாணவர்கள் படிக்கிறார்கள்.  ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை படிக்கக்கூடிய மாணவ-மாணவியரும் அவர்தம் பெற்றோரும் என ஏறக்குறைய தமிழ்நாடே குழப்பத்தின் உச்சத்தில்  இப்போது தவிக்கிறது… 
புதிய அரசு கொண்டுவந்த சமச்சீர்க் கல்வித் திருத்தச் சட்டத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது. தமிழகஅரசு இதைஎதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. முந்தியஅரசு அச்சிட்டு அனுப்பிய புத்தகங்கள் தேக்கி வைக்கப்பட்டு, புதியஅதாவது கடந்த ஆண்டு இருந்த பாடத்திட்டப்படியான-- நூல்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. மெட்ரிக் பள்ளிகளோ, ‘அவர்களுக்கான நூலகளை அவர்களே வாங்கிக் கொடுக்கும் வேலையை -இந்த ஆண்டு இல்லைஎன்றிருந்த கொள்ளையை- பெரும்பாலும் செய்துமுடித்து விட்டார்கள்.. இவ்வளவுக்கும் காரணம், ‘சமச்சீர்க்கல்வித்திட்டத்தில் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் தரமாக இல்லைஎன்பதாக இன்றைய முதல்வர் கூறுகிறார், ‘அரசியல் காழ்ப்புஎன்று முன்னாள் முதல்வர் கூறுகிறார். 
பாடநூல்கள், கட்சிஅரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்கவேண்டும்என்று எல்லாரும் விரும்புகிறோம். ஆனால், இதுவரையான தமிழ்நாட்டுப் பாடப்புத்தகங்களில் அப்படி எந்தஆண்டும் இருந்ததில்லை என்னும் எதார்த்தத்தையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இதைப் பாடநூல்களை எழுதும் - மேற்பார்வை செய்து ஒப்புதல் வழங்கும் அந்தந்தப் பாடநூல்களின் ஆசிரியர்கள் அல்லவா முதலில் உணரவேண்டும்?! 
ரு புனிதமான பணியில் ஈடுபடுகிறோம் என்னும் பெருமிதமோ அதற்கான அக-புறத் தகுதியோ இல்லாதவர்கள் பாடநூல் எழுத வரும்போது அதற்கான பிரதிபலிப்பும்பாடநூலில் வெளிப்படத்தானே செய்யும்? வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றாங்க? ‘சட்டியில இருக்கிறது தானே அகப்பையில வரும்? பெரும்பாலும் பள்ளிக்கல்விக்கு நேரடித்தொடர்பில்லாத கல்லூரிப் பேராசிரியர்கள், மற்றும் ஆசிரியப் பயிற்சிநிறுவனப் பேராசிரியர்களே இதுவரை பாடநூல்களை எழுதி வந்துள்ளனர். இப்போதும் --சமச்சீர்க் கல்விபாடநூல்களிலும்-- இதுதானே நடந்தது? எவ்வளவுதான் மேதைகளாக இருந்தாலும் -தொடர்புடைய வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் நடத்திய நேரடிஅனுபவம் இல்லாதவர்கள்- புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு எழுதும் பாடநூல் எப்படிச்சரியாக இருக்கும்?  
பாடம் நடத்தும் ஆசிரியர்களைப் பாடநூலாசிரியர்களாகத் தேர்வுசெய்ய நினைத்த முந்திய அரசின் பள்ளிக்கல்வித்துறை, அவர்களை விண்ணப்பிக்கச் சொல்லி விளம்பரம் செய்தது. பிறகு பாடநூல் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்வும் நடத்தியதுதான் பெரும் வேடிக்கை! 

            ஆமாம்சாமிகள் மட்டும்அடுத்தஆண்டும்; --அதாவது 7,8,9,10 வகுப்புகளுக்கான சமச்சீர்க்கல்விபாடநூல் ஆசிரியர்குழுவில்-- தொடர்ந்து இடம்பிடித்தனர். கருத்துகளை பொருத்தமாகச் சொன்ன ஆசிரியரோடு நல்ல புதிய கருத்துகளை தமிழ் மாணவர்க்குத் தரவேண்டும் என்று துடிப்போடு 6ஆம் வகுப்புத் தமிழ்ப்பாட நூல் ஆசிரியர்குழுவில் இருந்த இரண்டு இளைஞர்களும் அடுத்த ஆண்டு அழைக்கப்படவில்லை! இளஞ்சிறுவரிடையே பெருந்தன்மைப் பண்பை வளர்க்க வேண்டிய ஆசிரியர்குழு, பணியை மட்டுமல்ல பெயரையும் இருட்டடிப்புச் செய்யும் அளவிற்குப் பெருந்தன்மையோடு இருந்ததுதான் சமச்சீர்க்கல்விப் பாடநூலாசிரியர் குழுவின் இலட்சணம்!  
இதுபோலும் சில்லறைத் தவறுகளுக்காகவோ, ‘தற்காலிக இழப்புகளுக்காகவோ வருந்தவில்லை! மாறாக சமச்சீர்க்கல்வி எனும் வாராதுபோல்வந்த மாமணியைத்தோற்போமோ?’ என்றுதான் அஞ்சுகிறேன்.

முந்திய அரசும் பெரும்ஈடுபாட்டோடு சமச்சீர்க் கல்வியைக்  கொண்டுவரவில்லை. கல்வியாளர்கள், சமூக-ஜனநாயக இயக்கங்களின் தொடர்ந்த போராட்டங்கள், தேர்தல் அறிக்கையில் உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டிய அரசியல்எனகலைஞர் கையில் எடுத்தாரே தவிர மெட்ரிக் பள்ளி முதலாளிகளின் உள்ளடிவேலைகளை அவரால் எதிர்கொள்ள இயலவில்லை.
            சமச்சீர்க்கல்வி ஒழியவேண்டும்என்று நினைப்பவர்களின் முதல் எதிரி தமிழ்வழிக்கல்விதான்.  கல்வியாளர் மட்டுமல்ல தேசநலனில் அக்கறைகொண்ட பலரும் சொல்லிச் சொல்லி மாய்ந்துபோ யிருக்கிறார்கள்காந்தியடிகள் சொன்னார்: எனக்கு ஒரு சர்வாதிகாரியின் அதிகாரம் இருக்குமானால், நான் இன்றே நம் சிறுவர்கள் அந்நிய மொழிமூலம் கற்பதை நிறுத்திவிடுவேன். தாய்மொழி மூலம் கற்பிக்கும்படிக் கட்டளையிடுவேன். இம்மாற்றத்தை எதிர்ப்பவர்களை வேலையிலிருந்து நீக்கிவிடுவேன்’ (ஹரிஜன் இதழ் நாள்:22-06-1947) அந்த அகிம்சாவாதியின் கடுமையைப் பார்த்தீர்களா? இதையே நமது பாரதி –‘தமிழருக்குகட்டுரையில், ‘தமிழா பயப்படாதே! ஊர்தோறும் தமிழ்ப்பள்ளிக் கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்என்றதை யார்கேட்டார்கள்? ஆங்கிலப் பள்ளிகளின் கொள்ளைஒருபக்கம் அதிகரிக்கும் போதே அவர்களின் அதிகார அட்டகாசமும் அதிகரிக்க ஆரம்பித்தது. அங்குபடிக்கும் தமிழ்ப்பிள்ளைகள் வகுப்பு நேரம் அல்லாத நேரங்களில்கூட இயல்பாகத் தமிழில் பேச முடியாதபடி அவர்களின் அடிமை மோகம்தலைவிரித்தாடியது!

தமிழகப் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி நிலையங்கள் யாருடைய பிடியில் இன்றும் இருக்கிறதென்பது ஊரறிந்த ரகசியம் தானே? இல்லாவிட்டால் பத்தாம்வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சியில் மாநில அளவில் தொடர்ந்து 26 ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கும் விருது நகரைவிடவும் ஈரோட்டிலும் திருச்செங்கோட்டிலும் ராசிபுரத்திலும் நாமக்கல்லிலும் மட்டும் இத்தனை பணக்காரமெட்ரிக் பள்ளிகளும், சிபிஎஸ்சி பள்ளிகளும் முளைத்துக் கிளைபரப்பியிருக்குமா? அல்லது டீம்டு யுனிவர்சிடிகள் தான் இத்தனை இருக்குமா? ஒரு மெட்ரிக் பள்ளியைத் தொடங்கி அடுத்த ஆண்டே ஆசிரியர்பயிற்சிப் பள்ளிஅடுத்த ஆண்டு ஆசிரியர்கல்லூரிஅதற்கடுத்த ஆண்டு பொறியியற்கல்லூரிதொடரும் ஆண்டுகளில் ஏனைய கல்லூரிகள் இறுதியாக டீம்டு யூனிவர்சிடிஎன வளர்ந்திருக்கும் இவர்களிடம் நாட்டு நலனை உள்ளடக்கிய தாய்மொழிவழிக் கல்வியையோ அல்லது சமச்சீர்க் கல்வியையோ எதிர்பார்க்க முடியுமா? மக்கள் நமது அரசிடம் தானே இதை எதிர்பார்க்க முடியும்

 படைப்பாக்கக் கல்விமுறைமற்றும் செயல்வழிக் கற்றல் முறைநான் பார்த்த வரை குழந்தைகளுக்கான மிகச்சிறந்த கல்விமுறை என்பதில் சந்தேகமில்லை. சமச்சீர்க்கல்வியின் மிகச்சிறந்த முதல் மூன்று வகுப்புகளுக்குப் பாடநூலுக்குப் பதிலாக அட்டைகள் வழி அவர்களே கற்கும் - ஆசிரியர் ஒரு நண்பரைப்போல அருகில் அமர்ந்துவழிகாட்டும் - அருமையான கல்விமுறை.. இதுவும் சமச்சீர்க் கல்விமுறையின் ஓர் அங்கம்தான். இதை ஒப்புக்கொள்ளாத ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் விளக்கி நடைமுறைப்படுத்த வேண்டிய அரசு இதில் முழுமூச்சாக ஈடுபாடு காட்டாதது ஏன்
சமச்சீர்க் கல்வி அறிமுகப்படுத்தும் முன்னதாகச் செய்ய வேண்டிய பணிகளில் முக்கியமான ஒரே மதிப்பெண் பட்டியல்’ 2009-10ஆம் கல்விஆண்டுமுதல் தரப்பட்டது. அதாவது 1100 மதிப்பெண்ணுக்குத் தேர்வு எழுதிய மெட்ரிக் மாணவர்க்கும். 600 மதிப்பெண்ணுக்குத் தேர்வு எழுதிய அரபி மற்றும் சமஸ்கிருத மாணவர்க்கும்,  500மதிப்பெண்ணுக்கே வகுத்துக் கணக்கிட்டு- ஒரே மாதிரியான மதி;ப்பெண் பட்டியல் வந்தது. இந்த 2011-12ஆம் கல்வி ஆண்டில், தேர்வுகளும் 500 மதிப்பெண்ணுக்கே என மாற்றக்கூடிய சமச்சீர்க் கல்விப் பாடநூல்கள் வந்திருக்க வேண்டும்.  இனி வரும் சமச்சீர்க் கல்வி ஆலோசனைக் குழுஇதுபற்றியும் முடிவெடுக்க வேண்டும். 
திரு. முத்துக்குமரன் குழு நூற்றுக்கும் மேற்பட்ட ஆலோசனைகளை முந்திய அரசுக்குத் தந்தது. அதில் ஒரு சில ஆலோசனைகளையே அரசு நடைமுறைப்படுத்தியது. அதில் சொல்லப்படாத நல்லபல கருத்துகளும் உள்ளன. சமச்சீர்க் கல்விப் பாடநூல்கள் மற்றும் தேர்வுகளை நடைமுறைப்படுத்திக் கொண்டே பிறவற்றைத் தொடர்ந்து செய்யவேண்டும். அதில் பொதுப்பள்ளி மிகமுக்கியமானது. பீகாரில் திரு.நிதீஷ்குமார் இதனை -இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்திய மாநிலம்-- எனும் சிறப்போடு நடைமுறைப்படுத்தி வருவதாகச் செய்திகள் சொல்கின்றன. 
யுனெஸ்கோ அறிக்கையின்படி, இன்றைய நிலையில் அனைவருக்கும் கல்விஎனும் இலக்கை 2015ஆம் ஆண்டில்கூட எட்டமுடியாத 40நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்துவிடக் கூடாது எனும் முனைப்போடு நமது மத்தியஅரசுடன், கல்வியாளர்களும், சமூகஆர்வலர்களும், சில முயற்சிகளை மேற்கொண்டனர். இந்தியாவில் ஆறிவொளி இயக்கங்களை நடத்திய அனுபவத்தோடு அனைவருக்கும் ஆரம்பக்கல்வி எனும் சில நல்ல திட்டங்களை முன்வைத்து அரசுக்கு உதவிவரும் அறிவியல் இயக்கம் போலும் சமூக இயக்கங்களை உரியவகையில் பயன்படுத்த அரசு தயங்கக் கூடாது.
மதுரைப் பகுதிப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் தோல்விகள் அதிகம்! ஏனென்று விசாரித்தால் பெரும்பாலான மேல்நிலை வகுப்புகளுக்குத் தமிழாசிரியர்கள் இல்லையாம்! உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக உயர்த்தப்படும்போது தமிழாசிரியர் பணியிடங்களை முந்திய அரசு நான்கு ஆண்டுகளாகவே தரவில்லை எனும் குற்றச்சாட்டும் உள்ளது. இதுபோலும் குறைகளைக் களைந்து, ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தை முன்னேறிய நாடுகள் பலவற்றில் இருப்பது போல 1:20 என இல்லாவிட்டாலும் முத்துக்குமரன் குழுவில் பரிந்துரைத்திருப்பதுபோல 1:30என்றாவது இட்டு, புதிய ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கித் தரவேண்டும்.

இன்னொரு வகையில் பார்த்தால், சமச்சீர்க் கல்வி என்பது கல்வி தொடர்பானது என்பதை விடவும் அது சமுதாயம் தொடர்பானது என்பதே சரியான பார்வை! இன்றைய வகுப்பறையே நாளைய சமுதாயம்! சமூக சமத்துவம் வந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருப்பவர்கள்தாம் - எல்லாவற்றிலும் தனியார் மயம் வரவேண்டும் என்று ஏங்கிக்கிடப்பவர்கள்தாம் - இடஒதுக்கீடே கூடாது என்பவர்கள்தாம் - தகுதி, திறமை எனும் பெயரில் ஏமாற்றி வருபவர்கள்தாம் சமச்சீர்க் கல்வியையும் கூடாது என்கிறார்கள்! நாம் கல்விமுறை மாற்றம் எனும் பெயரில் இவற்றை வரவேற்க வேண்டும் என்பதற்காகவே சமச்சீர்க் கல்வி வேண்டும் என்போம். உச்சநீதி மன்றத் தீர்ப்பை எதிர்பார்ப்போம். தீர்ப்பு எப்படி இருந்தாலும் நல்ல சமுதாயத்திற்கான நமது பணியில் கல்வியின் வழியான நமது பணி தொடர்ந்து நடக்கும் நடக்கவேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------------------------    

இந்தக் கட்டுரை தமிழக அரசின் சமச்சீர்க்கல்வித் திருத்தச் சட்டத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தவுடன், தமழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாகக் கிடைத்த செய்தி அறிந்து -கடந்த 13-06-2011 அன்று-- எழுதி நமது வலையில் வெளியிடப்பட்டது.

நம் நண்பர்கள் பலரும் நல்ல ஆலோசனைகளைப் பின்னூட்டமாக இட்டிருந்தார்கள்.மும்பைக் கவிஞர் புதிய மாதவி சொன்ன விமரிசனத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். கவிஞர் மு.முருகேஷ் சொன்னதைப் போல மறுநாள் ஜனசக்தி நாளிதழுக்கு அனுப்பி வைத்தேன். கடந்த 24-06-2011 அன்று ஜனசக்தியின் துணையாசிரியரும் கவிஞருமான தோழர் ஜீவபாரதி பேசினார். கட்டுரை நீளமாக இருப்பதால் எடிட்செய்து வெளியிடலாமா என்று கேட்டார். அதன் படி அடுத்த நாள் ஜனசக்தியில் வெளிவந்த கட்டுரை சரியாகவே எடிட் செய்யப் பட்டிருப்பதாக நான் உணர்ந்ததன் அடையாளமாக அப்படியே ஜனசக்தியில் வெளிவந்தவாறே- திருத்தி மீண்டும் நமது வலையில் வெளியிடுகிறேன்.

சரியாக கருத்துகளைச் சொன்ன கவிஞர் புதியமாதவிக்கும் கவிஞர் முருகேஷ_க்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. வெளியிட்டமைக்கு நன்றி: ஜனசக்தி நாளிதழ் -25-06-2011.