அடுத்த முயற்சி, பயிற்சியும் மின்னூல் வெளியீடும்!

விழா முடிந்தது, சரி. 
அடுத்த வேலையைப் பார்ப்போமா
இரண்டு வேலைகள் இருக்கின்றன!!
(விழாப்பற்றிய செய்திகளைப் பகிரும், வரவு-செலவு பார்க்கும் வேலைகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கட்டுமே?)

ஒரு பெருமைக்குரிய வேலையைப் பார்த்து முடித்ததும், அல்லது ஒரு பெரிய பரிசைப் பெற்றதும் அடுத்த வேலையைத் தொடங்க, சிறிது தயக்கமும் மயக்கமும் ஏற்படுவது இயல்புதான். ஆனால், நாம் அதைத் தாண்டி வருவோம்!

அடுத்த மாதம் (அல்லது திசம்பர் மாதம்) புதுக்கோட்டை மாவட்டக் கணினித் தமிழ்ச்சங்கம் சார்பில் புதுக்கோட்டையிலிருந்து 25கி.மீ. தொலைவிலிருக்கும் காரைக்குடியில் இணையத் தமிழ்ப் பயிற்சிப் பட்டறைநடத்த இடம்கேட்டு அழகப்பா பல்கலைக்கழகத் துணை வேந்தர் அவரகளிடமும், நிதிகேட்டு தமிழ்-இணையக் கல்விக் கழகத்திடமும் ஏற்கெனவே கோரிக்கை வைத்திருக்கிறோம்.

அதைக் கொஞ்சம் முடுக்கி விட்டு -இரண்டுநாள்- பயிற்சிக்கு ஏற்பாடு செய்வோம். பழையவர்கள் பாதிப்பேர், புதியவர்கள் மீதிப்பேர் என்பதுதான் நமது வளர்ச்சிக்குச் சரியான வழி.

அதாவது, ஏற்கெனவே வலைப்பக்கம் வைத்து என்னத்தையாவது எப்படியாவது -என்னைப் போல- எழுதி ஓட்டிக்கொண்டு, நிறைய தொழில்நுட்பச் சந்தேகங்களோடு இருக்கும் பழையவர்கள் ஒரு ஐம்பதுபேர். மின்னஞ்சல் மட்டுமே வைத்து வலைப்பக்கம்னா என்னான்னு கேட்கும் ஒரு ஐம்பது பேர் என்றால் நல்லது(?)

இவர்கள் இதற்காகவே இரண்டுநாள் ஒதுக்கிக்கொண்டு, முழுமையாகப் பங்கேற்போராக இருக்க வேண்டும். வழக்கம்போல, பயிற்சிபெற வருவோரிடம் காசுகேட்கும் யோசனை இல்லை. ஆனால், வலைப்பக்கம் எழுதத்  தேவையான சில தொழில்நுட்பம் சார்ந்த நூல்களைக் காசு தந்து  வாங்கிக்கொள்ளப் பரிந்துரைக்கும் யோசனை உண்டு. 
எங்கிருந்து வந்தாலும், போக்குவரத்து அவரவர் பொறுப்பு. இதில் ஒரு நாள் மட்டும் வரலாமா சார்?”- கேள்வியே வரக்கூடாது. 

சனி-ஞாயிறு அல்லது தொடர்ந்து வரும் இரண்டு அரசு விடுமுறை நாளாகப் பார்ப்போம். 
யார் யார் வரத் தயாராக இருக்கிறீர்கள்
இப்போதே சொல்லிவிடுங்கள் -
மின்னஞ்சல்-muthunilavanpdk@gmail.com 
SUBJECT பகுதியில், TAMIL BLOG WORKSHOP (தமிழில் போடுவதானால் “இணையத் தமிழ்ப்பயிற்சி” )என்று போடவும்.

இன்னொரு முக்கியமான செய்தி
 நடந்து முடிந்த மின்-தமிழ் இலக்கியப் போட்டிகளில் பரிசு பெற்றவை போக, தகுதியானபடைப்புகளை மின்னூலாக்கப் பரிந்துரைக்கப்படும் என்றும் சொல்லியிருந்தோம்.

நமக்குச் செலவில்லாமல், இதைச் செய்து தரும்படி, நம்விழாவில் வந்து பேசிய திரு சங்கரநாராயணன் அவர்களிடம் கேட்டிருக்கிறோம். தகுதியான படைப்புகளை கட்டுரைகள் மற்றும் கவிதைகள் என இரண்டு மின்னூலாக்கி அவற்றைப் பயிற்சிப் பட்டறையிலேயே -இணையத்திலேயே - வெளியிடுவோம். இதற்குப் படைப்பாளிகள் அனைவரும் ஒப்புதல் மின்னஞ்சல் அனுப்பவேண்டும். “இணைப்பிலுள்ள எனது இந்தப் படைப்பை மின்னூலாக வெளியிட்டு இலவசமாக அனைவரும் படிக்க இதன்மூலம் நான் ஒப்புதல் வழங்குகிறேன்” என அவரவவர் மின்னஞ்சலில் இருந்து ஒப்புதல்கடிதம் அனுப்ப வேண்டும். ஒப்புதல் கிடைக்காத படைப்புளை மின்னூலாக வெளியிட இயலாது எனும் சட்டச் சிக்கலைப் புரிந்துகொள்ளவும்.
இதற்கான மின்னஞ்சல் SUBJECT பகுதியில், “மின்னூல் ஒப்புதல்” என்று போட வேண்டுகிறேன். மின்னஞ்சல் முகவரி மேலே உள்ளது.

உலகம்  உங்கள் படைப்புகளை இலவசமாகப் படிக்கட்டும், விரும்புவோர் உங்கள் வலைப்பக்கத்தைத் தொடரட்டும்.

ஏற்கெனவே நடுவர்களாகப் பணியாற்றியவர்கள் சிலரோடு நமது நண்பர்கள் சிலரையும் சேர்த்து, படைப்புகளைத் தேர்வு செய்துகொள்வோம். என்ன சொல்றீங்க?

உங்கள் கருத்தறிந்து அடுத்த அடியை எடுத்து வைப்போம்.
-அன்புடன், 
கணினித் தமிழ்ச்சங்கம்

புதுக்கோட்டை. 
(சிறுமிக்கும் நன்றி -http://www.businessinsider.in/)
-----------------------------------------------

19 கருத்துகள்:

  1. மிக நல்ல முயற்சி அய்யா. என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏதோ வலைப்பூ ஆரம்பித்துவிட்டேனே தவிர அதில் ஏகப்பட்ட தொழில் நுட்ப சந்தேகங்கள் எனக்கிருக்கின்றன. அதையெல்லாம் சரிசெய்துக் கொள்ள இந்த பயிற்சி பட்டறை உதவும் என்று நினைக்கிறேன்.
    அதோடு போட்டிக்கு நான் எழுதிய நான்கு கட்டுரைகளையும் மின்னூலாக்க சம்மதிக்கிறேன். இது சம்பத்தமாக மின்னஞ்சலும் அனுப்பி வைக்கிறேன்.
    நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
  2. செய்ய வேண்டியவைகளை
    மிகச் சரியாகத் தெரிவு செய்கிறீர்கள்
    செய்வதை திட்டமிட்டு
    முறையாக நிறைவாகச் செய்கிறீர்கள்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. அடுத்த பணி துவக்கமா அண்ணா...

    பதிலளிநீக்கு
  4. நல்ல முயற்சியில் களமிறங்கியுள்ளீர்கள். மற்றவர்களையும் இறக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. அடுத்தத்த பணிகளுக்கான அச்சாரங்களைத் துவக்கியிருக்கும் தங்களுக்கு முதலில் ஒரு வணக்கம். புதியவர்கள் 50 என்பது சிறப்பான திட்டமிடல் அய்யா. பணியை இப்போதே துவங்குவோம். சந்திப்போம் அய்யா

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான விடயம் வாழ்த்துகள் கவிஞரே..

    பதிலளிநீக்கு
  7. புதிய பதிவர்கள் உருவாக்குவது நல்ல முயற்சி.

    படைப்பாளிகள் அனைவருமே அனுமதி கொடுப்பார்கள் என நினைக்கிறேன். மின்னூல் விரைவில் வெளியாகட்டும்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    ஐயா
    திட்டமிடல் சிறப்பாக உள்ளது தொடருங்கள்..
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. நல்ல முயற்ச்சி ஐயா! வாழ்த்துக்கள்.மின்னூல் வடிவம் காண என் படைப்பையும் ஒப்புதலுக்கு தனி மின்னஞ்சல் அனுப்புக்கின்றேன்!

    பதிலளிநீக்கு
  10. இது புது பணியல்ல. தொடரும் பணி.

    பதிலளிநீக்கு
  11. மிக்க மகிழ்ச்சி! நல்ல முயற்சி! இது தொடர்பாக ஒரு சிறு வேண்டுகோள்!

    பிளாக்கரில் வலைப்பூ தொடங்குவது எப்படி என்பது முதல் மிக நுட்பமான வலைப்பூத் தொழில்நுட்பங்கள் வரை அனைத்தும் இணையத்திலேயே கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், வலைப்பூவில் விளம்பரம் வைப்பது எப்படி, அதன் மூலம் வருவாய் ஈட்டுவது எப்படி என்பவை பற்றி அடிப்படை விவரம் கூட எங்கும் இல்லை. இதற்கும் பயிற்சிப் பட்டறையில் சேர்த்துப் பயிற்சி அளித்தால் சிறப்பாக இருக்கும். மேலும், பயிற்சிப் பட்டறையில் பாடம் எடுக்கும் அளவுக்கு இது பற்றிய விவரங்கள் தெரிந்தோர், இவற்றையெல்லாம் இப்படிப் பட்டறைகள் மூலமாக மட்டும் விளக்கிக் கொண்டிருக்காமல் அவரவர் வலைப்பூவிலும் எழுதினீர்களானால், பயிற்சிக்கு வராதவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும், இணையத்தில் என்றென்றும் நிலையாக இருந்து எதிர்காலத்திலும் அனைவருக்கும் அது பலன் தரும். பயிற்சிக்கு வந்தவர்கள் கூட முடித்து வெளியில் வந்த பின் ஏதேனும் மறதி ஏற்பட்டால் கூட அதில் பார்த்துத் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. ஆஹா!! தொடரும் பணியினைக் கண்டு மகிழ்கிறேன் அண்ணா..மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  13. என் தளத்தில் பகிர்ந்துள்ளேன் அண்ணா..
    http://thaenmaduratamil.blogspot.com/2015/10/taking-the-next-step.html

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ஐயா!

    மிக நல்ல முயற்சி!..
    வந்த படைப்புகளில் நீங்கள் தேர்வு செய்யும்
    படைப்புகள் மட்டும்தானே நூலில் இடம்பெறவுள்ளன.
    எனது படைப்பும் உள்ளதென்றால் ஒப்புதல் தருவேன் ஐயா!

    வலைத்தள உலாவல் சில தினங்களாக என்னால் முடியாமற் போனதால் உங்களின் இந்தப் பதிவினையும் இன்று சகோதரி கிரேஸ் பிரதிபா அவர்களின் தளப் பதிவு மூலம் கண்டு வந்தேன்!
    சகோதரிக்கு நன்றியுடன் உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  15. உள்ளேன் ஐயா ..
    என்னைப் போன்றவர்களை இந்தப் பயிற்சி முடுக்கிவிடும்.

    பதிலளிநீக்கு
  16. உங்கள் பணி மகத்தானது. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  17. தங்கள் தொடர் முயற்சிகளுக்கு எனது பாராட்டுகள்
    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு