(1 (1) பத்து வகுப்புப் படிக்கிற போதே
பருவக் கோளாறு! – மனம்
குத்தும்
குடையும் குறுகுறுக் கும்,வாய்
குழறும், தடுமாறும்! – ஒரு
பித்துப்
பிடிக்கும், ரகசிய மாய்,செல்
பேசியும் பரிமாறும்! – இது
தொத்து
வியாதி! பரம்பரை யாகத்
தொடர்வது தான் மகளே!
2) உன்னை நினைத்தால் உனக்கே பெருமை
ஊற்றாய்ப்
பெருகிவரும்! – உன்
கண்ணை முகத்தைக் கண்டு ரசிப்பாய்
கண்ணாடி
உருகிவரும்! – “நீ
பெண்ணை வளர்த்த முறைசரி யில்லை
பேதாய்“ என்போரை – உன்
அன்னை முறைப்பது கண்டு சிரிப்பாய்
“அட,போ“ என்பாயே!
(3) ஏட்டை எடுப்பாய்,
எழுத்து மறப்பாய்
எழுதாப் பேனாவை –
வரி
ஓட்டி முடித்தது கண்டு துணுக்கென
ஒருவரி காணாயே! –
திரைப்
பாட்டில், கறிச்சாப் பாட்டை மறப்பாய்
பசியிலை என்பாயே! –
அறை
பூட்டிக் கிடப்பாய், பொழுது
மறப்பாய்,
பொய்யைத் தின்பாயே!
(4) ஒருவன் இளைஞன்
ஒருமுறை உன்னிடம்
உரையா டியபின்னே –
இந்த
கருமம் அனைத்தும் நடைபெறும் மகளே!
கதையிது உலகறியும்!
– இது
பருவம் அடைந்தவர் பார்த்தது தான் நீ
பயப்பட ஏதுமிலை! –
ஒரு
மருமம் எதுவும் இல்லையடா! – உடல்
மாறும் வயதுஇதுவே!
(5) பதினா றென்பதும்
பதினைந் தாகிப்
பதினான் காகியதே! –
ஒரு
புதிராய் உலகம் புரியா நிலையில்
பூக்கும்
உணர்ச்சியிது! – உன்
எதிராய் இளைஞர் இருக்கப் புதிதாய்
எதையா வதுசெய்வாய்!
– அட
இதுஏன் இப்படி என்னும் எரிச்சலில்
எதற்கும் கடுப்பாவாய்!
(6) ஒருவரும் உன்னைக்
காணாத போதும்
உடையைத்
திருத்திடுவாய்! – முகப்
பரு வரும், அழகு போய்விடு மோ?எனப்
பயந்தே
குழம்பிடுவாய்! - உன்
தெருவரும் யாரும் திடுமென உன்னைத்
திரும்பவும்
பார்த்தவுடன் – மனப்
பெருமிதம் ஓங்க முகத்தைத் துடைப்பாய்,
பின்னும்
துடைத்திடுவாய்!
(7) இதுசரி யில்லை என்பது தெரியும்
எனினும் புரியாது! – அட
இதுஏன் இப்படி? என்பது புரியா
இரண்டும் கெட்டானாய் – உன்
கதைபுரி யாதவர் கண்டு சிரிப்பது
கண்டும னங்குமைவாய்! – நீ
“இதையா ரிடம்போய்க் கேட்பது?!“ நெஞ்சுள்
எண்ணிக் குழம்பிடுவாய்!
(8) காதல் பற்றிய படங்கள் இனிக்கும்
கண்ணும் அலைபாயும் – திரை,
காதல் என்றே காமச் சுழலைக்
காட்டும் வலைவீசும்! – உன்
காதல் வருகிற வயதும் வரும்வரை
காத்திருப் பாய்மகளே! – உடல்
நோதல் தணிதல்
எல்லாம் இயற்கை
நுட்ப உணர்ச்சியிதே!
(9) இருபது வயதின் மேல்தான் மகளே
எதுவும் புரியவரும் – அட
வருவது வரட்டும் என்று துணிந்தால்
வாழ்வே கருகிவிடும்! – இதழ்
தருவது பெறுவதை நினைப்பதிலேயே
தன்னியல் பறிபோகும்! – அதில்
உருகிடும் பெருகிடும் உணர்ச்சிகள் பின்னர்
உடனே வடிந்துவிடும்!
(10) காதல் உயர்ந்தது தான்,என்மகளே!
கைவரும்
வயதா இது?யோசி!
நோதல் தணிதல் புரியா வயதில்
நுகரத்
துணிதல் சரிதானா?
வாழ்தல் இனிது வசமா னால்தான்!
வாழ்க்கைச்
சுழலை அறியாமல்
வீழ்தல் அழிவே விளைக்கும்!
வாழ்க்கை
திரும்பவும் எழுதத் தேர்வல்ல!
---நா.முத்துநிலவன்
--------------------------------------------------