14-6-2015 “நீயா நானா“ விவாதம், ஏன் கோபி இப்படீ?

யானையை மரமேறச் சொல்வது சரியா?

“இன்றைய கல்வி – பலமா பலவீனமா?” 
எனும் இன்றைய 
விஜய் தொ.கா.
“நீயா நானா“ விவாதம் முழுமையடையாதது ஏன்?

எழுத்தாளரும் முன்னாள் ஆட்சியருமான சிவகாமி, பொருளியல் நிபுணர் சொக்கன், சமூகச் செயற்பாட்டாளர் ஓவியா, எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி நாடகவியலாளர் அ.இராமசாமி உள்ளிட்ட பிரபல அறிஞர் பலருடன் ஆசிரியர்களும் மாணவர் பலரும் கலந்து கொண்டதால் விவாதம் கனமாகவும் உருப்படியாகவும் இருந்தது. சமச்சீர் கல்வி, அருகமை கல்வி, சுயசிந்தனைக் கல்வி, கற்பனை வளர்க்கும் கல்வி பற்றியெல்லாம் பேசியது மகிழ்வளித்தது. 

ஆனாலும் ஏதோ ஒரு போதாமை –முழுமை பெறாமை- தெரிந்தது.
அது என்ன? “கல்வி“ என வந்தால் அது மூன்றுவகையில் அடங்கும்.
1.பாடத்திட்டம் (Subject / syllabus))
2.பயிற்றுமுறை (Teaching Methodology)
3.தேர்வுமுறை (Exam System / Evoluation)
இந்த மூன்றில், பாடத்திட்டம் பெரும்பாலும் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படுகிறது. பயிற்றுமுறை புதிய பாடப்புத்தகம் வரும்போதெல்லாம் மாற்றப்படுகிறது. ஆனால், நமது தேர்வு முறை தலைமுறைகள் பலகடந்தும் மாற்றப்படவே இல்லையே!

1978இல் தமிழகத்தில் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, மற்ற மாநிலப் பள்ளிக் கல்விமுறை மாற்றத்திற்கேற்ப, அதுவரை தமிழ்நாட்டிலிருந்த 11+1+3 எனும் கல்வித்திட்டத்தை, 10+2+3 என மாற்றினார். அதாவது 11ஆம் வகுப்புவரை பள்ளிக்கல்வி, அதன்பிறகு ஓராண்டு கல்லூரியில் புகுமுக வகுப்பு (அதற்குப் பெயர் ப்ரி யுனிவர்சிடி கோர்ஸ் பி.யூசி.) அதன்பிறகு 3ஆண்டுக் கல்லூரிவகுப்பு என்றிருந்ததை மாற்றி, 10வகுப்பு வரை உயர்நிலைக் கல்வி, அதன்பிறகு இரண்டாண்டுகள் மேல்நிலைக் கல்வி இரண்டையும் பள்ளிக்கூடத்திலேயே வைத்துக்கொண்டு, அதுவரை கல்லூரியில் இருந்த புகுமுக வகுப்பைக் கல்லூரியிலிருந்து எடுத்து பள்ளியில் வைத்தார். இதனால், கல்லூரிக்குப் போகாவிட்டாலும் பள்ளியில் அதிக பட்சமாக 12வகுப்புவரை படிக்கும் வாய்ப்பு நமது மாணவர்க்கும் கிடைத்தது. (இதுவே மற்ற நாடுகளில் வந்து சில ஆண்டுகள் தாமதமாகவே வந்தாலும் கூட, வந்தவரை இது நல்லதுதான்)

இதுவே இன்றும் கர்நாடக மாநிலத்தில் 11,12ஆம் வகுப்புகளை மட்டும் பிரித்து இளையோர் கல்லூரி (ஜூனியர் காலேஜ்) என்று உள்ளது.
ஆனாலும் தேர்வு முறை மட்டும் எந்தவிதத்திலும் மாற்றமடையாமல் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூகஅறிவியல் என ஐந்து பாட எண்ணும் மாறாமல் புதிய பல பாடப்புத்தகங்கள் வருவதில் என்ன பெரிய முன்னேற்றத்தைக் கண்டுவிட்டோம்?

பாடம் மாறினாலும் மாறாத தேர்வு முறையால், பொதுஅறிவற்ற முட்டாள் தேர்ச்சி பெறுவதும், சுய சிந்தனையுள்ள மாணவர் குறைந்த மதிப்பெண்கள் பெறுவதும், ஒருபாடத்தில் மீத்திறன் உள்ள மாணவர், மற்ற பாடங்களில் சாதாரண மதிப்பெண் எடுக்கும்போது, பாராட்டை இழப்பதும் நடக்கிறதே ஏன்? இது நமது தேர்வு முறையின் தோல்வி! இது ஏன் நம் கல்வியாளர் பலர்க்கும் இன்றுவரை உறைக்கவில்லை?

யானைக்கு அதன் பலத்தை உணர்த்தி மேலும் பலம்பெற கற்பிக்க வேண்டும் அழகாக ஆடும் மயிலை மேலும் அழகாக ஆடப் பயிற்சி தரவேண்டும். அருமையாய்ப் பாடும் குயிலை அற்புதமாகப் பாட சொல்லித்தர வேண்டும். அதுதானே கற்பித்தலுக்கான வெற்றி?

ஆனால், நம் கல்விமுறையில் 
மாணவர்களை என்ன செய்கிறோம் தெரியுமா?

ஆனையை மரமேறச் சொல்கிறோம்! அழகு மயிலைப் பாடச் சொல்கிறோம்! பாடும் குயிலை ஆடச் சொல்கிறோம்! அவற்றால் இவையெல்லாம் முடியாது என்றதும், அவை தேர்வில் தோற்றுவிட்ட தாகச் சொல்லி விரட்டுகிறோம்! இவை அனைத்தும் நம் அரதப்பழைய தேர்வுமுறையின் தோல்வியாக உணரவே இல்லையே ஏன்?!

இதைப் பற்றி அங்குப் பேசிய யாருமே பேசாதது எனக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தையே தந்தது. தேர்வு முறையை மாற்றாமல் கல்விமுறை பற்றிய விவாதம் எப்படி முழுமை பெறும்? 

நல்ல விவாதங்களை நடத்தும் கோபிநாத் நமது இன்றைய கல்விமுறை பற்றிய தேவையான விவாதத்தை நடத்தும்போது, அடிப்படை விஷயத்தை மறந்தது ஏன்? அதனாலேயே விவாதம் முழுமையடையாமல் ஏதோ நேரம் முடிந்தது என்பதால் முடித்துக் கொண்டதாகவே பட்டது. 
ஏன் கோபி இப்படீ?

------------------------------------------------------------- 

“புதுக்கோட்டை ஞானாலயா”வுக்கு வயது 75!



“ஆங்கில இலக்கியம் முழுவதும் அழிந்துபோனாலும் பரவாயில்லை எங்கள் ஜான்சனும் பாஸ்வெலும் இருக்கிறார்கள் அவர்கள் போதும் நினைவிலிருந்தே அத்தனை இலக்கியங்களையும் மீட்டுத் தந்துவிடுவார்கள்“ என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அது உண்மையோ இல்லையோ நமக்குத் தெரியாது – நம்ஆங்கிலப் புலமை அவ்வளவுதான்! வேறொன்றுமில்லை!

ஆனால்-
எனக்குத் தெரிந்து தமிழில் அப்படி ஒருவர் இருந்தார்! திருவையாறு அரசர் தமிழ்க்கல்லூரியின் முதல்வராக இருந்து பின்னர் புதுவை அரசின் பல்கலைக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, கடந்த ஆண்டு காலமான -
எங்கள் பேராசிரியர் திரு.தி.வே.கோ. (என்று நாங்கள் பெருமையாக்க் குறிப்பிடும் கோபாலய்யர்) தான் அவர்!

நான் அவரிடம் படித்தபோது, எந்தப் பாடத்திற்கும் புத்தகத்தை அவர் பார்த்து நடத்தி நான் பார்த்தில்லை!

சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், கம்ப ராமாயணம் எதுவாயினும் “இன்னிக்கு என்ன பாடம்டா..?“ என்பார். நாங்கள் சொல்வோம்.. அவ்வளவுதான்! பாடல்கள் இசையோடும் உரையிடையிட்ட நாடகமாகவும் தமிழருவி கொட்டும். நாங்கள் குளித்துக் கரையேற வெகுநேரம் பிடிக்கும்! அதுதான் தமிழ்க்கடல் தி.வே.கோ. அவர்கள்!

அதுபோல இன்னொருவர் இருப்பாரா என்பது ஐயமே!

ஆனால்...

தமிழ்நூல்கள், பதிப்பு விவரங்கள், நூலாசிரியர் பற்றிய மேற்செய்திகள், குறிப்பிடத்தக்க இலக்கியநிகழ்வு பற்றிய தகவல்களை அருவியாகக் கொட்டக்கூடிய ஒருவரும் நம்மோடு நம் காலத்தில் 
புத்தகங்களில் உயிரை வைத்துக்கொண்டே வாழ்கிறார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்!?

அவர்தான் எங்கள் ஊருக்குப் பெருமை சேர்த்துவரும்-
“ஞானாலயாஆய்வுநூலக நிறுவனரும் தமிழறிஞரும்,
தமிழ்நூல் தகவல் களஞ்சியமுமான அய்யா –
பா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்!

ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பவளவிழா வருகிறது!
வரும் 15,16-08-2015 இருநாள்கள் புதுக்கோட்டையில் பெரும் விழா, நூல்கள் மற்றும் மலர் வெளியீடுகள், என, பெரிய அளவில் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன!

தமிழ் எழுத்தாளர், வாசிப்பை நேசிப்பவர் என அனைவர் பங்கும் ஏதாவது ஒருவகையில் வரவேற்கப்படுகிறது.

பின்வரும் இணைப்பைச் சொடுக்கியும், ஞானாலயாவின் இணைய தளத்தில் பார்த்தும், சென்னை நண்பரும் நூல் பதிப்பாளருமான வைகறைவாணன் அவர்களை நேரில் தொடர்புகொண்டும் ஏதேனும் ஒருவகையில் விழாவில் பங்கேற்க வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.


“ஞானாலயா” 
இணையம் -
http://www.gnanalaya-tamil.com/



சென்னை வைகறைவாணன்- (விழாஒருங்கிணைப்பாளர்) 
செல்பேசி எண்  9445182142

தொடர்பு முகவரி, 
பா. கிருஷ்ணமூர்த்தி, ‘ஞானாலயா’,
6, 
பழனியப்பா நகர், திருக்கோகர்ணம்,
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.
தொலைபேசி: 04322-221059
செல்பேசி : (0) 9965633140

e-mail: gnanalayapdk@gmail.com
---------------------------------------------- 

“த.மு.எ.க.ச. கலை-இலக்கிய விருதுகள்“ அறிவிப்பு

“த.மு.எ.க.ச. கலை-இலக்கிய விருதுகள்“ அறிவிப்பு

    பத்துவகைவிருதுகள் – பரிசு ரூ.50,000+விருது


மிழ்நாடு முற்போக்கு ழுத்தாளர்-லைஞர்கள் ங்கம் 2014ஆம் ஆண்டுக்குரிய கலை-இலக்கிய விருதுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறு துறைசார்ந்த நூல்கள் / குறுந்தகடுகளை அனுப்பலாம். இது தொடர்பாக மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலர் சு.வெங்கடேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை –

2014ஆம் ஆண்டில் வெளிவந்த நூல்கள்/குறுந்தகடுகளில் ஒவ்வொன்றிலும் இரண்டு பிரதிகளை அனுப்ப வேண்டும்.

வந்த நூல்களைத் திரும்பப் பெற இயலாது. விருதுக்குத் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு பிரிவுக்கும் “தமுஎகச விருது“, சான்றிதழ், ஆகியவற்றுடன் ரூ.5,000 ரொக்கப் பரிசு கௌரவமான விழா ஒன்றில் வழங்கப்படும்.

(1) கே.முத்தையா நினைவு விருது –தொன்மைசார் நூல்
(2) கே.பாலச்சந்தர் நினைவு விருது –நாவல்
(3) சு.சமுத்திரம் நினைவு விருது –விளிம்புநிலை மக்கள் குறித்த படைப்பு
(4) இரா.நாகசுந்தரம் நினைவு விருது –கலை-இலக்கிய விமர்சன நூல்
(5) ப.ஜெகந்நாதன் நினைவு விருது – கவிதை நூல்
(6) அகிலா-சேதுராமன் நினைவு விருது – சிறுகதை நூல்
(7) வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது –மொழிபெயர்ப்பு
(8) பா.ராமச்சந்திரன் நினைவு விருது – குறும்படம்
(9) என்.பி.ரத்தினம்-நல்லசிவம் விருது- ஆவணப்படம்
(10)                    முசி.கருப்பையா பாரதி நனைவு விருது – “நாட்டுப்புறக் கலைச்சுடர் விருது“ (தகுதிமிக்கதொரு நாட்டுப்புறக் கலைஞர் பெயரைப் பரிந்துரைக்கலாம்)
-------------------------------
2015-ஜூலை,15ஆம் தேதிக்குள் 
அனுப்ப வேண்டிய முகவரி
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
57/1, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,
(தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகம்)
மதுரை – 625 001
தொலைபேசி-0452 2341669

----------------------------
நமது வலைப்பதிவர்கள்,எழுத்தாளர்கள் நூல்களையும் குறும்படங்களையும் 
உறைமேல் “எந்த வகை விருதுக்கானது“ எனும் விவரத்தையும் எழுதி,
அனுப்பிட வேண்டுகிறேன்

-நா.முத்துநிலவன்- 
செல்பேசி -+91 9443193293

விசு விழா தந்த மகிழ்வும் பதிவர் சந்திப்பில் நெகிழ்வும்.


மதுரைத்தமிழன் யாரு? கண்டுபிடிங்க பாப்பம்..   சரி சரி க டைசியில் சொல்றேன்
அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்ப்பதிவர் விசு (விசுAWESOME) அவர்களின் விசுவாசமின் சகவாசம்நூல்வெளியீட்டு விழா ஜூன்-6இல் வேலூரில் நடக்கவிருப்பதாகவும், விழாவில் பங்கேற்க வேண்டும் என்றும் அழைத்த சகோதரி கீதா (துளசி) பிற்பகலில் வலைப்பதிவர்கள் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்வதாகச் சொன்னவுடன் எனக்கும் ஆவல் பிறந்தது... 

வேலூரில் சந்திப்போம் வாருங்கள்!

நூல் வெளியிடும் நண்பர் விசு அவர்கள்
http://www.visuawesome.com/ 
---------------------------------------------------------------- 

நூல்வெளியீடு மற்றும் வலைப்பதிவர் சந்திப்புக்கு
ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கும் நண்பர்கள்
வலைப்பதிவர் துளசிதரன் அவர்கள்
(சகோ.கீதாவின் படம் கிடைக்கல மன்னிக்கவும்)
http://thillaiakathuchronicles.blogspot.com/


நம் வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன்

--------------------------------------------------------------------------- 

“மாப்ள  வேலூர்ல இருக்கான்டா” என்றால் 

மாப்பிள்ளை ஆயுள் தண்டனைக் கைதியாக 

இருக்கார்னு அர்த்தம்! 

இப்ப அப்படி இல்லிங்கோ..! 

“வேலூருக்குப் போறேன்”ன்னா.. 

வலைப்பதிவர் விசுவாசமின் நூல் வெளியீட்டுவிழா மற்றும் வலைப்பதிவர் சந்திப்புக்காகப் போறேன்னு அர்த்தம்!


நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களும் நானும் 

வேலூர் வரத் திட்டமிட்டிருக்கிறோம்!

 

அழைப்பிதழ் காண்க 

அன்புடன் வருக!  


நா.முத்துநிலவன்

செல்பேசி - 94431 93293

------------------------------------------------------------------------------------------------------

"விசுவாசமின் சகவாசம்" புத்த வெளியீடும், 

பதிவர் சந்திப்பும் - அழைப்பிதழ் 


நம் நண்பர் விசு"Awesome"மின் சகவாசம் - புத்தக வெளியீடு 
வரும் சனி  - 06-06-2015 அன்று  காலை
வேலூர், வூரிஸ் கல்லூரியில் நடை பெற உள்ளது.

காலை 11 மணி

தலைமை வகிப்பவர் : 
கல்லூரி முதல்வர் டாக்டர் அருளப்பன் அவர்கள்

புத்தகத்தை வெளியிடுபவர் :  
டாக்டர் விசுவநாதன் (Founder, VIT)

சிறப்பு விருந்தினர் / சிறப்புரை : 
"வளரும் கவிதை" கவிஞர் திரு முத்துநிலவன் அவர்கள்.

நன்றி உரை : 
திண்டுக்கல் தனபாலன் அவர்கள்

மதிய உணவிற்குப் பின் 
பதிவர் சந்திப்பு : 2.30 மணிக்கு

தங்கள் வருகையைப் பற்றி 
உறுதி செய்ய தொடர்பு கொள்ள விழைபவர்கள் 
கீழ் காணும் மின் அஞ்சல், தொலை பேசி எண்களைத் 
தொடர்பு கொள்ளவும்.

thulasithillaiakathu@gmail.com        Geetha : 9940094630

Dindugal Danabalan   pdhanabalandgl@gmail.com    9944345233


வேலூரில் சந்திப்போம் நண்பர்களே!

அன்புடனும், நட்புடனும் 

துளசிதரன்,    கீதா

                                                                          நன்றி - 
http://thillaiakathuchronicles.blogspot.com/2015/06/VisuAwesome-Book-Release-Invitation.html 

விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் -5 ஆரம்பமே சொதப்பலா?

சூப்பர் சிங்கர்-5 ஆரம்பமே சொதப்பலா?

“விஜய் டி.வி.யின் சூப்பர்சிங்கர்-5“ பாடகர் தேர்வின் ஆரம்பத்திலேயே சொதப்பல் + குழந்தைத்தனம் தெரிந்தது.

அது என்ன “சூப்பர் சிங்கர்-ஜூனியர்“னா பெரியமனுசத் தனமாவும், பெரியவுங்களுக்கான தேர்வுன்னா குழந்தைத் தனமாவும் இருக்கணும்னு ஏதும் வச்சிருப்பாங்களோ?

ஓவியப் பாறை எழுதிய பிரிவுரை!






போய்வாருங்கள் நண்பரே!

கல்பாறை என்றென்னைக்
கண்டபலர் மத்தியில்
ஓவியப் பாறைஎன
உண்மையினைச் சொன்னவரே!

என்கதையை முழுநூலாய்
எழுதிவெளி யிடுமுன்னே
எமைப்பிரிந்து போகின்றீர்!

என்-கல்-நெஞ்சே கலங்குதய்யா,
இம்மனிதர் என்னாவார்?
தொல்பொருளும் நடுகல்லும்
இல்பொருளாய் ஆனதய்யா!

ஆவும் அழஅதன், கன்றும் அழுததென
ராமன் பிரிந்தகதை கம்பன் எழுதியதே!
திருமயப் பாறையிதோ தேம்பி அழுகிறது,
ராஜராஜன் பெருவழியும் பாதிவழி நிற்கிறது

பஞ்சு நூலாகும் கோவைக்கே போகின்றீர்
பாறையும் பாதையும் நூலாக முடியாதா?
உம்மால் முடியுமய்யா! உமதுபணி வெல்லுமய்யா!

கோவிலில் பக்திகண்டார்
கோவிலைச் சுற்றிவந்தார்
காணாத பலசெய்தி
கண்டவர் விண்டவர் நீர்தான்

நுணுக்கச் செய்திகளை
நூலாக்கிக் காணுமுன்னே
இப்போதே பிரிகின்றீர்
இதற்குநாம் என்னசொல்ல?

காடுகரை குன்றமெல்லாம்
காதவழி நீர்நடந்தீர்
பாதிவழி பிரிகின்றீர்
பரிதவித்தே நிற்கின்றோம்!

ராஜராஜன் பெருவழியும்
பாதிவழி நிற்குதய்யா,
அன்னவாசல் ஓவியமும்
அனாதையாய் பார்க்குதய்யா!

கல் நானே கலங்கியழ
மற்றுள்ளோர் என்செய்வர்?
எங்கிருந்த போதிலும் உம்
இயங்குபணி தொடரட்டும்!

அன்புடன்,
ஓவியப்பாறை,
திருமயம்
----------------------------------
பட உதவிக்கும் இன்னும் பலப்பல பணிகளுக்கும் நன்றி –
திரு அருள்முருகன் அவர்களின் வலைப்பக்கம் -

--------------------------------------------------
இக்கவிதை பற்றிய மேல் விவரம் அறிய -
http://valarumkavithai.blogspot.in/2015/06/blog-post_3.html
---------------------------------------------------

முருகா! உன்னை வணங்குகிறேன்!




கல்வித்துறை அலுவலராய்
மாணவர் நலன்நினைத்தே
உன்னிதயம் ஓயாமல் துடித்தது!

அலுவலரில் மனிதராய்
ஆசிரியர் நலன் நினைத்தே
உன்னறிவு ஓயாமல் உழைத்தது!

தமிழ்படித்த அறிஞருள்
தலைசான்ற உன்நோக்கம்
சமூகவரலாற்றைச் சரியாகப் புரிந்தது!

ஆசிரியர் முன்னேற்றமின்றி
கல்விவளர்ச்சிக்கு அர்த்தமில்லை என
துறைசார் நண்பர்க்குப் பாடம் சொன்னாய் நீ!

மாணவர் முன்னேற்றமின்றி
அரசுப்பள்ளிக்கு முன்னேற்றமில்லை என
ஆசிரியர்க்குப் பாடம் சொன்னாய் நீ!

தொழில்நுட்ப வளர்ச்சியின்றி
எப்பணியும் சிறக்காதென
எல்லார்க்கும் பாடம் சொன்னாய் நீ!

முத்தமிழ்க் கடவுளென்று சொன்னாலும்
முருகனை வணங்காதவன் நான்! அருள்
முருகா! உன்னை வணங்குகிறேன்! -
நீ மனிதருள் சான்றோன் என்பதால்.

உன்னோடு பணியாற்றிய காலம்
எமது பொற்காலம் என்பது சத்தியம்.
உன் பணி சிறக்க, நீ எங்கிருந்தாலும்
உன்னருகில் இருப்போம் என்றும்.

அன்புடன்,
-நா.முத்துநிலவன்.
04-06-2015

----------------------------------------
(படவரிசை - இடப்பக்கமிருந்து வலப்பக்கமாக -
மகா.சுந்தர், கு.ம.திருப்பதி, முனைவர் நா.அருள்முருகன், நா.முத்துநிலவன், குருநாதசுந்தரம், கஸ்தூரிரெங்கன்)
------------------------------------------------------------------------- 
எமது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக 
4ஆண்டுக்காலம் பணியாற்றி, 
இன்று கோவை மாவட்டத்திற்குப் 
பணியிடமாறுதலில் செல்கிறார் -
முனைவர் நா.அருள்முருகன் அவர்கள். 

மேல்விவரம் காண, நண்பர் கஸ்தூரி் ரெங்கனின் இந்தப்பதிவில்
எழுத்தாளரும் ஆர்எம்எஸ்ஏ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான
நண்பர் ராசி.பன்னீர்செல்வத்தின் பிரிவுரை காணச் சொடுக்குக -
http://www.malartharu.org/2015/06/farewell-to-ceo-drarulmurugan.html 
---------------------------------------------------------------------------------------------------