யானையை மரமேறச் சொல்வது சரியா?
“இன்றைய கல்வி – பலமா பலவீனமா?”
எனும் இன்றைய
விஜய் தொ.கா.
“நீயா
நானா“ விவாதம் முழுமையடையாதது ஏன்?
எழுத்தாளரும் முன்னாள் ஆட்சியருமான
சிவகாமி, பொருளியல் நிபுணர் சொக்கன், சமூகச் செயற்பாட்டாளர் ஓவியா, எழுத்தாளர்
பத்ரி சேஷாத்ரி நாடகவியலாளர் அ.இராமசாமி உள்ளிட்ட பிரபல அறிஞர் பலருடன் ஆசிரியர்களும் மாணவர் பலரும் கலந்து கொண்டதால்
விவாதம் கனமாகவும் உருப்படியாகவும் இருந்தது. சமச்சீர் கல்வி, அருகமை கல்வி,
சுயசிந்தனைக் கல்வி, கற்பனை வளர்க்கும் கல்வி பற்றியெல்லாம் பேசியது மகிழ்வளித்தது.
ஆனாலும் ஏதோ ஒரு போதாமை –முழுமை பெறாமை-
தெரிந்தது.
அது என்ன? “கல்வி“ என வந்தால் அது
மூன்றுவகையில் அடங்கும்.
1.பாடத்திட்டம் (Subject / syllabus))
2.பயிற்றுமுறை (Teaching
Methodology)
3.தேர்வுமுறை (Exam
System / Evoluation)
இந்த மூன்றில், பாடத்திட்டம் பெரும்பாலும்
பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படுகிறது. பயிற்றுமுறை புதிய பாடப்புத்தகம் வரும்போதெல்லாம்
மாற்றப்படுகிறது. ஆனால், நமது தேர்வு முறை தலைமுறைகள் பலகடந்தும் மாற்றப்படவே
இல்லையே!
1978இல் தமிழகத்தில் எம்ஜிஆர்
முதல்வராக இருந்தபோது, மற்ற மாநிலப் பள்ளிக் கல்விமுறை மாற்றத்திற்கேற்ப, அதுவரை
தமிழ்நாட்டிலிருந்த 11+1+3 எனும் கல்வித்திட்டத்தை, 10+2+3 என
மாற்றினார். அதாவது 11ஆம் வகுப்புவரை பள்ளிக்கல்வி, அதன்பிறகு ஓராண்டு கல்லூரியில்
புகுமுக வகுப்பு (அதற்குப் பெயர் ப்ரி யுனிவர்சிடி கோர்ஸ் பி.யூசி.) அதன்பிறகு 3ஆண்டுக்
கல்லூரிவகுப்பு என்றிருந்ததை மாற்றி, 10வகுப்பு வரை உயர்நிலைக் கல்வி, அதன்பிறகு
இரண்டாண்டுகள் மேல்நிலைக் கல்வி இரண்டையும் பள்ளிக்கூடத்திலேயே வைத்துக்கொண்டு,
அதுவரை கல்லூரியில் இருந்த புகுமுக வகுப்பைக் கல்லூரியிலிருந்து எடுத்து பள்ளியில்
வைத்தார். இதனால், கல்லூரிக்குப் போகாவிட்டாலும் பள்ளியில் அதிக பட்சமாக
12வகுப்புவரை படிக்கும் வாய்ப்பு நமது மாணவர்க்கும் கிடைத்தது. (இதுவே மற்ற நாடுகளில்
வந்து சில ஆண்டுகள் தாமதமாகவே வந்தாலும் கூட, வந்தவரை இது நல்லதுதான்)
இதுவே இன்றும் கர்நாடக மாநிலத்தில்
11,12ஆம் வகுப்புகளை மட்டும் பிரித்து இளையோர் கல்லூரி (ஜூனியர் காலேஜ்) என்று
உள்ளது.
ஆனாலும் தேர்வு முறை மட்டும் எந்தவிதத்திலும்
மாற்றமடையாமல் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூகஅறிவியல் என ஐந்து பாட
எண்ணும் மாறாமல் புதிய பல பாடப்புத்தகங்கள் வருவதில் என்ன பெரிய முன்னேற்றத்தைக்
கண்டுவிட்டோம்?
பாடம் மாறினாலும் மாறாத
தேர்வு முறையால், பொதுஅறிவற்ற முட்டாள் தேர்ச்சி பெறுவதும், சுய சிந்தனையுள்ள
மாணவர் குறைந்த மதிப்பெண்கள் பெறுவதும், ஒருபாடத்தில் மீத்திறன் உள்ள மாணவர், மற்ற
பாடங்களில் சாதாரண மதிப்பெண் எடுக்கும்போது, பாராட்டை இழப்பதும் நடக்கிறதே ஏன்? இது நமது
தேர்வு முறையின் தோல்வி! இது ஏன் நம் கல்வியாளர் பலர்க்கும் இன்றுவரை உறைக்கவில்லை?
யானைக்கு அதன் பலத்தை
உணர்த்தி மேலும் பலம்பெற கற்பிக்க வேண்டும் அழகாக ஆடும் மயிலை மேலும் அழகாக ஆடப்
பயிற்சி தரவேண்டும். அருமையாய்ப் பாடும் குயிலை அற்புதமாகப் பாட சொல்லித்தர
வேண்டும். அதுதானே கற்பித்தலுக்கான வெற்றி?
ஆனால், நம் கல்விமுறையில்
மாணவர்களை என்ன செய்கிறோம் தெரியுமா?
மாணவர்களை என்ன செய்கிறோம் தெரியுமா?
ஆனையை மரமேறச் சொல்கிறோம்! அழகு
மயிலைப் பாடச் சொல்கிறோம்! பாடும் குயிலை ஆடச் சொல்கிறோம்! அவற்றால் இவையெல்லாம்
முடியாது என்றதும், அவை தேர்வில் தோற்றுவிட்ட தாகச் சொல்லி விரட்டுகிறோம்! இவை அனைத்தும் நம் அரதப்பழைய தேர்வுமுறையின்
தோல்வியாக உணரவே இல்லையே ஏன்?!
இதைப்
பற்றி அங்குப் பேசிய யாருமே பேசாதது எனக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தையே தந்தது.
தேர்வு முறையை மாற்றாமல் கல்விமுறை பற்றிய விவாதம் எப்படி முழுமை பெறும்?
நல்ல
விவாதங்களை நடத்தும் கோபிநாத் நமது இன்றைய கல்விமுறை பற்றிய தேவையான விவாதத்தை
நடத்தும்போது, அடிப்படை விஷயத்தை மறந்தது ஏன்? அதனாலேயே விவாதம் முழுமையடையாமல்
ஏதோ நேரம் முடிந்தது என்பதால் முடித்துக் கொண்டதாகவே பட்டது.
ஏன் கோபி இப்படீ?
ஏன் கோபி இப்படீ?
-------------------------------------------------------------











