தாஜ்மகாலை, பெரியகோவிலை இப்போது கட்ட முடியுமா? முடியும்!

 இன்றைய இளைஞர்கள் மேல் எனக்கு 
அவ்வளவு நம்பிக்கை வந்திருக்கிறது!
எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் –இன்றைய அறிவியல் வளர்ச்சியோ, வாய்ப்பு வசதியோ இல்லாத காலத்தில்- கட்டப்பட்டு, இன்றும் உலக அதிசயங்களாகத் திகழும் தாஜ்மகாலும், தஞ்சைப் பெரிய கோவிலும் போன்ற அற்புதக் கலைப் பொக்கிஷங்கள் ஒருவேளை (இது சும்மா ஒரு வாதத்துக்காக, அட நெருப்புன்னா ஒன்னும் வாயச் சுட்டுடாதில்ல..) அழிந்து இடிந்து போனால்...?

இன்றைய இளைஞர்கள் தம் திறமையாலும், அறிவாலும், அன்பினாலும் திரும்பக் கட்டிவிடுவார்கள்...என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

பாரதியார் கவிதையைத் தடைசெய்யப்போவதாக 
 அன்றைய சென்னை ராஜதானி ஆங்கில அரசு சொல்ல
“தாராளமாகச் செய்துகொள்ளுங்கள்! ஆனால்,
மனப்பாடச் சக்தியை உங்களால் தடைசெய்ய முடியாது!
நாங்கள் தமிழ்நாட்டுத் தெருக்கள் தோறும்
பாரதி பாடல்களைப் பாடித்திரிவோம்!” என்ற
சத்தியமூர்த்தி நினைவுக்கு வருகிறார்... 

இப்படி நான் சொல்லக் காரணம்?
 -------------------------------------------------- 
இன்றைய இளைஞர்களில் 3பேரைப்பற்றிய தகவல்கள்
நீங்களே பாருங்கள் –


(1)   ரவி என்கின்ற ரவிச்சந்திரன் – அன்பின் அடையாளம்.

மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர் கடந்த 25 வருடங்களாக ஆட்டோ ஒட்டிவருகிறார்.பழைய வண்ணாரப்பேட்டையில் வாடகை வீட்டில் மனைவி, இரண்டு மகள்களுடன் வாழ்க்கையை நடத்திவருகிறார்.
சென்னைக்கு வரும் பல்வேறு மாநிலப் பயணிகளுடன் பேசி பேசி கொஞ்சம் இந்தி கொஞ்சம் தெலுங்கு கொஞ்சம் மலையாளம் பேசக்கூடியவர்.
சமீபத்தில் அவர் செய்த ஒரு காரியத்தால் இன்று மக்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ளார்.

அப்படி அவர் செய்த காரியம் என்ன?
கோல்கத்தாவை சேர்ந்தவர் சங்கரதாஸ் (52)தன் தொழில் நிமித்தமாக சென்னை வந்தவர் சேப்பாக்கத்தில் இருந்து ரவியின் ஆட்டோவில் பயணம் செய்தார்.

சங்கரதாஸ்க்கு தமிழ் தெரியாது, இந்தியில் தான்போகவேண்டிய இடத்தை சொல்லிக்கொண்டே வந்தவருக்கு திடீர் என பேச்சு தடைபட்டது, கண் இருண்டது, வேர்த்து கொட்டியது, அப்படியே மயக்கம் போட்டு ரவியின் தோளில் சாய்ந்தார்.

வண்டியில் வந்த பயணி இப்படி மயக்கம் போட்டு விழுந்துவிட்டாரே என நினைத்த ரவி கொஞ்சமும் தாமதிக்காமல் பக்கத்தில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார் அங்கே சங்கரதாசை பரிசோதித்த டாக்டர் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது உடனே ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகச்சொன்னார்.

ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் பெரிய டாக்டர்கள் யாரும் இல்லை என்ற நிலையில் அவர்கள் உடனே ஆம்புலன்ஸ் வைத்து ராஜீவ்காந்தி மருத்துவமனை அனுப்பிவைத்தனர். ஆட்டோவை அங்கேயே விட்டுவிட்டு ஆம்புலன்சில் சங்கரதாசுடன் ரவி பயணம் சென்றார், வழியில் சங்கரதாஸ் விடாமல் வாந்தி எடுக்க எல்லாவற்றையும் தனது உடம்பில் தாங்கிக்கொண்டார்,ஒரு கட்டத்தில் கையிலும் வாங்கிக்கொண்டார்.
ஆஸ்பத்திரியில் சங்கரதாசை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் இன்னும் ஐந்து நிமிடம் தாமதித்து வந்திருந்தாலும் இவரை உயிருடன் பார்த்திருக்கமுடியாது, ஆனாலும் இவரது உயிர் இன்னும் ஊசலாடிக்கொண்டுதான் இருக்கிறது, உடனடியாக ஆபரேஷன் செய்யவேண்டும் 'பேஸ்மேக்கர்' கருவி பொருத்தவேண்டும், அந்த கருவி வெளியில்தான் வாங்கவேண்டும் அதுவும் உடனே வாங்கவேண்டும் இல்லாவிட்டால் உயிர்பிழைக்க முடியாது என்றனர்.
சங்கரதாஸ் பையில் இருந்த செல்போனை எடுத்து கோல்கத்தாவில் உள்ள அவரது குடும்பத்தாரை தொடர்பு கொண்டபோதுதான் தெரிந்தது சென்னைக்கு ரயிலில் வரவே காசில்லாத குடும்பம் அது என்று.

ரவி கொஞ்சமும் யோசிக்காமல் தனது ஆட்டோ ஆர்சி புக்கை அடமானம் வைத்து முப்பதாயிரம் ரூபாய் திரட்டினார் நண்பர் ஒருவரிடம் நிலமையை சொல்லி 27 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றார் 57 ஆயிரம் ரூபாயை டாக்டர்களிடம் கொடுத்து நம்ம தமிழ்நாட்டை நம்பிவந்த ஒருவர் ஆதரவில்லாமல் இறந்தார்னு ஒரு கெட்ட பெயர் வரக்கூடாது டாக்டர் இந்தாங்க என்னால புரட்ட முடிந்ததுன்னு 57 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார்.

ஆமாம் சொந்த ஆட்டோவை அடமானம் வைச்சு இவரை காப்பாத்த துடிக்கிறீங்களே?இவரு யாரு உங்களுக்கு தெரிஞ்சவங்களா?என டாக்டர்கள் கேட்க, இவரு யாரு எதுன்னுல்லாம் தெரியாது, என் ஆட்டோவுல வந்த பயணி, என்னை காப்பத்துன்னு கேட்டு தோள்ல சாஞ்சா சக மனுஷன் அவ்வளவுதான், என்றதும் டாக்டர்கள் வியந்து போய் பேஸ் மேக்கருக்கு மிச்சம் தேவைப்பட்ட பணத்தை அவர்களே தங்களுக்குள் பங்கிட்டு கட்டி பேஸ்மேக்கரை வாங்கிவந்து மருத்துவர் ரவிசங்கர் தலைமையில் வெற்றிகரமாக ஆபரேஷனை முடித்தனர்.

இதற்குள் பத்து நாட்களாகிவிட்டது இந்த பத்து நாட்களும் சங்கரதாசிற்கு தானே காப்பாளராக இருந்து வார்டு வார்டாக கூட்டிச் செல்வது மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்துவது படுக்கவைப்பது சாப்பிடவைப்பது நேரநேரத்திற்கு மருந்து கொடுப்பது என பார்த்துக்கொண்டார்.
பகல் முழுவதும் சங்கரதாசை பார்த்துக்கொள்வார் இரவில் ஆட்டோ ஒட்டி அந்த வருமானத்தை வீட்டு செலவிற்கு கொடுத்துவிடுவார் காலையில் வீட்டில் பால் போட்டு எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரி வந்துவிடுவார்.தாளிக்காத உணவு கொடுக்கவேண்டும் என்பதற்காக மட்டும் ஒட்டல் ஒட்டலாக அலைந்து வாங்கிவந்து கொடுப்பார்.

இப்படியே இருபது நாட்கள் சங்கரதாசை கண்ணும் கருத்துமாக பார்த்து உடல் நல்லபடியாக தேறியதும் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ததும் சென்னையில் மூன்று வழிபாட்டு தலங்களுக்கு அழைத்துச் சென்றார் காரணம் சங்கரதாஸ் பிழைக்கவேண்டும் என்று அங்கெல்லாம் வேண்டிக்கொண்டிருந்தார்.

பிறகு நல்லபடியாக கொல்கத்தாவிற்கு ரயிலில் அனுப்பிவைக்கும் போது சங்கரதாஸ் பேசவே இல்லை கட்டித்தழுவி கண்ணீர்விட்டு அழுதார் அங்கே மொழிக்கு வழியேயில்லை அன்புதான் மேலோங்கியிருந்தது.

கிட்டத்தட்ட இருபது நாட்கள் கழித்து தனது ஆட்டோ நிறுத்தத்திற்கு வந்த ரவியை எங்கேப்பா இருபது நாளாக்காணோம் என்று அவரது நண்பர் கேட்க இப்படி ஒரு விஷயம் நடந்துருச்சு அதான் வரமுடியலை என்று சொல்லியிருக்கிறார்.

என்னப்பா இவ்வளவு நல்ல விஷயம் செஞ்சுருக்கே இது நாலு பேருக்கு தெரியட்டும் என்றபடி தனக்கு தெரிந்த ஊடகங்களுக்கு சொல்லியிருக்கிறார்.

இதன் மூலம் இவரை தொடர்புகொண்ட எடிட்டர் மோகன் தன் பங்கிற்கு அடகு வைத்த ஆட்டோ ஆர்சி புக்கை மீட்டுக்கொடுத்திருக்கிறார். இதே போல அடுத்தடுத்து பலரும் உதவி செய்ய முன்வர அதெல்லாம் வேண்டாம் நான் மனிதனாக என் கடமையை செய்தேன் அதற்கு எதற்கு வெகுமதி பாராட்டு எல்லாம் என்றபடி அடுத்த பயணியின் அழைப்பை ஏற்று ஆட்டோவை செலுத்துகிறார்.

மனிதநேயத்தின் மறு உருவமாக திகழும் ரவியிடம் பேசுவதற்கான எண்:9884809444.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in
 
-------------------------------------------------------------- 
 
சிங்கார வேலனே தேவா.. ஜானகி பாட்டு

சூப்பர் சிங்கரில் இதே பாடலைப் பாடும் 
சிறுமி அல்கா அஜித்
-----------------------------------------------------------------  
அப்புறம் கன்னையா குமார் பற்றித்தான் போன பதிவில் பார்த்தோம்! பார்க்காதவர்கள் பார்த்துக்கொள்க!
----------------------------------------------------------------- 
இன்றைய இளைஞர்கள் மீது 
எனக்கு நம்பிக்கை இருக்கிறது!
இவர்கள் சாதிப்பார்கள்!

முந்திய தலைமுறைகளின் அறிவை மட்டுமல்ல, அன்பையும் சுமந்துகொண்டு 
அவர்களின்தோள்மீதேறி                               அவர்கள் பார்க்காத உலகையும் 
இவர்கள் பார்ப்பார்கள்!
   
   தாஜ்மகால், பெரியகோவில் போலும்       
   அற்புதங்களை விட                                 பெரிய சாதனைகளை இவர்கள் செய்வாரக்ள்!
   -காண்செவி, முகநூல்...கணினியில் 
   நேரக்கட்டுப்பாட்டை    
   இவர்களுக்கு இவர்களே 
   விதித்துக்கொண்டால்..

------------------------------------------- 

5 கருத்துகள்:

  1. இளைஞர்களால் முடியாதது இல்லை.....

    நல்ல மனம் கொண்ட ரவி அவர்களுக்கு எனது பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  2. ரவிச்சந்திரன் மட்டுமல்ல அவரை பற்றி தகவலை நாலுபேர் அறிய பதிவிட்ட நீங்களும் உயர்ந்த மனிதர்.


    மனிதநேயமுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஐயா.தங்களின் நம்பிக்கை கட்டாயம் வீண் ஆகாது ஐயா.

    ரவி ஐயா போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்கள் சிலரே உள்ளன.அவரிடம் பேசுகிறேன் நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு
  4. ரவிச்சந்திரன் போற்றுதலுக்குரியவர். எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் இதைப் பார்த்தால் நிச்சயமாக தனது பாசிட்டிவ் செய்திகளில் பகிர்வார். இளைஞர்களால் சாதிக்க முடியும். ரவிச்சந்திரனைப் பற்றி இங்கு பகிர்ந்து எல்லோரும் அறியத்தந்த எங்கள் ஐயா/அண்ணா உங்களையும் பாராட்ட வேண்டும்!! நல்ல பதிவு..

    பதிலளிநீக்கு
  5. ரவிச்சந்திரன் பற்றி வாசித்து நெகிழ்ந்து போனேன்..பகிர்ந்த உங்களுக்கு நன்றி அண்ணா.
    ஆமாம் இளைஞர்கள் நினைத்தால் சாதிக்கமுடியும்.

    பதிலளிநீக்கு