குமுதம்,விகடன் “படிக்கவும்”, சினிமா “பாக்கவும்” நாம்தான் சொல்லிக் கொடுக்கணும்...


பாடத்திட்டத்தில் ஊடகம் 
=நா. முத்து நிலவன் =
இன்றைய மாணவர்கள் எந்தப் பயிற்றுமொழியில் படிக்கிறார்கள் என்பது முக்கியம்தான். தாய்மொழிவழிக் கல்விதான் தலைசிறந்தது. ஆனால், பயிற்றுமொழி பற்றிய விவாதத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை பாடத்திட்டத்திற்கும் தருவது முக்கியமில்லையா? ஆனால், பயிற்றுமொழி பற்றி விவாதம் நடக்கும் அளவிற்குக் கூட பாடத்திட்டம் பற்றி நடப்பதில்லையே அது ஏன்? அரசியல் வாதிகள் பேசுவதில்லை, சரி. ஆசிரியர் இயக்கங்களும், கல்வியாளர்களும் பேசாவிடில் மற்றவர்களா பேசுவார்கள்!



திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ரசித்துப் பார்க்கும் மாணவர்கள், பாடங்களைப் படிக்கும்போது மட்டும் சலித்துக் கொள்வது ஏன்? என்று கல்வியாளர்கள் மட்டுமல்ல பெற்றோரும், சமுதாய அக்கறையுள்ள அனைவருமே யோசிக்க வேண்டும். "திரைக்காட்சியிலிருந்து கேள்விகேட்கப்படுவதில்லை. எனவே அதை மகிழ்ச்சியாக அனுபவித்துப் பார்க்கிறார்கள்' என்று சொல்லலாம். ஆனால் அதிலிருந்து கேள்வி கேட்டால் உடனுக்குடன் மிகச் சரியாகவே பதில் சொல்கிறார்கள் என்பதும் உண்மைதானே?

அப்படியானால் அது மாணவர்களின் குறையல்ல! இன்றைய கல்விமுறையில், பாடத்திட்டத்தில், பயிற்றுமுறையில் உள்ள குறை என்றுதானே சொல்லவேண்டும்?
பள்ளிக் கூடத்திற்குப் போகமறுத்து, பள்ளிப்பேருந்தில் ஏறும்போது ""அம்மா டாட்டாம்மா'' என்று கதறும் குழந்தையின் அழுகுரல், ஒருவகையில் இன்றைய கல்விமுறையின் மீதான விமர்சனம்தானோ?

நமது பண்பாட்டைக் கெடுக்கக்கூடிய, கேவலமான சில தொலைக்காட்சி விளம்பரங்களைக் கூட ரசித்து, தன்னையறியாமலே மனப்பாடம் செய்து, கூடவே பாடும் ஒரு குழந்தை, ஒன்றரை வரித் திருக்குறளை மனப்பாடம் செய்யமுடியாமல் தடுமாறுவது ஏன் என்று யோசிக்க வேண்டும். ஒரு மிட்டாய் விளம்பரத்தில் வரும் "வந்தான் ஹீரோ பாட்டோட வடுகப்பட்டி ரோட்டோட' எனும் தொலைக்காட்சி விளம்பர வரியை குழந்தை அதுவாக வீட்டிலிருக்கும்போது பாடிக்கொண்டிருக்கிறதே!

திருக்குறளின் ஒன்றரை வரிமட்டும் அவ்வளவு சுலபமாக மனதில் உட்கார மறுக்கிறதே! இது திருக்குறளின் குறையா? குழந்தையின் குற்றமா? இரண்டுமே இல்லை! நமது குறை! கல்வித்துறையில் இக்காலத்திற்கேற்றவாறு பாடத்திட்டங்களை, பயிற்சிமுறைகளை பயிற்றுமுறைகளை மற்றும் இவற்றைவிட முக்கியமாகத் தேர்வுமுறைகளை மாற்றாத நமதுகுறை!

மனப்பாடப்பகுதியின் 8 வரியைச் சொல்லமுடியாமல் பல நாள் தடுமாறிய மாணவன் ஒருவன், பள்ளி ஆண்டுவிழாப் பாட்டுப்போட்டியில் 80 வரிகளைக்கொண்ட "யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்' எனும் திரைப்பாடலை முழுமையாகப் பாடிப் பரிசுபெறும் நிகழ்வுகள் தமிழ்நாட்டில் ஏராளம்!.

திரைக்கவிஞர் பலரும் திறமைசாலிகள்தாம். வள்ளுவருக்குக் கிடைக்காத பல வசதிகள் அவர்களுக்குக் கிடைப்பதால் வள்ளுவரை விடவும் அவர்களால் மாணவர் மனிதில் எளிதாக இடம்பிடிக்க முடிகின்றது. இந்தக் கசப்பான உண்மையைப் புரிந்து கொண்டு, அந்த வாய்ப்பு வசதிகளை, கல்விக் கூடங்களில் நாம் பயன்படுத்துவதில்லை. அதற்கு புதிய கல்வித் திட்டங்களிலும் இன்னும் போதிய இடம் தரப்படவில்லை என்பதுதான் எனது ஆதங்கம்.
மாணவர்களின் படைப்புத் திறனைக் கண்டுகொள்ளாமல், வெறுமனே மனப்பாடம் செய்யும் எந்திரமாக மட்டுமே அவர்களை நடத்தும் நமது "அரதப்பழசான' கல்விமுறையின் குறைகளால், ""எதிர்கால இந்தியா என்னாகுமோ?!'' என்னும் அச்சம் எழுவதும் இயல்புதானே!

உலகின் மிகப் பெரிய பணக்காரராகக் கடந்த 12 ஆண்டுகளாக இருந்துவந்த அமெரிக்கப் பொருளாதாரத்திற்கே சவால்விட்டுவரும் மைக்ரோ-சாப்ட் நிறுவனத்தின் தலைவர்- பில்கேட்ஸ், எதிர்கால உலகின் தேவைகளைப்பற்றிய தனதுகற்பனையை, கோடிக்கணக்கில் விற்பனைசெய்ய, அவரது தொழில் நுட்ப அறிவால்தானே முடிந்தது! நமது கல்விமுறை புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதுடன், மாணவ-மாணவிகளுக்கும் அந்தத் தொழில்நுட்ப வளர்ச்சிகளை அறிமுகப்படுத்த வேண்டுமல்லவா?

"அனைவருக்கும் ஆரம்பக்கல்வி' எனும் புதிய கல்வித்திட்டத்தில், ஆடல், பாடல், செயல் வழிக்கற்றல், மாணவர்களின் படைப்பாக்கத்திற்குக் கல்வியில் இடம்தருதல் போலும் சில நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பது நல்லதுதான். ஆனால், அவற்றைவிடவும் நம் மாணவர்களை அதிகமாகப் பாதிக்கும் ஊடகங்களைப் பற்றி இப்போதும் கண்டுகொள்ளாமல் விடுவது சரியல்லவே!

""ஊடகக் கல்வி''யே இன்றைய மாணவர்களை சரியான வழியில் கொண்டு செல்ல உதவ முடியும்!
திரைப்படம், தொலைக்காட்சி, பத்திரிகைகள், கணினி என அனைத்துவகை ஊடகங்களையும் மாணவர் கல்விக்குப் பயன்படுத்துவது பற்றித் திட்டமிடவேண்டும். இல்லையேல் தேவையற்ற திரைப்படங்கள் இனிப்பாகவும் தேவையான பள்ளிப்பாடங்கள் கசப்பாகவும் இருக்கும் இன்றைய நிலையை மாற்ற முடியாது.

இதில் மாணவர்களையோ ஆசிரியர்களையோ குறைசொல்வதில் அர்த்தமில்லை. அதற்கேற்றவாறு பாடத்திட்டத்தில், முதற்கட்டமாகத் தேர்வு முறைகளிலாவது புதிய, புதிய வகைகளை யோசிக்க வேண்டும். தேர்வுமுறை மாற்றம் பற்றிய யோசனையைத் திறந்த விவாதத்திற்கு விடவேண்டும்.

புதுக்கோட்டையில் ஒரு நல்ல பள்ளிக்கூடத்தை நடத்திவரும் பிரபல கவிஞரும் எனது நண்பருமான தங்கம் மூர்த்தி, தனது பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு மாதமும் கடைசிப் பள்ளிநாளில் மாணவர் யாரும் பாடப்புத்தகம் எதையும் கொண்டுவர வேண்டியதில்லை என்று சொல்லிவிடுவாராம். ஒருநாள் முழுவதும் புத்தகமில்லாநாள்! அடேங்கப்பா! மாணவர் மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்? அன்று முழுவதும் பாட்டும், கதையும். பாடத்திட்டத்தையே அவ்வாறு யோசிப்பது எவ்வளவு பலனளிக்கும்!

இதுபோலப் "புத்தமில்லாப் பள்ளிநாள்கள்' அதிகரிக்கப்பட்டு திரை- தொலைக்காட்சி நாள், கணினி நாள், நூலக நாள், பத்திரிகை நாள், சுற்றுச்சூழல் நாள், பள்ளித்தோட்டத்தில் ஒரு நாள், அருகில் இருக்கும் தொழிற்சாலையைப் பார்வையிடும் நாள், வயலைப் பார்வையிடும் நாள், அலுவலகத்தை - வங்கிகளைப் பார்க்கும் நாள் என்பன போலும் புதிய, புதிய திட்டங்களைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

 இன்றைய போட்டிகள் நிறைந்த உலகிற்கேற்ப நமது மாணவர்களைத் தயார்செய்ய வேண்டுமனில் நமது கல்வித்திட்டத்தில் ஊடகங்களைப் பயன்படுத்தும் முறை பற்றிய வகுப்புகளைச் சேர்க்கவேண்டுவது அவசியம். இதற்கென்று சோதனைக்கட்டமாக மதிப்பெண்களைக் கூட ஒதுக்கலாம்!

பாடங்களில் 25 விழுக்காடாவது சமகாலச் செய்தி கொண்டதாக இருக்க வேண்டாமா? செய்திகளைக் கேட்கும்- பார்க்கும்போதே அதன் "உண்மைத்தன்மை'யைப் புரிந்துகொள்ளும் அறிவு இருக்க வேண்டும். அந்த அறிவு மாணவப் பருவத்திலேயே கிடைக்குமாறு செய்துவிட்டால், ஆகா! அதுவன்றோ சான்றோர் நாடு! அதன் வித்து கல்வித்திட்ட மாற்றத்தில் அல்லவா இருக்கிறது?

பள்ளிக்கூடக் காலை வணக்கக் கூட்டங்களில் "இன்றைய பத்திரிகைகளின் முக்கியச் செய்திகள்' வாசிக்கப்படுவதுண்டு! எந்தெந்தப் பத்திரிகைகள் எந்தெந்தச் செய்திகளை எவ்வாறு வெளியிடுகின்றன? என்பதுபற்றித் தெரிந்தால்தானே அவற்றின் "உண்மைத்தன்மை'யை, -வள்ளுவர் சொன்னதுபோல- புரிந்து கொள்ள முடியும்? இல்லையெனில் ""செய்தியறிந்த முட்டாள்களாக''த் தானே வளரவேண்டியிருக்கும்? இது பற்றி அன்றாடமும் வகுப்புகளில் விவாதம் நடத்த வாய்ப்பில்லா விட்டாலும் மாதம் ஒருநாள் ஊடகங்கள் பற்றிய கலந்துரையாடலை மாணவர்களிடையே நடத்தலாமே!
பத்திரிகைகளின் தலையங்கங்கள், தலைப்புச் செய்திகள், அந்தமாதம் அதிகமாக அடிபட்ட செய்திகளின் உண்மைத் தன்மை, இதுபோலவே திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றிய விவாதங்களையும் அவ்வப்போது 9,10,11,12 வகுப்பு மாணவர்களிடையே நடத்தினால், அதுதானே உண்மையான பொதுஅறிவுத்தூண்டலாக இருக்கும்? இல்லையேல் "இந்தப் பாட்டு எந்தப் படத்தில்? இதில் நடித்த நாயக- நாயகி யார்? என்பன போலும் "அரிய' கேள்விகளைக் கேட்டு பொதுஅறிவு என்று சில தொலைக்காட்சிகள் நடத்தும் "பொதுஅறிவுப்போட்டி(?) தானே மாணவர் கவனத்தை இழுத்துக்கொள்ளும்?

""அதிகமாக விற்பனையாகும் பத்திரிகைகளின் செய்திகளைவிடவும் அதிகமான மக்களால் மதிக்கப்படும் பத்திரிகைகளின் செய்திகள் முக்கியத்துவம் வாய்ந்தவை''- என்பதை நம் குழந்தைகளுக்கு சொல்லித்தரவிட்டால், நுனிப்புல்மேயும் மனப்பான்மையை வளர்த்துவிடும் குற்றத்திற்கு நாமே ஆளாகிவிட மாட்டோமா? பள்ளிக்கூடங்களில் படிக்கும் பாடம் போதவில்லை என்பதை பெற்றோரும், கல்வியாளர்களும் ஒத்துக்கொண்டாலும் அதற்கான மாற்று என்ன என்று யோசித்தால், ஊடகக் கல்வியின் அவசியத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

படித்துமுடித்து, வேலைக்கான நேர்காணலுக்குப் போகும்போதுமட்டும் செய்திகளைத் துரத்தித் துரத்திப் பார்க்கும்- படிக்கும் இளைஞர்களை நாம் பார்த்திருப்போம்! அப்போது படித்தால் மட்டும் போதாது! ஆரம்பத்திலிருந்தே அந்த "சேமிப்பு' இருந்தால் நல்லதுதானே? இதைச் செயல்படுத்த என்ன தடை? "பாடத்திட்டத்தில் பத்திரிகைகளைச் சேர்ப்பது' என்பது பற்றித் திட்டமிட்டால் ஊடகக் கல்வியில் உயர்ந்த அனுபவம் கொண்டவர்கள் சரியான வழிகளைச் சொல்ல மாட்டார்களா என்ன?

இதுபோலத்தான், 
"ஆகா, மோசமான படத்தைப் பார்த்துப் பிள்ளைகள் கெட்டுப்போவார்களே என்று, பெற்றோர்கள் கவலைப் படுவதற்கும் தீர்வுகாண முடியும். "நல்லபடம் எது, வெறும் பொழுதுபோக்குப்படம் எது?' என்பது பற்றிய அறிவு அவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கும்? பள்ளி வகுப்புகளில் நடக்கும் "படக்காட்சி மற்றும் விவாதம்' தானே அதைத் தரமுடியும்? 
இயக்குநர் பாலுமகேந்திரா சொல்வதுபோல, "திரைப்பட ரசனை' பற்றிய தெளிவு கிடைத்தால், அதனால் வரும் தீங்குகள் பலவும் தொலைந்து போகுமே!

நல்ல பத்திரிகைகளை, புத்தகங்களைப்  படிக்க, சொல்லித் தருவது போல, நல்ல படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்கவும் சொல்லித் தந்தால், 
நல்ல மாற்றம் நிகழாதா என்ன?

பத்திரிகை, தொலைக்காட்சி, திரைப்படங்களைப் பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டிய அவசியம் உணர்ந்து, முறைப்படி திட்டமிட்டுச் சேர்த்துவிட்டால், வீட்டில் இருக்கும் பெற்றோரே ஆசிரியாராக மாறுவர்! பள்ளியில் இருக்கும் ஆசிரியர், பெற்றோர்போல் மதிக்கப்படுவர்!
ஒரு சமுதாயமே தன் தேவைக்கான கல்வியின் புதிய அர்த்தத்தைப் புரிந்து புதிய படைப்புகளை உருவாக்கும். அதில் புதிய சமுதாயமும் எழும்!  "எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு'
--------------------------------------------------------------------------------------------
(கட்டுரையை 01-01-2009 அன்றைய தலையங்கப் பக்கக் கட்டுரையாக வெளியிட்ட ''தினமணி'' நாளிதழுக்கு நன்றி)

24 கருத்துகள்:

  1. Good article. We are the persons to guide our children hoe to read and understand the publications and films.All Teachers and Parents must reaad this article.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thank you Com.Natesan. After this article published in Dinamani, Editor Mr.Vaithiyanathan called me and told a lot of calls came to his office. Actors Sivakumar and Delhi Ganesh also told their greets. But... what a pitty! no body cared from our Education Dept! What to do? This is our duty,,, will do..Thanks

      நீக்கு
  2. கல்விமுறையில் விரைவில் நல்ல மாற்றம் வரவேண்டும். யோசித்து ஆய்ந்து அறியும் திறனை மாணவர்களிடையே வளர்க்க வேண்டும். அதற்கு கல்வித்துறை மட்டுமல்ல, பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும். இங்கு நான் கண்கூடாகப் பார்க்கிறேன், சில பள்ளிகளில் மதிப்பெண், தேர்வு இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் செயல் முறைக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தால், வீட்டுப்பாடம் அதிகம் கொடுக்கவில்லை என்றால், அப்பள்ளி சரியில்லை என்றும், ஆசிரியர்களிடம் சென்று வீட்டுப்பாடம் ஏன் குறைவாக இருக்கிறது, தேர்வு வையுங்கள், மதிப்பெண் அனுப்புங்கள் என்றெல்லாம் பெற்றோர் கேட்கின்றனர். நீங்கள் வாய்ப்பு கிடைக்கும்போது தயவுசெய்து பெற்றோருக்குச் சொல்லுங்கள் சகோதரரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாணவர்களுக்கு நடத்துவது போலவே, அவரவர் பெற்றோருக்கும் அவ்வப்போது வகுப்புகள் சீனாவில் நடப்பதாக அறிகிறேன். அது தேவையென்றே எனக்கும் படுகிறது. கல்வித்துறையில் நடக்கும் நல்லநல்ல மாறுதல்களைப் பெற்றோர்கள் புரிந்துகொண்டு, அதை மாணவர்கள் கடைப்பிடிப்பதற்கு அவர்களும் உதவவேண்டும். நன்றி

      நீக்கு
  3. ஆரம்ப சேமிப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும்... அதற்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பும் வேண்டும்...

    தங்கம் மூர்த்தி அவர்களை போல் பலரும் இருக்க வேண்டும்...

    அன்றைய சிறப்பான கட்டுரை இன்றைக்கும் பொருந்துகிறது... ம்...

    வாழ்த்துக்கள் ஐயா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “அன்றைய சிறப்பான கட்டுரை இன்றைக்கும் பொருந்துகிறது” இதுதான் வருத்தமாக இருக்கிறது சகோதரர் தனபாலன்

      நீக்கு
  4. நல்ல படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்கவும் சொல்லித் தந்தால்,
    நல்ல மாற்றம் நிகழாதா என்ன?

    உண்மை அய்யா ஆனால் இன்றைய நிலையில் உள்ள படங்களும்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் சொல்லி கொடுக்கும் தரத்திலா இருக்கிறது?......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனானிமஸ் கருத்துகளை நான் வெளியிடுவதில்லை. ஆனாலும் ஏதோ தளப்பிரச்சினை என்று நண்பர் தெரிவித்ததால்...நன்றி.

      நீக்கு
  5. இது ஐந்து வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டது என்றே நம்ப முடியவில்லை .இன்றும் ஒரு மாற்றமும் வரவில்லையே !
    உங்களைப் போன்றவர்கள் பாடத்திட்ட குழுவில் இடம் பெற்றால் மாற்றம் வரும் போலிருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றியும் வணக்கமும் அய்யா. அந்தக் கூத்தை ஏன் கேட்கிறீர்கள். பாடத்திட்டக் குழுவுக்கு அழைக்கப்பட்ட நான், அங்குப் பட்ட பாடு.. தனீக்கதை... அதைச் சிறுகதையாக எழுதுவதா? குறுநாவலாக எழுதுவதா? நெடுங்கட்டுரையாக எழுதுவதா? எப்படியோ விரைவில் எழுதுவேன்..

      நீக்கு
  6. மிகச் சிறந்த கட்டுரை ஐயா...

    புத்தக அறிவை விட பொது அறிவை வளர்க்கும் விதமாக சொல்லிக் கொடுத்தலே நல்லது, தற்போது பல பள்ளிகளில் இதைக் கடைபிடிக்க ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்கது.

    என் மகள் படிக்கும் பள்ளியில் மாதம் ஒருமுறை எங்காவது ஒரு இடத்திற்கு கூட்டிச் செல்வார்கள். முதல் முறை மார்க்கெட்டிற்கு கூட்டிச் சென்றதும் வந்து என்னிடம் சொன்னார். உடனே நான் அங்க போய் என்னடா செய்தீர்கள் என்று கேட்டேன். அப்போது மூன்றாம் வகுப்பு படித்தார். விலை கேட்கச் சொன்னார்கள் என்றும் காய்களை எங்கிருந்து வாங்கி வருகிறீர்கள்... என்றெல்லாம் கேட்டோம் என்றார். இது உண்மையிலும் சிறப்பானதுதான்...

    பகிர்வுக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு சில பள்ளிகளும், ஆசிரியர் ஒருசிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். கல்விமுறையே மாறினால் அனைவருக்கும் அந்தப் பலன் கிடைக்குமல்லவா? அதுதான். நன்றி நண்பர்குமார்.

      நீக்கு
  7. நல்ல சிந்தனை .முடிந்தால் நல்ல மாற்றம் வரும் .வரவேண்டும் .தோழர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரும், வரவேண்டும்... எங்கள் காலத்தில் இல்லாவிட்டாலும் உங்கள் காலத்திற்குள்ளாவது. நன்றி தோழி.

      நீக்கு
  8. அருமையான கட்டுரை ஐயா.
    படித்தால் மட்டுமே போதும் தேர்வு பெறறால் மட்டும் போதும் என்ற மன நிலையில் மாணவர்களும், பெற்றோர்களும் , ஏன் கல்வியாளர்களும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இருப்பதுதான் இன்றைய பிரச்சினையே.
    தேர்ச்சி சதவீதம் ஒன்றே இலக்காகிப் போன கல்வித்துறையில், மற்றவை அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன.
    தாங்கள் சொல்வது சரிதான், திருக்குறளைப் படிக்க கஷ்டப்படுகிறான், அப்படியே படித்தாலும், அதன் பொருளை உணர்வதில்லை. அக்குறளை வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணமேற்படுவதில்லை. ஏனென்றால், அவன் படிப்பது மதிப்பெண் பெறுவதற்காக மட்டும்தான். அதனால்தான் அக்கல்வி அறிவு , மாணவனுக்கு சிந்திக்கும் திறனையோ, சரியா அல்லது தவறா எனப் பகுத்து அறியும் திறனையோ தருவதில்லை.
    இந்நிலை மாறத்தான் வேண்டும் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “தேர்ச்சி சதவீதம் ஒன்றே இலக்காகிப் போன கல்வித்துறை“ சரியாகச் சொன்னீர்கள் அய்யா. இதுதான் சிக்கலின் மையம். ஆசிரியர்கள் நாடகப் பாத்திரங்களாய் நடிக்கவேண்டியுள்ளது. மாற்றம் தேவை. வருமென்று நம்புவோம். வரும். நன்றி

      நீக்கு
  9. இன்றைய கல்வி முறையின் பயன் இதுதான் ஐயா.
    மாணவர்கள் மதிப்பெண் பெறுவதற்காக மட்டுமே படிக்கிறார்கள்.
    வாழ்வில் கடைபிடிப்பதற்காக படிப்பதில்லை.
    நாமும் இதைப் படித்தால் 2 மார்க் கிடைக்கும், இதைப் படித்தால் 5 மார்க் கிடைக்கும் என்றுதான் கூறுகிறோமே தவிர, இதைப் படித்தால், இதன் படி நடந்தால் நல்ல வாழ்வு கிடைக்கும், என்று கூறுவதற்கு நமக்கு நேரமே இருப்பதில்லை. நமக்குத்தான் இலக்கு நிர்ணயித்து விட்டார்களே. நூறு சதம் தேர்ச்சி. மாணவர்களை இயந்திரங்களாகத்தான் மாற்றி வருகிறோம்.
    இந்நிலை மாறத்தான் வேண்டும் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “நூறு சதம் தேர்ச்சி. மாணவர்களை இயந்திரங்களாகத்தான் மாற்றி வருகிறோம்” - இந்தப் பாவத்தின் சம்பளம்தான், சமூகத்தில் ஆசிரியர்கள் என்றால் பொறுப்பற்றவர்கள் என்னும் அவப்பெயர்! மாணவர் தேர்ச்சி சமூகத் தேர்ச்சிக்கு இட்டுச்செல்ல உதவவேண்டும் என்பதுதானே நம்போன்ற ஆசிரியர்களின் ஆசை?

      நீக்கு
  10. பார்த்தேன், மிக்க நன்றி சகோதரி.
    “செய்யாமல் செய்த உதவிக்கு, வையகமும்
    வானகமும் ஆற்றல் அரிது” - குறள் (உங்களுக்கு 101தேங்காய் உடைக்கிறேன், அட குறள் எண்ணைச் சொன்னேங்க... எனக்கு மிகவும் பிடித்த சில குறள்களில் ஒன்று இது.) நன்றி

    பதிலளிநீக்கு
  11. கரக்டு தான் அண்ணா.இப்போ கொஞ்சம் பாடத்திட்டம் தேவலை.என்னை கேட்டால் டீச்சர்கள் மனோபாவத்தை ,இயல்பை மாற்றனும்.பத்து இருவது வருடத்திற்கு முன் ட்ரைனிங் காலத்தில் படித்ததை மட்டும் வைத்துகொண்டு ,இன்னும் அப்டேட் ஆகாமல் அதவிடுங்க தன் சொந்த சபெஜக்ட்டை கூட சுவாரஸ்யமாய் சொல்ல தெரியாத,மாணவர்களுக்கு முன்னால் நிற்பதால் தனக்கு எல்லாம் தெரியும் ,மாணவன் குருகுல முறையில் கை காட்டி வாய் பொத்தி பாடம் கேட்க வேண்டும் எனும் பழமையில் மூழ்கிகிடக்கும் நம் இனத்தவர் பலரை மாற சொல்லுங்கள் அண்ணா ,நீங்கள் சொல்லகூடிய இடத்தில் இருக்கிறீர்கள் .பாடத்திட்டமும் மாறத்தான் வேண்டும் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பொழுது ஊடக வசதிகளும் அரசாங்கத்தால் செய்து தரப்பட்டுள்ளது ஐயா.... ஆனால் பயன் பாட்டில் உள்ளதா என்பது தான் கேள்விக்குறி ?

      நீக்கு
  12. கல்வி முறையில் நிறைய மாற்றங்கள் தேவை! என்பதை மிக அழகாக எடுத்துச்சொன்ன கட்டுரை! தங்கம் மூர்த்தி அவர்கள் முன் வந்தது போல இன்னும் நிறைய பேர் முன்வரவேண்டும்! அருமையான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  13. ஐயாவிற்கு வணக்கம்
    தங்களது கல்விப்பற்றிய பார்வை தொலைநோக்கு பார்வை ஐயா. தங்கள் பார்வை போன்று கல்வியாளர்களுக்கு வந்து விட்டால் அவ்சியம் மாற்றம் ஏற்படும். அந்த காலம் தான் எப்பொழுது என்று தெரியவில்லை. இன்றைய பாடத்திட்டம் தாண்டி மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதை பெற்றோர்களும் அதிகாரிகளுமே உணர்ந்திருக்கும் போது ஆட்சியாளர்கள் தங்கள் சிந்தனையைப் போன்ற மாற்றுச்சிந்தனையை அவர்கள் யோசிக்காததும் வரவேற்றாலும் வடிவம் கொடுக்காமல் இருப்பது ஏனென்று தெரியவில்லை. விரைவில் கல்வி முறையில் மிக பெரிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டிய சூழலில் உள்ளோம். மாற்றம் வரும்வரை காத்திருக்காமல் உங்கள் கருத்தை பெற்றோர்கள் தற்போது பின்பற்றினாலே சிறப்பாக அமையும்
    ----
    எனக்காகவே மறுபதிப்பு இட்டதாக எனது பதிவிற்கான பின்னூட்டத்தில் தெரிவித்து இருந்தீர்கள். அப்போதே படித்து விட்டேன். வெளியூர் பயணம் காரணமாக தாமதமான கருத்துரை ஐயா மன்னிக்கவும். எனக்காக பதிவிட்டமைக்கும் எனது பதிவிற்கு நீங்கள் தந்த ஊக்கத்திற்கும் நன்றிகள் ஐயா..

    பதிலளிநீக்கு
  14. சிறந்த பகிர்வு
    நல்வழிகாட்டல்

    பதிலளிநீக்கு