குடியரசுநாள், சுதந்திரநாள் - என்ன வித்தியாசம்?

இன்று 26-01-2014 குடியரசு நாள். 
ஆமா... நம்ம சுதந்திரநாளுக்கும், 
குடியரசு நாளுக்கும் என்ன வித்தியாசம்?

இன்றைய செய்தித்தாள் ஒன்றின் முதல்பக்கத்தில் அரைப்பக்க விளம்பரம் -மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட விளம்பரம்- ஒன்றில்
“நாடு 65வது சுதந்திரதினத்தை ஏன் கொண்டாடுகிறது? என்று கொட்டைஎழுத்தில் வந்திருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.  இந்த என் அதிர்ச்சி புதிதல்ல... கொடியேற்ற வரும் அரசியல் புள்ளிகள் சிலபேர் 
குடியரசுதின விழா, 
சுதந்திரதின விழா 
இரண்டிற்கும் வித்தியாசமில்லை, 
என்பதுபோலவே பேசியதைப் பலமுறை நான் கேட்டிருக்கிறேன்.
அதே செய்தித்தாளின் ஐந்தாம் பக்கத்தில், இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த கால்பக்க விளம்பரத்தில் 65ஆவது குடியரசுநாள் வாழ்த்துகள் தெரிவிக்கப் பட்டிருந்த்து, ஆறுதலாக இருந்த்து. 

அப்போதுதான் குடியரசுதினம் – சுதந்திரதினம் இரண்டுக்குமான வித்தியாசத்தை இன்றைய பதிவாக எழுதினால் என்ன என்று நினைத்தேன். நான் பதிவு எழுதுமுன், அதுபற்றிய தகவல் வேறுஏதும் இருக்கிறதா என்று பார்ப்பது வழக்கம். அதன்படி வலையில் தட்டியபோது இந்தக் கட்டுரை கிடைத்தது. நான் எழுத நினைத்த்தைவிடவும் விரிவாக இக்கட்டுரையே இருப்பதால் அதை அப்படியே தந்திருக்கிறேன்.  நல்ல தகவல்களை யாரோ தந்திருக்கிறார்கள். அவர்களின் கட்டுரையை அப்படியே தருவதுதான் நியாயம் என்று தந்திருக்கிறேன். பார்க்க வேண்டுகிறேன்.

கட்டுரையைப் படிக்கும் முன், 

சுதந்திர தினம், குடியரசு தினம் 

இரண்டுக்குமான வித்தியாசங்களை 

முதலில் பார்த்துவிடுவோம்

முதல் வித்தியாசம்.

ஆகஸ்டு-15, சுதந்திர தினத்தன்று கொடி  ஏற்றும்போது கொடி கீழிருந்து மேலே கயிற்றால்  இழுத்து பிறகு கட்டப்பட்டுள்ள கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும்.

அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாக செய்யப்படும் இந்த நிகழ்வுக்கு *"கொடியேற்றம்" அதாவது Flag hoisting என்றழைக்கபடுகிறது.,

ஜனவரி-26, குடியரசு தினத்தன்று கொடி கம்பத்தின் உச்சியிலே கட்டப்பட்டிருக்கும்.

அந்த முடிச்சு அவிழ்க்கப்பட்டு அதாவது கொடி  திறக்கப்பட்டு பறக்கவிடப் படவேண்டும்  இதை கொடியை பறக்கவிடுதல்  அதாவது flag unfurling என்பார்கள்..

இரண்டாவது   வித்தியாசம்.

சுதந்திரம் கிடைத்தபோது அரசியல் சட்டம் அமுலுக்கு வரவில்லை.அப்பொழுது பிரதமர் தான் நாட்டில் முதல் மனிதராக political head  கருதப்பட்டார்.

குடியரசு தலைவர் ஒரு constitutional monarchy, அவர் அப்போது பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை.

இதனால் சுதந்திர தினத்தில் பிரதமர்  கொடி ஏற்றுகிறார். குடியரசு தலைவர் மாலையில் ரேடியோ தொலைக்காட்சி மூலமாக உரையாற்றுவார்..

குடியரசு தினத்தன்று அரசியல் சட்டம் (இந்தியா குடியரசு ஆன ஆண்டு 1950) அமுலுக்கு வந்தபடியால்  அரசியல் சட்டத்தின் தலைவர் மற்றும் பாதுகாவலர் என்ற முறையில் குடியரசு தலைவர் கொடியை பறக்கவிடுவார்..

மூன்றாம் வித்தியாசம்...

சுதந்திர தினத்தன்று டில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றபடுகிறது

குடியரசு தினத்தன்று டில்லி ராஜ் பாதையில்  கொடி பறக்கவிடப்படுகிறது

-----------------------------------

இரண்டு நாள்களிலும் 

மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் படாத 

தலைவர்களே கொடியேற்றி வந்த 

வழக்கத்துக்கு மாறாக, 

மக்கள் போராடிப் பெற்ற சுதந்திர தினத்தில் 

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதலமைச்சர்/ பிரதமர்களும்,

அரசியல் சட்டம் இயற்றப்பட்ட பின்

குடியரசு தினத்தில்,

அரசியல் சட்டத் தலைவர்களான

(நியமனத் தலைவர்களான) மாநில ஆளுநர்/ 

குடியரசுத் தலைவர்களும்

 கொடியேற்றுவதை 

இந்திய அரசுடன் சட்டப் போராட்டம் நடத்தி 

நடைமுறைக்குக் கொண்டுவந்தவர் 

தமிழக முதல்வராக இருந்த 

கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்தான்! 

(இதனால் இப்போது மாநில முதல்வர்கள் 

இந்தியா முழுவதும்  சுதந்திர தினத்தன்று

கொடியேற்றிக் கொண்டிருக்கிறார்கள்!)

-----------------------------------------------------------------
இனி அந்தக் கட்டுரை அப்படியே... 
-----------------------------------------------------------------
நாம் அனைவரும் இந்தியர் என்ற உணர்வு நிச்சயமாக இரண்டு தினங்களின் போது இருக்கும். ஒன்று சுதந்திர தினம்; மற்றொன்று குடியரசு தினம். இந்த தினத்துக்கு என்ன வித்தியாசம்; எப்படி வந்தது; ஏன் கொண்டாடுகிறோம் என்பதை தெரிந்து கொள்வது நமது கடமை.

சுதந்திரம் என்று சொல்லும் போது, யாரிடம் இருந்தோ விடுதலை பெற்றிருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது. பல ஆண்டுகளாக நாட்டை அடிமைப்படுத்தி, மக்களின் உரிமைகளை ஒடுக்கி, இயற்கை வளங்களை கொள்ளையடித்து ஒற்றுமையாக இருந்த மக்களையும் பிரித்து விட்டு, 1947 ஆக., 15ம் தேதி நள்ளிரவில் ஆங்கிலேயர் நமக்குவழங்கியது தான் சுதந்திரம்.
சுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தையில் ஓராயிரக்கணக்கான மக்களின் ஓய்வில்லா போராட்டம் ஒளிந்திருக்கிறது. பல தலைவர்கள், இன்னுயிரை வருத்தி பல ஆண்டுகளாக ஆங்கிலேயரின் பீரங்கிகளை எதிர்த்து நின்று போராடி, அடிமை தேசத்தை, சுதந்திர நாடாக உருவாக்கினார்கள். இதனை நினைவு படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஆக., 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
நமக்கு அப்போது கிடைத்த சுதந்தரம் முழுமையானது அல்ல. ஏனெனில் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசு, இந்தியாவுக்கு டொமினியன்அந்தஸ்து தான் வழங்கியது. அதன்படி, பிரிட்டிஷார் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருந்தார். இதன்பின், இந்திய அரசியலமைப்பு 1949 நவ., 26ல்,இந்திய அரசியல் நிர்ணய சபையால்ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950, ஜன., 26ல் நடைமுறைக்கு வந்தது.அன்று முதல் இந்தியாவில் மக்களாட்சி மலரத் தொடங்கியது.
பிரிட்டிஷார் நியமித்த கவர்னர் ஜெனரல் பதவி நீக்கப்பட்டு, புதிதாக ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டது.குடியரசு என்பதன் நேரடி பொருள் மக்களாட்சி. மன்னராட்சி இல்லாமல், தேர்தல் மூலம் மக்களே ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறைக்கு குடியரசு என பெயர். இவ்வாறு மக்களாட்சி நடைபெறும் நாடு, குடியரசு நாடு என அழைக்கப்படுகிறது.குடியரசு நாட்டின் தலைவர், குடியரசு தலைவர் அல்லது ஜனாதிபதி என அழைக்கப்படுகிறார். சில நாடுகளில் குடியரசு தலைவர் நேரடியாகவே தேர்ந்தெடுக்கப்படுகிறார். சில நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் மூலம், குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இம்முறை தான் இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.

அடேங்கப்பா! அரசியல் சாசனம்:
அரசியல் சாசனம் என்பது, ஒரு நாட்டின் சட்ட திட்டங்கள்மற்றும் நெறிமுறைகளைவிளக்கிப் பட்டியலிடும் ஆவணம். இந்திய சுதந்திரத்திற்குப் பின், குடியரசு நாடாக இந்தியாவை பிரகடனப்படுத்த, அரசியலமைப்பை உருவாக்கும் பணியை, ராஜேந்திர பிரசாத் தலைமையிலான, அரசியல்நிர்ணய சபை மேற்கொண்டது.இதன்படி, 1947, ஆக., 29ல், சட்ட வரைவுக்குழு உருவாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அம்பேத்கர் தலைமையிலான7 பேர் கொண்ட குழு,2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் அயராத உழைப்பில், இந்திய அரசியல் சாசனத்தை எழுதி முடித்தனர். பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பின், 1949, நவ., 26ல் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950, ஜன., 26ல் நடைமுறைக்குவந்தது. இந்த நாள் தான்குடியரசு தினம். இந்தியஅரசியல் சாசனத்தில் மொத்தம் 22பகுதிகள், 448ஷரத்துகள், 12 அட்டவணைகள்,98 திருத்தங்கள், 1 லட்சத்து17 ஆயிரத்து 369 சொற்கள்உள்ளன.

அந்த மூன்று வார்த்தைகள்:@@இந்திய அரசியல் சாசனத்திற்கு முகவுரை வழங்கியவர், ஜவஹர்லால் நேரு. இதுஅரசியல் சாசனத்தின் நோக்கங்களை,தெளிவாக விளக்குகிறது. முகவுரை இந்தியஅரசியலமைப்பின் திறவுகோல் மற்றும் அரசியலமைப்பின் இதயம் எனபோற்றப்படுகிறது. 

முகவுரை இதுவரை
ஒரே ஒருமுறை மட்டுமே திருத்தப்பட்டது. 1976ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 42வது சட்டத் திருத்தத்தின்படி, சமதர்மம், மதச்சார்பின்மை, ஒருமைப்பாடு என்ற மூன்று வார்த்தைகள் முகவுரையில் சேர்க்கப்பட்டன.

தேசிய கீதம் - சில சுவாரஸ்யங்கள்:
121 கோடி இந்திய மக்களின் தேசிய கீதம்
ஜன கன மன பாடல். ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய இந்தப் பாடல், முதன்முதலில் 1911 டிச.27 அன்று கோல்கட்டா காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது.தற்போது நூற்றாண்டுகளை கடந்து அனைவரதுஉணர்விலும் கலந்துள்ளது.இப்பாடல் 1950 ஜன.24ல் தேசிய கீதமாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதை 52 விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும். தேசிய கீதம், வங்க மொழியில் பாரத விதாதா, ஆங்கிலத்தில் தி மார்னிங் சாங் ஆஃப் இந்தியா என அழைக்கப்படுகிறது.இந்தியத் தாயைவாழ்த்துவது போல இப்பாடல் அமைந்திருக்கும்.

ரவீந்திரநாத் தாகூர், இலக்கியத்துக்கான நோபல் பரிசுபெற்றவர். இவரே இதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர், வங்கதேசத்துக்கான தேசிய கீதத்தையும் இயற்றினார்.இருநாட்டுக்கு தேசிய கீதம் எழுதிய பெருமை, தாகூரைமட்டுமே சேரும். தேசியகீதம் இசைக்கப்படும் போது, அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். பெற்ற தாய்க்கு
கொடுக்கப்படும் மரியாதை,தேசிய கீதத்தை பாடும் போது இந்தியத் தாய்க்கு கொடுக்கப்படுகிறது.

முதல் குடியரசு தினம் -
எப்படி கொண்டாடப்பட்டது:ராஷ்டிரபதி பவனில் உள்ள டர்பர் ஹாலில்,1950 ஜன.,26ம் தேதி காலை 10:18 மணிக்குஇந்தியா, குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. அடுத்த 6நிமிடங்களுக்குப்பின், நாட்டின் முதல் ஜனாதிபதியாக டாக்டர் ராஜேந்திர பிரசாத், பதவியேற்றார். இவ்விழாவின் போது, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலும், நாட்டின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி, குடியரசு மற்றும் அரசியலமைப்பு பற்றிய அறிக்கையை வாசித்தார்.பின் 10:30 மணிக்கு 21 குண்டுகள் முழங்க, நாடு குடியரசு அடைந்ததை, ஜனாதிபதி நாட்டு மக்களுக்குஅறிவித்தார்; தேசியக்கொடியையும் பறக்கவிட்டார். பின் ஜனாதிபதி குடியரசு தின உரை நிகழ்த்தினார். முதலில் இந்தியிலும், பின் ஆங்கிலத்திலும் பேசினார்.பின் மதியம் 2:30 மணியளவில் ராஷ்டிரபதி பவனில் இருந்து திறந்த வாகனத்தில் (தற்போதுபோன்று எவ்வித பாதுகாப்பும் இன்றி) இர்வின் மைதானத்துக்கு சென்றார். வழி நெடுக தேசியக்கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. மக்கள் ஜெய் என கோஷமிட்டனர். பின் இர்வின் மைதானத்தில் நடந்த அணிவகுப்பில் முப்படையினர் மற்றும் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். இவ்விழாவில் 3,000 அதிகாரிகள், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். வெளிநாட்டு விருந்தினராக இந்தோனேசிய ஜனாதிபதி சுகர்ணோ அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சிகள் மாலை 3:45 மணிக்கு முடிந்தன.முதல் 4 குடியரசு தின (ராணுவ அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள்) நிகழ்ச்சிகள் வவெ?வேறு இடங்களில் (1950ல் இர்வின் மைதானம், 1951ல் கிங்ஸ்வாய், 1952ல் செங்கோட்டை, 1953ல் ராம்லீலா மைதான)  நடந்தது. இதன் பின் 1955ம் ஆண்டில் இருந்து, தற்போது கொண்டாடப்படும் ராஜ்பாத்தில் அணிவகுப்பு நடக்கிறது.

யார் அதிகம் :அதிக முறை, குடியரசு தின விழாவில்பங்கேற்ற ஜனாதிபதி என்ற பெருமையை ராஜேந்திர பிரசாத் பெறுகிறார். இவர் 13 குடியரசு தின விழாக்களுக்கு தலைமை வகித்துள்ளார்.

யார் குறைவு:நாட்டின், 3வது ஜனாதிபதியாக இருந்த ஜாகிர் உசேன், குறைந்த பட்சமாக 2 குடியரசு தின விழாக்களுக்கு மட்டுமே தலைமை வகித்தார். காரணம் பதவியில் இருக்கும் போதே மறைந்தார்.


ஜன.,26 ஏன்?@@1930, ஜன., 26ல், லாகூரில் நடைபெற்றஇந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில்,
இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றே தீர்வது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதன் நினைவாகவே, ஜன., 26ம் தேதியை, இந்திய குடியரசு தினமாக, அரசியல் நிர்ணய சபை முடிவு செய்தது.


வரைவுக் குழுவில் இடம் பெற்றவர்கள்
*அம்பேத்கர்
*கோபால்சாமி ஐயங்கார்
*அல்லாடி கிருஷ்ணமூர்த்தி
*கே.எம்.முன்ஷி
*சையது முகமது சாதுல்லா
*மாதவராவ்
* டி.பி.கைதான்
-----------------------------------
நன்றி தினமலர் http://tamil.yahoo.com/%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5-190200992.html இதில் நான் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஒரு சில இடங்களில் உள்ள ஒற்றுப் பிழைகள் உட்பட அப்படியே உள்ளன.  சில வரிகளை BOLD பண்ணியது மட்டுமே நான்செய்த மாற்றம். படங்களை நான் சேர்த்தேன். (தினமலரில் இப்படியும் வருகிறதே! இதில் ஒரு கூடுதல் செய்தி, சட்ட வரைவுக்குழுவில் இருந்தவர்களில் கடைசிவரை இருந்து பணியாற்றியவர் அம்பேத்கர் மட்டுமே என்பது நானறிந்த செய்தி 
நன்றி!
-நா.மு.)
--------------------------------------------------------------- 

14 கருத்துகள்:

  1. மிகவும் அருமையான தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கல்ள்! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்ல வேண்டுமென்று நினைத்தது மட்டுமே நான்,
      சொன்னது தினமலர். கருத்துப் பதிவிட்டமைக்கு நன்றி அய்யா

      நீக்கு
  2. அனைவரும் அறிய பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா...

    இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. தகவல்களை எடுத்து வழங்கியதற்கு, நன்றி!

    பதிலளிநீக்கு
  4. மிக சரியாக சொன்னீர்கள் ஐயா!.பள்ளிகளில் கொடியேற்ற வரும் ஊராட்சி தலைவர்கள் பலர் குடியரசு தினம் எனறால் என்ன என்பதை அறியாதவர்களாக இருப்பதை பார்த்திருக்கிறேன்..ஆனால் ஒரு அரசுத் துறையே இப்படி செய்திருப்பது மிக தவறானது. அது எந்தப் பத்திரிக்கை என்பதை சொல்லாமல் விட்டுவிட்டீர்களே.அதை சரிபார்க்காது வெளியிட்ட பத்தி ரிகையும் கண்டிக்கத் தக்கதே

    பதிலளிநீக்கு
  5. எனக்கும் குடியரசு தினத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு .இந்த நாளில்தான் எனது சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது .. ஆம் ஐயா இதே நாள் தான் எனது திருமண நாள்

    பதிலளிநீக்கு
  6. நல்ல தகவல் ஐயா. தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    ஐயா.

    இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அறிந்தேன்....சிறப்பான கட்டுரை.. வாசிக்க வாசிக்க வாசிக்கத்தான் சொல்லுது.... தேடலுக்கு பாராட்டுக்கள் ஐயா.
    குடியரசு தின நல் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. நேற்றுதான் என் ஐந்து வயது மகன் இரண்டுக்குமான வேற்றுமையை என்னிடம் கேட்டான்...அவனுக்கு சரியாகத்தான் சொல்லியிருக்கிறேன் என்று உங்கள் கட்டுரை பார்த்து அறிந்து மகிழ்ந்தேன்.
    குடியரசுதினம் பற்றிய பல தகவல்கள் தந்தமைக்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  9. அன்புள்ள அப்பா,

    குடியரசுதினம் என்றாலே எனக்கு தாங்கள் என்னை சிறுவயதில் புதுக்கோட்டை பிருந்தாவனம் வீட்டில் நாம் வசித்தபொழுது, பள்ளியில் கொடியேற்றம் முடிந்தவுடன், நாம் அனைவரும், வீட்டில் ஒன்றாய் அமர்ந்து தில்லியில் குடியரசுத்தலைவர் கொடியேற்றுதல், இராணுவ அணிவகுப்பு மற்றும் மாநிலவாரியாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் பொழுது இது இது இன்ன இன்ன மாநிலம் என்று தாங்கள் எங்களிடம் விவரமாக எடுத்துக்கூறியது குழந்தைகளாய் இருந்த எங்கள் மனதில் இன்றளவும் பதிந்துள்ளது. இன்றைய பெற்றோர் அதனை தொடர்ந்தால் பின்வரும் காலத்தில் சுதந்திர தினத்திற்கும், குடியரசுதினத்திற்கும் உள்ள வேறுபாடு அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

    தங்கள் கட்டுரையில் மேலும் சில சுவாரசியமான நிகழ்வுகள்...

    இப்பொழுது நாம் பயன்படுத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முன் இரண்டு பெரிய சட்டங்கள் (ஆங்கிலேயரின் ஆட்சிகாலத்தில்) பயன்பாட்டில் இருந்தது. அவை Government of India Act 1935 மற்றும் Indian Independence Act 1947. இவ்விரண்டும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி (Article 395) நவம்பர் 26 1949 அன்று நீக்கப்பட்டு அதன்பிறகே, நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம், அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    1922 - இந்தியாவின் அரசியலமைப்புச் சட்ட வரைவு இந்தியர்களால் மட்டுமே இயற்றப்படவேண்டும் என்று திரு. காந்தி அவர்களால் முதன்முதலாக முன்னிறுத்தப்பட்டது.

    1928 - ஆறு வருடம் கழித்து (சைமன் குழுவிற்கு எதிராக) இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவு மோதிலால் நேரு தலைமையினால் ஆன குழுவினால் (நேரு குழு) முழுவதும் இந்தியர்களால் உருவாக்கப்பட்டது. இந்த குழுவினால் பரிந்துரைக்கப்பட்டவை வட்ட மேசை மாநாடுகளில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. எனினும் சைமன் குழுவின் பரிந்துரைகளின் படியே இந்திய அரசுச் சட்டம் 1935 இயற்றப்பட்டது. பின்னர் 1946-49ல் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட போது நேரு அறிக்கையின் பல பரிந்துரைகள் அதில் செயலாக்கப்பட்டன

    1929 - இறுதியில் லாகூரில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் மேலாட்சி குறித்து விவாதிக்கப்பட்டது. மேலாட்சி போதாதென்றும் பிரித்தானியப் பிடியிலிருந்து மீண்டு முழு தன்னாட்சி பெற வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது. டிசம்பர் 31 நள்ளிரவில் லாகூரில் இந்திய மூவர்ணக் கொடியை ஜவகர்லால் நேரு ஏற்றினார். அவரைப் பின்பற்றி இந்தியாவெங்கும் காங்கிரசு உறுப்பினர்கள் மூவர்ணக் கொடியினை ஏற்றினர். பின் இந்திய விடுதலை அல்லது முழு தன்னாட்சிக்கான சாற்றுதல் காந்தியால் உருவாக்கப்பட்டது.

    1930 - காந்தியின் இந்த, இந்திய சுதந்திரப் பிரகடனம், முழு தன்னாட்சிக்கான சாற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியால் அதிகாரப்பூர்வமாக ஜனவரி 26ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. காங்கிரசின் இந்த புதிய நிலைபாடு காலனிய அரசுடனான அடுத்த கட்ட மோதலுக்கு வழிவகுத்தது.

    அதனை நினைகூறும் விதமாக ஜனவரி 26ம் தேதி இந்தியாவின் குடியரசுநாளாக கொண்டாடப்படுகிறது.


    அ. மு. நெருடா.

    பதிலளிநீக்கு
  10. "இரு நாட்டுக்கு தேசிய கீதம் எழுதிய பெருமை தாகூரை மட்டுமே சேரும்." என்பது உண்மை!
    தெளிவான விளக்கம்
    சிறந்த கருத்துப் பகிர்வு

    பதிலளிநீக்கு
  11. எனக்கு இருந்த சந்தேகங்களில் ஒன்று ஐயா..பயனுள்ள பதிவு..நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு