இவர்கள் அ-மனிதர்கள்!

இவர்கள் அ-மனிதர்கள்!
சாவே உனக்கொருநாள் சாவு வந்து சேராதோ? என்று பாடினார் நம் கண்ணதாசன். பின்வருவன போலும் மனிதகுலப் பேரழிவுகள் அந்த சிந்தனையைத்தான் நமக்குள் எழுப்புகின்றன..
அர்த்தமற்றவர்களின் கையிலிருக்கும் ஆயுதமே இவர்களை அழித்துவிட மாட்டாயா?” என்று கதறத் தோன்றுகிறது!

ஒன்றுக்கொன்று கால-தூர-நோக்கத்தால் வேறுபட்ட இந்த நிகழ்ச்சிகளுக்குள் ஓர் ஒற்றுமை உண்டு!, அது-
மனிதத் தன்மையை அழிக்கும் நோக்கம்! எனவே இவர்களை மனிதர்கள் எனலாகாது, “அ-மனிதர்கள்“ என்பதே சரி.

1990இல் நான் ஒரு கவிதை எழுதினேன்-
இலங்கையிலே செத்ததுவும் மனிதர், அஸ்ஸாம்
                        எரிந்ததிலே செத்ததுவும் மனிதர், பஞ்சாப்
கலங்கையிலே செத்ததுவும் மனிதர், டெல்லிக்
                        கலவரத்தில் செத்ததுவும் மனிதர், காஷ்மீர்
குலுங்கையிலே செத்ததுவும் மனிதர், பாபர்
                        கோவிலிலே செத்ததுவும் மனிதர், அறிவு
மழுங்கையிலே செத்ததெல்லாம் சிவந்த ரத்த
                        மனிதர்கள்! மனிதர்கள்! மனிதர் கள்தான்!
காரணம் என்னவோ அச்சுறுத்தல், ஆதிக்க வெறி.. ஆனால் அதில் இறந்ததெல்லாம் அந்தந்த நிகழ்வுகளுக்கு நேரடித் தொடர்பில்லாத அப்பாவி மனிதர்களும் தானே?

அப்படியெனில், இதைச் செய்தவர்களை எப்படி மனித இனத்தில் சேர்க்க முடியும்? எனவேதான் இவர்களை மனித இனத்தில் சேராத “அ-மனிதர்கள்“ என்போம்! இதை நம் வள்ளுவப் பாட்டன், “மக்களே போல்வர் கயவர்“ என்பாரே?
இதையே நம் ஊர்க்கிழவியின் சொலவடையில் சொன்னால்-
நக்குற நாய்க்கு செக்குஎன்ன? சிவலிங்கம் என்ன?” ஆமாம்! எண்ணெய்ப் பிசுக்கு இருக்கும் இடத்தையெல்லாம் நக்குகிற நாய்க்கு வித்தியாசம் தெரியுமா? அ-மனிதர்க்கும் நாய்க்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அது, நாய் உயர்ந்தது என்பதே! வேறென்ன சொல்ல?   இதோ அந்தச் சில மறக்கவியலா நிகழ்வுகள்-
------------------- (மேலுள்ள படம்-1)
(1) இதுபோலும் அ-மனிதர் கும்பல் ஒன்று, வடக்கு இராக்கின் மோசுல் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் பழம்பெருமை வாய்ந்த அரிய சிலைகள் பலவற்றை உடைத்து நொறுக்குவதைக் காட்டுகின்ற ஒளி-ஒலிக் காட்சியை இஸ்லாமிய அரசு(ISIS) இயக்கத்தினர் வெளியிட்டுள்ளனர். கிறிஸ்துவுக்கு முன் 9ஆம் நூற்றாண்டுக் காலத்தின் அஸ்ஸிரிய காலத்தைச் சேர்ந்த, சிறகுகள் கொண்ட காளை மாட்டின் கலைச்சின்னமும் அழிக்கப்பட்ட பொருட்களில் அடங்குகின்றது. பொய்ச் சிலைகள் என்று அவற்றை விவரிக்கும் படங்களுடன்,  முகமது நபி அவற்றை அழிக்க உத்தரவிட்டிருந்தார் என்ற வாசகங்களும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. 
ஆதாரங்களுக்குப் பார்க்க -http://www.bbc.co.uk/tamil/global/2015/02/150226_mosul
-------------------------------------------
 (2) இந்தியாவில் 1992-டிசம்பர்-6 அன்று சுமார் 600ஆண்டுப் பழமை வாய்ந்த, பாபர் மசூதியை இடித்து நொறுக்கியது இந்து அடிப்படை வாத கும்பல்.  (படம்-2)
பாபர் அந்த மசூதியைக் கட்டுவதற்குப் பலயுகங்களின் முன், அந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார்! என்று, (“எங்கள்ட்ட பர்த் சர்ட்டிஃபிகேட்கூட இருக்குன்னு தான் சொல்லலையே தவிர) அத்தனை வரலாற்றுத் திரிபுகளையும் செய்தது ஒரு கும்பல்! இதை மதச்சார்பின்மையில் நம்பிக்கையுள்ள இந்தியர் அனைவரும் ஒரு கருப்பு தினமாக நினைக்கிறோம்! இதையே எங்கள் ஊர்க் கவிஞர் ரமா.ராமநாதன்,
ஆறுகளில்
மிகவும் அழுக்கானது
அந்த டிசம்பர் ஆறுஎன்று சரியாகவே சொன்னார்!
இப்போதும் அந்தக் கதை வேறுபல ஊர்களில் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது
ஆதாரங்களுக்குப் பார்க்க -
---------------------------------------
(3) உலகப் போலீஸ்காரனாகத் தன்னை அறிவித்துக்கொண்டு அப்பாவி நாடுகளையெல்லாம் அடகுபிடித்துக்கொண்டும் (பிந்திய ஈராக் போலும்) ஆற்றா நாடுகளை அடித்துப் பிடுங்கிக் கொண்டும் வந்த அமெரிக்காவுக்கு, அதுவரை சிம்ம சொப்பனமாக இருந்த USSR (சோவியத்து ஒன்றியம்) எனும் நாடு, கோர்பச்சேவ் என்னும் கிறுக்கனின் ஆட்சியில் அழிவுத் திசைக்குத் திரும்பியது. சமத்துவ வாழ்வைச் சாதித்துக் காட்டி உலகின் உண்மையான முதல் புரட்சித்தலைவராக வாழ்ந்த விலாடிமீர் இலியீச் உலியனோவ் லெனின் (எ) மாமனிதர் லெனின் சிலையை உடைத்து நொறுக்கியது ஒரு கும்பல்! (படம்-3)
http://en.wikipedia.org/wiki/Fall_of_the_monument_to_Lenin_in_Kiev
-------------------------------------------
(4) யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை  இனப் பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31, நள்ளிரவுக்குப் பின்னர்  சிங்கள வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது. இது 20ஆம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒருமிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது (படம்-4)
  இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன்  தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய  நூலகமாகத் திகழ்ந்தது .  இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர்  காமினி திசாநாயக்கா  உட்பட வேறு பல அப்போதைய சிங்கள  அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர்
- தகவல் - விக்கிப்பீடியா. 
மேலும் பார்க்க - http://ta.wikipedia.org/s/dx5
-------------------------------------- 
'இடிப்பது' எளிது! 
'கட்டுவது' அரிதினும் அரிது!-
பேருந்துப் பயணமாயினும்,
வாழ்க்கைப் பயணமாயினும்!
“செயற்கரிய செய்வார் பெரியர், சிறியர்
செயற்கரிய செய்கலா தார்“  (குறள்-26)

27 கருத்துகள்:

  1. இவர்களெல்லாம் மனிதர்கள் அல்லர்....
    படங்களும் அதற்கான விளக்க காரணங்களும் கொடுத்து இது போன்ற மூட மனிதர்களைப் பற்றிச் சொல்லி....

    இடிப்பது எளிது!
    கட்டுவதுதான் அரிது!
    அது பேருந்தில் பயணிக்கும் பெண்ணாயினும்,
    அவரவர் வாழ்க்கைப் பயணமாயினும்!
    “செயற்கரிய செய்வார் பெரியர், சிறியர்
    செயற்கரிய செய்கலா தார்“ (குறள்-26)

    இப்படி முடித்திருப்பது சிறப்பு ஐயா....
    இவர்களெல்லாம் திருந்தப் போவதேயில்லை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இடிப்பது எளிது!
      கட்டுவதுதான் அரிது! - இந்த ரெண்டு வரியும் என்னுடையதல்ல. ஆனாலும் எங்கோ கேட்டு நெஞ்சில் பதிந்தது. நன்றி நண்பரே.

      நீக்கு
  2. சரியாகச் சொன்னீர்கள் ! இவர்கள் மனிதர்களே அல்ல! படக்காட்சியுடன் அருமையான பதிவு! தம்பி , முத்துவுக்கு வாழ்த்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா, நலம்தானே - உடலும் உள்ளமும்? கவிதைகளைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன்..தொடருங்கள், தொடர்வேன்.

      நீக்கு
  3. தமிழ் மண பட்டை இணைத்து ஓடும் போட்டுவிட்டேன்.மாலையில் வந்து கருத்திடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நன்றி முரளி.
      கல்வி கரையில கற்பவர் நாள்சில
      மெல்ல மறக்கும் பிணி பல.
      வாக்கிற்கும் சேர்த்து 2 நன்றி

      நீக்கு
  4. அ - மனிதர்கள் சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரி நலமா? நல்ல வேளை, என் தளத்திற்கு வந்தீர்கள். நல்ல கவிதைகளை எழுதிவரும் உ ங்கள் தளத்தின் யுஆர்எல்-ஐ நான் தொலைத்துவிட்டு, தேடிக்கொண்டே இருந்தேன்.நீண்ட இளைவெளி விடாமல் அவ்வப்போது நாலுவரி எழுதிக்கொண்டே இருங்கள்.. நன்றி

      நீக்கு
    2. மிக்க நன்றி அய்யா.உங்களைப் போன்றவர்கள் தரும் ஊக்கத்தினால் தான்
      தொடர்ந்து எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.தொடர்ந்து எழுதுவேன்.

      நீக்கு
  5. இவர்கள் எல்லாம் மனிதர்களே அல்ல
    விலங்கினும் கீழானவர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீதி-அநீதி, சுத்தம்-அசுத்தம், சுரர்-அசுரர் போல -வடமொழிதான்- மனிதர்-அமனிதர் என்பதே அந்தப் பொருள்தான் அய்யா..

      நீக்கு
  6. அண்ணா!!
    பதிவை படித்துக்கொண்டு வரும் போதே நூலக எரிப்பும் நினைவுக்கு வந்தது, நீங்கள் அதையும் சேர்த்திருக்கிறீர்கள்!!!
    ஏதோ ஒரு சங்க பாடல் தமிழாசிரியர் நடத்திக்கொண்டிருந்தார். எருமை ஒன்று மிக அழகிய நீல மலர் (குவளை என நினைவு) மெல்லுவது போல என ஒரு உவமை பற்றி அவர் பேசும் போது ஏற்பட்ட அதே உணர்வுதான் இந்த அ மனிதர்களை பற்றி படிக்கையில் தோன்றுகிறது!!!! எ-மனிதர்கள் அழகான (அத்தியாவசியமான) சொல்லாடல்!!
    இடிப்பதும்,கட்டுவதுமாய் நகைசுவையாய் முத்(து)த்திரை பதித்து முடித்திருக்கிறீர்கள்!!! டச்சிங் பதிவு அண்ணா!!

    பதிலளிநீக்கு
  7. சரியாக சொன்னீர்கள்! இடிப்பது எளிது கட்டுவது அ- மனிதர்கள் மிருகங்களிலும் மோசமானவர்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. பதில்கள்
    1. கொடுமை கொடுமை ன்னு கோவிலுக்குப் போனா...
      அங்க ரெண்டு கொடுமை திங்குதிங்குன்னு ஆடிச்சாம்!

      நீக்கு
  9. வேதனையிலும் வேதனை, யாழ் நூலக எரிப்பும் சரி, வாவர் பள்ளி இடிப்பும் சரி, மாலி, சிரியா என உலகின் எங்கும் காணப்படும் மானிட பொக்கிஷங்களை அழிக்கப்பட்டு வருவதும் சரி வேதனையிலும் வேதனை. வெறுப்போடு ஒரு கும்பல் அழிக்கின்றது என்றால், அக்கறையின்மையால் நாம் ஒரு பக்கத்தில் எண்ணற்ற வரலாற்றுக் களஞ்சியங்களை அழியவிட்டும் வருகின்றோம். இரண்டுக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது..

    அது சரி ஐயா.. மனிதருக்கு எதிர்ப்பதம் அமனிதரா? அ என்ற முன்னொட்டு இந்தோ-ஆர்ய மொழிச் சொற்களுக்கானவை. அமானுஷ்யம் என்பது அதில் இருந்தே வரும், ஆனால் அத்தகைய முன்னொட்டு தமிழுக்கு வேண்டுமா? ஜெயமோகன் போன்ற சில எழுத்தாளார்கள் non-fiction என்பதை அபுனைவு என்பர், இது அபத்தமாக படவில்லையா? மனிதரல்ல, புனைவிலி என்பது தானே தமிழ் இலக்கணப் படி சரியான எதிர்ப்பதம்... :/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்த வழக்கு நண்பரே. நான் தமழுக்கு ஆதரவாளனே அன்றி, சுத்தமான தனித்தமிழ் நடை என்பதை ஏற்க இயலாதவன். ஏற்கெனவே சுத்தம்-அசுத்தம், சுரர்-அசுரர், நியாயம்-அநியாயம் என அகரத்தை எதிர்ப்பதமாக வழங்கிக்கொண்டுதானே இருக்கிறோம்? அதன்படியான ஒரு சொல்தான் அ-மனிதர் என்பதே என் கருத்து. மனிதரல்லாதார் என்பது நீள்கிறது. அல் எனும் சொல் தனித்தமிழில் எதர்ச்சொல்லாக அல்திணை-அஃறிணை என உள்ளதுதானே? இலக்கணத்தைவிட நடைமுறை வளர்ச்சி முக்கியம் என்னும் கருத்துடையவன் நான். இலக்கணம் என்பது எலும்புக்கூட்டு ஆய்வு, அதை வைத்து ஆய்வு செய்யலாமே அன்றி அணிசெய்ய இயலாது. புதிய சிந்தனைகளை ஏற்க இயலாத இலக்கணத்தால் மொழியே சுமையாவதைத் தடுக்கவியலாது என்பதே என் தனிப்பட்ட கருத்து. புதிய நடைக்குப் புதிய சொல்லாடல் தேவையே.

      நீக்கு
  10. அ-மனிதர்கள்! ஆம்! கேவலமான, கீழ்தரமான மனிதமற்ற மனிதர்கள்! மனிதன் என்பதிலேயே அடங்கி இருக்கிறது மனிதம்....அதற்ற அற்பர்கள்!

    இறுதி நச்! ஐயா! அருமையான, கலக்கலான பதிவு! மனதைத் தொட்ட பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி உங்களின் அண்மைப் பதிவுகளைப் படிக்கவிலலை. விரைவில் வருவேன். படித்துக் கருத்திடுவேன்.

      நீக்கு
  11. தங்கள் அருமையான பதிவை
    எனது வலைப்பூவிலும் பகிர்ந்துள்ளேன்
    http://yppubs.blogspot.com/2015/03/blog-post.html

    வரலாறு என்பது
    அழிக்க முடியாத ஒன்றே - அந்த
    வரலாற்றையே அழிக்க முடிந்தால் - அந்த
    புதிய வரலாறே - அதற்கு
    முன்னைய வரலாற்றின் சான்று!

    பதிலளிநீக்கு
  12. மூடர்களால் அழிவது உயிர்களும், கலையும், வரலாறும்!
    21ஆம் நூற்றாண்டிலும் தொடர்கிறதே அண்ணா :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள இயலாதவர்கள்தான் கையல் எதிர்கொள்கிறார்கள் - சிலைகள் எதிர்த்து அடிக்காது என்னும தைரியததில். ஆனால், சிலைகளுக்கு உணர்வில்லையே தவிர, தொடர்புடையவரை உசுப்பிவிடும் ஆற்றல் உண்டு என்பதந்தப் பேதைகளுக்குத் தெரியவில்லை.

      நீக்கு