சூப்பர் சிங்கர் – ஸ்பூர்த்தி!

VIJAY TV SUPER SINGER JUNIOR  - SPOORTHY
பத்து வயது இருக்குமா இந்தச்சிறுமிக்கு? என்று நினைத்தேன், 

ஏ.ஆர்.ரகுமான் கேட்டபோது ஒன்பது வயது என்று சொன்னாள்!  என்ன ஒரு கம்பீரக் குரல்! இசைஞானம்! வர்ணஜாலம்! உணர்ச்சிமிகுமுகபாவம்! மழலைமாறாமல், கைத்தாளத்துடன் அனாயாசமாக அப்படிப் பாடுகிறாள்?!! 

விழிகள் மீனோ”  பாடலைக்கேட்டு -
 “இந்தச் சிறுமியின் சின்னத் தொண்டைக்குள் இருந்தா இவ்வளவு அழகாய் ராக ஆலாபனை  வழிகிறதுஎன்று வியந்து நெகிழ்ந்து எஸ்.பி.பி.யே அருகில் அழைத்து, அணைத்து வாழ்த்தியபின் வேறென்ன பரிசு வேண்டும்

ஸ்பூர்த்தியின் தாய்-தந்தை-தம்பி அடைந்த மகிழ்ச்சியில் கண்ணீர் வந்தது பெரிதல்ல.. எஸ்.பி.பி.யின் கண்களும் கலங்கியது கண்டு நம் கண்ணும் கலங்கியதே? ஏன்? அதுதான் வயதை மீறிய திறமைஎன்று அவரே சொன்னாரே! அதுதான்.. ஒன்று நிச்சயமய்யா.... 

வளராத அரைகுறைகள்தான் ஈகோ பார்த்து,  அடுத்தவர் திறமையைக் கண்டுகொள்ளாமல் இருக்கும். நிறைகுடம் கண்டு இன்னொரு நிறைகுடம்தான் நெஞ்சு தளும்பும்!

ஸ்பூர்த்திக்குத் தமிழ் தெரியவில்லை. அதனால் என்ன? மழலைத் தமிழில் கடிஜோக் சொல்லுகிறாள்...! 

நான் பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறேன் -
  தமிழ்த்திரை இசையில் கொடிகட்டிப் பறந்த டி.எம்.எஸ், சுசிலாம்மா, இப்போதும் பாடிக்கொண்டிருக்கும் சின்னக்குயில் சித்ரா முதலான பலருக்கும் தாய்மொழி தமிழல்லல என்பதை எத்தனை பேர் அறிவார்கள்? அவர்கள் சொல்லித்தராத தமிழ் உச்சரிப்பையா நாம் (தமிழாசிரியர்கள்?) சொல்லித்தந்து விட்டோம்? இப்போதெல்லாம் இசையமைப்பாளர் சிலர் தமிழரைக் கொண்டே இசைத் தமிழைக் கொல்கிறார்களே!

எனவே, அது ஒரு பொருட்டல்ல என்பதை அழகாகப் பாடும் இந்தச் சிறுமி உணர்த்திவிட்டாள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பலர் வந்தும் தேர்வுபெறவில்லை. நடுவர் அனைவரும் தமிழைத் தாய்மொழியாக்க் கொண்டிராதவர்தாம் என்பதால் இது நிகழவில்லை, என்பதும் உண்மை. அல்லது நான் ஏற்கெனவே எழுதிய ஒரு பதிவில் சொன்னதுபோல வயதை மீறிய காதல்- பாடல்களை பாவ(?)த்துடன் தம் பிள்ளைகள் பாடப் பிடிக்காமலும் இருக்கலாம்.

“மன்னவன் வந்தானடி“ பாடலை இவள் பாடிய போது, அந்தப் புகழ்பெற்ற பாடலுக்குத் திரையிசையில் கடம் வாசித்த இசைப்பெரியவரே வந்து பார்த்துப் பாராட்டியதுடன்,வீணை காயத்ரி, சுதா ரகுநாதன், கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் முதலான கர்நாடக இசைக்கலைஞர்கள் “புகழ்ந்துசொல் வார்த்தை இல்லை“ என்று அருகில் அழைத்து அணைத்துக் கொண்டதும், ஸ்பூர்த்தியும் அசராமல் வாழ்த்தியவர்கள் காலில் எல்லாம் பணிந்து விழுந்து எழுந்ததும்...அட போப்பா! 

ஆனால், என்ன.. கர்நாடக இசைமேதைகள் சாதாரண மக்களுக்குப் பாடுவதில்லையே! இவர்களிடம் பாராட்டுப் பெறும் ஸ்பூர்த்தி, வரும் காலத்தில் தனது இசைமேதைமையை நம் மக்கள் மகிழ மட்டுமல்ல, மாறவும் பாடிப் புகழ்பெற்றால் நல்லது என்பதே என் ஆசை!

31-12-2014 இரவு சீனியர் சங்கர சுப்பிரமணியன் பிரமாதமாகப் பாட, அலட்சியமாக எதிர்கொண்ட லாவகம் ஸ்பூர்த்தியின் வயதை மீறிய திறமை என்பதில் சந்தேகம் இல்லை!

ஸ்பூர்த்தி இப்போது இறுதிப் போட்டிக்கு வந்த நால்வரில் ஒருவராக இருக்கிறார். இறுதிப் போட்டிக்கு வருவார் என்றே நம்புகிறேன். 

இறுதிவெற்றி பெற வேண்டும் என்றும் விரும்பி நெஞ்சார வாழ்த்துகிறேன். வாழ்த்துவோம்!

இறுதி வெற்றியை இவர் வெல்கிறாரோ இல்லையோ தமிழ்மக்களின் மனங்களை வென்றுவிட்டார் 

பலகோடி புரளும் இசைவணிகத்தில் இதுபோலும் குழந்தைகள் கூட ஒரு விளம்பரம்தான் என்பதுதான் வருத்தமானது!

புல்லுக்குஇரைக்கும் நீர், வாய்க்கால் வழியோடி,
நெல்லுக்கும்ஆங்கே நிறையட்டும்! (புரியுதா?)
---------------------------------------------
கேட்காதவர்கள் கேளுங்கள்ஸ்பூர்த்தியின் அபாரத் திறமையைப் பார்க்காதவர்கள் பாருங்கள் – 
(கேட்டவர்களும் திரும்பக் கேட்டு ரசிக்கலாம்)

விழிகள் மீனோ ….மொழிகள் தேனோ..

போவோமா ஊர்கோலம்

மின்சாரக் கண்ணா

மன்னவன் வந்தானடி

கண்ணோடு காண்பதெல்லாம்

நன்றி கூகுள் தேடுபொறி ,   www.youtube.com
------------------------------------------------------------------------- 
இதை எழுதி வெளியிட்டபின் 
02-01-2015 - செய்தி -
நம்ம ஸ்பூர்த்தி பலத்த போட்டிக்கிடையே --
இறுதிப்போட்டிக்கு வந்த மூவரில் ஒருவராக வந்துவிட்டாள்.
பின்னே சும்மாவா..? கடந்த சூப்பர் சிங்கரில் “மாமா..மாப்ளே“ எனும் புகழ்பெற்ற பாடலை மிகஅருமையாகப் பாடி,  ஜானகியம்மாவே உச்சிமோந்து பாராட்டி 
அவர்கையால் அவரது  நூறுரூபாயைப் பெற்று 
முதலிடமும் பெற்ற திவாகரையே 
சமன்செய்து பெற்ற வெற்றியாக்கும்....
ஸ்பூர்த்தியின் வெற்றிப் பயணம் 
தொடர வாழ்த்துவோம்! 
- பதிவுஎழுதிய நாள் - 01-01-2015

30 கருத்துகள்:

  1. ஸ்பூர்த்தி இறுதிப் போட்டியில் வெல்வார் என்றே நினைக்கிறேன். வயதுக்கு மீறிய இசை அறிவு உடைய வராக இருக்கிறார்.
    இப்பட்டம் யாருக்கு என்பதை முன் கூட்டியே முடிவ செய்யப்பட்டது என்று நினைக்கிறேன். இன்னொருவர் ஹரிப்ரியா . இவர்களில் ஒருவரை விஜய் டிவி முடிவு செய்திருக்கும் என்று நினைக்கிறேன்.
    ஹரிப்ரியா ஒரு இசைக் கலைஞரின் மகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொ.கா.அரசியல் பற்றிக் கேள்விப்பட்டதும், அனுபவித்ததும் உண்டு முரளி! அதையும் மீறி இந்தச் சிறுமியின் திறமை வெளிப்படுவதைப் பார்த்துத்தான் இந்தப் பதிவு. “காலம் அறிந்து கூவும் சேவலைக் கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது, கல்லைத் தூக்கி பாரம்வைத்தாலும் கணக்காய்க் கூவும் தவறாது” - பட்டுக்கோட்டையார். முதல் கருத்து நன்றி முரளி

      நீக்கு
  2. நிகழ்ச்சியாக நான் பார்ப்பதில்லை. அவ்வப்போது நண்பர்கள் சிலாகிக்கும்போது பார்த்திருக்கிறேன். குறிப்பாக ஸ்பூர்த்தியின் 'விழிகள் மீனோ' பாடல்! அபார திறமை. பிறக்கும்போதே இவர்கள் தனித் திறமையுடன் பிறக்கிறார்கள்.

    இன்று கலைஞர் தொலைக்காட்சியில் உங்கள் நிகழ்ச்சி பார்த்து ரசித்தேன்.

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் வீட்டிலிருக்கும்போது தவறாமல் பார்ப்பேன். எனக்குப் பாடத் தெரியாமலே பாடிக்கொண்டிருக்கிறேன். இந்தக் கரும்புகளின் பாடல்திறன் என்னை எறும்பாய் இழுக்கிறதே என்ன செய்ய? கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி ஸ்ரீ.

      நீக்கு
  3. நானும் ஸ்பூர்த்தியின் ரசிகன்தான்.எனக்கு ஒரு சந்தேகம்--நடுவர்கள் பல நேரங்களில் இக்குழந்தையை ஓரங்கட்ட முயல்கிறார்களோ என்று.ஆனால்//சூப்பர் சிங்கரில் இறுதி வெற்றியை இவர் பெறுகிறாரோ இல்லையோ தமிழ்மக்களின் மனங்களை வென்றுவிட்டார் என்பதே உண்மை.// அப்படியே அனைவரும்ரும் ஏற்றுக்கொள்வார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அந்தச் சந்தேகம் உண்டு. ஆனாலும் அவள் அதை எதிர் கொள்ளும் அலட்சியம் எனக்குப் பிடிக்கும். நன்றி பித்தரே.

      நீக்கு
  4. "அன்பும் பண்பும் அழகுற இணைந்து
    துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!"

    வலைப் பூ நண்பரே!

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (2015)

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கு நன்றி. தங்களின் தளத்துப் பதிவில் ஒரு பின்னூட்டம் இட்டிருக்கிறேன், பார்க்க வேண்டுகிறேன்.

      நீக்கு
  5. மிக மிக மிகக்க் கடுமையான போட்டி.ஸ்பூர்தியை நேரடியாக இறுதிப்போட்டிக்கு அனுப்பி இருக்கலாம் இந்தக்குழந்தையிடம் இவ்வளவு திறமையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், மற்றவர் வயதோடு ஒப்பிடும்போது, ஸ்பூர்த்திதான் “செல்லக்குரல்“ என்பதற்குச் சரியான தேர்வானவள்.
      பார்க்கலாம், நடுவர்கள் மனோ, சித்ரா, சுபா மூவரும் பெரும்பாலும் சரியாகவே சொல்லிவிடுகிறார்கள்.

      நீக்கு
  6. நிச்சயம் ஸ்பூர்த்தி முதல் இரண்டு இடங்களைல் ஒன்றில் இருப்பார். அபாரத் திறமை கொண்ட இவருக்கு நல்லதொரு எதிர்காலம் உண்டு என்பதில் ஐயமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், இப்போட்டியில் முத்லிடத்தில் வரவில்லை என்றாலும், இந்த சீசனில் அதிக வரவேற்பைப் பெற்றவர் என்னும் வகையில் ஸ்பூர்த்தி வென்றே விட்டாள் என்றே சொல்வேன். ந்ன்றி

      நீக்கு
  7. ஸ்பூர்த்தி இறுதிப் போட்டியில் வெல்ல வேண்டும்...!

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கும் நல்ல வார்த்தைகளுக்கும் நன்றி வலைச்சித்தரே!

      நீக்கு
  8. வணக்கம் ஐயா !

    உண்மையை உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளீர்கள் ஐயா !நானும்
    கண்டு வியந்த பாடகி இவளேதான் .ஸ்பூர்த்தியின் அபார
    திறனைக் கண்டு நடுவர்கள் குறிப்பாக spb ஐயாவே வியந்து
    பாராட்டிய விதத்தை உலகில் உள்ள அத்தனை தமிழ் நெஞ்சங்களும்
    அறிந்திருக்கும் எனவே பிஞ்சுக் குழந்தையின் நெஞ்சம் மகிழ்ந்திட
    அவளுக்கே வெற்றியும் கிட்டிட வேண்டும் என்பதே எனது அவா .
    பிறந்திருக்கும் புத்தாண்டு அனைவர்க்கும் மகிழ்ச்சியை அள்ளி
    அள்ளி வழங்கட்டும் .இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி. கருத்திற்கும், வாழ்த்துக்கும் நன்றிம்மா.

      நீக்கு
  9. நானும் முடிந்தபோதெல்லாம் அபாரத் திறமையுடன் பாடும் ஸ்பூர்த்தியின் பாடல் கேட்டுவருகிறேன். 'அந்த சிவகாமி மகனிடம்...' பாடலைப் பாடினாள் பாருங்கள், முந்தைய பாடல்கள் அனைத்தும் ஒன்றுமே இல்லை என்று சொல்லத்தக்க அளவில் அவளது வீச்சு இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும், அந்த சீனியர் பாடகர் சந்தோஷ் பாடி அசத்தியபின் சற்றும் அலட்டிக்கொள்ளாமல் பாடிய தன்னம்பிக்கை.. அருமை தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே.

      நீக்கு
  10. இப்போட்டியின் முடிவு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு பார்ப்பவர்களை முட்டாள் ஆக்குவதால் நான் பார்ப்பதை விட்டுவிட்டேன்! என் டீவி நேரத்தை குழந்தைகள் ஆக்ரமித்துவிட்டார்கள் கார்டூன்கள் பார்க்க! திறமை உள்ளவர் ஜெயிக்கட்டும்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொலைக்காட்சியினர் தே்ர்வு என்னவாக இருந்தாலும், மக்களின் வரவேற்புப் பற்றி அந்தத் தொலைக்காட்சியே ஒரு கருத்துக் கேடடால் ஏகோபித்த முடிவில் ஸ்பூர்த்திதான் வருவாள். எனவேதான் இந்தப் பதிவு. நன்றி நண்பரே.

      நீக்கு
  11. வணக்கம்
    தமிழ் மக்களை வென்ற ஸ்பூர்த்தி நிச்சயம் வெற்றி வகை சூடுவார் புதியஆண்டு வழி வகுக்கும்
    இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    பதிலளிநீக்கு
  12. தங்களின் “விடாது துரத்தும் விஷ்ணுபுரம்“ ப திவுக்கு எனது பின்னூட்டம் பார்த்தீர்களா நண்பரே? தங்களின் வாசிப்பு ருசி என்னைப் பெரிதும் கவர்ந்துவிட்டதால்.. அதுவும் நீண்டுவிட்டது

    பதிலளிநீக்கு
  13. திறமை இருக்கும் சிறுமிக்கு வெற்றி கிடைக்குதோ இல்லையோ அவளை வாழ்த்துவோம்...

    பதிலளிநீக்கு
  14. இனம் ,மொழி,கடந்து வாழ்த்தும் உங்களின் வாதமும் சரியே.ஆனால் ஸ்பூர்த்தி முறையான கர்னாடக சங்கீதப் பயிற்சி பெற்றவர். ஸ்ரீஷா என்ற இன்னொரு போட்டியாளர் முறையான சங்கீதம் படிக்காமலே மிக சிறப்பாக பாடுகிறார் ,சிலநேரங்களில் அவரை ஊக்கப்படுத்தாமலே உதாசினப்படுத்துவதையும் பார்கிறோமே.சங்கீதம் முறையாக கற்றவருக்கான போட்டியா? திறமையாகப் பாடுவோருக்கான போட்டியா ?சங்கீதம் கற்றதினால் மட்டுமே ஊக்குவிக்கும் நோக்கமா?

    பதிலளிநீக்கு
  15. சிறுமியின் திறமையைப் பாராட்டுகின்ற தங்களது எழுத்து அவளுக்கு வெற்றியைத் தரும் என்று நம்புவோம். எங்களது உணர்வும் அதுவே. நேற்று (1.1.2015) நல்ல படிப்பினை பெற்றேன், தொலைக்காட்சியின் நிகழ்ச்சி மூலமாக. முழுமையாகப் பார்த்தேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் ஐயா!

    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா!

    நானும் நெற்றில் தேடி இச் சிறார்களின் நிகழ்ச்சியைப் பார்ப்பதுண்டு!
    அருமையாகப் பாடும் அபார ஞானம் மிகுந்தவள்!
    வெற்றி பெறுவாள்! அவளுடன் இப்போது இறுத்திக் கட்டத்தில் போட்டியிடும் ஏனைய சிறார்களும் சளைத்தவர்கள் அல்ல!..
    வெற்றி யாருக்கென தெரியும் விரைவில்!

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  17. ஐயா! இந்தச் சிறுமியை நாங்களும் ரசித்து வருகின்ரோம்! அபாரமான இசை அறிவு! குரல் வளம். முதிர்ந்த திறமை. எல்லாம் சரி ஐயா இறுதிப் போட்டியில் வழக்கம் போல் எதிர்ப்பார்ப்பவர் திறமை மிக்கவர் வெற்றி பெரும் சரித்திரம் இல்லையே விஜயில்....அத்னால் தான் இந்த சந்தேகம்...எது எப்படியோ...ஸ்பூர்த்தி கீர்த்தி பெறுவது நிச்சயம் ஐயா.

    தாங்கள் இந்தச் சிறுமியைப் பற்றி பகிர்ந்ததற்கு மிக்க நன்றி ஐயா!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனம் கனிந்த புத்த்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  18. அவர் பாடிய சில பாடல்களை கேட்டதுண்டு. திறமை மிக்கவர். போட்டியில் வெற்றி பெறட்டும் என வாழ்த்துகிறேன்!

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  19. //பலகோடி புரளும் இசைவணிகத்தில் இதுபோலும் குழந்தைகள் கூட ஒரு விளம்பரம்தான் என்பதுதான் வருத்தமானது!//
    இணைப்புகளுக்கு நன்றி அண்ணா ...

    பதிலளிநீக்கு