"எனது மாமாவையும், அம்மாவையும் கைது செய்துவிட்டீர்களா?"

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண் டதற்காக தலித் இளைஞர் சங்கர், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கௌசல்யா தம்பதியை 6 பேர் கொண்ட கும்பல், ஞாயிற்றுக்கிழமையன்று உடுமலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டி யது. இதில் சங்கர் உயிரிழந்தார். கௌசல்யா தலையில் பலத்த காயங்களுடன் கோவை அரசுமருத்துமவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணைய அதிகாரிகள் உடுமலையில் விசாரணை மேற்கொண்டனர். உடுமலை காவல் நிலையத்துக்கு வந்த ஆணை யத்தின் ஆராய்ச்சி அலுவலரான சந்திரபிரபா, கள ஆய்வாளர் கிளிஸ்டர் உள்ளிட்ட அதிகாரிகள் காவல் துறையினரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தினர்

மேலும், சம்பவம் குறித்து முறையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா, எந்தெந்தப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களை கேட்டறிந்தனர்.

பின்னர், கொலை நடந்த இடத்தையும் பார்வையிட்டு, உடுமலையை அடுத்த குமர லிங்கத்தில் உள்ள சங்கரின் வீட்டுக்கும் ஆணைய அதிகாரிகள் சென்றனர். அங்கு சங்கரின் தந்தைவேலுச்சாமியிடம் அரசு வழங்கிய நிவாரணம் குறித்தும், குடும்பத்துக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா? எனவும் கேட்டறிந்தனர். பல்லடத்தில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான பயணியர் விடுதியில் திருப்பூர்மாவட்ட ஆட்சியர் .ஜெயந்தியிடம் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, கோவைஅரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் சங்கரின் மனைவி கௌசல்யா விடம் ஆணைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது, அதிகாரிகளைப் பார்த்ததும் கதறியழுத கௌசல்யா, என் மாமா பாண்டித் துரை, அம்மா அன்னலட்சுமி ஆகியோரை கைது செய்து விட்டீர்களா? என்று ஆவேசமாக கேட்ட அவர், அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து தனது கணவர் சங்கரின் குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அப்போது, கௌசல்யாவை சமாதானப் படுத்திய ஆணைய அதிகாரி நாங்கள் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என உறுதி அளித்தார். அதிகாரி சந்திரபிரபா கௌசல்யாவிடம் உனக்கு என்ன வேண்டும்? வேலைக்கு செல்ல விருப்பம் உள்ளதா? என்று கேட்டார். அப்போது கௌசல்யா நான் எனது படிப்பை தொடர நினைக்கிறேன் என்றார். ஆணைய அதிகாரி இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சுமார் 45 நிமிடம் இந்த விசாரணை நடைபெற்றது.

செய்தியும் படமும் “தீக்கதிர்“ நாளிதழ்-18-03-2016 (பக்கம்08)

பி.கு. ஒரு பெண் தன்னைப் பெற்ற அம்மாவையும், தன் தாய்மாமனையும் ”கைதுசெய்துவிட்டீர்களா?” என்று கேட்கிறாள் என்றால், அவள் மனம் என்ன பாடுபட்டுக் கேட்டிருக்க வேண்டும்? பாசம், காதல் போலும் மெல்லிய உணர்வுகளைச் சாதி வெறி எப்படி வன்முறையால், வன்முறையாக மாற்றிவிடுகிறது? இந்தச் சமூக இழிவை எப்போது கடந்து வருவோம்? 
எனும் கேள்வியே என் நெஞ்சை அறுக்கிறது - நா.முத்துநிலவன்.


11 கருத்துகள்:

  1. இது ஒரு ஆழமான சமூகப் பிரச்சினை. மேலோட்டமாக இதற்கு தீர்வு சொல்ல முடியாது. ஆனாலும் நம் நாடு, அரசாங்கம், சமூகம் ஆகியவை இத்தகைய திருமணங்களுக்குச் சாதகமாக இல்லை என்பதை இளைய சமுதாயம் புரிந்து கொண்டு தங்கள் நடவடிக்கைகளை தீர்மானிக்க வேண்டும். தங்கள் கால்களில் நின்று சமூகத்தில் ஓரளவு நிலை பெற்ற பின்தான் திருமணத்தைப் பற்றி நினைக்கவேண்டும். வாழ்க்கை சினிமா அல்ல.

    ஏன் இத்தகையோர்கள் நடைமுறை உண்மைகளைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் என்பது புரியவில்லை?

    பதிலளிநீக்கு
  2. முனைவர் பழனி.கந்தசாமி அய்யா அவர்களுக்கு வணக்கம்.
    தாங்கள் சொல்வது மிகப்பெரிய உண்மைதான். தன்சொந்தக் காலில் நிற்க முயன்று அந்த இளைஞன் வேலைகிடைத்த செய்தியோடு, காதல் மனைவிக்குச் சேலைவாங்கிக்கொடுக்கக் கடைக்கு வந்தபோது நடந்த கொடுமைதான் இது. எனினும் இந்தக் காதலைச் சாதியாக மட்டுமே பார்த்த கொடுமையை அந்தப் பெண் கத்திக் கதறிச் சொன்ன வார்த்தைகள் என்னிடம் கண்ணீரையும் செந்நீரையும் சேர்த்து வரவைத்தன என்பதால் இந்தச் செய்தியைப் பகிர்ந்தேன் அய்யா.. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நான் இதுபற்றி கவிதை ஒன்று எழுதியுள்ளேன் தம்பி!

    பதிலளிநீக்கு
  4. காதல் திருமணம் சாதியை ஒழிக்கும் என்பதை விட சா'தீ'யை வளர்க்கும் என்பதே நடைமுறை உண்மை....

    படிக்கும் போதே காதலும் பெண்ணைப் பிரித்துக் கூட்டிக் கொண்டு போவதும் தவறு. தங்களால் சாதிக்க முடியும் என்ற நிலையில், சம்பாதிக்கும் போது காதலை வாழ்வாக்கி போராடி வாழ வேண்டும்.

    இந்த நிகழ்வில் ஈடுபட்ட அனைவரையும் தண்டிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. இதை கௌரவக் கொலை என்று நீங்கள் குறிப்பிடாமல் சொல்லியிருப்பது சரியான கோணம் !
    இந்த கொடூர நிகழ்வு ,உங்கள் நெஞ்சை அறுத்தது போல் ,என் நெஞ்சையும் அறுத்ததால்,இன்றைய ஜோக்காளி,கருத்து கந்தசாமியாகி விட்டான்!காண்க>>>என்று தீரும் இந்த கொடுமை ...http://www.jokkaali.in/2016/03/blog-post_18.html

    பதிலளிநீக்கு
  6. கடந்த 2 ஆண்டுகளில் ஆணவக் கொலை என்ற பெயரில் 81 பேர் கொல்லப் பட்டுள்ளனர்... ஒரு பய இதுவரை தண்டிக்கப் படவில்லை..

    வாழ்க்கையில் காலூன்றி, கார்-பங்களா என்று வாங்கிக் குவித்து, பெற்றோர் சம்மதத்துடன் தான் வேறு சாதியில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இன்னும் பலரும் மொன்னையாக கருத்து சொல்வது மேலும் எரிச்சலைக் கிளப்புகிறது.

    பதிலளிநீக்கு
  7. வருத்தத்துக்குரிய நிகழ்வு!ஜாதி இல்லை என சொல்லி சொல்லியே ஜாதீயை வளர்த்துகொண்டே செல்லும் அரசியல் வியா தீ கள் இருக்கும் வரை இம்மாதிரி நிகழ்வுகள் தொடர்கதை தான்?

    கௌரவக்கொலை என சொல்லும் படி இம்மாதிரி அட்டூழியக்கொலைகளுக்கு கௌரவம் எங்கிருந்து வந்ததெனவும் புரியவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது புரிகிறதல்லவா இந்தியாவில் தமிழர்கள் என்ற ஒரு இனத்திலேயே ஜாதி ஏற்ற தாழ்வு பார்த்து செய்யபடும் அட்டூழியக்கொலைகள் உலகெங்கும் நடக்கும் ஒரு சாதாரண கதை அல்ல என்பது.

      நீக்கு
  8. என் மாமா பாண்டித்துரை அம்மா அன்னலட்சுமியை கைது செய்துவிட்டீர்களா?

    ஜாதி வெறியில் பெண், ஆண் சமத்துவம் கொண்ட சமுதாயம் அருமையாகவே நிலவுகிறது!

    பதிலளிநீக்கு
  9. சாதிக்க தடை சாதியே

    தாமதமான கருத்துரைக்கு மன்னிக்கவும் நண்பரே

    பதிலளிநீக்கு