எனது 61ஆம் பிறந்த நாளும், சகாயம் அய்யாவின் பெயரில் தவறாக வந்த முகநூல் பகிர்வும்!

11-05-2016 இன்று 
எனக்கு 
60வயது முடிந்து 
61தொடங்குகிறது!
அதாவது நான் 
மூத்த குடிமகன் 
ஆகிவிட்டேனாம்!
(இனிமேல் தொடர் வண்டியில் 
முக்கா டிக்கெட்!,  வங்கியில் சில சலுகைகள்!! வேறென்ன?)
எனக்கு 60வயது முடிவதால் 
வேறென்ன நடந்துவிடப்போகிறது!

என்னைப் புரிந்து 
என்போக்கில் செயல்பட விடும் 
அன்பான மனைவி!
கணவரோடும் 
என்இரு பேரன்களோடும் 
நலமே வாழும் என் மூத்த மகள்!!
தன் மனைவியோடும் 
என்பேத்தி, பேரனோடும் 
வாழும் என் மகன்!!
பொறியியல் முடித்து, 
எம்.பி.ஏ.பயிலும் என் இளைய மகள்!! 
என,
எல்லாரும் என்மேல் 
அன்பைப் பொழிகின்றனர்… 
ஏதும் குறைவில்லை!
உறவினர், நண்பர் தோழர்கள் 
காட்டும் அன்பிலும் குறைவில்லை!

ஆனாலும்…
நான்வாழும் சமூகத்தில் என்னால் என்ன கிழிக்க முடிந்தது? என்று நினைத்து அவ்வப்போது ஆற்றாமை மேலெழுவதைத் தவிர்க்க முடியவில்லை!

நான் 1973இல் பள்ளியிறுதி படித்தபோதும்,
1980களில் ஆசிரியப் பணியேற்று நடத்தியபோதும் –
உண்மையே பேசு உண்மையாக இரு
வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் 
வேறுபாடின்றி வாழ்ந்துகொள்!
சொன்ன வாக்கைக் காப்பாற்று, 
காப்பாற்றும்படியே சொல்
என்றுதான் சொல்லிக்கொடுத்தார்கள், 
நானும் அப்படியே சொல்லிக்கொடுத்து 
ஓய்வும் பெற்று இரண்டாண்டுகளாகிவிட்டன.

இப்போது நிலைமை மாறிவருகிறது.

நல்லா படிக்கணும், 
அப்பா அம்மா உறவினர் நண்பர்களுக்காக 
நல்லா வாழணும் என்றது 
எனக்கு முந்திய தலைமுறை!

நல்லா படிக்கணும் 
அப்பா-அம்மாவ 
காப்பாத்தினா போதும் என்று    
எனது தலைமுறையில் சொல்லப்பட்டது!

நல்லா படிச்சு 
உன்னைக் காப்பாத்திக்கிட்டா 
போதும்பா! என்று 
இந்தத் தலைமுறைக்குச் 
சொல்லப்படுவதைப் பார்க்கிறேன்!

உண்மைக்கான 
வாழ்க்கை விளக்கங்கள் மாறுகின்றன!!!

இதோ –
“லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து” எனும் மந்திர வார்த்தைகளோடு, தமிழ்மக்களின் நெஞ்சில் நிமிர்ந்து நிற்கும் சகாயம் அய்யா அவர்கள் சொன்னதாக ஒரு தொடர் காண்செவிக் குழுவில் இன்று வந்தது-
(அய்யாவை நமது பதிவர் விழாவுக்காக மதுரையில் நம் நண்பர்களுடன் நேரில் சந்தித்தபோது, அவர்கள், “உங்களைத்தான் தெரியுமே நண்பர்களைப் பற்றிச் சொல்லுங்கள்“ என்று இயல்பாகச் சொன்னதும், என் புத்தகங்களை அவரிடம் கொடுத்துவிட்டுப் பேசிக்கொண்டிருந்ததும் நன்றாக நினைவில் உள்ளது) அதிகார போதையேறாத அன்பும் அறிவுமான மனிதரவர்!

அவர் சொன்னதாக வந்த வார்த்தைகளில்தான் 
தமிழ்நாட்டு அரசியல் 
மாறப்போகிறதா? வீழப் போகிறதா 
என்பதே இருக்கிறது!
ஓட்டுக்கு நோட்டு வாங்காதீர்கள் என்பதுான் அவர் என்றும் சொல்லாமலே செய்து காட்டுவது அதில் மாற்றில்லை!
ஆனால் இப்போது- 
-------------------------------------------------------------------
திரு சகாயம் அவர்களின் மறுப்பு

இச்செய்தி, திரு சகாயம் அவர்களின் பெயரோடு குழுக்களில் பகிரப்படுகிறது. ஆனால் இதனை அவர் மறுத்திருக்கும் செய்தியை விகடன் வெளியிட்டுள்ளது. பார்க்க -

------------------------------------------------------------------------------------ 
ஆனால்... அவர் அப்படிச் சொல்லாவிட்டாலும்,
இதுமட்டும் நடந்துவிட்டால் ஆட்சி மாற்றம் உறுதி!
நடக்குமா என்பதுதான் இன்றைய 
–மில்லியன் டாலர்- கேள்வி!
ஆனால் என்ன அவலம்! 
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்-
“சத்தியத்தைக் காப்பாற்றுங்கள்“ என்று பாடம் நடத்தியது போக, “சத்தியத்தை மீறுங்கள்” என்று --தேசத்தைக் காப்பாற்றுவதற்காகவே என்றாலும்-- சொல்ல வேண்டிய அவல நிலையை நினைத்தால் ஆற்றாமை தான் எழுகிறது!

அரிச்சந்திரன் கதையும் நினைவுக்கு வருகிறது!
அவன் உண்மையைக் காப்பாற்றி என்ன கிழித்தான்?
அரசனின் கடமையான 
நாட்டு மக்களைக் காப்பாற்றாமல் விட்டு,
புருஷனின் கடமையான 
மனைவி மக்களைக் காப்பாற்றாமல் விற்று,
உண்மையை மட்டும் காப்பாற்றி 
என்ன சாதித்தான்? 
என்று நான் பல மேடைகளில் கேட்டிருக்கிறேன். (ஏற்கெனவே இதுபற்றி எழுதியுமிருக்கிறேன்)

அந்த வகையில் , “பொய்மையும் வாய்மை இடத்த” என்ற நம் வள்ளுவத் தாத்தன்தான் இயல்பான வாழ்வியல் உண்மையைச் சொன்னவன்! நாம் அவன்வழியினர்தானே?

அதுதான் நினைவுக்கு வருகிறது!

நாட்டைக் காப்பாற்ற சத்தியத்தை மீறலாம். 
இதுதான் எனது 61ஆவது பிறந்த நாளில் என் சிந்தனை!

இன்னும் நான்கு நாளில் வரப்போகும் தேர்தலில் மனச்சாட்சிப்படி -இருப்பதில் நல்லவர்களை இனம் கண்டு- வாக்களிக்கப்போகும் நண்பர்களுக்கு 
என் அன்பான வணக்கம்.
---------------------------------- 
திரு சகாயம் அய்யா அவர்களின் மறுப்புப்பற்றிய விகடனின் தகவலை என்னை அழைத்துச் சொன்ன நமது மதிப்பிற்குரிய திருச்சி வலைப்பதிவர் 
திரு தமிழ்இளங்கோ அவர்களுக்கு என் நன்றி.
-------------------------------------------------------

24 கருத்துகள்:

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  4. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா
    நல்லவர்களை இனம் கண்டு வாக்களிப்போம்

    பதிலளிநீக்கு
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  6. முதலாவதாக பேரனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா .நிச்சயம் ஒரு மாற்று விதி செய்வோம் அய்யா... எது வந்தாலும் உறுதியோடு இருக்கும் நெஞ்சம் இருக்கிறது தோல் கொடுக்க தோழர்கள் இருக்கிறார்கள் , மாற்றி காட்டுவோம் இந்த சமூகத்தை ,சாதி பேதமற்ற சமூகமாக , மனிதநேயமிக்க சமூகமாக , இயற்கை சமூகமாக... உங்களோடு என்றென்றும் நாங்கள் ... பி.கு ( பேரன்களுக்கு டிரீட்)

    பதிலளிநீக்கு
  7. மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...அண்ணா..

    பதிலளிநீக்கு
  8. நீங்கள் குறிப்பிட்ட குறளுக்கு அடுத்து வரும் குறளை (293) அரிச்சந்திரன் நினைத்து இருப்பாரோ...!

    தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
    தன்நெஞ்சே தன்னைச் சுடும்.....!

    பதிலளிநீக்கு
  9. இன்னொரு
    தகப்பன்..
    என்
    தவப்பயன்..

    அன்பைமட்டும்
    ஊடுருவும்
    கண்ணாடி...
    அணைத்துக்
    கொள்வதில்
    எல்லார்க்கும்
    முன்னோடி.

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  10. பிறந்தநாள்களைக் கொண்டாடும் வழக்கத்தில் நம்போன்றோர்க்கு உடன்பாடு இல்லையெனினும், நாம் வாழும் இச்சமூகத்தின் மாற்றத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகளுக்கான காலம் கரைந்து கொண்டிருப்பதை நினைவு படுத்துவதாகக் கொள்வோம்.
    பிறர்மகிழத் தாம்வாழும் நாள் நீடிக்க நல்வாழ்த்துகள்.

    வாக்களிக்கப்“பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்னும் அய்யாவின் கூற்றினை “பொய்ம்மையும் வாய்மையிடத்த“ என்னும் தமிழ்மறை வாக்கோடு ஒப்பிட்டுப் பார்க்க ஏனோ என்னால் இயலவில்லை.

    பதிலளிநீக்கு
  11. மூத்தகுடிமகன் (Senior Citizen) ஆகிவிட்ட, மரியாதைக்குரிய ஆசிரியர் நா. முத்துநிலவன் அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். உடல்நலம் பேணவும். மனநலம் காக்கவும். பொறுமை அவசியம் தேவை.

    பதிலளிநீக்கு
  12. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  13. 61 ஐத் திருப்பிப் போட்டால் என்றும் 16. வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  14. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அய்யா!

    பதிலளிநீக்கு
  15. மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. இன்னும் தொடர்ந்து பிறந்தநாள் காண வாழ்த்துகள் கவிஞரே...

    பதிலளிநீக்கு
  17. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. ஐயா..

    பதிலளிநீக்கு
  18. Happy birthday sir.
    Significant percentage of people of tamilnadu are not having option of denying money for vote. If they do, that will be taken as opposing powerful local party men. So the idea proposed here look practical. What we need to do is, we should make people understand the importance of selecting right people who is going to govern us.

    பதிலளிநீக்கு
  19. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  20. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் . இன்னும் எஞ்சியுள்ள காலத்தில் நாலு நல்லதை செய்து நலமுடன் மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  21. மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ஐயா.....

    நல்லது நடக்கும் என நம்புவோம்....

    பதிலளிநீக்கு
  22. பணிச்சுமை காரணமாக இன்று தான் வலைப்பக்கம் வந்தேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா! இந்த ஆண்டில் உங்கள் நெடுநாள் கனவான கவிதையின் கதை வேலைகள் முடிவடைந்து நனவாகவேண்டும் என வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
  23. கிட்டத்தட்ட 10 நாட்கள் கடந்த தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா/அண்ணா. ஆனால் எல்லா நாட்களும் பிறந்த நாள்தானே நாம் ஒவ்வொரு நொடியும் கற்றுக் கொண்டுதானே இருக்கின்றோம் இல்லையா! தங்கள் விருப்பங்கள் அனைத்தும் ஈடேற வாழ்த்துகள்.

    உங்கள் ஆதங்கம் சரிதான்....ஆனால் அது நடப்பதற்கு இன்னும் காத்திருக்க வேண்டும் போல....

    பதிலளிநீக்கு
  24. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    கோ

    பதிலளிநீக்கு