ரசிகர் மன்றங்கள் வெள்ள நிவாரணப் பணியில் இறங்கலாமே?



தனது மனம் கவர்ந்த நடிகர் படம் வரும்போது தெறிக்கவிடும்ரசிகர்கள், இப்போது சென்னையில் வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களைக் காக்கக் களம் இறங்கலாமே?


உண்மையில் அவர்கள் வெறும் கூத்தாடி ரசிகர்கள் அல்ல.. நல்ல கலையை ரசிப்பவர்கள், நல்லவற்றை வரவேற்பவர்கள் எனில், இந்த நேரத்தில் எப்படிச் சும்மா இருக்க முடியும்?

ஊர் ஊருக்கும் அவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று பல அரசியல் கட்சிகளே அஞ்சுவதும், தேர்தலை ஒட்டிக் கெ(ா)ஞ்சுவதுமாக இருப்பது உண்மையெனில்... இப்போது களம் இறங்காமல் வேறு எப்போது?

கைக் காசு போட்டு, மற்றவர்களிடமும் பணம் திரட்டித் திரையரங்கையே அதகளம் செய்யும் அவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்லவே? விழா நடத்த மட்டும்தான் பணம் திரட்ட வேண்டுமா? வெள்ளநிவாரப் பணிக்கும் செய்யலாமே?
>


ரசிகர் மன்றங்களைத் தன் படம் வரும்போது மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் நடிகர்பெருமக்கள் இப்போது இவர்களை மக்கள் பணியில் ஈடுபடுத்தக் கூடாதா?


சும்மா அவர்களோடு போய், படமெடுத்துக் கொண்டு விழாக்களில் கலந்துகொள்ளும் மன்றத் தலைவர்களும் ஏன் அரசியல் தலைவர்களும் அட வாங்கப்பா இப்ப இந்தவேலைதான் முக்கியம்என்று அழைக்கலாமே?


கோயில் கட்டுவதென்ன? விரலைவெட்டிப் பிறந்தநாள் பரிசு அனுப்புவதென்ன? கோயில் பூஜையைத் தாண்டி அலகுகுத்திக் காவடி எடுப்பதென்ன? என்று நடிகர்களின் மகிழ்ச்சிக்காக ஏதேதோ செய்யும் ரசிகப் பெருமக்கள் மக்கள் துயரத்தில் பங்கேற்க இதுவல்லவா சரியான நேரம்?

நடிகர்கள் ரஜினிகாந்த் ரூ.10 லட்சமும், சூர்யா, கார்த்தி ரூ.25 லட்சமும், விஷால் ரூ.10 லட்சமும், விக்ரம் பிரபு ரூ.5 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ.5 லட்சமும் வழங்கியுள்ளனர். 
தனுஷ் ரூ.5 லட்சமும், சத்யராஜ், சிபிராஜ் ரூ.2 லட்சத்து 25 ஆயிரமும் வழங்கியுள்ளனர்.
என்று செய்திகள் தெரிவிக்கின்றன.. சரிதான்.. ஆனால்...

வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ராஜ்கிரணை 

ராணுவத்தினர் கயிறு கட்டி மீட்ட படத்தை வாட்ஸப்பில் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது!
(வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ராஜ்கிரண்)
எனில், தனது நடிகர்சங்கத்தினரையாவது களத்தில் இறக்கி, தலைவர் நடிகர் விஷால் 
அவசர நிவாரணப் பணியாற்றத் 
தனது ரசிகர்களுக்காவது ஆணையிடலாமே

வீட்டுக்குள் பாதுகாப்பாக இருப்பது வெட்கமாக இருக்கிறது என்றால் வெளியே தன் ரசிகர்மன்றப் பிள்ளைகளோடு பணியாற்ற வேண்டாமென்று கமலை யார்தடுத்தது?

ராகவா லாரன்ஸ் கூட ஒருகோடி ரூபாய் தந்திருக்கும்போது தான் 10லட்சம்தான் தந்திருக்கிறோம் என்று ரஜினி சங்கடப்பட்டால் (?) தன் ரசிகர்படையை அனுப்பினால் போதாதா? பலகோடிப் பணியாற்ற?

நான் ஒன்றும் விளையாட்டாகக் கேட்கவில்லை.
சென்னை ஐயப்பன்தாங்கலில் ஒரு முதியோர் இல்லத்தில் 12பேர் வெள்ளத்தில் சிக்கி, இறந்துபோய்,
அடக்கம் செய்யக் கூட முடியாமல் அவர்கள் பட்ட துயரத்தை அறிந்தபோது எழுந்த கேள்வி இது.

(இந்தப் பதிவைப் பார்த்த நம் நண்பர்களில் பலர், நடிகர்களின் நன்கொடைப் பட்டியலோடு, நடிகர் சித்தார்த் உள்ளிட்ட சிலரின் நேரடி உதவிகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.
இருக்கலாம்... நான் மறுக்கவில்லை, ஆனால், அவரவர் படங்கள் வெளிவரும்போது இந்த ரசிகர்கள் படுத்தும் அலப்பறை அளவில் ஐந்து விழுக்காடாவது இந்த அவசரநேரத்தில் செய்த உதவி இருந்ததா? அல்லது
அமைப்பு ரீதியாகத் திட்டமிட்டுச் செய்ய வேண்டிய பணிகளை முடுக்கிவிட்டார்களா எனில்...? நா.மு.09-12-2015)

செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

9 கருத்துகள்:

  1. நல்ல சவுக்கடி கேள்விகள் கவிஞரே... நேரமிருப்பின் இதேபோல் இருக்கும் எனது இன்றைய பதிவு இயற்கையின் நியதி படித்துப்பாருங்கள்
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  2. Sir, please be updated with fan pages of Vijay and agith, they're having major part in rehabilitation and relief activities right now,while government posting stickers on goods collected from public

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா! இது நலல் செய்திதான். அந்த விவரத்தை நான் அறிய வில்லையே நண்பரே! ஊடகங்களில் வந்து நானறியவி்ல்லையா? சற்றே அறியத் தாருங்கள் நன்றி

      நீக்கு
  3. ம்ஹூம்.....எங்களை நாங்களே பாராட்டிக்கொள்ள விழா எடுப்போமே தவிர நாங்களோ எங்கள் ரசிகர்களோ சேற்றில் இறங்கி களப்பணி செய்யமாட்டோம் மாறாக அறிக்கை மட்டுமே விடுவோம் நாங்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு வெட்கப்படுவோம்.

    பதிலளிநீக்கு
  4. தொண்டர்களை
    கடவுளின் பிள்ளைகளாக
    வணங்குகின்றேன்

    வானிலிருந்து - கடவுள்
    தன் திருவிளையாடலைக் காட்ட
    தரையிலிருந்து - மக்கள்
    துயருறும் நிலை தொடராமலிருக்க
    கடவுளைத் தான் வேண்டுகிறேன்...

    போதும் போதும் கடவுளே! - உன்
    திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

    கடவுளே! கண் திறந்து பாராயோ!
    http://www.ypvnpubs.com/2015/12/blog-post_6.html

    பதிலளிநீக்கு
  5. இல்லை ஐயா... ரசிகர் மன்றங்கள் களத்தில் தான் இருக்கின்றன... விசால்,கார்த்தி,சித்தார்த்,பாலாஜி என நடிகர் சங்கத்தின் பணி அளப்பறியது... செய்திகளில் வந்ததே..?

    பதிலளிநீக்கு
  6. அறிவொளி நாட்களுக்கு சற்றே முன்பாக பி ஜி வி எஸ் கலைக்குழுவுக்கான கலைப்பயண ஏற்பாடுகளின் போது விருது நகரில் கமல் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களது ஆதரவில் சில நோட்டீஸ்கள் பெற்று வினியோகித்தோம். அது ஒரு கனாக்காலம்.இப்போதுள்ள ரசிகர்கள் பால் பாக்கெட்டை கட் அவுட்டின் மீது வீசியடிக்கிறார்கள்.என்ன செய்ய.

    பதிலளிநீக்கு
  7. கமல் ரசிகர்கள் உதவிப் பணியில் இருப்பதாக கேள்வி

    பதிலளிநீக்கு