உமாமகேஸ்வரி ஏன் கொலைசெய்யப் பட்டார்?


பொறியாளர் உமா மகேஸ்வரி



சிதைந்து 
நாறிக்கிடந்தது    
உமாஎனும் பெண்ணல்ல,  
அழுகிப்போன 
நம் சமூகம்தான்! 

சேலம், ஆத்தூர் ஜோதி நகர் வரதராஜ புரம் பாலசுப்பிரமணி, ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் மகள் உமாமகேஸ்வரி(23)
சென்னை கேளம்பாக்கம் சிறுசேரி சிப்காட் டி.சி.எஸ். மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர். 
கடந்த 13-ஆம் தேதி அன்றிரவு “காணாமல் போன“ இவர், 22-ஆம் தேதி சனிக்கிழமை சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்கா அருகே உள்ள முட்புதரில் அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
உமாமகேஸ்வரியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்து, அடிவயிறு ஆகிய இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. இதனால் உமாமகேஸ்வரி கற்பழித்து, கழுத்தறுத்து, குத்தி, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

உமா கொலையாளிகள்
சரி இப்போது நம் கேள்விக்கு வருவோம் –
உமா மகேஸ்வரி ஏன் கொலைசெய்யப்பட்டார்?
இந்தக் கேள்விக்கு “வக்கிரம் பிடித்தவர்களின் காமவெறிதான்“ என்று ஒற்றை வரி பதிலை எளிதாகச் சொல்லிவிட்டுப் போக முடியாது.
கொலைகாரப் பாவிகளைக் கண்டுபிடித்துக் கொண்டுவந்து விட்டார்கள், நீதிமன்றத்தில் நிர்பயா, வினோதினி வழக்குப் போலவே தண்டனை தரப்படலாம், தரப்படும்.
ஆனாலும் -
தன் அன்புமகளை இழந்த தந்தைக்கும் 
அவரது குடும்பத்திற்கும் 
இந்தச் சமூகம் 
என்ன ஆறுதலைத் தந்துவிட முடியும்?
வார்த்தைகள் வலிமையிழந்து,
உமாவின் உடலைப் போலவே...
சிதைந்து கிடக்கின்றனவே!

எனக்குள் சில கேள்விகள் எழுகின்றன.
(1)  சமூகத்தில் அந்தஸ்து மிகுந்த  BE படிப்புப் படித்த உமாவுக்கே இந்தக் கதி என்றால், படிப்பறிவு இல்லாத, ஏழைத் தொழிலாளியாக இருக்கும் கிராமத்துப் பெண்கள் கதி என்னவாக இருக்கும்?
(2)  ஊடக வெளிச்சம் மிகுந்த சென்னையில், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் உமாவுக்கே இந்தக் கதியென்றால், செல்போன் தெரியாத, மின்சாரமே இல்லாத பெண்கள் கதி என்னவாக இருக்கும்?
(3)  தொழில்நுட்பப் பூங்கா அருகிலேயே ஒன்பதுநாள்கள் இந்தப் பெண் பிணமாகக் கிடந்திருக்கிறாள் என்றால், தகவல் தொழில்நுட்பமற்ற, விஞ்ஞானத்தின் விரல்நுனியும் படாத கிராமங்களில் என்ன நடக்கும்?
(4)  ஊடக வெளிச்சத்திற்கு வந்து ஊரே திரண்டு போராடிய பின்னர்தான் டெல்லி “நிர்பயா“விற்கே நியாயம் கிடைத்தது மறந்துவிட்டதா? அல்லது நினைவே இல்லையா? இரண்டிற்கும் ஏன் தொடர்பில்லாமல் போனது?

இதற்கெல்லாம் நான் எங்குபோய் 
எந்த “கூகுள்சர்ச்“சில் விடைதேட?

பெண்களைப் பற்றிய ஆண்களின் பார்வையில் மாற்றம் வந்தாலன்றி இந்தக் கற்பழிப்பும் கொலையும் நடந்துகொண்டுதானே இருக்கும்?

கற்பழிப்பு என்பதென்ன?
உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் “தான் உயர்ந்தவன்“ என்னும் ஆணின் பொதுவான நினைப்பு அடிநாதமாக, “எனக்கு விருப்பமானதை நான் எடுத்துக்கொள்வேன்“ என்னும் அதிகார அடிமனம்...
ஒரு பொருளை எடுப்பதற்கும், பெண்ணின் விருப்பமில்லாமல் அவளைத் தொடுவதற்கும் பெரிய வேறுபாடு தெரியாத ஆதிக்க மரபு மனநிலை....
அடுத்தவர் கருத்துக்கு மதிப்பளிக்காத, ஜனநாயக விரோத மனப்பான்மையின் உடல்ரீதியான வக்ர வெளிப்பாடு...
இதில் பெண் அணிந்திருக்கும் ஆடைதான் ஆண்களைத் தூண்டுகிறது என்பதெல்லாம் மழுப்புதலன்றி வேறில்லை.

“கற்பெனப் படுவது சொல்திறம்பாமை“ என்ற கருத்தும் “பெண்ணுக்கு மட்டும்“என்பதில் தொடங்குகிறது ஆதிக்க மனோபாவம்! இதில், 
“கற்புநிலையென்று சொல்ல வந்தார் – இரு 
 கட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்என்ற பாரதிதாசன்தான் ஓரளவு சரியாக நிற்கிறான். 
பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு’ என்ற பாரதியும்- அதில் எவ்வளவு காதல் வெளிப்பாடு இருந்தாலும் – தவறு செய்தவன்தான்!

இதனால்தான் பெண்ணுரிமையாளர்கள் “கற்பழிப்பு“ என்பதைத் தவிர்த்து, “பாலியல் வன்கொடுமைஅல்லது “வன்புணர்வுஎன்பன போலும் புதிய சொல்லாட்சிகளைக் கையாள்கிறார்கள். (இதையும் எல்லா ஊடகங்களும் இன்னும் நடைமுறைப் படுத்திவிடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது) வேலை பார்க்கும் இடங்களிலும், வழியிலும்,  பெண்களுக்குப் பாதுகாப்பில்லாமல் “மிகஉயர்ந்த சம்பளம்தரும்“ கம்பெனிகள் நடக்கின்றன... 
கேடுகெட்ட இந்த உலகத்தைப் பற்றிய எச்சரிக்கையோ கவனமோ இல்லாமல்தான் நம் பிள்ளைகளை நாம் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். இப்படியான இந்த சமூகத்தை மாற்றவேண்டும் என்று நாமும் நினைப்பதில்லை, பிள்ளைகளையும் அப்படி வளர்ப்பதில்லை. 

இப்படி எல்லாமாகச் சேர்ந்து, பெண்களைப் பற்றிய வக்ரப்பார்வைகளை அனுமதிக்கும் பாடலை ரசித்து, கவிதையில் மகிழ்ந்து, செய்தியில் இணங்கி, வரலாற்றில் நனைந்து, தன் ருசி ஒன்றையே கருதும் சுயநலத்தில் கிடந்து பணம் காசு போலவே பெண்ணின் உணர்வும் பறிக்கத்தக்கது என நம்பி, பெண்ணை ஒரு மனிதப்பிறவி என்றே கருதாத மனநிலை இருக்குமவரை உமா மகேஸ்வரிகள் ஒன்பதுநாள் பிணமாகக் கிடப்பதும் நடக்கத்தான் செய்யும். 
இது எனது சாபமல்ல. இன்றைய நிதர்சனம்.

நிர்பயா, வினோதினி, உமாமகேஸ்வரிகளை வெறும் செய்தியாக மட்டும் பார்க்காமல், தன் மகள், தங்கை, மனைவி, தாய் பாதிக்கப்படும்போது வரும் மனநிலையில் பாதியாவது உங்களுக்கு வரப்பெற்றால்-
கைகொடுங்கள்.
நீங்கள் மனிதராகவே இருக்கிறீர்கள்
வாழ்த்துகள்.
மனிதம் வளர்ப்போம். வாருங்கள். 
-------------------------------------------------------------- 
ஆசிரியர் உமாமகேஸ்வரி
பி.கு. கடந்த 09-02-2013 அன்று, சென்னையில், இதே பெயருள்ள உமாமகேஸ்வரி என்னும் பள்ளி ஆசிரியர், இந்திப்பாடத்தைச் சரியாகப் படிக்காத  தனது மாணவன் ஒருவனாலேயே வகுப்பறையிலேயே குத்திக் கொலை செய்யப்பட்டார். அது பற்றி நான் எழுதிய ஒரு கட்டுரையை இப்போது நீங்கள் படிக்க வேண்டுமாய் நட்புடன் வேண்டுகிறேன். இணைப்புக்குச் செல்ல........ 
- http://valarumkavithai.blogspot.in/2012/03/blog-post_10.html

20 கருத்துகள்:

  1. பகிர்வுக்கு நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரா!

    கல்வி, செல்வம், வீரம் எல்லாம் நமக்கு கிடைக்கின்ற வரப்பிரசாதம். எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடுவதில்லையே. கிடைத்தவைகளை. ஏன் தவறாக பயன் படுத்த எண்ணவேண்டும். நல்லவழிக்கு மட்டும் பயன் படுத்தும் எண்ணத்தை வளர்ப்பது அவசியம் என்பதை ஏன் உணர்வதில்லை. வலிமையையும் திறமையையும் தவறாக பயன்படுத்துவது வேதனையே. அரசியல்வாதிகளும் நகர் காவலர்களுமே பதவிகளை துஷ்பிரயோகம் செய்யும் போது நாம் என்ன செய்யமுடியும்.

    அலைபாயும் எண்ணங்களை சொற்பொழிவுகள் பக்தி ரசம் ஊட்டும் கதைகளை அவ்வப்போது கூறி மட்டுப்படுத்தி வைத்தார்கள். இப்போது எல்லாம் யார் கேட்கிறார்கள் அதை எல்லாம் கேளிக்கைகள் கூத்துகள் கோவில்களில் மட்டும் தானே, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு வளர்ப்பதாய் அல்லவா அமைந்தது, இப்போது அப்படி இல்லையே. தீய எண்ணங்கள் வளரும் படியாய் தான் எல்லாம் அமைகின்றன.
    இந்நிலை மாறவேண்டும். சமூகநலன் கொண்ட பதிவு நன்றே நியாயமான ஆதங்கம் சகோதரரே நன்றி ! வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”தீய எண்ணங்கள் வளரும் படியாய் தான் எல்லாம் அமைகின்றன.
      இந்நிலை மாறவேண்டும்” - வீடும் கல்விநிலையச்சூழலும், சமூகச் சூழலும் மாற வேண்டும். முக்கியமாக, நமக்கு(பெற்றோருக்கு) தன் பிள்ளை நிறைய மதிப்பெண் எடுத்து கைநிறைய(?) சம்பாதிக்கும் வேலைக்குப் போகவேண்டும் என்பதை விட நல்லபெயரெடுத்து, சமூக மதிப்புடன் வாழவேண்டும் என்னும் உணர்வு வர வேண்டும். நன்றி சகோதரி

      நீக்கு
  3. தனி மனித ஒழுக்கம் இருக்க வேண்டும்... வளரவும் வேண்டும்... அது ஒன்றே பலவற்றிக்கு தீர்வு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒழுக்கம் என்பதென்ன? சாக்கடை அருகில் கொசு ஒழிப்பு மருந்தடிப்பதல்ல.. சாக்கடையைச் சுத்தம்செய்வது. பொதுநல உணர்வுகலந்த சுயநலம் தவறல்ல. சுயநலமே கெட்டிக்காரத்தனம் என்பதுதான் சமூகஒழுக்கம் கெடுவதற்கான முக்கியக் காரணம்.

      நீக்கு
  4. அழுகிப் போனது நம் சமூகம்தான் என்பதில் சந்தேகமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரையோடிவிட்ட புண்ணுக்கு சாதரண மருந்து சரிவராது... அறுவைச்சிகிச்சைதான்... நல்ல மருத்துவர் கிடைக்க வேண்டும். (இதற்கெல்லாம் காப்பீடு எங்கே கிடைக்கும். நாம்தான்...) நன்றி

      நீக்கு
  5. சொல்றவங்க சொல்லிக்கிட்டே இருக்காங்க...தீமை செய்றவங்க செஞ்சுகிட்டே இருக்காங்க.. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “சொல்லுறத சொல்லிப்புட்டேன்
      செய்யிறத செஞ்சிடுங்க,
      நல்லதுன்னா கேட்டுக்கங்க
      கெட்டதுன்னா விட்டுடுங்க” -
      நீங்கள் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும்சரி, பட்டுக்கோட்டைதான் நான் பிறந்த ஊர். நன்றி சகோதரி

      நீக்கு
  6. கற்பு இருவருக்கும் பொது என பேசத்தொடங்கினால் அப்போ நீ அதை பின்பற்ற மாட்டாயா? என கண்மூடித்தனமாக கேட்பவர்களை என்ன செய்வதண்ணா? நகரத்தின் மையத்தில் ஒரு பிணம் கவனிக்க படாமல் இருப்பதென்பது நகரத்தில் தான் இது சாத்தியம் கிராமத்தில் ஊர் நடுவே ரெண்டுநாள் இப்படி இருந்தாலே அதிசயம். உண்மையில் பணம் பண்ண மட்டுமே படிக்கும் சிலர் படிப்பை ஒரு முகமூடியாக பயன்படுத்துகிறார்களோ? பெண்ணுக்கு உரிமை கொடுக்கவேண்டும் என்ற எண்ணமே மாறவேண்டும். ஆண்கள் கொடுத்து பெண்கள் உரிமை பெறவேண்டும் என்ற சிந்தனையே தன் கை மேலே இருக்கிறது என்ற மனப்பான்மையின் வெளிப்பாடு தானே ? அவர்கள் உரிமையை நிலைநாட்டிக்கொள்ள நாம் இடையுறு செய்யக்கூடாது என ஆண்கள் குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர் கற்பிக்கவேண்டும் என்றே கருதுகிறேன்.//மன்னர்கள் தான் முதலாம், இரண்டாம் என அழைக்கபடவேண்டுமா? இதோ கவிஞர் இரண்டாம் பட்டுக்கோட்டையார் !!!//

    பதிலளிநீக்கு
  7. 'பெண்ணுக்கு உரிமை கொடுக்கவேண்டும் என்ற எண்ணமே மாறவேண்டும். ஆண்கள் கொடுத்து பெண்கள் உரிமை பெறவேண்டும் என்ற சிந்தனையே தன் கை மேலே இருக்கிறது என்ற மனப்பான்மையின் வெளிப்பாடு தானே ?' - மிகவும் சரியாகச் சொன்னாய் மைதிலி. “அவர்கள் உரிமையை நிலைநாட்டிக்கொள்ள நாம் இடையுறு செய்யக்கூடாது என ஆண்கள் குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர் கற்பிக்கவேண்டும்“ என்பதும் மிகச்சரி. இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். சரியாக எழுதிவிட்டாய். மற்றபடி இரண்டாம், மூன்றாம் குலோத்துங்க சோழன் எல்லாம் சரியல்ல. அவரவரும் அவரவர்க்கு உரிய இடத்தைப் பெறவேண்டும். சரியா?

    பதிலளிநீக்கு
  8. தங்களின் இரண்டு கட்டுரைகளையும் படித்தேன். ரெயில்வே பணிமனைகளில் எழுதப்பட்டு இருக்கும் “ SAFETY FIRST ” என்ற வாசகம்தான் நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் பிள்ளைகளுக்கும் சொல்லவேண்டியிருக்கிறது. சமூகத்திற்கும் உரத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. நன்றி அய்யா. தங்களின் அறுபதாம் ஆண்டு நிறைவின் பின் உற்சாகமாகப் பணிகள் தொடரட்டும். வணக்கம்

      நீக்கு
  9. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்
    பைங்கூழ் களை கட்டதனோடு நேர்.

    தகாதனவற்றைச் செய்து மக்களுக்கு அச்சுறுத்தலாகத் திரியும் கொடியோர்களை அரசன் - கடுமையாகத் தண்டித்தலானது - பசும் வயலில் முளைத்த களைகளைப் பிடுங்கி அப்புறப்படுத்துவதைப் போன்றது.

    சொல்லுறத சொல்லிப்புட்டேன் - என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லிச் சென்றார்.

    கூடவே, ’’மெய்ப்பொருள் காண்பது அறிவு!..’’ - என்றும் சொன்னாரா!.. அதனால் - மெய்ப்பொருள் என்று பொய்ப்பொருளைக் கண்டு கொண்டார்கள்.

    கொற்றமும் கொடியும் குடையும் - குற்றங்களால் உயரும் போது குற்றங்கள் கூடிக் குலவையிட்டு - குதுகலித்துத் திரிகின்றன.

    முன்பெல்லாம் - மதுப்பழக்கம் உள்ளவன் என்றால் அவனுக்கு பெண் கிடைப்பது அரிது. ஆனால் - இன்று,

    திருமணத்திற்கு முதல் நாள் மணமகனே முட்டக் குடித்து விட்டு மறுநாள் விடியலில் - ஒரு பெண்ணின் வாழ்வை இருட்டாக்கி விடுகின்றான்!..

    தாய் தந்தையர் மற்றும் உற்றார் உறவினர் எல்லாம் முன்மாதிரி எனத் திகழ்ந்தனர் ஒரு காலத்தில்!.. இன்று உற்றாரும் மற்றோரும் அற்றுப் போன சமுதாய அரங்கில் -

    சாக்கடைச் சகதிகள் நறுமணப் பொருளாகியதே வேதனை!..

    மனம் வலிக்கின்றது ஐயா.. தங்களுடைய பதிவைப் படித்ததும்.

    சென்ற ஆண்டு விநோதினியைக் கொடூரமாகக் கொன்ற கயவன் - இன்று நிம்மதியாக சிறையில் ..

    ஆனால், விநோதினியை இப்போது நினைத்தாலும் என் கைகால்கள் வெலெவெலெத்துப் போகின்றன..

    அன்றைக்கு என் தளத்தில் விநோதினிக்கு அஞ்சலி செய்த போது என் மனதில் இருந்த வேதனை.. வெதும்பல்.. அவை - இப்போதும்..

    தனியொரு மனிதன் திருந்தி விட்டால்
    சிறைச் சாலைகள் தேவையில்லை!..

    ஆனால் - திருந்தவும் விடமாட்டார்கள். திருத்தவும் மாட்டார்கள்.

    ’’ நெருப்பு வளையத்திற்குள் கற்பூரத் துண்டு..’’ - இது அன்றைக்கு மதுக்கடைகளைத் திறப்புக்கு சொல்லப்பட்ட அலங்கார வார்த்தை!..

    நாம் - நம்மை விட்டுப் போய்க் கொண்டிருக்கின்றோம்.
    சுற்றி நடக்கும் விஷயங்களில் இருந்து - எதையும் கற்றுக் கொள்வதேயில்லை.

    பதிலளிநீக்கு
  10. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
    களை கட்டதனோடு நேர்..

    ஆனால் -
    கொற்றமும் கொடியும் குடையும் - குற்றங்களால் உயரும் போது, குற்றங்கள் கூடிக் குலவையிட்டு - குதுகலித்துத் தானே திரியும்!..

    மெய்ப்பொருள் காண்பது அறிவு - என்று எடுத்துரைத்தார் வள்ளுவர். ஆனால், இவர்கள் கண்டு கொண்டது - பொய்ப் பொருளை அல்லவா!..

    முன்பெல்லாம் - குடிகாரன் எனில், மண வாழ்க்கைக்குப் பெண் கிடைப்பது அரிது. ஆனால் இன்றைக்கு -

    திருமணத்திற்கு முதல் நாள் இரவில் - முட்டக் குடித்து விட்டு, மறுநாள் விடியலில் ஒரு பெண்ணின் வாழ்வை - இருட்டாக்கி விடுகின்றான்.

    தனியொரு மனிதன் திருந்தி விட்டால்
    சிறைச்சாலைகள் தேவையில்லை!..

    ஆனால் - இவர்கள் திருத்தவும் மாட்டார்கள். திருந்த விடவும் மாட்டார்கள். காரணம் -

    நெருப்பு வளையத்திற்குள் கற்பூரத் துண்டு!.. - இந்த அலங்காரத்துடன் தான் அன்றைக்கு மதுக் கடைகள திறக்கப்பட்டன.

    மனம் வலிக்கின்றது ஐயா.. தங்களை பதிவு கண்டு..

    சென்ற வருடம் - விநோதினி கொடூரமாக அமிலத்தால் அழிக்கப் பட்டாள். அன்றைய வேதனையும் வெதும்பலும் மீண்டும் இப்போது..

    சமுதாயம் தன்னை இழந்து கொண்டிருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  11. எத்தனை நிர்பயாக்களும் உமா மகேஸ்வரிகளும் வந்தாலும் இந்த சமூகம் திருந்தாதற்கான காரணங்களை ஆராய வேண்டிய முக்கியமான நிலையில் நாமுள்ளோம். இந்த தவறு செய்தால் இப்படிப்பட்ட கொடுமைகளை அனுபவிக்க வேண்டும் என்பதை நினைக்கும் வகையில் தண்டிக்க வேண்டும் அவர்களை!!

    பதிலளிநீக்கு
  12. "தன் அன்புமகளை இழந்த தந்தைக்கும்
    அவரது குடும்பத்திற்கும்
    இந்தச் சமூகம்
    என்ன ஆறுதலைத் தந்துவிட முடியும்?" என்ற
    கேள்விக்கு நல்ல தீர்வு தேவை!

    பதிலளிநீக்கு