சில நல்ல கவிஞர்களின் சில நல்ல கவிதைகள்

நல்ல கவிதைகளைப் படைக்க விரும்புவோர்
எடுத்துப் படிக்கவேண்டிய 
சிலநல்ல கவிஞர்களின் 
சில நல்ல கவிதைகள்  -ஒருசோற்றுப் பதம்

எனது முந்திய பதிவு பார்த்த பலரும் கேட்டதற்கிணங்க ஒருசிலவற்றை இணையத்தில் தேடித்தருகிறேன். நானே மீன்பிடித்துத் தரக்கூடாது என்பதால், (நன்றி விஜய்(?)) நான்பிடித்த மீன்களுடன், மீன்பிடித்த வலையை உங்களிடம் தருகிறேன் நீங்களே வீசிப்பாருங்கள் 
 --------------------------------------------------------------------------- 
சிறுமியும் தேவதையும்  - வைரமுத்து
திடீரென்று...
மேகங்கள் கூடிப்
புதைத்தன வானை

ஒரே திசையில் வீசலாயிற்று
உலகக் காற்று

பூனையுருட்டிய கண்ணாடிக்குடமாய்
உருண்டது பூமி

மருண்டது மானுடம்
அப்போதுதான்
அதுவும் நிகழ்ந்தது

வான்வெளியில் ஒரு
வைரக்கோடு

கோடு வளர்ந்து
வெளிச்சமானது

வெளிச்சம் விரிந்து
சிறகு முளைத்த தேவதையானது

சிறகு நடுங்க
தேவதை சொன்னது:

''48 
மணி நேரத்தில்
உலகப்பந்து கிழியப் போகிறது

ஏறுவோர் ஏறுக என்சிறகில்
இன்னொரு கிரகம் எடுத்தேகுவேன்

இரண்டே இரண்டு
நிபந்தனைகள்:
எழுவர் மட்டுமே ஏறலாம்

உமக்குப் பிடித்த ஒரு பொருள் மட்டும்
உடன்கொண்டு வரலாம்''

* * * * *
புஜவலியுள்ள இளைஞன் ஒருவன்
சிறகு நொறுங்க ஏறினான்

அவன் கையில்
இறந்த காதலியின்
உடைந்த வளையல்
முதல் முத்தத்து ஞாபகத்துண்டு

* * * * *
'
இன்னொரு கிரகம் கொண்டான்
என்றென்றும் வாழ்க'
கொட்டிமுழங்கும் கோஷத்தோடு
சிறகேறினார் அரசியல்வாதி

தங்கக் கடிகாரம் கழற்றியெறித்து
களிம்பேறிய கடிகாரம் கட்டிக்கொண்டார்

உள்ளே துடித்தது -
சுவிஸ் வங்கியின்
ரகசியக் கணக்கு.

* * * * *
இறந்துவிடவில்லையென்ற சோகத்தை
இருமி இருமியே
மெய்ப்பித்துக் கொண்டிருக்கும்
நோயாளி ஒருவர்
ஜனத்திரள் பிதுக்கியதில்
சிறகொதுங்கினார்

அவர் கையில் மருந்து புட்டி

அதன் அடிவாரத்தில்
அவரின்
அரை அவுன்ஸ் ஆயுள்

* * * * *

அனுதாப அலையில்
ஒரு கவிஞனும் சிறகு தொற்றினான்

ஜோல்னாப் பையில் -
அச்சுப் பிழையோடு வெளிவந்த
முதல் கவிதை

* * * * *
தன் மெல்லிய ஸ்பரிசங்களால்
கூட்டம் குழப்பி வழிசெய்து
குதித்தாள் ஒரு சீமாட்டி

கலைந்த ஆடை சரிசெய்ய மறந்து
கலைந்த கூந்தல் சரிசெய்தாள்

கைப்பையில்
அமெரிக்க வங்கிக் கடன் அட்டை

* * * * *
கசங்காத காக்கிச் சட்டையில்
கசங்கிப்போன ஒரு போலீஸ்காரி
லத்தியால் கூட்டம் கிழித்துப்
பொத்தென்று சிறகில் குதித்தாள்

லத்தியை வீசியெறிந்தாள் - ஒரு
புல்லாங்குழல் வாங்கிக் கொண்டாள்

* * * * *
'
ஒருவர்
இன்னும் ஒரே ஒருவர்'
என்றது தேவதை

கூட்டத்தில்
சிற்றாடை சிக்கிய சிறுமியருத்தி

பூவில் ரத்தஓட்டம்
புகுந்தது போன்றவள்
செல்ல நாய்க்குட்டியோடு
சிறகில் விழுந்தாள்

'
நாய்க்குட்டியென்பது
பொருள் அல்ல - உயிர்
இறக்கிவிடு'
என்றது தேவதை

'
நாய் இருக்கட்டும்
நானிறங்கிக் கொள்கிறேன்'
என்றனள் சிறுமி

சிறகு சிலிர்த்தது தேவதைக்கு
சிலிர்த்த வேகத்தில்
சிதறிவிழந்தனர் சிறகேறிகள்

வான் பறந்தது தேவதை
சிறுமியோடும் செல்ல நாயோடும்.
------------------------------------------------------------------------------------  -
அப்துல் ரகுமான் கவிதை
விடிந்ததென்பாய் நீ அனுதினமும்  வான்
                 வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை  இங்கு
               முடிதல் என்பது எதற்குமில்லை
மணந்தேன் என்பாய் சடங்குகளும்  வெறும்
               மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால்  உடல்
              இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.


கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
             காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? – வெறும்
            பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல
குளித்தேன் என்பாய் யுகயுகமாய்  நீ
            கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே  நீ
           அளித்த தெதுவும் உனதல்ல

உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய்  வெறும்
            உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய்  ஒரு
          வினாவாய் நீயே நிற்கின்றாய்
தின்றேன் என்பாய் அணுஅணுவாய்  உனைத்
          தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பர் மனிதரெல்லாம்  பெறும்
         வெற்றியிலே தான் தோற்கின்றார்

ஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய்  உன்
                  அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய்  உனைக்
                 கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய்
நான் என்பாய் அது நீயில்லை  வெறும்
                  நாடக வசனம் பேசுகிறாய்
ஏன்’? என்பாய் இது கேள்வியில்லை  அந்த
                 ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு ? 
------------------------------------------------------------------------------------   
இன்னொரு மனிதன் - தங்கம்மூர்த்தி
மிருகங்களோடு
பழகினான்
மனிதன்.
மிருகங்களிடத்தில்
மனிதநேயமும்
மனிதர்களிடத்தில்
மிருகத்தனங்களும்.

இயந்திரங்களோடு
பழகினான் 
மனிதன்.
இயந்திரங்களிடத்தில்
மனித ஆற்றலும்
மனிதர்களிடத்தில் 
இயந்திரத்தனங்களும்.

இயற்கையோடு 
பழகினான் 
மனிதன்.
இயற்கையிடத்தில
மனித குணங்களும் 
மனிதர்களிடத்தில் 
செயற்கைத்தனங்களும்.

மனிதன் 
பழகவேயில்லை
இன்னொரு மனிதனிடம்.

------------------------------------------------------------------------------------   

நானும்  நீயும் - ஜெயபாஸ்கரன்
நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்
அடக்கமாக எனக்குப் பின்னால்
நின்று கொண்டிருப்பாய் நீ

உன் இனத்துக் கற்புக்கரசிகளைச் சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல் தெரிந்தும்
அமைதியாய் இருப்பாய் நீ

நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய
சொல்லிக் கொள்வதில்லை நான்
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாக வேண்டும் நீ

எனக்குப் பிறகு என் நினைவுகளோடு
வாழவைக்கிறார்கள் உன்னை
உனக்குப் பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை.
ஜெயபாஸ்கரன்.


 ------------------------------------------------------------------------------------  
பிதாவே எங்களை மன்னியும்!  - புதியமாதவி 
பரமப்பிதாவே.. எங்களை மன்னியும் 
பிழைத்திருப்பதற்க்காக 
நன்றி சொல்ல 
எங்களால் முடியாது. 
பிழைத்திருப்பதே 
பிழையாகிப்போனதால் 
அச்சுப்பிழையில் 
அர்த்தமிழந்துவிட்டது உன் வாசகம். 

பரமப்பிதாவே எங்களை மன்னியும் 
கோழிமிதித்து குஞ்சுகள் மாண்டன 
கருவறையே கல்லறையானது 
முலைப்பாலில் உயிர்க்கொல்லி 
ஒப்பாரியில் உன் சங்கீதம். 
பரமப்பிதாவே... 
எங்களை மன்னியும்..! 

பரமப்பிதாவே.. எங்களை மன்னியும் 
இப்போதாவது- 
உயிர்த்தெழுவது எப்படி என்பதை 
எங்கள் துடுப்புகளுக்கு 
சொல்லிக்கொடும்.. 
உடைந்தப் படகுகளிலிருந்து 
விரியவேண்டும் எங்கள் வலைகள். 
புதியமாதவி, - http://www.vaarppu.com/view/327/
------------------------------------------------------------------------------------  
கல்பனா சாவ்லா – ஆர்.நீலா
உயரங்களின் காதலி நீ!
எல்லோரும் கைகளோடு பிறந்தார்கள்,
நீ சிறகுகளோடு பிறந்தாய்!
உடம்போடும் விண்ணுலகம் சென்ற
திரிசங்கு நீதான்!
போராடினால் ஜெயிக்கலாம் என
பூவுலகிற்கே புரியவைத்தவளே!
அதோ!
உன் அஸ்தியிலிருந்து
ஆயிரம் கல்பனாக்கள்!
------------------------------------------------------------------------------------  
தோழிமார் கதை வைரமுத்து
ஆத்தோரம் பூத்த மரம் ஆனைகட்டும் புங்கமரம்
புங்க  மரத்தடியில் பூவிழுந்த மணல்வெளியில்
பேன்பார்த்த சிறுவயசு பெண்ணே நெனவிருக்கா?

சிறுக்கிமக பாவாடை சீக்கிரமா அவுறுதுன்னு
இறுக்கி முடிபோட்டு எங்காத்தா கட்டிவிட
பட்டுச்  சிறுகயிறு பட்டஇடம் புண்ணாக
இடுப்புத் தடத்தில் நீ எண்ணைவெச்சே நெனப்பிருக்கா?

கருவாட்டுப்பானையில சிருவாட்டுக்காசெடுத்து
கோனார்கடைதேடிக் குச்சிஐசு ஒன்னுவாங்கி
நாந்திங்க நீகொடுக்க நீதிங்க நாங்கொடுக்க
கலங்கிய ஐஸ்குச்சி கலர்கலராக் கண்ணீர்விட
பல்லால்கடிச்சுப் பங்குபோட்ட வேளையில
வீதிமண்ணில் ரெண்டுதுண்டு விழுந்திருச்சே நெனப்பிருக்கா?

கண்ணாமூச்சி ஆடையில கால்கொலுச நீதொலைக்க
சூடுவைப்பா கெழவின்னு சொல்லிசொல்லி நீஅழுக
எங்காலுக் கொலுசெடுத்து உனக்குப் போட்டனுப்பிவிட்டு
என்வீட்டில் நொக்குப்பெத்தேன் ஏண்டீ நெனப்பிருக்கா?

வெள்ளாறு சலசலக்க வெயில்போல நிலவடிக்க
பல்லாங்குழி ஆடையில பருவம் திறந்துவிட
என்னமோ ஏதோன்னு பதறிப்போய் நானழுக
விறுவிறுன்னு கொண்டாந்து வீடுசேர்த்தே நெனப்பிருக்கா?

ஒன்னா வளந்தோம் ஒருதட்டில் சோறுதின்னோம்
பிரியா திருக்கஒரு பெரியவழி யோசிச்சோம்
ஒருபுருஷன் கட்டி ஒருவீட்டில் குடியிருந்து
சக்களத்தியா வாழச் சம்மதிச்சோம் நெனப்பிருக்கா?

ஆடு கனவுகண்டா அருவா அறியாது
புழுவெல்லாம் கனவுகண்டா கொழுவுக்குப் புரியாது
எப்படியோ பிரிவானோம் இடிவிழுந்த ஓடானோம்

வறட்டூரு தாண்டி வாக்கப்பட்டு நாம்போக
தண்ணியில்லாக் காட்டுக்குத் தாலிகட்டி நீபோக
எம்புள்ள எம்புருசன் எம்பொழப்பு என்னோட
உம்புள்ள உம்புருசன் உம்பொழப்பு உன்னோட

நாளும்கடந்திருச்சு நரைகூடவிழுந்திருச்சு
வயித்துல வளந்தகொடி வயசுக்கு வந்திருச்சு
ஆத்தோரம் பூத்தமரம் ஆனைகட்டும் புங்கமரம்
போனவருசத்துப் புயல்காத்தில் சாஞ்சிருச்சு!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------   
தமிழில் எழுதிவரும் எழுத்தாளர் பற்பலரின் படைப்புகள் படிக்க இதில் நம்கவிஞர்கள், எழுத்தாளர்கள் தம் விவரத்தையும் ஏற்றி உலகம் முழுவதும் பார்க்கத் தரலாம். அகரவரிசையில் சென்று பார்க்க எனது விவரம்இதில் ஏற்றப்பட்டுள்ளது.
-----------------------------------------
தமிழ்க்கவிஞர்கள் தம் கவிதைகளைப் படைக்கவும், படிக்கவும்
-----------------------------------------
கவிஞர்களின் பற்பல தொகுப்புகளைப் பார்க்க
-----------------------------------------
பழந்தமிழ் இலக்கியங்கள் , பாரதி பாரதிதாசன்,பட்டுக்கோட்டை, பொன்னியின் செல்வன், புதுமைப்பித்தன் என சுமார் 500நூல்கள் மின்னூலாகப் படிக்க -http://www.projectmadurai.org/pmworks.html
-----------------------------------------
இலங்கைத் தமிழ்பேசும் மக்களுக்கான நூலகம்
-----------------------------------------
இவை தவிர இணைய நூலகங்களிலும் அவ்வப்போது நுழைந்து வரலாம்
தமிழ்இணையக் கல்விக் கழக நூலகம்
-----------------------------------------
புதிய படைப்புகளைப்படிக்கவும், நமது படைப்புகளைப் படைக்கவும் -
-----------------------------------------
ஏராளமான சிற்றிதழ்கள், புதிய நூல் வரவுகளைப்பார்க்க
-----------------------------------------
இந்த்த் தகவல் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
வேணும்னா ஏராளம் இருக்கிறது...
ஆர்வமுள்ளவர்கள்  தேடித்தேடிப் பார்க்கலாம்.. 
யூனிகோடு தமிழ் அடிக்கப் பழகி கூகுள் தேடுபொறியில் கவிஞர்களின் பெயர்களை அல்லது கவிதை வரிகளை இட்டால் முழுக்கவிதைகள் பல கிடைக்கலாம். படிக்கலாம்
படிக்கலாம்
படிக்கலாம்...படைக்கலாம்.
-----------------------------------------
பி.கு. இவன் என்ன? வெண்பா எழுதச் சொல்லி ஊமைக்கனவுகள் விஜூவின் தளத்திற்கு வழிகாட்டி விட்டு இப்போது வெறும் புதுக்கவிதையாகவே உதாரணம் காட்டுகிறானே? என்பீராகில், எனது பதில் – வெண்பாவைத்தான் எழுதவேண்டும் என்று கட்டாயமில்லை. வெண்பா எழுதும் பயிற்சியோடு, மற்ற பாவகைகளையும் புதுக்கவிதையும் எழுதவந்தால் சொல்-சிக்கனம், சொற்செட்டு எப்படி அமையும் என்பதற்கான நல்லகவிதை உதாரணங்கள்.

-----------------------------------

30 கருத்துகள்:

  1. அட...! எத்தனை இணைப்புகள்... தங்களின் தேடுதல் உழைப்பிற்கு வாழ்த்துக்கள் ஐயா... நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  2. ஆஹா அற்புதம் அண்ணா. எத்தனை கடின தேடல் தெரிகிறது. நன்றி என்ற ஒன்று மட்டும் போதாது. அண்ணா அப்படியே என் யோசனை ஒன்று அதன் படி உங்களை நடக்க சொல்வது அல்ல. யோசனை சரியா என்று மட்டும் சொல்லுங்க. இப்படி பிரபலமான கவிஞர்களை அறிமுகம் செய்வது ஒரு விதம் என்றாலும்.. வளரும் தலைமுறையை உங்கள் வளரும் கவிதையில் வாரம் ஒரு முறை அறிமுகம் செய்யலாம். அதுவும் பலரை சென்றடையும். அவர்களை இன்னும் சிறப்பாக எழுத ஊக்கம் தருவதாக அமையும். தவறாக இருப்பின் மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடினத் தேட்ல்லாம் ஒன்னுமில்லப்பா...
      அவ்வப்போது சென்று பார்க்கும் தளங்களில் சிலவற்றை எடுத்துப போட்டேன்.. (ச்ச்சும்மா... எறும்பு கடிச்சுதுன்னு நாந்தே(ன்) சாமி கொஞ்ச நேரம் கத்தினேன் - திருவிளையாடல் இல்ல உண்மை) உன்யோசனை அருமையதான் .சுஜாதாவும் வேறுசில எழுத்தாளர்களும் -இப்போதைய தினமணி கலாரசிகன் மாதிரி- தொடரின் இறுதியில் ஒரு நல்ல கவிதையை எடுத்துப் போடுவார்களே அப்படித்தானே? செய்யலாம்தான்... இனிமேல் படிப்பதைப் போடலாம்.

      நீக்கு
  3. ''அவரின் அரை அவுன்ஸ் ஆயுள்//

    அட!

    வைரமுத்துக் கவிதையில் கடைசி வரி தூக்கி நிறுத்துகிறது மொத்தக் கவிதையையும்.

    அப்துல் ரகுமான் கவிதை அசத்தல்.

    அட... சொல்லிக் கொண்டு போனால் எல்லாமே நன்றாய் இருக்கிறது. தேர்ந்தெடுத்த முத்துகள் என்பதாலா?

    ஈரோடு தமிழன்பன் கவிதைகள் கூட ரசிக்கும்படி இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. அவருக்கென்ன வயதாக ஆகப் புதிது புதிதாக எதையாவது செய்துகொண்டே இருக்கிறாரே! பேரனுக்கென்று ஒரு தொகுப்பே போட்டவர் அவராகத்தான் இருக்கும்

      நீக்கு
  4. அய்யா..! வணக்கம்.இன்னும் நிறைய கவிதைகளை எடுத்து எழுதுங்கள்.
    இதோ ஒரு வெண்பா முயற்சி..

    "வளரும் கவிதையில் பூக்கும் கவிமலர்கள்
    தளரும் மனங்களுக்குத் தாலாட்டு! அதேபோல்
    வளரிளம் காளையர் கன்னியர்க்கும் அன்பாய்
    களர்நீக்கும் நல்ல விருந்து.!"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வளரும் கவிதையில் பூக்கும் கவிதை
      தளரும் மனம்‘விழிக்குந் தாலாட்டா மெம்போல்
      வளரிளம் காளையர்க்கும் கன்னியர்க்கும் அன்பாய்க்
      களங்காணக் கண்ட கதி!!

      நீக்கு
    2. தளரும் மனங்களுக்குத் தாலாட்டா? காலை
      புலரும் பொழுதிலுமா பொய்த்தூக்கம்? அய்யா...
      எதுகையில் சிக்கலா? இத்தடையைத் தான்நம்
      புதுகையில் தாண்டவேண் டும்.

      நீக்கு
    3. "முத்தமிழை என்றென்றும் முக்கனிபோல் தக்கபடி
      இத்தரையில் இன்பமுடன் இன்தமிழைப் போற்றுவதில்
      நித்திலம்போல் சத்தியமாய் நீள்பணி யாற்றுகின்ற
      வித்தகரே! நித்தமுமே வெல்க!"

      நீக்கு
  5. நல்ல கவிதைகள் அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
    "பெய்யெனப் பெய்யும் மழை"என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைதானே ஐயா அது? அற்புதமான கதைக் கவிதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... முரளி...ஆனால் தங்கம் மூர்த்தியின் கவிதைத் தொகுப்புத் தலைப்பு “பொய்யெனப் பெய்யும் மழை“ என்று என்று நினைவு.

      நீக்கு
  6. ஆகா ஆகா
    //மனிதன்
    பழகவேயில்லை
    இன்னொரு மனிதனிடம்.///

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கவிதைகளைப படிக்கவே ஓர் இயக்கம் நடத்தவேண்டும் போல... தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் “வாசிப்பு இயக்கம்“ நடத்துவார்கள் அல்லவா? அதுபோல... என்னங்கய்யா?

      நீக்கு
  7. அன்புள்ள அய்யா,


    நல்ல கவிஞர்களின் நல்ல கவிதைகளைப் படித்து இன்புற்றேன்.
    வைரமுத்துவின் வைரவரிகளை வெட்டி எடுத்தேன்...
    'நாய் இருக்கட்டும்
    நானிறங்கிக் கொள்கிறேன்'
    என்றனள் சிறுமி

    சிறகு சிலிர்த்தது தேவதைக்கு
    சிலிர்த்த வேகத்தில்
    சிதறிவிழந்தனர் சிறகேறிகள்

    வான் பறந்தது தேவதை
    சிறுமியோடும் செல்ல நாயோடும்...
    -நாயெனும் யாழை மீட்டிய குழவி!

    வறட்டூரு தாண்டி வாக்கப்பட்டு நாம்போக
    தண்ணியில்லாக் காட்டுக்குத் தாலிகட்டி நீபோக
    எம்புள்ள எம்புருசன் எம்பொழப்பு என்னோட
    உம்புள்ள உம்புருசன் உம்பொழப்பு உன்னோட....

    வாழ்க்கையின் யதார்த்தம் இதுதானே!

    கவிக்கோவின் கவிதை வரிகள் அனைத்தும் அற்புதமே!

    மணந்தேன் என்பாய் சடங்குகளும் – வெறும்
    மாலை சூட்டலும் மணமில்லை
    இணைந்தேன் என்பாய் உடற்பசியால் – உடல்
    இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.

    -மனம் இணைந்தால்தான் மணவிழா...சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவாதாகச் சொல்லி.. வாழும் சொர்க்கத்தை மறக்கலாமா?

    சில கவிஞர்களையும்...சில கவிதைகளையும் பயனுள்ள வகையில் நன்றாக அறிமுகம் செய்திருந்தீர்கள்.
    கவிதைகளைப் படிக்க...படைக்க...பல வெப்சைட் முகவரியைக் கொடுத்து அசத்திவீட்டீர்கள்...அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ஓர் அறிமுகம் மட்டுமே. ஆழ்கடல் அறிமுகம். அவரவரும் “நீச்சல் கற்றோ”, “கப்பலில் சென்றோ” முத்தெடுப்பதும், தங்கமீன்பிடிப்பதும் அவரவர் திறமை. (என்ன ராஜபக் போலம் ராட்சஷர்ளிடம் மாட்டிக்கொள்ளாமல் திரும்பணும்) நன்றி

      நீக்கு
  8. அய்யா,
    முன்னர் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன்.
    அதைக் காணவில்லை. என்ன எழுதினேன் என்பது முழுதாய் நினைவில்லை.
    குறைந்த பட்சம் தம்துறைசார்ந்த வாசிப்பேனும் ஒவ்வொரு படைப்பாளிக்கும் வேண்டப்பெறுவதென்பேன். கவிதை எனில் கவிதை மருத்துவமெனில் மருத்துவம் கதை எனில் கதை இதே போல்……..
    கவிதை எனப் படிப்பதில் பலவும் பயன்தரலாம். பதராய்ப் போகலாம். அதற்காய் எல்லாவற்றையும் படிக்க நேரமில்லை என்போர்க்குத் தங்களின் இந்தப் பகிர்வு நிச்சயமாய் பயன்தரக்கூடும்.
    ஆனால் படிப்போர் இதை ஒரு அறிமுகமாக எடுத்துக்கொண்டு படைப்பாளிகளின் பிற படைப்புகளையும் படிக்க முயல வேண்டுமென்பேன்,
    அவர்கள் கவிதை எழுதும் களத்திலிருந்தால்.
    எழுநூறு பக்கம் படித்த பின் அதில் ஒருவரி புதுமையாய் இருக்கும் . நம் உள்ளம் கவரும் அதை எடுத்துக் கொடுப்பது எத்துணை சிறப்பானது?
    ஆனால் படைப்போர் ஒன்றை மறந்து விடக் கூடாது எந்தப் படைப்புமே படிப்பவரின் அனுபவத்தைத் தொடும் போது தான் வெற்றி பெறுகிறது என்பதை.
    தமிழுக்கு அமுதென்று பேர் என்பது சீன மொழியில் மொழி பெயர்க்கப் படும் போது அவனுக்கு ஒரு தகவல் அவ்வளவே!
    தமிழை நேசிப்பவர்க்கோ அது அவர் உணர்வில் கிளர்ச்சியூட்டித் தங்குவது. நெஞ்சைத் தொடுவது.
    அந்த அனுபவம்..
    நல்ல படைப்பு அதை உரசிப் பார்க்க வேண்டும்.
    பெரு நெருப்பை உருவாக்க வேண்டும்.
    படிப்போனை எரித்துப் புடமிட வேண்டும். அது படைப்பு.
    அந்த அனுபவமில்லாதவனுக்கோ மகாகவியினுடைய படைப்புகளுக்கும் சாதாரண உரைநடைக்கும் வேறுபாட்டை அவதானிக்க முடிவதில்லை.
    இவ்வளவையும் நான் சொல்ல வருவதன் காரணம்,
    என் ரசனைக்குரிய வரிகளை எல்லாரும் ரசிக்க முடியாது
    எல்லாருடைய ரசனைக்கும் உரிய வரிகளை ஒருகால் நான் எளிதாகக் கடந்து போக முடியலாம்.
    எல்லாரையும் எல்லாக் காலத்தும் விரும்பச் செய்யும் ஆற்றல் படைத்தவர்களே மகாகவிகள்.
    காலத்தை வென்று நிற்கும் அவர்தம் படைப்புகள்.
    நீங்கள் காட்டிய கவிஞருள் மிகச் சிலரை மட்டுமே நான் அறிவேன் என்பதை நான் வெட்கத்தோடு ஒப்புக்கொள்கிறேன்.
    அதிலும் நீங்கள் காட்டிய கவிதைகளுள் மூன்றை மட்டுமே நான் படித்திருக்கிறேன்.
    நான் கடக்க வேண்டிய தூரமும் படிக்க வேண்டிய நூல்களும் என்னை இன்னும் மலைப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றன. ஒரு சிலர் தவிர பலர்க்கும் இதுவே நிலையாகலாம்
    கல்விக் கரையில கற்பவர் நாள்சில என்று சொல்ல நினைத்தாலும் கவிதைக் கரையில கற்பவர் நாள் சில என்ற உங்கள் வரிகள்தான் நினைக்க வருகிறது. என்ன செய்ய?
    தாங்கள் காட்டிய கவிதைகளில்
    ஜெயபாஸ்கரனின் நானும் நீயும்....................................
    என் உளம்தொட்ட கவிதை!
    இதுபோல் படித்ததில் பிடித்ததை இன்னும் தாருங்கள் நன்றி!!!

    பதிலளிநீக்கு
  9. இருகண்ணிற் கண்டதெலாம் இக்காதிற் பட்டு
    விரும்பாது போனதெலாம் வந்தே –“ ஒருகால்
    அடியென் றவன்சொல்ல ஆரையடா சொன்னாய்“
    பிடிபதிலை என்னுமனப் பித்து!

    எருமைக்கும் கீரைக்கும் ஏட்டிக்குப் போட்டி
    அருமை கவிகதையுள் ஆழ்ந்து – பெருமைசொலி
    நின்றவக் காலம் நினைவில் நிழலாடும்
    என்றுறுமோ வப்பே றினி?

    பதில் சரியோ அய்யா?
    போதுமைய்யா உங்கள் சோதனை!!!
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருகதை நன்றாய் உரைத்தீர் புதிதாய்,
      மறுகதை உண்டே? மறந்தீர்? - சிறுகுறிப்பு
      காரனைய மூடரைக் கல்வியால் மாற்றிய
      பாரதி தாசன் படைப்பு.


      நீக்கு
    2. குடும்ப விளக்கேற்றிக் கொள்ளுமறி வற்ற
      இருண்டவீ டொன்றில் இருந்து - தடுமாறி
      இப்படி யானேன் இதனை அறியாதேன்
      எப்படி ஆனால்தான் என்?
      நன்றி அய்யா!

      நீக்கு
  10. மற்ற இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்களுக்காக -
    படைப்பு மனம் பற்பல நூல் படிப்பதால் கவிதை பழகும்,படியும் என்பார்கள். அதற்கேற்ப நண்பர் மகா.சுந்தர் தன் பதிவில் ஓர் இலக்கியப் புதிர் போட்டிருந்தார் காண்க http://mahaasundar.blogspot.in/2014/11/blog-post.html
    இதற்கு நானும் நண்பர் விஜூவும் விடைசொல்லக் கூடாது என்ற குறிப்புவேறு. எனவே நண்பர் விஜூ குறிப்பாக விடைசொல்லி இருந்ததைப் பார்த்த நான் வேறொரு புதிரை அந்தப் பின்னூட்டத்தில் தந்தேன் அது -
    “அடிபிடி என்று அவளை அவன் சொல்ல,
    அடாபுடா என்று அவனை அவள் சொல்ல
    இலக்கியச் சண்டை இரண்டுண்டு சொல்வீர் என்று கேட்டிருந்தேன்.
    அதற்கும் -அந்தப் பின்னூட்டத்திலேயே - பதில் சொன்ன நண்பர் விஜூ அந்தப் பதிலைத்தான் இங்கு இட்டிருக்கிறார். ஆனாலும் இன்னொரு விடை உண்டே அது என்ன என்பது இப்போதைய எனது கேள்வி அதற்கு அந்த வெண்பாவிலேயே சிறு குறிப்பும் தந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. நல்ல கவிதைகளின் தொகுப்புடன் பயனுள்ள தளங்களின் அணி வகுப்பும்...
    பகிர்வுக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  12. நன்றி நண்பர் விஜூ.
    சரியாகச் சொல்லிவிட்டீர்கள் என்பதை விடவும் நீங்கள் நான் ஏற்கெனவே சொன்னது போல “வெண்பா விஜூ“ என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றியும் பாராட்டுகளும். வணக்கம்.

    பதிலளிநீக்கு
  13. அருமையான தளங்களைத் திரட்டித் தந்துள்ளீர்கள்.

    மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  14. அருமையான கவிதைகள்.படித்து முடித்த பின்னும் மனதிலேயே நிற்கின்றன வரிகள்.படிக்க தூண்டியமைக்கு நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “நல்ல கவிதை படிப்பவரை மறக்கவிடாமல் ஒரு ஞாபக யுத்தம் நடத்தும்“ - என்பது பிரபல வானம்பாடிக் கவிஞரும் கவிதை விமர்சகருமான பாலா அவர்களின் கவிதைபோன்ற மேற்கோள். சகோதரி, நல்ல படைப்பு நலல் விளைவுகளை நிகழ்த்தும்தானே?

      நீக்கு
  15. அருமையான கவிதைத் தொகுப்புகளும், தளங்களும் தங்களின் ஆர்வத்தையும், உழைப்பையும் பறை சாற்றுகின்றன. எங்களையும் தூண்டுகின்றன! மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  16. ஓய்வுக்குப் பின் எங்களுக்கு நல்ல படைப்புகள் கிடைக்கிறது.மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு