இணையத் தமிழ்வளர்க்கும் எழுத்தாளர் நேர்காணல் (2) “வலையுலக இரட்டையர்கள்!”



திருமிகு துளசிதரன் அவர்கள்
வலையுலகில் இரட்டையர் (நண்பர்கள்)  நடத்தும் ஒரு வலைப்பக்கம் உண்டு! அவர்களை அறிந்த பலரும் அறிந்தது தான் இது என்றாலும் இன்னும் அறியாதவர்க்கும் சொல்லிமகிழ வேண்டும் என்றே இவர்களின் நேர்காணலை விரும்பி எடுத்தேன்-
இவர்களின் பதிவுகள் பெரும்பாலும் நீளநீளமாக இருக்கும். எனினும் இதுபற்றிச் சொல்லவேண்டுமானால், புகழ்பெற்ற 2000பக்க வரலாற்றுப் பெருநாவல் “பொன்னியின் செல்வ“னுக்கு ராஜாஜி எழுதிய ஒருபக்க முன்னுரைதான் நினைவுக்கு வரும். அவர் சொல்வார், “குரங்குக்கு வால்நீண்டால் கேட்கலாம், மயிலுக்குத் தோகை நீண்டால் அதுவும் அழகுதானே?” என்று படித்தது நினைவு வரும்.
இதோ அந்த பண்பாட்டின் அடையாளமான நண்பர்களின் பங்களிப்பு-
வலைப்பதிவர் பெயர் – துளசி - கீதா நண்பர்கள்
வலைப்பக்கப் பெயர் – தில்லையகத்து க்ரோனிக்கிள்.
வலைப்பக்க இணைப்பு - http://thillaiakathuchronicles.blogspot.com/ 
ஆரம்பித்த ஆண்டு – 2013
இதுவரை எழுதிய பதிவுகள் – 327
எழுதிய பிரிவுகள் – கட்டுரைகள், குறும்படங்கள்
பணியாற்றிய குறும்படங்கள் – எடுத்ததும் நடித்ததுமாக-8
தற்போதைய பின்பற்றுவோர் எண்ணிக்கை - 90 
தற்போதைய பார்வையாளர் எண்ணிக்கை – 1,68,356 (மார்ச்-25)
தமிழ்மணத்தில் இன்றைய தரநிலை – 6
இனி அவர்களோடு…

(1)  இணையத்தமிழில் இணைந்த விதம் பற்றிச் சொல்லுங்களேன்..
நாங்கள் இருவரும் கல்லூரிக்காலத்து நண்பர்கள். இருவருக்குமே எங்கள் கல்லூரிக்காலத்திலேயே, எழுத்து, நாடகத்தில் நடித்தல், நாடகங்கள் இயக்குவது, தனியோருவர் நடிப்பு, போட்டிகளில் கலந்து கொளல், வானொலி நிலையத்தில் நிகழ்ச்சிகள் வழங்குதல் என்று பலவற்றிலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுண்டு.
அதன் பிறகு வாழ்க்கைப் பயணத்தின் திசை மாறி, எங்கள் எழுத்தினையோ, கலைகளையோ தொடரவும், வளர்த்துக் கொள்ளவும் முடியாமல் போனது. 28 வருடங்களுக்குப் பிறகு, இருவரும் சந்தித்த போது... சரி துளசி முதல்ல நீ சொல்லு,
துளசி : தமிழில் சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கதைகள் எழுத நினைத்துக் குறிப்புகள் எழுதி சேமித்து வைத் திருந்தேன். சிலகதைகளும் எழுதி வைத்திருந்தேன். 80களில் எழுதிய புதினம் ஒன்றும் முற்றுப் பெறாமல் அப்படியே இருப்பதையும் சொல்லிக் கொடுத்தேன். அதை எல்லாம் புத்தகமாக வெளியிடலாமா என்று கீதாவிடம் பேசிய போது.... கீதா, நீ தானே வலைத்தளம் ஆரம்பிக்கலாம்னு சொன்னது...நீ தொடர்ந்து சொல்லு இப்ப..
கீதா: நான் துளசி எழுதிய குறிப்புகளை வாசித்ததும் கதைகள் மனதில் தோன்றின. இத்தனை வருடங்களாக எனக்கும் எழுதுவதில் ஆர்வம் இருந்தும் எழுதுவதற்கான சூழல் அமையா திருந்ததால், “நாம் ஏன் ஒரு வலைத்தளம் ஆரம்பிக்கக் கூடாது” என்று துளசியிடம் சொல்லவும், அவரிடம் இணைய வசதி இல்லாததால், எனது இடத்தைத் தலைமையகமாகக் கொண்டு, 2013, ஜீன் 16ஆம் தேதி துளசியின் ஜிமெயில் கணக்கில், வலைத்தளம் தொடங்கினோம்.  முற்றுப் பெறாத புதினத்தை துளசி முடிக்க, அதையும், ஒருசில கதை,கட்டுரைகளையும் புத்தகமாகக் கொண்டுவரும் எண்ணம் உள்ளது.  துளசி இப்போது நீ சொல்லு..
துளசி : நான் ஆங்கில ஆசிரியர்.  பாலக்காட்டில். எனவே எனது மாணவர்கள் அனைவரும் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பதால், எனது மாணவர்களும் வலைத்தளம் வாசித்தால் அவர்களும் ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாமே என்று, ஆங்கில இலக்கணமும், நடைமுறையில் பேசப்படும் ஆங்கிலமும் எளிதாகக் கற்றுக் கொடுப்போம் என்று ஆங்கிலத்தில்தான் எழுத ஆரம்பித்தோம். ஆனால், இருவருக்குமே தமிழில் எழுதத்தான் ஆர்வம் இருந்ததால், எங்கள் கல்லூரிக் காலத்தைத் தொடரலாமே என்று தமிழில் எழுதஆரம்பித்தோம். அப்படித்தான் எங்கள் வலைப்பயணம் தொடங்கியது.
 (2)  தங்களின் வலைப்பக்கத்திற்கு தில்லையகத்து குரோனிக்ள் என்று பெயரிடக் காரணம் என்ன?
எல்லோருமே சிதம்பர ரகசியம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  பௌதீகத்தின் அடிப்படையிலான ப்ளாக் ஹோல் கோட்பாடும், தில்லை/சிதம்பர ரகசியத்தின் கோட்பாடும் ஒரே கோட்பாட்டைப் பற்றித்தான் பேசுகின்றன. அந்த அண்டவெளியின் இயக்கத்தில் தானே இவ்வுலகே அமைந்திருக்கிறது. அந்த அண்டவெளி சக்தியின் அகத்திலிருந்து வந்தவர்கள் என்ற அர்த்தத்தில் “தில்லைஅகத்து” என்று, எங்கள் குறும்படங்களைப் பற்றி வெளியிட தொடங்கியிருந்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து எங்கள் எண்ணங்களைப் பதிவிட முடிவு செய்ததால் “தில்லைஅகத்து க்ரோனிக்கிள்ஸ்” என்று இப்போது எழுதிக் கொண்டிருக்கும் வலைத்தளத்தை ஆரம்பித்தோம்.
“தில்லைஅகத்து” வலைத்தளத்தில் முதல் குறும்படமாகிய “மஹாமுடி த க்ரேட்” படத்தின் நாடக வடிவத்தை, ஆங்கிலத்தில் “How to Analyze A Visualized Drama and Achieve English Proficiency” என்று புத்தகமாக, அதில் மாணவர்கள் செயல் முறை வடிவில் ஆங்கிலம் கற்கும் முறைகளையும் சொல்லி, மாணவர்களுக்கு வேண்டிப் புத்தகமாகவும் வெளியிட்டேன். அடுத்து எடுக்கப்பட்டப் படங்களும், “கார்ப்பெண்டர் த க்ரேட்”, “பொயட் த க்ரேட்”, இனி வரப் போகும் படங்களும், “செயின்ட் த க்ரேட்” (கேரளத்தைப் பற்றி விவேகானந்தரின் கருத்து), “வாரியர் த க்ரேட்” (இராவணன் பற்றியது) இந்த 5கதைகளும் புத்தகமாக வெளிவரும்.
க்ரோனிக்கிள்ஸ் என்று பெயர் வைத்ததன் காரணம்,  ரிச்சர்ட் ஸ்டீல், ஜோசஃப் ஆடிசன் எனும் பல வருடத்து நண்பர்கள் இருவரும், “த ஸ்பெக்டேட்டர்” எனும் இதழ் தொடங்கி அதில் எழுதி வந்தனர்.  நாங்களும் இருவரும் சேர்ந்து எழுத நினைத்ததால் “தில்லைஅகத்து க்ரோனிக்கிள்ல்ஸ்” என்று வைத்து விட்டோம்.  இதைப் பற்றியும் ஒரு பதிவு எழுதிய நினைவு.
 (3) நட்புரீதியாக இருவர் சேர்ந்து செயல்படும் படைப்பாளிகள் தமிழில் இருக்கிறார்கள் வலையுலகில் நீங்கள் இருவரும் இருப்பது, பாராட்டுக்கும் மகிழ்வுக்கும் உரிய பண்பாடாக நினைக்கப்படுகிறது. இதில் உங்கள் சாதக பாதகமென்ன?
முதலில் இருவர் சேர்ந்து எழுதுதல் என்பதற்கு வலையுலகில் முன்னோடி, எங்கள் அறிவுக்கு எட்டியவரை “எங்கள் ப்ளாக்” என்று நினைக்கின்றோம். நாங்கள் அதன் பின் வந்தவர்களே.
எங்கள் இருவரின் நன்றி, தாங்கள் இதனைப் பின்பற்றுதலுக்கும் உரிய உயர் பண்பாடாக நினைத்துப் பாராட்டியமைக்கும்.  நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். எங்களையும் புரிந்து கொண்டு, வலை உலகில் எல்லா சகோதர சகோதரிகளும் எங்களுக்கு ஆதரவு தந்து, இவ்வளவு தூரம் வளர்த்தமைக்கு எல்லோருக்கும், தமிழ் வலையுலகிற்கும் எங்கள் நன்றிகள் பல.
இரு ஆண்கள், இரு பெண்கள் சேர்ந்து பணியாற்றுவது உண்டு நீங்கள் உங்கள் கேள்வியில் குறிப்பிட்டிருப்பது போல். ஆனால், ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து எழுதுவது என்பதில் சில பிரச்சனைகள், சவால்கள் வரத்தான் செய்யும், அது எத்தனை வயதாக இருந்தாலும்.  அதையும் சமாளித்துக் கடந்து, நாங்கள் எங்கள் நட்பைத் தொடர்ந்து, எழுதிக் கொண்டும் வருகின்றோம், இனியும் எழுதுவோம் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது.
நாங்கள் இருவரும் சேர்ந்து எழுதுவதில் சாதகங்கள்தான் இருக்கின்றன.  ஒருவர் எழுத முடியாத நேரத்தில் மற்றவர் எழுதலாம். இருவரது கருத்துகளும், எண்ண அலைவரிசையும் ஒன்றிப் போவதால் பிரச்சனைகள் இல்லை. அப்படியே வேறுபட்டாலும், இருவரும் கலந்துரையாடி, மற்றவரது கருத்து சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்வோம். கருத்து இடுவதில் கூட பல சமயங்களில் ஒத்தக் கருத்தாக இருக்கும். நாங்களே வியந்து போன தருணங்கள் உண்டு.
கீதா: கருத்து இடுவது பெரும்பாலும் ஒருமித்து இருந்தால் அப்படியே போட்டுவிடுவோம்.  சில சமயங்களில் துளசியின் கருத்து தனியாகவும், எனது கருத்தைத் தனியாகவும் பதிவதுண்டு. நான் மட்டும் கருத்திடுவதும் உண்டு என் பெயரிட்டு. அது பெரும்பாலும் என்னைப் பற்றிய அல்லது என் மகனின் தொழில் சம்பந்தப்பட்ட, சென்னையைச் சார்ந்த நிகழ்வாகவோ, விசயமாகவோ, எனக்குத் தெரிந்த நிகழ்வு, விசயமாகவோ இருக்கலாம். பாதகங்களைப் புறக்கணித்து சாதகங்களையே எடுத்துக் கொள்கின்றோம்.
(4)தமிழ் வலைப்பக்கங்கள் தமிழ்ச்சமூக வளர்ச்சிக்கு உதவுகின்றனவா?  
சமீபத்தில் யுனெஸ்கோ, அழிந்து வரும் மொழிகள் என 25 மொழிகளைப் பட்டியலிட்டு அதில் தமிழ் 8ஆவது இடம் என்று சொல்லியிருப்பதைப் பார்த்த போதும், நகரங்களில், சிறு நகரங்களில் கூட இரண்டாவது மொழிப்பாடமாக இந்தியையோ, சமஸ்க்ருதத்தையோ எடுத்துப் படிக்கும் மாணவ மாணவிகளைப் பார்க்கும் போதும், தமிழ் மொழி அழிந்தால் தமிழ்ச்சமூகமும் அழிந்துவிடாதோ? யுனெஸ்கோவின் புள்ளியியல் பலித்துவிடுமோ? என்ற அச்சம் ஒரு பக்கம் எழுந்தாலும்...
எங்களையே நீங்கள் எடுத்துக் கொண்டால், நாங்கள் பல வருடங்களுக்குப் பிறகு தமிழில் எழுத ஆரம்பித்த போது, பல தமிழ்ச் சொற்களை மறந்திருக்கின்றோமே என்று வருந்தினோம்.  இணையத்தில் பல தமிழ் அறிஞர்களின் பதிவுகளை வாசிக்க வாசிக்கப் பல தமிழ்ச் சொற்களைக் கற்றுக் கொண்டோம் என்றால் அது மிகையல்ல.  மட்டுமல்ல புதிய புதிய தமிழ்ச் சொற்களையும் கற்று வருகின்றோம். இப்போது பொது வெளியில் கூட முன்பு போல அல்லாமல் தமிழில் வார்த்தைகளைக் காண முடிகின்றது. அடுமனை, இனிப்பகம், கணினி, வங்கி, அலுவலக மேலாளர் போன்ற வார்த்தைகளைக் காண முடிகின்றது.
தமிழில் வட மொழிச் சொற்களைக் கலக்காமல் தமிழ்ச் சொற்களை உபயோகிக்க வேண்டும் என்றும் அதற்கான சொல் அட்டவணை கூட ஒருசில வலைத்தளங்களில் (நாங்கள் சமீபத்தில் கண்டது யாழ்பாவாணன் அவர்களின் தளத்தில்) காண நேர்கின்றது. பலரும் நல்ல தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடன் எழுதியும் வருகின்றனர்.
ஒரு சமூகத்தின் வளர்ச்சியே அதன் மொழியைச் சார்ந்ததுதான். அப்படிப் பார்த்தால், இணையத்தமிழ் வலைப்பக்கங்கள் வழியாக, தமிழ் மொழி வளர்கின்றது என்றால் தமிழ்ச்சமூகமும் வளர்ந்து வரவேண்டுமே ஆனால்... தமிழ்ச்சமூகமே இப்போதைய வாழ்வியலை ஒத்து, தொழில் நுட்பத்தின் அடிப்படையில் வேகமாக வளர்ந்து வரும் உலகியலுக்கு ஏற்ப மாறத் தொடங்கியிருப்பதால், தமிழ்ச் சமூகமும் மாறத்தான் செய்யும் என்றே தோன்றுகின்றது. ஆனால், பாருங்கள், இத்தனை தொழில்நுட்ப வளர்ச்சிக் கிடையிலும், தமிழ்ச் சமூகத்தில் பண்டு இல்லாத சாதி இன்று தலைதூக்கிக் கௌரவக்கொலைகள் வரை செல்லுவது மனதிற்கு வேதனை அளிப்பதாக இருக்கின்றதுதானே?
சமூகம் மாறினாலும், தமிழ்மொழிப் பற்றும், ஆர்வமும் இருப்பவர்கள் அதை வளர்க்க முனைவார்கள் என்பதில் ஐயமில்லை. புதிய இளைஞர்களும் தமிழில் எழுதி வருகின்றார்கள். உதாரணத்திற்கு, கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரி மாணவியரைக் குறிப்பிடலாம். நம் வலைப்பதிவர்களின் குழந்தைகளும் தளங்கள் ஆரம்பித்து எழுதுகின்றனர். இதை எல்லாம் பார்க்கும் போது நம்பிக்கை துளிர்க்கின்றதுதான். இன்னும் பலரும் எழுத வேண்டும் என்பதே எங்கள் அவா. தமிழ் அழிகின்றது என்ற கூக்குரல்கள் எழுகின்றனதான்.  ஆனால், தமிழ் மொழி அழியாது, அழியக் கூடாது. அதைக் கட்டிக்காக்கும் பொறுப்பு நம் கையில் இருக்கின்றது என்பதையும், யுனெஸ்கோவின் ஆய்வைப் பொய்யாக்கிட வேண்டும் என்பதையும் நாம் உணர வேண்டும். எனவே இணையத் தமிழ் பலரையும் அடைய, இன்னும் பலரும் நல்ல ஆக்கப்பூர்வமான படைப்புகளைப் படைத்திட வேண்டும் என்பதையும் இங்குச் சொல்லிக் கொள்கின்றோம்.
(5) குறும்படங்கள் எடுத்த, நடித்த அனுபவங்கள் உங்களுகு்கு உண்டு. மாற்றுத் திரைப்பட இயக்கமாக இதைமாற்ற உங்கள் ஆலோசனை என்ன?
பலரும் குறும்படங்கள் எடுப்பதே,  திரைப்படத் துறையில் நுழைவதற்கான ஒரு அடையாள அட்டையாகப் பயன்படுத் தத்தான். எங்களுக்கு அப்படிப்பட்ட கனவுகள் எதுவும் இல்லை. செயல்திட்டமும் இல்லை. ஆனால், குறும்படங்கள் எடுப்பதை நிச்சயமாக ஒரு நல்ல மாற்றுத் திரைப்பட இயக்கமாகக் கொள்ளலாம். பெரிய திரைப்படங்கள் 2½ மணி நேரத்தில் சொல்ல முடியாத செய்திகளைக் கூட மிகவும் அழகியலோடு ஒரு சில நிமிடங்களில் பல விளம்பரங்களே சொல்லிச் செல்லும் போது, குறும்படங்கள் நிச்சயமாக இந்தச் சமூகத்திற்குப் பல நல்ல செய்திகளை அழகியலோடும், அக்கறையோடும் தர முடியும்.
பொருளாதார ரீதியாக திரைப்படத் தளத்தில் நுழைய முடியாத பல இளைஞர்கள் குறும்படங்கள் எடுத்துத் தங்கள் கலை ஆர்வத்தைத் தணித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். குறும்பட இயக்குநர்கள் ஒரு இயக்கமாகச் செயல்பட்டால், ஒன்று சேர்ந்து, திரையரங்குகளில் பல குறும்படங்களைத் திரையிடலாம். திரைப்பட விழா நடப்பதில்லையா அது போல... நல்ல குறும்படங்களை அதன் நேரத்தைக் கணக்கிட்டு, வரிசைப்படுத்தி, ஒரு பெரிய திரைப்படம் வெளியிடும் நேரத்தில்-உதாரணமாக 2½ மணி நேரத்தில் – எத்தனைப் படங்கள் வெளியிட முடியுமோ அத்தனைப் படங்களை வெளியிடலாம். பெரிய திரைப்படத்திற்கு வசூலிப்பது போல வசூலிக்கலாம்.  அதனால், குறும்பட இயக்குநர்களுக்கும் வருமானம் கிடைக்கும் இல்லையா. பெரிய திரைப்படங்களை இயக்கிக் கைகளைச் சுட்டுக் கொள்வதற்குப் பதில் இது நல்ல இயக்கம்தானே என்று தோன்றியதுண்டு.
பெரிய படங்களைப் போல தினமும் முடியாதுதான். வாரத்தில் ஏதேனும் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, சிறிய திரையரங்குகளும் மனது வைத்தால் இதனைச் செயல்படுத்தலாம். பல நல்ல குறும்படங்கள் வெளிவர வாய்ப்புண்டு. சமூகத்திற்கு இதன் மூலம் நல்ல செய்திகளைச் சொல்லி விழிப்புணர்வையும் ஏற்படுத்தலாம். இது எங்கள் மனதில் அடிக்கடி தோன்றும் ஒன்று. அவ்வப்போது திரையிடுகின்றார்கள்தான் ஆனால் வியாபார ரீதியாகப் பிரபலமாகவில்லை என்றே தோன்றுகின்றது.  எவ்வளவு தூரம் இதைச் செயல்படுத்த முடியும் என்று தெரியவில்லை ஏனென்றால் பெரிய திட்டம் இது. நிறையப் பேசலாம். கனவு காண்பது, சொல்வது என்பது எளிது ஆனால் நடைமுறைப்படுத்தல் என்பதில்தான் இருக்கிறது சிக்கல் இல்லையா.. சென்ற வருடமோ இல்லை அதற்கு முன்போ... சென்னையில் பள்ளி மாணவர் ஒருவர் தான் எடுத்த குறும்படத்தைத் திரையரங்கில் (ஏவிஎம் என்று நினைவு), நுழைவுச்சீட்டின் விலை ரூ 30, என்று திரையிட்டதாக நினைவு. திரைப்படம், குறும்படம் எடுப்போர் யோசிக்கலாம், கருத்துகள் சொல்லலாம்.
 (6) குப்பைகளும் ஆபாசங்களும் மிகுந்திருக்கும் இன்றைய இணையத் தமிழ்ச்சூழலில் இளைஞர்களின் பயன்பாடு எப்படி இருக்கிறது?
குப்பைகளும், ஆபாசங்களும் நிறையவே மலிந்திருக்கின்றன. இதைத் தடுப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஏனென்றால் தொழில்நுட்பம் அந்த அளவிற்கு வளர்ந்துள்ளது, வளர்ந்தும் வருகின்றது. தடை கொண்டுவந்தால், அந்தத் தடையை உடைக்க ஒரு தொழிநுட்பத்தைக் கண்டுப்பிடிக்க ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும். நேர்மறை இருந்தால் எதிர்மறையும் இருப்பது போல்..  தவறான வழியில் பயன்படுத்தும் இளைஞர்கள் இருந்தாலும். இளைஞர்கள் மட்டுமல்ல, நடுத்தர வயதினரும் ஏன் வயதானவர்களிலும் இதைத் தவறாகப் பயன்படுத்துவோர் உள்ளனர். எனவே, இளைய சமூதாயத்தை மட்டும் குற்றப்படுத்த முடியாது. 
சென்னையில் வெள்ளம் வந்த போது பல இளைஞர்கள் உதவிட இந்த இணையம் தான் உதவியது. எங்கேனும் ஒரு விபத்து என்றால், இரத்தம் தேவைப்பட்டால், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் போதும் உடனடியாக உதவிகள் பெறலாம். ஏழை மாணவ, மாணவியரின் கல்வி முதல், அறுவைச் சிகிச்சை வரை உதவி வேண்டுமா, சமூக வலைத்தளத்தில் பதிந்தால் போதும் உடன் உதவிகள் குவிகின்றன. நம் வலைப்பதிவர், எழுத்தாளர், இளைஞர் வா மணிகண்டன் கூட இணையத்தில் பதிந்தால் போதும். உடன் உலகம் முழுவதும் இருந்து வந்து குவிகின்றன பணமும், உதவியும். இப்படிப் பல உதவிகள், நன்மைகள் கிடைக்கின்றன.
கல்வித்துறைக்கு இணையம் மிகவும் உபயோகமாகத்தான் இருக்கின்றது. மாணவர்கள் ஆய்வுக் கட்டுரை எழுதவும், செயல் திட்டங்கள் செய்யவும் இணையம் உதவுகின்றது என்றால் மிகையல்ல.
எதிலுமே நன்மையும் உண்டு, தீமையும் உண்டுதானே. எனவே, அன்னப்பறவை பாலைத் தண்ணீரிலிருந்து பிரிக்கும் என்று சொல்வது போல, இளைஞர்கள் தரம் பிரித்து அணுகினால் நன்மைகளே. இன்னும் எதிர்காலத்தில் நிச்சயமாக இணையம் நல்ல வழியில் செல்லும் இளைஞர்கள் நல்ல வழியில் அதை நடத்திச் சென்றால். அந்த நம்பிக்கை உள்ளது என்றாலும்...
சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் (பெண்களும் அடக்கம்) முகம் காட்டாமல் காதல் வளர்த்துக் காதல் கொலைகள் வரை செல்வதும் நடக்கின்றது. மதத்தின் பெயரில் சாதிகளின் பெயரில் ஆதரவும், சாடல்களும் நடப்பதும், ஏன் சமீபத்திய உடுமலைப்பேட்டைக் கௌரவ கொலையைக் கூட ஆதரித்துக் குரல்கள் எழுந்ததைக் கேட்ட போது மனம் மிகவும் வேதனையுற்றது. எனவே கத்தியைப் போலத்தான் இணையமும் இளைஞர்கள் கைகளில் சிக்கி இருக்கின்றது. இது, இணையம் இளைஞர்களைப் பார்த்து, “நான் நல்லவர்களுக்கு நல்லவன். கெட்டவர்களுக்குக் கெட்டவன்” என்று சொல்லுவது போல் இருக்கிறது.
(7) தமிழ்மணத் தரவரிசையில் முன்னணியில் உள்ளீர்கள். விரைந்த  உங்கள் வளர்ச்சி ரகசியம் என்ன?
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் தமிழ்மணத் தரம் எல்லாம் நாங்கள் பார்ப்பதில்லை. வலையுலகில் பல பெரிய எழுத்தாளர்கள், தமிழ்ச்சான்றோர்கள் இருக்க நாங்கள் இந்தத் தரத்திற்கு வந்திருக்கின்றோம் என்றாலே உங்களுக்குத் தெரியவில்லையா(?) பதிவுகளின் தரம் எல்லாம் கணினி பார்ப்பதில்லை. கணினி, நம் தளங்களின் பார்வையாளர்கள், வாசிப்போரைக் கணக்கிட்டு ஏதோ ஒரு எண்ணைக் கொடுக்கின்றது அவ்வளவே. தமிழ்மணம் தரத்திற்கும், பதிவின் தரத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எனவே தமிழ்மணத்தை நாங்கள் திரட்டியாக, பலரும் பார்வையிட உதவுவதாகத்தான் எண்ணுகின்றோமே அல்லாமல் தரத்தைப் பற்றி எண்ணியது இல்லை. அதனால்தான் நாங்கள் எங்கள் தளத்தில் அதை இணைக்கவும் இல்லை.
(8)தமிழ்வலைத் திரட்டிகளால் பயனுண்டா? வலைப்பக்க எழுத்தால் வருமானத்திற்கு வழியுண்டா?
தமிழ் வலைத்திரட்டிகளால் நிச்சயமாகப் பயனுண்டு. எங்கள் பதிவுகளுக்கான பார்வையாளர்களும், பின்னூட்டங்களும் தமிழ் மணம் திரட்டியில் இணைத்த பிறகுதான் அதிகமாகத் தொடங்கியது. இங்கு நாங்கள் நன்றியை நம் பதிவர் பகவான் ஜி அவர்களுக்குச் சொல்லிக் கொள்கின்றோம். அவர்தான் எங்கள் பதிவிற்கு முதல் வருகையாளர். வந்து தமிழ்மணத்தில் இணைக்கவும் சொல்லி வலைச்சித்தர் டிடி அவர்களையும் தொடர்பு கொள்ளச் சொன்னார். இணைத்துக் கொடுத்த டிடி அவர்களுக்கும் நன்றியை இங்குச் சொல்லிக் கொள்கின்றோம். இப்போது பல திரட்டிகள் வேலை செய்யவில்லை என்பது வருத்தமே.  வருமானத்திற்கு வழி செய்யலாம். பலருக்கும் நல்லதுதான்.  ஆனால் கூகுள் தேவதையின் அருட்பார்வை தமிழ்வலைப்பக்கம் விழ வேண்டுமே!
(9)  தங்களின் குடும்பம் பிறதுறை அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்
துளசி : என் மனைவி உஷாகுமாரி ஆங்கில ஆசிரியராகப் பணி புரிகிறார். மூன்று குழந்தைகள். மூத்த மகனின் பெயர் அருண் தில்லைஅகத்து. 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதியுள்ளார். இரண்டாவது மகன் சரவண விநாயக் தில்லைஅகத்து. 10வகுப்புப் பொதுத் தேர்வு எழுதியுள்ளார்.  மூன்றாவது மகள். பெயர் அபிராமி தில்லைஅகத்து.  9 ஆம் வகுப்பு முடிக்கிறார்.  
 மனைவி  மகன்கள், மகளுடன்  திரு. துளசிதரன் அவர்கள் 
எனது ஆசிரியப் பணியில் பல நிகழ்வுகள் நடந்ததுண்டு. அந்நிகழ்வுகளை நான் அவ்வப்போது எங்கள் வலைத்தளத்தில் பதிவதுண்டு. மாணவ மாணவிகளும் எனது குழந்தைகளைப் போலத்தான். அவர்கள் எல்லோரும் எத்தனை வருடங்கள் ஆனாலும் என்னொடு தொடர்பில் இருப்பதும், அன்பு காட்டுவதும் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி தரும் நினைவுகளாகும். 
ஒரு அனுபவ நிகழ்வை இங்கு சொல்லலாம். சென்ற வருடம், நான் +2 பொதுத்தேர்வு ஆய்வாளராக வேறு ஒரு பள்ளிக்குச் சென்றிருந்த போது, அன்று தேர்விற்கு வர வேண்டிய ஒரு பெண் வரவில்லை. அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியை பதட்டப்பட்டார்.  நான் அவர்களைச் சமாதானப்படுத்தி, ½ மணி நேரம் கொடுக்கப்படும் இல்லையா அதுவரை பார்ப்போம் என்று சொன்னேன்.  ஆனால், அதன் பின்னும் அப்பெண் வரவில்லை. ஆசிரியை ஒருவர் அவரது வீட்டிற்கு அழைத்துக் கேட்டார். அப்பெண்ணின் தந்தை அவளைப் பள்ளியில் விட்டுவிட்டுச் சென்றதாகச் சொன்னார்.  பதட்டம் கூடியது. பின்னர் அவளது தோழியைக் கேட்டபோது, அவள் பள்ளி வாசலில் இறங்கிவிட்டுத் தோழியிடம் பின்னால் வருவதாகச் சொல்லித் தோழியைப் பள்ளிக்குள் செல்லச் சொல்லியிருக்கிறாள். என்ன செய்ய என்று யோசித்து, அருகிலுள்ளக் காவல் நிலையத்தில் தகவல் சொல்ல பின்னர் தெரிந்தது, அவள் காதலன் என்று சொல்லப்பட்ட ஒரு பையனுடன் சென்றுவிட்டதாக. அந்தப் பெற்றோரை நினைத்தும் அப்பெண்ணை நினைத்தும் ஒரு பக்கம் கோபமும், மறுபக்கம் வருத்தமும் மேலிட்டது. குழந்தைகளை நண்பர்களாகப் பாவித்து, குறிப்பாகப் பருவ வயதுப் பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகளைப் பெற்றோர் மிகவும் அன்புடனும், கருத்துடனும், நண்பர்களைப் போல, தோழமையுடன் வளர்க்க வேண்டும் என்பதை ஒரு ஆசிரியனாக, ஒரு தந்தையாக இங்குச் சொல்லிக் கொள்கின்றேன். 
கீதா : கணவர் பொறியியல் துறையில் பேராசிரியர். ஒரே மகன், இரு பெண்கள்.  மகன் கால்நடை மருத்துவர்.  பெண் குழந்தைகள், 7வயது நிறைவடைந்த, நாலுகால் செல்லங்கள்  கண்ணழகி, ப்ரௌனி.  இவர்களும் எங்கள் குடும்பத்து நபர்கள் என்பதால் இவர்களையும் என் பெண்கள் என்றே குறிப்பிடுவது வழக்கம்.
(10)புதிதாக வலைப்பக்கம் எழுத வருவோர்க்கு உங்கள் வழிகாட்டு உரை என்ன?
நாங்கள் எழுத நினைத்த காலத்தில் எழுத இயலவில்லை. பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் நாங்கள் ஏதோ எழுத ஆரம்பித்துள்ளோம். எங்களைப் போல பலரும் எழுத நினைத்து எழுத இயலாமல் போயிருக்கலாம். எல்லோராலும் பத்திரிகைகளுக்கு எழுதிட முடியாது.  நாங்களும் அனுப்பி அது வெளிவராமல், மீண்டும் திரும்பப் பெற்றக் காலங்கள், அனுபவங்கள் உண்டு எங்கள் இருவருக்குமே.
அப்படியிருக்க, இன்று வலைப்பூவில் நமது எண்ணங்களை, கதைகளை, கட்டுரைகளைப் பதிந்து, சிறிய வட்டம் என்றில்லாமல், இந்த உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்கள் பார்க்கும் வகையில் இணைய வலைத்தளம் உதவுகிறது.  அதுவும் எந்தவிதச் செலவும் செய்யாமல். வலைத்தளங்களில் பல பெரிய எழுத்தாளர்களும் இருக்கின்றார்கள். வலைத்தளத்தில் எழுதிப் பெரிய எழுத்தாளர்கள் ஆனவர்களும் இருக்கின்றார்கள் என்றால் அது மிகையல்ல. நமக்கு நாமே ராஜா. நம் இதழ். எனவே எழுதுவதற்கு ஆர்வம் உள்ளவர்கள், நல்ல ஆக்கப்பூர்வமானப் படைப்புகளைப் படைக்கலாம். பலரைச் சென்றடையும். எழுத்தார்வம், வாசிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் அனைவருமே இந்த அரிய வாய்ப்பை மிகவும் பயனுள்ளதாகப் பயன்படுத்தித் தமிழ் மொழியும், தமிழ்சமூகமும் வளர ஆவன செய்யலாம். எனவே, இளைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாருங்கள் என வரவேற்கின்றோம்.

எமது குறிப்பிடத்தக்க 3 பதிவுகளின் இணைப்புகள் -
பூமித்தாய் பொறுமையானவள்தான் 


பெரியாரின் சொற்பொழிவு என்னுள் உணர்த்திய அனுபவமும், சிந்தனைகளும்

எமது 2 குறும்படங்களின் இணைப்புகள்.

பரோல் -ஆங்கிலம் - முதல் பகுதி 

ரோல் - இரண்டாம் பகுதி

https://www.youtube.com/watch?v=3PJRBL7jdDA  பரோட்டா கார்த்திக் - (தமிழ்)
இதில் நம் பதிவர் நண்பர்களும் நடித்துள்ளனர். ( திரு டிடி,  திரு இராய செல்லப்பா, 
திரு கோவை ஆவி,  திரு குடந்தை ஆர் வி சரவணன்)
------------------------------------------------------------------------------------------ 

26 கருத்துகள்:

  1. அருமையான நேர்காணல் இருவருக்கும் வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் உங்களை பின் பற்றுவோரில் இவன் சாமானியன்.

    பதிலளிநீக்கு
  2. அடிக்கடி பள்ளிக்கு கட் அடிக்கும் மாணவன் போலத்தான் தனிமரமும் )))

    பதிலளிநீக்கு
  3. அற்புதமான அருமையான இவர்கள் பதிவுகளை
    விடாது தொடர்கிறேனோ ஒழிய எனக்கு இவர்கள்
    குறித்து தனிப்பட்ட இத்தனை விவரங்கள் தெரியாது
    புதுக்கோட்டை பதிவர் சந்திப்பில் இருவரையும் சந்தித்துப்
    பேசியது மகிழ்வாய் இருந்தது
    குடும்பத்துடன் கூடிய புகைப்படம் பார்க்க
    மிக்க மகிழ்வாய் இருக்கிறது

    உறவினர்களை விட மனரீதியாக பதிவர்கள்
    எனக்கு மனதிற்கு மிக நெருக்கமாக இருந்தாலும்
    மிகச் சரியாக நெருங்கிப் பழகி அவர்களைத்
    தெரிந்து கொள்ள முடியாதது ஒரு குறையாக இருந்தது
    இந்தத் தொடர் அந்தக் குறையை நிவர்த்தி செய்வது
    மகிழ்வளிக்கிறது

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. தங்களின் இம்முயற்சி மூலமாக இணைந்து செயலாற்றும் பதிவர்களின் அனுபவங்களை நன்கு அறியமுடிந்தது.இருவரையும் நான் அறிவேன். அவர்களது எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிப்பவர்களில் நானும் ஒருவன். இயல்பான கேள்விகளும், பதில்களும் இன்றைய சமூகப்போக்கையும் எழுத்து நிலையையும் நன்கு உணர்த்தின. அவர்களுடன் உரையாடி கருத்துக்களைப் பகிர்ந்தமைக்கு அவர்களுக்கும் உங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அருமை ஐயா... எனக்கு இருவரையும் நன்கு பரிச்சயம் என்றாலும், பல விஷயங்களை இங்கு தான் தெரிந்துகொண்டேன்...

    பதிலளிநீக்கு
  6. இருவரையும் நன்கு தெரிந்து கொள்ளும் வாய்ப்பு..நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு
  7. நான் இவரைப் பற்றி மகளிர் தினம் அன்று ஒரு பதிவு இட்டிருந்தேன்.அவரின் நேர் காணல் மூலம் இவரைப் பற்றிய மற்ற விவரங்களும் அறிந்தேன்..

    பதிலளிநீக்கு
  8. அய்யா..ஒரு உணர்வுப்பூர்வமான பதிவு...
    இவர்களின் பின்னூட்டம் ஒரு ஒட்டுதலுடன் இருக்கும்...இவர்களில் துளசியுடன் பேசும் வாய்ப்பு ஒருமுறை உங்களால் வாய்த்தது..
    ஏதோ நீண்டகால உறவுபோலவே அது இருந்தது...
    சென்னையின் ஒரு வெயில் மதியத்தில் வழி சொல்லி...காத்திருந்து மின் ரயில் நிலையத்திலிருந்து அழைத்துப்போய் குளிரக்குளிர பேசிய கீதா அவர்களின் பண்பு இன்னும் என் கண்ணுக்குள்..

    வலைத்தள நண்பர்களில் நான் அதிகம் பேசுவதும் அவர்களுடன் தான்..

    அவர்கள் எழுதுவதில் இரட்டையராய் இருக்கலாம்...
    வலையுலகில் எல்லாரோடும் இருக்கிறார்கள்..

    பரந்த அறிமுகத்திற்கு..
    நெஞ்சம் திறந்த நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  9. நான் செய்தது சிறிய உதவிதான் ,அது கூட இல்லை ,ஆலோசனைதான் !எல்லாப் பெருமைக்கும் உரியவர் சகோ .திண்டுக்கல் தனபாலன் அவர்களே !
    வெயில் நேரத்தில் கோடைக் கானல் குளிரைப் போல ரசிக்க வைத்தது ,நேர்க்காணலில் நீங்கள் தந்த பதில்கள் :)

    பதிலளிநீக்கு
  10. ஆணும், பெண்ணும் நட்பு ரீதியில் வலைப்பூ நடத்துவது நம் தமிழ்ச்சமூகத்தைப் பொறுத்தவரை மிகவும் வியக்கத்தக்க விஷயமே. இதில் இவர்கள் தாம் முன்னோடி!
    எத்தனை வயதானாலும் சவால்கள், பிரச்சினைகள் வரவே செய்யும் என்ற இவர்களின் பதிலை ஒரு பெண் என்ற முறையில் என்னால் சரியாகவே புரிந்துகொள்ள முடிகிறது. அதிலும் இருவரின் குடும்பங்களின் புரிந்துணர்வும், ஒத்துழைப்பும் இந்த முயற்சிக்குப் பெரிதும் தேவை. இருவருக்கும் என் பாராட்டுகள்!
    நேர்காணல் சிறப்பாக இருக்கின்றது. எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஸ்டீரியோடைப் கேள்விகளாகக் கேட்காமல் அவர்கள் சம்பந்தப்பட்ட கேள்விகளாக இருப்பதால் படிக்க வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கின்றது. பதிவர்களைப் பற்றிய தகவல்களை மற்றவர்கள் அறிந்துகொள்ளவும் வழிசெய்கின்றது. அண்ணன் முத்துநிலவன் அவர்களுக்கும் பாராட்டுகள்!
    நன்றியுடன்
    ஞா.கலையரசி

    பதிலளிநீக்கு
  11. வில்லங்கத்தாரைப்பற்றி எனக்கு எல்லாம் தெரியும் என்றாலும் இந்த நேர்காணலின் மூலம் மேலும் விரிவான விடயங்கள் தெரிந்து கொண்டேன்
    நட்புக்கு நல்லதொரு உதாரணதாரிகள் தொடர்ந்து பொழியட்டும் இவர்களின் பதிவு மழை.

    நல்லதொரு பணியை ற்கொண்ட கவிஞருக்கு வாழ்த்துகளும், நன்றியும்.
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
  12. சாதனை இணையர்களை (நண்பர்களை)
    வாழ்த்துவோம்

    அருமையான கருத்துப் பகிர்வு
    சிறந்த வழிகாட்டல்

    பதிலளிநீக்கு
  13. வலையுலக இரட்டையர்கள் பற்றி ஓரளவுக்கு அறிந்துகொண்டோம். பேட்டி அருமை. அனைவருக்கும் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. நல்ல நேர்காணல்/வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. இருவரின் பதிவுகளையும் தொடர்ந்து படித்த வந்த போதிலும்,அவர்களைப் பற்றிய பல செய்திகளை அறிந்து கொண்டேன் ஐயா
    நன்றி
    இருவரது நட்பும் போற்றுதலுக்கு உரியது

    பதிலளிநீக்கு
  16. ஐயா/அண்ணா மிக்க நன்றி. தங்களின் வித்தியாசமான இந்த அரிய முயற்சியில், பல அறிஞர்களுடன், எங்களையும் மதித்துக் கௌரவித்து இணைத்தமைக்கு. தங்கள் முயற்சி வெற்றி பெற எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.

    நீளத்தைச் சுருக்கிக் கொள்ள முயற்சி எடுத்துக் கொள்கின்றோம்.

    இங்கு அன்புடன் கருத்திட்டு, எங்களை வளர்த்துக் கொள்ள உதவும் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

    தங்களுக்கும் மீண்டும் பல நன்றிகள் ஐயா/அண்ணா. வேறு வார்த்தைகள் இல்லை சொல்லிட.

    கொஞ்சம் வேலை பளு. புதன் கிழமைக்குப் பிறகு வலைத்தளம் வருகிறோம் மீண்டும்.

    பதிலளிநீக்கு
  17. வலையுலகின் சக்கரவர்த்திகளான துளசிதரன், கீதா பற்றி அறியாதப் பல தகவல்களை அறியமுடிந்தது. இவர்களின் பின்னூட்டம் எப்போதும் பல விவரங்களை தாங்கியதாக இருக்கும். கீதா சகோ அடிக்கடி தொலைபேசியில் உரையாடுவார். மிக இனிமையானவர். இந்த நேர்காணல் மூலம் இரட்டை பதிவர்களை பற்றி மேலும் அறிந்து கொண்டேன். தங்கள் தொடர் முயற்சிக்கும், பதிவர்கள் துளசிதரன், கீதா நேர்காணலுக்கும் பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  18. துளசிதரன் அவர்களை ஓரிருமுறை பார்த்ததுண்டு.கீதா அவர்கள் சென்னையில் இருப்பதால் கூடுதலாக சில முறை சந்தத்து பேசியது உண்டு. அசாத்திய திறமை படைத்தவர். வேலூர் விசுவின் புத்தக விழ்வாவிற்கு வந்தபோது கீதா அவர்களின் பன்முகத் திறமையில் வேகமாக கார் ஒட்டுவதும் ஒன்று என்பதை அறிந்தேன்.
    சிறப்பான பேட்டி

    பதிலளிநீக்கு
  19. எப்போது நிகழ்ந்தது இந்த சந்திப்பு ...
    மகிழ்வு ...
    துளசி அற்புதமான மனிதர்,
    கீதாவும் அப்படிதான் தளத்தில் நீங்கள் எழுதிய சமூக நீதிக் கருத்துக்கள் உண்மையில் என்போன்றார் அறியவேண்டிய பாடம் ..
    எப்போ சந்தித்தீர்கள் ..

    பதிலளிநீக்கு
  20. ’இரட்டைப் புலவர்கள்’ போன்று வித்தியாசமான இரு பதிவர்கள் ஒரே வலைத்தளத்தில். அன்று புதுக்கோட்டை வலைப்பதிவர் மாநாட்டில் நேரில் பார்த்த துளசிதரனுக்கும் இன்று புகைப்படத்தில் பார்க்கும் தோற்றத்திற்கும் நிறையவே வித்தியாசம். துளசி மற்றும் கீதா இருவர் பற்றியும் தெரிந்து கொண்டேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  21. துளசி சார் / கீதா மேடம் புரிதலுடன் கூடிய நட்பு.

    பதில் சொல்வதில் கூட 'நீ சொல்லு... நீ சொல்லு...' என மிக அருமையாக... தெளிவாக... விபரமாக... விரிவாக பதில் சொல்லியிருக்கிறார்கள்.

    அற்புதமான பேட்டி ஐயா...

    தங்கள் பணி தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  22. இந்த பதிவு எப்படி என் கண்ணில் படாமல் போனது என்று தெரியவில்லை...

    துளசிதரன்.....இவர் நான் படித்த கல்லூரியில் படித்தவர் என்பதால் எனக்கு இவரை பிடிக்கும் அதுமட்டுமல்லாமல் பார்த்தவுடன் மதிக்க கூடிய ஆட்களில் இவரும் ஒருத்தர். பண்பாளர்.

    கீதா இவரை பார்த்தவுடன் என் கூட படித்த பெண்தான் ஞாபகம் வருகிறார். கீதாவும் அந்த பெண்ணும் அப்படியே டிட்டோ உருவத்திலும் சரி துருதுரு என்று இருப்பதிலும் சரி பழகுவதற்கு மிக எளிமையானவர் கள்ளம்கபட்ம் இல்லாதவர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாட்டிக்கிட்டீங்களா டூப்பு!!ஹஹஹஹ்ஹ

      நீக்கு
    2. எங்களைப் பற்றி இத்தனை நண்பர்களும் இப்படி அன்பான வார்த்தைகளைச் சொன்னதற்கு நாங்கள் எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. மிக்க மிக்க நன்றி நண்பர்களே தங்களின் அன்பிற்கும், தொடரும் ஆதரவிற்கும், ஊக்கத்திற்கும்..

      நீக்கு
    3. நீங்க இப்படி வந்து பதில் சொல்லுவீங்க என்று தெரியும் அதனாலதான் அப்படி போட்டேன். இங்கு நான் பார்த்தது என்று சொல்லுவது நேரில் அல்ல போட்டோவில்தான்...மற்றவை எல்லாம் என் டூப் வந்து சொன்னதை வைத்துதான் எழுதுகிறேன்...என் கிட்ட வந்து மாட்டிகிட்டு முழிக்கிறது நீங்கதான் ஹீஹீஹீ

      நீக்கு
  23. வாழ்த்துக்கள் .....

    சிறப்பான நேர்காணல் ..

    உங்களின் சிந்தனைகளை படித்து வியக்கும் பலரில் நானும் ஒருவர் என்பதில் மகிழ்கிறேன் ...

    அருமை ஐயா

    பதிலளிநீக்கு