“தமிழக அரசியல்“ வாரமிருமுறை இதழில் நமது பதிவர்விழாச் செய்தி!


நமது “வலைப்பதிவர் திருவிழா-2015”  பற்றிய செய்தி தமிழின் பிரபல இருவார இதழான “தமிழக அரசியல்“ இதழில் வந்துள்ளது. நமது செய்தியை அறிந்து அதனை வெளியிடுவதில் ஆர்வம் காட்டிய இதழ்ஆசிரியர் திரு ஆரா அவர்களுக்கும், இங்குவந்து, விழாக்குழுக் கூட்டம் நடக்கும்போதே விவாதங்களைக் கவனித்து, புகைப்படம் எடுத்துக்கொண்டு, அடுத்தநாள் என்வீட்டுக்கு வந்து செய்திகளையும் அறிந்துகொண்டு, இரண்டுபக்கச் செய்தியாக எழுதியிருக்கும் புதுக்கோட்டைச் செய்தியாளர் திரு கண்ணன் கணினி அவர்களுக்கும் நமது நன்றி. நன்றி.

நண்பர்கள் இதழை வாங்கிப் படித்தும், நண்பர்களிடம் தெரிவித்தும் உதவ வேண்டுகிறேன்.
இதழில் வந்துள்ள செய்தியில் சில திருத்தங்கள்
சென்னை நண்பர்கள் தவறாக நினைப்பதுபோல ஒரு பகுதி வந்துவிட்டது. அதாவது நான், “முதன்முதலாக ஈரோட்டில் சிறிய அளவில் தொடங்கிய பதிவர் சந்திப்பை அடுத்த இரண்டு ஆண்டுகளும் மாநில அளவில் நடத்திய சென்னை விழாவைப் பற்றியும் நான்  சொல்லியிருந்தேன். (சென்னையில் 2013ஆம் ஆண்டு நடந்த விழாவில் நானும் கலந்துகொண்டிருந்தேனே?) அதன்பிறகு மதுரையில் நடந்த விழாவில் புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்கம் சார்பாக சுமார் 25பேர் கலந்துகொண்டோம். அந்தவிழாவில், இந்த ஆண்டு புதுக்கோட்டையில நடத்துவது எனும் மதுரைவிழா முடிவின் அடிப்படையில் நாங்கள் ஏற்பாடுகள் செய்துவருகிறோம்என்றுதான் சொல்லியிருந்தேன். ஆனால் செய்தியில் எப்படியோ சென்னைப் பதிவர் விழாவைப் பற்றிய செயதி விடுபட்டுள்ளது. அது என் தவறல்ல எனினும் படிப்பவர்கள் –குறிப்பாகப் பல்வேறு உதவிகளையும் செய்துவரும் சென்னைப் பதிவர்கள் -தவறாக எடுத்துக்கொள்ளாமல், என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

n  விழா முடிவானதுமே நமது முன்னோடிப் பதிவர் புலவர்அய்யா இராமாநுசம் அவர்களை நேரில் சந்தித்துப்பேசியது மட்டுமல்ல, மீண்டும் இருமுறை சென்னை நண்பர்களின் உதவியோடுதான் செய்தியை அறிவித்தோம், தஇக இயக்குநர் அவர்களைச் சந்தித்தோம் என்பதை நமது பதிவர் அனைவரும் அறிவார்கள்.

n  இப்போது நீங்கள்பார்த்துக் கொண்டிருக்கும் நமது தளத்தினைப் புதுக்கோட்டை நண்பர்கள்  உருவாக்கியபின், அதைத் தனது உழைப்பில் அழகாக மாற்றியவர் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்கள் என்றால், நேற்றுமுழுவதும் இதற்காக உழைத்து, இன்னும் இப்போதைய வடிவத்தைச் செய்திருப்பவர் சென்னைப் பதிவர் திரு மதுமதி என்பதையும் நாங்கள் நன்றியோடுதான் நினைத்து மகிழ்ந்து பாராட்டி வருகிறோம்.

n  “சென்னையிலுள்ள “தமிழ்இணையக் கல்விக்கழகம்“ இந்த விழாவிற்குப் பிறகுதான் எல்லார்க்கும் தெரியவந்ததாக“வும், அதையும் நான் சொன்னதாகவும் செய்தியில் –தவறாக- வந்துவிட்டது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், “அம்மாவை மகன் அறிமுகப்படுத்தினான்என்பது போலத்தான் இது! தஇக எவ்வளவோ இணையப் பணிகளைச் செய்துவருகிறது. தமிழ்க்கணிமையில் பணியாற்றிவரும் அனைவரும் அந்த நிறுவனத்தின் பணிகளைப் போற்றி வருகிறார்கள். அந்த நிறுவன அருமையை இந்த விழாவின் பிறகுதான் அறிந்துகொள்கிறார்கள் என்பது நகைப்புக்கிடமாகும். நான் அவ்வாறு நினைக்கவும் இல்லை, பிறகெங்கே சொல்வது? எனவே அதையும் தவறாக எண்ண வேண்டாம்.

n  பதிவர் விழாவுக்காகத் தொடங்கிய வலைப்பக்கத்தை நண்பர்களின் முக நூல்களில் பகிர்ந்து லட்சக்கணக்கானவர்கள் பார்த்து வருகிறாரகள் என நான் சொன்னதை, விழாத்தளத்தை “10,800பேர் ஃபாலோயர்களாகி“ இருப்பதாக வந்திருப்பதும் அன்பின் பிழையன்றி வேறில்லை.

இந்தச் செய்திப் பிழைகளைத் தொடர்புடைய நண்பர்கள் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், அதற்காக எனது வருத்தத்தையும் தெரிவித்து, விழாப் பணிகளில் ஏதும் சுணக்கம் வந்துவிட வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். பெருந்தன்மையாளர்கள் இதனைப் பெரிது படுத்த மாட்டார்கள் என்றாலும், அத்தகைய பெருந்தன்மையாளர்களிடம் நான் எனது வருத்த்ததைத் தெரிவித்து, நானறிந்து நடந்த பிழையல்ல என்றாலும் அதற்காக மன்னிக்கவும் கேட்டுக்கொள்கிறேன். இன்னும் சில இதழ்களிலும், வானொலிச் சிற்றலையிலும் வரும்போது கூடுதல் கவனமாக இருப்போம்... 

விழாப் பணிகளை மேலும் சிறப்பாகத் தொடர்வோம்.
11-10-2015 அன்று புதுக்கோட்டையில் சந்திப்போம். அதுவரை –

“போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்

தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து செல்வோம்“ – கண்ணதாசன்.

3 கருத்துகள்:

  1. பல சமயங்களில் பத்தரிகைகளில் செய்தி வந்தால் நன்றாக இருக்கும் என்று நாம் நினைத்தால் ஏன் வந்தது என்பது போல் ஆகிவிடுவது கவலைக் குரியது.
    தக்க விளக்கம் அளித்துள்ளீர்கள் . கவலை வேண்டாம் பிழை செய்திகளை யாரும் பொருட் படுத்த மாட்டார்கள்

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் அய்யா
    நம் விழா பற்றிய செய்திகளை ஆர்வமுடன் ஊடகங்கள் பகிரும் போது மகிழ்ச்சியும் அதே சமயம் கூடுதல் கவனத்தோடு பணியாற்ற வேண்டும் எனும் எச்சரிக்கையும் எழுகிறது. செய்திக்கான விளக்கத்தைக் கூறி பத்திரிக்கை செய்த தவறுக்கு தாங்கள் வருத்தம் தெரிவித்திருப்பது தங்களின் பெருந்தன்மைக் காட்டுகிறது. பகிர்வுக்கு நன்றிகள் அய்யா.

    பதிலளிநீக்கு