தினமணி -சென்னைப் பதிப்பில் வெளிவந்த எனது கட்டுரை

           கோடை விடுமுறை தேவையில்லையா?!
-நா.முத்து நிலவன்-

ங்கிலேயர் ஆரம்பித்ததுதான், ஆனாலும் நமது பள்ளிகளுக்கான கோடை விடுமுறைஎன்பது நமது மண்சார்ந்த வகையில் -பள்ளிமாணவர் உளவியலும் உடல்நிலையும் சார்ந்த வகையில்- சரியானது தானே? அப்புறம் ஏன் தமிழகத்தின் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகளில்    -அடுத்த ஆண்டு அரசுத்தேர்வை எழுத விருக்கும்- இந்த ஆண்டு 9, 11-ஆம் வகுப்பில் படிக்கும் நம் பிள்ளைகளுக்கு  கோடை விடுமுறை மறுக்கப்படுகிறது
தனியார் பள்ளி விடுதிகளில் தங்கிப் படிக்கும் நமது தமிழகப் பிள்ளைகளில்  9,11ஆம் வகுப்புப் பிள்ளைகள் மட்டும் அவர்களின் ஆண்டு இறுதித்தேர்வு முடிந்ததும், “அம்மா... இந்த வருசம் சம்மர் லீவே இல்லையாம்மா... எனப் பேசுவதும், இந்த விடயம் முன்னரே தெரிந்த பெற்றோர் ஆமாடா கண்ணு. அடுத்த வருசம் நீ பப்ளிக் எக்ஸாம் எழுதப்போறயில்ல..? கொஞ்சம் கஷ்டப்பட்டுப படிச்சுறுப்பா... உன்ன அடுத்த வாரம் அப்பாவோட பாக்க வர்ரேன்”....  என்று தொலைபேசியில் கெஞ்சுவது இப்போது நடந்து வருகிறது.
ஏன் இப்படி?
குழந்தைகள் “ஓடி விளையாடு பாப்பா”  பாடலை ஓர் அறைக்குள் உட்கார்ந்து மனப்பாடம் செய்வதற்கா பாரதி எழுதினான்? இது தகுமா? இது சரியா?  நியாயம்தானா?
பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தை வகுத்தவர்கள்- ஒருநாளைக்கு  இவ்வளவுநேரம்  பாடம் நடக்க வேண்டும்விளையாட்டுகலைவகுப்புகள் நடக்க வேண்டும்எனத் திட்டமிட்டுத் தந்தவர்கள்  என்ன முட்டாள்களாஅறிவியல் ரீதியாகஅவர்கள் சொன்னதை மீறி, சிறப்பு வகுப்பு நடத்துவதே மாணவர் உளவியலுக்குஎதிரானது. குதிரை கீழேதள்ளி குழியும் பறித்த கதையாககோடைவிடுமுறையையே மறுத்துத் வகுப்புகள் நடத்துவது “குழந்தைகள் மீது நடத்தும்வன்முறை அல்லவா? 
யாரிதைக் கேட்பதுபல்லாயிரக் கணக்கான  குழந்தைகள்லட்சக் கணக்கிலான பெற்றோர் சார்பில் தமிழக அரசுதான் தலையிட்டுக் கேட்க வேண்டும்! உடனே இதைத் தடுத்து நிறுத்தவும் வேண்டும்.
ங்கள் தாத்தா தன்காலத்துப் பெருமைகளைச் சொல்லும்போது "அந்தக் காலத்துலயே நான் ரெண்டாம்ப்புலருந்து 'டபுள்-ப்ரமோஷன்வாங்கி நேரா நாலாம்ப்புக்குப் போனவன்டா! அதுமட்டுமில்லமூணுவருச பி.ஏ.,டிகிரிய ஒரேவருசத்துல முடிச்சு 'ஹானர்ஸ்வாங்குனவன் தெரியுமில்ல?" என்று தனது வெள்ளை மீசையை நீவி விட்டுக்கொண்டே வீறாப்பாகச் சொல்வார்.
அதுபற்றி அப்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தாலும்வேறு ஒன்றும் கேட்டதில்லை. ஆனால். இப்போது நமது பிள்ளைகள் --9,11ஆம் வகுப்புகளில் படிப்பதாகச் சொல்லும் குழந்தைகள்-- அந்த வகுப்புப் பாடங்களையே படிக்காமல் அப்படியே முறையே 10, 12 வகுப்புப் பாடங்களையே இரண்டுவருடம் படிப்பதைப் பார்த்ததும் எனக்குத் தாத்தாவின் நினைவுதான் வந்தது! இந்த 'டபுள் ப்ரமோஷன்ஏன்?  இது நமது குழந்தைகளுக்குச் சரியானதுதானா?   இது ஊரறிந்த ரகசியமாகப் பல்லாண்டுகளாகத் தொடர்வது ஏன்?
தமிழ்நாட்டின் அனைத்து மெட்ரிக்-பள்ளிகளிலும்பெரும்பாலான தனியார் பள்ளிகளிலும்9,11ஆம் வகுப்புகளை  நடத்தும் வழக்கமே இல்லை! இந்த வியாதி பலபள்ளி மாணவரும் ஒரே ஆசிரியரிடம் தனிப்பயிற்சி படிப்பதால் தொற்றிக்கொள்ளும் வியாதி- இப்போது அரசுப் பள்ளிகளுக்கும் விடம்போலப் பரவி, குறைந்தது அரையாண்டுக்குப் பிறகாவது அடுத்தவருடப் பாடத்தைத் தொடங்கிவிடுவது என்னும் கைங்கரியம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆக, அரசுப்பள்ளிகளில் 9,11ஆம் வகுப்புகளுக்கு அரைப்படிப்புத்தான்! மெட்ரிக், தனியார் பள்ளிகளில் அதுவும் இல்லைபோ என்னும் நிலைமை! ஏன் இப்படி?
மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் பலவற்றில், எட்டாம் வகுப்பு ஆண்டுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர், 9ஆம் வகுப்பில் சேர்ந்தவுடனேயே, 10ஆம் வகுப்புப் பாடப்புத்தகங்களும் சேர்த்துத் தரப்படுகின்றன. தரப்படுவது என்ன, 'மெட்ரிக்குலேஷன்'பள்ளிகளில்-ஆங்கில வழியில் -படிக்கும் மாணவர்கள் 9,10ஆம் வகுப்புப் பாடநூல்கள் இரண்டையும் ஒரே நேரத்தில் வாங்கிவிட வேண்டும்! 'மெட்ரிக்குலேஷன்பள்ளிகளில்தான் வெளியில் புத்தகங்களை வாங்க முடியாதே! வாங்கவும் கூடாதில்ல? அப்படி வாங்கிய 9ஆம் வகுப்புப் பாடப்புத்தகங்கள் சிலஒரு சில வாரங்களே நடத்தப்படும்! 'பெருந்தன்மை'யான சில பள்ளிகளில் காலாண்டு வரை நடப்பதுண்டு! அதற்குமேல் நிச்சயமாக 10ஆம் வகுப்புப் பாடங்கள் துவங்கி விடும்! அதிலிருந்து அந்த மாணவர்கள் 10-ஆம்வகுப்புப் பாடங்களையே இருமுறை -அதாவது சுமார் ஒன்னே முக்கால் ஆண்டுகளும் படிக்கிறார்கள்! (அப்படின்னா+2 படிப்பு இரண்டு வருடம் மாதிரி,  பத்தாம் வகுப்பும் ரெண்டுவருடம் தானோஎன்மகன் பி.ஏசெகண்ட் இயர் படிக்கிறான்னு சொல்லிக்கிற மாதிரி என் மகள் டென்த் செகண்ட் இயர் படிக்கிறான்னு பெருமையா சொல்லிக்கலாம் ஆனா யாரும் சொல்லிக்கிறதில்லயே! ஏன்னா தன் மகன்ஃமகள் நல்லபள்ளியில் படிக்கும் ரகசியத்தைக் காப்பாற்ற வேண்டுமல்லவா?)
இதே கதை(கதி)தான் 11ஆம்வகுப்பு (+1) மாணவ-மாணவிகளுக்கும்! இதில் கூத்து என்னவென்றால்மெட்ரிக்குலேஷன் பள்ளிகளைப் போலவே  பெரும்பான்மையான அரசு மேல்நிலைப்பள்ளிகளில் -11ஆம் வகுப்பின் அரையாண்டுத் தேர்வுக்குப் பிறகு 12ஆம் வகுப்புப் பாடங்களைத் தொடங்கிவிடுவது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது என்பதுதான்!     
இப்படி --ஒன்பதாம் வகுப்பு மாணவர், 10ஆம் வகுப்புப் பாடத்தையே இரண்டுவருடமும், 11ஆம் வகுப்பு மாணவர், 12ஆம் வகுப்புப் பாடத்தையே இரண்டுவருடமும்- ஒரேபுத்தகத்தை'உருப்போட்டமாணவர்தொழிற்கல்வி நுழைவுத் தேர்வுகளின்போது'உருப்படாதமதிப்பெண் எடுத்த ரகசியமும் இதுதான்! (எங்கள் மாவட்டத்தில் மெட்ரிக் பள்ளியில் படித்து மாவட்ட முதலிடம் பெற்ற மாணவி ஒருவருக்கு நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டின் அரசுப பொறியியல் கல்லூரி எதிலும் இடம் கிடைக்காமல் நாக்பூர் போய்ப் படித்தது இங்குள்ள பலருக்கும் தெரிந்த ரகசியம்தான்!)
அந்தந்த வயதிற்கும் இருக்கக்கூடிய உளவியல், சொல்லாற்றல், பொருளுணர்தல், உலகஅறிவு பொதுகவனிப்புத் தன்மைக்கும் ஏற்பத்தான் பாடங்கள் தயாரிக்கப்படுவதாகக் கல்வியாளர்கள் சொல்கிறார்கள். உலகளவில் இது கடைபிடிக்கப்படுகிறது. இது உண்மைதான் எனில்இந்த வகுப்புகளைப்புறக்கணித்துவிட்டு -ஒரே தாண்டாகத் தாண்டி- அடுத்த வகுப்புக்கு மாணவர்களைக் 'கடத்திகொண்டு போவது ஏன்?
வெளியில்போய், தானே ஒன்றைத் தெரிந்துகொள்ளும்
மாணவியர்க்குத்தான் என்ன மகிழ்ச்சி!, அது வாழ்நாளில் மறக்குமா என்ன?
இப்படியான பள்ளிகளில்மாணவர்கள் மனப்பாட எந்திரமாக மாற்றப்படுவதன்றி வேறு வழியென்னபாடமும் புரியாமல்மனப்பாடமும் செய்ய முடியாமல் மாணவர்கள் படும் அவதியும், 'முடியாத'மாணவர்கள் கடுமையான தண்டனைக்கு ஆளாவதும் பள்ளிக் கூடத்தையே வெறுப்பதும்வாழ்க்கையே வெறுத்துப் போவதுமான நிலைமை தொடர்கதையாவதும் இப்படித்தானே! எப்படியாவது மதிப்பெண் வாங்கும் எந்திரமாக மாணவர்களை ஆக்கிவிடும் அவசரம்தானே இது?  மூன்றாவது கண்ணைத் திறக்கும் அவசரத்தில் இருக்கும் இரண்டு கண்களையும் ஒன்றரைக் கண்ணாக்கிவிடுவதன் விளைவு பற்றி யார் கவலைப்படுகிறார்கள்?       
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை தன் கட்டுப்பாட்டில் இருக்கும் பள்ளி அனைத்தும்  9,11ஆம் வகுப்புப் பாடநூல் முழுவதும் நடத்தி, ஆண்டுத் தேர்வும் நடத்தி, கோடை விடுமுறைக்கு பிறகே அடுத்தவகுப்புப் பாடங்களைத் தொடங்க வேண்டும் என்பதை  நடைமுறைப்படுத்த ஆணையிட வேண்டும்.
அதுவரை,மொழிப்பாடங்களில் செய்யுள்-உரைநடை-இலக்கணம்மொழிப்பயிற்சி மற்றும் கட்டுரை ஆகிய அனைத்தையும் ஒரே தேர்வில் எழுதிவந்த மாணவர்க்கு, 9ஆம்வகுப்பில்தான் இரண்டு தேர்வுத் தாள்களாகப் பிரிக்கப் படுகிறது. தமிழ் முதல்தாள்,  இரண்டாம் தாள் என்பது போலவேஆங்கிலத்திலும் 9ஆம் வகுப்பிலிருந்துதான் இரண்டு தாள்களுக்கும் தனித்தனித் தேர்வுகள் வைக்கப்படுகின்றன. அப்போதுதான் மொழிப்பயிற்சி சற்று மேம்படும் என்பதே இதன் நோக்கம். எனக்குத் தெரிந்து பல மெட்ரிக் பள்ளிகளில் கட்டுரை ஏடு என்னும் ஒன்றை மாணவர்கள் பார்த்த்தே இல்லை! அப்புறம் எப்படி மொழிவளம் கிடைக்கும்?
14 வயதில் -ஒன்பதாம் வகுப்பில்- இந்த மொழிப்பயிற்சிகள் விரிவாகத் தொடங்கப் படுவதற்கு அந்த வயதிற்கான கல்வி உளவியலே முக்கியமான காரணமென்பது கல்வியாளர் கருத்து.
இப்படிமுறையே 9,11 வகுப்பில் 10,12ஆம் வகுப்புப் பாடங்களை நடத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் அதையே தமது 'பாடக் குறிப்பேடு'களில் (Notes of Lesson) எழுத முடியாது!  அப்போதுதான், 'பூனை வெளியே வந்துவிடுமே?' இந்த நிலையை மாற்றி,முறைப்படுத்துவதன் மூலமாக ஆசிரியர்கள் அந்தந்த வாரமும் மாணவர்களுக்கு நடத்துவது ஒன்றுஏடுகளில் எழுதிவைப்பது ஒன்று என்னும் 'ஏமாற்றுவேலைக்கும் இடந்தரவேண்டியதில்லையே?
இதோடுமொழிப்பாடங்களில் அந்தந்த வயதிற்குரிய மொழிப்பயிற்சிகள் மீறப்படும் போதுஅல்லது விடப்படும்போதுஅதன் தொடர்ச்சி எவ்வாறு மாணவர்களுக்குக் கிடைக்கும்?மொழிப்பயிற்சி முழுமையாகமலே எப்படி அந்த மாணவர்கள் 10, 12 ஆம் வகுப்புத் தேர்வை எழுத முடியும்கணிதப்பாடத்திலும்அறிவியல்வரலாற்றுப் பாடங்களிலும் முந்திய வகுப்பின் தொடர்ச்சியாகப் பல பாடங்கள் வருகின்றன. 9,11ஆம் வகுப்புப் பாட நூல்களையே பார்க்காத மாணவர் எப்படி அவற்றை உள்வாங்கமுடியும்?  எந்திரகதியாக 'உருப்'போடுவதன்றி வேறு என்ன செய்ய முடியும்?
கல்வியாளர் கருத்தையும்மாணவர் உளவியல் சார்ந்த உடல் நலனையும் பற்றிக் கவலைப் படாதவர்கள்தான் இந்தப் புதியவகையிலான 'டபுள் ப்ரமோஷனை' நடத்துகிறார்கள். விடுதிகளில் தங்கிப் படிக்கும் பல்லாயிரக் கணக்கான 9,11ஆம் வகுப்பு  மாணவரையும் பாடாய்ப் படுத்தி, பெற்றோரிடமும் கோடைக்கால சிறப்புத் தொடர்வகுப்புஎனும் என, லட்சக்கணக்கில் கொள்ளையடிக்கவும் செய்கிறார்கள்.
இந்தச் செயல் சரிதான் எனில், 9,11 ஆம் வகுப்பையே கல்வித்துறை எடுத்துவிடலாமே?
அப்படி எடுத்துவிடலாமெனில்இப்போது நடைமுறையில் இருக்கும் 15 வயதுக்குப் பதிலாக, 14 வயதிலேயே பள்ளி இறுதித்தேர்வை (SSLC) எழுதச் சொல்லிவிடலாமே?  அதேபோல17 வயதுக்குப் பதிலாக 16வயதிலேயே மேல்நிலைத் தேர்வை (+2) எழுதச்சொல்லிவிடலாமே? (இல்லை இல்லை தவறாகச் சொல்லிவிட்டேன், 14வயதில் SSLC, அடுத்த வருடமே+2, 15வயதில் கல்லூரிக்கே போய்விடலாம்!பிறகு 18 வயதில் இளங்கலை(BA), 20 வயதில் முதுகலை (MA)முடித்துவிடலாம்... வாழ்க்கையிலேயே இரண்டு வயதை 'மிச்சம்'பிடிக்கலாம்ங்கோ...!)
மாணவர்கள் 9,11ஆம் வகுப்புகளை இழப்பதன்மூலம் அந்தந்த  வருட அமைதியை இழக்கிறார்கள். 'அடுத்த வருடம்தான் அரசுத்தேர்வுஎனும் நினைவு தரும் மனஅமைதி முதலில் போய்விடுகிறது. முதலில் 10ஆம் வகுப்பு அரசுத்தேர்வுக்கு ஒன்பதாம் வகுப்பிலிருந்தும்பிறகு12ஆம்வகுப்பு அரசுத்தேர்வுக்கு 11ஆம் வகுப்பிலிருந்தும் -ஒவ்வோ ராண்டுக்காலம்முன்தயாரிப்பு எனும் நிதானம் மலையேறி  2+2 ஆக 4 ஆண்டுகளுமே பரபரப்புத்தான்! எதையுமே பரபரப்பாகச் செய்தால்அதன் ஆழ அகலப் பரிமாணங்கள் தெரியாமலேபோகும் என்பது எல்லா விஷயங்களுக்குமே பொருந்தும்தானே? 'அவசரத்தில் அண்டாப் பானையில்கூட கை நுழையாது'தானே?
அந்த மாணவ -மாணவிகளைப்  பார்த்திருக்கிறீர்களாஉண்மையிலேயே நன்றாகப் படிக்க வேண்டும் என்று நினைக்கிற மாணவர்கள்தான் அதிகமாகச் சிரமப்படுகிறார்கள்! (இந்தத் தத்துவத்தை அறிந்த சிலர்தான், 'பாடமே இது பொய்யடா-வெறும் 'மார்க்'கடைத்த பையடாஎன்று'வேறு'வழிகளில் பயிற்சிபெறுகிறார்கள்!)  'நன்மாணாக்கர்'களோ பாவம் -பரிதாபமாக அதிகாலை4-1/2மணிக்கே எழுந்து, 5-6கணக்கு, 6-7இயற்பியல்,  7-8வேதியல். பிறகு 9-5 பள்ளிக்கூடம். பிறகு 5-1/2 மணிக்கு வீட்டுக்கு வந்தவுடன் உடை மாற்றிக்கொண்டே ஒருவாய் காப்பியை வாயில் ஊற்றிக்கொண்டே பரபரப்பார்கள்! மீண்டும்,-"மாலை முழுதும் விளை யாட்டு"என்றெழுதிய பாரதியை மனசாரத் திட்டிக்கொண்டே 6-7தாவரவியல், 7-8விலங்கியல் என்று சென்றிடுவார் எட்டுத்திக்கும்! அப்படி ('ட்யூஷன்') சென்றால்தானே (மதிப்பெண்) செல்வங்கள்யாவும் கொணர்ந்திங்கு சேர்க்க முடியும்?
"இந்தப் பரபரப்பான உலகத்தில் எல்லாம் சகஜமப்பா!" என்று எதிலும் ஒட்டாதவர்களாக - கண் அங்கேயிங்கே பாவாமல்குதிரைக்கு ஒரு கண்பட்டையைப் பூட்டி விடுவார்களே அதுமாதிரி -உலக நியாயஅநியாயங்களைக் கண்டுகொள்ளாமல்இப்படி, 'தானுண்டு,தன்ட்யூஷன்உண்டுஎன்றுஅப்போதே அவர்களுக்கு பிரச்சினை களிலிருந்து  'அந்நியமாதல்-ஞானம்வந்துவிடாதா என்ன?
இது நம் தமிழகஅரசு பள்ளிக்கல்வித்துறைக்குத் தெரிந்தோ தெரியாமலோ நடக்கிறது. நிச்சயமாகத் தெரிந்து-அனுமதியுடன் நடக்கவாய்ப்பில்லை. ஆனால்நடப்பது நிச்சயம்  ஊரறிந்த ரகசியம்! இப்படி நடப்பது சரியாசரியில்லையா எனும் விவாதத்திற்கே உளவியலில் இடமில்லை.
இது தொடர்வது சரிதானா?  என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் கேள்வி.
      அதிகமில்லை கனவான்களே! ''அந்தந்த ஆண்டு மாணவர்க்குஅந்தந்த ஆண்டுக்குரிய பாடங்களில் மட்டுமே தேர்வு நடத்தப் படவேண்டும். இதைமீறிஓராண்டு நடத்த வேண்டிய பாடங்களை 3மாதம், 6மாதத்தில் நடத்துவதாகத்தெரிந்தாலோஅடுத்த வகுப்புக்குரிய பாடங்களை முந்திய ஆண்டிலேயே நடத்தினாலோமாணவர் நலன்சார்நத கோடை விடுமுறை மறுக்கப் பட்டாலோ, அந்தக் கல்வி நிறுவனங்கள் மீது தமிழக அரசு - பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ளும்'' என  சுற்றறிக்கை  அனுப்பினால் மட்டும் போதாது. கண்காணிப்பும் தொடர் நடவடிக்கைகளும் தேவை.
----------------------------------------------------------
 நன்றி தினமணி - நாளிதழ் - கருத்துக்களம்  
(சென்னைப் பதிப்புக் கட்டுரைப் பகுதி)
 First Published : 22 April 2013 04:20 AM IST
http://dinamani.com/specials/karuthuk_kalam/2013/04/22/
---------------------------------------------------------------------------

11 கருத்துகள்:

  1. அப்படி என்ன தான் படித்து விட்டு (10th / +2 ) சாதனை செய்யப் போகிறார்களோ...? அறியவில்லை... தெரியவில்லை...? புரியவில்லை...? மாவட்ட அளவில், மாநில அளவில் முதலிடம் வந்தவர்கள் தற்போது எந்த நிலையில் இருக்கிறார்கள் என்னும் (5 வருடம்) தகவல்கள் இருந்தால் பலரும் திருந்த ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன்... உங்களால் திரட்ட முடியும் என்றும் நினைக்கிறேன்... (!)

    நல்லதொரு கட்டுரை ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வலைச்சித்தரே! “மாவட்ட அளவில், மாநில அளவில் முதலிடம் வந்தவர்கள் தற்போது எந்த நிலையில் இருக்கிறார்கள் என்னும் (5 வருடம்) தகவல்கள் இருந்தால் பலரும் திருந்த ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன்... உங்களால் திரட்ட முடியும் என்றும் நினைக்கிறேன்” ஆகா! அருமையான யோசனை. தகவல் திரட்ட முடிந்தால் மிகச் சிறந்த கருத்து முடிவுகள் கிடைக்கும். நன்றி

      நீக்கு
  2. உங்கள் கட்டுரை உள்ளக்கொந்தளிப்பை அருமையாய்ப் படம் பிடிக்கிறது ஐயா..நீங்கள சொல்லியிருப்பது உண்மைதான். அரசும் பள்ளிகளும் மட்டுமல்ல ஐயா..பெற்றோரும் மாறவேண்டும்..பள்ளியில் எழுதும் வேலை குறைவு, வீட்டுப்பாடம் குறைவு, பரீட்சை வையுங்கள் அது இது என்று பெற்றோர் அழுத்துவதை இங்கு(பெங்களூருவில்) பார்க்கிறேன். மேலும் இங்கு ஜூனில் நான்கு வயதானால் தான் LKG என்று இருந்தது..சென்னையில் இருந்து மாற்றலில் வரும் பெற்றோர் கேட்டுக்கொண்டதற்கு(!!!????) இணங்க இப்பொழுது மூணு வயதில் LKG சேர்க்க சில பள்ளிகளில் அனுமதிக்கிறார்கள்..நாங்கள் அக்டோபரில் ஐந்து வயதான எங்கள் மகனை UKGல் போடுங்கள் என்று சொல்லி அதற்கு கடிதம் எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுக்கவேண்டியிருந்தது. அதற்கு அருகிலிருக்கும் ஒருவர் இரு வருடம் முன்பே சம்பாதிப்பதைத் தடுக்கிறீர்கள் என்று சொன்னார்!!! இப்போதைய குழந்தைத்தனத்தைக் கொல்வதா? LKGல் அதிக எழுத்து வேலை இல்லை என்று பெற்றோர் சொல்லி அழுத்தியதால் ஒரு பள்ளியில் மாற்றிவிட்டனர் பாடத்திட்டத்தை , பெற்றோர் கேட்டமாதிரி...பிஞ்சு விரல் எவ்வளவு எழுதும்...என்ன கொடுமை ஐயா இது!!!! அப்பள்ளியில் சேர்க்கவில்லை என் மகனை..யாரைச் சொல்றதுனே தெரியவில்லை..குமுறல் இன்னும் நிறைய இருக்கு..அப்புறம் கருத்துரையே ஒரு கட்டுரை ஆகிவிடும் ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி. கட்டுரையை விடக் கருத்துரை நீள்வது தவறல்லவே? “குரங்குக்கு வால்நீள்வதுதான் நன்றாக இருக்காது, மயிலுக்குத் தோகை நீண்டால் நல்லதுதானே?” என்னும் வரிகள் நினைவிருக்கிறதா சகோதரி? மிகப் புகழ்பெற்ற ஒரு புதினத்தின் ஒரு பெரும்புகழ்பெற்றவர் எழுதிய முன்னுரையில் வரும் வரிகள்.... வரிகள் முக்கியமில்லை. சரியாகச் சொல்வதுதானே முக்கியம்? நீங்கள் மிகச் சரியாகவே உங்கள் அனுபவக் கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறீர்கள். நன்றி.

      நீக்கு
    2. //குரங்குக்கு வால்நீள்வதுதான் நன்றாக இருக்காது, மயிலுக்குத் தோகை நீண்டால் நல்லதுதானே?// இந்த வரிகளை உங்கள் மறுமொழி பார்க்கும்வரை நான் அறியவில்லை ஐயா..இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன், நன்றி. யார் எழுதியது என்றும் சொல்லிவிடுங்களேன் :)
      அப்புறம் மேலே என் கருத்துரையில், //எங்கள் மகனை UKGல் போடுங்கள்//, இந்த வரியில் LKG என்பதை அவசரத்தில் UKG என்று தட்டச்சியிருக்கிறேன்...இப்பொழுது அவன் LKG தான் :)

      நீக்கு
    3. ஐந்து பாகங்களில் சுமார் 2000 பக்கம் கொண்ட கல்கியின் “பொன்னியின் செல்வன்“ புதினததிற்கு ராஜாஜி “நச்“சென்று ஒரே பக்கத்தில் எழுதிய... பிரமாதமான முன்னுரை! அவசியம் படிக்கவும். உன் மகன் எல்கேஜி? அப்படின்னா அவன் என் பேரன்தான்! பேரனுக்குத் தாத்தாவின் வாழ்த்துகள்! (நான் இந்த வருடம் மே மாதத்துடன் ஓய்வு பெறுகிறேன்மா!)

      நீக்கு
  3. இந்த கொடுமையெல்லாம் பகல் கொள்ளை அடிக்கும் நாமக்கல் பிராய்லர் பள்ளிகளில் இருந்து வந்து இருக்கும் புதிய கலாச்சாரம் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதையும் நகைச்சுவையாகப் பார்க்கும் “பகவா“னே இப்படி “சீரியசா“ யோசிக்கிற மாதிரித்தான் நிலைமை இருக்கு! நன்றி அய்யா!

      நீக்கு
  4. அண்ணா, தாத்தா ஹோர்ன்ஸ்ஸா? சூப்பர் .
    நம்ம நிறை கூட படிக்கிற நம்ம பக்கத்துவீட்டு பையன்(மூன்றாம் வகுப்பு) தேர்வுத்தாளை தன் அம்மாவிடம் காட்டிக்கொண்டிருந்தான். அவன் நூத்துக்கு நாலு மார்க்கு குறைவா வாங்கி இருந்தான்((96). நம்ம வீட்டிலேயே வச்சு அவனை அவங்க அம்மா அடி வெளுத்துட்டு நிறையோட மார்க்கை கேட்டாங்க. அவ 92 . என்னை கேட்குறாங்க என்ன நிறையம்மா அவள் மார்க்கை கண்டுக்கவே மாட்டிங்களா?
    நாலு மார்க்குக்கு இப்பவே இந்த வெளுத்து வெளுத்துறதும் இல்லாம நம்மள வேற குறை சொல்றாங்க. மார்க்கு வாங்குவது மட்டுமே சாதனை என கருதும் பெற்றோர் கோடை விடுமுறையில் கூட டியூசன் அனுப்பிவிடுவார்கள். அவர்களை கண்காணிக்க ஆள் அமர்த்தினால் தான் உண்டு. பொதுத்தேர்வு நெருங்கும் நாட்களில் பள்ளிக்கு ஒரு மாதம் முன்பே விடுப்பு எடுக்கவைத்து வீட்டுச்சுவர்களுக்கு உள்ளே தம் பிள்ளைகளை சிறை வைக்கும் பெற்றோரை நினைத்தால் நொந்து வருது அண்ணா! அருமையான மற்றுமோர் பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “தாத்தா ஹோர்ன்ஸ்ஸா“ அப்படின்னா? புரியலயே தாயி!
      “பொதுத்தேர்வு நெருங்கும் நாட்களில் பள்ளிக்கு ஒரு மாதம் முன்பே விடுப்பு எடுக்கவைத்து வீட்டுச்சுவர்களுக்கு உள்ளே தம் பிள்ளைகளை சிறை வைக்கும் பெற்றோரை நினைத்தால் நொந்து வருது அண்ணா!“ இவர்கள்தான் நல்ல கல்வியின் முதல் எதிரிகள் மைதிலி! இன்று (23-02-2014) தினமணியில் வந்த எனது பேச்சையும் சேர்த்துப் பார். சில கூடுதல் தகவல் கிடைக்கும்.

      நீக்கு
    2. 'ஹானர்ஸ்' அப்டின்னு டைப் பண்றதுக்குள கீ போர்ட் படுத்தீடுச்சண்ணா. மன்னியுங்கள் . இப்படி பல தவறுகளுக்கு காரணமான கீபோர்டை இப்போ நாடுகடத்தீட்டோம். ஹா ..ஹா ..ஹா ..

      நீக்கு