இவர்களால் நாம் வாழ்கிறோம்!

நாம் வாழ்ந்துகொண்டிருப்பது நம்மால் அல்ல!
நான் வாங்கிய எம்.ஏ.எனும் பட்டத்திற்குக் காரணம், என்பெற்றோர், காமராசர்,பெரியார் மற்றும் சமூகநீதிக்காகப் போராடிய பல்லாயிரம் பேர் என்று புரிந்துகொண்டால்தான் நான் உலகம் புரிந்தவனாவேன்!
நம்மை ஆண்ட கலைஞராலோ, ஜெயலலிதாவாலோ சிற்சில நன்மைகளை நாம் அடைந்திருக்கலாம். ஆனால் இந்தச் சிலச்சில நன்மை செய்தவர்கள் தமக்குப் பலப்பல நன்மைகளைச் செய்துகொண்டதைத்தான் இப்போது தமிழ்நாடு முழுவதும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்!
காந்தியும், நேருவும் இவர்களைப் போலும் சிலநூறுபேர் நமக்குச் சுதந்திரம் வாங்கிக்கொடுத்ததாகப் படித்தோம். ஆனால் இவர்களுக்காவது “சுதந்திரப்போராட்டத்தலைவர்கள்” என்ற பேர் கிடைத்தது! பேரைக்கூட தியாகம் செய்த பலலட்சம்பேர்தான் உண்மையில் நம் சுதந்திரத்தின் நாயகர்கள்… அவர்களை நமக்குத் தெரியாது! உண்மைத் தியாகம் அதுதான்! - பானைச்சோற்றுப் பதமாக “ஜாலியன் வாலாபாக் படுகொலை” என்று நம் பள்ளிப் பாடத்தில் வந்த ஒரு நிகழ்ச்சி போதும். அதில் ஜெனரல் டயர் ஆயிரக்கணக்கான இந்தியர்களைக் கொன்று குவித்தான் என்னும் கொடுமையான செய்தி வரும். ஆனால்...  
ஜாலியன் வாலாபாக் படுகொலையில் கொல்லப்பட்டவர் ஒருவரின் பெயர் கூட இந்திய வரலாற்றில் எழுதப்படவில்லை!  
அந்த சாதாரண மனிதர்களின் -சரித்திரத்தில் எழுதப்படாத- தியாகங்களால் இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதற்குக் காரணம் நம் இன்றைய தலைவர்கள் அல்ல! இதோ வெளியில் தெரியாமல் எந்த விருதும் வழங்கப்படாமல் தமது சமூகக் கடமையைச் செய்துவரும் இந்தச் சாதராண மனிதர்கள்தான் உண்மையின் சரித்திர நாயகர்கள்… 

இவர்கள் சிலநூறுபேர் இருக்கலாம்! பாலம் நூலகர் அய்யா, ட்ராஃபிக் ராமசாமி, அய்யா சசிபெருமாள், சகோதரர் யூனுஸ் போல... 
எல்லாரையும் தெரிந்துகொள்ள முயற்சி செய்வோம் – சுயநலத் தலைவர்கள் நம் ஊடகங்களால் அறியப்பட்டுவிடுகிறார்கள், இவர்களைத்தான் நமது குழந்தைகளுக்கு நமது முன்னோடிகள் என அறிமுகப்படுத்த வேண்டும்!
இப்போது நானறிந்து நெகிழ்ந்த
இரண்டு பேரைப்பற்றி மட்டும் சொல்கிறேன் –

இவர்களைப் போன்றோரைப் பற்றி அறிய நேர்ந்தால் நண்பர்கள் தத்தம் வலைத்தளங்களில் எழுத வேண்டி இப்பதிவு...
மறுவாழ்வுப் போராளி சுனிதாகிருஷ்ணன்
8 பேர் அடங்கிய ஒரு கும்பலால் கற்பழிக்கப்படுகிறார், சுனிதா கிருஷ்ணன். அப்போது அவருக்கு வயது 15. வாழ்க்கை போச்சே என்று இடிந்து போய் முடங்கி விடவில்லை. அன்றே முடிவெடுத்தார், தன்னை போல் பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைகள், பெண்களை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என்று. களத்தில் இறங்கவும் செய்தார்.
மாலினி என்கிற 15 வயது சிறுமியை, அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர், விபச்சார விடுதியில் விற்று விடுகிறார். ஒரு வாடிக்கையாளருக்கு ரூ 6000 என்ற கணக்கில், நாளொன்றுக்கு ரூ.50,000 சம்பாதித்துக் கொடுக்க வேண்டும் அந்த பிஞ்சு உடல். கேட்கவே மனம் பதறுகிறது. சிறைக் கைதியைப் போன்று அடைத்து வைக்கப்பட்ட அந்த குழந்தை வெளியே தப்பித்து வர 3 முறை முயன்றும், தோற்றுப் போன அந்தச் சிறுமி, இறுதியாக சுனிதா கிருஷ்ணனின் திறமையான செயல்பாடுகளால் காப்பாற்றப்பட்டு, ஐதராபாத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறாள். www.puradsifm.com
ஒரு முறை, சமூக விரோதிகளிடமிருந்து சிறுமிகளைக் காப்பாற்றப் போன இடத்தில் வாங்கிய அடி உதையால், இவரது வலது காது கேட்கும் திறனை இழந்திருக்கிறது. பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட 3000 க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டெடுத்து மறுவாழ்வு அளித்துள்ளார். (அநேகமாக இவரது கதையைத் தான் கொஞ்சம் மாற்றி, அசின்-சூர்யா நடித்த ஒரு படமாக இயக்குநர் முருகதாஸ் எடுத்திருக்க வேண்டும்)
நன்றி – திரு கொங்கு இளங்கோ பழனிச்சாமி அவர்களின் முகநூல் –
------------------------------------------------  
மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினியும் 
அவரது தந்தை ஆனந்தனும்
இந்த 23வயது மாணவி இது வரை 56முறை கைது செய்யப்பட்டுள்ளார்!
எதற்காகத் தெரியுமா? யார்வீட்டிலும் புகுந்து கொள்ளையடிக்கவில்லை! யாரையும் கொலை செய்யவில்லை! தமிழ்நாட்டை நாசம்செய்யும் மதுக்கடைகளை மூடவேண்டும் என்று நாகர்கோவில் முதல் திருவண்ணாமலை வரை சென்று போராடி, கைதாகிக்கொண்டே வருகிறார்!

அரசுஊழியராகப் பணியாற்றி இவரது தந்தையார் பெறும் ஓய்வவூதியத்தில் இவர்களின் போராட்டப் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது….

இந்தவாரம் ஆனந்தவிகடன் வாங்கிப் பாருங்கள் நண்பர்களே! நெகிழ்ந்து போவீர்கள்!
----------------------------------------------------------
”தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென வாழுநர் உண்மையானே,
உண்டால் அம்ம இவ்வுலகம்” 
-- என்றொரு சங்கப்பாடல் உண்டு!
இவ்வளவு அநியாயங்கள் நடந்தும் இந்த உலகம் இன்னும் அழிந்துபோகாமல் எப்படி இருக்கிறது? என்னும் நினைவு அவ்வப்போது உங்களுக்கு வரலாம். அதற்கான பதில்தான் இந்தச் சங்கப் பாடல்…
மேலே சொன்ன சுனிதா, நந்தினி போலும் ஒரு சிலர் இன்னும் இவ்வுலகில் இருப்பதால்தான் இந்த அநியாயம் மிகுந்த உலகம் அழியாமல் இருக்கிறது என்று புரிந்துகொண்டால் நீங்கள் உலகம் புரிந்தவர் என்று சொல்லலாம்.
இருகை குவித்துக் உன்னை வணங்குகிறோம் சுனிதா,
இயன்றவரை உன்னோடு தொடர்கிறோம் நந்தினி!
இல்லையெனில் நாங்கள் வாழ்வதில் அர்த்தமில்லை!
----------------------------------------------------------------------

13 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா.பல்கலைக்கழக தேர்வினால் என்னால் வலைப்பக்கம் வரயியலாமல் இருந்தது இன்று ஒரு சுற்று வரலாம் என்று வந்தேன் தங்களின் பதிவு என்னை இன்னும் சற்று தொலைநோக்கு பார்வையோடு உணர வைத்தது ஐயா.நம் நாட்டில் நிலவும் அநியாயம் குறைய வழி இருக்கிறதா என்று தெரியவில்லை ஆனால் அநியாயத்தை தடுக்க இயலும் என்று உணர்கிறேன்.என்னால் முடியும் வரை நானும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவேன்.நல்ல பகிர்வு ஐயா.அவர்கள் இருவரையும் வணங்குகிறேன்.நன்றி.

    பதிலளிநீக்கு
  2. இவர்களைப் பற்றி படித்திருக்கிறேன்.இவர்களுக்குரிய முக்கியத்துவம் ஊடகங்கள் தரவில்லை என்பது வருந்துதற்குரியது. இன்னும் பெயர் தெரியாப் பெருந்தகைகள் எத்தனையோ பேர். உண்மைதான் இவர்களைப் போன்றவர்களால்தான் உலகம் வாழ்த்து கொண்டிருக்கிறது உண்மையில் பத்ம விருதகள் தரப்படவேண்டியவர்கள். யார் யாருக்கோ கொடுத்துக் கொண்டிருகிறார்கள்

    பதிலளிநீக்கு
  3. அனைத்தும் அருமை அய்யா!
    த ம 2

    பதிலளிநீக்கு
  4. இந்தக் காலகட்டத்தில் இவர்களைப் போன்றவர்கள் இருக்கின்றார்களே என்று நினைக்கும்போது ஆச்சர்யமாக உள்ளது. துணிச்சலாக எதிர்கொள்ளும் இவர்களுடைய மனப்பாங்கு மற்ற அனைவருக்கும் முன்னுதாரணமாக அமையும் என்பதில் ஐயமில்லை. தம்முடைய கடமையுணர்ச்சியாலும், விடாமுயற்சியாலும் இவர்கள் சமுதாயத்திற்குப் பெரும்பங்கு ஆற்றிவருகின்றார்கள். இவர்களின் மன உறுதியைப் பாராட்டவேண்டும்.நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அனைவரும் அறிய வேண்டிய செய்தி!

    பதிலளிநீக்கு
  6. அருமையான பகிர்வு. சுனிதாவை எவ்வளவு முறை வணங்கினாலும் தகும்! மெய்சிலிர்க்க வைக்கிறார். நந்தினிக்கும் நம் ஆதரவு கொடுப்போம். அத்தனைக் கொலயாளிகளும் ஊழல்காரர்களும் கண்ணுக்கெதிரே நடமாடிக் கொண்டு இருக்கும் போது தவறு எதுவுமே செய்யாத நந்தினி சிறையில்! ஹஹ நல்ல ஆட்சியப்பா...

    பதிலளிநீக்கு
  7. இப்படியும் சமூக அக்கறை உள்ளவர்களால் தான் உலகம் வாழ்கிறது போல அண்ணா.

    பதிலளிநீக்கு
  8. நெஞ்சை சுடும் பதிவு நண்பரே....

    பதிலளிநீக்கு
  9. சுனிதா,நந்தினி போன்று முகமறியாத சகோதரிகள் பலர் உள்ளனர்.அவர்களை ஊக்கப் படுத்துவோம்.

    பதிலளிநீக்கு
  10. நாடெங்கும் பல சுனிதாக்கள்,நந்தினிகள் வெளியில் தெரியாமல் இருக்கிறார்கள்.அவர்களைப் போன்றவர்களை இனி அறிமுகம் செய்வோம்.

    பதிலளிநீக்கு
  11. paஎல்லோருக்கும் சென்றடைய வேண்டிய தகவல்கள் .( ஆசிரியர் அவர்களே உங்கள் கணினியில் முன்பு இருந்த பிரச்சினை தீர்ந்து விட்டதா? )

    பதிலளிநீக்கு
  12. வணங்குதலுக்கு உரியவர்கள்
    வணங்குவோம்
    வாழ்த்துவோம்

    பதிலளிநீக்கு
  13. நீங்க எம்.ஏ. படிக்க நீங்க மட்டும்தான் காரணம்! பெற்றோர் பீஸ் கட்டியிருக்கலாம், அதெல்லாம் நீங்கள் சம்பாதிச்சு திருப்பிக்கொடுத்திருப்பீர்கள்தானே,பிறகு என்ன? அதேபோல பெரியார் இத்யாதியர் செய்யாவிட்டால் இட ஒதுக்கீடெல்லாம் எப்படியும் வந்திருக்கும். இல்லாவிட்டாலும் உங்கள் திறமைக்கு இடம் கிடைத்திருக்கும். காமராசர் என்ன பண்ணார்? காலேஜ் ஆரம்பிச்சார் அவ்வளவுதானே. இல்லாவிட்டாலும் சென்னையில் போய் படித்திருக்க மாட்டீர்களா? ஏதோ சிறு சிறு உதவிகள்... அவ்வளவே. மத்தபடி நீங்கள் பட்டம் வாங்கியது சொந்த முயற்சி + அறிவு + உழைப்பு + திறமை. வேணா பாடம் எடுத்த வாத்தியார்கள்குக் ஒரு 10% கிரெடிட் குடுக்கலாம்!

    பதிலளிநீக்கு