ஆல்ஃபியின் புதுக்கோட்டை வருகை!

நண்பர் ஆல்ஃபி அவர்களுக்கான எளிய வரவேற்பு நிகழ்ச்சியில்
புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்க நண்பர்கள் -13-01-2016
மதுரை பேரா.இசையமைப்பாளர் திரு பிரபாகரன் உடன் உள்ளார்
------------------------------------------------------------------ 
ஏதோ ஒரு அமெரிக்கத் தமிழ்ப்பதிவர்
என்றுதான் நினைத்திருந்தோம்
அவர் வந்து பேசத்தொடங்கும்வரை


அவரும்
தன் கல்லூரிக் காலத்தில் தன் நண்பர் குழுவில்
அதிகம் பேசாத “ஊமன்“என்றே
பெயரெடுத்ததாகச் சொல்லியே தொடங்கினார்.
பிறகு கல்லூரிக் காலத்தில்
கையெழுத்துப் பத்திரிகை நடத்தியது,
நண்பர் விசுவை அமெரிக்காவுக்குக் கொண்டுவந்தது
அங்கும் “பேசத் தெரியாமல்“ இருந்தது,
பின்னர்
அவர்களின் பேராசிரியர் அய்யா சாலமன் பாப்பையா
வருகையை ஒட்டி,
வலுக்கட்டாயமாகப் பேச நேர்ந்தது,
அதில் கலக்கலாகப் பேசி
பேச்சாளராகி“ பின்னர் பட்டிமன்ற நடுவருமானது
என்று இயல்பான நகைச்சுவை இழையோடப்
பேசப்பேசத்தான், “இவர்
பேசத்தெரியாது என்று சொல்லிக்கொள்ளும்
பெரிய பேச்சாளர்“ என்பது எங்களுக்கே புரிந்தது!
அதோடு-
வெறும் பேச்சாளர் மட்டுமல்ல
“ஏழைகளுக்குச் செய்யும் உதவியென்பது
கடவுளுக்குக் கொடுக்கும் கடன்என்று
விவிலிய வாசகத்தை
நடைமுறைப்படுத்தி வருவது

அமெரிக்காவில் மட்டுமின்றி
தமிழ்நாட்டுக் கூடலூர் மலைக்கிராமம் ஒன்றைத் தத்தெடுத்து
அந்தஊர்ப் பிள்ளைகள் சிலரை
முதன்முறையாகப்
பத்தாம்வகுப்பு வரை கொண்டுவந்தது
தற்போது தமிழகம் வந்திருக்கும் நாள்களில்
பொங்கல் விழாவை
அவர்களுடன் கொண்டாடி மகிழ – மகிழ்விக்க
கூடலூர் போய்க்கொண்டிருப்பது..
எனத் தொடர
கூட்டமே நிமிர்ந்து வியந்து மயங்கிக் கேட்டுக்கொண்டிருந்தது!
(இவருக்குப் பேசத்தெரியாதுதான் என்பதை 
எல்லாருமே அப்பறம் புரிந்துகொண்டோம்ல..?)
வலைப்பதிவர் திருவிழாப் பையுடன், 
கையேடும் நூல்களும் வழங்கி வரவேற்பு
------------------------------------- 
அவர் பேச்சில்
இலக்கிய நயமில்லை – உண்மை இருந்தது
வார்த்தை ஜாலமில்லை
இயல்பான நகைச்சுவை இழையோடியது!
ஆவேசக் கூக்குரலில்லை
அமைதியான செயல்தூண்டல் இருந்தது!

அமெரிக்கக் கனவுகள் இல்லை
அனைவரின் நம்பிக்கையை விசிறிவிட்ட
நேர்மையின் கூர்மை இருந்தது!

இளைஞர்கள் பலர் கேள்விகள் கேட்டனர்
குறிப்பாக
அமெரிக்க வேலை வாய்ப்பைப பற்றிய கேள்விகள்!
அமைதியாக,
அதற்கான தகுதிகள் பற்றி அளவாகப் பேசினார்!
இலக்கியத்தோடு,
வாழ்வியலையும் கற்றுக்கொண்டு
ஏதோ வகுப்புக்கு வந்து செல்வது போலும்
நிறைவில் கலைந்து மகிழ்ந்தனர் நிறைய இளைஞர்கள்!
அதில் என் எம்.பி.ஏ. படிக்கும் என் மகளும் ஒருத்தி!
------------------
கூட்டம் கூட்டிவிட வேண்டும் என்று நினைத்திருந்தால்
கணினி கற்கும் மாணவ-மாணவியரை
நூற்றுக் கணக்கில் திரட்டியிருக்க முடியும்!
நண்பர் ஆல்ஃபியைத் தெரிந்த
வலைப்பதிவர் விழாவை நடத்திய
இளைஞர்களை மட்டுமே அழைத்திருந்தோம்
அதுதான் நேர்மையான நிறைவான கூட்டமாக இருந்தது!
அடுத்த முறை
விசுவோ, ஆல்ஃபியோ வந்தால்
சில நூறுபேரை எளிதாகக் கூட்டி
அமர வைக்க முடியும் என்று நம்புகிறோம்!
இதுதான் ஆல்ஃபியின் மந்திரம்!
நன்றி நண்பரே!
நட்பு வளர்க!
வணக்கம்!
----- 

இந்தச் சந்திப்பில் 
எதிர்பாராது வருகை புரிந்து மகிழச்செய்தவர்
ஆல்ஃபியின் கல்லூரிக் காலத் தோழரும்
தற்போதைய
அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியரும்
இசையமைப்பாளருமான
திருமிகு பிரபாகரன் அவர்கள்!
---------------------------------
இந்தச் சந்திப்புப் பற்றி
கணினித் தமிழ்ச்சங்கக் கவிஞர் மு.கீதா அவர்கள்
தனது வலையில் எழுதிய பதிவு 
பார்க்கச் சொடுக்குக -
--------------------------------------------------- 
நண்பர் ஆல்ஃபி (எ) ஆல்ஃபிரட் தியாகராஜன்
அவர்களின் வலைப்பக்கம் பார்க்க -

9 கருத்துகள்:

  1. அடுத்தமுறை பிரமாண்ட விழாவாக செய்து விடுவோம் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. ஐயா .. அருமையான பதிவு .. ஆனால் ஒரு திருத்தம். அவர்களால் தான் நான் அமெரிக்கா வந்தேன். அவர் என்னால் வரவில்லை. ரெண்டு ராசாதிக்களை பெற்ற அவர், ரெண்டு ராசாதிக்களை பெற்ற அடியேனை, போனா போது புள்ளகுட்டிகாரன் பிழச்சின்னு போன்னு கூட்டிவந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகாகா...மன்னிக்க வேண்டும் மன்னிக்க வேண்டும்- நீங்கஇல்ல விசு! நண்பர் ஆல்ஃபி மன்னிக்க வேண்டும். திருத்திவிட்டேன்..தெரியப்படுத்திய பெருந்தன்மைக்கு நன்றி.

      நீக்கு
  3. நாங்கள் கலந்துகொள்ளாத குறையை தங்களது பதிவு நிறைவு செய்தது. அறிமுகப்படுத்தும் விதமும், நிகழ்வுகளைப் பகிர்ந்த விதமும் எங்களை உங்களிடம் அழைத்து வந்துவிட்டது. நன்றி.

    பதிலளிநீக்கு
  4. இனிமையான சந்திப்பு என்பது உங்கள் பதிவினைப் படிக்கும் போது புரிகிறது. சந்திப்பு சிறப்புற நடந்தது அறிந்து மகிழ்ச்சி......

    சந்திப்புகள் தொடரட்டும்....

    பதிலளிநீக்கு
  5. நண்பர் ஆல்ஃபி இசையைப் பற்றி எழுதும் ஒரு பதிவராகத்தான் எனக்கு தெரியும். தங்கள் பதிவை படித்தப்பின்தான் அவரிடம் இத்தனை திறமைகள் ஒளிந்திருப்பதை காணமுடிந்தது. அவரைப் பற்றி விரிவாக அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அய்யா!
    த ம 2

    பதிலளிநீக்கு
  6. சார்

    ஆல்பி அவர்களும் பிரபாகர் அவர்களும் எனக்கு அவர்களின் பதிவுகள் மூலமாக அறிமுகமானவர்கள். அவர்களின் பல பதிவுகளையும் வாசித்து ரசித்திருக்கிறேன் . இருவரும் நண்பர்கள் என்பது புதுச் செய்தி. ஆல்பியின் படைப்பினைப் போலவே அவர் பேச்சும் சுவையானது என்ற உங்களின் பதிவும் சுவையானதே!

    பதிலளிநீக்கு
  7. நெஞ்சில் ஈரமுள்ள மனிதர் உயர்ந்த இடத்தில் இருக்கிறார் என்பது நமக்கெல்லாம் பெருமை ஐயா!

    பதிலளிநீக்கு
  8. தங்கள் அன்புக்கும் ,நட்புக்கும் என்றென்றும் கடமைபட்டுள்ளேன் ஐயா.
    தங்கள் பதிவைப் பார்த்தபிறகு இனிமேலாவது நன்றாகப் பேச வேண்டும் என்ற அவா எழுகிறது

    பதிலளிநீக்கு