“தப்பித்த குரங்குகள்!“--பேரா.ச.மாடசாமி. தமிழ்இந்துவில் வந்த அருமையான கல்விக் கட்டுரை



வடிவமைக்கப்படாமல் தப்பித்தது எதுவோஅதுவே உன் ஜீவன் மிக்க சாராம்சம் என்று சிந்தனையாளர்கள் சொல்வதுண்டு. நாங்கள் கல்வி உரையாடலில்வேடிக்கையாக இதைத் தப்பித்த குரங்குகள்’ என்று குறிப்பிடுவோம். யார் கைகளும் படாமல்யார் கைகளிலும் சிக்காமல் தப்பித்தவைதான் அசல்வடிவமைக்கப்பட்டதெல்லாம் நகல்தான்! பள்ளிக்கூடம் - உலகின் மிகப்பெரிய நிறுவனம் - தப்பிப்பது சுலபமாஅசல் முகத்தைத் திட்டமிட்டுக் கரைக்கிற இடம்!


இப்போது என் பள்ளிப் பருவம் ஞாபகத்துக்கு வருகிறது.1950-களின் இறுதியில் பெரியகுளம் வி.எம்.போர்டு உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். வராகநதி ஆற்றங்கரையில் இருந்த பள்ளி. எந்தக் காலத்திலும் வராக நதியில் கொஞ்சமாவது தண்ணீர் ஓடும். வகுப்பறை ஓய்ந்த நேரங்களில் வராகநதி ஆறும் ஆற்றங்கரையும்தான் எங்கள் கல்விக்கூடம். ஆசிரியர்கள் பல மாதிரிகளில் இருந்தார்கள். ஆழ்ந்த புலமையால் எங்களை விட்டுச் சற்றுத் தள்ளி நின்ற சர்மாசிவக்கொழுந்து; ‘அட போடா!’ என்று சொல்லி எங்களோடு எப்போதும் கலந்துநின்ற பாண்டியராஜன்பரம சாதுவான ஓவிய ஆசிரியர்குமுறும் வார்த்தைகளில் எங்களுக்கு அரசியல் கற்றுத்தந்த கைத்தொழில் ஆசிரியர் - எனப் பலர். ஆசிரியர் பலவிதமாக இருந்தபோதும் எவரும் எந்த நிர்ப்பந்தத்தையும் அழுத்தத்தையும் எங்கள்மீது ஏற்றியதில்லை.மாணவர்களுக்குள் சாதிமத பேதங்கள் இருந்ததும் இல்லை.  

கவிஞர் மு.மேத்தா அன்று எங்கள் பிரியத்துக்குரிய மாணவர் தலைவர். எதிர்காலம்குறித்த கனத்த சிந்தனைகளும் அன்று கிடையாது. எஸ்.எஸ்.எல்.சி-யில் எங்களில் பலர் 

500 க்கு 240 மதிப்பெண் வாங்கி பார்டர் பாஸ்’  பண்ணுவோம். அதற்கே, “மாப்ளபுரோட்டா வாங்கிக் கொடுய்யா!” என்று மச்சான்மார்கள் ட்ரீட் கேட்பார்கள்.

என் சொந்த முகம் எங்கே?
பள்ளியை விட்டு வெளியேறும்போது வடிவமைக்கப்படாத சொந்த முகங்களோடு வெளியேறினோம். அதற்கான சுதந்திர வெளி எங்கள் பள்ளியில் இருந்தது. அந்தச் சுதந்திர வெளி முக்கியமானது.

வர்த்தகமும்நிர்ப்பந்தமும் இல்லாத சுதந்திர வெளி. ஆளுமைகளைச் சிதைக்காத சுதந்திர வெளி. எந்த நேரமும் வெற்றியை நோக்கித் துரத்தி அடிக்காத பொதுவெளி! இப்போது அது எங்கேஆசிரியர் தட்டி உருட்டிக் காயப்போட்ட முகம்மத்திய வர்க்க ஆணாதிக்கப் பாடத் திட்டம் வழங்கிய முகம்வேலைவாய்ப்புகள் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகள் விரும்பிய முகம் என எல்லா முகங்களும் இருக்கின்றன. என் சொந்த முகம் எங்கேஎங்கே எனக்கான சுதந்திர வெளிகல்வி உரிமைச் சட்டம் போன்றவை அதட்டல் அதிகாரங்கள்’ மீது கேள்வி எழுப்பலாம். ஆனால்அக்கறை என்ற பெயரில் உலவும் நுட்பமான அதிகாரங்கள்’  எப்போதும் நிலைத்திருக்கின்றன.

வடிவமைத்தல்மதிப்பிடுதல்வடிகட்டுதல் எனப் பல வடிவங்களில் இருக்கின்றன நுட்பமான அதிகாரங்கள்.
எட்டாம் வகுப்பு வரை தேர்வு வைத்து வடிகட்ட முடியாமல் போகலாம். ஆர்வத்துடன் மேடையேற வந்த முகங்களில் எண்ணெய் வடியும் கறுப்பு மூஞ்சிகளை’ வடிகட்டித் துரத்து வதில் யார் குறுக்கிட முடியும்வடிகட்டும் வேலையைச் செய்வோர் பலர் கறுப்பர்களாக இருப்பதும் ஒரு முரண்!

வெட்டிச் சாய்க்கும் வடிவமைப்பு
மதிப்பிடுவதும் அதிகாரம்தான்! விடையில் எப்போதும் நாங்கள் தேடுகிற சில வார்த்தைகள் தென்பட வேண்டும். முழு விடையையும் வாசிக்க நேரம் கிடையாது. நீ எப்படி யோசித்து விடை எழுதினாலும் நாலு வரிக்கு ரெண்டு மார்க்’ என்று நான் முடிவு செய்துவிட்டால் ரெண்டு மார்க்தான். மாவட்டப் பேச்சுப் போட்டிக்குத் தயார் செய்யும்போது இயல்பாகப் பேசுகிறவனை அப்படியில்ல! ஏத்த எறக்கத்தோடு பேசு!’ என்று வெட்டிச் சாய்ப்போம். அதுதான் வடிவமைத்தல்!

விளம்பரங்களை நம்பும் மூளை
எதுவும் இயல்பாக இருப்பதோவிதவிதமாக இருப்பதோ வடிவமைக்கும் எங்கள் அதிகாரத்துக்கு எதிரானது. சிந்திக்க அனுமதிப்பதுகூட வடிவமைக்கும் அதிகாரத்துக்கு எதிரானதுதான். எனவேதான்கிளப்கேம்ப்ஒர்க்‌ஷாப் என்று பிஸியாக இருக்கவும்படிப்பது என்ற பெயரில் திரும்பத் திரும்ப டிரில் பண்ணவும் பிள்ளைகளைப் பழக்கியாயிற்று. பிஸியான பிள்ளை எதைச் சிந்தித்ததுபடித்த மனிதர்கள் மத்தியில்தான் பகை வளர்க்கும் மதவாதம் நிரம்பிக் கிடக்கிறது. அவர்கள் மத்தியில்தான் உளுத்துப்போன வைதிகச் சடங்குகள் புதுப்புது ரூபம் எடுக்கின்றன. அப்படியானால், ‘படிப்பும் பள்ளிக்கூடமும்’ கற்றுத் தந்தது என்னவடிவமைத்தது எதைவிளம்பரங்களை நம்பும் மூளைகளைத்தானே அவை வடிவமைத் திருக்கின்றன. எங்கே பிள்ளைகளுக்கான சுதந்திர வெளி?

வகுப்பறை தாண்டிய வாசிப்பு
இன்றைக்கும் கொஞ்சம் சுதந்திரவெளி மிச்சம் இருக்கும் இடம் அரசுப் பள்ளிகள்தான். அதனால்தான் அரசுப் பள்ளிகளுக்காக வாதாடுகிறோம். அரசுப் பள்ளிகளுக்காக வாதாடுவது குழந்தைகளின் சுதந்திரத்துக்காக வாதாடுவதாகும். அவர்களின் ஆளுமைக்காக வாதாடுவதாகும். பல ஆண்டுகளாக ஆசிரியர்மாணவரைச் சந்தித்து வருவதன் அடிப் படையில் சில உண்மைகளை இங்கு என்னால் நம்பிக்கையுடன் பகிர முடியும்.

ஒப்பிட்டுச் சொல்வதானால்அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம்தான் வகுப்பறை தாண்டிய வாசிப்பு கூடுதலாக இருக்கிறது. மனந்திறந்த உரையாடலும் அவர்கள் மத்தியில் சாத்தியமாக இருக்கிறது. விவாதத்தின்போது அவர்கள் வாயொடுங்கி நின்று நான் பார்த்ததில்லை. அரசுப் பள்ளி மாணவர்போல வெடிப்புறப் பேசக்கூடியவிவாதிக்கக்கூடிய மாணவர்களை வேறு பள்ளிகளில் காண்பது அரிது. பாட்டுநாடகம் என்றாலும் அரசுப் பள்ளி மாணவர்கள் தூள் கிளப்புவார்கள். தலையிட்டுத் தலையிட்டு வடிவமைக்கப்படாத திறமைகள். கூண்டுக்குள் சிக்காத குரங்குகள்...
(04-05-2015 தி இந்து தமிழில் வந்த படம்)

இந்தச் சுதந்திர வெளிகவனிப்பும் பராமரிப்புமற்ற பாழ்வெளியாக மாறிவருவதுதான் நம் கவலை. ஆசிரியர்கள் மட்டுமே இதை ஓரளவு சரிசெய்ய முடியும். எனவேதான் அரசுப் பள்ளி ஆசிரியர்களை நோக்கி அடிக்கடி பேசுகிறோம்.

நேசத்தின் வழி நெருங்குவோம்
பேரா.ச.மாடசாமி
எதையும் ஒரு நிர்ப்பந்தத்தோடு பேசியே நமக்குப் பழக்கம். அரசுப் பள்ளி ஆசிரியர்களை நோக்கிப் பேசுவது ஒருபுறம் நியாயத்தின் குரலாக இருந்தாலும் மறுபுறம் அதிகாரத்தின் குரலாகவும் இருக்கிறது. தேவையில்லை. அதிகார வழியிலான நிர்ப்பந்தத்தின் மூலம் அல்ல - நேசத்தின் வழி ஆசிரியர்களை நெருங்குவோம். மாற்றம் நிச்சயம் சாத்தியமாகும்!
நன்றி இந்து-தமிழ் 04-05-2015
ச. மாடசாமிகல்வியாளர், 
தொடர்புக்கு: smadasamy1947@gmail.com
------------------------------------------------------------------

7 கருத்துகள்:

  1. நேரத்தின் வழி நெருங்குவோம்
    அருமை ஐயா
    நன்றி
    தம 1

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    சொல்லிய ஒவ்வொரு கருத்தும் அருமையாக உள்ளது.. பகிர்வுக்கு நன்றி.த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. சிந்திக்க வேண்டிய கருத்துகள்
    //பள்ளியை விட்டு வெளியேறும்போது வடிவமைக்கப்படாத சொந்த முகங்களோடு வெளியேறினோம். அதற்கான சுதந்திர வெளி எங்கள் பள்ளியில் இருந்தது. அந்தச் சுதந்திர வெளி முக்கியமானது//
    மிகச் சரியான கருத்து
    .பெரும்பாலும் படைப்பாளிகள் அரசு பள்ளிகளில் இருந்துதான் உருவாகிறார்கள் .
    இப்போதெல்லாம் நிர்பந்தத்தின் காரணமாக அரசு பள்ளிகளும் தனியார் பள்ளிகளைப் போலவே நடந்து கொள்கின்றன. மனப்பாடம் செய்து எழுத வைத்தல், கற்றல் குறைபாடுள்ளவனை சாமர்த்தியமாக வெளியே அனுப்புதல் இவற்றை செய்து கொண்டிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  4. “ஆசிரியர் தட்டி உருட்டிக் காயப்போட்ட முகம், மத்திய வர்க்க ஆணாதிக்கப் பாடத் திட்டம் வழங்கிய முகம், வேலைவாய்ப்புகள் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகள் விரும்பிய முகம் என எல்லா முகங்களும் இருக்கின்றன. என் சொந்த முகம் எங்கே? எங்கே எனக்கான சுதந்திர வெளி?”

    சொந்த முகத்தைத் தொலைத்து நிற்கும் இக்கால மாணவர்களை நினைத்தால் கவலையாகத் தான் இருக்கிறது. அவர்களுக்கான சுதந்திர வெளியை க் கட்டாயம் நாம் அளிக்கத்தான் வேண்டும் என்ற விழிப்புணர்வையூட்டும் கட்டுரையைப் படைத்த ச.மாடசாமி அவர்களுக்குப் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  5. அருமையான கல்வி கட்டுரை.
    கல்வி என்று தான் வியாபாரத்தில் இருந்து விலகுமோ தெரியவில்லை. தன் பிள்ளைகளுக்கு செலவு செய்யும் கல்வி கட்டணம் அவனின் கல்வியை விட தாளாளரின் பொருளாதாரத்தைதான் கூட்டும் என்ற உண்மை என்றைக்கு பெற்றோர்களுக்கு தெரியுமோ தெரியவில்லை.

    த ம +1

    பதிலளிநீக்கு
  6. சிறந்த வழிகாட்டல்
    சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  7. பல கருத்துகள் சிந்திக்க வைத்தன ஐயா...

    பதிலளிநீக்கு