அன்பினியீர் வணக்கம்.
நான், 1980ஆம் ஆண்டிலிருந்து 1997வரை
திருமிகு குன்றக்குடி அடிகளார்
திருமிகு மதுரை நன்மாறன்
திருமிகு சாலமன் பாப்பையா
திருமிகு பாரதி கிருஷ்ணகுமார்
1997 முதல் 2017வரை
திருமிகு திண்டுக்கல் ஐ.லியோனி
2017ஆம் ஆண்டுக்குப் பிறகு
திருமிகு நந்தலாலா,
திருமிகு மதுக்கூர் இராமலிங்கம்
திருமிகு பழ.கருப்பையா,
திருமிகு அப்துல் காதர்
முதலான சான்றோர்ளை நடுவராகக் கொண்ட இலக்கிய, சமூக, கல்வி, அரசியல் பட்டிமன்றங்களில் சிலஆயிரம் மேடைகளில் பேசியிருக்கிறேன்.
அதிலும்,
நகைச்சுவைத் தென்றல் திரு.திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் என்னை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் தலைநகர்கள், மற்றும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், கத்தார், சிசெல்ஸ், ஜாம்பியா என உலகின் பல நாடுகளுக்கும் அழைத்துச் சென்றிருக்கிறார். லியோனி அவர்களோடு மட்டுமே (1997முதல்- 2017 வரையான) இருபதாண்டுகளில் குறைந்த பட்சம் 2,000 பட்டிமன்ற நிகழ்வுகளில்
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பேசியிருக்கிறேன். (இது இன்னும் அதிகமாக இருக்கும்! எண்ணவில்லை என்பதாலேயே
சுமாராக என்கிறேன்)
அதோடு,
பொதிகை, சன், கலைஞர், விஜய், ராஜ், பாலிமர், மெகா, நியூஸ்18, என பற்பல தொலைக்காட்சிகளில் பலநூறு முறை பேசியிருக்கிறேன். (இந்தக் கரோனாக் காலத்தில் சில மறு ஒளிபரப்பாகவும் வந்ததன! வந்தன! வந்துகொண்டே இருக்கின்றன!)
பேசிய பட்டிமன்றம் அனைத்திலும் அணித் தலைவராக மட்டுமே பேசியிருக்கிறேன் என்பது என் பெருமையல்ல, நடுவர்களின் பெருந்தன்மை!
1990களில் நான் நடுவராக, என் தலைமையில் அப்போது பேசிய மதுக்கூர் ராமலிங்கம், நந்தலாலா ஆகியோர் என்னை விடவும் சிறப்பாகப் பேசி வருவதை உணர்ந்து, நாளடைவில் அவர்களின் தலைமையில் பேசவும் நான் தயங்கியதில்லை. திண்டுக்கல் திரு.லியோனி அவர்களே இதை ஆலங்குடிக் கவிஞர் வெள்ளைச்சாமி அவர்களின் கவிதைநூல் வெளியீட்டு விழாவில் (15-3-2020) புதுக்கோட்டையில் சொன்னார். திறமைக்கு வயது தடையல்லவே!
ஆயினும், பல்லாயிரம் மேடை கண்ட நான், நடுவர் பொறுப்பை விரும்பிச் செய்வதில்லை! அது தொழில் போல ஆகிவிட்டதை நான்விரும்பவில்லை. தமிழகத்தின் பிரபலமான சில நடுவர்கள் விரும்பி அழைத்த போதும் கூட, நான் நாகரிகமாக மறுத்திருக்கிறேன். (எனக்கு நெருக்கமான பேச்சாளர் நண்பர்களுக்கும் இது தெரியும்) நான் எனக்கென்று சில கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு தான் மேடையேறுவேன். எனக்கு உடன்பாடற்ற தலைப்பில் பேசமாட்டேன் என என் நண்பர்கள் அறிவர். குறிப்பாக திரு ஐ.லியோனி அவர்கள் மற்றவரிடமும் இதைச் சொல்வார்!
பல ஆண்டுகளுக்குப் பிறகு
நான் நடுவராக
ஒரு பட்டிமன்றம் வருகிறது!
அதுவும் நான் விரும்பியது போல
முழுக்க முழுக்க இலக்கியம்
பேசுவதாக அமைந்திருப்பது
எனக்குப் பெருமகிழ்ச்சியளிக்கிறது.
இதுவரையான தமிழ்ப் பட்டிமன்ற உலகில்
இந்தத் தலைப்பில் யாரும் பேசியதில்லை என்று
உறுதியாகச் சொல்வேன் –
பட்டிமன்ற நண்பர்கள் இதை அறிவார்கள்
எமது இலக்கியப் பட்டிமன்றத்தின் தலைப்பு -
அழியாத் தமிழின் அடையாளம் யார்?
தொல்காப்பியரா? வள்ளுவரா? கம்பரா? பாரதியா?
அவரவர் வீடுகளில் இருந்தே
ஐவரும் பேசப் போகிறோம்.
நீங்களும்
வீடுகளில் இருந்தே
நட்பும் உறவுமாய்ப் பார்த்து கேட்டு மகிழலாம்.
தமிழ்சார்ந்த பல அரிய தகவல்களை நாங்கள் ஐவரும் தருவோம் எனும் உறுதியை மட்டும் உங்களுக்கு வழங்கி, நிகழ்வை நேரலையாகக் காண வருக வருக என அன்புடன் அழைக்கிறேன்.
நன்றி, வணக்கம்.
தோழமையுடன்,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை-622 004
செல்பேசி எண்- 94431 93293
--------------------------------------------------------