தமிழ் இனிது -19 "பொரி, பொறி"

           

(நன்றி- 17-10-2023 இந்து தமிழ் நாளிதழ் )

           என்னிடம் பேசும் பலரும், கேட்கும் கேள்வி “இது உங்க அப்பா அம்மா வச்ச சொந்தப் பெயரா, புனைப்பெயரா?“ என்பதுதான்!  நான் “புனைப் பெயரில்லை,  புனை பெயர்தான்“ என்பது வழக்கம்!

இரண்டுக்கும் வேறுபாடு உண்டு! எழுத்தாளர் பலரும் தமது சொந்தப் பெயரை விட்டு, வேறெரு மாற்றுப் பெயரில் எழுதுவார்கள்.  ஜெயகாந்தன் (முருகேசன்), புதுமைப் பித்தன் (சொ.விருத்தாசலம்), கண்ணதாசன்(முத்தையா), சுஜாதா, (ரங்கராஜன்) கந்தர்வன் (நாக லிங்கம்)  எனப் புகழ்பெற்றவர், உண்மைப் பெயர் அடைப்புக்குறிக்குள்!

அரசு விதி / கம்பீரம் என இதற்குச் சில காரணம் உண்டு! எனினும் அந்தப் பெயர், புனைந்து கொள்ளும் பெயர் என்பதால் “புனை பெயர்“ என்பது தான் (வினைத் தொகை) சரி. புனைப்பெயர் என்பது தவறு.   

கைப்பிடியும், கடைப்பிடியும்

          ‘கை பிடி அரிசி’ என்பது தவறு. கையால் ஒரு பிடி எடுக்கும் அளவால், மற்றும் ஆதரவாகப் பிடித்துக் கொள்வதால் ‘கைப்பிடி’ என்பதே சரி. “நல்ல கருத்தை, படிப்பது மட்டுமல்ல, ‘கடை பிடிக்க’வும் வேண்டும்“ என்பதும் சொல்லளவில் தவறு! கடையைப் போய் எதற்குப் பிடிக்க வேண்டும்?  ‘கடைப் பிடி’ என்பது தான் சரி.

சில்லரையும், சில்லறையும்

          முந்நூறு ரூபாய் தந்து, 295 ரூபாய்க்குப் பயணச் சீட்டு வாங்கி, மீதி 5ரூபாய்க்காக, இரவெல்லாம் தூங்காமல் வருவோர் உண்டு! விழிப்புணர்வைத் தூண்டிவிட்ட நடத்துநர் நடக்கும் போதெல்லாம், காதலன் காதலியைப் பார்ப்பது போலப் பார்த்து, ”அந்த சில்லரை?” என்று - தனக்கே கேட்காத குரலில் – கேட்பவர் உண்டு! சில்லரை என்பது தவறு! (இதை அந்த நேரத்தில் சொன்னால், அந்தப்  பயணர் நம்மைக் கடித்தே தின்று விடுவார் என்பதால் துணிச்சலோடு இந்து-தமிழில் சொல்கிறேன்!)

“ஒரு தொகையை சிலவாக அறுத்து (கூறுபோட்டு) தரப்படுவது சில்லறை. ஆகவே சில்லறைதான் சரியான சொல்“ என்று இதை அழகாக விளக்குவார் தமிழறிஞர் கோ.ஞானச்செல்வன்.

கோரலும், கோறலும்

            கோரிக்கையில்தான் கோரல் வரும். ‘கோருகிறோம்’ என்றால் ‘விண்ணப்பிக்கிறோம்’ என்பது பொருள். இதைச் சிலர் ‘கோறல்’ என்கிறார்கள்! ‘கோறல்’ என்றால் கொலை செய்தல்’ என்று பொருள்! (குறள்-321). எழுத்துப் பிழைக்காகக் கொலைப்பழி தாங்கலாமா?

சொரியும், சொறியும்

            ஊர்த் திருவிழாவில்  பூச்சொரிதல் முக்கியமானது.  

சிரங்கு வந்தால் நம்மை அறியாமலே கைகள் ‘சொறி’யும்!  பூவைச் சொறிந்து விட்டால் அதற்குக் கூசுமே? சொரிதல் வேறு, சொறிதல் வேறு.  

‘சொறி’யில் வரும் வல்லெழுத்தால் சிரங்கை, சிறங்கு என்பது தவறு! கவிமணி தேசிக விநாயகர்,  சிரங்கு வந்து பட்ட சிரமத்தைக் கூட வெண்பாவாய்ப் புலம்பினார்  “…சிரங்கப்ப ராயா, சினமாறிக் கொஞ்சம் இரங்கப்பா ஏழை எனக்கு”!  

பொரியும், பொறியும்

            வீட்டு எலிகளைப் ‘பொறி’ வைத்துப் பிடிக்கிறார்கள்.  

மாலைப் பொழுதினில், அதுவும் மழை நேரம் எனில்,    காரப் பொரி கடலையை வாய் தேடுகிறது!  

‘பொறி’ என்பது ஒருவகை எந்திரம். ‘பொரி’ என்பது காரைக்குடி நகரத்தார் வழக்கில் சொன்னால் “இடைப் பலகாரம்”!  இடையில் உண்ணும்  சிற்றுண்டி – டிஃபன்! - இந்தச் சொல்லே இனிக்கிறதல்லவா!

--------------------------------------  

(நன்றி- 17-10-2023 இந்து தமிழ் நாளிதழ் )

------------------------------------ 

கடந்த நமது வலைப்பதிவில் கேட்டிருந்த

கணக்குப் புதிருக்குப்

பலரும் சரியான விடையைச் சொல்லிவிட்டார்கள்!

அவர்கள் யார் யார் என்று 

கடந்த பதிவின் பின்னூட்டத்தில் பார்க்கலாம்.

விடையும், கடந்த பதிவின் 

பின்னூட்டத்திலேயே  (கமெண்ட்ஸ்) உள்ளது!

தனியாகத் தெரிவித்தவர்களும் பலர் உளர்.

இவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளுடன்,

நன்றி கலந்த வணக்கமும்.

அப்புறம்,

ஒரு முக்கியமான நன்றி-

இந்தப் புதிர் ஒன்றும்  நம் கற்பனையல்ல,

(அவ்வளவுக்கு நமக்கேது கணக்கறிவு?)

ஒரு சீன வலைத்தளத்தில் வந்தது.

அறிமுகமில்லாத அந்தத் தயாரிப்பாளர்க்கு 

எனது நன்றியும் வணக்கமும்.

----------------------------------------

14 கருத்துகள்:

  1. சிறப்பு.. தொடரட்டும் உங்கள் தமிழ்ப் பணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்வெள்ளி, அக்டோபர் 20, 2023

      நன்றி நண்பரே.. அப்படியே பின்தொடரும் (ஃபாலோயர்) பட்டியலில் சேரலாம்'ல?

      நீக்கு
  2. 'கோறல் என்றால் கொலை செய்தல்'... ஆத்தி! !
    சிறப்பு அண்ணா, இப்போ எனக்கு இடைப்பலகாரம் வேண்டும் போல் இருக்கிறது :-) அழகான சொல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்வெள்ளி, அக்டோபர் 20, 2023

      அங்க தான் காரைக்குடியில் கிடைக்குமே வைகறையிடம் சொல்லிவிடவா? (அப்புறம் உள்நுழைந்து பெயரையும் பதிவிட்டால்தான் பெயர் வரும் இல்லன்னா பெயரில்லா தான்!) ஒரு காப்பு -தடைக்காக- இப்படி வைத்திருக்கிறேன்

      நீக்கு
  3. பிழையின்றி எழுத வாராவாரம் கற்பிக்கும்ஆசிரியருக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்வெள்ளி, அக்டோபர் 20, 2023

      நன்றி நண்பா (உள்நுழைந்து பெயரும் பதிவிட்டால்தான் பெயர் வரும்)

      நீக்கு
  4. பதில்கள்
    1. நா.முத்துநிலவன்வெள்ளி, அக்டோபர் 20, 2023

      நன்றி. குறள் கணக்கு என்ன ஆயிற்று வலைச்சித்தரே

      நீக்கு
  5. இந்த 'ஒற்று' தமிழனை சிந்தி என உந்தும் பொரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்வெள்ளி, அக்டோபர் 20, 2023

      ஆகா.. பக்தி மொழியில் சொன்னால், “வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி” நன்றி அய்யா

      நீக்கு
  6. வழக்கம் போலவே உங்கள் பாணியில் சுவையான சொல் விளக்கங்கள் ஐயா!

    கோரலைக் கோறல் எனக் கூட எழுதுகிறார்கள் என்பது வியப்பாக உள்ளது! எழுத்துப்பிழைக்காகக் கொலைப் பழி தாங்கலாமா என்ற உங்கள் கேள்வி சிரிப்பு மூட்டியது. இதே போல் கடை பிடி எனத் தவறாக எழுதுபவர்களைக் "கடையைப் போய் எதற்காகப் பிடிக்க வேண்டும்?" என்று நீங்கள் கேட்டது சுவை. இத்தகைய நகைச்சுவையான விளக்கங்கள் படித்த இலக்கணம் மறவாமல் இருக்க வாசகருக்கு உதவும்.

    பூவைச் சொறிந்து விட்டால் அதற்குக் கூசும் என்று எழுதியது அழகிய கவிதை ஐயா!

    மிக்க நன்றி!😊

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்வெள்ளி, அக்டோபர் 20, 2023

      வழக்கம் போல உ ங்கள் ஊக்க உரைகள். நன்றி நண்பா

      நீக்கு
  7. மகிழ்வும் நன்றியும் ஐயா.

    பதிலளிநீக்கு
  8. "எழுத்துப் பிழைக்காகக் கொலைப்பழி தாங்கலாமா?" நல்ல நகைச்சுவை!

    பதிலளிநீக்கு