குழந்தையின் அரசியல் கேள்வி!

திருச்சியைச் சேர்ந்த என் நண்பரும் பத்திரிகையாளருமான 
வில்வம் தனது அய்ந்து வயது மகள் கியூபாவுடன், 
திருச்சி பகுதியில் இரு சக்கர வாகனத்தில்
போய்க் கொண்டிருந்த போது கியூபா கேட்டாராம் -
 " ஏம்ப்பா, நிறைய சுவரில் "அம்மா அம்மா"னு எழுதி இருக்காங்க?”

இதுபோல குழந்தைகள் அப்பா-அம்மாவைக் கேட்கும்போது பெரும்பாலான பெற்றோர்கள் ஒன்று அவசரத்திற்கு தப்பும் தவறுமாக குழந்தைதானே என்று எதையாவது சொல்லும் வழக்கத்தை மீறி, இவர் தடுமாறி இருக்கிறார்.

மீண்டும் கியூபா  " ஆடு, இலை,   இதெல்லாம்
எப்பப்பா எழுதுவாங்க ?", எனக்  கேட்டாராம்! 

அப்போதும் பதில் சொல்லவில்லை. 

அய்ந்து வயது குழந்தையின் அரசியல் நகைச்சுவையோ...?

என்று நம்மைக் கேட்கிறார்.

குழந்தைதான் மனிதரின் தந்தை என ஒரு மேலைப் பழமொழி உண்டே வில்வம்?

தமிழாசிரியர்களுக்கான ஐந்துநாள் பயிற்சிமுகாம்


புதுக்கோட்டை ஆர்.எம்.எஸ்.ஏ. நடத்தியது – தமிழாசிரியர்கள் புத்துணர்வு!

                 புதுக்கோட்டை அருகில் உள்ள கைக்குறிச்சி சுபபாரதி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் -மாவட்டம் முழுவதிலும் இருந்து, 9,10ஆம் வகுப்புத் தமிழாசிரியர்கள் 210 பேர் கலந்துகொண்ட ஐந்துநாள் பயிற்சிமுகாம் நடந்தது. நேற்று-சனிக்கிழமையுடன் நிறைவடைந்த பயிற்சிமுகாமில் கலந்துகொண்ட தமிழாசிரியர்கள் பலரும் இந்தப் பயிற்சிமுகாம் தமக்குப் புத்துணர்வளித்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ஆர்.எம்.எஸ்.ஏ திட்டத்தில் ஐந்து நாள் தமிழாசிரியர் பயிற்சி முகாம்

                          ஆர்.எம்.எஸ்.ஏ. எனப்படும் ‘அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம்’ என்பது மத்திய மாநில அரசுகளின் நிதிஉதவியோடு நாடுமுழுவதும் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இத்திட்டத்தின் படி 9,10ஆம் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்களுக்கான ஐந்துநாள் புத்துணர்வுப் பயிற்சிமுகாம் தற்போது மாநிலம் முழுவதும் நடத்தப் பட்டு வருகிறது.
                          இதன் ஒருபகுதியாக கடந்த28ஆம்தேதி தொடங்கிய புதுக்கோட்டை மாவட்டத் தமிழாசிரியர் பயிற்சி முகாம் நேற்று நிறைவடைந்தது. பயிற்சிமுகாமில் கலந்து கொண்டு தொடங்கிவைத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுகுமார் தேவதாஸ், “பள்ளிகளில் பாடம்நடத்தும் ஆசிரியர்கள் தங்கள்திறiமைகளை வளர்த்துக்கொள்வதோடு மாணவர்களின்; பலவகைத் திறமைகளையும் கண்டறிந்து வளர்க்கவே இதுபோன்ற முகாம்களை அரசு தம்செலவில் நடத்துகிறது” என்று தெரிவித்தார். முகாமை ஏற்பாடு செய்திருந்த ஆர்எம்எஸ்ஏ பொறுப்பாளர் முனைவர் ரெ.கனகசபாபதி பேசும்போது, “மற்றப் பாட ஆசிரியர்களை விடவும் தமிழ்ப்பாடம் நடத்தும் ஆசிரியர்களின் பணி கூடுதல் சிறப்பு வாய்ந்தது, அதனால்தான் மற்ற ஆசிரியர்களை சார், டீச்சர் என்று அழைக்கும் பள்ளிக் குழந்தைகள் தமிழாசிரியர்களை மட்டும்தான் அம்மா என்றும் அய்யா என்றும் அழைக்கிறார்கள் இந்த வகையான மாணவர்களின் உளவியல் நுட்பத்தைத் தமிழாசிரியர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்றார். 
                              பயிற்சி நிகழ்ந்த ஐந்துநாட்களுக்கும், வகுப்பறைகள் மற்றும் கூட்ட அரங்கங்கள் மற்றும் ஒலி-ஒளி வசதிகளை நன்கொடையாக வழங்கிய சுப-பாரதி கல்விநிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன், செயலர் வீ.வைத்தியநாதன் ஆகியோர் பயிற்சிமுகாமில் கலந்து கொண்டு ஆசிரியர்களை வாழ்த்திப் பேசினர்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், சோலை!
                                 இம்முகாமின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கருத்தாளர்களாக புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியரும் துணைமுதல்வருமான நா.முத்து பாஸ்கரன், கொப்பனாப் பட்டி மு.நா.செ. உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் கு.ம.திருப்பதி, பெருங்குடி அரசு உயர் நிலைப் பள்ளித் தமிழாசிரியர் மகா.சுந்தர், காரையு|ர் மொ.அ.கா.மேல்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் சுப.கோபிநாத், ஆகிய நால்வரும் திறம்படப் பணியாற்றி பின்வருமாறு பயிற்சித் தலைப்புகளையும் பயிற்சிதரும் பேராசிரியரகள் மற்றும், தமிழறிஞர்களையும் ஒருங்கிணைத்திருந்தனர். மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த 160க்கும் மேற்பட்ட பெண்ஆசிரியர்கள் உள்ளிட்ட 210 தமிழாசிரியர் களையும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், மற்றும் சோலை என ஐந்து குழுக்களாகப் பிரித்து பெரும்பாலும் தனித்தனி வகுப்பாகவும், அவ்வப்போது இரண்டிரண்டு குழுக்களை மட்டும் இணைத்தும் பயிற்சி தரப்பட்டது.

பயிற்சிக் கையேடு, குறிப்பேடு எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன.
                           இம்முகாமில் கலந்துகொண்ட அனைத்துத்த தமிழாசிரியர்களுக்கும் மாநில அனைவர்க்கும் இடைநிலைக் கல்வித்திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள ‘தமிழாசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சிக் கையேடு’ எனும் நூலும், குறிப்பேடுகளுடன் எழுதுபொருளும் இலவசமாக வழங்கப்பட்டது. இதனை திட்டப் பொறுப்பாளர் முனைவர் ரெ.கனக சபாபதி அனைவருக்கும் வழங்கினார்.

பயிற்சித் தலைப்புகளும் பயிற்சிதந்த தமிழறிஞர்களும்
                            ‘தமிழாசிரியர் தகுதிகள்’, ‘வகுப்பறையும் தமிழாசிரியரும்’, ‘மாணவர்கள் நம் குழந்தைகள்’, ‘ஆசிரியர்-மாணவர் உறவு’, ‘செய்யுள் கற்பித்தல்’ ‘உரைநடை கற்பித்தல்’ ‘இனிக்கும் இலக்கணம்’ ‘மொழியாக்கமும் மொழிபெயர்ப்பும்’, ‘வாழ்வியல் திறன்கள்’, ‘கணினித்தமிழ் கற்போம்’ ‘இசையால்தமிழ்வளர்ப்போம்’,‘சங்க இலக்கியம்’, ‘காப்பிய இலக்கியம்’, ‘நீதி இலக்கியம்’, ‘பக்தி இலக்கியம்’, ‘சிற்றிலக்கியம்’, ‘நாட்டுப்புற இலக்கியம்’, ‘இலக்கண மாற்றங்கள்’ ‘காலந்தோறும்கல்வி’, ‘கதைகளும்கதைஆக்கமும்’, ‘மரபுக்கவிதையும் ஆக்கமும்’ ‘புதுக் கவிதையும் ஆக்கமும்’, ‘அய்க்கூவும் உருவாக்கமும்’, ‘பாநயம் மற்றும் பாவகைகள்’ ‘தமிழ்வளர்ச்சியில் சிற்;;றிதழ்கள்’, ‘பெரியாரின் கல்விச் சிந்தனைகள்’, ‘நாட்டுப் பற்றை வளர்க்கும் நற்கதைகள்’, ‘நன்னெறிக் கல்வி’ , ‘ஊடகத் தமிழ்’, ‘தமிழரும் தமிழும்’, ‘எழுத்துப் பிழை களைதல்’ ‘உச்சரிப்பில் குறைபாடு களைதல்’  ஆகிய 30க்கும்; மேற்பட்ட தலைப்புகளில், அந்தந்தத் துறை சார்ந்த கல்லூரி-பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், வல்லுநர்கள் மற்றும் தமிழறிஞர்களைக் கொண்டு ஐந்துநாள்களும் சிறப்பாகப் பயிற்சியளிக்கப் பட்டது. 
                             அரசு ஆசிரியர்பயிற்சிக் கல்லூரி முதல்வர் முனைவர் ம.அன்புச் செழியன் , ‘ஞானாலயா’ பா.கிரு~;ண மூர்த்தி, மதுரைக் கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம், சாகித்திய அகாதெமி ஆலோசனைக்குழு உறுப்பினர் கவிஞர் தங்கம் மூர்த்தி;, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் வெற்றிச் செல்வன், புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரிப் பேராசிரியர்கள் முனைவர் மு.பழனியப்பன், முனைவர் அ.செல்வராசு, முனைவர் ச.மாதவன், முனைவர் இரா.கலைச் செல்வி, மகளி;ர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் திராவிடராணி, ஜெ.ஜெ.கல்லூரிப் பேராசிரியர் முனைவர் அ.விமலா, மதுரை சூரியன் பண்பலை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஸ்டீபன், பெரியாரியல் அறிஞரும் பணிஓய்வுப் பேராசிரியருமான நெடுஞ்செழியன், புலவர் மு.பாலசுப்பிரமணியன் (சுபபாரதி கல்லூரி) கவிஞர் வி.கே.கஸ்தூரி நாதன் (வி.எஸ்.கே.ஆசிரியப்பயிற்சி நிறுவனம்), புலவர் மா.நாகூர் (உலகத் திருக்குறள் பேரவை) தமுஎகசவைச் சேர்ந்த படைப்பாளர்கள் ஜீவி, ஆர்,நீலா, ரமா ராமநாதன், ராசி.பன்னீர்;;ச்செல்வன்(அறிவியல் இயக்கம்)  பாவலர் பொன்.கருப்பையா (நல்லாசிரியர்) ச.குமார் (மு.க.ஆசிரியர்) சுதர்சன் கல்லூரிப் பேராசிரியர் அ.கருப்பையா விஜயலட்சுமி (மாவட்ட அரசு ஆசிரியப் .பயிற்சி நிறுவனம்), கவிஞர் இரா.தனிக்கொடி (திரைப்படப்பாடலாசிரியர்) முதலியோருடன் ஒருங்கிணைப்பாளர்களும் அவ்வப்போது  கலந்து கொண்டு வகுப்புகளை ஆழமாகவும் கலகலப்பாகவும் நடத்தியதாக பயிற்சி பெற்ற தமிழாசிரியர்கள் தெரிவித்தனர். 

மாவட்டக் கல்வி அலுவலர் கலந்துகொண்ட நிறைவு விழா நிகழ்ச்சிகள்:
                               சனிக்கிழமை மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் வெ.தமிழரசு, மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரெ.கனகசபாபதியுடன், சுபபாரதி கல்விநிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் மற்றும் செயலர் பேரா.வீ.வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
                               பயிற்சி முகாம் மற்றும் விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து, திட்ட அலுவலர்கள் ராஜேந்திரன் மற்றும் ரெத்தினகுமார் ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக கு.ம.திருப்பதி வரவேற்புரையாற்ற, நன்றியுரையை மகா.சுந்தர் நிகழ்த்த, நா.முத்துபாஸ்கரன் மற்றும் சுப.கோபிநாத் இருவரும் தொகுத்துவழங்கினர். 

                                பயிற்சி முகாமில் கலந்து கொண்ட தமிழாசிரியர்கள் இப்பயிற்சி தமக்குப் பெரிதும் புத்துணர்ச்சி ஊட்டியதாகக் கூறியதோடு கணினித்தமிழ் உள்ளிட்ட பல புதிய கற்பித்தல் முறைகளை மேலும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
------------------------------------------------------------------------------------

(இந்தச் செய்தியில் “பயிற்சித் தலைப்புகள்“ எனும் ஒரு பத்தியைத் தவிர, சற்றேறக்குறைய இந்தச் செய்தியை முழுவதுமாக -05-03-2012- வெளியிட்டிருந்த “தினமணி“, “தீக்கதிர்“  நாளிதழ்களின் புதுக்கோட்டைச் செய்தியாளர்கள் திரு.மோகன்ராம், திரு சு.மதியழகன் ஆகியோர்க்கும் இந்த நாளிதழ்களின் நிருவாகிகளுக்கும் நன்றி)

எனது ஆசிரியப்பணியில் ஒரு நல்ல நாள்...நிறைவுப் பகுதி

 25-02-2012, 
எனது ஆசிரியப்பணியில் ஒரு நல்ல நாள்... நிறைவுப் பகுதி
     காலை எழுந்ததும், யார்யாரிடமிருந்து குறுஞ்செய்தி எத்தனை மணிக்கு வந்திருக்கிறது என்று பார்த்தேன்.கோமதி(4.05), தினேஷ்(4.15), கணேஷ்(4.27), அபி(4.37), நாகலட்சுமி(4.40), இணையதுல்லா(4.40), பாண்டி-சித்ரவேலு(இருவரும் அண்ணன்-தம்பிகள் ஒரேவகுப்பு-(4.52)) என்று பட்டியல் நீண்டது. இன்னும் சிலர் 5மணிக்கு மேல் எழுந்து படித்தால் குறுஞ்செய்தி தரவேண்டாம் என்று சொன்னாலும் கேட்பதில்லை.
     நேற்றிரவு, இவர்களோடு நிவேதிதா(10.47) சுவாதி(10.42) தமிழ்ச்செல்வி (10.35)என்று மாணவியர் அளவிற்கு மாணவர்கள் இரவு10மணிக்கு மேல் படிப்பதாகக் குறுஞ்செய்தி ஏதும் சொல்லவில்லை. அவர்கள் 37பேருக்கும் “நன்று. விடிகாலையில் எழுந்து படித்துவிட்டு எழுதிப்பார், இரவு வணக்கம்“ என்று (ஆங்கிலத்தில்தான்) பதில்செய்தி அனுப்பும் போது மணி இரவு 11.12. மணிகண்டன் விடுதியில் இருப்பதால் செய்தி தரமுடியவில்லை என்று வருத்தப் பட்டுக்கொண்டது ஞாபகத்திற்கு வந்தது.(இதற்காகவே அவன் 3நாள் விடுமுறையில் ஊருக்குப் போயிருந்த நாள்களில் இரவு 10மணிக்குப் பிறகும் விடிகாலை 5மணிக்கு முன்னதாகவும் குறுஞ்செய்திகள் அனுப்பியிருந்ததை வகுப்பில்  பாராட்டியிருந்தேன்.)
     பிறகு, நாளை மறுநாளைக்கு மறுநாள் (28.02.2012) புதுக்கோட்டை மாவட்டம் முழுவதுமுள்ள -9,10ஆம்வகுப்பு நடத்தும்- தமிழாசிரியர்களுக்கு அனைவர்க்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் நடத்தவுள்ள 5நாள் பயிற்சி முகாமில் உரையாற்ற, யார்-யாரையெல்லாம் அழைக்கலாம் என்று நேற்றுப் போட்டு வைத்திருந்த திட்ட வரைவை மீண்டும் எடுத்துச் சரிசெய்து, விட்டுப்போனவர்களைத் தொலை பேசியில் பிடித்து, உறுதி செய்து கொண்டு, செய்தித்தாளை மேய உட்காரும் போது காலை மணி 7.
     காலை 10 மணிக்கு பள்ளிக்கூடம் போனேன். நேற்றைய நிகழ்வுப் படி நான் போக வேண்டியதில்லை என்றாலும், பள்ளிக்கு அருகிலேயே என்வீடு என்பதால், விடுமுறை நாளில் வேறு முக்கிய வேலை இல்லை என்றால் பள்ளிக்கூடப் பக்கம் வந்துவிடும் வழக்கப்படிப் போய்விட்டேன். முதல்வர், “நல்லவேளை வந்தீர்கள், கணினிஆசிரியர் மருத்துவவிடுப்பு.“என்று சொல்லி, நாளை(26-02-2012) நடக்கவுள்ள உதவிக் கல்வி அலுவலர் அரசுத் தேர்வுக்கு கொஞ்சம் “தேர்வுஎண் அறை ஒதுக்கீட்டுப் பட்டியல் அடித்துத் தரமுடியுமா?“ என்று கேட்க, அதை அடித்துக் கொடுத்துவிட்டு வெளியே வந்தால் மணி 11.
     ள்ளியில் இருந்து, 10-இ தினேஷை அலைபேசியில்  அழைத்தேன்.
“அய்யா வணக்கம்யா. சொல்லுங்கய்யா
“வணக்கம் பா. எங்கய்யா இருக்கே?
அய்யா வீட்ல ங்கய்யா
“சரி நீ வீட்லயே இரு நா உங்க வீட்டுக்கு வர்ரேன்
என்னங்கய்யா சேதி? எங்கய்யா இருக்கீங்க? நான் வரட்டுங்களாய்யா?
“இல்லப்பா நானே வர்ரேன்என்று பேச்சைத் துண்டித்தேன்.
அவன்வீடு ரெண்டுதெரு தள்ளித்தான் இருக்கிறது என்று அவன் அப்பா மனோகரனும் சொல்லியிருந்தார்.  நான் இரவு நேரத்தில் 10மணிக்கு மேல் 10.30க்குள் பேசுவேன், “அய்யா படிக்கிறேன்யாஎன்ற பதிலைத் தவிர அப்பா அம்மா எடுத்தால் பேசமாட்டேன்“ என்று வகுப்பில் சொல்லி, எல்லாருடைய அலைபேசி எண்ணையும் வாங்கிக்கொண்டு என் எண்ணையும் தந்திருந்தேன். ஒருநாள் இரவு 10.20க்கு நான் தினேஷை அழைக்க, அவன் அப்பா எடுத்து, “அய்யா வணக்கம்யா. அவன் படிக்கிறான் யா. இப்பல்லாம் என்னடா இரவு 10மணிக்கு மேலயும் படிக்கிற மாதிரி இருக்கு?னு கேட்டப்ப தான் யா நீங்க போன் பண்ணுவீங்கன்னு சொன்னான், ரொம்ப நன்றிங்கய்யா. ஒருநாள் வீட்டுக்கு வர்ரதா சொன்னீங்களாம், அவசியம்  வாங்கய்யா, இந்தா இருங்க அவன்கிட்ட குடுக்கிறேன்என்று சொல்லியிருந்த்து நினைவுக்கு வந்தது..
எல்லாருக்கும் பேச முடியாதென்றாலும், வேறுவேறு பத்துப்பேருக்கு அவ்வப்போது இரவு 10மணிக்கு மேல் பேசுவதால் நல்ல பலன் கிடைத்த்து. குறுஞ்செய்தி அனுப்ப நூறு ரூபாய்க்கு ஏற்றினால்தான் மாதம் 3000 பேருக்கு அனுப்பலாமே! இதில் நான்கு பிரிவுப் பத்தாம்வகுப்பின் - 192 பேரையும்  கொஞ்ச நேரம் கூடுதலாகப் படிக்க வைக்க முடிகிறதே!
தினேஷ் வீட்டுக்குப் போனால், அவன் தம்பியும் அம்மாவும் திருவப்புர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அப்பா வெளியில் போய்விட்டாராம். அய்யா வாங்கய்யா இருங்கய்யா டேய் ஓடுரா  பாய் கடையில போயி ஒரு கூல் டிரிங்ஸ் வாங்கிட்டு வாடா என அவன் அம்மா பரபரப்பாக, நான் அன்போடு மறுத்து  விட்டு, ஒரு குவளை தண்ணீர் கொண்டுவரச் சொல்லிக் குடித்துவிட்டு, தினேஷை வெளியில் அழைத்துப் போக அனுமதி கேட்டேன்.
எனது ஆக்டிவா வண்டியில் பின்னால் ஏறிக்கொண்ட தினேஷ் புரிந்து கொண்டான். அய்யா யார் வீட்டுக்கய்யா போறோம்?“ “இணையதுல்லா வீடு“ என்றதும் “இங்க தான்யா ஆசாரி காலனி (விஸ்வகர்மா நகர்)“ என்றான்.
அண்டக்குளம் வழியில் சாலையோரத்தில் இருந்த தேநீர்க்கடை வாசலில் கூட்டித் தள்ளிக்கொண்டிருந்தது நம்ப பத்தாம் வகுப்பு இ கவிதா மாதிரி இருந்தது. தினேஷிடம் கேட்டேன்.
“ஆமாங்கய்யா கவிதா தாங்கய்யா.. இது அவங்க கடைதான்–தினேஷ்.
வண்டியை நிறுத்தி இறங்கும் போதே கையில் இருந்த விளக்குமாற்றை மறைத்துக் கொண்டு, “அய்யா வாங்கய்யாஎன்ற கவிதாவின் முகத்தில் திகைப்பு. அவங்க அப்பா, அம்மா ரெண்டு பேரும் வாசலுக்கு வந்து, கடை பெஞ்சில் உட்காரச் சொன்னார்கள். “நான் கவிதாவோட தமிழய்யா, கவிதா வீட்ல எப்டிப் படிக்குது? எவ்வளவு நேரம் படிக்குது?“ என்றதும் “படிக்குது. பாஸ் பண்ணீரும்ல?“ “என்ன அப்படிக் கேட்டுட்டீங்க? 400க்கு மேல வாங்கும். மேல நல்லா படிக்க வையுங்கஎன்று சொல்லிக் கிளம்பப் போக, “காபி சாப்பிடுங்கய்யா“ என்று போர்ன் விட்டாவை நீட்டினார். அந்தக் கடையில் அது 10ரூபாய் இருக்கும்ல என்று நினைத்துக் கொண்டே தயக்கத்துடன் வாங்கி பாதியை தினேஷிற்குக் கொடுக்கக் குவளை கேட்டேன். அதை கவனிக்காத மாதிரி கவிதா “அப்பா அவன் அய்யா கூட வந்திருக்கான் என் கிளாஸ்தான்“ என்று மெதுவாகச் சொல்ல, அதற்குள் அவனுக்குப் போட்ட தேநீரை கவிதாவிடமே கொடுத்துக் கொடுக்கச் சொன்னார் அவர்.
“இன்னும் 36நாள்தான்“ என்று அரசுப் பொதுத்தேர்வுக்கு மீதம் உள்ள நாள்களைச் சொல்லி, நல்லாப் படிக்கச் சொல்லுங்க என்று கிளம்பினேன். கவிதா முகத்தில் மகிழ்ச்சியும் பெருமையும். அதுதானே எனக்கு வேண்டும்!
அடுத்த வீதிக்கு அடுத்த திருப்பத்தில் திரும்பிக் கடைசியில் இருந்த இணையதுல்லா வீட்டு வாசலில் வண்டிய்யை நிறுத்தி இருவரும் இறங்கினோம். ஒற்றைக் குடிசை. வீட்டில் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அப்பா அம்மா இரண்டு பேரும் வேலைக்குப் போய் விட்டார்களாம். இவன்தான் சமைத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். அவன் என்னை உள்ளே அழைக்காமலே நான் போய்விட்டேன்.
அவன் எழுத்து மணிமணியாய் இருக்கும். எல்லாப் பாட வகுப்பிலும் ஆசிரியர்கள் தருவதைக் கரும்பலகையில் எழுதிப் போடுவது அவன்தானே! நான் கேட்காமலே ஒரு சொம்பு தண்ணீர் கொண்டுவந்து தந்தான் இணையா. அப்போதுதான் கழுவிச் சுத்தமாக்க் கொண்டுவந்திருந்தான். நல்ல பய!
அலைபேசி அழைத்தது. சித்ரா டீச்சர். ஆர்எம்எஸ்ஏ யில் தமிழகச் சுற்றுலா செல்லக் கடைசி நேரத்தில் ஒருசிலர் வராததால், கடைசி நேர வாய்ப்பை இரவு 8மணிக்கு என்னிடம் அவர்கள் சொல்ல, நான் இவர்களுக்குச் சொல்ல, சித்ரா போயிருந்தார்கள். இதனால், எனக்கு நன்றி சொல்ல, என்னிடம் சொன்னது சரி. நம் பள்ளி முதல்வரிடம் சொல்லி என்னைப் போட்டுக் கொடுத்துடாதீங்க என்று சிரித்துக் கொண்டே சொல்லி வைத்தேன். இப்படி நான் சொல்லி அனுப்பி வைத்த ஓவிய ஆசிரியர் புகழேந்தியைக் காலையிலிருந்து நான் தொடர்பு கொள்ள முயன்றும் அவர் எடுக்கவில்லை!
ணையதுல்லா,தினேஷ் இருவரையும் ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டை நகர எல்லையில் வந்து, தஞ்சைச் சாலையில் வண்டியைத் திருப்பினேன்.
“அய்யா முள்ளுர் தானே போறோம்?“
“ஆமாம்பா, பத்தாம்ப்பு பிள்ளைங்க யார் யார் வீடு அங்க இருக்கு?“
“நிறைய பசங்க இருக்காங்கய்யா... ஆனா நாங்க அங்கல்லாம் போனது இல்லங்கய்யா...“ “ஓகோ! அவுங்க தாழ்த்தப்பட்டவுங்க..ங்கிறதாலயா?“ “அப்படில்லாம் ஒன்னும் இல்லய்யா..“ இணையதுல்லா சொல்ல, தினேஷ் இதற்கு ஒன்றும் சொல்லவில்லை. “அய்யாகூட போறதுனால அப்பா ஏதும் சொல்லமாட்டாங்க இல்லடா“
எங்கள் பள்ளியிலிருந்து தஞ்சைச் சாலையில் 4கி.மீ.சென்று இச்சடிக்கு முன்னாலேயே சடக்கென்று திரும்பியது முள்ளுர். கப்பிச்சாலையில் ஒரு கி.மீ. சென்றதும் முன்பு இதேபோல -4வருடங்களுக்கு- முன் பத்தாம் வகுப்பு மாணவர்களைப் பார்ப்பதற்காகவும், அதற்கு முன் 1990இல் அறிவொளி இய்க்கக் கலை நிகழ்ச்சிக்காகவும் இங்கு வந்தது நினைவுக்கு வந்தது.
எங்களைப் பார்த்துவிட்ட எங்கள் பள்ளியிலேயே பதினோராம் வகுப்புப் படிக்கும் மாணவர் சிலர் – மதியம் தேர்வுக்காக வந்துகொண்டிருந்தவர்கள் – எங்களைப் பார்த்த்தும் நின்று “அய்யா என்னங்கய்யா இங்க?“ என்றார்கள். சிலர் பார்த்துக்கொண்டே வண்டியை வேகவேகமாக மிதித்துப் பறந்தார்கள்....!
“சும்மா தாம்பா... பத்தாம்ப்பு படிக்கிற பசங்க-புள்ளைங்க வீடுகளுக்கு பரிச்சைக்குள்ள எப்பவாச்சும் வருவேன்னு சொல்லியிருந்தேன்... இன்னைக்கு நேரம் கிடைச்சுது...என்றதும், யார்யார் வீடு எந்தெந்தப்பக்கம் என்று அடையாளம் சொன்னது ஒன்றும் புரியவில்லை என்றாலும் கேட்டுக்கொண்டு, கிளம்பினோம். “கோவில் மடத்துல கொஞ்சம் பசங்க உக்காந்து கல்லாங்காய் ஆடிக்கிட்டிருக்காய்ங்க... இப்பப் போனா படிச்சுரலாம்“ என்று சொல்லியவாறு சில 11ஆம் வகுப்பு மிதிவண்டிகள் பறந்தன...!
கோவில் முக்கத்தில் திரும்பும்போது, எதிரே வந்த விஜயலட்சுமி (11ஆம் வகுப்பு) நின்று, “வணங்கங்கய்யா... என்னங்கய்யா... இவ்ளோ தூரம்?என்று கேட்டு விட்டு, “அய்யா வீட்டுக்கு வாங்கய்யா... அப்பா உங்கள பாக்கணும்னு சொன்னாங்கய்யா... வீட்டுக்கு வாங்கய்யா... இல்லன்னா இங்க எங்க போறீங்கன்னு சொல்லுங்க நான் அப்பாவ அங்கக் கூட்டியாறேன்என்று சொல்லவும், “இல்லப்பா இன்னொரு நாள் வர்ரேன்.. அப்பா கிட்ட சொல்லு“ அந்த மாணவி, நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தில் (அண்டர்-19) மாநில அளவில் 2,3ஆம் இடங்களை சில முறை வென்று வந்திருந்தார்! ஒருமுறை என்னைப் பேச அழைத்திருந்த புதுகை-ரோட்டரி சங்கத்தினரிடம் சொல்லி இவரோடு பத்துப்பேருக்கு “ஸ்போர்ட்ஸ் ஷீவாங்கித் தர ஏற்பாடு செய்திருந்தேன்...
கோவில் முக்கத்தில் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் செய்தி அந்தச் சின்னக் கிராமத்தில் உடனடியாகப் பரவி விட்டது போல... எங்கள் பள்ளியில் படிக்கும் 20,30 பயல்கள் வந்து கூடிவிட்டார்கள்... வண்டியைத் தள்ளிக் கொண்டு ஊர்வலம் போவது போலப் போக நேர்ந்தது சங்கடமாக இருந்தது.
மரத்தடியில் வண்டியை நிறுத்தினேன்.
பத்தாம் வகுப்புப் படிக்கும் அந்த ஊர் மாணவர்களை மட்டும் இருக்கச் சொல்லிவிட்டு மற்ற -6,7,8.9 வகுப்புகளில் படிக்கும் பசங்களை அவரவர் வீடுகளுக்குப் போகச் சொன்னால் அவர்கள் போனால் தானே...?
சரி விஷ்ணு உங்க வீடு எங்கடா“ 
“ந்தா அதுதாங்கய்யா வாங்கய்யா“
“சரி நீங்கள்ளாம் போங்க நாங்க போய்க்கிறோம்“ யாரும் போகவில்லை
விஷ்ணுவின் அம்மா 1989-90இல் புதுக்கோட்டைமாவட்ட அறிவொளிக் கலைக்குழுவில் இருந்தவர். பள்ளியில் இவனைச் சேர்க்க வந்தபோதே சொல்லியிருந்தார்.  அவர்கள் வீட்டுக்கு முதலில் போனோம். வீட்டுக்குள் ஓடி சட்டையைப் போட்டுக்கொண்டு சிட்டாய்ப பறந்து வெளியில் வந்த விஷ்ணு சைக்கிளை எடுக்க ஓடினான். நான் புரிந்து கொண்டு, “அம்மா அதெல்லாம் ஒன்னும் வேணாம். அவனக் கூப்பிடுங்க எப்டிப் படிக்கிறான்?“ “நீங்க தான் சொல்லணும்... வீட்ல படிச்சிக்கிட்டேதான் இருக்கான்“ “விஷணு நல்லாப் படிக்கிறான்மா  அவன்தானே ரெண்டாவது மார்க்? முதல்மார்க்கே எடுக்கலாம் இன்னும் நல்லாப் படிக்கச் சொல்லுங்க அதச் சொல்லிட்டுப் போகத்தானே இப்ப வந்தேன். சங்கீதா நல்லாப் படிக்குதா?“ அதற்குள் விஷ்ணுவின் சித்தி எல்லாருக்கும் காப்பி போட்டு எடுத்துக்கொண்டு வந்துவிட்டது.
அடுத்தடுத்து 10ஆ ரெங்கராஜ், 10அ கோகிலா வீடுகளில் இல்லை. காட்டு வேலைக்குப் போய்விட்டார்களாம்... அவர்களின் சின்னத்தம்பி தங்கை விவரம் சொன்னார்கள். தூண்டிலில் மாட்டிய மீனைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு சிங்கவேட்டைக்குப் போய்வரும் ராஜா மாதிரி நடை அவர்களின் பெருமித்த்தில் தெரிந்த்து. எல்லாம் பெர்முடாசில் திரிந்தார்கள்- சட்டையின்றி! கிராமத்துப் பசங்களிடம் கூட, கைலி இருந்த இடத்தை இப்போது மெல்ல மெல்ல பெர்முடாஸ் பிடித்து விட்டது புரிந்தது.  
“சார் அதான் சார் 10 சி அபி வீடு“ ஒரு பயல் கத்தினான். ஊர்வலம் அந்தப்பக்கம் திரும்பியதும் கடையில் இருந்தவர்கள் ஒருமாதிரி பார்த்தார்கள். வாசலில் நைட்டியைப் போட்டுக்கொண்டு ஒரு சிறுமி பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தவள் கும்பலைப் பார்த்து அதில் என்னைப் பார்த்த்தும் கையைக் கழுவி உதறியவாறே உள்ளே ஓடினாள். போன வேகத்தில் –மேலே ஒரு துண்டைப் போட்டுக்கொண்டு- வெளியேவந்து வாய்நிறைய “அய்யா வாங்கய்யா“ என்றதும் எனக்கு ஒரே சிரிப்பு “அட நம்ம அபியாடா இது?“
கூரைக் கொட்டகை வாசலில் ரெண்டுபக்கமும் வாசமலர்ச் செடிகள்! நான் ஒன்றும் சொல்லாமலே ஊர்வலம் கொஞ்சம் எட்டி நின்று கொண்டது! இணையதுல்லா, தினேஷ் இருவரையும் மட்டும் அழைத்துக் கொண்டு  போனேன். “வீட்ல யாருப்பா இருக்கா?“ “நானும் அக்காவும் தான்யா இருக்கோம் அம்மா வேலைக்குப் போயிருக்காங்க..“ என்று சொல்லும் போதே அபி அக்கா வெளியில் வந்து “அய்யா வாங்கய்யா...“ என்றது. அதுவும் எங்கள் பள்ளியில்தான் பன்னிரண்டாம் வகுப்பு! “நீ எப்படிப் படிக்கிற? அம்மா பள்ளிக்கூடத்துக்கு வந்தப்ப நீதான் அபி மாதிரிப் படிக்கிறதில்லன்னு வருத்தமாச் சொன்னாங்க“ என்றதும் அருகில் நின்றிருந்த வால் ஒன்று
“சார்...அபிமாதிரி இது ரேங்க் வாங்காது...ஆனா பாஸ் பண்ணீரும்“ “இதுயாரு,“
“என் தம்பிங்கய்யா.. ஏழாம்ப்பு படிக்கிறான்... ரொம்ப நல்லாப் படிப்பான்“
அபி, அவனிடம் காசுகொடுத்து கூல்டிரிங்க்ஸ் வாங்கிவரச் சொல்ல  -
“நான்தான் குடிக்கமாட்டேன்னு தெரியும்ல ஏன்பா இதெல்லாம்.. ஒருடம்ளர் தண்ணி கொடு“ என “அய்யா நீங்க கோக், பெப்சி தான குடிக்கமாட்டேன் னு சொல்வீங்க இது நம்ம ஊரு கலரு சும்மா குடிங்க... முதன் முதலா எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க...“ இவ்வளவு விவரத்தோடு அபி சொல்லவும் என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.. வீட்டிலிருந்து ஒரு குவளை எடுத்து வரச்சொல்லி அதில் பாதியை ஊற்றி நான் எடுத்துக் கொண்டு, மீதியை அபி தம்பியிடமே கொடுத்தேன் தினேஷ் இணையா இருவரும் ஆளுக்கொரு கூல் டிரிங்ஸ் பாட்டிலை அண்ணாத்திக் கொண்டிருந்தார்கள்!
அபி அக்காவை அழைத்து, “அப்பா கிட்ட சொல்லுப்பா அபி நல்லா படிக்கும் நல்லா படிக்க வைக்கணும்னு நா சொன்னதா சொல்லு என்ன?“ என்று சொன்னதோடு அபி கையை உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு, “டாக்டரம்மா வரட்டுமா?“ என, “இருங்கய்யா அம்மா வந்துருவாங்க மதியானம் சாப்பிட்டு போகலாம்யா“ “ஆமா... உங்க ஊர்ல டீ காப்பி கலரு எல்லாம் அடுத்தடுத்து குடிச்சிருக்கேன் மதியச்சாப்பாடே முடியாது வரட்டா..“
அடுத்து கனகராஜ், நாகலட்சுமி, மாரிமுத்து, வீடுகளில் அப்பா அம்மா
இருவருமே காட்டு வேலைகளுக்குப் போய்விட இவர்கள் படித்துக் கொண்டிருந்த்தாகவும் நான் வந்தது கேள்விப்பட்டு வந்ததாகவும் சொல்ல அவர்களின் வீடுகளின் திண்ணைகளில் ஒரு நிமிடமாவது உட்கார்ந்துவிட்டு வந்தேன். இருந்த பெரியமனிதர்கள் தான் என் பின்னால் சுற்றுகிறார்களே!
     “அய்யா வினோதாவித்யா (அக்கா-தங்கை) வீடு அந்தக் கம்மாக்கரைல தான்யா இப்டியே குறுக்க போயிடலாம்..“  மணியைப் பார்த்தேன் 12.30
நாலைந்து சைக்கிள்கள் இதற்குள் தயாராகிவிட்டன...
அபி தம்பி குரங்கு பெடலுடன் நின்று கொண்டிருந்தான்.  
“நீ அடுத்த வருசம் எட்டாம்ப்புக்கு எங்க பள்ளிக்குடத்துக்கு வந்துரு என்ன?“ “இங்கதான் ஒம்பதாம்ப்பு வந்திருச்சே... டீசி யெல்லாம் தரமாட்டாங்களாம்“
“சரி சரி இங்கயே நல்லா படி... பன்னண்டாம்ப்புக்கு மாடல் ஸ்கூல் வரலாம்“ “நா அங்க தான் பத்தாம்ப்புக்கே வரலாம்னு நினைச்சேன்...“
அட என்னபேச்சு பேசுறான் இவன் என  நான் அவனைப் பார்க்க --
“இல்ல நா பத்தாம்ப்பு படிக்கும்போது நீங்க ரிட்டையராகிடுவீங்களாம்ல?
அபி சொன்னிச்சு அதான் நா இங்கயே படிச்சுக்கிறேன்னு சொல்ட்டேன்“
சைக்கிள் பறந்தது குரங்கு பெடலில்தான் என்ன வேகம்!
இந்தா பக்கத்துலதான்...பக்கத்துலதான் என்று சொல்லியே குளத்துக்கரை, வயக்காட்டு நடுவில் கிடந்த பாதை, கிராமத்திலிருந்து தப்பித்து ஓடிய வண்டிப் பாதை என எல்லா வழியிலும் பசங்களின் சைக்கிள்கள் வழிகாட்ட எங்கள் வண்டியும் பின் தொடர்நதது...  பின்னால் இருந்த இணையதுல்லா சொன்னான்... “அய்யா இந்த ரோட்டுல எல்லாம் போனா பஞ்சர்தான் இங்க பஞ்சர் பாக்க்க் கூட கடை கிடையாது... புதுக்கோட்டையிலர்நதுதான் ஆள் வரணும்...“ “டேய் சும்மாவாடா அதெல்லாம் ஒன்னும்ஆகாது“ ஊர்ப்பாசத்தில் சைக்கிளில் வந்த பசங்க சொல்லிக்கொண்டே முன்னால் வழிகாட்டினார்கள்...
“தம்பி இது என்ன ஊர்ரா?“
அய்யா இதாங்கய்யா பழைய ராசாப்பட்டி நம்ம கிளாஸ் வினோதா வித்யா ரெண்டு பேரு அப்பறம் அருண், கார்த்தி, சுந்தராம்பாள், சீனி, அப்பறம் அக்கா கல்யாணம்னு ஒரு வாரமா வரலயில்ல அந்த ரஞ்சனி எல்லாம் இந்தப் பக்கந்தாய்யா“
அதற்குள் சின்ன சைக்கிள் ஊர்வலம் போறதைப் பார்த்துட்டு ஊர்ப்பெரியவர் ஒருத்தர் நிறுத்தி விவரம் கேட்டார். சொல்லிவிட்டுப் புறப்பட்டோம்.
“எல சார ஏண்டா வயக்காட்டு ஒத்தயடிப் பாதையில போட்டு இழுக்கிறீங்க இங்கனயே வண்டிய நிப்பாட்டிட்டு குறுக்க நடந்தா டக்குனு போயிறலாம்ல?“
பசங்க மௌனமாக இருக்க நான்தான் தொடர்ந்தேன்... “இல்லிங்க அய்யா அப்படியே போனம்னா புதுராசாப்பட்டி போயி அண்டக்குளம் ரோட்டப் புடுச்சி புதுக்கோட்டை போயிரலாம்ல...“ “ஓகோ அப்பிடியின்னா போங்க“
     போகும் வழியில் வந்த ஒரு அம்மாவைக் காட்டி ரகசியமாக என்னிடம் வந்த பயக “இதான்யா ரஞ்சனி அம்மா“ நான் திரும்பி அவர்களை நிறுத்தி அறிமுகம் செய்துகொண்டு, “ஏம்மா ரஞ்சனி அக்கா கல்யாணம்தான் முடிஞ்சிருச்சில்ல பரிச்சை நேரத்துல லீவு எடுக்கச் சொல்லாதிங்கம்மா“ என, “ரஞ்சனி இனிமே பள்ளிக்குடம்லாம் வரமாட்டா நீங்க போங்க“ என்று வெடுக் கென்று சொல்லிவிட்டு வேகமாகப் போய்விட்டது... நான் திகைத்தேன். கிராம மக்களிடம் பிரச்சினைகளை நாம் புரிந்துகொண்டு உதவி செய்ய முடியாத நிலையில் அவர்களிடம் என்னபேசி எப்படிப் புரிய வைக்க...?
புளிய மரத்து நிழலில் வண்டியை நிறுத்திவிட்டு மணி பார்த்தேன் 1.00! திரும்பும்போதே வினோதா–வித்யாவின் (இரட்டையர்) அப்பா ஓடிவந்தார். “அய்யா வாங்கய்யா உங்களப் பத்தித்தான்யா புள்ளய்ங்க சொல்லிக்கிட்டே இருக்கும் டீவி யில நீங்க பேசுறத எல்லாருக்கும் போன் போட்டு எங்க அய்யா பேசுறாங்கனு சொல்லி வச்சிப் பாக்கச் சொல்லும் ரொம்பச் சந்தோசம்யா.“ என்னைப பேச விடாமல் வீட்டிலிருந்தவர்கள் எல்லாரும் பேசிக்கொண்டே இருந்தார்கள். “எப்படிய்யா இதுல வந்திங்க... ரோடு போடுறதா சொல்லிச் சொல்லியே ஏமாத்திட்டு இருக்காங்கய்யா.. இதுலதான் எங்க புள்ளைக நடந்தே வந்து ரோட்டப் புடுச்சி பள்ளிக்குடம் வருதுங்கய்யா நேரமாயிட்டா சைக்கிள்ல நான் கொணாந்து விடணும்யா அடுத்த வருசம் பதினொன்னாம் வகுப்புக்கு சைக்கிள் தருவீங்களாம்...”  என்னால் ஒன்றும் பேச முடியாமல் போனது.
ஓட்டு வீட்டில ஒருபக்கம் கூரை போட்டிருந்தது.
எல்லாருக்கும் நீர்மோர் வந்தது. எட்டிநின்ற பசங்களிடம் ஒரே சத்தம்.
“மாங்கா பறிச்சுத் தரவாய்யா கொண்டு போறீங்களா?“ என்ற ஒரு பாட்டியின் அன்பை மெதுவாக மறுத்துவிட்டு  பிள்ளைகளை அழைத்தேன் வினோதா-வித்யா இருவரும் எனக்குமட்டும் போட்டிருந்த நாற்காலிப் பக்கத்தில் வந்து எனக்கு மட்டும் சிலவர் சொம்பில் தந்த மோரில் இஞ்சியும் கறிவேப்பிலையும் கிடந்தது! அவர்கள் இருவரும் ஒரு வார்தையும் பேசவில்லை. “என்ன உங்க வீட்டுக்கு வந்திருக்கேன்... எல்லாரும் பேசுறாங்க நீங்க ரெண்டு பேரும் ஒன்னுமே பேசல? நல்லாப் படிக்கிறீங்களாடா“ 
வித்யா மெதுவாகச் சொன்னது “ரொம்ப நன்றிங்கய்யா
எதுக்கு? எனக்கு எதுவும் சொல்லத்தெரியவில்லை. எந்த மேடையிலும் தடுமாறாத எனக்கு வார்த்தைகள் தடுமாறின.
இரவுமுழுவதும் தூக்கமில்லை.
ஒருமடங்கு அன்பு காட்டுவோரிடம் பல மடங்கு அன்பைப் பொழியும் கள்ளமில்லாப் பிள்ளைகள், கிராமத்து மக்களின் தீராத பிரச்சினைகளின் மத்தியிலும் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று வந்திருக்கும் விழிப்புணர்வு! மேற்படிப்புக்கு வழியில்லாத தவிப்பு ...
வருடம் தோறும் பத்தாம் வகுப்புப் பிள்ளைகளின் வீடுகளுக்கு நானும் சகஆசிரியர்களும் சென்றுவருவது வழக்கம்தான் என்றாலும் இந்த ஆண்டு நான்மட்டும் சென்றது எனக்கு மறக்க முடியாத வாழ்க்கைப் பாடமாகவே இருந்தது. பார்த்தது என்னவோ பத்து-இருபது குழந்தைகளைத்தான் ஆனால் படித்த்தென்னவோ பல புத்தகங்களில் கிடைக்காத வாழ்க்கைப் பாடம்!
--------------------------------------------------  

எனது ஆசிரியப் பணியில் ஒரு நல்ல நாள்!


இன்று 25-02-2012 
எனது ஆசிரியப் பணியில் ஒரு நல்ல நாள்!
     தொடர்ச்சியாகப் பெரும்பாலான சனிக்கிழமைகள் பள்ளி நாளாகவே கடந்து போனதில் நம் மாணவர்களுடன் ஆசிரியர்களும் பெரிதும் வருந்தியிருக்கின்றனர் என்பது நேற்றுத்தான் எனக்குத் தெரிந்தது!(“எந்த வேலையை எடுத்துக்கிட்டாலும் “மாங்கு மாங்கு“ன்னு அவன் பாட்டுக்கு மாடுமாதிரி வேலை பார்ப்பான்“என்ற என்மீதான குற்றச்சாட்டு சரிதான் போல! மற்றவர்களின் கருத்தைக் கேட்டே செய்வதாக நினைத்துக்கொள்ளும் நினைப்பு வேறு!)
      நேற்று மதிய உணவுக்குப் பின், மெதுவாக எனது –துணை முதல்வர்- மேசையின் முன்னால் வந்து உட்கார்ந்தனர் எமது –புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி- ஆசிரியர்கள் மூவர். நான்கு பிரிவுப் பத்தாம் வகுப்புகளில், மூன்று வகுப்பாசிரியர்கள் அவர்கள். ஆங்கிலவழி வகுப்பாசிரியர் லலிதா வரவில்லையே என அந்தப் பக்கம் எட்டிப்பார்த்தேன் அவர் எப்போது பார்த்தாலும் மாணவர்களுடனேயே இருப்பார். இப்போதும் அப்படித்தான் போல! சனிக்கிழமைகளில் மட்டுமல்லாமல், காலை 8.30-9.30 சிறப்பு வகுப்புகளோடு, அன்று யாராவது ஆசிரியர்கள் விடுப்பு என்றால் அந்த வகுப்பையும் சேர்த்து எடுத்துக் கொண்டு சலிக்காமல் நடத்தும் அந்தச் சகோதரிகள் மேல் எனக்கு எப்போதுமே நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு.
     “சொல்லுங்கம்மா என்ன எல்லாரும் சேர்நத மாதிரி வந்திருக்கீங்க...! என்றேன்.
    அறிவியல் ஆசிரியரும் பத்து அ பிரிவு வகுப்பாசிரியருமான கே.எஸ்(சுசிலா) டீச்சர்தான் சொல்ல ஆரம்பித்தார்கள்... “இல்லங்கய்யா.. காலையில பசங்க உங்க கிட்ட “நாளைக்கு (சனிக்கிழமை) சிறப்புவகுப்பு உண்டுங்களாய்யா?“னு கேட்டப்ப “ஆமாமா“ன்னு சொன்னீங்களாம்.. அவிங்க கேக்க வந்தது பள்ளிக்கூடம் உண்டாங்கிறத்ததான்.. முன் முழு ஆண்டுத் தேர்வுக்கு தேர்வுஉள்ள வகுப்பு மாணவர்கள் மட்டும் வந்தாப் போதும்னு சுற்றறிக்கை வந்துதுல்ல..?நாளை பத்தாம்வகுப்புக்குத் தேர்வுஇல்ல..அதான் வரணுமா னு...?
     “பத்தாம் வகுப்பு மாணவ-மாணவியர் மட்டும் தேர்வு இல்லாவிட்டாலும் வகுப்புக்கு வரணும்“னு சுற்றறிக்கை –கட்டம்கட்டி- எழுதி, முதல்வரிடம் கையெழுத்து வாங்கி அனுப்பி வைத்ததே நான்தான் என்பது என் கையெழுத்திலேயே அவர்களுக்குத் தெரிந்திருந்தது புரிந்தது!
     இப்போது புரிந்து விட்டது. தமிழாசிரியர் கலா மெதுவான சிரிப்போடு என்னைப் பார்த்தது நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்பதைப் புரிந்துகொண்டது போல இருந்தது! அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டுதான் வந்திருப்பார்கள் போல! இது புரிந்தும் புரியாதது போல, “இல்லம்மா... விட்டா, நாளைக்குத் திருவப்புர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா... ஊரெல்லாம் கூடிரும்... அங்க போயிட்டு விடியவிடிய நின்னு கரகாட்டத்த வேடிக்கை பார்த்துட்டு திங்கக்கிழமை இங்கவந்து பரிச்சைய எப்படி எழுதுவாங்கெ? அதான் யோசிக்கிறேன் எதுக்கும் முதல்வர் கிட்ட கேட்டுடுங்களேன்“ என்று பட்டும் படாமலும் சொல்லிப் பார்த்தேன்.
     “அது தெரியாமத்தான் உங்ககிட்ட வந்தமாக்கும்“ என்று உடன் பதில் வந்தது!
      அனேகமாக எல்லா சனிக்கிழமையும் வேலை பார்த்தாகி விட்டதும் அதில் பெண்கள் படும் சிரமமும் கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. வேலைக்குப் போகும் பெண்களுக்கு “இரண்டு ஷிப்ட் வேலை“ என்ற கந்தர்வனின் சிறுகதை நினைவுக்கு வந்தது.
      பிறகு முதல்வரிடம் பேசி நாளைவரவேண்டாம் என்றதும் எல்லாருக்கும் மகிழ்ச்சி.
      ஆனால், நான் ஒரு திட்டத்தோடுதான் இதற்கு ஒப்புக் கொண்டிருந்தேன் என்பது என் மாணவப் பிள்ளைகளுக்கு இன்றுதான் தெரிந்ததாம்! இன்று -25-02-2012- எனது 32 ஆண்டுக்கால ஆசிரியப் பணியில் எனக்கு மட்டுமல்ல,  என் பிள்ளைகளுக்கும் தம் வாழ்வில் மறக்க முடியாத நாள்களில் ஒன்றாகப் போகிறது என்பது நேற்றே எனக்குத் தெரியும்!
அது நல்ல படியாக இன்று நடந்தது என்பதில்தான் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி!
அதுதான் என்ன...? உடனே சொல்லிவிட்டால் எப்படி? என் மாணவ-மாணவிகளைப் போல ஒரு நாள் பொறுத்திருங்களேன்...! நாளை விரிவாகச் சொல்கிறேன். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவர்கள் முகத்தில்தான் என்ன ஒரு மகிழ்ச்சி! என்னையும் அவர்கள் அன்பில் திக்குமுக்காட வைத்த இந்தப் பணியில் நல்லாசிரியர் விருது என்னங்க பெரிய விருது...   
இதுமாதிரி ஒரு அனுபவம் போதும் போங்க...!  
நாளை பார்ப்போம்.
-------------------------------------------------------------------------  

எனது புதிய மரபுகள் கவிதைத் தொகுப்பிலிருந்து...

எனது புதிய மரபுகள் கவிதைத் தொகுப்பிலிருந்து... கவிதை எண் - 4

          எல்லாச் சாமியும் ஒண்ணு தான்!

ஒண்ணை ஒண்ணு இழுத்துக்கிட்டு
                  உருண்டக் கிரகம் போகுது - இதை
உணராத மனுசக் கூட்டம்
                   உருண்டு பெரண்டு சாகுது!

ரம்சான் பண்டிகை பிரியாணி
                  ரத்தினம் வீடு போகுது! – அந்த
ராமு வீட்டுப் பொங்கச் சோறு
                   ராவுத்தர் வீடு போகுது!


சாகுலோட சங்கரனும்
                 ஜானும் போறான் பாருங்க – ஆகா
சாகும் வரைக்கும் இப்படியே,
                 சார்ந்திருந்தா போறும்ங்க!

கையக் கோத்து திரியிது பார்
                 கள்ளமில்லாப் பிள்ளைக – பின்னே
பையப் பைய பிரிச்சு வச்ச
                 பாவிகயார் சொல்லுங்க? (ஒண்ணை…)

நாகூர் ஆண்டவர் மண்டபத்துல
                  நல்லக்கண்ணு கிடக்குது – சீக்கு
போகணுமின்னு வேண்டி அந்த
                  வேண்டுதலும் நடக்குது!

அம்மைப் பாத்த கொடுமை போக
                 அவுலுகலாம் பொஞ்சாதி – மாரி
அம்மனுக்கு நேந்துக் கிட்டு
                 உப்புக்கடன் செஞ்சாக! (ஒண்ணை…)

இருக்கும் நொம்பலம் தாங்கலய்யா
                 எந்தச் சாமி தீர்த்தது? – அட
எது வாச்சும் செய்யட்டுமேனு
                 ல்லாத்தையும் பார்த்தது!

ஏழ பாழ சனங்களுக்கு
                எல்லாச்சாமியும் ஒண்ணுதான் - இதுல
ஏற்றத் தாழ்வ சொல்லிக் கெடுத்தது
               ஏவன்டா? அவன் மண்ணுதான்.!(ஒண்ணை…)

(1993 - “புதிய மரபுகள்” -- சிவகங்கை - மீரா வின் “அன்னம்“ பதிப்பக வெளியீடு)

நம்ம வலைப்பக்கதிற்கு இன்னிக்கு முதல் பர்த் டே ங்கோ...!


இன்றுடன் ஓராண்டு!  நமது வலைப் பக்கத்திற்கு ஒரு வயது ஆகிவிட்டது!

இல்ல இல்ல... அதெல்லாம் வேண்டாம்...
ஒரு வலைப்பக்கத்திற்கு ஒரு வயது முடிந்து இரண்டாம் வயது தொடங்குவதற்கு “பிறந்த நாள் கேக் வெட்டி வாழ்த்து“ சொல்வது நல்லாயிருக்காதுங்க... சரி விடுங்க...

இருந்தாலும் பாருங்க...

பதிவுகள் - 76
பின்னூட்டம் - 172
 “பின்தொடர்பவர்” எண்ணிக்கை - 47.
இதுவரை “எட்டிப்பார்த்தவர்கள்” - 1637
இன்று வரை நமது வலை விவரம் பார்த்தவர்கள் - 570
(இது மட்டும் எப்படி குறையுது!?
எட்டிப் பார்த்தபின் “வெவரம்”  பார்த்துட்டு
“ப்ச் அடப்போடா”ன்னு போனவங்களா இருக்குமோ?)
இன்று வரை படிக்கப்பட்ட பக்கங்கள் - 8492

இது உண்மையிலேயே நல்ல எண்ணிக்கைதானுங்களே?

வள்ளலார் -
 “கடைவிரித்தேன், கொள்வாரில்லை கட்டிக்கொண்டேன்” என்று சொன்னதாகச் சொல்வார்கள் (ஆனால் அவரது எழுத்து எங்கிலும் இந்த வரிகள் இல்லை என்று வள்ளலார் ஆய்வாளர்கள் அடித்துச் சொல்கிறார்கள். ஏதோ வள்ளலாரால் இந்த வரியும் பிரபலமாகிவிட்டது!)

பாரதியோ -
தான்சும்மா எழுதிய “பாக்ஸ் வித் த கோல்டன் டெய்ல்” எனும் ஆங்கிலப் படைப்புக்கு வந்த வரவேற்பைப் பார்த்து அதை மீண்டும் அச்சிடவேண்டும் என்ற நண்பர்களிடம் எரிச்சலாகி, “போகச் சொல்லு விடலைப் பசங்களை, நான் என் உயிரையே உருக்கி எழுதி வைத்திருக்கும் தமிழ் எழுத்துகளைப் படிக்கமாட்டாமல் ஆங்கிலத்தில் இருக்கிறது என்பதற்காகவே இதை வாங்கும் இந்த அடிமைப் புத்தியை எங்கு போய்ச் சொல்ல...!” என்று ஆத்தாத்துப் போனதையெல்லாம் நினைக்கும் போது நம்ம கதை பரவாயில்ல போல இல்ல? (இல்லையோ?...சரி விடுங்க பாரதி எங்கே நாம எங்கே...?!!)

ஒரு நடிகையைப் பற்றி எழுதாமல், ஒரு நடிகனைப் படம் போட்டு விளக்காமல் (மாத்திச் சொல்லிட்டேனா?) இந்த அளவுக்கு இளைஞர்கள்(?) நம்மை கவனிக்கிறார்கள் என்றால்
நாமும் ஏதோ செய்து கொண்டுதான் இருக்கிறோம்
நம் மக்களும் இதற்குச் செவி (கண்?) கொடுக்கிறார்கள் என்று ஆறுதல் படலாம்தானோ? படலாம்... படுவோம்...!

அன்புடன்,
நா.முத்து நிலவன்,
புதுக்கோட்டை
19-02-2012

எனது புதிய கவிதை - என்னைக் கைது செய்யுங்கள் அரசே!

கைது செய்யுங்கள்! அரசே!
என்னைக் கைது செய்யுங்கள்!

ஆசிரியரை வகுப்பறையில்
குத்திக் கொன்ற வழக்கில் –
அரசே! என்னைக் கைது செய்யுங்கள்!

நான் என்ன செய்தேன் என்றா
கேட்கிறீர்கள்?
மௌனமாக இருந்தேனே?
மௌனம் சம்மதத்திற்கு அறிகுறிதானே?

வாழ்க்கையைக் கற்றுக்கொடுக்க
வழியில்லாமல்,
மனப்பாடம் செய்யும்
மதிப்பெண்ணுக்கே மதிப்புக் கொடுத்து,
அவன் நெஞ்சை
நஞ்சாக மாற்றியதில்
ஆசிரியர்க்குப் பங்கில்லையா?
என்னைக் கைது செய்யுங்கள்!  அரசே!
என்னைக் கைது செய்யுங்கள்!

முப்பது ரூபாய் கொடுத்து
வாங்க வேண்டிய சீட்டுக்கு
முந்நூறு ரூபாய் கொடுத்து
லஞ்ச ஒழிப்புப் படத்தைக்
குடும்பத்தோடு பார்த்தேனே? -
அநீதிக்கு எதிராகப் போராடாமல்,
அநீதியையே வாழ்க்கை முறையாக
அவனுக்குக் கற்பித்ததில்
தந்தைக்கும் பங்குண்டுதானே!
என்னைக் கைது செய்யுங்கள் அரசே!
என்னைக் கைது செய்யுங்கள்!

ஒருவரை ஒருவர்
அடுதலும் கெடுதலுமே வாழ்க்கை எனும்
நெடுந்தொடர்களில் மூழ்கி,
பிள்ளைகளின் உணர்வுகளை
நல்லவிதம் நடத்தாமல்
பாசத்திற்கு அந்தப்
பச்சை மண்ணை ஏங்கவிட்டுப்
பார்த்திருக்கும் தாய்க்கும்
கொலையில் பங்குண்டு தானே?
என்னைக் கைது செய்யுங்கள் அரசே!
என்னைக் கைது செய்யுங்கள்!

ஒன்றைப் பத்தாக்கி
நன்றைப் புறந்தள்ளி –
பரபரப்புத் தேடியே
பதரைக் கதிராக்கி
வழிகாட்டு மரமே
வழிகெட்டுக் கிடக்கின்ற
ஊடகக் காரருக்கும்
உண்டல்லோ கொலைப்பங்கு!
என்னைக் கைது செய்யுங்கள்! அரசே!
என்னைக் கைது செய்யுங்கள்!

வாருங்கள்!
வந்துவிட்டீர்களா?
கைதுசெய்யுங்கள் –

ஒரு நிமிடம்!

எங்களையெல்லாம்
ஆட்டிவைத்துப் பார்த்திருக்கும்
அரசு மட்டும் விதிவிலக்கா?

நெஞ்சில் கைவைத்து
நேர்மையாகச் சொல்லுங்கள்!
எங்களின் குற்றத்தில்
உங்களுக்கும் பங்கில்லை?

அதனால் அரசே!
கைது செய்யுங்கள்! அரசே!
உங்களையும் நீங்களே கைதுசெய்யுங்கள்!

செத்துப் போனதும் உமா அல்ல!
நம் அனைவராலும்
அன்றாடம்
பதறப் பதறக்
குத்துப் பட்டுக் கிடக்கும்
சுயநலக் கல்வி முறை!

இர்பான் எனும் அம்பை
ஏவிவிட்ட நமக்கெல்லாம் -
உமா -


ரத்தம் பீறிடக்
கத்திக் கதறிய நேரத்தை
ஒரு கணமேனும் -
உணர்ந்தால்தான் விடுதலை!
-----------------------------
( சென்னை - பாரிமுனை - அரண்மனைக்காரன் தெருவில் உள்ள செயிண்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் இந்தி மற்றும் வேதியியல் ஆசிரியராக வேலைபார்த்தவர் உமா மகேஸ்வரி. இரண்டு பெண் குழந்தைகளின் தாய். 39 வயது. பி.எச்.டி.படித்த இவருக்கு வங்கியில் வேலைகிடைத்தும் அதைப் புறந்தள்ளிவிட்டு, ஆசிரியப் பணியை விரும்பி ஏற்று, ஈடுபாட்டுடன் செய்துவந்த இவர்,  கடந்த 09-02-2012 வியாழன் அன்று காலை 10.30மணியளவில் அவரிடம் 9ஆம் வகுப்புப் படித்துவந்த இர்பான் எனும் மாணவனால், வகுப்பு அறையிலேயே -நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே- கதறக் கதற 14 முறை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட செய்தியின் பின்னணியில், அழுதுகொண்டே எழுதிய கவிதை இது. 
இதே ஆசிரியர் உமா கொலைதொடர்பான எனது கட்டுரையைப் படிக்கச் சொடுக்குக -
http://valarumkavithai.blogspot.com/2012/03/blog-post_10.html 
– நா.முத்துநிலவன், 19-02-2012) 


           நமது வலையில் வந்த இந்தக் கவிதையைப் படித்துவிட்டு, இதனைத் தமது “தொலைத் தொடர்புத் தோழன்” மாத இதழில் எடுத்து வெளியிட்டுக் கொள்ள அனுமதியும் கேட்டு, மார்ச்-2012 இதழின் கடைசி முழுப்பக்கக் கவிதையாக எனக்கு “நன்றி“ தெரிவித்து வெளியிட்ட அந்த இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளவரும் அவர்களின் -- பி.எஸ்.என்.எல்.இ.யு. சங்கத்தின்-- மாநில நிர்வாகிகளில் ஒருவருமான தோழர் பாபு ராதா கிருஷ்ணன் அவர்களுக்கும் இதழாசிரியர்களுக்கும் நானல்லவா நன்றி தெரிவிக்கவேண்டும்? நன்றி நண்பர்களே!
          இதில் ஒரு சிறப்பு என்ன வெனில், கல்வியுடன் நேரடித் தொடர்புடைய ஆசிரிய அமைப்புகள் எதுவும் இதுவரை இதுபற்றி என்னிடம் வாய் திறக்காத போது, ஒரு பொதுத்துறை அமைப்பு எடுத்து வெளியிட்டதுதான்! மீண்டும் நன்றி நண்பர்களே!
 - நா.முத்து நிலவன் - 11-03-2012)

“புதிய மரபுகள்” - எனது கவிதைத் தொகுப்புக் கவிதைகள் - 3


என்சீர் வருத்தம்!

காப்பித்தூள் கடைமாற்றி வாங்க, வழியில்
               காய்கறிக்காரன் பார்க்க, பல்லைக் காட்ட
 “சாப்பாடு இல்லை, ‘கேஸ்’ இல்லை மதியம்
               சமாளியுங்கள்” என மனைவி முகத்தைப் பார்க்க
‘மோப்பெட்டில்’ ரிசர்வு வர, பிள்ளை முணு முணுக்க,
                மூன்றாம் தவணை டீவிக் காரன் திட்ட,
நாய்ப்பாடு பட்டு வரும் நடுத்தர வர்க்கம்
                 நாளொரு பொழுதாகி வரும் நடுத்தெரு வர்க்கம்.

நா.முத்துநிலவன் பேச்சு


திருமணத்திற்குப் பின் பெண்களின் திறமைகள் முடக்கப்படுகின்றன!

கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு 


(செய்திகளை அவரவர் கோணத்தில் படத்துடன் எழுதி அனுப்பிய செய்தியாளர்கள் தீக்கதிர் மதி, தினகரன் கண்ணன், தினமணி சுரேஷ். ஆகியோருக்கும் வெளியிட்ட நாளிதழ்களுக்கும் நன்றி. ஆனால், அந்தப் படங்களை நமது வலையில் ஏற்றும் தொழில் நுட்பம் எனக்குத் தெரியவில்லையே! -விரைந்து அதையும் கற்போம்.)

புதுக்கோட்டை -பிப்.4.
              அரசு ஊழியராக இருக்கும் பெண்கள் கூட திருமணத்திற்குப் பிறகு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்துவதில்லை.இந்த நிலை மாறவேண்டும் என்றார் கவிஞர் நா.முத்துநிலவன்

              புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வெள்ளிக் கிழமையன்று நடந்த இலக்கியமன்ற ஆண்டுவிழா வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அவர் மேலும் பேசியதாவது

            படிக்கும் காலங்களில் பெண்கள் கல்வியிலும், ஏனைய தனித் திறமைகளிலும் ஆண்களை விடவும் சிறந்து விளங்குகின்றனர். ஆனால்  திருமணத்திற்குப் பிறகு இவர்களின் திறமைகள் மதிப்பிழக்கச் செய்து முடக்கப்படுகின்றன. அரசு வேலைக்குச் செல்லக் கூடிய பெண்களுக்கும் இதே நிலைமைதான் நீடிக்கிறது. அவர்களின் திறமையான பங்களிப்புகள் இந்தச் சமூகத்திற்குப் பயன்பட வேண்டும்.
          ஒரு கருத்தை ஆண்கள் எதிர்த்துப் பேசினால் அவர்களைத் தைரியசாலி என்கின்றனர். அதையே பெண்கள் பேசினால், வாயாடி என்கின்றனர்.அதையும் பெண்களை விட்டே பேசவைக்கின்றனர். பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பது அழிவையே தரும். எனவே பெண்கள் இந்தத் தடைகளை முறியடித்து முன்னுக்கு வரவேண்டும் என சமூகம் எதிர் பார்க்கிறது.
         சமூகத்தை உயர்த்தும் பொறுப்பு ஆண்-பெண் என இரு பாலருக்கும் உள்ளது. இதற்குப் படிப்பே அடித்தளமாக இருக்க முடியும்
         இவ்வாறு பேசிய கவிஞர் நா.முத்து நிலவன் முன்னதாக நடத்தப்பட்ட ஆண்டுவிழா இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கும், தேர்ச்சி விழுக்காட்டில் திறமை காட்டிய ஆசிரியர்களுக்கும் பரிசுப் புத்தகங்களை வழங்கினார்.

         விழாவிற்குப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.ஞான சேகரன் தலைமை ஏற்றார்.முன்னதாக உதவித் தலைமை ஆசிரியர் எம்.சின்னத்தம்பி வரவேற்க. ஆசிரியர் பி.வெள்ளைச் சாமி நன்றி கூறினார். மாணவியரின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளோடு விழா இனிது நிறைவேறியது. ஆண்டு விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவியரும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.  

- செய்தியாளர் -சு.மதியழகன் தீக்கதிர்மதுரைப்பதிப்பு பக்கம்-6,  05-02-2012 - 
                            --------------------------------------------------------- 
ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில்
கவிஞர் முத்துநிலவன் பேச்சு.
ஆலங்குடி பிப் 5.
     புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் ஞானசேகரன் தலைமை வகித்தார். முதுகலைத் தமிழாசிரியர் பரமசிவம் ஆண்டறிக்கை வாசித்தார். முதுகலை ஆசிரியை கேசவி அனைவரையும் வரவேற்றார். ஓவியர்கள் கருப்பையாபுகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     இந்நிகழ்ச்சியில் பட்டி மன்றப் பேச்சாளர் கவிஞர் முத்துநிலவன் சிறப்புரையாற்றினார். அப்போது "பள்ளிப் படிப்பில் தேர்ச்சி விகிதம் மட்டுமல்லாது அதிக மதிப்பெண்கள் பெறுவதிலும் பெண்கள் முன்னணியில் இருக்கிறார்கள். அதே நேரத்தில் கல்வியில் முன்னணியில் இருந்தபோதிலும் பிற்காலத்தில் அந்தப் பெண்கள் இருக்குமிடம் தெரியாத அளவிற்கு தங்கள் திறமைகளை வெளிக் கொண்டு வருவதிலும் தங்களை சமூகத்தில் நிலைப் படுத்திக் கொள்வதிலும் கவனம் செலுத்தாமல் இருந்து விடுகிறார்கள். இது மாணவிகள் மட்டுமில்லை. ஆசிரியர் பணிக்குச் சென்று விட்ட பெண்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். அவர்கள் கணவர்பிள்ளைகள்சமையல்பணி என்று தங்களுக்குள் ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டு இருந்து விடுகிறார்கள்.
     உலகிலேயே மிகவும் அழகான பெண்மணி அன்னை தெரசாதான். அவர் இறந்தபோது உலகமே அவருக்காகக் கண்ணீர் சிந்தியது. அவரது இறுதி ஊர்வலத்தில் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றார்கள். பெண்வர்க்கம் எப்போது எதிர்த்துப் போராடத் துவங்குகிறதோ அப்போதுதான் ஆண்களின் கொடூரக் குணம் குறையும். தாக்குதலும் குறையும். பிற்போக்குத் தனங்களைக் கைவிட்டு விட்டு முற்போக்காகச் சிந்தக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
     தனது பள்ளிப் பருவத்தில் ஒன்பதாம் வகுப்பில் படிப்பு ஏறாததால் வகுப்பறையிலிந்து ஆசிரியர்களால் வெளியேற்றப் பட்டார். அவர்தான் இசையுலகில் இருமுறை ஆஸ்கார் விருதினைப் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.  இந்தச் சமூகம் பெண்கள் நிறையக் கற்றிருக்க வேண்டும் என்று பெண்களிடமிருந்து நிறையவே எதிர் பார்க்கிறது.
     ஆண்கள் பேசினால் திறமை என்கிற சமூகம் பெண்கள் பேசினால் வாயாடி என்கிறது. பேச வேண்டிய நேரத்தில் பேச வேண்டும். பேசாமல் இருந்து விட்டால் அதுவே முழுதாக அழித்து விடும். குழந்தைகளை வளர்ப்பதில் ஆண்களுக்கும் சமமாக கடமை உள்ளது. நியாயமும் உரிமையும் பெண்களுக்குக் கிடைக்க வேண்டுமெனில் பெண்கள் படிக்க வேண்டியது அவசியமாகும். சமூக சிந்தனையும் அக்கறையும் பொறுப்பும் உள்ளவர்கள் மட்டும்தான் சமூகத்தில் உயர்ந்து நிற்க இயலும். பெண்கள் படிப்பில் மட்டுமல்லாது பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும்." இவ்வாறு பேசினார்.
            ------------------------------------------ 
செய்தியாளர் - கண்ணன்,“தினகரன்05-02-2012-திருச்சிப்பதிப்பு பக்கம்-15 
              -------------------------------------------


“குறுகிய வட்டத்தை விட்டுப் பெண்கள் வெளியே வரவேண்டும்“ 
ஆலங்குடி-பிப்-5.
   குடும்பத்தில் கணவர், பிள்ளைகள், சமையல், பணி என்பதுதான் வாழ்க்கை என்ற குறுகிய வட்டத்தை விட்டுப் பெண்கள் வெளியேங வரவேண்டும் என்றார் கவிஞர் நா.முத்துநிலவன்.
  ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்ற ஆண்டுவிழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளைப் பாராட்டி அவர் பேசியது - 
   பள்ளி கல்லூரிக் காலங்களில் சிறப்பிடம் பெறும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அதன் பிறகு அந்தத் திறமைகளைச் சமூகத்தில் நிலைப்படுத்திக் கொள்வதில் தவறவிடுவதால் இளமையில் முயன்று பெற்ற திறமைகள் வீணாகி விடுகின்றன.
  ஆகையால், தனக்கான உரிமைகளைப் பெறவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் சமூக நலன் சார்ந்த கல்வி அவசியம் என்பதால் பாடப்புத்தகங்களோடு பிற புத்தகங்களையும் வாசிக்க வேண்டும் என்றார் அவர். 
   விழாவுக்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானசேகரன் தலைமை வகித்தார். ஓவியர்கள் கருப்பையா, புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகலைத் தமிழாசிரியர் பரமசிவம் ஆண்டறிக்கை வாசித்தார். முதுகலை ஆசிரியர் கேசவி வரவேற்றார். 
   -- செய்தியாளர்-சுரேஷ், 
தினமணி- நாளிதழ் பக்-2, 06-02-2012 -திருச்சி பதிப்பு
--------------------------------------------------------------