கிரேஸ் பிரதிபா நூலுக்கான எனது முன்னுரை

அமெரிக்கத் தமிழ்க்கவிஞர் வி.கிரேஸ் பிரதிபா 
எழுதி வெளியிட்டுள்ள
இரண்டாவது கவிதைத் தொகுப்பு
“பாட்டன் காட்டைத் தேடி”
நூலுக்கான
எனது முன்னுரை--

அறிவியல் தமிழ்க்கவிதை எழுதும் அமெரிக்கத் தமிழச்சி!


முகவையைப் பூர்வீகமாகக் கொண்டு, திண்டுக்கல்லில் பிறந்து -மதுரையில் படித்து, பெங்களுரில் கணினி மென்பொருள் பணியிலமர்ந்து, தற்போது, கணவர் வினோத், குழந்தைகளுடன் அமெரிக்காவில் இருக்கும் கவித்தங்கை கிரேஸ் பிரதிபா, அறிவியல் பார்வையோடு அழகுதமிழ்க் கவிதைகளைத் தனது வலைப்பக்கத்தில் எழுதி வருகிறார்.

இவரது முதல் தொகுப்பான “துளிர்விடும் விதைகள்” மதுரை “வளரி” இதழ் வழங்கும் “கவிப்பேராசான் மீரா நினைவுப் பெண்கவிஞர் விருது” பெற்றது. இதே விருதை இவரோடு பகிர்ந்து கொண்டவர் புதுக்கோட்டைக் கவிஞர் தங்கை மு.கீதா என்பதும், இவ்விரு நூல்களுக்குமே நான் முன்னுரை எழுதியிருந்தேன் என்பதும் மகிழ்வூட்டும் செய்திகள்!

“2009இல் வலைப் பக்கத்தைத் தொடங்கி 
ஆங்கிலத்தில்எழுதத் தொடங்கி,    2012 முதல் தமிழில் தொடர்ந்து எழுதிவரும் 
கிரேஸ் பிரதிபாவின் மொழிப்பற்றும், சமுதாயநோக்கும் 
பாராட்டுக்குரியவை”  என்று தினமணி ஆசிரியர் (09-11-2014) அவர்களின் பாராட்டைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாண்டுகளில் இதோ அவரது அடுத்த தொகுப்பு!
இயற்கையின் மேல் இவருக்கு இருக்கும் அக்கறை, பாராட்டுக்குரியது. காற்றும், மலையும், மழையும், காடுகளும், ஏனைய உயிரிகளும் நமக்கு ஏராளமான நன்மையை அள்ளித் தந்தும்,  மனிதன் செயற்கையான முறையில் இவற்றையெல்லாம் அழித்தே தன்னை வளர்த்துக் கொள்கிறான்.
அதாவது இவற்றின் உயிரை அழித்துத் தன் வயிறை வளர்க்கிறானாம்! மட மைதாஸ்களின் பேரர்கள்!
படித்த முட்டாள்கள்!  அல்லது, சுயநல வெறியர்கள்!
வேறென்ன சொல்ல?

மரம்தான், மரம்தான்,                                         
எல்லாம்மரம்தான்,                                                               மறந்தான், மறந்தான், 
மனிதன் மறந்தான்” 
எனும் கவிஞர் வைரமுத்துவின் கவலை 
நூறு விழுக்காடு உண்மை! ஆனால் 
‘மக்களே போலும்’ சிலருக்கு இங்கே, 
“பணம்தான் பணம்தான்,
எல்லாம் பணம்தான்” என்றாகிவிட்டபிறகு மரமாவது... இயற்கையாவது... உலகமாவது... எதிர்காலமாவது...?!!

பள்ளமான இடத்தை நோக்கிப் பாய்வது நீரின் நியதி. நீர்நிலைகளை ஆக்கிரமித்து, மனித வாழிடம் ஆக்கியதற்குப் பழிவாங்குவதுபோல, 2015இல் சென்னைக்குள் புகுந்த வெள்ளத்தைத் தமிழர்கள் மறந்திருக்க முடியாது!

நீர்நிலைகளுக்கு உரிய இடம் ஒதுக்கிவிட்டு இயற்கையோடு நிம்மதியாக வாழ்ந்த நம் முன்னோர்கள் முட்டாள்களா என்ன?

பலகவிதைகளில் இயற்கையின் மீதான இவரது காதலும், இயற்கையை அழிக்கும் மனிதவிலங்குகள் மீதான கோபமும் கொப்பளிக்கின்றன. அதிலும் இந்தச் சில சுயநலமிகளால் அவதியுறும் சாமானியர்கள் மீதான அக்கறை, இவரது தெளிவான பார்வைக்குச் சாட்சியம் பாடுகின்றது
கட்டிடம் காசென
எவ்விடம் ஆராயாது
முதல் செய்தவரும்
பணம் செய்தவரும்
எங்கோ பத்திரம்;
அவதியுறுவதோ
சாமானியன்
இதேபோலும் இன்னொரு கவிதைக்கு இவர் “முரண்” என்று தலைப்புத் தந்திருப்பது கோபமும் கிண்டலுமான நகைமுரண்!

2016டிசம்பரில் சென்னைக்கு வந்த புயுற்காற்றும், 
தமிழகத்தின் பாரம்பரிய மரங்களான வேம்பு,மா,பலா,இலுப்பை மரங்களை சும்மா “நலம்” விசாரித்துவிட்டு, மேல்நாட்டு இறக்குமதிகளான போகன்வில்லா போன்றவற்றையே அதிகமாகப் பெயர்த்து எறிந்து போனதைக் கண்டும் நாம் பாடம்கற்கவில்லையே!

ஆனால், நாம் சாலைகளைப் போடும் அவசரத்தில், காட்டையே வாழிடமாகக் கொண்டு, பலயுகமாய் வாழ்ந்து வந்த காட்டுயிரிகளைப் பற்றிக் கவலைப்படாமல் அவற்றை மறைமுகமாக அழித்து வருவதுபற்றி கிரேஸ் பிரதிபா ஆத்திரப்படுவது கவனத்திற்குரிய நல்ல கவிதை!
தன்மேல் பாய்ந்தது
என்ன மிருகம்?
தெரியாமலே
உயிர்துறக்கும்
பாவம்
காடழித்த சாலையில்
காட்டுவிலங்கு  
இதே போலத்தான், பெங்களுரு பள்ளிக்ககூடத்திற்குள் வந்த ஒரு சிறுத்தைப்புலி, தான் வாழ்ந்த இடத்தைப் பார்த்துப் போக வந்ததாக எழுதியதும் அருமை!

அடுத்த கவிதையில், 
பள்ளி செல்லும் வயதில், கல்சுமக்கும் சிறுமிக்காக வருந்துவது, அதிகம் படித்தவர்கள் கவனிக்க வேண்டிய கவிதை!

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய” வள்ளலார் வழியில்,  உலக உயிர்களின் மீதான அறிவியல் பார்வையின் அர்த்தம் செறிந்த கவிதைகளாக இவரது கவிதைகள் தனித்துவம் பெறுகின்றன!
அனைத்துயிர் காத்தல் பண்பாடென்றால்
                  அதுவே தேவை இன்றைக்கு
அழியும் உயிர்கள் காத்திடவே
                  அவனியில்  பண்பாடு மிகத்தேவை  என, இவர் மரபுக் கவிதை முயற்சியில் எழுதியதும் இரட்டைச் சிறப்பு! ஆனால், இன்னும் மரபில் –முக்கியமாக இவரது வெண்பாக்களில்- அழகியலை இணைக்கப் பயிற்சிதேவை. எனினும் இவரது மரபுமுயற்சி பாராட்டுக்குரியது.

மரபுத் தமிழைப் படித்தவர்கள் அறிவியல் படித்த இவரது தமிழ்ப் பார்வையைக் கவனித்தால், நல்லது. அண்மையில் மறைந்த மண்ணியல் பேரறிஞரும் தமிழ்க்கவிஞருமான குலோத்துங்கன் (வா.செ.குழந்தைசாமி) அறிவியல் தமிழ் மரபுக்கவிதைகளை எழுதிக் குவித்திருக்கிறார்!

இன்னும், உழவனைப் பற்றிய கவலை, சாதி ஒழியாத நம் நாட்டைப் பற்றிய கவலை, ஏதாவது ஒரு சாக்குச் சொல்லி வாக்களிக்காமல் போகும் நடுத்தர வர்க்கத்தின் அவலம் பற்றிய பதிவு, பெண்கள் பலதுறையிலும் முன்னேற வேண்டிய அவசியம், “விதையின்றிக் காடா?” என்று கேட்டு விடுதலை வீரர்களைப் போற்ற வேண்டிய அக்கறை, நகர்மயமாதலில் காணாமல் போகும் மனிதம், மழை-காடு-பறவை-அணில்-முகில் என, மெல்லுயிர்களின் மீதான அழகியல் காதல், ஒருவருக்குள் ஒருவர் தொலைந்து போகும் உண்மைக் காதல் எனப் பலவிதமும் பாடும் இவரது கவிதைகள் வித்தியாசமானவை.

மகிழ்வுந்தின் முன்பக்கக் கண்ணாடியில் மழைநீர் துடைக்கும் மின்கருவி “முன்துடைப்பான்”(வைபர்) என இவரதுகவிதையில் சொல்வதும் அழகு!

எழுதத்தொடங்கி, எழுத்தில் காணாமல் போய், குடும்பக்கடமை களில் அவை வெளிப்படுவதாய் எழுதுவதும் ஒரு வித்தியாசமான பார்வைதான்!
குழந்தை பெண்ணாகப் பிறக்கக் காரணம் ஆணே என்னும் அறிவியல் உண்மையை இதுவரை யாரும் கவிதையில் சொன்னதில்லை! அருமை!

கிரேஸின் கவிதை ஆர்வத்திற்கு, முழுமையாகத் துணையிருந்து உற்சாக மூட்டி வரும் இவரது அன்புக்கணவர் வினோத், குழந்தைகள் ஆலன், ஆல்வின் மற்றும் தந்தையார் வின்சென்ட் ஆரோக்கியசாமி ஆகியோருக்கு என் பாராட்டுகள்.

கிரேஸ் பிரதிபா, சங்கத்தமிழை எளியநடையில் புதுக்கவிதை மற்றும் எளிய ஆங்கிலக் கவிதையில் எழுதும் ஒரு பெரும் முயற்சியில் இருக்கிறார், அதற்கு –வழக்கம் போல- இவரது குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பது மகிழ்வளிக்கிறது.
அந்த நூல் இவரை வேறொரு தளத்திற்கு இட்டுச் செல்லும் என்பது எனது நம்பிக்கை. அதை இவர்  விரைவில் செய்ய வேண்டுமென்பதே இப்போதைய எனது வேண்டுகோள்.

தங்கையின் கவிதைப் பயணம் 
பற்பல வகையிலும் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
அன்புடன்,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை-4
01-01-2017
செல்பேசி-94431 93293
-------------------------------------------------------------

22 கருத்துகள்:

  1. வாழ்த்துகள் சகோ கிரேஸ்! சிறப்பான முன்னுரை...வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. கிரேஸ் அக்காவுக்கு வாழ்த்துகள்.தங்களுக்கு பாராட்டுகள் அப்பா.

    பதிலளிநீக்கு
  3. ரசனையான விமர்சனம் ஐயா...

    சகோதரிக்கும் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் அண்ணா. என் நூலுக்கு உங்கள் முன்னுரை அணி சேர்க்கிறது என்பதே உண்மை அண்ணா.மனம் நெகிழ்ந்த நன்றிகள். உங்கள் அன்பிற்கு வார்த்தைகளில் நன்றி சொன்னால் போதாது,சொல்லவும் முடியாது, இருந்தாலும் சொல்கிறேன். எப்பொழுதும் என்னை ஊக்கப்படுத்தி, ஆலோசனைகள் கொடுத்து, என் நூட்களுக்கு முன்னுரையும் கொடுத்து, நூலைப் பகிர்வதற்கும் நன்றிகள் பல.
    அன்புத்தங்கை,
    கிரேஸ்

    பதிலளிநீக்கு
  5. அமெரிக்க பெண் தமிழ் கவிஞரின் பெருமையை "தமிழகத்தின் சிங்ககுரலோனாகிய" நீங்கள் பாராட்டும் போது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  6. தங்கை கிரேஸ் பிரதிபாவின் கவிதை நூலை வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுமளவுக்குச் சிறப்பான முன்னோட்டம். இயற்கையின் மீதான காதல், சமூக அவலங்களைப் பற்றிய அவர் கவலை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் கவிதைகளிலிருந்து எடுத்துக்காட்டுக் கொடுத்தது சிறப்பு. அவர் இன்னும் பல நூல்களை வெளியிட வேண்டும் என வாழ்த்துகிறேன். சங்கத் தமிழை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யும் பணியும் விரைவில் நிறைவேற வேண்டும் என்ற உங்கள் வேண்டுகோளை நானும் வழிமொழிகின்றேன். நன்றி அண்ணா! பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் கிரேஸ்!

    பதிலளிநீக்கு
  7. தோழி கிரேஸின் தளத்திலும் தங்கள் முன்னுரையை வாசித்து மகிழ்ந்தேன்.. கிரேஸின் கவித்திறமையை மிக அழகாக எடுத்தியம்பி நூலினை வாசிக்கத் தூண்டும் முன்னுரை.. நூலின் வெற்றிக்கு இனிய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. பாட்டன் காட்டைத் தேடிய பயணத்தில்ல் என் போன்ற இந்த வழிப்போக்கர்களையும் கூட்டிப்போன பெருமை தங்களையே சாரும்! நன்றி, வணக்கம்.

    செந்தில்குமரன்
    சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்.

    பதிலளிநீக்கு
  9. நல்லதொரு அறிமுகம்.....

    வாழ்த்துகள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  10. ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது....தங்களின் எழுத்து அவரது கவிதையைப் படிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்திவிட்டது. எழுத்துக்கும், வாசிப்புக்கும் நீங்கள் தரும் ஊக்கம் அளப்பரியது ஐயா. பாராட்டுகள் உங்களுக்கும், நூலாசிரியருக்கும்.

    பதிலளிநீக்கு
  11. அருமை அய்யா , தங்கள் முன்னுரை அவரை மட்டுமல்ல அனைவரையும் எழுதத்தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
  12. சிறப்பு தோழர்..
    வாழ்த்துகள் சகோதரி..

    பதிலளிநீக்கு
  13. ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. சகோதரி தேன்மதுரத் தமிழ் கிரேஸ் அவர்களை, இன்னும் எழுத வைக்கும் உற்சாகம் கொடுக்கும் முன்னுரை. அண்மையில் நடந்த வீதி இலக்கிய கூட்டத்தில் விற்பனைக்கு வந்த இந்நூலை வாங்கி இருக்கிறேன். படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு