வெள்ள நிவாரணப் பணிகளில் உதவியது யார்?



ஆனால் “இன்று நம் மக்களிடம் பெருகியிருப்பது – சுயநலமா? பொதுநலமா? என்னும் தலைப்பிலான பட்டி மன்றங்களில் நான் சுயநலம் என்று பேசியதே இல்லை.

எப்படி இப்படி உறுதியாகச் சொல்ல முடிகிறது என்றால், நான் பேசிய பட்டிமன்றங்கள் எதிலும் என் கருத்துக்கு எதிர்நிலையில் பேச நான் ஒப்புக் கொண்டதே இல்லை! (திரு லியோனி அவர்களின் நூற்றுக்கணக்கான பட்டி மன்றங்களிலும் இதை நான் மாற்றிக்கொண்டதில்லை. இதை அவரும் நன்கு அறிவார், அவரே, என் முன்னிலையில் யார்யார் எந்த்த் தலைப்பில் பேசுவது என்பது பற்றிய உரையாடலில் “நிலவன் இந்தத் தலைப்புல பேசமாட்டார்“ என்று –அவரே- தெளிவாகச் சொல்லி விடுவார் என்பதே என் பெருமை!) இதனால் என் பட்டி மன்ற வாய்ப்புகள் குறைந்தபோதும் என் நிலையில் இப்போதும் மாற்றமில்லை.

அந்த “சுயநலமா பொதுநலமா?“ விவாத நேரங்களில் நான் சொன்னது ஒன்று இப்போதும் சரியாகவே இருக்கிறது என்பது சென்னை வெள்ளத்தில் தெரிகிறது. (கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கும்னு சொல்றது இதைத்தான்?)
நான் பொதுவாகச் சொன்னது –
ஒரு வெள்ளைத் தாளை எடுத்து நடுவரிடம் காட்டி இது என்ன என்பேன், அவர் உடனே “வெள்ளைத் தாள்தானே?என்பார். உடனே மேடையிலேயே பேனாவை எடுத்து, சிறு கரும்புள்ளி ஒன்றை தாள் நடுவில் வைத்து மீண்டும் அவரிடம் கேட்பேன். அவரும் “ஒரு புள்ளி  தெரியுது. இத எதுக்கு இப்ப என்கிட்ட கேட்கிறீங்க?”  என்பார். நான் சொல்வேன் – “காரணம் இருக்கிறது நடுவர் அவர்களே! வெள்ளைத் தாளைக் காட்டியபோது ஏதுமற்ற வெள்ளைத் தாள் என்று சரியாகச் சொன்ன நீங்கள், அதில் நடுவில் ஒரே ஒரு புள்ளி வைத்துக் காட்டியதும் “பெரிய வெள்ளைத் தாளில் ஒரு சிறு புள்ளி“ என்று சொல்லாமல், கரும்புள்ளியை மட்டுமே சொன்னீர்கள். இதுதான் நமது உலகத்தின் பார்வை! அவ்வளவு பெரிய வெள்ளையை மறந்துவிட்டு ஒருசிறு கரும்புள்ளியை மட்டுமே கவனிக்க வைக்கும்“ என்று நிறுத்திவிட்டு, இதுபோலத்தான், “ஒன்றைப் பற்றிய நல்ல செய்திகள் எவ்வளவு இருந்தாலும் அதுபற்றிப் பேசாத ஊடகங்கள், கெட்ட செய்தி வந்தவுடன் வெளியிடுவார்கள். இதனால், கெட்ட செய்திகளையே கேட்டுக் கேட்டு, உலகம் முழுவதுமே கெட்டுப் போனதான ஒரு எண்ணம் வந்துவிடுகிறது.

துரியோதனப் பார்வை உலகம் முழுவதையும் தவறாகவே பார்க்கும், தருமனின் பார்வையோ எல்லா நிகழ்வுகளிலும் தர்மத்தை மட்டுமே பார்க்குமாம்! ரெண்டுமே தவறுதானே? நல்லதும் கெட்டதும் கலந்தவன்தான் மனிதன், சுத்த சுயம்புவாய் எந்த்த் தவறுமே செய்யாதவன் எனில் அவன் பால்குடிக்கும் குழந்தை மட்டும்தான்! எல்லாமே தவறாகச் செய்பவர் என்றும் யாரும் கிடையாது. குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல். அவ்வளவுதான். நடுவர் அவர்களே!

அப்படியானால், நல்லவர்களின் செயல் எப்போது அறியப்படும் எனில், ஆபத்துக் காலத்தில், இந்தக் கெட்டவர்கள் ஓடி ஒளிந்துவிடுவார்கள்! அல்லது அதிலும் ஏதாவது ஆட்டையப் போடலாமா என்று பார்ப்பார்கள்! ஆனால், அந்த ஆபத்தில்தான் மனிதர்களின் நல்ல குணங்கள் விசுவரூபமெடுக்கும். ஆம் நடுவர் அவர்களே! சுனாமி, பூகம்பம், தீவிபத்து, பெருவெள்ள நேரத்தில் இவற்றைக் கண்ணால் பார்க்கலாம்.. அப்போதும் அவர்கள் எந்த விளம்பர நோக்கமும் இல்லாமல் செயல்படுவார்கள்.. 

வெகுசிலரே தொலைக்காட்சி பேட்டிகளில் தன் பெருமையைக் காட்டிக்கொள்வார்கள்..ஏனெனில், கடலின் ஆழத்தில் அலையிருப்பதில்லை, அலைவீசும் கரையில் ஆழமிருப்பதில்லை இதைவைத்து மக்களனைவரும் சுயநலவாதிகளென்று முடிவுகட்ட முடியாது“ என்று முடித்துவிடுவேன்.

இந்த நிகழ்வு இப்போதும் நினைவிலாடக் காரணம் –
அரசு எவ்வளவு நிதிகொடுக்கிறது என்பதொரு புறம் இருக்க அந்த அவசர நேரத்தில் யார் உதவியது என்பது முக்கியம்.
வெள்ள நிவாரணப் பணிகளில், நம் அரசு ஊழியர்கள் பலர் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியதாக வந்த செய்திதான்.

அரசுஊழியர் பலர் லஞ்சப் பிசாசுகளாகிவிட்டார்கள் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களிலும் சிலர் நல்லவராகவே இருக்கிறாரகள் என்பதும்

இந்த “எல்லாம் போச்சு எனும் ஒரே யடியான முடிவு“ தவறுதான் என்று மீண்டும் இப்போது தெரிந்திருக்கிறது.


குஜராத் வெள்ளத்தின் போதும், பல்வேறு மாநிலங்களில் நிகழ்ந்த பேரிடர்களின் போதும், அதுவரை கொள்ளை லாபம் அடித்துவந்த தனியார் நிறுவனங்கள் காணாமல் போய்விட, நமது பொதுத் துறை நிறுவனங்களான தீயணைப்பு, காவல்துறை, மின்வாரியம், உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, தொலைத்தொடர்புத் துறை, போக்கு வரத்து மற்றும் ஆயுள்காப்பீட்டுத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்தான்உயிரையும்பொருட்படுத்தாமல் பணியாற்றியதை மறந்துவிடக் கூடாது.

என்ன இருந்தாலும் “அடிச்சாலும் பிடிச்சாலும் அண்ணன் தம்பி நாங்கடா“ ங்கிற மாதிரி நம்ம அரசுத்துறை அரசுத்துறைதான்! தனியார் துறை தனியார் துறைதான்! அது கொள்ளையடிக்க மட்டுமே வரும்! நம்ம கஷ்டத்த திரும்பியும் பார்க்காது இல்லியா?

அரசுத்துறையில் என்னதப்புநடந்தாலும் சரிபண்ணிக்கலாம்..
அதனாலயும் சேர்த்து,
அண்ணமாரே! அக்காமாரே! அன்புத் தங்கையரே! தம்பியரே!
அரசுத்துறை நிறுவனங்களை 
எப்பவுமே ஆதரிங்க சாமியளா!
             -----------------------------------------------------------------------------  

10 கருத்துகள்:

  1. தனியார் துறை காரனெல்லாம் எப்போது லாபம் குறைகிறதோ அப்போதே சேவையை காலி செய்துவிட்டு டாட்டா காட்டிவிடுவான்... அரசுத் துறையில் ஆயிரம் ஓட்டை இருந்தாலும் சேவைகளில் குறை வைப்பதில்லை. அருமையாகச் சொன்னீர்கள் ஐயா.. இந்த சென்னை வெள்ளத்தில் கூட ஒரு கால்டாக்ஸி கட்டண படகு சேவை அளித்ததாக முகநூலில் செய்திகள் வந்தன...

    பதிலளிநீக்கு
  2. அவர்களின் பணி பாராட்டக்கூடியது....தொழிலாளர்கள் எப்போதும் வேலைசெய்துகொண்டேதான் இருக்கிறார்கள்....சரியாக ....

    பதிலளிநீக்கு
  3. பிரச்சனை என்றால் உதவ ஆயிரம் கரங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அதில் சில கருப்பு ஆடுகளும் சேர்ந்து இருப்பதால் சில சமயங்களில் கெட்ட பெயர் வருகின்றது.

    தன்நலம் கருதாது பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் அதனை பாசிடிவ் செய்தியாக பகிரும் உங்களுக்கும் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  4. தன்நலம் கருதாது பணியாற்றும் அரசு ஊழியர்களைப் பாராட்டியே ஆக வேண்டும் ஐயா

    பதிலளிநீக்கு
  5. உங்களின் பார்வை தருமனின் பார்வை அல்ல... அர்ஜுனனின் பார்வை...!

    பதிலளிநீக்கு
  6. அரசு ஊழியர்களுக்கு உங்களுடன் சேர்த்து,
    எங்களின் பாராட்டுகளும்!!!

    பதிலளிநீக்கு
  7. அவர்களின் தன்னலமற்ற பணியினை நானும் பலமுறை இக்கட்டான சூழலில் கண்டு வியந்திருக்கிறேன். பாராட்டப்பட வேண்டியவர்கள்.
    அருமையான பதிவு அய்யா!
    த ம 2

    பதிலளிநீக்கு
  8. வித்தியாசமான பார்வை, இருப்பினும் சரியான நோக்கில்தான். சென்னை நிகழ்வு சோதனைமேல் சோதனை என்றளவில் தொடர்கிறது. இயல்பு நிலை திரும்ப பிரார்த்திப்போம்.
    பௌத்த சுவட்டைத்தேடி 23 ஆண்டு களப்பணியில் கண்ட 29 சிலைகளைக்காண அழைக்கிறேன். http://www.ponnibuddha.blogspot.com/2015/12/23-29_4.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் நல்லவர்தான். ஆனால், நல்லவராய் இருந்தால் மட்டும் போதாது, தேவையான நேரத்தில் தேவையான அளவுக்குப் பணியாற்ற வேண்டிய வல்லவராயும் இருத்தல் அவசியம் என்ற எனது கருத்து உங்கள் பின்னூட்டத்தால் வலுப்பெறுகிறது.
      நம் புதுக்கோட்டை “யூகே இன்ஃபோடெக் தம்பிகள்“ சென்னை மற்றும் கடலூரில் தவிக்கும் நம் மக்களைக் கரையேற்ற எடுத்திருக்கும் முயற்சிக்கு என்னாலியன்ற உதவிகளைச் செய்துவிட்டு இப்போதுதான் வந்தேன். இதுபற்றி நம் கணினித் தமிழ்ச்சங்க நண்பர்கள் கவிஞர்கள் மீரா.செல்வக்குமார், மு.கீதா, மது கஸ்தூரி, விதை-கலாம் ஸ்ரீமலையப்பன் முதலானோரில் யாரேனும் எழுதுவர்... இது எழுதிக்கொண்டிருக்கும் நேரமும் அல்ல.. மனம் கனத்திருக்கிறது.. கடலூர் சென்னை மக்களின் வெள்ளநிவாரணத்திற்கு நாம் பிரார்த்தனை மட்டும் செய்தால் போதாது அய்யா.. வேறு எந்த வகையில் உதவமுடியும் என்றும் பார்த்துச் செய்ய வேண்டிய நேரம்.. செய்வோம்..தொடர்வோம்.

      நீக்கு
  9. அரசு ஊழியர்கள் அனைவருமே லஞ்ச பிசாசுகள். அல்லது சோம்பேறிகள் என்று எண்ணியிருந்த என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு