மாதா-பிதா-இருவரின் வடிவமே குரு- அவரே தெய்வம்

இன்று -09-01-2013-அறந்தாங்கியில், -மழையின் காரணமாகப் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்புக்குப் பின்னரும்- தமிழாசிரியர்களுக்கான பயிற்சி முகாம் வெகுசிறப்பாக நடந்தது.

நேற்று முன்தினம் பொன்னமராவதியில் முத்தமிழ்ப் பாசறையின் உதவியுடன் நடந்து முடிந்த இரண்டுநாள் (07,08-01-2013) பயிற்சிமுகாமில் -புதுக்கோட்டைக் கல்வி மாவட்ட அளவில் உள்ள 121 உயர்-மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து- நூற்றுத் தொண்ணூற்று ஒருவர் (191)வந்திருந்தனர்.

இன்று, அறந்தாங்கிக் கல்வி மாவட்டத்திலுள்ள 119 பள்ளிகளிலிருந்து நூற்று அறுபதின்மர்(160) வந்திருந்தது வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

இந்த இரண்டு இடங்களிலும் என்னோடு, தமிழாசிரிய நண்பர்கள் நால்வர் வந்து பயிற்சி முகாமை ஒருங்கிணைத்தனர். இதுபற்றி விரிவாகப் பின்னர் எழுதுவேன்.

அதில் என்னைத் தொலைக்காட்சியில் பார்த்திருப்பதாகவும், நான் தமிழாசிரியர் என்பதில்  மிகவும் பெருமை யடைவதாகவும் வெள்ளந்தியாக வந்து சொல்லிவிட்டுப் போன சகோதரிகளைப் பார்த்துப் பேசியது எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

மாலையில் வீட்டுக்கு வந்தால், 8மணியளவில் எனது முன்னாள் மாணவர் முருகேசன் வந்தார். தற்போது முதுகலை ஆசிரியராகக் கீரனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியில் சேர்நதிருப்பதாகச் சொல்லி இனிப்பை நீட்டிய கையோடு “ஆசீர்வாதம் பண்ணுங்கய்யா” என்று திடுமென்று காலில் விழவும் நான் பதறிப் போய்விட்டேன். எழுந்திருக்கச் சொல்லி “இப்படியெல்லாம் அம்மா,அப்பா தவிர யார் காலிலும் விழக்கூடாது” என்று சொன்னாலும், சமாதானமாக அம்மா, அப்பா இருவரும் சேர்ந்து தானய்யா ஆசிரியர் வடிவமாக வருகிறார் என்றார்.

எனது நண்பர்...
”மாதா-பிதா-இருவரின் வடிவமாக குரு, அவர்தான் தெய்வம்” என்பதைத்தான் மாதா-பிதா-குரு-தெய்வம் என்று நீங்கள் தானே சொல்வீர்கள் என்று  என்னிடம் சொன்னதற்கு நான் என்ன பதில் சொல்ல?

இதை உண்மையாகவே நம்பும் மாணவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை அறிந்து மிகவும் நெகிழ்ந்து போனேன்.

இன்றைய இன்னொரு மகிழ்வுச் செய்தி நமது வலைப்பக்கத்தைத் தமது வலைச்சரத்தில் பாராட்டி எடுத்து எழுதியிருக்கும் ஒரு தகவல்.
“சின்சியராக எழுதிவரும் வலை எழுத்தாளர்” எனும் வரிகள் --
“டேய், நிலவா... நீ பாட்டுக்கு எழுதுடா... எங்காவது யாராவது இதைப் பார்க்கிறார்கள்... எழுதுப்பா - பதிலோ, “கமெண்ட்ஸ்” பகுதியில் யாரும் எழுதவில்லையே என்று கவலையோ இருக்கப்படாதடா...” என்பது போல சற்று ஆறுதலாகத்தான் இருந்தது. நன்றி நண்பா,  நன்றி நண்பர்களே!

நேரமிருக்கும் நண்பர்கள் பார்க்க-
http://blogintamil.blogspot.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக