--நா.முத்துநிலவன்--
2016-17இல் -- கூடுதல்
பொறுப்போடு - தமிழ்நாட்டு ஆளுநராக ஓர் ஆண்டு மட்டுமே இருந்த திரு சி.வித்யாசாகர்
ராவ் அவர்கள், தமிழ்நாடு அரசு
ஏற்பளித்திருக்கும் திருவள்ளுவர் உருவச் சிலையை ஆளுநர் மாளிகையில் 18-6-2017 அன்று திறந்து
வைத்தார். ஆனால், இன்றைய ஆளுநர் திரு ஆர்.என்.ரவி, அந்தத்
திருவள்ளுவர் சிலைக்கு அப்படியே மரியாதை செய்தால் அது தனது சனாதன தர்மத்திற்குப் ‘அபகீர்த்தி’ ஆகி விடும் என்று
நினைத்தோ என்னவோ, அந்தச் சிலையின் முன்னால் காவி
உடையும், நெற்றியில் திருநீற்றுப் பட்டையும், கழுத்தில்
ருத்ராட்சக் கொட்டையும் அணிந்த ஒரு திருவள்ளுவர் தயார்செய்து வைத்து, வணங்கும் காட்சி
தினசரிகளில் வந்தபோதே தமிழக மக்கள் அதிர்ந்து போனார்கள்.
புதிய
கல்விக்கொள்கை உருவாக்கக் காரணமாக திருவள்ளுவர் தான் இருந்துள்ளார் என்று ஒரு
குண்டைத் தூக்கிப் போட்டார்! இதன் மூலமாக, புதிய கல்விக்
கொள்கையை வகுத்து தொகுத்து எழுதியவரில் தமிழ் தெரிந்தவர் யார்? என்று அடுத்த
இ.ஆ.ப.தேர்வுக்கு ஒரு கேள்வியே வைக்கலாம் என்று எடுத்துக் கொடுத்திருக்கிறார்!
அதன் பிறகும் ‘சனாதன தர்மத்தைத்தான் திருக்குறள்
சொல்கிறது’ என்று ஒரு போடு போட்டு
வள்ளுவரையே மிரட்டி விட்டார்! ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற
குறள் மனுதர்மத்துடன் எப்படிப் பொருந்திப் போகிறது என்னும் ஆய்வுக்கும்
வழிவகுத்துத் தந்தவர் நம் ஆளுநர்! அடுத்து, ‘பிரதமர் மோடி
அவர்கள் திருக்குறளின் தீவிர பக்தர்’ என்றும் சொல்லி -
வடிவேலு மாதிரி ‘நா எங்கய்யா அப்படிச் சொன்னேன்’ என்று - மோடியையே
திகைக்க வைத்தார்! சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள திருவள்ளுவர் திருநாட்
கழத்தில் மட்டுமல்ல போகுமிடமெல்லாம் இந்தப் பேச்சுத்தான்
இப்போது -
இல்லாத திருக்குறள்
ஒன்றைப் போட்டு அதை எழுதியவர் திருவள்ளுவர் என்றும் திருக்குறள் எண் -944 என்றும் அச்சிட்டு, தமிழ்நாடு அரசு
சின்னத்தோடு மருத்துவர் தின சிறப்புப் பரிசாக மருத்துவர்களை அழைத்து
பரிசளித்திருக்கிறார் நமது ஆளுநர்.
அவர்கள் பதித்துத் தந்த குறள் இதுதான்
செருக்கறிந்து
சீர்மை பயக்கும் மருப்பொடு
மன்னுஞ்சொல்
மேல்வையப் பட்டு – குறள் -944 (!)
ஆனால்,
மருந்து என்ற
அதிகாரத்தில்,
944 எண் இட்டு, திருக்குறளில்
உள்ள குறள் இதுதான் :
‘‘அற்றதுஅறிந்துகடைப்பிடித்துமாறல்ல துய்க்க துவரப்
பசித்து.’’ (குறள் 944) என்பதுதான் திருக்குறளில்
உள்ளது. ஆளுநர் தந்த குறளல்ல! சரி எண் எதுவும் மாறியிருக்குமோ என்று பார்த்தால்
எந்த எண்ணிலும் இந்தக் குறள் இல்லை.
எனவே இது
ஆளுநரின் அபத்தக் குரல்தான் என்பது தெளிவு!
இப்போது உள்ள
குறள் எண்களை அமைத்துத் தந்தவர் பரிமேலழகர் என்பது பலரும்
அறியாத உண்மை! ‘திருக்குறள் உரைக்கொத்து” எனும் பெயரில் 10பேரின்
பழைய உரையுடன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் சேர்த்து வெளியிட்டிருக்கும் சில பதிப்புகளைப்
பார்த்தால் உண்மை புரியும். பத்து
உரையாசிரியர்களும் ஆளுக்கு ஒரு வரிசை தந்திருப்பார்கள். ஆக
இன்று நிலைபெற்று விட்ட –பரிமேலழகர் தந்த - குறள் எண்கள்
எதிலும் இப்படி ஒரு குறள் இல்லை, எனவே இது
ஆளுநரின் அபத்தக் குரல்தான் என்பது உறுதியாகிறது
அது பற்றித்
தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள் பற்பலரும்
கண்டித்துக் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்
‘அவருக்குத்
தமிழே தெரியாது, ஏதோ ஆர்வத்தில் நல்லதாக ஒரு
குறளை மேற்கோளிட்டு நினைவுப்பரிசு தர நினைத்திருக்கலாம், தவறான குறளை யாரோ
ஏ.ஐ.இடம் கேட்டுப் போட்டிருக்கலாம், வேண்டுமென்றே யாராவது தவறான
திருக்குறளைப் போடுவார்களா? தமிழ் தெரியாத அவருக்கு எப்படி
இது தவறு என்று தெரியும்? இதற்கு அவரையே
குற்றஞ்சுமத்தலாமா?’ என்று கேட்பவரும் உண்டு.
திருக்குறள் போட வேண்டும் என்று நினைத்தவர் அது திருக்குறள்தானா? என்று கவனித்துப்
போட வேண்டும் என்னும் அக்கறை இல்லாதவரின் முந்திய ‘பாவங்கள்’ இப்படித்தான்
முடியும்!
வள்ளுவரின் தாய்
தந்தையர் ஆதி – பகவன் என்னும் கருத்தும், வாசுகி
- வள்ளுவர் என்னும் பெயர்களும் மட்டுமல்ல, அவரது உருவப் படமும் கூட
கற்பனைதான்! அது நல்ல நோக்கத்தோடு உருவாக்கப் பட்ட ஓவியம். கதைகள் அப்படியல்ல!
அதே போல இந்தக்
கற்பனையும் நல்ல நோக்கத்தில் வந்ததாகத் தெரியவில்லை என, ஆளுநரின்
கடந்தகாலச் செயல்பாடுகளே நம்மை சந்தேப்பட வைக்கின்றன.
133அதிகாரக்
குறளை மாற்ற யாருக்கும் அதிகாரமில்லை! தவறாக வந்துவிட்டது என்று ஆளுநரே வருத்தம்
தெரிவித்திருக்க வேண்டும். அதிகாரி வருத்தம் தெரிவிப்பது, குறளுக்கு
மீண்டும் செய்யும் அவ மரியாதை அல்லவா?
எப்பொருள்
யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு – இதுவும்
திருக்குறள்தான் (எண்-423)
இனிய உதயம் இதழை
வாங்கிப் படித்து, இதுபற்றிய உங்கள் கருத்துகளை
இனிய உதயம் இதழுக்கும், இந்த வலைப்பக்கத்தின்
பின்னூட்டத்திலும் எழுத வேண்டுகிறேன்.
நன்றி -
இனிய உதயம்
இலக்கியத் திங்களிதழ் - ஆகஸ்டு - 2025
ஆசிரியர் - நக்கீரன் கோபால் அவர்கள்
இணை ஆசிரியர் -
கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்கள்,
இனிய தோழர்
கவிஞர் மு.முருகேஷ் அவர்கள்
------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக