--தமுஎகச மாநாட்டு மலர்க் கட்டுரையின் விரிவு—
(மலரில் கட்டுரைக்கு ஏ-4 தாளில் 3பக்கம் என அளவு தந்திருந்ததால்
எனது இந்தக் கட்டுரையை மலரில் 3பக்க அளவில் அமைத்தேன்.
(அதன் விரிவே
இந்தக் கட்டுரை – நமது வலைக்காக)
மலர்க்குழுவில்
இருந்து, மலரைத் தொகுத்த நானே
அளவை மீறக் கூடாதல்லவா?)
-----------------------------------------------------
வட
அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை “FeTNA” (Federation of
Tamil Sangams of North America) என்பது, அமெரிக்கா, கனடா
நாடுகளில் இயங்கிவரும் 71 தமிழ்ச்
சங்கங்களின் கூட்டமைப்பு.
அமெரிக்க
விடுதலை நாளான ஜூலை 4ஆம்
தேதியை மையப்படுத்தி,
ஆண்டுதோறும், ஒரு மாநிலத் தமிழ்ச் சங்கத்துடன்
இணைந்து, 3நாள் தமிழ் விழாவை மிகப்பெரிதாக – பிரம்மாண்டமாக –
நடத்துகிறார்கள்!
சான்-ஆண்டோனியோ-
2024இல் டெக்சஸ்
மாநிலம், சான்-ஆண்டோனியோ நகரத் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்த
37ஆவது பேரவை விழாவுக்கு என்னை அழைத்திருந்தார்கள், (ஏற்கெனவே 2023ஆம் ஆண்டு, நியூயார்க்கில்
நடந்த பேரவை நிகழ்வுக்கே அழைப்பு வந்த போதிலும், அப்போது
‘கொரோனா’ காரணமாக நுழைவுஇசைவு (விசா)
கிடைக்காததால் என்னால் போக முடியாமல் போனது! இதை இப்போது அழைத்த பேரவைச் செயலர்
திரு கிங்ஸ்லி சாமுவேல் அவர்களிடம் சொல்ல, அதற்கான தொகை
கட்டுவது, போக–வர விமானப் பயணக்
கட்டணம், தங்குமிடச் செலவு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் அவர்களே செய்து வி்ட்டார்கள்! திரும்பும் போது கைநிறைய 'டாலர்'களும் தந்தார்கள்!)
சூலை-3, 2024 அன்று சென்னையிலிருந்து 4மணிநேர
விமானப் பயணத்தில் துபாய் வந்து, விமானம் மாறி, அங்கிருந்து டெக்சஸ் போக 20மணிநேரப் பயணம்! மொத்த விமானப் பயணம்
24மணி நேரம்!
அமெரிக்க
நிலப்பரப்பு, இந்தியாவை விட மும்மடங்கு பெரியது, மக்கள் தொகை ஏறத்தாழ ஐந்து மடங்கு குறைவானது! இந்தியாவில் இமயம் முதல் குமரி
வரை ஒரே கடிகார நேரம் தானே? அமெரிக்காவில் நான்கு கடிகார நேரம்! அவ்வளவு பெரிய நாடு!
நான்
சென்ற விமானத்திலும் பிற விமானங்களிலும் நாற்பதுக்கு மேற்பட்டோர்
தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்தார்கள்! எல்லாரும் தங்குவதற்கு அருமையான விடுதியில்
வெகு சிறப்பான ஏற்பாடுகள்! டெக்சஸ் சென்று சேர்ந்த என்னுடன் எழுத்தாளர்கள்
அ.வெண்ணிலா, அழகிய பெரியவனுடன் –(சன் தொலைக்காட்சி ‘கயல்’ தொடரில்
பிறகு வில்லனாக வந்த)- இளைய நடிகர் விஜய்விஷ்வாஸ் ஆகியோர்
சான் ஆண்டோனியோ போய்ச் சேர 3மணி நேரமானது.
தமிழ்நாட்டில்
இருந்து வந்தவர்களுக்குப் பெரிய விடுதியில் தனித்தனி பெரிய அறைகள்! (நான் ஒருவன் தங்கியிருந்த அறைக்கு, இந்திய ரூபாயில்
ஒருநாள் வாடகை 28,000 ரூபாயாம்! – என்
பேரன் கணக்கிட்டுச் சொன்னான்! ஆனால் இப்படி எல்லாவற்றையும்
இந்திய மதிப்பில் பார்க்கக் கூடாது, அமெரிக்க மதிப்பில் அது
இயல்புதானாம்!)
மூன்றாம்
தேதி காலை சென்னையில் விமானம் ஏறி 24 மணிநேரப் பயணத்தில் அமெரிக்கா
போனால், அங்கும் மூன்றாம் தேதி மாலைதான்! உலக நேர மாற்றம்
அப்படி! ஒரு நாள் முழுக்க ஓய்வெடுக்கச் சொன்னார்கள்! விமானப் பயணத்தில் நாள் குழப்பம் காரணமாகப் பகல்
இரவு குழப்பம் இருக்குமாம்! இதை ‘ஜெட்லாக்’ என்று சொல்கிறார்கள் சிலருக்கு 2,3நாள் கூட ‘ஜெட்லாக்’ இருக்குமாம்!
சான்-ஆண்டோனியோ
போன அன்று நள்ளிரவு -நமக்குப் பகல் நேரம் என்பதால்- எனக்குத் தூக்கம் வராமல், விடுதியை விட்டு எதிரில்
உள்ள சிறிய பூங்காவுக்குப் போனால், என்னைப் போலவே, கைலி கட்டி அங்கொருவர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். பார்த்தால்
திரு ஜெயரஞ்சன்! த.நா. திட்டக்குழுத் துணைத் தலைவர்! அவரோடு பேசிக் கொண்டிருந்து
விட்டு --அமெரிக்க இரவு 3மணிக்கு-- விடுதிக்குத்
திரும்பும்போது, கதவு திறக்க நான் சிரமப்பட, ‘இருங்க அங்கிள்’ என்று ஓடிவந்து உதவிய பெண்ணை
‘எங்கோ பார்த்த மாதிரி இருக்கே?’ என்ற
குழப்பத்தில், ‘சூப்பர் சிங்கரா’ம்மா?”
என்று நான் கேட்க, அருகில் இருந்தவர் ‘இவுங்களத் தெரியல? பிக்பாஸ் அர்ச்சனா’ என்றார்!
அடுத்த
நாள் காலை முதல் பேரவை நிகழ்ச்சிகள் தொடங்கின!
பேரரங்கும் இணையரங்குகளும் - தமிழ்நாடு போலத்தான் அமெரிக்கத்
தமிழர்களின் ரசனையும் போல! திரைக் கலைஞர்கள் வந்தால்
அலைமோதும் கூட்டம், கருத்தரங்கப் பக்கம் காத்தாடியது! இதை
முன்னுணர்ந்த விழாக்குழுவினர், எங்களைத் தனித்தனி ‘இணையரங்கு’ களில் பேச வைத்தனர்! முனைவர்
கு.ஞானசம்பந்தன், ஜெயரஞ்சன், த.வா.க.வேல்முருகன்,
அற்புதம்மாள், சுந்தர ஆவுடையப்பன், ஆளுர் ஷாநவாஸ், கவிதா ஜவகர், நடிகர் சூரி, ‘சூப்பர் சிங்கர்’, ‘பிக்-பாஸ்’ பிரபலங்கள், மற்றும்
பலப்பல –(பளபள?) நட்சத்திரங்கள்! (படம்-1-பார்க்க)
எழுத்தாளர்கள் அழகிய பெரியவன், வெண்ணிலா இருவரும் வேறுவேறு கூட்டங்களில் பேசினாலும், எங்கள் மூவருடன், முனைவர் கு.ஞானசம்பந்தன், ரெ.பாலகிருஷ்ணன் இஆப., கலியமூர்த்தி இகாப., பாலச்சந்திரன் இஆப., சேர்ந்து சில நிகழ்வுகளில் பேசினோம்.
கவிதைப்போட்டி
வைத்து, முன்பே தேர்ந்தெடுத்த கவிஞர்கள் ஆறுபேர், என் தலைமையில், “இவர்கள் நடத்தும் சமத்துவப் பாடம்
இன்னும் புரியலையா? என, சிறப்புக் கவியரங்கம் நடத்தினோம். கவிஞர்கள்
கிரேஸ் பிரதிபா, மருதயாழினி பிரதிபா, நளினி சுந்தர்ராஜன், இளங்கோவன் தங்கவேலு, கார்த்திக் பாலசுப்பிரமணியன் டாக்டர் நாகலிங்கம் சிவயோகம் என ஆறு கவிஞர்கள் ஆறு தலைப்புகளில் என் தலைமையில் கவிபாடினார்கள்! (படம்)
அண்ணன் அறிவுமதி கவிஞர்களுக்கு
நினைவுப்பரிசு வழங்கினார் கிரேஸ்பிரதிபா பெறுகிறார்
இனி, இணையரங்குகளில்...
இது இந்தப் பேரவைக்கும் முன்னதாக -அச்சாரமாக?
(இந்த நிகழ்வின் அடுத்தநாள் எனக்குப் பேரவை அழைப்பு வந்தது!)
‘தமிழ்இனிது” நூல் வெளியீடு - அதே வளாகத்தில் வேறு வேறு அரங்குகளில், வேறுவேறு இணையமர்வுகள் நடந்து கொண்டிருந்தன! அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களின் தமிழ்ச் சங்கப் படைப்பாளிகள் குழுமியிருந்த அமர்வுகளில் நாங்கள் பேசியதோடு, பேரவையின் மைய முழக்க மான ‘சமத்துவம் தமிழரின் தனித்துவம்’ எனும் தலைப்பிலும், பேசினோம். இடையில் நமது ‘தமிழ்இனிது” நூல் வெளியீடும் நடந்தது.
மூன்றுநாள்
போனதே தெரியவில்லை! மதியம் மட்டும் அனைவர்க்கும் தமிழ்நாட்டு உணவு தந்தனர். காலை-இரவுச்
சிற்றுண்டிகளைத் தன்னார்வ இளைஞர்கள், நாங்கள் தங்கியிருந்த
விடுதியிலேயே தந்தனர். நிர்வாகக்குழு கவிஞர் இரம்யாவின் கணவரும், பிள்ளைகளுமாகப் பலரும் குடும்பத்துடன் பணியாற்றியது கண்கொள்ளாக் காட்சியாக
இருந்தது! 3நாள் விழாவுக்குச் சில கோடி செலவாகியிருந்தாலும்
இந்தத் தன்னார்வலர்களின் பணிகள், தலைவர் பாலா, செயலர் கிங்ஸ்லி குழுவினரின் பணிகளுக்கு விலைமதிப்பேது?
அட்லாண்டா-
ஏழாம்தேதி காலையில் விடுதியைக் காலி செய்துவிட்டு, சான்-ஆண்டோனியோவில் பணியிலிருந்த என் மாணவர் சாமிநாதன் வீட்டில் காலைச் சிற்றுண்டி! நான்குநாள் கழித்து, தமிழ்நாட்டு இட்லி சாம்பார், காஃபி சுவைக்கு, நாவூறியது! அவர்களின் மகள் ஜ்யோத்ஸ்னா பேரவை நிகழ்வில் குறள், இசைப் போட்டிகளில் பரிசு வாங்கியிருந்தாள்! என் மாணவர் குடும்பம் என்று பரிசு வழங்கிய மேனாள் காவல் அதிகாரி கலியமூர்த்தி அவர்களிடம் சொல்லி மகிழ்ந்தேன் சாமு விமான நிலையம் வரை கொண்டுவந்து விட 12மணிக்கு விமானம் ஏறினோம்!
மகன் ஆலனுடன் பேரவை நிகழ்விற்கும், கவியரங்கில் பங்கேற்கவும் வந்திருந்த தங்கை கவிஞர் கிரேஸ்பிரதிபா
அட்லாண்டாவுக்கு என்னை விமானத்தில் அழைத்துச் சென்றார்.
அவரது அழகான வீட்டின் இயற்கை எழிலும், தங்கை கிரேஸ், வினோத் மற்றும் மருமக்கள் ஆலன், ஆல்வின் அன்பும்,
ஊர்சுற்றிய 2நாள், ஒலிம்பியாட்
நினைவுச் சின்னம், மார்ட்டின் லூதர்கிங் அருங்
காட்சியகத்தில் காந்திசிலை மறக்கவே இயலாதவை!
அடுத்த நாளே அட்லாண்டா வந்ததால், பேரவையிலிருந்து தமிழ்ச் சங்க நிர்வாகிகள் யாரும் திரும்ப முடியாததால்
அட்லாண்டா தமிழ்ச் சங்க நிகழ்வை ஏற்பாடு செய்ய முடியாமல் போனது தங்கை கிரேஸ்
பிரதிபாவுக்குப் பெரிய குறையாகவே இருந்தது. (ஏற்கெனவே இரண்டு ஆண்டு முன்னதாகவே
எனது ‘முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” நூலறிமுகத்தை
அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தில் கிரேசுடன் வேறு நண்பர்களும் இணைய வழியில்
பேசியிருந்தார்கள்!)
மதுரையைச் சேர்ந்த தங்கை கிரேஸ் பிரதிபாவுக்கு
புதுக்கோட்டைக் கவிஞர்கள் தங்கம் மூர்த்தி, முனைவர் மகா.சுந்தர். மு.கீதா,
மைதிலி, கஸ்தூரி, மாலதி,
ஸ்ரீமலையப்பன் தலைமையிலான விதைக்கலாம் இளைஞர்கள் எனப் பெரிய நட்பு
வட்டாரமே உண்டு! அவரது இரண்டு கவிதைத் தொகுப்புகளுக்கு நான் முன்னுரை எழுதியிருக்கிறேன்!
மூன்றாவதற்கும் நானே எழுத வேண்டும் என்றதை ‘அது ஓவராயிடும்’
னு சொல்லி அன்பால் மறுக்கப் பலபாடு பட்டுவிட்டேன்!
பாஸ்டன்-
9ஆம் தேதி அட்லாண்டாவிலிருந்து விமானத்தில் ‘பாஸ்டன்’ நகர் வந்து சேர --என்னுடன் பணியாற்றிய நண்பர் ரவீந்திரனின் -- அன்புமகன் அருண் - தமிழ்ச்செல்வி இணையர் வந்து அழைத்துச் சென்றனர்
ஊர்சுற்றிக் காண்பித்த அருண், ‘அவன்
தந்தை வரமுடியாத ஏக்கம், என்னால் தீர்ந்த’தென்று சொல்ல, அவன் இணையர் தமிழ்ச்செல்வி, மகள்ஷாலினி அன்பில் நெகிழ்ந்து போனேன். 11ஆம்
வகுப்புப் படிக்கும் ஷாலினி தனது பி.எம்.டபிள்யூ.காரில் பள்ளி நேரம் போக ஒரு உணவு விடுதியில் மாலை நேரத்தில் வேலை பார்க்கிறாள்! இது அங்கு இயல்பு!
மூவரும்,
1990-91இல் அறிவொளி இயக்கத் தலைவராகவும் புதுக்கோட்டை மாவட்ட
ஆட்சியராகவும் இருந்த -- ஷீலாராணிசுங்கத் அவர்களின் குடும்பம் பாஸ்டனில்
இருப்பதறிந்து, வீட்டுக்குப் போனோம்! இரண்டு முன்னாள்
ஆட்சியர் இணையரின் அன்பை ஏற்கெனவே நானறிவேன், அருண்
குடும்பம்தான் அசந்துபோனது! பேத்தி தியாவின் மழலைத் தமிழ், பரிமாறிய
உணவில் சுவையூட்டியது! (படங்கள் -- )
அடுத்தநாள், பாஸ்டன் தமிழ்ச்சங்க நிகழ்வு:
ஆல்ஃபியின் வீடே அருங்காட்சியகமாக
ரசனையோடு இருந்தது.
அவரது மகள் திருமண ஏற்பாட்டின் இடையிலும்
என்னை வீட்டில் தங்க வைத்துக் கொண்டார்!
படமாக எடுத்துத் தள்ளினேன். திரும்பும்போது
என் செல்பேசி
கடலுக்குள் விழுந்துவிட்டதூ.....!!!
நல்வாய்ப்பாக, நண்பர் ஆல்ஃபி வரைபடமாக எழுதித் தந்திருந்த தாள் பையிலிருந்தது! அதில் ஆல்ஃபியின் செல்பேசி எண்ணும் இருந்தது! முன்பின் தெரியாத அமெரிக்கர் ஒருவரிடம் -- எனது அரைகுறை ஆங்கிலத்தில் -- நிலைமையைச் சொல்லி, உதவி கேட்க, சற்றும் தயங்காமல், தாளை வாங்கியவர் ஆல்ஃபிக்குத் தகவல் சொல்ல, நியூயார்க் ரயிலில் வந்து சேர்ந்த என்னை, ரயில் நிலையத்திற்கே வந்து ஆல்ஃபி அழைத்துக் கொண்டார், நான் பிழைத்துக் கொண்டேன்! நன்றி ஆல்ஃபி!
புதுக்கோட்டை நகரின் நான்கு வீதிகள் அளவிற்கு இருந்த நியூயார்க் ரயில் நிலையத்தில், அன்றுபார்த்து, நான் போகும் ரயிலின் நடைமேடை
மாற்றப்பட்டு, அங்கு, ‘SORRY NEWYORK YOUR PLATFORM
IS CHANGED TO… SORRY FOR YOUR INCONVENIENCE’ என்று மின்பலகை
சிரித்தது!
உஸ்...அப்பப்பா!
எடுத்த படங்கள் எல்லாம் போச்!!!
(சென்னை வந்து, புதிய செல்பேசி வாங்கி, எண்கள்,
படங்களை ஓரளவு மீட்டெடுத்தேன் - நன்றி
கூகுள்!)
நியூயார்க் தமிழ்ச்சங்கம்- பேரவைத் தலைவர் பாலா. சுவாமிநாதன் அவர்களின் அரண்மனை போலும் வீட்டில்
நடந்தது. ‘தமிழ் மகாகவிகள்” என
ஒருமணிநேரம் பேசினேன் நியூயார்க் தமிழ்ச் சங்கம் நடத்தும் தமிழ்ப்பள்ளிகளின் நிர்வாகிகள்,
ஆசிரியர்கள் -பள்ளி விடுமுறையாக இருந்தும்- குடும்பம் குடும்பமாக
வந்திருந்தனர்
நண்பர்
ஆல்ஃபி அவர்களின் அன்பை எண்ணி நெகிழ்ந்தபடியும், பேரவை நண்பர்களின் திட்டமிட்ட கடின உழைப்பை வியந்தபடியும் நியூயார்க்கிலிருந்து
பறந்து, 17-7-24 காலை சென்னையில் இறங்கினேன்.
------------------------------------------------------------------------------------------------



























