பாடத் திட்டத்தில் ஊடகம் - தினமணியில் வந்த எனது கட்டுரை

=நா. முத்து நிலவன்=
இன்றைய மாணவர்கள் எந்தப் பயிற்றுமொழியில் படிக்கிறார்கள் என்பது முக்கியம்தான். தாய்மொழிவழிக் கல்விதான் தலைசிறந்தது. ஆனால், பயிற்றுமொழி பற்றிய விவாதத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை பாடத்திட்டத்திற்கும் தருவது முக்கியமில்லையா? ஆனால், பயிற்றுமொழி பற்றி விவாதம் நடக்கும் அளவிற்குக் கூட பாடத்திட்டம் பற்றி நடப்பதில்லையே அது ஏன்? அரசியல் வாதிகள் பேசுவதில்லை, சரி. ஆசிரியர் இயக்கங்களும், கல்வியாளர்களும் பேசாவிடில் மற்றவர்களா பேசுவார்கள்!

திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ரசித்துப் பார்க்கும் மாணவர்கள், பாடங்களைப் படிக்கும்போது மட்டும் சலித்துக் கொள்வது ஏன்? என்று கல்வியாளர்கள் மட்டுமல்ல பெற்றோரும், சமுதாய அக்கறையுள்ள அனைவருமே யோசிக்க வேண்டும். "திரைக்காட்சியிலிருந்து கேள்விகேட்கப்படுவதில்லை. எனவே அதை மகிழ்ச்சியாக அனுபவித்துப் பார்க்கிறார்கள்' என்று சொல்லலாம். ஆனால் அதிலிருந்து கேள்வி கேட்டால் உடனுக்குடன் மிகச் சரியாகவே பதில் சொல்கிறார்கள் என்பதும் உண்மைதானே? அப்படியானால் அது மாணவர்களின் குறையல்ல! இன்றைய கல்விமுறையில், பாடத்திட்டத்தில், பயிற்றுமுறையில் உள்ள குறை என்றுதானே சொல்லவேண்டும்?
பள்ளிக் கூடத்திற்குப் போகமறுத்து, பள்ளிப்பேருந்தில் ஏறும்போது ""அம்மா டாட்டாம்மா'' என்று கதறும் குழந்தையின் அழுகுரல், ஒருவகையில் இன்றைய கல்விமுறையின் மீதான விமர்சனம்தானோ?

நமது பண்பாட்டைக் கெடுக்கக்கூடிய, கேவலமான சில தொலைக்காட்சி விளம்பரங்களைக் கூட ரசித்து, தன்னையறியாமலே மனப்பாடம் செய்து, கூடவே பாடும் ஒரு குழந்தை, ஒன்றரை வரித் திருக்குறளை மனப்பாடம் செய்யமுடியாமல் தடுமாறுவது ஏன் என்று யோசிக்க வேண்டும். ஒரு மிட்டாய் விளம்பரத்தில் வரும் "வந்தான் ஹீரோ பாட்டோட வடுகப்பட்டி ரோட்டோட' எனும் தொலைக்காட்சி விளம்பர வரியை குழந்தை அதுவாக வீட்டிலிருக்கும்போது பாடிக்கொண்டிருக்கிறதே! திருக்குறளின் ஒன்றரை வரிமட்டும் அவ்வளவு சுலபமாக மனதில் உட்கார மறுக்கிறதே! இது திருக்குறளின் குறையா? குழந்தையின் குற்றமா? இரண்டுமே இல்லை! நமது குறை! கல்வித்துறையில் இக்காலத்திற்கேற்றவாறு பாடத்திட்டங்களை, பயிற்சிமுறைகளை பயிற்றுமுறைகளை மற்றும் இவற்றைவிட முக்கியமாகத் தேர்வுமுறைகளை மாற்றாத நமதுகுறை!
மனப்பாடப்பகுதியின் 8 வரியைச் சொல்லமுடியாமல் பல நாள் தடுமாறிய மாணவன் ஒருவன், பள்ளி ஆண்டுவிழாப் பாட்டுப்போட்டியில் 80 வரிகளைக்கொண்ட "யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்' எனும் திரைப்பாடலை முழுமையாகப் பாடிப் பரிசுபெறும் நிகழ்வுகள் தமிழ்நாட்டில் ஏராளம்!.

திரைக்கவிஞர் பலரும் திறமைசாலிகள்தாம். வள்ளுவருக்குக் கிடைக்காத பல வசதிகள் அவர்களுக்குக் கிடைப்பதால் வள்ளுவரை விடவும் அவர்களால் மாணவர் மனிதில் எளிதாக இடம்பிடிக்க முடிகின்றது. இந்தக் கசப்பான உண்மையைப் புரிந்து கொண்டு, அந்த வாய்ப்பு வசதிகளை, கல்விக் கூடங்களில் நாம் பயன்படுத்துவதில்லை. அதற்கு புதிய கல்வித் திட்டங்களிலும் இன்னும் போதிய இடம் தரப்படவில்லை என்பதுதான் எனது ஆதங்கம்.
மாணவர்களின் படைப்புத் திறனைக் கண்டுகொள்ளாமல், வெறுமனே மனப்பாடம் செய்யும் எந்திரமாக மட்டுமே அவர்களை நடத்தும் நமது "அரதப்பழசான' கல்விமுறையின் குறைகளால், ""எதிர்கால இந்தியா என்னாகுமோ?!'' என்னும் அச்சம் எழுவதும் இயல்புதானே! உலகின் மிகப் பெரிய பணக்காரராகக் கடந்த 12 ஆண்டுகளாக இருந்துவந்த அமெரிக்கப் பொருளாதாரத்திற்கே சவால்விட்டுவரும் மைக்ரோ-சாப்ட் நிறுவனத்தின் தலைவர்- பில்கேட்ஸ், எதிர்கால உலகின் தேவைகளைப்பற்றிய தனதுகற்பனையை, கோடிக்கணக்கில் விற்பனைசெய்ய, அவரது தொழில் நுட்ப அறிவால்தானே முடிந்தது! நமது கல்விமுறை புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதுடன், மாணவ-மாணவிகளுக்கும் அந்தத் தொழில்நுட்ப வளர்ச்சிகளை அறிமுகப்படுத்த வேண்டுமல்லவா?

"அனைவருக்கும் ஆரம்பக்கல்வி' எனும் புதிய கல்வித்திட்டத்தில், ஆடல், பாடல், செயல் வழிக்கற்றல், மாணவர்களின் படைப்பாக்கத்திற்குக் கல்வியில் இடம்தருதல் போலும் சில நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பது நல்லதுதான். ஆனால், அவற்றைவிடவும் நம் மாணவர்களை அதிகமாகப் பாதிக்கும் ஊடகங்களைப் பற்றி இப்போதும் கண்டுகொள்ளாமல் விடுவது சரியல்லவே!

""ஊடகக் கல்வி''யே இன்றைய மாணவர்களை சரியான வழியில் கொண்டு செல்ல உதவ முடியும்!
திரைப்படம், தொலைக்காட்சி, பத்திரிகைகள், கணினி என அனைத்துவகை ஊடகங்களையும் மாணவர் கல்விக்குப் பயன்படுத்துவது பற்றித் திட்டமிடவேண்டும். இல்லையேல் தேவையற்ற திரைப்படங்கள் இனிப்பாகவும் தேவையான பள்ளிப்பாடங்கள் கசப்பாகவும் இருக்கும் இன்றைய நிலையை மாற்ற முடியாது. இதில் மாணவர்களையோ ஆசிரியர்களையோ குறைசொல்வதில் அர்த்தமில்லை. அதற்கேற்றவாறு பாடத்திட்டத்தில், முதற்கட்டமாகத் தேர்வு முறைகளிலாவது புதிய, புதிய வகைகளை யோசிக்க வேண்டும். தேர்வுமுறை மாற்றம் பற்றிய யோசனையைத் திறந்த விவாதத்திற்கு விடவேண்டும்.

புதுக்கோட்டையில் ஒரு நல்ல பள்ளிக்கூடத்தை நடத்திவரும் பிரபல கவிஞரும் எனது நண்பருமான தங்கம் மூர்த்தி, தனது பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு மாதமும் கடைசிப் பள்ளிநாளில் மாணவர் யாரும் பாடப்புத்தகம் எதையும் கொண்டுவர வேண்டியதில்லை என்று சொல்லிவிடுவாராம். ஒருநாள் முழுவதும் புத்தகமில்லாநாள்! அடேங்கப்பா! மாணவர் மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்? அன்று முழுவதும் பாட்டும், கதையும். பாடத்திட்டத்தையே அவ்வாறு யோசிப்பது எவ்வளவு பலனளிக்கும்!

இதுபோலப் "புத்தமில்லாப் பள்ளிநாள்கள்' அதிகரிக்கப்பட்டு திரை- தொலைக்காட்சி நாள், கணினி நாள், நூலக நாள், பத்திரிகை நாள், சுற்றுச்சூழல் நாள், பள்ளித்தோட்டத்தில் ஒரு நாள், அருகில் இருக்கும் தொழிற்சாலையைப் பார்வையிடும் நாள், வயலைப் பார்வையிடும் நாள், அலுவலகத்தை - வங்கிகளைப் பார்க்கும் நாள் என்பன போலும் புதிய, புதிய திட்டங்களைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இன்றைய போட்டிகள் நிறைந்த உலகிற்கேற்ப நமது மாணவர்களைத் தயார்செய்ய வேண்டுமனில் நமது கல்வித்திட்டத்தில் ஊடகங்களைப் பயன்படுத்தும் முறை பற்றிய வகுப்புகளைச் சேர்க்கவேண்டுவது அவசியம். இதற்கென்று சோதனைக்கட்டமாக மதிப்பெண்களைக் கூட ஒதுக்கலாம்!
பாடங்களில் 25 விழுக்காடாவது சமகாலச் செய்தி கொண்டதாக இருக்க வேண்டாமா? செய்திகளைக் கேட்கும்- பார்க்கும்போதே அதன் "உண்மைத்தன்மை'யைப் புரிந்துகொள்ளும் அறிவு இருக்க வேண்டும். அந்த அறிவு மாணவப் பருவத்திலேயே கிடைக்குமாறு செய்துவிட்டால், ஆகா! அதுவன்றோ சான்றோர் நாடு! அதன் வித்து கல்வித்திட்ட மாற்றத்தில் அல்லவா இருக்கிறது?

பள்ளிக்கூடக் காலை வணக்கக் கூட்டங்களில் "இன்றைய பத்திரிகைகளின் முக்கியச் செய்திகள்' வாசிக்கப்படுவதுண்டு! எந்தெந்தப் பத்திரிகைகள் எந்தெந்தச் செய்திகளை எவ்வாறு வெளியிடுகின்றன? என்பதுபற்றித் தெரிந்தால்தானே அவற்றின் "உண்மைத்தன்மை'யை, -வள்ளுவர் சொன்னதுபோல- புரிந்து கொள்ள முடியும்? இல்லையெனில் ""செய்தியறிந்த முட்டாள்களாக''த் தானே வளரவேண்டியிருக்கும்? இது பற்றி அன்றாடமும் வகுப்புகளில் விவாதம் நடத்த வாய்ப்பில்லா விட்டாலும் மாதம் ஒருநாள் ஊடகங்கள் பற்றிய கலந்துரையாடலை மாணவர்களிடையே நடத்தலாமே!
பத்திரிகைகளின் தலையங்கங்கள், தலைப்புச் செய்திகள், அந்தமாதம் அதிகமாக அடிபட்ட செய்திகளின் உண்மைத் தன்மை, இதுபோலவே திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றிய விவாதங்களையும் அவ்வப்போது 9,10,11,12 வகுப்பு மாணவர்களிடையே நடத்தினால், அதுதானே உண்மையான பொதுஅறிவுத்தூண்டலாக இருக்கும்? இல்லையேல் "இந்தப் பாட்டு எந்தப் படத்தில்? இதில் நடித்த நாயக- நாயகி யார்? என்பன போலும் "அரிய' கேள்விகளைக் கேட்டு பொதுஅறிவு என்று சில தொலைக்காட்சிகள் நடத்தும் "பொதுஅறிவுப்போட்டி(?) தானே மாணவர் கவனத்தை இழுத்துக்கொள்ளும்?

""அதிகமாக விற்பனையாகும் பத்திரிகைகளின் செய்திகளைவிடவும் அதிகமான மக்களால் மதிக்கப்படும் பத்திரிகைகளின் செய்திகள் முக்கியத்துவம் வாய்ந்தவை''- என்பதை நம் குழந்தைகளுக்கு சொல்லித்தரவிட்டால், நுனிப்புல்மேயும் மனப்பான்மையை வளர்த்துவிடும் குற்றத்திற்கு நாமே ஆளாகிவிட மாட்டோமா? பள்ளிக்கூடங்களில் படிக்கும் பாடம் போதவில்லை என்பதை பெற்றோரும், கல்வியாளர்களும் ஒத்துக்கொண்டாலும் அதற்கான மாற்று என்ன என்று யோசித்தால், ஊடகக் கல்வியின் அவசியத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

படித்துமுடித்து, வேலைக்கான நேர்காணலுக்குப் போகும்போதுமட்டும் செய்திகளைத் துரத்தித் துரத்திப் பார்க்கும்- படிக்கும் இளைஞர்களை நாம் பார்த்திருப்போம்! அப்போது படித்தால் மட்டும் போதாது! ஆரம்பத்திலிருந்தே அந்த "சேமிப்பு' இருந்தால் நல்லதுதானே? இதைச் செயல்படுத்த என்ன தடை? "பாடத்திட்டத்தில் பத்திரிகைகளைச் சேர்ப்பது' என்பது பற்றித் திட்டமிட்டால் ஊடகக் கல்வியில் உயர்ந்த அனுபவம் கொண்டவர்கள் சரியான வழிகளைச் சொல்ல மாட்டார்களா என்ன?

இதுபோலத்தான், "ஆகா, மோசமான படத்தைப் பார்த்துப் பிள்ளைகள் கெட்டுப்போவார்களே என்று, பெற்றோர்கள் கவலைப்படுவதற்கும் தீர்வுகான முடியும். "நல்லபடம் எது, வெறும் பொழுதுபோக்குப்படம் எது?' என்பது பற்றிய அறிவு அவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கும்? பள்ளி வகுப்புகளில் நடக்கும் "படக்காட்சி மற்றும் விவாதம்' தானே அதைத் தரமுடியும்? இயக்குநர் பாலுமகேந்திரா சொல்வதுபோல, "திரைப்பட ரசனை' பற்றிய தெளிவு கிடைத்தால், அதனால் வரும் தீங்குகள் பலவும் தொலைந்து போகுமே! நல்ல பத்திரிகைகளை, புத்தகங்களைப் "படிக்கச் சொல்லி'த் தருவது போல, நல்ல படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் "பார்க்கச் சொல்லி'த் தந்தால், நல்ல மாற்றம் நிகழாதா என்ன?

பத்திரிகை, தொலைக்காட்சி, திரைப்படங்களைப் பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டிய அவசியம் உணர்ந்து, முறைப்படி திட்டமிட்டுச் சேர்த்துவிட்டால், வீட்டில் இருக்கும் பெற்றோரே ஆசிரியாராக மாறுவர்! பள்ளியில் இருக்கும் ஆசிரியர், பெற்றோர்போல் மதிக்கப்படுவர்!
ஒரு சமுதாயமே தன் தேவைக்கான கல்வியின் புதிய அர்த்தத்தைப் புரிந்து புதிய படைப்புகளை உருவாக்கும். அதில் புதிய சமுதாயமும் எழும்!  "எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு'
--------------------------------------------------------------------------------------------
(கட்டுரையை 01-01-2009 அன்றைய தலையங்கப் பக்கக் கட்டுரையாக வெளியிட்ட ''தினமணி'' நாளிதழுக்கு நன்றி)

6 கருத்துகள்:

  1. ஐயா

    தமிழ் வலைப்பதிவுலகிற்கு வருக!
    தங்கள் ஆக்கங்களை தொடர்ந்து தருக!

    அன்புடன்
    ஆசிப் மீரான்

    பதிலளிநீக்கு
  2. vanakam thangal katturai puthiya parvai nadaimurai paduthinal kalvium karkandagum.
    anbudan
    geetha. pudugai

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் கீதா,
    தங்களின் மடலுக்கு நன்றி.

    பாலா சார் பற்றிய கட்டுரையைப் படித்துக் கருத்துச்சொல்ல வேண்டுகிறேன்.
    ஏனெனில், உங்களின் வழிகாட்டி அவர் என்று உங்களின் ‘எம்.ஃபில்.’ புடிப்புக்கு புத்தகம் கேட்டு வந்தபோது சொன்னதாக நினைவு.

    அவ்வப்போது எழுதுங்கள் - என் படைப்புகளைப் படிக்கும்போதெல்லாம் மட்டுமல்ல, உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம்.
    அன்புடன்,
    நா.முத்துநிலவன்
    07-03-2011
    இரவு 10-45

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஸ்டாலின்
    ஒருவரி விமர்சனம் தானா?
    எதிர்க்கருத்தாக இருந்தாலும் சரியாக இருக்கும் எனில் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உள்ளவன் தான் எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஆசிபு அவர்களே, நலம் தானானா?
    அமீரக இணைய நண்பர்கள் மலர் பற்றிய என் கடிதம் ?
    தங்களின் அடுத்தடுத்த மலர் வெளியீடுகள் சிறப்பாக வந்திருக்கும் நான்தான் பார்க்க முடியவில்லை. எங்கே கிடைக்கும்? உங்கள் வலையில் ?
    அன்பு கூர்ந்து தெரிவியுங்கள்

    பதிலளிநீக்கு