சமச்சீர்க் கல்வி


வாராது போல்வந்த மாமணியைத் தோற்போமோ?’
-- நா.முத்து நிலவன் --
மிழ்நாட்டுப் பள்ளிகளில் சற்றேறக்குறைய ஒன்றரைக் கோடி மாணவர்கள் படிக்கிறார்கள்.  ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை படிக்கக்கூடிய மாணவ-மாணவியரும் அவர்தம் பெற்றோரும் என ஏறக்குறைய தமிழ்நாடே குழப்பத்தின் உச்சத்தில்  இப்போது தவிக்கிறது… 
புதிய அரசு கொண்டுவந்த சமச்சீர்க் கல்வித் திருத்தச் சட்டத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது. தமிழகஅரசு இதைஎதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. முந்தியஅரசு அச்சிட்டு அனுப்பிய புத்தகங்கள் தேக்கி வைக்கப்பட்டு, புதியஅதாவது கடந்த ஆண்டு இருந்த பாடத்திட்டப்படியான-- நூல்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. மெட்ரிக் பள்ளிகளோ, ‘அவர்களுக்கான நூலகளை அவர்களே வாங்கிக் கொடுக்கும் வேலையை -இந்த ஆண்டு இல்லைஎன்றிருந்த கொள்ளையை- பெரும்பாலும் செய்துமுடித்து விட்டார்கள்.. இவ்வளவுக்கும் காரணம், ‘சமச்சீர்க்கல்வித்திட்டத்தில் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் தரமாக இல்லைஎன்பதாக இன்றைய முதல்வர் கூறுகிறார், ‘அரசியல் காழ்ப்புஎன்று முன்னாள் முதல்வர் கூறுகிறார். 
பாடநூல்கள், கட்சிஅரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்கவேண்டும்என்று எல்லாரும் விரும்புகிறோம். ஆனால், இதுவரையான தமிழ்நாட்டுப் பாடப்புத்தகங்களில் அப்படி எந்தஆண்டும் இருந்ததில்லை என்னும் எதார்த்தத்தையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இதைப் பாடநூல்களை எழுதும் - மேற்பார்வை செய்து ஒப்புதல் வழங்கும் அந்தந்தப் பாடநூல்களின் ஆசிரியர்கள் அல்லவா முதலில் உணரவேண்டும்?! 
ரு புனிதமான பணியில் ஈடுபடுகிறோம் என்னும் பெருமிதமோ அதற்கான அக-புறத் தகுதியோ இல்லாதவர்கள் பாடநூல் எழுத வரும்போது அதற்கான பிரதிபலிப்பும்பாடநூலில் வெளிப்படத்தானே செய்யும்? வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றாங்க? ‘சட்டியில இருக்கிறது தானே அகப்பையில வரும்? பெரும்பாலும் பள்ளிக்கல்விக்கு நேரடித்தொடர்பில்லாத கல்லூரிப் பேராசிரியர்கள், மற்றும் ஆசிரியப் பயிற்சிநிறுவனப் பேராசிரியர்களே இதுவரை பாடநூல்களை எழுதி வந்துள்ளனர். இப்போதும் --சமச்சீர்க் கல்விபாடநூல்களிலும்-- இதுதானே நடந்தது? எவ்வளவுதான் மேதைகளாக இருந்தாலும் -தொடர்புடைய வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் நடத்திய நேரடிஅனுபவம் இல்லாதவர்கள்- புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு எழுதும் பாடநூல் எப்படிச்சரியாக இருக்கும்?  
பாடம் நடத்தும் ஆசிரியர்களைப் பாடநூலாசிரியர்களாகத் தேர்வுசெய்ய நினைத்த முந்திய அரசின் பள்ளிக்கல்வித்துறை, அவர்களை விண்ணப்பிக்கச் சொல்லி விளம்பரம் செய்தது. பிறகு பாடநூல் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்வும் நடத்தியதுதான் பெரும் வேடிக்கை! 

            ஆமாம்சாமிகள் மட்டும்அடுத்தஆண்டும்; --அதாவது 7,8,9,10 வகுப்புகளுக்கான சமச்சீர்க்கல்விபாடநூல் ஆசிரியர்குழுவில்-- தொடர்ந்து இடம்பிடித்தனர். கருத்துகளை பொருத்தமாகச் சொன்ன ஆசிரியரோடு நல்ல புதிய கருத்துகளை தமிழ் மாணவர்க்குத் தரவேண்டும் என்று துடிப்போடு 6ஆம் வகுப்புத் தமிழ்ப்பாட நூல் ஆசிரியர்குழுவில் இருந்த இரண்டு இளைஞர்களும் அடுத்த ஆண்டு அழைக்கப்படவில்லை! இளஞ்சிறுவரிடையே பெருந்தன்மைப் பண்பை வளர்க்க வேண்டிய ஆசிரியர்குழு, பணியை மட்டுமல்ல பெயரையும் இருட்டடிப்புச் செய்யும் அளவிற்குப் பெருந்தன்மையோடு இருந்ததுதான் சமச்சீர்க்கல்விப் பாடநூலாசிரியர் குழுவின் இலட்சணம்!  
இதுபோலும் சில்லறைத் தவறுகளுக்காகவோ, ‘தற்காலிக இழப்புகளுக்காகவோ வருந்தவில்லை! மாறாக சமச்சீர்க்கல்வி எனும் வாராதுபோல்வந்த மாமணியைத்தோற்போமோ?’ என்றுதான் அஞ்சுகிறேன்.

முந்திய அரசும் பெரும்ஈடுபாட்டோடு சமச்சீர்க் கல்வியைக்  கொண்டுவரவில்லை. கல்வியாளர்கள், சமூக-ஜனநாயக இயக்கங்களின் தொடர்ந்த போராட்டங்கள், தேர்தல் அறிக்கையில் உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டிய அரசியல்எனகலைஞர் கையில் எடுத்தாரே தவிர மெட்ரிக் பள்ளி முதலாளிகளின் உள்ளடிவேலைகளை அவரால் எதிர்கொள்ள இயலவில்லை.
            சமச்சீர்க்கல்வி ஒழியவேண்டும்என்று நினைப்பவர்களின் முதல் எதிரி தமிழ்வழிக்கல்விதான்.  கல்வியாளர் மட்டுமல்ல தேசநலனில் அக்கறைகொண்ட பலரும் சொல்லிச் சொல்லி மாய்ந்துபோ யிருக்கிறார்கள்காந்தியடிகள் சொன்னார்: எனக்கு ஒரு சர்வாதிகாரியின் அதிகாரம் இருக்குமானால், நான் இன்றே நம் சிறுவர்கள் அந்நிய மொழிமூலம் கற்பதை நிறுத்திவிடுவேன். தாய்மொழி மூலம் கற்பிக்கும்படிக் கட்டளையிடுவேன். இம்மாற்றத்தை எதிர்ப்பவர்களை வேலையிலிருந்து நீக்கிவிடுவேன்’ (ஹரிஜன் இதழ் நாள்:22-06-1947) அந்த அகிம்சாவாதியின் கடுமையைப் பார்த்தீர்களா? இதையே நமது பாரதி –‘தமிழருக்குகட்டுரையில், ‘தமிழா பயப்படாதே! ஊர்தோறும் தமிழ்ப்பள்ளிக் கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்என்றதை யார்கேட்டார்கள்? ஆங்கிலப் பள்ளிகளின் கொள்ளைஒருபக்கம் அதிகரிக்கும் போதே அவர்களின் அதிகார அட்டகாசமும் அதிகரிக்க ஆரம்பித்தது. அங்குபடிக்கும் தமிழ்ப்பிள்ளைகள் வகுப்பு நேரம் அல்லாத நேரங்களில்கூட இயல்பாகத் தமிழில் பேச முடியாதபடி அவர்களின் அடிமை மோகம்தலைவிரித்தாடியது!

தமிழகப் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி நிலையங்கள் யாருடைய பிடியில் இன்றும் இருக்கிறதென்பது ஊரறிந்த ரகசியம் தானே? இல்லாவிட்டால் பத்தாம்வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சியில் மாநில அளவில் தொடர்ந்து 26 ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கும் விருது நகரைவிடவும் ஈரோட்டிலும் திருச்செங்கோட்டிலும் ராசிபுரத்திலும் நாமக்கல்லிலும் மட்டும் இத்தனை பணக்காரமெட்ரிக் பள்ளிகளும், சிபிஎஸ்சி பள்ளிகளும் முளைத்துக் கிளைபரப்பியிருக்குமா? அல்லது டீம்டு யுனிவர்சிடிகள் தான் இத்தனை இருக்குமா? ஒரு மெட்ரிக் பள்ளியைத் தொடங்கி அடுத்த ஆண்டே ஆசிரியர்பயிற்சிப் பள்ளிஅடுத்த ஆண்டு ஆசிரியர்கல்லூரிஅதற்கடுத்த ஆண்டு பொறியியற்கல்லூரிதொடரும் ஆண்டுகளில் ஏனைய கல்லூரிகள் இறுதியாக டீம்டு யூனிவர்சிடிஎன வளர்ந்திருக்கும் இவர்களிடம் நாட்டு நலனை உள்ளடக்கிய தாய்மொழிவழிக் கல்வியையோ அல்லது சமச்சீர்க் கல்வியையோ எதிர்பார்க்க முடியுமா? மக்கள் நமது அரசிடம் தானே இதை எதிர்பார்க்க முடியும்

 படைப்பாக்கக் கல்விமுறைமற்றும் செயல்வழிக் கற்றல் முறைநான் பார்த்த வரை குழந்தைகளுக்கான மிகச்சிறந்த கல்விமுறை என்பதில் சந்தேகமில்லை. சமச்சீர்க்கல்வியின் மிகச்சிறந்த முதல் மூன்று வகுப்புகளுக்குப் பாடநூலுக்குப் பதிலாக அட்டைகள் வழி அவர்களே கற்கும் - ஆசிரியர் ஒரு நண்பரைப்போல அருகில் அமர்ந்துவழிகாட்டும் - அருமையான கல்விமுறை.. இதுவும் சமச்சீர்க் கல்விமுறையின் ஓர் அங்கம்தான். இதை ஒப்புக்கொள்ளாத ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் விளக்கி நடைமுறைப்படுத்த வேண்டிய அரசு இதில் முழுமூச்சாக ஈடுபாடு காட்டாதது ஏன்
சமச்சீர்க் கல்வி அறிமுகப்படுத்தும் முன்னதாகச் செய்ய வேண்டிய பணிகளில் முக்கியமான ஒரே மதிப்பெண் பட்டியல்’ 2009-10ஆம் கல்விஆண்டுமுதல் தரப்பட்டது. அதாவது 1100 மதிப்பெண்ணுக்குத் தேர்வு எழுதிய மெட்ரிக் மாணவர்க்கும். 600 மதிப்பெண்ணுக்குத் தேர்வு எழுதிய அரபி மற்றும் சமஸ்கிருத மாணவர்க்கும்,  500மதிப்பெண்ணுக்கே வகுத்துக் கணக்கிட்டு- ஒரே மாதிரியான மதி;ப்பெண் பட்டியல் வந்தது. இந்த 2011-12ஆம் கல்வி ஆண்டில், தேர்வுகளும் 500 மதிப்பெண்ணுக்கே என மாற்றக்கூடிய சமச்சீர்க் கல்விப் பாடநூல்கள் வந்திருக்க வேண்டும்.  இனி வரும் சமச்சீர்க் கல்வி ஆலோசனைக் குழுஇதுபற்றியும் முடிவெடுக்க வேண்டும். 
திரு. முத்துக்குமரன் குழு நூற்றுக்கும் மேற்பட்ட ஆலோசனைகளை முந்திய அரசுக்குத் தந்தது. அதில் ஒரு சில ஆலோசனைகளையே அரசு நடைமுறைப்படுத்தியது. அதில் சொல்லப்படாத நல்லபல கருத்துகளும் உள்ளன. சமச்சீர்க் கல்விப் பாடநூல்கள் மற்றும் தேர்வுகளை நடைமுறைப்படுத்திக் கொண்டே பிறவற்றைத் தொடர்ந்து செய்யவேண்டும். அதில் பொதுப்பள்ளி மிகமுக்கியமானது. பீகாரில் திரு.நிதீஷ்குமார் இதனை -இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்திய மாநிலம்-- எனும் சிறப்போடு நடைமுறைப்படுத்தி வருவதாகச் செய்திகள் சொல்கின்றன. 
யுனெஸ்கோ அறிக்கையின்படி, இன்றைய நிலையில் அனைவருக்கும் கல்விஎனும் இலக்கை 2015ஆம் ஆண்டில்கூட எட்டமுடியாத 40நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்துவிடக் கூடாது எனும் முனைப்போடு நமது மத்தியஅரசுடன், கல்வியாளர்களும், சமூகஆர்வலர்களும், சில முயற்சிகளை மேற்கொண்டனர். இந்தியாவில் ஆறிவொளி இயக்கங்களை நடத்திய அனுபவத்தோடு அனைவருக்கும் ஆரம்பக்கல்வி எனும் சில நல்ல திட்டங்களை முன்வைத்து அரசுக்கு உதவிவரும் அறிவியல் இயக்கம் போலும் சமூக இயக்கங்களை உரியவகையில் பயன்படுத்த அரசு தயங்கக் கூடாது.
மதுரைப் பகுதிப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் தோல்விகள் அதிகம்! ஏனென்று விசாரித்தால் பெரும்பாலான மேல்நிலை வகுப்புகளுக்குத் தமிழாசிரியர்கள் இல்லையாம்! உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக உயர்த்தப்படும்போது தமிழாசிரியர் பணியிடங்களை முந்திய அரசு நான்கு ஆண்டுகளாகவே தரவில்லை எனும் குற்றச்சாட்டும் உள்ளது. இதுபோலும் குறைகளைக் களைந்து, ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தை முன்னேறிய நாடுகள் பலவற்றில் இருப்பது போல 1:20 என இல்லாவிட்டாலும் முத்துக்குமரன் குழுவில் பரிந்துரைத்திருப்பதுபோல 1:30என்றாவது இட்டு, புதிய ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கித் தரவேண்டும்.

இன்னொரு வகையில் பார்த்தால், சமச்சீர்க் கல்வி என்பது கல்வி தொடர்பானது என்பதை விடவும் அது சமுதாயம் தொடர்பானது என்பதே சரியான பார்வை! இன்றைய வகுப்பறையே நாளைய சமுதாயம்! சமூக சமத்துவம் வந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருப்பவர்கள்தாம் - எல்லாவற்றிலும் தனியார் மயம் வரவேண்டும் என்று ஏங்கிக்கிடப்பவர்கள்தாம் - இடஒதுக்கீடே கூடாது என்பவர்கள்தாம் - தகுதி, திறமை எனும் பெயரில் ஏமாற்றி வருபவர்கள்தாம் சமச்சீர்க் கல்வியையும் கூடாது என்கிறார்கள்! நாம் கல்விமுறை மாற்றம் எனும் பெயரில் இவற்றை வரவேற்க வேண்டும் என்பதற்காகவே சமச்சீர்க் கல்வி வேண்டும் என்போம். உச்சநீதி மன்றத் தீர்ப்பை எதிர்பார்ப்போம். தீர்ப்பு எப்படி இருந்தாலும் நல்ல சமுதாயத்திற்கான நமது பணியில் கல்வியின் வழியான நமது பணி தொடர்ந்து நடக்கும் நடக்கவேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------------------------    

இந்தக் கட்டுரை தமிழக அரசின் சமச்சீர்க்கல்வித் திருத்தச் சட்டத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தவுடன், தமழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாகக் கிடைத்த செய்தி அறிந்து -கடந்த 13-06-2011 அன்று-- எழுதி நமது வலையில் வெளியிடப்பட்டது.

நம் நண்பர்கள் பலரும் நல்ல ஆலோசனைகளைப் பின்னூட்டமாக இட்டிருந்தார்கள்.மும்பைக் கவிஞர் புதிய மாதவி சொன்ன விமரிசனத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். கவிஞர் மு.முருகேஷ் சொன்னதைப் போல மறுநாள் ஜனசக்தி நாளிதழுக்கு அனுப்பி வைத்தேன். கடந்த 24-06-2011 அன்று ஜனசக்தியின் துணையாசிரியரும் கவிஞருமான தோழர் ஜீவபாரதி பேசினார். கட்டுரை நீளமாக இருப்பதால் எடிட்செய்து வெளியிடலாமா என்று கேட்டார். அதன் படி அடுத்த நாள் ஜனசக்தியில் வெளிவந்த கட்டுரை சரியாகவே எடிட் செய்யப் பட்டிருப்பதாக நான் உணர்ந்ததன் அடையாளமாக அப்படியே ஜனசக்தியில் வெளிவந்தவாறே- திருத்தி மீண்டும் நமது வலையில் வெளியிடுகிறேன்.

சரியாக கருத்துகளைச் சொன்ன கவிஞர் புதியமாதவிக்கும் கவிஞர் முருகேஷ_க்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. வெளியிட்டமைக்கு நன்றி: ஜனசக்தி நாளிதழ் -25-06-2011.

கல்வி 'புகட்டுவது' சரியா?


'ஏடு தூக்கிப் பள்ளியில் இன்று பயிலும் சிறுவரே, நாடு காக்கும் தலைவராய் நாளை திகழப் போகிறார்' என்று பெற்றோரும் சமு தாயமும் பெரிதாய் எதிர்பார்த்திருக்க, அவர் களில் பலர் பாதியிலேயே படிப்பை விட்டுவிட்டு ஓடுவதும், சிலர்வாழ்க்கையைத் தொடங்குவ தற்கு முன்பே தோற்றுவிட்டதாய் நினைத்து, தற்கொலையைத் தேடுவதும் ஏன்?
                சென்னையில் ஒரு பள்ளிமாணவர் தற்கொலை’, ‘புதுவையில் ஒரு மாணவிக்குத் தண்டனை தந்த ஆசிரியர் கைதுபோன்ற செய்திகள் தரும் பாடம் என்ன?
சுவையாக இருக்கவேண்டிய கல்வி, சுமையாகிப் போவது ஏன்? 
'நாளை பள்ளிக்கூடம் விடுமுறை' எனும் செய்திவந்தால், மாணவர்தம் மகிழ்ச்சிக்கூச் சலில் அந்தப் பிரதேசமே கிடுகிடுத்துப்போவது உண்மையா இல்லையா? உண்மைதான் எனில், பள்ளிக் கூடங்களைச் சிறைக்கூடங்களாக மாணவர் கருதும் நிலை ஏன் உருவாகிறது?
சுவைக்கும் கற்கண்டு போல இருக்கவேண்டிய கல்வி, சுமக்கும் கல்போல் மாறக் காரணம், பள்ளிச்சூழலா? பாடத்திட்டமா? ஆசிரியர்களா? இல்லை, அரசாங்கமா? என்று சிந்தித்துப் பார்த்தால், ‘ஏன் பெற்றோர்க்கு இதில் பொறுப்பில்லையா?’என்னும் கேள்வியும் எழுவதைத் தவிர்க்க முடியாது! அவர்களுக்கும் பொறுப்பு உண்டு. அனைவரும் முடிந்தவரை அலட்சியப்படுத்தியதன் விளைவுதான் தற்போதைய கல்வி நிலை!
ஆங்கிலப் பிரபுக்களுக்குத் தேவையா யிருந்தது, தொண்டூழியம் செய்யச் சில'கேள்வி கேட்கத் தெரியாத' கிளிப்பிள்ளைகள்தான்!அதற்கேற்ற பாடத்திட்டம் அவர்களுக்குச் சரி! சிந்தித்து, நாட்டு முன்னேற்றத்தில் பங்கேற்கும் செயல்வீரர்களை உருவாக்குவதற்கேற்ப, பாடத்திட்டம்  மாற வேண்டும்! அண்மையில் அண்ணாபல்கலைக்கழக விழாவொன்றில் பேசிய தமிழக முதல்வர் அவர்கள்,"சுய சிந்தனைக்கும், புதிய கண்டுபிடிப்புக்கும் ஊக்கமளிக்கும் வகையில் பாடத்திட்டத்தையும் கற்பிக்கும் முறைக ளையும் மாற்றியமைக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்கள்! வரவேற்கத் தக்க கல்விக் கருத்து! அதற்கேற்ப செயல்திட்டம் வகுத்து, நடைமுறைப் படுத்தினால், மாணவர்கள் இன்றைய கல்வியைச் சுமையாகக் கருதும் நிலையில் மாற்றம் வருவதோடு, சுவையாகக் கற்கவும் தொடங்குவர். அத்தகைய அறிவார்ந்த குழந்தைகளால்தான் நாளைய சமூகம் நல்ல சமூகமாகும் என்பதில் சந்தேகமென்ன?
நமது அறிவியல் அறிஞரும், குடியரசுத் தலைவருமான மேதகு அப்துல் கலாம் அவர்களின், 'அறிவியல் தொழில்நுட்பம்' பற்றிய கட்டுரையை, பத்தாம்வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் முதல்பாடமாக வைத்திருப்பது, பயிலும் மாணவர்க்கு மட்டுமல்ல பயிற்றுவிக்கும் ஆசிரியர்க்கும்கூட மகிழ்ச்சி தரும் அனுபவமாகும்.  ஆயினும், மனப்பாடத்தேர்வு முறையும் அதையே கவனப்படுத்தும் மதிப்பீட்டுமுறையும் மாற்றப்படாதவரை பாடநூல் மாறுவதால் மட்டும் எந்தப்பலனும் இராது என்பதே கல்வியாளர் கருத்து.
                பெரும்பாலான தனியார் மெட்ரிக் பள்ளிகளிலும், சிலஅரசுப்பள்ளிகளிலும் கூட 9,11ஆம் வகுப்புகளை நடத்தும் வழக்கமே இல்லை! அந்தமாணவர்க்கு, முறையே10, 12ஆம் வகுப்புப் பாடங்களே இரண்டுவருடங்களும் நடத்தப்படுவது ஊரறிந்த ரகசியமாக உள்ளது! இரண்டு வருடமும் ஒரே புத்தகத்தை உருப்போட்டமாணவர்கள், தொழிற்கல்வி நுழைவுத் தேர்வுகளில் உருப்படாதமதிப்பெண் எடுக்கும் ரகசியமும் இதுதான்! அந்தந்த வயதிற்கும், உளவியல்- சொல்லாற்றல்-பொது கவனிப்புத் தன்மைக்கும் ஏற்றவாறு பாடங்கள் தயாரிக்கப்படுவது உண்மை யெனில், இந்தப்பள்ளிகள் இந்த வகுப்புகளையே புறக்கணித்துவிட்டு-ஒரே தாண்டாகத் தாண்டி-அடுத்த வகுப்புக்கு மாணவர்களைக் கடத்திகொண்டு போவது எப்படி அனுமதிக்கப் படுகிறது?
இப்படியான பள்ளிகளில், மாணவர்கள் மனப்பாட எந்திரமாக மாற்றப்படுவதன்றி வேறுவழி யென்ன? பாடமும் புரியாமல்,மனப்பாடமும் செய்ய முடியாமல் மாணவர்கள் படும் அவதியும், 'முடியாத' மாணவர்கள் கடுமையான தண்டனைக்கு ஆளாவதும் பள்ளிக் கூடத்தையே வெறுப்பதும், வாழ்க்கையே வெறுத்துப்போவதுமான நிலைமை தொடர்கதையாகிறது! எப்படியாவது மதிப்பெண் வாங்கவைக்கும் எந்திரம்தானா ஆசிரியர்கள்?
9மற்றும் 11 ஆம் வகுப்பு பாடங்களை நடத்தாத பள்ளிகளை, பள்ளிக் கல்வித்துறை கண்டறிந்து, அந்தப்பள்ளிகள் பாடப்புத்தகங்களை முழுவதும் நடத்தி, ஆண்டுத் தேர்வுக்குப் பிறகே அடுத்த வகுப்புப் பாடங்களைத் தொடங்க வேண்டும் என்பதை அறிவுறுத்த வேண்டும்.
தேர்வு முறையில் நிச்சயமாகச் சில மாற்றங்களைக் கொண்டுவரலாம். நூறுவகை வினாத்தாள்களைத் தயாரித்து வைத்துக்கொண்டு, ஒரேவகுப்பு மாணவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை வினாத்தாள் வீதம் கொடுப்பது எனும் 'வினாவங்கி'-முறையில் தேர்வை நடத்தினால், 'பிட்' அடிப்பது, 'காப்பி' அடிப்பது, 'பின்தொடர்வது' (paper chasing) போன்ற தேர்வு முறைகேடுகளைக் களையமுடியும். அதோடு, திருத்தப்பட்ட தாள்கள் அனைத்தையுமே மாணவர்க்குக் கொடுத்துவிடுவது எனில், முறைகேடுகள் முற்றிலும் ஒழிந்துபோகும். ஆசிரியர் 'மூடு'க்கு ஏற்ப மதிப்பெண் வழங்கவும் இயலாது. மாணவர்- பெற்றோர்  மனஅமைதியும் குலையாது. ஆண்டுமுழுவதும் இதேமுறை கடை பிடிக்கப் படுமானால்,ஆண்டுத்தேர்வு பற்றிய அச்சமும் எழாது.
மருத்துவம், பொறியியல், போன்ற தொழிற்கல்வி வகுப்புகளுக்கான சேர்க்கைகளை முதலில் துவங்கிவிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டால், தற்போது தேவையில்லாமல் 'தொழிற் கல்வி' இடம் கிடைக்குமோ இல்லையோ எதற்கும் கலைக்கல்லூரியிலும் ஓர்இடம் பிடித்துவைப்போம்' எனும் வீண் செலவும் தவிர்க்கப்படும். கலைக் கல்லூரிகளில் அனாவசியமாக நடந்துவரும் மாணவர் 'பாட மாறுதல்-இடமாறுதல் பிரச்சினை' சீராகும்.மாணவர்க்குக் காலமும், பெற்றோர்க்குக் காசும் மிஞ்சும்!
ஆரம்ப வகுப்புகளிலிருந்தே சுமாராக எழுதத்துவங்கும் மாணவர் சுவடிகளில், அவ்வப்போது 'நன்று', Good! என்று, எழுதுவதும், குறிப்பாக அவர்கள் எழுதும்போது அருகில்செசூழ், மற்ற மாணவர்கள் நடுவில் வைத்துப் பாராட்டுவதும் நல்ல பலனைத் தரும். குறிப்பாகச் சிறுவர்களைத் தொட்டு ஆதரவாகப்பேசினால், தவறு செய்த மாணவர் நெகிழ்ந்துவிடுவது உறுதி. 'கடிதோச்சி மெல்லஎறிக' என்பதே சிறந்தவழி என்பதை ஆசிரியர்களும் புரிந்துகொள்ள வேண்டும்!
கல்வி புகட்டப்படுவதல்ல! பூக்கவைப்பது! 'கல்வி' எனும் சொல்லே, 'உள்ளிருக்கும் திறனை வெளியே கொண்டுவருவதுஎனும் ஆழ்ந்த இனிய பொருளைக் கொண்டதுதானே? மாட்டுக்கு மருந்து புகட்டுவதும், மாணவர்க்குக் கல்வி புகட்டுவதும் ஒன்றல்லவே?
              கல்விநிறுவனங்களில் ஒழுக்கத்தையும், கட்டுப்பாடுகளையும் வளர்க்க உண்மையிலேயே நினைத்தால், பள்ளி-கல்லூரிகளில் நடப்பதாகக் காட்டும் ஆபாசக் கூத்துகளை சின்ன-பெரிய திரைகளில் மட்டும் அனுமதிப்பது எப்படி?
கல்வி நிறுவனங்களைக் காட்டிலும் வலிமையாக மாணவர்களைப் பாதிக்கவல்ல திரை ஊடகங்களை அரசுகளே கட்டுப்படுத்த முடியாதபோது, கல்வி நிறுவங்கள் மட்டும் என்ன அந்தரத்தில் நின்று மந்திரம்போட்டா மாணவர்களைக் கட்டுப்படுத்த முடியும்?
பாட நோட்டுகளில் கூட திரைப்பட நடிகர்-நடிகைகளை அட்டையில் போட்டுப் பிஞ்சுகளை நஞ்சாக்கியும் காசுபண்ணும் நிறுவனங்களை அரசாங்கமல்லவா தடைசெய்ய வேண்டும்?
பகலில் பெரும்பாலான நேரம் பள்ளியில்தான் மாணவர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான் என்றாலும், வீட்டு-நாட்டுச்சூழலின் பாதிப்பை முற்றிலுமாக மாற்றிவிடும் நிலைமையிலா நமது பள்ளிகளும் கல்லூரிகளும் இருக்கின்றன?
வாழ்க்கையைக் கொடுக்கும் பாடங்களை மருந்துபோலத் தருகிறோம்! கல்வி சுமையாகிறது! வாழ்க்கையைக் கெடுக்கும் படங்களை விருந்துபோலத் தருகிறோம்! வாழ்க்கையே சுமையாகிறது!
                திரைப்படங்களை மட்டுமல்ல, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களைக் கூட மாணவர்களும் பெற்றோரும் பார்க்கப் பயிற்சி தேவை. அதோடு, பத்திரிகை இதழ்களில் வரக்கூடிய அறிவு சார்ந்த செய்திகளையும் பாடத்திட்டத்தில் சேர்த்துப் பயில்வது தொடர்பாகவும் யோசிக்கவேண்டும்.
அறிவியல் கண்டுபிடிப்பின் உச்சமாக உள்ள கணினியை இன்றைய மாணவர்கள் சரியாகப் பயன்படுத்த வழிகாட்டுவது மிகவும் அவசியம். கணினி வலைதளங்களில் ஏராளமான அறிவுத் தகவல்கள் கொட்டிக்கிடந்தாலும், இளமைக்கே உரிய பலவீனத்தைப் பயன்படுத்தி, ஆபாசங்களையே காட்டிக் காசுபறிக்கும் கணினிமையங்களைக் கட்டுப்படுத்த சட்டமேதும் இல்லை! சரி, புதிய சட்டங்களை உருவாக்குவதுபற்றியோ, தடைசெய்யப்பட்ட வலைதளங்கள் ('A' Websites) மீண்டும் 'தமிழ்' பெயருடனே வருவதைத் தடுக்கவோ எந்த நடவடிக்கையும் எடுத்திருப்பதாகத் தெரியவில்லையே?
மாணவப் பருவத்துக்கே உரிய புதியன காணும்ஆர்வத்தைப் புரிந்து, கல்வி உண்மையிலேயே புதுமையானதாக இருந்து, கற்றல் அனுபவமும் இனிமையானதாக இருந்தால், எந்த மாணவரும் நன்கு கற்றுக்கொள்ள முடியும். வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்த மொழிப்பாடங்கள் உதவுகின்றன, வாழ்க்கைச் சிக்கல்களைப் புரிந்துகொள்ளும் வாழ்வியல் அறிவைத்தர அறிவியல், கணித, சமூகப் பாடங்கள்உதவுகின்றன. இதை மாணவர் உணருமாறு அந்தந்த வகுப்புப் பாடங்கள் அந்தந்த வயதுக்கேற்ப இருப்பதும், பயிற்றுமுறை இனிமையானதாக இருப்பதும் மிக அவசியம்.
இந்தப் படிப்புத்தான் எனக்கு கவுரவமான வாழ்க்கையைத் தரும்என்று மாணவரை நம்ப வைப்பதும் முக்கியம். இதில்தான் சமூகச்சிக்கல் குறுக்கிடுகிறது. படிப்பு குறைந்தாலும் பணம் இருந்தால் உயர்கல்வி உண்டு எனும் உணர்வில்தான் பணக்கார மாணவர்கள் தாமும் படிக்காமல், படிக்க நினைப்பவரையும் விடாமல் ஜாலியாக இருக்குமிடமாகப் பள்ளியை நினைப்பது, படிக்க நினைக்கும் மாணவரையும் விடாமல் பள்ளிச்சூழல் கெடக் காரணமாகிவிடுகிறது.
கல்வியை, அடுத்த தலைமுறையை உருவாக்கும் கருவியாக நினைக்கும் நல்ல கல்வி நிறுவனமும், உண்மையும் திறமையும் மிகுந்த ஆசிரியர்களின் உழைப்பும் மதிக்கப்பட வேண்டும். நல்லாசிரியர் விருதுகளும், ஆசிரியர்தின விழாக்களும் எந்திர கதியாக இருப்பதைக் கைவிட்டு, உணர்வு பூர்வமாக ஆக்கபூர்வமாக நிகழ அலுவலர்கள் கூடுதல் உணர்வுடன் பணியாற்றுவது நல்லபலனைத்தரும். 

-- நா. முத்து நிலவன்-2003

பாழைய கல்வி முறை பழையபடி வேண்டாங்க - (முதல்வர் அம்மாவுக்கு ஒரு கவிதைக் கடிதம்)

பள்ளிக்கூடம் திறக்கிறத தள்ளிப்போட வேணாங்க - (முதல்வர் அம்மாவுக்கு ஒரு கவிதைக் கடிதம்) எனும் தலைப்பில் முதலில் எழுதப்பட்ட இந்தக் கவிதையைச் சில தினசரி இதழ்களுக்கு அனுப்பி வைத்தேன். வெளியிட  வில்லை. பள்ளிக்கூடங்கள் ஜூன் 15-ஆம்தேதி திறப்பதும் உறுதியாகிவிட்டது... அதற்காக நாம் சும்மா இருக்க முடியுமா? பாடலின் உள்ளேயிருந்து வேறு இரண்டு வரிகளை எடுத்துத் தலைப்பாகப் போட்டு (பாழைய கல்வி முறை பழையபடி வேண்டாங்க) ஜனசக்தி நாளிதழுக்கு அனுப்பினேன். அவர்கள் இரண்டே நாளில் -ஜூன் 5 ஆம் தேதி அழகான வடிவமைப்புடன் வெளியிட்டுவிட்டார்கள்... அந்த அளவில் சமச்சீர்க்கல்விக்கான எனது பங்களிப்பும் தொடர்கிறது...
 - நன்றி : 'ஜன சக்தி' நாளிதழ் ஜூன் 5-2011. 

மூணாம் முறையாக
முடிசூடி வந்திருக்கும்
அம்மா முதல்வருக்கு
அன்பான வணக்கமுங்க.

அரசியலில் நேர்எதிராய்
அணிமாற்றம் சகஜமுங்க
பதவியில் இருப்பவர்க்கும்
பணிமாற்றம் சகஜமுங்க

எல்லாமே மாறிவரும்
என்பதுதான் நிஜமுங்க
நல்லதைத் தொடருங்க
அல்லதை விட்டுருங்க

கல்வி ஒண்ணுதான்
கடைத்தேறும் வழியின்னு
உலகமே உணர்ந்திருக்கு
நான்சொல்ல வேணாங்க

வேறெங்கும் இல்லாத
விசித்திரமாய்த் தமிழ்நாட்டில்
ஐந்துவகைக் கல்விமுறை
அநியாயம் நடந்துச்சுங்க

‘சமச்சீர்க் கல்விமுறை
சரியான முறை’யின்னு
மக்களில் பெரும்பாலோர்
மனசார நம்புறோம்’ங்க

கல்வி முதலாளிங்க
கொள்ளை அடிச்சதெல்லாம்
குடிமுழுகிப் போச்சுன்னு
குமுறித் தீத்தாங்க

சமச்சீர்க் கல்விமுறை
சமுதாய மாற்றுமுறை
தெரிஞ்சோ தெரியாமலோ
திட்டமிட்டுத் தந்தாங்க!

பலகோடிப் புத்தகங்கள்
பள்ளிக்கூடம் வந்தாச்சுங்க
வேண்டாத பக்கங்கள
விட்டுவிடச் சொல்லிடுங்க

நினைச்சத நினைச்சபடி 
துணிச்சலாய்ச் செய்வீங்க 
பழைய கல்விமுறை
பழையபடி வேணாம்’ங்க!

களைகளைக் களைஞ்சிடுங்க
செடிகளைக் காத்திடுங்க!
பத்தாம்’ப்பு வாத்தியாரின்
பணிவான வேண்டுகோள்’ங்க!
--22-05-2011





எனது 'புதிய மரபுகள்' கவிதைத் தொகுப்பிலிருந்து...

'ஐஸ்!'

சொறிந்துவிடு! 
சொறிந்துவிடு!

உன் நகங்களில் 
அழுக்குச் சேர 
அவன் முதுகு ரணமாக -
சுகமாக சொறிந்துவிடு!

சொல்லித் தெரிவதில்லை 
சொறிதல்!
மன்மதக் கலையை விடவும் 
ரகசியமானது!
மதுவை விடவும் 
போதையானது!

விரகதாபத்தை விடவும்,
இந்த விரல்களின் தாபம் 
வேகமானது!

நீ கொடுக்கும் 
சுக வெறியில் 
வருகிறவனின்
முகத்தை விடவும்
நகத்தையே எதிர்பார்த்து 
அதோ.. அவன் 
நரங்கிப்போய்விட்டான் பார்!

உனது 
தடவலுக்காய்த் 
தாக வெறி கொண்டு   
மனசெல்லாம் சொறிபிடித்து
சாபம் வேண்டி 
தவமிருக்கிறான் பார்!

இதில் 
பாவம் எது?
பாவி யார்?
அதைப்பற்றி 
நமக்கென்ன? 
சொறிந்துவிடு !
சொறிந்துவிடு!!

என்னைக் கவர்ந்த வலைப்பூக்கள்:- – 3


மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளரும் நல்ல கவிஞருமான மும்பையைச் சேர்ந்த புதிய மாதவி... 

 

தனது பிரச்சினைகளையே சரியாகப் புரிந்துகொள்ளக்கூடிய பெண்கள் 
மிகவும் குறைவு!
அதிலும், சமூகத்தின் பிரச்சினைகளைச் சரியாகப்புரிந்துகொள்ளக்கூடிய பெண்கள் மிகமிகவும் குறைவு!
சமூகத்தின் பிரச்சினைகளை அரசியலாகப் புரிந்துகொள்ளக்  கூடியபெண்கள் மிக மிகமிகவும்குறைவு!
அதையும் கலைஇலக்கியத்தில் சரியாகக் கொண்டுதரக்கூடிய  பெண்கள் மிகமிக மிகமிகவும் குறைவு!
 
கவிஞர் புதிய மாதவி அந்த மிகமிக மிகமிகவும் குறைவான பகுதியின் -மிகவும் அரிதான-ஒரு தோழி.
 
சுமார் ஓராண்டுக்கு முன்பு, இவரது முதல் கவிதைத் தொகுப்பான"சூரியப் பயணம்"பார்த்து,முதன் முறையாக ஒரு பெண்கவிஞரின் அரசியல்-சமூகக் கவிதைகளைப் பார்த்து, அசந்துபோனேன். அவர்களின் வலைப்பூவை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நான் பெருமைப் படுகிறேன்.. அவசியம் தொடர்ந்து படிக்க வேண்டிய அவரது வலைப்பக்கம்: 

 

எனக்குப் பிடித்த வலைப்பூ படைப்புகள்… 3


அன்புள்ள மாணவிக்கு ..

நன்றி: பூவரசி.காம் 

அன்புள்ள ஹெலன்,

நலமே. நலமாகவே இருப்பாய் என நம்புகிறேன். அதிசயமாக நம் ஆசிரியர் நமக்குக் கடிதம் எழுதுகிறாரே என்று உனக்கு ஆச்சரியமாக இருக்கலாம். பலநாள் ஆதங்கமே இன்று கடித வடிகால் தேடிக் கொள்கிறது என்பதுதான் உண்மை. வேறு யாரிடமோ சென்று புலம்புவதை விடவும் என் மாணவர்களிடமே நான் என் வருத்தங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

நீ உன்னுடைய மேல்நிலைத் தேர்வுகளை முடித்து விட்ட களைப்பில் அயர்ந்திருப்பாய். கடைசித் தேர்வினை எழுதி முடிக்கையில் உன் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது மகளே. நான் தேர்வுப்பணியில் இருக்கையில் தேர்வெழுதிக் கொண்டிருந்த மாணவிகள் கடைசி நேரத்தில் எழுந்து ஓடும் யத்தனிப்பிலேயே இருந்தார்கள். தேர்வின் இறுதி மணி அடிக்கப்பட்ட உடன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பெனத் தம் இருக்கையிலிருந்து எழுந்து ஓடிய பெண்கள், சற்று நேரத்துக்கும் பின் தங்கள் சக தோழிகளைப் பார்த்த பிறகுதான் வேகம் மட்டுப்பட்டு நின்றனர். ஒரு சிலர் பேனாவில் மிச்சமிருக்கும் நீல மையினை மற்றவர்கள் மீது தெளித்துத் தங்கள் விடுமுறை தொடங்கிய ஆனந்தத்தை வெளிப்படுத்தினர். ஓ... வென்ற காதைப் பிளக்கும் ஆரவாரம் எனக்குள்ளும் மகிழ்ச்சியின் சாறைக் கொஞ்சம் ஊற்றியது பெண்ணே.

உனக்கு ஞாபகம் இருக்கிறதா ஹெலன்? பதினொன்றாம் வகுப்பின் முதல் நாளில் நம் வகுப்பில் ஆசிரியராய் நானும் மாணவர்களாகிய நீங்களும் கலந்து பேசிய அந்தத் தருணம்? நான் எப்போதும் என்னை ஆசிரியராக மட்டும் உணர்ந்ததில்லை மா. உங்கள் எல்லோருக்கும் நல்ல தோழியாகவும் இருக்க விரும்புவேன். அப்படி இருப்பதால் தானே என்னிடம் உங்கள் துயரங்களை, மகிழ்ச்சிகளை, வாழ்வைப் பகிர்ந்து கொள்கிறீர்கள். உங்களிடமிருந்து நான் ஒவ்வொரு நாளும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதால் நீங்கள் எனக்கு குருவாகவும் ஆகிறீர்கள். 

ஒவ்வொரு நாளும் பாடம் பற்றிப் பேசியதோடு அன்றாட நிகழ்வுகளையும் பாடத்தோடு தொடர்புடைய பிற செய்திகளையும் நாம் கலந்து பேசியிருக்கிறோம் தானே. இது மொழி ஆசிரியருக்கே கிடைக்கக் கூடிய பெரும் பேறன்றோ! எத்தனை கதைகள்? எத்தனை நகைச்சுவை? நீங்கள் கவிதை என்று கொண்டு வரும் உங்கள் கிறுக்கல்கள்? ஆனால் போட்டி என்று வந்தால் தலை தெறிக்க ஓடுவீர்களே.. அப்போது பார்க்க வேண்டும் உங்கள் ஓட்டத்தை. சிரிப்பாணிதான். சரி, இப்படிக் கலந்து பேசும்போதெல்லாம் கொண்டாட்டம்தான் உங்களுக்கு. ஆனால் உங்களில் எவரையேனும் எழுப்பிப் படிக்கச் சொன்னால், கேள்வி கேட்டால் திரு திருவென்று விழிப்பீர்களே பார்க்கணும். அதிலும் படிக்கச் சொன்னால் வேண்டாம் மிஸ். கேர்ள்ஸ் இருக்காங்க என்று மாணவர்கள் வழிவதைப் பார்க்கணுமே.

உன் அப்பா அடிப்பதை, திட்டுவதை நீ தயங்கிக் கொண்டே ஒரு நாள் சொன்னாயே, நினைவிருக்கிறதாடா? அருணாவின் தந்தை இறந்து போனவுடன் எனக்குத் தொலைபேசி அழுதாயே. ரசாக்கும் வெற்றிவேலும் அடிக்கடி சண்டையிடுவதைக் கவலையுடன் என்னிடம் முறையிட்டாயே. உன்னைத் தொடர்ந்து உன் தோழமைகளும் என்னுடன் தங்கள் கவலைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அவற்றில் ஒரு சிலவற்றிற்கேனும் என்னால் சில தீர்வுகளை, ஆறுதல்களை அளிக்க முடிந்ததே அம்மா. ஒரு ஆசிரியராய் நான் பெருமை கொள்ளும் தருணங்கள் அவைதான்.

என்னைப் பொறுத்த வரையில் நன்றாகப் படிக்கக் கூடிய மாணவரை மேலும் படிக்கச் செய்வது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரமில்லை. படிப்பில் சிக்கல் இருக்கக் கூடிய மாணவர்களைப் படிக்கத் தூண்டுவது, அதன் உளவியல் காரணங்களைச் சந்திப்பது இவையே என் முன்னால் இருக்கக் கூடிய சவால்கள். அப்படித் தேடியபோது தானே நன்றாகப் படித்தும் சட்டெனப் பரபரப்பாகி, படித்ததையெல்லாம் மறந்து விடக் கூடிய, எந்நேரமும் பதட்டமான கிரிதரனைக் கண்டேன். அதைப் பற்றிக் கேட்டபோது சிறுபிள்ளை போல் அவன் அழுதது இன்னும் என் கண் முன்னால் நிற்கிறது. பதறிப்போன என்னிடம் வீட்டு சூழலைச் சொல்லியபோது அதைக் கடக்கச் சில உத்திகளையாவது என்னால் கற்பிக்க முடிந்ததில் மகிழ்ச்சிதான்.

என் மாணவர்களைப் பற்றிப் பேசத்தொடங்கினால் எவ்வளவு நாட்களானாலும் தீராது. தேர்வுகளை நீ நல்ல முறையில் எழுதியிருப்பாய் என்பதில் எனக்கு ஐயம் எதுவுமில்லை. நீ எது குறித்தும் பதட்டமடையும் பெண்ணல்ல. உன் சிரித்த முகமும், டீச்சர் என்னும் உன் அழைப்பும் இன்னும் என் காதில் ஒலித்தபடி. சில சமயங்களில் எம் எதிர்பார்ப்புகளை உங்கள் மீது திணித்தபோதும் எங்கள் மீதுள்ள் அன்பின் காரணமாகப் பொறுத்துக் கொண்டிருக்கிறீர்கள். எல்லாம் உங்கள் நன்மைக்குத்தானே செய்கிறோம் என்ற முழக்கத்துடனே எங்கள் குற்ற உணர்வை ஒவ்வொரு வருடமும் கடந்து செல்கிறோம்.

இலக்கணப் பாடத்தை நான் ரசித்து, ருசித்துக் கற்பிக்க, மதிய உணவின் முட்டத்தில் நீங்கள் கண்கள் கிறங்க அரை மயக்கத்தில் இருக்க, கோபமும் சிரிப்புமாக வரும் எனக்கு. என் செய்வேன் பராபரமே! உங்கள் குழந்தைத்தனம் கொடுக்கும் மகிழ்ச்சியைப் போலவே உங்கள் வேகம் எனக்குச் சில சமயம் பயத்தைக் கொடுக்கும் மகளே. உடற்கவர்ச்சியில் காதலுறுவது, படிப்பை இழப்பது, வீட்டின் வசவுகளில் சட்டென்று அதிர்ச்சிகரமாக முடிவெடுப்பது என எத்தனை சம்பவங்கள்?

இங்கு தேர்வெழுதும் மாணவர்கள் கூட, வினாத்தாள் மிகச் சுலபமாகவே இருந்தும் சரியாக எழுதாமல் அடுத்தவர் விடைத்தாட்களைப் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். வருத்தமாக இருந்தது. வருடம் முழுதும் உயிரைக் கொடுத்துக் கற்பித்தும் கூட இன்றைய மாணவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்ற கேள்வி உள்ளுக்குள் என்னைக் குத்திக் கிளறியது. ஹெலன், மாணவர்களை மட்டும் குற்றம் சாட்டுகிறேனென்று நினைக்காதே. எங்கள் பக்கத்திலும் தவறுகள் இருக்கின்றன என்றாலும் இன்று பொதுவாகவே பார்த்தால், ஊடகங்களின் தாக்கத்தால் மாணவர் கல்வியின்பால் கவனம் செலுத்துவது குறைந்தது போலவே எனக்குத் தோன்றுகிறது. சமூகம், அரசு, கல்வி நிறுவனங்கள் என எல்லோருக்கும் இதில் பங்குண்டு என்பதை உணர்ந்தே இருக்கிறேன். ஒரு பக்கம் மாணவர்கள் மதிப்பெண்ணைத் துரத்திக் கொண்டு இயந்திரங்களைப் போல ஓடுவதைப் பரிதாபத்துடன் பார்ப்பது போலவே, படிப்பை அலட்சியத்துடன் அணுகும் மக்களையும் கவனிக்கிறேன். 

அறிவுரைகள் கசக்கும் பருவமிது. நாவைத் திறந்தால் பொய் தாராளமாகப் புழங்கும். சில நேரம் எங்களுக்காகக் கேட்டுக் கொள்வதே உங்கள் மனதில் ஏதோ ரசவாதம் செய்து உள்நுழைந்து வேலையும் செய்யத் தொடங்கும். போனாப் போகுதுன்னு உங்களுக்காகப் படிக்கிறேன் டீச்சர் என்று சொன்ன தியாகராஜனை, அவன் சொன்ன தோரணையை அவ்வப்போது நினைத்துச் சிரித்துக் கொள்வேன். அக்கறை, முயற்சி இதெல்லாம் குறைந்துகொண்டு வருகிறதோ எனத் தோன்றும். தேவையற்று உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கிறீர்களோ என்ற பயம் வரும். அதிகம் யோசித்தால் எனக்குத் தான் வயதாகிக் கொண்டிருக்கிறதென்றும் நினைத்துக் கொள்வேன்.

என்ன செய்வேன் மா? தம்பி நான் ஏது செய்வேனடா என்று பாரதி கையறு நிலையில் புலம்பியதைப் போலவே எங்களில் பலரும் உங்களை நினைத்துப் புலம்புகின்றனர். உங்கள் மன நிலையில், சூழலில் நின்று பார்க்கையில் உங்களில் பலரை நினைத்தாலும் பரிதாபமாகத் தான் இருக்கிறது. என் செய்ய.

சரிம்மா. இன்றைய சூழலில் ஆண், பெண் இருவருக்குமே கல்வி அவசியம்தான். இவையெல்லாம் நாம் வகுப்பில் பேசியவைதான். கோபிதான் டீச்சர் நீங்க எப்பவுமே கேர்ள்ஸுக்குத் தான் சப்போர்ட் பண்றீங்க ன்னு சண்டைக்கு வருவான் இல்லையா? அதனால், மேலே உயர்கல்வி வாய்ப்பு பற்றி யோசித்து வைத்துக் கொள். உன் வகுப்புப் பெண்களிடமும் அது பற்றிப் பேசு. தெளிவாக முடிவெடுங்கள். அதில் உங்களுக்கு என்ன சந்தேகமென்றாலும் எப்போதும் நான் காத்திருக்கிறேன். எனக்குத் தொலைபேசுங்கள். நன்றாகப் படியுங்கள்.
என்றும் உங்கள் நலம் நாடும்

உங்கள் ஆசிரியை.

http://tparameshwari.blogspot.com/2011/04/blog-post.html

‘மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்’–காப்புப் பருவம் :

பாடல் எண்: 2 தொல்காப்பியர்

முன்னைப் பிறந்த மொழிபலவுள்
மூத்துச் சிறந்த மொழித்தமிழை,
முதிரா மொழியார் முனையுமுன்னே
முனைந்து காத்த காப்பியனே!
அன்னைத் தமிழின் அணையாக
அயல்எம் மொழிக்கும் அமையாத
அகமாய்ப் புறமாய்ப் பொருள்பிரிவை
அமைத்த புலமை தேர்பெரும!
பின்னைப் புலவர் பெறத்தமிழை
பேரார் எண்ணூற் றைந்திரட்டும்
பிழைதீர் நூற்பா, இயல்மூன்றில்
பிழிந்து தந்த பெரும்புலவ!
உன்னை அழைத்தேன், உனதுமொழி
உயர்வைக் காக்க உதவென்றே!
ஒருசேய் வடிவாம் மறைமலையை
உணர்ந்து காக்க உழைநின்றே!
----------------------------------------------------------------------

‘மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்’ – காப்புப் பருவம் :
பாடல் எண்: 3 திருவள்ளுவர்

அளந்த சொல்லில் அளவின்றி
அரிய பொருளை அழுத்தி,உல(கு)
அனைத்தும் ஏற்க வாழ்வியலை
ஐந்நால் நூற்றாண் டதன்முன்னே
கிளந்த உண்மைக் கிளர்குறளை
‘கிளருந் தோறும் அறியாமை
கிளம்பும் வண்ணம்’ கிட்டித்து,
கீழோர் செயலால் மேலோரின்
தளர்ந்த மனக்குத் தாங்கியென
‘தமிழ்’என் சொல்லே தாராமல்,
தனித்தே இன்றும் நின்றோனே!
தமிழால் உலகை வென்றோனே!
வளர்ந்த தமிழை வழக்கொழியா
வண்ணம் காக்கக் காப்பாயே!
வள்ளுவ னே!உன் மறைமலையாம்
வடிவார் சேயைக் காப்பாயே!

எனது ‘புதிய மரபுகள்’ கவிதைத் தொகுப்பில் இருந்து…


                  விழி! எழு!! தாயே!!!

இமயத் தலைமுடி நரைத்தஎன் தாயே!
எத்தனை புகழ்வளர்த் தாயே! – உன்
குமரிக் கால்களில் கொஞ்சும் அலைகளில்
நெஞ்சினைக் கொள்ளைகொண் டாயே!- மன
அமைதியும் அழகும் எங்கு தொலைத்தனை?
           அய்யகோ இன்றைய நிலவரம்! -மனச்
சுமையினை எங்குபோய்ச் சொல்லுவேன் அடடா!
சூழ்ந்ததே இனமதக் கலவரம்?

புத்தரும் சித்தரும் போலப் பெரும்புகழ்ப்
புத்திரர் உனக்கென்ன குறையா? - இனி
இத்தனைப் பெருமைகள் இருந்தும்உன் பிள்ளைகள்
இன்றிங்கு நலிவது முறையா? – மத
யுத்தமும் சாதியால் ரத்தக் களரியால்
உயிர்ப்பலி யாவதும் சரியா? - இவை
அத்தனைக் குள்ளும்ஓர் சுயநலப் பேய்பிடித்(து)
ஆடுதல் இனியும் காண்கிலையா?

ஜீவ நதியெனும் ரத்தநாளங்களால்
செழும்பயிர்க் கூச்செரிந் தாயே! – தளிர்
பூவும் பிஞ்சுமாய்க் கனியும் கிழங்குமாய்ப்
பொன்னுடல் புல்லரித் தாயே! – வளம்
மேவும் அழகெலாம் தீயவாய் தின்றதோ?
மேனியும் புண்மலிந் தாயே! - இவை
யாவும் சுயநல அரசியல் திருவிளை
யாடல் இதை மறந்தாயோ?