பாழைய கல்வி முறை பழையபடி வேண்டாங்க - (முதல்வர் அம்மாவுக்கு ஒரு கவிதைக் கடிதம்)

பள்ளிக்கூடம் திறக்கிறத தள்ளிப்போட வேணாங்க - (முதல்வர் அம்மாவுக்கு ஒரு கவிதைக் கடிதம்) எனும் தலைப்பில் முதலில் எழுதப்பட்ட இந்தக் கவிதையைச் சில தினசரி இதழ்களுக்கு அனுப்பி வைத்தேன். வெளியிட  வில்லை. பள்ளிக்கூடங்கள் ஜூன் 15-ஆம்தேதி திறப்பதும் உறுதியாகிவிட்டது... அதற்காக நாம் சும்மா இருக்க முடியுமா? பாடலின் உள்ளேயிருந்து வேறு இரண்டு வரிகளை எடுத்துத் தலைப்பாகப் போட்டு (பாழைய கல்வி முறை பழையபடி வேண்டாங்க) ஜனசக்தி நாளிதழுக்கு அனுப்பினேன். அவர்கள் இரண்டே நாளில் -ஜூன் 5 ஆம் தேதி அழகான வடிவமைப்புடன் வெளியிட்டுவிட்டார்கள்... அந்த அளவில் சமச்சீர்க்கல்விக்கான எனது பங்களிப்பும் தொடர்கிறது...
 - நன்றி : 'ஜன சக்தி' நாளிதழ் ஜூன் 5-2011. 

மூணாம் முறையாக
முடிசூடி வந்திருக்கும்
அம்மா முதல்வருக்கு
அன்பான வணக்கமுங்க.

அரசியலில் நேர்எதிராய்
அணிமாற்றம் சகஜமுங்க
பதவியில் இருப்பவர்க்கும்
பணிமாற்றம் சகஜமுங்க

எல்லாமே மாறிவரும்
என்பதுதான் நிஜமுங்க
நல்லதைத் தொடருங்க
அல்லதை விட்டுருங்க

கல்வி ஒண்ணுதான்
கடைத்தேறும் வழியின்னு
உலகமே உணர்ந்திருக்கு
நான்சொல்ல வேணாங்க

வேறெங்கும் இல்லாத
விசித்திரமாய்த் தமிழ்நாட்டில்
ஐந்துவகைக் கல்விமுறை
அநியாயம் நடந்துச்சுங்க

‘சமச்சீர்க் கல்விமுறை
சரியான முறை’யின்னு
மக்களில் பெரும்பாலோர்
மனசார நம்புறோம்’ங்க

கல்வி முதலாளிங்க
கொள்ளை அடிச்சதெல்லாம்
குடிமுழுகிப் போச்சுன்னு
குமுறித் தீத்தாங்க

சமச்சீர்க் கல்விமுறை
சமுதாய மாற்றுமுறை
தெரிஞ்சோ தெரியாமலோ
திட்டமிட்டுத் தந்தாங்க!

பலகோடிப் புத்தகங்கள்
பள்ளிக்கூடம் வந்தாச்சுங்க
வேண்டாத பக்கங்கள
விட்டுவிடச் சொல்லிடுங்க

நினைச்சத நினைச்சபடி 
துணிச்சலாய்ச் செய்வீங்க 
பழைய கல்விமுறை
பழையபடி வேணாம்’ங்க!

களைகளைக் களைஞ்சிடுங்க
செடிகளைக் காத்திடுங்க!
பத்தாம்’ப்பு வாத்தியாரின்
பணிவான வேண்டுகோள்’ங்க!
--22-05-2011





6 கருத்துகள்:

  1. சமச்சீர் கல்விமுறை
    சமநீதிக் கேற்றமுறை
    சாமான்ய மக்களெல்லாம்
    சல்லிசாகக் கற்கும்முறை

    பெரும்பான்மை ஏழைப்பிள்ளை
    பெறும்பயனைச் சிதைக்கவேண்டாம்
    அரும்புவிட்ட பூஞ்செடிக்கு
    அடியில்வெந்நீர் ஊற்றவேண்டாம்.

    பாடநூலில் மறுபடியும்
    பழையபஞ் சாங்கம்வேண்டாம்
    பள்ளிக்கூடம் தொறக்கிறதை
    பதினைஞ்சுநாள் தள்ளவேண்டாம்.

    பக்குவமா வேண்டுகோளைப்
    பதிவுசாத்தான் சொல்லிட்டீக
    பலிக்குமாநம் பாச்சான்னு
    பாக்கத்தானே காத்திருக்கோம்
    --பாவலர் பொன்.க

    பதிலளிநீக்கு
  2. சமச்சீர் கல்விமுறை
    சமநீதிக் கேற்றமுறை
    சாமான்ய மக்களெல்லாம்
    சல்லிசாகக் கற்கும்முறை

    பெரும்பான்மை ஏழைப்பிள்ளை
    பெறும்பயனைச் சிதைக்கவேண்டாம்
    அரும்புவிட்ட பூஞ்செடிக்கு
    அடியில்வெந்நீர் ஊற்றவேண்டாம்.

    பாடநூலில் மறுபடியும்
    பழையபஞ் சாங்கம்வேண்டாம்
    பள்ளிக்கூடம் தொறக்கிறதை
    பதினைஞ்சுநாள் தள்ளவேண்டாம்.

    பக்குவமா வேண்டுகோளைப்
    பதிவுசாத்தான் சொல்லிட்டீக
    பலிக்குமாநம் பாச்சான்னு
    பாக்கத்தானே காத்திருக்கோம்
    --பாவலர் பொன்.க

    பதிலளிநீக்கு
  3. Its true and government should really reconsider this. Education should be beyond politics

    பதிலளிநீக்கு
  4. பக்குவமா வேண்டுகோளைப்
    பதிவுசாத்தான் சொல்லிட்டீக
    பலிக்குமாநம் பாச்சான்னு
    பாக்கத்தானே காத்திருக்கோம்
    --பாவலர் பொன்.க

    பாவலர் அய்யாவே
    பணிவான வணக்கமுங்க
    பாக்கக் காத்திருந்தா
    பழம்தானாக் கனிவதில்ல

    நடப்பது நடக்கட்டும்’னு
    நாமிருக்க முடியாதுங்க
    சொல்றத சொல்லுவம்’ங்க
    சொல்லலன்னா படியாதுங்க

    பதிலளிநீக்கு
  5. சமச்சீர் கல்வியை கருணாநிதி ஆரம்பித்தார் என்பதற்காக தடைசெய்கிறார்களா? அல்லது கல்வியை மேலும் கடைச்சரக்காக மாற்றும் முயற்சியின் தீவிரமா?

    பதிலளிநீக்கு
  6. அன்பினிய நண்பரே,
    ரெண்டுகல்லில்கூட ஒரு மாங்காய் நமக்கு விழாது.
    சிலருக்கு ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் விழும்.
    கூடுதலாக சில பிஞ்சுகளும் விழுந்து தொலையுமே அதுதான் நம் கவலை

    பதிலளிநீக்கு