தசையும் சதையும்
தமிழில் ‘தசை’ எனும் சொல்லைப் புறநானூறு (மான்தசை-177) முதலான இலக்கியங்களும்,
அகரமுதலி(Dictionary)களும் சொல்கின்றன. பாரதியார், புகழ்பெற்ற “நல்லதோர் வீணை” பாடலில்
“தசையினைத் தீ சுடினும்” என்கிறார். இந்தத்
‘தசை’ இப்போது, ‘சதை’ என்றே முன்-பின்னாகப் புழங்குகிறது. எழுத்தாளர் பலரும் பேச்சு
வழக்கில் உள்ள இச்சொல்லையே பயன் படுத்துகின்றனர். “சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில்
வேகுதே“ – கவிஞர் இன்குலாப். ‘ரத்தமும் சதையுமா’ வழக்கில் உள்ள இந்த மாற்றத்தை இலக்கணமும்
ஏற்றுக் கொள்கிறது!
அலரி, கதுவாலி தெரியுமா?
இல்வாய்--வாயில்–வாசல்,
கால்வாய்–வாய்க்கால், புறநகர்-நகர்ப்புறம், முன்றில்-இல்முன், அலரி-அரளி, கொப்புளம்-பொக்குளம்,
கதுவாலி-கவுதாரி(கௌதாரி), தானைமுன்-முன்றானை (முந்தானை!), புறக்கடை-கடைப்புறம் - இப்போது
‘புழக்கடை’ என்றே புழங்குகிறது!
இவ்வாறு,
சொல்-பொருள் மாறாத வகையில், எழுத்துகள் மட்டும் இடம் மாறுவதை, ‘இலக்கணப் போலி’ என ஏற்கிறார்
நன்னூலார்(267)
இதற்காக,
பொருள் பொருந்தாத வகையில், சொற்களைப் பயன்படுத்தக் கூடாது. புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவர்
‘பகலிரவு பாராமல்’ என்று எழுதியிருப்பதைப் பற்றி, திருச்சி எழுத்தாளர் நவஜீவன் வருந்தினார். பகல்தான் உழைப்பிற்கு உரியது, இரவிலும்
ஓய்வில்லாமல் உழைப்பதை, ‘இராப்பகல் பாராமல்’ என, இரவை முன்னிறுத்தும் தொடரை அன்றி,
‘பகலிரவு’ எனும் சொல் எப்படி உணர்த்தும்? திருத்தம்
கோரும் நண்பரின் வருத்தம் சரியானது தானே?
கலைஞ்சர்,
கலைஞர்?
கும்பகோண மக்களின் ‘நுப்பது’ போல, கோவை
நண்பர் ஒருவர், கலைஞரைக் ‘கலைஞ்சர்’ என்றும், வேறுசிலர் இளைஞரை ‘இளைநர்’ என்றும் சொல்வதைக்
கேட்டிருக்கிறேன். இது தமிழில் உள்ள இன எழுத்து – ஆங்கில உச்சரிப்பு - மயக்கத்தின்
ஒரு வகை என்றே தோன்றுகிறது. இச்சொற்களை ஆங்கிலத்தில்
‘kalaignar’ என்றும் ‘Elaignar’ என்றும் எழுதுவதன்
ஒலி மயக்கமே அன்றி, பிழையான- உச்சரிப்புகள்
இவை!
ஊடகம்
தவிர, மக்கள் புழங்கும் சொற்களின் உச்சரிப்புக் குழப்பம் பற்றி விரிவாக எழுத வேண்டியுள்ளது.
சில சொற்களைப் பார்ப்போம்.
வடமொழிச் சொல்முன் ஒற்று
மிகாது!
‘பு(Pu)த்தகம்’ என்பதை ‘பு(Bu)த்தகம்’ என்றும், ‘கா(Kaa)லி’
என்பதை கா(Gaa)லி என்றும் –பெரும்பாலும்- உச்சரிப்பது தவறு! பிறசொல் புழங்கும் போதும்
அது தமிழாகி, தமிழ் உச்சரிப்பே பெறும்.
வான்மீகியின்
இராம காதையைத் தமிழில் எழுதிய கம்பர், பாத்திரப் பெயர்களைத் தூய தமிழில் தந்ததைக் கவனிக்க
வேண்டும். கம்ப ராமாயணத்தில் ‘கிரந்த’ எழுத்துக்கு
இடமில்லை! ராம்-இராமன், சீதா-சீதை, லக்ஷ்மண்-இலக்குவன், ராவண்-இராவணன் என, தமிழ்ப்படுத்திய
சிந்தனை, வெறும் சொல் மாற்றம் மட்டுமல்ல பண்பாட்டுக் காப்புரிமை!
முனைவர்
கு.ஞானசம்பந்தன் உலகறிந்த பட்டிமன்ற நடுவர். புலவர் கோ.ஞானச்செல்வன், தமிழ் இலக்கணக்
கடல். “இருவரில் ஒருவர் பெயரில் மட்டும் ‘ச்’ ஒற்று வருவது எப்படி?” ‘ஞானம்’ பொதுவாயினும்,
வந்து சேரும் ‘சம்பந்தன்’ வடமொழி, ஒற்று மிகாது. ‘செல்வன்’ தமிழ்ச் சொல், எனவே ஒற்று மிகும். அவ்வளவுதான்!
---------------------------------------------------------------------------
முக்கியமான
பின்குறிப்பு (1)
இக்கட்டுரையில்
இரண்டு எழுத்துப் பிழைகள் உள்ளன என்பதை அச்சாகி
வந்தபின்தான் கவனித்தேன். என்ன சோகம்! “சொற்களில் பிழையின்றி எழுதும் முயற்சி பற்றிய
கட்டுரையில் எழுத்துப் பிழையா?” என்று இது
வரை ஒரே ஒருவர்தான் கேட்டார்! அவரும் ஒற்றைப் பிழையை மட்டுமே சுட்டியிருந்தார் (அவ்வளவுதான் நம்ம “ரீச்”!)
அந்த
இரண்டு பிழைகளையும் திருத்தம் செய்தே இந்த எனது வலைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளேன்.
அந்தப் பிழைகள் என்னென்ன என்பதை –எனக்கு மட்டும்- தெரிவித்தால் என் சொத்தில் பாதியை
– எழுத்தாளர் சுஜாதா மாதிரி - தரலாம் என்று நினைக்கிறேன்.
முக்கியமில்லாத
பின்குறிப்பு (2)
சுஜாதா,
இப்படி ஏதாவது கேட்டுவிட்டு, மகளைக் கட்டித் தருவேன், சொத்தில் பாதி தருவேன் என்று
சொல்வார். பிறகு அவருக்கு மகளோ, சொத்தோ இல்லை என்பதை வேறோர் இடத்தில் சொல்வார்! நான் இருக்கும் வீடும் காரும் என் இணையர் பெயரில்தான் இருக்கின்றன. என் மகள் இருவருக்கும் ஏற்கெனவே திருமணமாகி விட்டது... எனவே...
பி.கு
(3) அந்த இரண்டு பிழைகளும் ஒரே பத்தியில்தான் இருந்தன!
பி.கு-(4) மிக முக்கியமானது - என்ன இருந்தாலும் 'குற்றம் குற்றமே' என்பதால் இனி இவ்வாறு நிகழாமல் பார்த்துக் கொள்வேன். இந்து தமிழ் நண்பர்கள் மேல் எந்தக் குறையும் இல்லை, நான் எழுதி அனுப்புவதை --என்மேல் வைத்த நம்பிக்கையில்-- அப்படியே வெளியிடுகிறார்கள் என்பதால், இனி இரட்டைக் கவனமாக இருப்பேன் என இந்து-தமிழ் திசை நண்பர்களுக்கு உறுதியளித்திருக்கிறேன். எனது வலை வாசகர்களுக்கும் அதே உறுதியை வழங்கி, நடந்த தவறுக்கு எனது நிபந்தனையற்ற மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன். வணக்கம்.
-------------------------------------------------------------------------------