நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? - இப்படிக்கு தமிழ்!

 வணக்கம்.

நாமக்கல், இராமநாதபுரம் ஆகிய 

இரண்டு புத்தக விழாக்களில்

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

--இப்படிக்கு தமிழ்

எனும் ஒரே தலைப்பில்  பேசினேன். 

28-01-2024 - நாமக்கல் 

https://youtu.be/6n5EWjhPEWQ

நன்றி 

(புத்தக விழாக் குழுவின் 4மணிநேரப் பதிவில்

எனது உரையைப் பிரித்துத் தந்த

முனைவர் மகா.சுந்தர் - தென்றல் தமிழ் வலைக்காட்சி)

அடுத்து 10-02-2024 

இராமநாதபுரம் புத்தக விழா

எனது உரைச் சுட்டி- 

https://www.youtube.com/live/sUACn7xTVL8?si=1__VLawcQeXQeB2r

ஒரே தலைப்பிலான

எனது இரண்டு உரைகளில்

எது உங்களைக் கவர்ந்தது,

எது கவரவில்லை, ஏன் கவரவில்லை

என உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில்

தர வேண்டுகிறேன்.

நாமக்கல் விழா மேடையில் தரப்பட்ட நினைவுப் பரிசு

நன்றி - புத்தகவிழாக் குழு, 2024 நாமக்கல்

எனக்குத் தரப்பட்ட நினைவுப் பரிசு!

----------------------------------

மிகச்சிறந்த ஏற்பாடுகளோடு,

என்னை கவுரவித்த

நாமக்கல் மாவட்ட புத்தகவிழாக்குழுப் பணிகளில்

உண்மையிலேயே ஈடுபாட்டோடு ஈடுபட்ட

மாவட்ட ஆட்சியர் தலைமையிலான

நாமக்கல் மற்றும் முகவை புத்தக விழாக் 

குழுவினர்களுக்கு எனது வணக்கம்


 

 


தமிழ்இனிது-34 நன்றி - இந்துதமிழ் நாளிதழ் -13-02-2024


தசையும் சதையும்

தமிழில் ‘தசை’ எனும் சொல்லைப் புறநானூறு (மான்தசை-177) முதலான இலக்கியங்களும், அகரமுதலி(Dictionary)களும் சொல்கின்றன. பாரதியார், புகழ்பெற்ற “நல்லதோர் வீணை” பாடலில் “தசையினைத் தீ சுடினும்”  என்கிறார். இந்தத் ‘தசை’ இப்போது, ‘சதை’ என்றே முன்-பின்னாகப் புழங்குகிறது. எழுத்தாளர் பலரும் பேச்சு வழக்கில் உள்ள இச்சொல்லையே பயன் படுத்துகின்றனர். “சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுதே“ – கவிஞர் இன்குலாப். ‘ரத்தமும் சதையுமா’ வழக்கில் உள்ள இந்த மாற்றத்தை இலக்கணமும் ஏற்றுக் கொள்கிறது!

அலரி, கதுவாலி தெரியுமா?

இல்வாய்--வாயில்–வாசல், கால்வாய்–வாய்க்கால், புறநகர்-நகர்ப்புறம், முன்றில்-இல்முன், அலரி-அரளி, கொப்புளம்-பொக்குளம், கதுவாலி-கவுதாரி(கௌதாரி), தானைமுன்-முன்றானை (முந்தானை!), புறக்கடை-கடைப்புறம் - இப்போது ‘புழக்கடை’ என்றே புழங்குகிறது! 

இவ்வாறு, சொல்-பொருள் மாறாத வகையில், எழுத்துகள் மட்டும் இடம் மாறுவதை, ‘இலக்கணப் போலி’ என ஏற்கிறார் நன்னூலார்(267)

இதற்காக, பொருள் பொருந்தாத வகையில், சொற்களைப் பயன்படுத்தக் கூடாது. புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவர் ‘பகலிரவு பாராமல்’ என்று எழுதியிருப்பதைப் பற்றி, திருச்சி எழுத்தாளர் நவஜீவன்  வருந்தினார். பகல்தான் உழைப்பிற்கு உரியது, இரவிலும் ஓய்வில்லாமல் உழைப்பதை, ‘இராப்பகல் பாராமல்’ என, இரவை முன்னிறுத்தும் தொடரை அன்றி, ‘பகலிரவு’ எனும் சொல் எப்படி உணர்த்தும்?  திருத்தம் கோரும் நண்பரின் வருத்தம் சரியானது தானே?

கலைஞ்சர், கலைஞர்?

            கும்பகோண மக்களின் ‘நுப்பது’ போல, கோவை நண்பர் ஒருவர், கலைஞரைக் ‘கலைஞ்சர்’ என்றும், வேறுசிலர் இளைஞரை ‘இளைநர்’ என்றும் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இது தமிழில் உள்ள இன எழுத்து – ஆங்கில உச்சரிப்பு - மயக்கத்தின் ஒரு வகை என்றே தோன்றுகிறது.  இச்சொற்களை ஆங்கிலத்தில் ‘kalaignar’ என்றும் ‘Elaignar’ என்றும்  எழுதுவதன்  ஒலி மயக்கமே அன்றி, பிழையான- உச்சரிப்புகள் இவை!  

ஊடகம் தவிர, மக்கள் புழங்கும் சொற்களின் உச்சரிப்புக் குழப்பம் பற்றி விரிவாக எழுத வேண்டியுள்ளது. சில சொற்களைப் பார்ப்போம்.  

வடமொழிச் சொல்முன் ஒற்று மிகாது!

 ‘பு(Pu)த்தகம்’ என்பதை ‘பு(Bu)த்தகம்’ என்றும், ‘கா(Kaa)லி’ என்பதை கா(Gaa)லி என்றும் –பெரும்பாலும்- உச்சரிப்பது தவறு! பிறசொல் புழங்கும் போதும் அது தமிழாகி, தமிழ் உச்சரிப்பே பெறும்.  

வான்மீகியின் இராம காதையைத் தமிழில் எழுதிய கம்பர், பாத்திரப் பெயர்களைத் தூய தமிழில் தந்ததைக் கவனிக்க வேண்டும். கம்ப  ராமாயணத்தில் ‘கிரந்த’ எழுத்துக்கு இடமில்லை! ராம்-இராமன், சீதா-சீதை, லக்ஷ்மண்-இலக்குவன், ராவண்-இராவணன் என, தமிழ்ப்படுத்திய சிந்தனை, வெறும் சொல் மாற்றம் மட்டுமல்ல பண்பாட்டுக் காப்புரிமை!  

முனைவர் கு.ஞானசம்பந்தன் உலகறிந்த பட்டிமன்ற நடுவர். புலவர் கோ.ஞானச்செல்வன், தமிழ் இலக்கணக் கடல். “இருவரில் ஒருவர் பெயரில் மட்டும் ‘ச்’ ஒற்று வருவது எப்படி?” ‘ஞானம்’ பொதுவாயினும், வந்து சேரும் ‘சம்பந்தன்’ வடமொழி, ஒற்று மிகாது. ‘செல்வன்’ தமிழ்ச் சொல்,  எனவே ஒற்று மிகும். அவ்வளவுதான்!

---------------------------------------------------------------------------   

முக்கியமான பின்குறிப்பு (1)

இக்கட்டுரையில்  இரண்டு எழுத்துப் பிழைகள் உள்ளன என்பதை அச்சாகி வந்தபின்தான் கவனித்தேன். என்ன சோகம்! “சொற்களில் பிழையின்றி எழுதும் முயற்சி பற்றிய கட்டுரையில் எழுத்துப் பிழையா?”  என்று இது வரை ஒரே ஒருவர்தான் கேட்டார்! அவரும் ஒற்றைப் பிழையை மட்டுமே சுட்டியிருந்தார்  (அவ்வளவுதான் நம்ம “ரீச்”!) 

அந்த இரண்டு பிழைகளையும் திருத்தம் செய்தே இந்த எனது வலைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளேன். அந்தப் பிழைகள் என்னென்ன என்பதை –எனக்கு மட்டும்- தெரிவித்தால் என் சொத்தில் பாதியை – எழுத்தாளர் சுஜாதா மாதிரி -  தரலாம் என்று நினைக்கிறேன்.

முக்கியமில்லாத பின்குறிப்பு (2)

சுஜாதா, இப்படி ஏதாவது கேட்டுவிட்டு, மகளைக் கட்டித் தருவேன், சொத்தில் பாதி தருவேன் என்று சொல்வார். பிறகு அவருக்கு மகளோ, சொத்தோ இல்லை என்பதை வேறோர் இடத்தில் சொல்வார்!  நான் இருக்கும் வீடும் காரும் என் இணையர் பெயரில்தான் இருக்கின்றன. என் மகள் இருவருக்கும் ஏற்கெனவே திருமணமாகி விட்டது... எனவே... 

பி.கு (3) அந்த இரண்டு பிழைகளும் ஒரே பத்தியில்தான் இருந்தன!

பி.கு-(4) மிக முக்கியமானது - என்ன இருந்தாலும் 'குற்றம் குற்றமே' என்பதால் இனி இவ்வாறு நிகழாமல் பார்த்துக் கொள்வேன். இந்து தமிழ் நண்பர்கள் மேல் எந்தக் குறையும் இல்லை, நான் எழுதி அனுப்புவதை --என்மேல் வைத்த நம்பிக்கையில்-- அப்படியே வெளியிடுகிறார்கள்  என்பதால், இனி இரட்டைக் கவனமாக இருப்பேன் என இந்து-தமிழ் திசை  நண்பர்களுக்கு உறுதியளித்திருக்கிறேன். எனது வலை வாசகர்களுக்கும் அதே உறுதியை வழங்கி, நடந்த தவறுக்கு எனது நிபந்தனையற்ற மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன். வணக்கம்.

------------------------------------------------------------------------------- 

தமிழ் இனிது-33, நன்றி : இந்துதமிழ்-06-02-2024.

                 ஜெயகாந்தனின் ‘இலக்கணம்’ சரியா?

            ‘ஒரு’ ‘ஓர்’ - வரும் இடங்களை நினைவுபடுத்திக் கொள்வோம்-

வரும் சொல் உயிரெழுத்தில் வந்தால் ‘ஓர்’ வரும்  (ஓர் உலகம்)  

வரும் சொல் உயிர்மெய்யில் வந்தால் ‘ஒரு’ வரும் (ஒரு வீடு)  

இவை போலும் சில சொற்களில் ‘இது இங்குதான் வரும்’ என்னும் படியான சொற்கள் பல உள்ளன. இவை வரக் கூடிய இடம் அறிந்து பயன் படுத்தினால் தொடர்களின் பொருளும் அழகும் கூடுமல்லவா?

‘ஆல்’ ‘ஆன்’ எங்கே வரும்?  

‘ஆல்’ ‘ஆன்’ - மூன்றாம் வேற்றுமை உருபுகள் – எங்கே வரும்?

வரும் சொல் உயிர் மெய்யில் வந்தால், ‘ஆல்’ வரும்-                                    

(காலத்தினால் செய்த நன்றி – குறள்-102) 

வரும் சொல் உயிர் எழுத்தில் வந்தால், ‘ஆன்’ வரும்-                                               

(ஒல்லும் வகையான் அறவினை – குறள்-33)

இரண்டும், “புறந்தூய்மை நீரான் அமையும், அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்” எனும் (298) ஒரே குறளில் வந்திருப்பதைப் பார்க்கலாம்.  

‘தொறும்’ ‘தோறும்’ எங்கே வரும்?

வரும் சொல் உயிர்மெய்யில் வந்தால் ‘தொறும்’ வரும்.                                 

நாள்தொறும் நாடி – குறள்-553.

வரும் சொல் உயிரெழுத்தில் வந்தால் ‘தோறும்’ வரும்.                                     

உறுதோறு உயிர்தளிர்ப்ப – குறள்-1106

இரண்டும் ஒரே குறளில் - 

“களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்                                               

வெளிப்படும் தோறும் இனிது- குறள்-1145.

இந்த இலக்கணம் பற்றிக் கவலைப் படாமல் “ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்” என்று ஒரு புதினமே எழுதிய, புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் இந்த இலக்கணத்தில் நிற்காதவர்! சமூக இலக்கணமே குலைந்து கிடப்பது பற்றிச் சரியாக எழுதியவர் என்பதால், அவரை நாம் குறைசொல்ல வேண்டியதில்லை. சமூகம் சரியாக இருந்தால்தான் வாழ்க்கை, மொழி, இலக்கியம், பிறகுதானே இலக்கணம்?!

‘ஒடு’ ‘ஓடு’ எங்கே வரும்?

வரும் சொல் உயிர்மெய்யில் வந்தால் ‘ஒடு’ (குறில்) வரும்.                                  

தவத்தொடு தானம் – குறள்-295.

வரும் சொல் உயிரெழுத்தில் வந்தால் ‘ஓடு’ (நெடில்)வரும்.                             

பொறுத்தானோடு ஊர்ந்தான் – குறள்-37.

இரண்டும் ஒரே குறளில்  வந்திருப்பதைப் பாருங்கள்-

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்                                              

கற்றோரோடு ஏனை யவர்-410

இவை “உடன் நிகழ்வு“ பொருளில் வரும் என்பதால்  ‘ஒடு’ ‘ஓடு’ எனும் சொற்களின் மற்றொரு வடிவமான “உடன்” என்பதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்றும் இலக்கணம் சொல்கிறது! எடுத்துக் காட்டாக? “சட்டமன்ற உறுப்பினருடன், அமைச்சர் வந்தார்“ என்பது சரியான சமூக-மதிப்பீடு அல்ல!  “அமைச்சரோடு சட்டமன்ற உறுப்பினர் வந்தார்“ என்பதே சரியான தமிழ் மரபுத் தொடர் என்கிறது இலக்கணம்! “ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே“ (தொல்காப்பியம்-575)

‘உடன்நிகழ்வு’ இலக்கணம், அழைப்பிதழில் எந்த வரிசையில் பெயர் போடுவது, எவர் பெயரை எந்தளவில் அச்சிடுவது என்பது வரை நீள்கிறது! இந்த நடைமுறை இலக்கணம் தெரியாதவர்க்கு, உலக நடப்புப் புரியவில்லை என்றே பொருள்!  

இவை போலும் இலக்கணம் தொடர்பான குறிப்புகள் பலவற்றை, தமிழ்நாடு அரசே வெளியிட்டுள்ளது. நமது ”தமிழ்இனிது“ தொடர் பற்றி மகிழ்ச்சி தெரிவித்து, அவற்றை எனக்கு அனுப்பிய, கடலூர் உதவி இயக்குநர் முனைவர் இரா.அன்பரசிக்கு எனது  நன்றி.   

-------------------------------------------------------

தமிழ்இனிது-32, நன்றி: இந்துதமிழ்-30-01-2024

முகம் 'சுழிக்க' வைக்கலாமா?

சுளித்தல் – சுழித்தல்

தமிழாசிரியர் முனைவர் மகா.சுந்தர், ‘முகம் சுளித்தல்’ என்பதை, பலரும் ‘சுழித்தல்’ என்றே எழுதுவதாக வருத்தப்பட்டார், உண்மைதான்! 

‘மனநிறைவு இன்மை’யை முகத்தில் காட்டுவதை, ‘முகம் சுளித்தல்’ என்பார்கள். கோவக் குறிப்பை, ‘முகம் கறுத்தான் / கண் சிவந்தான்’ என்பர். எனினும், ‘சுழித்தல்’ - தவறான வழக்கு, ‘சுளித்தல்’ என்பதே சரி.  ‘ளி-ழி’ குழம்பியது எப்படி?! நம் தமிழர்களின் உச்சரிப்புச் சிறப்பு, ‘உலகப்புகழ்’ பெற்றதாயிற்றே! பழம்-பலமாகும், உளுந்து-உழுந்தாகும்! அதுவே நாளடைவில் எழுத்திலும் வந்து குழப்பும்! பொருளில் தெளிவாக கவனமாக இருந்தால், எழுத்துப் பிழையும் குறையும்.  

 உதடு ‘சுழிப்பது’ என்றால், நெருங்கியவரிடம் ‘பொய்க்குறிப்பு’ காட்டுவது! ‘சுழி’ என்பது ‘இன்மை’(0-ZERO) என்பதற்கான அழகு தமிழ்ச் சொல்! இதை, ‘பூஜ்ஜியம்’ என்று சொல்வது,  ‘முகம்சுளிக்க’ வைக்காதோ?  

தொடர்ப் பிழை கவனிக்க..

            11-01-2024 - காலை 6.45 மணி - கோடைப் பண்பலை- வானொலிச் செய்தியாளர், “அனைத்து மத்திய அரசின் துறைகளும்..” என்னும் தொடரைச் சிலமுறை சொன்னார். மத்திய அரசு எத்தனை இருக்கிறது? ஒன்றுதானே? செய்தி வாசித்தவர், இந்தத் தொடரை, “மத்திய அரசின் அனைத்துத் துறைகளும்”என அமைத்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.

ஊடகச் செய்தியாளரும், வாசிப்போரும், அச்சிடுவோரும், இவை போலும் தொடர்களின் நுட்பம் அறிந்து, தொடர்களை அமைத்தால், இளந்தமிழர் அறிந்து வளர்வார்கள்.  மேலும், ‘ஒன்றிய அரசு’ என்பதே, பொருள் நிறைந்த -அரசியல் சட்டப்படியான- சரியான சொல் (AptWord) எனினும் அவரவர் சார்பைக் காட்டுவதாக அமைந்து விட்டதும் உண்மை.    

சீண்டுதல் – சீந்துதல் 

  2017ஆம் ஆண்டு, பொங்கலை ஒட்டிய நாள்களில், சென்னை மெரினாவை மையமிட்டு, உலகமே வியந்து பார்த்த, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில், தீயாய்ப் பற்றித் தெறித்த முழக்கம் -  “சீண்டாதே! சீண்டாதே! தமிழர்களைச் சீண்டாதே!”  சீண்டுதல் – வெறுப்பேற்றுதல்.    

லட்சக் கணக்கான இளைஞர் முழக்கங்களின் பக்க விளைவாக அதே மணல்வெளியில் ‘சீந்து’வாரற்றுக் கிடந்தன பன்னாட்டுக் குளிர்பானக் குப்பிகள்!  சீந்துதல் – மதித்தல். இவ்விரு சொற்களையும் இவற்றின் வேறுபாடறிந்து பயன்படுத்த வேண்டும்.   

ஐந்நூறா? ஐநூறா?  

பாரதி சொல்வது போல, “ஓரிரண்டு வருஷத்து நூல் பழக்கமுள்ள” எளிய மக்களை மறந்த எந்த மொழியும் வளர முடியாது! மக்கள் மொழி, கொஞ்சம் ‘கலப்பட’மாகத்தான் இருக்கும். மொழிக்கு முதலிடம் தரும் ‘தூய புலவர்மொழி’ வேறு! இரண்டுக்கும் பயனுண்டு! இவற்றை, இடமறிந்து பயன்படுத்தி மொழி வளர்க்கும் இலக்கணமே நமது தேவை.       

ஐநூறு, செய்நன்றி, பொய்மை, கைமாறு என்பன மக்கள் தமிழ். ஐந்நூறு, செய்ந்நன்றி, பொய்ம்மை, கைம்மாறு  - இலக்கியத் தமிழ்.  

‘கைம்மாறு’ திருவாசகம் -திருச்சதகம்-5, ‘செய்ந்நன்றி’ –குறள்-110, ‘பொய்ம்மை’-கம்பராமாயணம்-9106(TVU) என, இலக்கியங்கள் சொல்ல,  ‘தனிக் குற்றெழுத்தை அடுத்தய’ முன்னும், தனிஐ’ முன்னும் வரும் மெல்லினம் மிகும்’(158) என்று, இலக்கணமும் சொன்னார் நன்னூலார்.

தமிழ்வளர்ச்சித் துறையின் ‘சொற்குவை’யிலும் ‘ஐநூறு’ உள்ளது. பொய்மை, செய்நன்றி, கைமாறு என, ‘மெய் மிகா’ச் சொற்கள், அச்சு நூல்களிலும் வந்துவிட்டன. இவற்றை ஏற்கலாம் என்பதே என் கருத்து. மக்கள் வளர்ச்சிக்கான மொழிக்கு, நாம் செய்யும் ‘கைமாறு’ இதுதான்!  

--------------------------------------------------   

மைதிலி கவிதை நூலறிமுக விழா - காணொலி இணைப்பு


 இதில்.

நிறைவுரையாகப் பேசிய எனது

தலைமை உரையை

பொள்ளாச்சியிலிருந்து

கவிஞர் பூபாலனுடன் வந்ததோடு

தனது செல்பேசியில் எடுத்து

முகநூலில் பதிவிட்ட

கவிஞர் சோலை மாயவனுக்கு நன்றி

உரையின் காணொலி இணைப்பு

https://www.facebook.com/share/v/9sHfPJFH5y4QTw4m/?mibextid=qi2Omg 

13-நிமிடம்தான்

அச்சமின்றிப் பாருங்கள்

(அடுத்தவர் நேரத்தை எடுத்துக் கொள்ளும்

வழக்கம் எனக்கில்லை!)

தமிழ்இனிது-31 (நன்றி- 23-01-2024- இந்து தமிழ் நாளிதழ்)

  

சிறகு வேறு,  இறகு வேறு!  

கெடிகாரமா? கடிகாரமா?  

          கவிஞர் நேசன்மகதி, செய்தித்தாள் ஒன்றைப் புலனத்தில் அனுப்பி, “கெடிகாரமா? கடிகாரமா?” என்று கேட்டார். “விநாயகர் வடிவ கெடிகார விற்பனை“-விளம்பரமும் அந்த செய்தித் தாளில் இருந்தது!  உமறுப் புலவரின் ஆசிரியர் கடிகை முத்துப் புலவர் வந்து நமது மண்டையில் தட்ட, “கடிகை, கடிகாரம் தான் சரி“ என்றேன் (நன்றி-தமிழ்-தமிழ் அகர முதலி –த.நா.பாடநூல் கழகம்-பக்கம்-247/1985) வெண்கல மணி ஓசையில் காலம் அறிந்ததால், கடிகை - கடிகாரம் ஆனது.  கையில் கட்டுவதால் அல்ல, அளவில் சிறியதால் ‘கைக்கடிகாரம்’ ஆனது,!

 ‘கடிகா’ – பாலி, வடமொழி வழி ‘கடிகை’ எனும் கருத்து, தவறானது.

“மலர்ந்தும் மலராத” -பாசமலர்- பாடலில் “தங்க கடியாரம்“ என்று சுசிலாம்மா பாட, கண்ணதாசன் ‘கடிகாரம்’ என்றே எழுதியிருக்கிறார்.  

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ‘நான்மணிக் கடிகை’ பொ.ஆ.,4ஆம் நூற்றாண்டினது! “கடிகை வெண்பா“- அரசனுக்கு நேரம் சொல்லும் ஒரு சிற்றிலக்கியம்! கடிகை -நேரம் அளவிடு கருவி.  மதுரைக் காஞ்சி-532, நெடுநல் வாடை-142, கலித்தொகை-96/10, அகநானூறு35/3 எனசங்கநூல்களில் வரும்.          “பாலையில் செல்வோர் கடிகை கொண்டு செல்வர்"கடிகை  நாழிகையே" - சூடாமணி நிகண்டு. 

பிறகு கடிகை-கடிகாரம் என்பது ‘கெடிகாரம்’ ஆனது எப்படி? கங்கை –கெங்கை என்றும் (குடியாத்தம் கெங்கையம்மன் கோவில்), கரகம் – கெரகம் என்றும் (கரகாட்டக் காரன் - கோவை சரளா) பேச்சு வழக்கில்     க, கெ ஆக,  கடிகாரம் கெடிகாரம் ஆகியிருக்கலாம்.  ஆனால் பெருவழக்கிலும் எழுத்திலும் கடிகாரம் என்பதே தமிழ்ச்சொல்.  என்ன செய்ய? கடிகாரத்திற்கே ‘நேரம்’ சரியில்லை  போல!  ‘கெரகம்’தான்!  

எம்பளது – நுப்பது

எண்பதை ‘எம்பளது’, என்றும் முப்பதை ‘நுப்பது’ என்றும் சொல்வது, பழைய  தஞ்சை மாவட்ட மக்கள் வழக்கு. எழுதும்போது, சரியாக எழுதுவர். இது எப்படி வந்ததென்று சொல்லாய்வரே சொல்ல வேண்டும்! தப்பான  உச்சரிப்போடு நெடுங்காலமாக வழக்கில் இருப்பது மட்டும் உண்மை!

அரைவை – அறைவை

           சென்னையிலிருந்து பள்ளி  மாணவி ஜூலியானா, “அரைவை எந்திரமா? அறைவை எந்திரமா?” என்று கேட்டார். நல்ல கேள்வி!  அறவை, அறைவை என்பன தவறானவை.  மாவு அரைக்குமிடம் – மாவு அரவை ஆலை. புடைவையைப் புடவை என்றும், உடைமையை உடமை என்றும் வழங்குவது போல, அரைக்கும் அரைவையை அரவை என்றே ஏற்கலாம். மரம் அறுக்கும் மர அறுவை ஆலை என்பது வேறு.

இறக்கை – றெக்கை – ரெக்கை

இறக்கை – wings- இறகு, பெரியது. 

றெக்கை - பேச்சு வழக்கு. 

சிறகு –feather- இறக்கையின் சிறுபகுதி- சிறியது. 

“காதல் சிறகை காற்றினில் விரித்து” –கண்ணதாசன் பாடல்.   

“சிறகுக்குள் வானம்” – ஆர்.பாலகிருஷ்ணன் கட்டுரைகள் - பாரதி புத்தகாலயம். ‘சிறகு’ என்றே  மின்னிதழ் ஒன்றும் வருகிறது!

இறகிலிருந்து பிரிவதே சிறகு, ஆனால், பெரும்பாலும் --வழக்கை முன்வைத்து—சிறகை, இறகு-இறக்கை எனும் பொருளில்  எழுதுகின்றனர். இதை இலக்கணத்தில் (சிறகு எனும் உறுப்பு, இறகு-இறக்கை எனும் முதலுக்கு ஆகிவருவதால்)  சினையாகுபெயர் என்பர். ரெக்கை என்பது பிழை வழக்கு.  சிறகு விரிக்கட்டும் புதிய சிந்தனைகள்!   

(நன்றி - இந்து தமிழ் நாளிதழ் - 23-1-2024 செவ்வாய்)

நண்பர்கள் சிலர் தொலைபேசியில் அழைத்து,
“என்ன இந்த வாரம் இப்படி வடிவமைத்து விட்டீர்கள்?” என்று
என்னைக் கேட்டார்கள்! கோப்பாகச் சேர்ப்போர், பள்ளி கல்லூரி, பயிலகங்களின் சுற்றறிக்கைப் பலகையில் இதை
ஒட்டிவைப்பது சிரமம் என்றார்கள்!  
( மதுரை உலகத் தமிழ்ச் சங்கச் சுற்றறிக்கைப் பலகையில் 
“தமிழ் இனிது” கட்டுரைகளை ஒட்டுகிறார்களாம்! 
அந்த நல்லுள்ளங்களுக்கு எனது வணக்கம் கலந்த நன்றி )


                                     -------------------------------------------------------------------- 

தாராபுரம் புத்தக விழா - எனது உரை காணொலியின் சிறு பகுதி!




நிகழ்வில் 27-12-2024  அன்று

நான் பேசியதை

இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார்கள்

(எனக்கே நண்பர் ஒருவர்தான் தெரிவித்தார்!)

விருப்பமுள்ள நண்பர்கள் கேட்க-பார்க்கலாம்.

உரைத் தலைப்பு

 “உண்டால் அம்ம, இவ்வுலகம்”

(உரை - நிகழ்வில் நான் 50நிமிடம் பேசியிருந்தாலும்..)

வெறும் 6நிமிட உரை மட்டுமே

இதில் உள்ளது.

எனவே துணிந்து பார்க்க, கேட்கலாம்!

கேட்டவர்கள் தங்கள் கருத்தைப் பகிர்ந்தால் 

மகிழ்வேன். “இன்ஸ்டா“ இணைப்பு :

https://www.instagram.com/reel/C2UnlDbM2yl/?igsh=MXZoY2VtcnJhY2p6Nw== 

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த

தமுஎகச தாராபுரம் கிளைத்தலைவர்கள்

சீரங்கராயன், தங்கவேல் 

மற்றும் சுழற்சங்க நிர்வாகிகள்,

தீக்கதிர் நாளிதழ் (இன்ஸ்டா) ஆகியோர்க்கு 

எனது  நன்றி. 

----------------------------

தமிழ்இனிது-30 (நன்றி-இந்து தமிழ் 09-01-2024)

       


       
வரலாறு மாறி வரலார் ஆகலாமா?

ஒன்று – ஒண்ணு? ஒன்னு?

         வி.சேகர் இயக்கிய திரைப்படம், ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும். இந்த வரியில் தொடங்கும் கண்ணதாசன் திரைப்பாடல் ஒன்றும் உள்ளது.    

மாறாக, கன்றுக்குட்டி - பேச்சு வழக்கில் - ‘கன்னு’க்குட்டி ஆகிறது. “கன்னுக்குட்டி கன்னுக்குட்டி“- திரைக்கலைஞர் சிவகுமார் நடித்த பாடல்!  கொன்று, தின்று - ‘கொன்னாப் பாவம், தின்னாப் போச்சு!”-  பழமொழி!

இப்படி, ‘று’ எழுத்து, இனவழியில், ‘னு’ ஆவதுண்டு!  எண்ணுப் பெயர்களில்,  ஒன்று-ஒண்ணு, மூன்று- மூணு என, ‘ணு’ ஆவது எப்படி?       

         தமிழறிஞர் இராம.கி., தனது “வளவு“ வலைப்பக்கத்தில் “ஒண்ணு சரியா? ஒன்னு சரியா? என்றால், ‘ஒண்ணு’ என்பது முதலில் வந்திருக்க வேண்டும், ‘ஒன்னு’ என்பது பின்னால் வந்திருக்க வேண்டும்” என்கிறார். (https://valavu.blogspot.com/2005/11/blog-post_03.html)

இதை, இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம்: ‘ஒண்ணா’  எனில் ‘இயலா’ என்பது பொருள். ‘சொல்லொ(ண்)ணாத் துயரம்’,  ‘காண ஒண்ணாக் கொடுமை’  என, ‘ஒண்ணா’ - எதிர்ச் சொல்லாகவே உள்ளது!  

ஆக; ஒன்று, மூன்று என்பன எழுத்து வழக்கு; ஒன்னு, மூனு என்பன பேச்சு வழக்கு,  ஒண்ணு, மூணு  என்பன தவறான வழக்கு எனலாம்.                   

ஆர்ந்த - ஆழ்ந்த இரங்கல்?

அன்பிற்குரியவர்களின் மரணத்தில், “மனமார்ந்த அஞ்சலி / இரங்கல்” என்கிறார்கள்!  நல்ல உள்ளங்களை வாழ்த்துவோம். ஆனால், “ஆழ்ந்த இரங்கல்” என்பதே சரி.  ‘உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து’ என்பது உட்பொருள். நன்றி சொல்ல, “மனமார்ந்த நன்றி” என்பதே சரி.

‘நன்றியை உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து சொல்லக் கூடாதா?’ எனில், “நல்லதுக்கு, அழைச்சாத்தான் போகணும், கெட்டதுக்கு அழைக்க மறந்தாக் கூட, கேள்விப் பட்டாலே போகணும்” என்பார்கள்! ஆளில்லாத பூக்கடையில், இரவிலும் சில மாலைகள் தொங்குவதைப் பார்க்கலாம்! பணத்தை மீறிய தமிழர்மரபு!  நல்ல மரபுதானே இலக்கணமாகிறது?!   

ஒருக்காலும் ஒருகாலும் – 

நக்கீரரின் முருகாற்றுப் படைக்குப் பின்னுள்ள – ‘கடைச் செருகல் - வெண்பாக்கள் ஒன்றில், “ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்” என்னும் தொடர் உள்ளது. 

ஆள்பவனையும், ஆண்டவனையும் கேள்விகேட்ட திருவிளையாடல் படத்தில், முக்கண்ணன் சிவனிடமே, இருகண் சிவந்து “...ஒருக்காலும் இருக்க முடியாது!” என்று சீறுவார் நக்கீரர்!

“ஒருக்கா வந்துட்டுப் போப்பா?” இது, சிற்றூர்த் தாயின் தவிப்பு! மலை(ST)மக்கள் இலக்கியமான குற்றாலக் குறவஞ்சி, ‘ஒருக்கால்’ ‘இருக்கால்’ என்றே பாடும் (கு.கு: 353ஆம் பாடல்).  

  ஆக, ‘ஒருமுறை’ எனப் பொருள்படும் ‘ஒருகால்’ எனும்  சொல் பேச்சுவழக்கில் ‘ஒருக்கால்’ என்றாகிறது. ‘ஒருக்காலும்’ என ‘உம்’ சேரும்போது எதிர்ச் சொல்லாகிறது எனக் கருதலாம்.

அடையார்? பெரியார்?  – வரலார்?

காஞ்சிபுரத்துத் திருப்பெரும்புதூர் அருகில் பிறந்து, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களைக் கடந்து, மொத்தம் 43கி.மீ., நடந்து, வங்கக் கடலை அடையும் ஆறு அடையாறு! இதை, ‘அடையார்’ என்பது அடுக்குமா? சொல்லின் இறுதியில் வரும் ‘று’ (குற்றியலுகரம்) ஆங்கிலேயர்க்கு வராததால் ‘ர்’ போட்டு அடையார் என்றனர்! 

இவ்வாறே, ‘முல்லைப் பெரியாறு’ (பேரியாறு-பதிற்றுப் பத்து : 28), ‘பரளியாறு’ (பஃறுளியாறு –சிலம்பு:11:காடு:19) என்பனவும் மருவின.  

தமிழக ஆறுகளின் ‘வரலாறு’ மாறி,  ’வரலார்’ ஆவது நல்லதா?!  

----------------------------------------------------------------

(வலையேற்றப்பட்ட நேரம் :

09-01-2024 செவ்வாய் பிற்பகல்-2-30)