தமிழ் இனிது – 49 - (அடுத்த வாரம் நிறைவடையும்)

 

(நன்றி -இந்து தமிழ் -28-5-2024)
 இலக்கணத்தில் இரட்டைக் கவனம் ஏன் தேவை?

3000-ஆண்டுக்கு மேலாக- பேச்சு எழுத்து இரண்டிலும் மக்கள் மொழியாகத் தொடர்வது தமிழ். எழுத்து வடிவங்கள் மாறினாலும் பொதுவான பேச்சில் பெரிய மாற்றமில்லை. ஆக, கற்காலம் தோன்றி தற்காலமும் நாம் பேசும் தமிழை, “வயது ஏற ஏற வனப்பேறும் அதிசயமே!” என்று அப்துல் ரகுமான் வியக்கிறார்!  

அவ்வப்போது தோன்றும், மறையும் சொற்களைப் பற்றியும்,  பாடும்- எழுதும் பாவகைக்கு ஏற்பவும் இலக்கண நூல்களும் மாறி வந்துள்ளன. விருத்தங்கள் எல்லாம் அப்படி வந்தவை தாம்! இப்போது இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ் இலக்கணத்தை மீறிய புதுக்கவிதை வந்து, பலரையும் எழுத வைத்துக் கொண்டிருக்கிறது. புதிய புதிய சிந்தனைகளில் இலக்கியங்கள் தோன்ற, தமிழ்ச் சமூகம் ஒரு பாய்ச்சல் வேகத்திற்கு மாறி வருகிறது!  

மாறிவரும் இலக்கண மரபுகள்-   

            தொல்காப்பியரே, “மொழி, காலத்தாலும் இடத்தாலும் மாறும்“ என்பதை ‘புறனடை’ இலக்கணமாகச் சொல்லி விட்டார்! “கிளந்த அல்ல வேறு பிற தோன்றினும் கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே” எனும் நூற்பாவை இருவேறு இடங்களில் (602,781) அமைத்த தொல்காப்பியர், கால மாற்றத்திற்கு ஏற்ப மொழி மாற்றத்தை முன்மொழிகிறார்.

தொல்காப்பியர்க்கு, 1,500ஆண்டு பின்வந்த நன்னூலாரும், “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என வழிமொழிகிறார். தமிழை அழிக்க நினைப்போர்க்கு இரையாகி விடாமலும், வளர்க்க நினைப்போர்க்குச் சுமையாகி விடாமலும் புதிய இலக்கணத்தில் இரட்டைக் கவனம் தேவை!

புதிய இலக்கணத்தின் தேவை

ச-எழுத்து, அ,ஐ,ஔ எனும் மூ எழுத்துகளில், சொல்லின் முதலில் வருவதில்லை (ச,சை,சௌ எனத் தமிழ்ச் சொற்கள் தொடங்குவதில்லை) என்கிறது தொல்காப்பிய நூற்பா-62, ஆனால் சங்க இலக்கியத்திலேயே “ச“ எழுத்து நூறு இடங்களில் மொழி முதலில் வந்திருப்பதைப் பட்டியலிடுகிறார், ‘சங்க இலக்கியம் தொடரடைவு’  எனும்   செயலியை, தனது பேருழைப்பால் தொகுத்திருக்கும் மதுரை ப.பாண்டியராஜா. ஆக, தொல்காப்பியர் கருத்தும், பின்னர் மாறியிருப்பதைப் பார்க்கிறோம்.

1990களின்பின், பன்னாட்டுப் பண்பாடு பரவியபோதே, “புதிய மணிப்பிரவாள நடை“ ஆங்கில, கிரந்த எழுத்துகளில் பரவியது! பள்ளி மாணவர் பெயர்கள் 99விழுக்காடு கிரந்தக் கலப்பில் உள்ளனவே?!  

ஆக, பயன்பாடற்ற இலக்கணத்தைக் கைவிட்டு, புதிய இலக்கணம் தொகுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பேராசிரியர் பொற்கோ, தமிழண்ணல் போன்றோர் இதைப் பற்றிக் கவலையோடு சொல்லி யிருக்கிறார்கள்.

உரை நடையில் இலக்கணம் தேவை

            தொல்காப்பியம் “உவமஇயல்“ என்றே தனித்துச் சிறப்பித்த உவமையை, நன்னூல் 12ஆகச் சுருக்கியது (நூற்பா-366). இவற்றிலும் ஒன்றுகூட இப்போது வழக்கில் இல்லை! மாறாக, ‘ஆட்டம்’ ‘மாதிரி’ ‘கணக்கு’ போலும் புதிய உவம உருபுகள் வந்து விட்டன! (“குரங்காட்டம் தாவுற“ “ஆந்த மாதிரி முழிக்கிற“, “கிளி கணக்கா பொண்ணு“) இவற்றுக்குப் புதிய இலக்கணம் தேவை!  இது ‘ஒரு சோற்றுப் பதம்’ தான்!

இலக்கணத்தைப் பழைய முறையில் (1)நூற்பா, (2)எடுத்துக் காட்டு, (3)பொருத்த/விளக்கம் என்று இல்லாமல், உரைநடைச்  சொற்களைக் கொண்டே –சுமையற்ற வகையில்- மாணவர்க்குக் கற்றுத்தர வேண்டும். எளிமையும், நடைமுறைத் தெளிவும், வலிமையும் கொண்டதாக, புதிய இலக்கணம்,  “தமிழ் இனிது” என மாறவேண்டும். 

                                                                    (அடுத்த வாரம் நிறைவடையும்)

           ------------------------------------------- 

28-5-2024- இன்று காலையே “இந்து தமிழ்“ நாளிதழில்

நமது கட்டுரையைப் படித்த மதிப்பிற்குரிய 

நீதியரசர் அரிபரந்தாமன் அவர்கள்

பின்வரும் குறுஞ்செய்தியை எனக்கு 

அனுப்பியிருந்தார்கள்.

அவர்களின் அன்புக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. 

“தமிழ் இந்து நாளிதழில் தங்களின் தமிழ் உலா அடுத்த வாரம் நிறைவடையும் என்பதை பார்த்தேன். இன்னும் கொஞ்ச காலம் தொடர்ந்திருக்கலாம் தமிழ் இந்து”

------------------------------------------

கடந்த ஓராண்டாக, செவ்வாய் தோறும் வந்த நமது கட்டுரையைப் பல்லாயிரக்கணக்கானோர் படித்தாலும், ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கிய பெருந்தகையினரை விரல் விட்டு எண்ணிவிடலாம்! அவ்வாறான பெருந்தகையினர் இருவர் தாம்  முன்னுரை, அணிந்துரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்! 

அடுத்த மாதமே “தமிழ் இனிது” நூல் வருகிறது! பணியைத் தொடங்கி விட்டார்கள் இந்து-தமிழ்ப் பதிப்பகத்தார்!

500-ஐத் தாண்டும் சொற்களை அடுக்கி, “சொல்,பெயர் அடைவு” (எந்தச் சொல், எந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது) எனும் விவரக் குறிப்பை அகர வரிசையில் தயாரித்துக் கொண்டிருக்கிறேன் நான்! 

நூலோடு சந்திப்போம்!

நன்றி 

----------------------------------

தமிழ் இனிது -48 ---நன்றி ---இந்து தமிழ் -21-5-2024

 


பிறர் பொருளைத் தமிழ்ப் படுத்தலாமா? 

க் ச் வருமா? வராதா?

தமிழ்ச் செய்தித் தாள்களின் முதன்மைச் செய்தி எதிலும் வல்லொற்று இருக்காது! பொருள் மாறா இடங்களில் க் ச் வருமா என்று கேட்போரை அச்சுறுத்த வேண்டியதில்லை, பொருள் மாறுகிறதா என்று பார்த்தால் போதும் என்பதே எனது கருத்து. 

“வல்லினம் மிகும் இடங்கள்-34, மிகா இடங்கள்-29” என்று பட்டியல் தருகிறார், பொறிஞரும் தமிழ் அறிஞருமான திருச்சி கரு.பேச்சிமுத்து (நூல்:“பிழை தவிர்“ -2018) ஆனால், எந்த இடத்தில் வேண்டும்  என்பதில் புலவர்களிடம் இன்றும் கருத்தொற்றுமை இல்லை என்பதே உண்மை! அதற்கான பட்டியலை எடுக்க, அரசுதான் முயற்சி செய்ய வேண்டும். அதுவரை “சந்தேகத்தின் பலனை வாதிக்குத் தரலாம்” என்னும் நீதிமன்ற நிலைக்கருத்து, தமிழுக்கும் பொருந்துமல்லவா?

பிறமொழிகளில் இல்லாத சிக்கலாக, இந்த ”ஒற்றெழுத்து மிகுமா? மிகாதா?” கேள்விக்கு அஞ்சியே இன்றைய இளைஞர் பலர் தமிழை விட்டு ‘தங்லீசு’க்குப் பாய்கின்றனர். தகுந்த தமிழ்ச் சொல் பயிற்சியும் இல்லை என்பதும் உண்மை! ஆங்கில மோகத்தின் அமோக விளைச்சலிது! இணையத்தில் “முக்காலே மூனுவீசம்” “தங்லீஷ்”ஆக, காரணம் இவை!  

எழுத்துப் பிழை பெரிய பாவமல்ல, தமிழில் எழுதுங்கள்!

‘தங்லீஷ்’ எழுதுவதே தவிர்க்க வேண்டிய தமிழ்க் குற்றம்!

பிறர் பொருளுக்குத் தமிழில் பெயர் வைப்பது பற்றி..

பிறர் ஒருவர் கண்டுபிடித்த பொருளைத் தமிழர் புழங்கும் போது அதற்கான பெயர் அந்த மொழியில் இருப்பதை மாற்றி, எப்படித் தமிழில் தருவது என்று விவாதம் நடக்கிறது. FaceBook - முகநூல்? என்பது போல!

இதில் அடிப்படையான கேள்விகள் இரண்டு. (1) பிறர் ஒருவர் கண்டுபிடித்த பொருள் வேண்டும், அவர் வைத்த பெயர் வேண்டாமா? (2) நாம் கண்டுபிடித்த பொருளை அவர்கள் மொழியில் பெயரிட்டு அழைப்பதை நாம் ஒப்புவோமா? கடந்த ஆயிரம் ஆண்டுக்கும் மேலாக அறிவியல் கண்டுபிடிப்பு எதையும் தமிழர் – தமிழில்- சொந்தமாகத் தரவில்லையே, ஏன்? என்பது தனி ஆய்வு!

அப்படியே தமிழில் பெயர் வைத்தாலும் ‘மகிழுந்து’(Car) தனியாகவா வருகிறது? சிறுசிறு  பகுதிப் பொருள்கள் (Spare Parts) எத்தனை? எப்படிச் சொல்வது? இது அலட்சியத்தால் வரும் வினா அல்ல, “அடிப்படையில் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும், சிந்தனையைத் தூண்டும் கல்விமுறை பற்றிய செயல் திட்டம் இல்லாமல் ‘சும்மா’ தமிழ்ப் படுத்துவாக நினைத்துப் ‘படுத்துவது’ யாரை?” எனும் அக்கறை வினா.   

பொதுவான அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தமிழில் தரலாம். அதிலும் விவாதங்கள் நடக்கின்றன. Video, காண்பதும் கேட்பதுமாக இருப்பதால், ‘காணொலி’ என்றே தமிழறிஞர் செந்தலை ந.கவுதமன் உள்ளிட்ட பலரும் –நானும்- சொல்கிறோம். ‘இந்து-தமிழ்’ நாளிதழ் உள்ளிட்ட இதழாளர், ‘காணொளி’ என்கிறார்கள். இரண்டும் புழக்கத்தில் வரட்டுமே? சரியானது நிலைக்கட்டும்! இரண்டையும் விட்டுவிட்டு, ‘வீடியோ’ என இரண்டும் கெட்டானாய்ச் சொல்ல வேண்டாம் என்கிறேன்.

மொத்தத்தில் தமிழின் மீது அலட்சியம் வேண்டாம். எழுத்துப் பிழை பற்றி அஞ்சாமல், தமிழில் எழுத முயற்சி செய்ய வேண்டும் பழகப் பழகத் தேவையான திருத்தம் காண்பது எளிது! தமிழறிஞர்கள் மட்டும் இதைச் செய்துவிட முடியாது. மக்கள் பங்கேற்புடன் அரசுதான் செய்யவேண்டும்!

            ------------------------------------------------------   

தமிழ் இனிது -47 நன்றி - இந்து தமிழ் - 14-5-2024

நிறுத்தக் குறிகளைத் தின்னும் புதிய மொழி!

துணையெழுத்துகள்

அனைத்து மொழிகளும் அ எழுத்தையே முதன்மையாக உடையன. வாயைத் திறந்ததும் வரும் எழுத்து என்பதுதான் காரணம்.  அ,இ,உ,எ,ஒ என்பன உயிரெழுத்தில் முதன்மை எழுத்துகள். ஆ,ஈ,ஊ,ஏ,ஓ, என்பன –முதன்மை எழுத்து நீள்வதால் வரும்- நெடில் எழுத்துகள். ஐ,ஔ, என்பவற்றைக் கூர்ந்து பார்த்தால் இவை கூட்டெழுத்து என்பதும் புரியும்.

எழுத்துகளின் வரிவடிவம் மாறி மாறி வந்துள்ளதால்,  இக்காலத் துணையெழுத்துகளின் பெயரைத் தெரிந்து கொள்வது அவசியம் :

அம்மா – இதில் அ எழுத்து முதன்மை வடிவம். ம் மெய்யெழுத்து. மா எழுத்தில் ம முதன்மை வடிவம், அடுத்துள்ள  கால் துணையெழுத்து.

துணைக்கால் – கா,சா

கொம்புக்கால் – கௌ,சௌ

பிறைச்சுழி – ஆ


ஒற்றைக் கொம்பு – கெ, தெ

இரட்டைக் கொம்பு – பே, வே

இணைக்கொம்பு – பை, வை

 

வளை கீற்று -   கூ,

சாய்வுக் கீற்று – ஏ

இறங்கு கீற்று – பு,சு

இறக்கு கீற்று கீழ் விலங்குச் சுழி – சூ,பூ

 

கீழ் விலங்கு – மு,கு

கீழ் விலங்குச் சுழி – மூ,ரூ

மேல்விலங்கு – கி,தி

மேல் விலங்குச் சுழி – கீ,சீ

மடக்கு ஏறு கீற்றுக் கால் – நூ,னூ,றூ

முதலான எழுத்துகளைக் கொண்டு, கண்டு தெளிக.

நிறுத்தக் குறிகள்

எழுத்தைப் புரிந்துகொள்ள துணையெழுத்துப் போல, தொடரைப் புரிந்து கொள்ள  நிறுத்தக் குறிகளை அறிவதும் அவசியம். இதற்கு, பல்வேறு நடைகளைக் கொண்ட கட்டுரை, கவிதை, சிறுகதைகளைப் படித்துப் பார்த்துத் தெளிவதே சரியான வழி. மற்றபடி நிறுத்தக் குறிகளைப் பற்றிக் கவலை கொண்டு, சொல்லவரும் சிந்தனையில் தடம் மாறிவிடவும், தேவையற்ற இடங்களில் போட்டுக் குழப்பி விடவும் கூடாது.

நிறுத்தக் குறிகள் (Punctuation Marks) ஆங்கில வழி வரவு என்பதால் ஆங்கில வழக்குடன் சேர்த்துப் புரிந்து,  பயன்படுத்துவது எளிது –  இவை ஏராளமாக உள்ளன. முக்கியமானவற்றை மட்டும்  பார்ப்போம் : இதில் சந்தேகம் வந்தால் நம் ஜி.எஸ்.எஸ்.அய்யாவிடம் கேட்டு அறிவோம்.

Comma  ( , )  கால் புள்ளி  - மொழி, கணக்கு, அறிவியல் ஆகிய பாடங்கள்.

Semicolon  ( ; )  அரைப் புள்ளி  - அறிஞர் தான்; சமூகப் பொறுப்பில்லையே!

Colon  ( : ) முக்கால் புள்ளி / வரலாற்றுக் குறி – பின்வருமாறு:

Full Stop  ( . ) முற்றுப்புள்ளி. முடிந்தது.

Excalamation  ( ! ) உணர்ச்சிக் குறி  - அடடா, என்ன சிந்தனை! (பல்வேறு உணர்ச்சிகளைக் காட்டுவதால், ஆச்சரிய/வியப்புக் குறி என்பது தவறு)  

ஆங்கிலத்தில் Teachers’  என்றால் ‘ஆசிரியர் பலரின்’ என்பது பொருள். Teacher’s எனில் ‘ஆசிரியர் ஒருவரின்’ என்று பொருள்.  I am என்பதை  I’m என்று எழுதுவது போல, ஒற்றை மேற்கோள் குறி இட்டு, சரி’ம்மா எனில், “சரி அம்மா“ என்பதன் சுருக்கமாகப் புதியன புகுந்துள்ளது.

தமிழில் மட்டுமல்ல, உலகத்தின் பற்பல மொழிகளின் நிறுத்தக் குறிகளை படக்குறிகள் (இமோஜி) எனும் புதிய மொழி தின்று வருகிறது! வலுத்தது நிலைக்கும்! தமிழுக்கு வலிமை சேர்ப்பது நம் காலக் கடன்.  

-----------------------------------------------

‘தமிழ் இனிது’ தொடர் நிறைவடைகிறது, ---நண்பர்களுக்கு எனது வேண்டுகோள்!

 அன்பினிய உங்களுக்கு என் தோழமை வணக்கம்.

வாராவாரம் ஆரவாரமாக இல்லாவிட்டாலும் நமது “தமிழ்இனிது” தொடர்பான அவசியமான கருத்துகளை எனக்குத் தெரிவித்து வந்த நண்பர்களுக்கும், கருத்துத் தெரிவிக்கா விட்டாலும் தொடர்ந்து படித்து வந்தவர்களுக்கும்  ஒரு செய்தி :

“தமிழ்இனிது“ தொடர் விரைவில் நிறைவடைகிறது! தொடரை வெளியிட்ட “இந்து-தமிழ்“ நாளிதழ் நிறுவனமே, இதே பெயரில் நூலாக்கி வெளியிட உள்ளனர். ஜூன்-4ஆம் தேதி 50ஆவது கட்டுரை வெளிவந்த பின் ஜூன் மாதமே அச்சிட்டுத் தருவதாகச் சொல்லியிருக்கின்றனர்! (ஜூலை முதல்வாரம் FeTNA அழைப்பை ஏற்று நான் அமெரிக்கா போகும்போது எடுத்துச் செல்ல விருப்பம்!)

இன்று - 07-5-2024 செவ்வாய் - 46ஆவது கட்டுரை வந்துள்ளது. அடுத்த கட்டுரையை அனுப்பிய பின்னரே முந்திய கட்டுரையை எனது வலையில் ஏற்றுவது எனும் என் வழக்கத்தின்படி 47ஆவது கட்டுரையை இன்று முற்பகல் அனுப்பிவிட்டேன். அந்த வகையில் -

இன்னும் 3கட்டுரை எழுதி அனுப்ப வேண்டியுள்ளது.

இதுவரை எழுதியதில் விடுபட்ட, வெளிவர வேண்டும் என்று நினைக்கின்ற, நிறைவாகச் சொல்ல வேண்டிய, நடைமுறைச் சொற்கள் அல்லது தமிழ் தொடர்பான குறிப்புகளை நண்பர்கள் அனுப்பலாம்.  

தமிழ் இனிது – 06-06-2023- முதல் கட்டுரையிலேயே தமிழ் ஒரு ஜனநாயக மொழி என்று எழுதியிருந்தேன். அதன்படி ஜனநாயகத் தமிழ்க் கருத்துகளை வரவேற்கிறேன். எனது எண் கீழுள்ளது.

நன்றி

அன்புடன்,

நா.முத்துநிலவன்,

புதுக்கோட்டை.

எனது புலன எண்-94431 93293

---------------------------------------------------------- 

(நன்றி - இந்து தமிழ் நாளிதழ் - 07-5-2024)

“விடுமுறை“க்கு விண்ணப்பிக்கலாமா?

விடுமுறையும் விடுப்பும் -

அரசு (அ) தனியார் நிறுவனம் முறையாக அறிவிப்பது விடுமுறை. விதிகளின் படி, தனது தேவைக்கு விண்ணப்பம் செய்வது விடுப்பு. விடுப்பு வேண்டுவோர், ‘விடுப்பு விண்ணப்பம்’ என்று எழுதுவதே சரி. “விடுமுறை விண்ணப்பம்“ என்று எழுதுவது தவறு. ஒருவரின், தனித் தேவைக்காக, அனைவருக்கும் விடுமுறை விடச் சொல்வது நியாயமாரே?

எதார்த்தமும் இயல்பும் -

            எதையும் ‘இயல்பாக’ ‘உண்மையாக’ எழுதுவதை, தமிழ் இயல்புக்கு மாறாக “எதார்த்தம்” என்கிறார்கள்! “எதார்த்தமாச் சொன்னதப் பிரிச்சி, பதார்த்தம் பார்த்துச் சண்டைக்கு வரலாமா?” என்று, பேச்சிலும் இது புகுந்துவிட்டது. இதில் தமிழ் மரபின்படி வரக்கூடிய எ எழுத்தையும் விட்டு, ‘யதார்த்தம்’ என்றே எழுதும் ‘இலக்கிய அறிவு ஜீவி’களும் உண்டு!

பெயர் சொல்லும் தமிழ் மரபு -

            தமிழறிஞர் திரு.வி.க. வில் உள்ள திரு என்னும் சொல்லைப் பலரும் மரியாதைக்கானது என்று நினைத்துக் கொள்கிறார்கள்! ஆனால் உண்மையில் ‘திருவாரூர் விருத்தாசலனார் மகன் லியாணசுந்தரன்’ என்பதே ‘திரு.வி.க.’வின் விரிவு ‘சிறுப்பிட்டி வைரவநாதர் தாமோதரன்’ என்பது ‘சி.வை.தா.’வின் விரிவு! இவர், தமிழ் ஏட்டுச் சுவடிகளை அச்சுப் பதிப்பதில்  புகழ்பெற்ற உ.வே.சா. அவர்களுக்கும் முன்னோடியானவர்!

சங்க இலக்கியத்தில் ஏறத்தாழ இருநூறு பெயர்களைப் பட்டியல் போடுகிறார் பேரா.ந.சஞ்சீவி. கோவூர் கிழார்,  ஒக்கூர் மாசாத்தியார், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் - தந்தைக்கும் ஊருக்கும் தொழிலுக்கும் பெருமை சேர்த்த பேராண்மை புலவர்களின் பெயர்கள்! (“சங்க இலக்கிய ஆய்வும் அட்டவணையும்“ – ந.சஞ்சீவி. தொகுப்பு – பேரா.காவ்யா சண்முக சுந்தரம்-2010)

இடைக்காலத்தில் சாதிப்பெயர்கள் பின்னொட்டாக வந்தன. இதை எதிர்த்து, சாதிப் பெயர்களைத் தன் பெயரில் போட்டுக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்ற பெரியாரின் -1929 செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டுத் தீர்மான- வேண்டுகோளை ஏற்று, திராவிடச் சிந்தனையாளர் பலரும் சாதிப் பெயர்களை விட்டனர். இப்போது தமிழர் பலரும் சாதிப் பெயரின்றித் தம் பெயரைக் குறிப்பிடுவது பொதுத் தன்மையானது. வட இந்திய, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள், திரைத்துறைக்  கலைஞர், விளையாட்டு வீரர் பெயர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இது புரியும்.

சாதிப் பின்னொட்டை விட்டபின், தந்தை பெயரின் முதல் எழுத்தை மட்டுமே முன்னெழுத்தாக(initial) இட்டனர். 1994இல் முதல்வராக இருந்த ஜெயலலிதா அரசாணை வெளியிட்டும் புழக்கத்தில் வராததைக் கண்டு 2003இல் முதல்வராக இருந்த கலைஞர்  அரசாணை வழி மீண்டும் வற்புறுத்த, இப்போது, தாயின் முதல் எழுத்தையும் சேர்த்துத்  தமிழர்கள் எழுதி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தச் சமத்துவத் தமிழ்ப்பெயர் மரபைப்  பிறநாட்டினரும் பெருமையுடன் பின்பற்றலாம்!  

தடையில்லாச் சான்றும், தடையின்மைச் சான்றும்

         அரசு வழங்கும் ‘தடையில்லாச் சான்று’ (No Objection Certificate- NOC) பற்றி அறிந்திருக்கலாம். இதைத் ‘தடையின்மைச் சான்று’ என்பதே சரியானது. இல்லாத தடையை இருப்பதாகச் சொல்லி அதற்குத் தடையில்லை என்பது சரியானதல்லவே! அரசு விளம்பரங்களில் சரியாக வந்தாலும் ‘ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு நிரந்தரமாகக் கொண்டு செல்லப்படும் வாகனங்களுக்குபடிவம் 28இல் தடையில்லாச் சான்றிதழ்  தேவை’  என்பது போலும் சிலவற்றை,  அரசும்    மக்களும்  மாற்றியமைக்க வேண்டும்.   

--------------------------------------------------------------