பேடிக் கல்வி…
காலத்தால் அழியாத
கவியாக்கும் அவசரத்தில் காளியம்மா வந்து
சூலத்தால் எழுதியதில்
நாக்கு துண்டாகி...
பேச்சும் போச்சு!
சுதந்திர ஆட்சி!
சட்டைத்துணி கேட்டு
சண்டையிட்டோம்!
மூன்று வண்ணத்தில்
ஒட்டுத்துணி கிடைத்தது!
------------------------------------------------
எங்கோ எவனோ?
இலங்கையிலே செத்ததுவும் மனிதன், அஸ்ஸாம்
எரிந்ததிலே செத்ததுவும் மனிதன், பஞ்சாப்
கலங்கையிலே செத்ததுவும் மனிதன், டெல்லிக்
கலவரத்தில் செத்ததுவும் மனிதன், காஷ்மீர்
குலுங்கையிலே செத்ததுவும் மனிதன், பாபர்
கோவிலிலே செத்ததுவும் மனிதன், அறிவு
மழுங்கையிலே செத்ததெல்லாம் சிவந்த ரத்த
மனிதர்கள்! மனிதர்கள்! மனிதர் கள்தான்!
(எனது “புதிய மரபுகள்“ கவிதைத் தொகுப்பிலிருந்து -1993)