முத்துநிலவன் பேச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முத்துநிலவன் பேச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முத்துநிலவன் பேச்சு


சமூக மாற்றத்தை உருவாக்கும் கருவியாக எழுத்து இருக்க வேண்டும்
-- கவிஞர் நா. முத்துநிலவன்  பேச்சு

First Published : 24 Apr 2012 10:39:19 AM IST –
  
 புதுக்கோட்டை, ஏப். 22: சமூக மாற்றத்தை உருவாக்கும் கருவியாக எழுத்து இருக்க வேண்டும் என்றார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் கவிஞர் நா. முத்துநிலவன்.
                                புதுகை மாமன்னர் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய உலக புத்தக தின விழாவில் அவர் மேலும் பேசியது:
                                மாற்றத்தை விரும்புவதும், அதை நோக்கி தனது பயணத்தை தொடர்வதும் எழுத்தாளர்கள், படைப்பாளிகளின் கடமையாக இருக்க வேண்டும். உலக அறிவுக்கும், சமகால நடைமுறை வாழ்க்கைக்கும் தொடர்பில்லாத ஒரு சமுதாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இது சிக்கல் நிறைந்த கட்டத்துக்குள் சமூகத்தை நிறுத்தி விடும் ஆபத்து உள்ளது. தான் எந்தத் துறையில் சிறந்து விளங்க முடியும் என்ற தெளிவு படைப்பாளிக்கு இருக்க வேண்டும்.
                                நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதிக் குவித்த மாமேதை லெனினிடம், ஒரு கவிதை எழுதித் தருமாறு ஒருவர் கேட்ட போது, என் உடம்பில் ஓடுகின்ற ரத்தம் முழுவதும் உறிஞ்சி எடுத்தாலும் என்னால் கவிதை எழுத முடியாது என்றார். தமிழகத்தில் சிறந்த சொற்பொழிவாளராக அறியப்படுகின்ற சாலமன் பாப்பையா, தான் எழுத்திய புத்தகத்தின் அனைத்துப் பிரதிகளும் தன் வீட்டிலேயே இருக்கிறது. ஒன்றுகூட விற்பனையாகவில்லை என்று மனம் திறந்து கூறினார்.
                                மிகவும் கீழ்நிலையில் வாழ்ந்தவர்களை உலகின் மிகச்சிறந்த ஆளுமையாளர்ளாக கொண்டு வந்து நிறுத்தியது புத்தகங்கள்தான்.
                                பல்கலைக் கழக நூலகத்தில் சாதாரண ஊழியராக இருந்த மாவோவை மக்கள் சீனத்தின் நாயகனாக பரிணமிக்கச் செய்தது புத்தகங்களே. அர்ஜென்டீனாவில் தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த சேகுவேராவை புரட்சியாளராக அடையாளப்படுத்தியதற்கு, அவரது மனைவி வீட்டில் அமைத்திருந்த சிறிய நூலகமே முக்கிய காரணமாகும்.
                                தகவல் தொழில் நுட்பப் புரட்சியில புத்தகங்களெல்லாம் குறுந்தகடுகளாக மாறி வருகின்றன. காலத்திற்கேற்றார் போல புத்தக வடிவம் மாறுவது இயல்பு. ஆனால், புத்தகங்கள் என்றும் நிலைத்து நிற்கும் வல்லமையுடைவையாக ஆக்குவது எழுத்தாளர்களின் கையில்தான் உள்ளது என்றார் அவர்.

 தமுஎசக மாநில துணைப்பொதுச்செயலர் கவிஞர் ஜீவி பேசியது:
 எழுத்தாளர்களையும், கலைஞர்களையும் அடையாளப்படுத்துவது புத்தக தினம் போன்ற விழாக்கள்தான். பிற நிகழ்ச்சிகளுக்கு கூடுவதைப் போல புத்தக தின விழாக்களுக்கு மக்கள் கூடுவதில்லையே என சிலர் வருத்தப்பட்டார்கள். பீடிக்கட்டு எல்லா பெட்டிக் கடைகளிலும் கிடைக்கும். குங்குமப்பூவை தேடி அலைந்துதான் பெற வேண்டும். நாம் குங்குமப்பூவைப் போல இருக்கிறோம். நேருவிடம் நீங்கள் விரும்பாதது எது எனக் கேட்ட போது, எப்போதுமே மனிதர்களுடனேயே இருப்பது எனக்கூறினார். விரும்புவது எதுவெனக் கேட்டபோது, போதுமான புத்தகங்களுடன் தனிமைத் தீவுக்குள் சில காலம் வாழ்வது எனக்குறிப்பிட்டுள்ளார். முத்தையா என்கிற மனிதன் மரணமுற்று கண்ணதாசன் என்கிற கவிஞன் நிலைபெற்றிருப்பதற்கு புத்தகங்களே காரணம். எனவே, அனைவரும் புத்தகத்தை நேசிப்போம், வாசிப்போம் என்றார் அவர்.
 விழாவில் அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் எல்.பிரபாகரன், அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் ஆர். நீலா, கல்லூரி முதல்வர் சிவ. கார்த்திகேயன், அறிவியல் இயக்க மாவட்ட நிர்வாகிகள் பொன். கருப்பையா, ராசி. பன்னீர்செல்வன், சி.கோவிந்தசாமி, ஏ.மணிகண்டன், தமுஎகச மாவட்டச் செயலர் ரமா ராமநாதன் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக, தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் ஜனநேசன், கவிஞர் தங்கம் மூர்த்தி, திருக்குறள் கழகம் ராமையா, கவிஞர்கள் சுவாதி, பீர்முகமது, ஈழபாரதி, கவிபாலா, முத்துப்பாண்டியன், கஸ்தூரிநாதன், சதாசிவம் உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள 42 படைப்பாளிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.
------------------------------நன்றி –தினமணி திருச்சி பதிப்பு – 24-04-2012-------------------

முத்துநிலவன் பேச்சு


ஆசிரியருக்கும், பெற்றோருக்குமான கடமை எழுத்தாளருக்கும் உண்டு

புதுக்கோட்டை, ஆக. 16: ஆசிரியர், பெற்றோர் ஆகிய இருவர்களுக்குமான கடமை எழுத்தாளருக்கும் உண்டு என்றார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் நா. முத்துநிலவன்.
புதுக்கோட்டையில் அந்தச் சங்கம் சார்பில் அண்மையில் நடைபெற்ற 10-வது மாவட்ட மாநாட்டைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:
மாணவர்களின் எதிர்காலத்தை மதிப்பெண்களே தீர்மானிப்பதாக கல்வி நிறுவனங்கள் கருதுவதால்தான், பாடப் புத்தகத்தையே கதியாகக் கொண்டுள்ள அவர்களிடம் கலை, கலாசாரப் பண்புகள் காணாமல்போய்விட்டன. இதனால், சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளைக்கூட மாணவர்களால் அறிந்து கொள்ள முடியாமல், சமுதாயத்திலிருந்து விலகிவிடுகின்றனர்.
கலை, இலக்கியமற்ற கல்வி உருத்தேறாது. ஆகையால், பொதுப் பாடத் திட்டத்தைக் கொண்டுள்ள சமச்சீர் கல்வி இதைத் தடுத்து நிறுத்தும்.
உயர் கல்வியை அரசு அனைவருக்கும் இலவசமாக அளிக்க வேண்டும்.
கலையில்கூட மக்கள் இழிவான பார்வை கொள்கிறார்கள். ஆனால், அதையும் கடந்து அனைவரது திறமைகளையும் தமுஎகச அங்கீகரிக்கிறது என்றார் முத்துநிலவன். மாநாட்டுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கா. பிரகதீஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ரமா. ராமநாதன் முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளாளர் சு. மதியழகன் அறிக்கை வாசித்தார். மாநிலத் துணைச் செயலர் மதுக்கூர் ராமலிங்கம் தொடக்கவுரையாற்றினார்.
கவிஞர்கள் எல். வடிவேல், ஆர். வெள்ளைச்சாமி, பொன். கருப்பையா, களக்கமங்கலம் சக்திவேல், சரவணன், சுதாகர் ஆகியோர் பாடினர்.
விழாவில் பல்வேறு பரிசுகளைப் பெற்ற கவிஞர்கள் ஜீவி, தங்கம்மூர்த்தி, அ. செல்வராசு, சு.மதியழகன், சு. பீர்முகம்மது, ராசி. பன்னீர்செல்வம், ஆர். நீலா ஆகியோர் பாராட்டப்பட்டனர்.
கவிஞர்கள் இளையமனோகரன், ஸ்டாலின், எஸ்.எ. கருப்பையா, சிவக்குமார், பூபாளம் செந்தில்குமார், தனிக்கொடி, எஸ். இளங்கோ உள்ளிட்டோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். நாகஸ்சுர நளாயினியுடன் திண்டுக்கல் மாரிமுத்துவின் கட்டைக்கால் தவில் இசைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

First Published : 17 Aug 2011 08:00:58 PM IST – DINAMANI-Trichy Edition