எனது 'புதிய மரபுகள்' கவிதைத் தொகுப்பிலிருந்து ... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எனது 'புதிய மரபுகள்' கவிதைத் தொகுப்பிலிருந்து ... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

எனது புதிய மரபுகள் கவிதைத் தொகுப்பிலிருந்து


தெருப்புகழ்

கல்லத் தனை உள்ளத் தவ ரிடம்
எள்ளத் தனை கஞ்சிக் கென வெயர்
வெள்ளத் தினில் தள்ளா டியகொடும்  நிலைமாறி

வெட்டிப் பயி ரிட்டுப் புனலென
சொட்டித் திடு பச்சைச் குருதியை
விட்டுத் தினம் வைத்துப் பயிரிடும்   உழவோனே

தத்தம் உரி மைக்குப் பயிரினை
வித்திட் டதன் மொத்தப் பலனையும்
ஒத்துக் கொளும் இந்தக் கனவினி  நினைவாக

ஒட்டும் வயி றிங்கிவ் வுழவனை
எட்டும் பொழு தில்லை எனஒளிர்
பட்டப் பகல் வட்டத் திகிரியென் றெழுவோமே
---------------------------------------------------------------------------(1993)

எனது புதிய மரபுகள் - தொகுப்பிலிருந்து...


டில்லி விளம்பரம்.

தொலைக்காட்சியின்
மொழி உணர்வு
தூய்மையானது
தமிழ்ச் செய்தி
இன்னும்
தமிழில்தான் வருகிறது!

தொல்பொருள் ஆய்விலும்
தொலைக்காட்சியின்
பங்களிப்பு அபாரம்
வாரா வாரம்
ஒரு திரைப்படம்!

எங்கள் தாத்தாவுக்கு
ஏக சந்தோஷம் -
அடுத்த வாரம்
ஆயிரம் தலைவாங்கிய
அபூர்வ சிந்தாமணியாம்!

கலைக்கு வயதில்லை!
சும்மா சொல்லக்கூடாது
அந்த ஐ.ஏ.எஸ். வீட்டுக்
கிழவியின் நடனம்
அருமை!

ஆக,
நீங்கள் இந்த
அரசாங்கத் திட்டத்தை
ஆதரிக்கிறீர்கள்
என்றே முடிந்து
எரிச்சலைக் கிளப்பும்
பேட்டிகள் -
திட்டங்களுக் கெதிராக
மக்களைத் திரட்டும்
நல்ல ஏற்பாடுகள்!

மேதைமைக்கு
கால வரம்பில்லை
தொடக்ககால
நாடகங்களை
இன்னும் தொடர்வது
அதனால்தான்.

மின் வெட்டுக்கூட
மக்களுக்கு
மகிழ்ச்சி தருவது
டி.வி. நாடகத்தால்தான்!

இரண்டாம்ப்பு படிக்கும்
 என் மகன்
Colour TV.’  என்பதை
கோளாறு டி.விஎன்றே
சரியாகப் படித்தான்!

எப்போதோ பூக்கும்
ர் அத்திக்காக
எவ்வளவு நாள் தான்
இதற்கு
மின்-நீர் விடுவது?

அறிவியலின்
இளைய பிள்ளை
ஆள் வோரின்
கைப் பிள்ளையாய்
ஆடும் வரை
டி.வி.யின்
சுருக்க விளக்கம்
டில்லி விளம்பரம் தானே?

அழுக்கில் கிடக்கும்
இந்த
சோப்புப் பெட்டியை
சுத்தப் படுத்தும் வரை
ஏ ! தவணைக் காரா!
என்னை
இரண்டு துன்பங்களிலிருந்து
காப்பாற்று!

இந்தப் பெட்டியை
வந்து
எடுத்துக்கொண்டுபோ!
--------------------------------------------(எழுதிய ஆண்டு 1989---தனியார் தொலைக்காட்சிகள் இல்லாத போது எழுதியது. இப்போதும் அரசுத் தொலைக்காட்சிக்கு இது பொருத்தமாகத்தானே உள்ளது? )---------------------------------------------------------  

எனது “புதிய மரபுகள்“ கவிதைத் தொகுப்பிலிருந்து...


போர்க்குணத்துக்கு ஏது தடை?

(உருதுக்கவிஞர் ஃபெய்ஸ்-ஏ-ஃபெய்ஸ் எழுதிய கருத்துச் சுதந்திரம் பற்றிய இக்கவிதையை மத்தியப் பிரதேச முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அஞ்சல் அட்டையில் அச்சிட்டு வெளியிட்டு உள்ளது – 1989.)
  (இந்தியிலிருந்து ஆங்கிலத்தில்-தேபேஷ் தாகூர் (மே. வங்கம்)

சுருக்கென எழுதும் என் இரும்புப் பேனாவை அவன்
சுக்கல் சுக்கலாய் முறிக்கலாம்!- நான்
நெருப்பெனப் பற்றுவேன் ! நிச்சயம் பரவுவேன்!
நினைப்பதைத் தடுக்க முடியாது!

எழுத்தைத் தடுக்கலாம்! எண்ணத் தடைபோட
எந்தத் தடைச்சட்டம் இங்கு வரும்?- என்
கழுத்தை ஒடிக்கலாம்! கையை முறிக்கலாம்
கவிதையைத் தடுக்க முடியாது!

வாயை அடைக்கலாம்! வன்சிறை பூட்டி என்
வாழ்க்கையைக்கூட அழிக்கலாம்! - மூச்சில்
ஓயாது பீறிடும் ஓங்காரப் போர்க்குண
உணர்ச்சியைத் தடுக்க முடியாது!
-----------------------------------------------------------------------
இந்தக் கவிதையை மொழிபெயர்க்கும் போது - ஒவ்வொரு சாவிலும் தன் தனி இழப்பை மனத்தில் கொண்டு எந்தச் சாவிற்கும் ஓயாமல் ஒப்பாரி தொடரும் கிழவிகளைப் போல் - நமது பாரதியின் பாடல்களுக்கு 1928இல் அன்றைய சென்னை ராஜதானி அரசு தடை விதித்த செய்தியை நினைத்துக் கொண்டு - எழுதியது இந்தக் கவிதை. என்ன நாஞ்சொல்றது சரிதானே? --நா.மு.-15-03-2012)

எனது புதிய மரபுகள் கவிதைத் தொகுப்பிலிருந்து...

எனது புதிய மரபுகள் கவிதைத் தொகுப்பிலிருந்து... கவிதை எண் - 4

          எல்லாச் சாமியும் ஒண்ணு தான்!

ஒண்ணை ஒண்ணு இழுத்துக்கிட்டு
                  உருண்டக் கிரகம் போகுது - இதை
உணராத மனுசக் கூட்டம்
                   உருண்டு பெரண்டு சாகுது!

ரம்சான் பண்டிகை பிரியாணி
                  ரத்தினம் வீடு போகுது! – அந்த
ராமு வீட்டுப் பொங்கச் சோறு
                   ராவுத்தர் வீடு போகுது!


சாகுலோட சங்கரனும்
                 ஜானும் போறான் பாருங்க – ஆகா
சாகும் வரைக்கும் இப்படியே,
                 சார்ந்திருந்தா போறும்ங்க!

கையக் கோத்து திரியிது பார்
                 கள்ளமில்லாப் பிள்ளைக – பின்னே
பையப் பைய பிரிச்சு வச்ச
                 பாவிகயார் சொல்லுங்க? (ஒண்ணை…)

நாகூர் ஆண்டவர் மண்டபத்துல
                  நல்லக்கண்ணு கிடக்குது – சீக்கு
போகணுமின்னு வேண்டி அந்த
                  வேண்டுதலும் நடக்குது!

அம்மைப் பாத்த கொடுமை போக
                 அவுலுகலாம் பொஞ்சாதி – மாரி
அம்மனுக்கு நேந்துக் கிட்டு
                 உப்புக்கடன் செஞ்சாக! (ஒண்ணை…)

இருக்கும் நொம்பலம் தாங்கலய்யா
                 எந்தச் சாமி தீர்த்தது? – அட
எது வாச்சும் செய்யட்டுமேனு
                 ல்லாத்தையும் பார்த்தது!

ஏழ பாழ சனங்களுக்கு
                எல்லாச்சாமியும் ஒண்ணுதான் - இதுல
ஏற்றத் தாழ்வ சொல்லிக் கெடுத்தது
               ஏவன்டா? அவன் மண்ணுதான்.!(ஒண்ணை…)

(1993 - “புதிய மரபுகள்” -- சிவகங்கை - மீரா வின் “அன்னம்“ பதிப்பக வெளியீடு)