இந்து தமிழ் கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்து தமிழ் கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இந்து தமிழ் நாளிதழில் இன்று வந்த எனது கட்டுரை

                                              சாவித்திரிபாய் பூலே: 

         இந்தியப் பெண்களின் விடிவெள்ளி!

( இந்து தமிழ் நாளிதழ் இன்று - 02-01-2026 )

ரியாக 178 ஆண்டுகளுக்கு முந்திய, இந்தியச் சமூகம்அது! ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று எண்ணியிருந்தகாலம்! அப்போது, சாதி இந்து ஆண்கள் மட்டுமே பள்ளிக்கூடம் போய்ப் படிக்க முடியும்! பெண்களின் நிலையோ, படு மோசமாக இருந்தது! சதிஎன்னும் கொடிய வழக்கமும், விதவை மறுமண மறுப்பும், பெண்கல்வி மறுப்பும் சர்வ சாதாரணமாக இருந்த காலம்! கல்வியே சமூக முன்னேற்றத்தின் அடிப்படை என்பதை அறியாத பெண்கள் வாழ்ந்து முடியாமலே வீழ்ந்து மடிந்த காலம்!


அவமதிப்பும் வைராக்கியமும்:                                              இந்தச் சூழலில்தான், 1848இல் மராட்டிய மாநிலம்,  பூனே அருகிலுள்ள பிடேவாடாவில்,  அந்த 17வயதுப் பெண், ‘பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிக்கூடம் ஒன்றை, தானும் கணவருமாக உருவாக்கி விட்டமகிழ்ச்சியில், பள்ளிக்கூடத்திற்கு விரைந்து கொண்டிருந்தார்! ஆனால், வழியில் ‘’ஒரு பெண் பள்ளிக்கூடம் போவதா? அதுவும் பாடம் நடத்துவதா? கூடாது! கூடாது!!என்று, மறிக்க முயன்றனர் சிலர்! சகதியும், சாணமும், அழுகிய முட்டைகளும், கற்களோடு வந்து விழுந்தன! அந்தப் பெண், உடலில் பட்ட காயத்தை விட,  உள்ளத்தில் பட்ட அவமானத்தை நினைத்து, ஓட்டமும் நடையுமாகப் பள்ளிக்கூடம் போய்ச் சேர்ந்தார்! தனக்கு நேர்ந்ததைக் கணவரிடம் சொல்லி அழுதார். அந்தக் கணவரோ, ‘இனி நீ போகும்போது பழைய சேலையை உடுத்திக் கொள், பள்ளியில் உடுத்திக் கொள்ள மாற்றுச் சேலையை  எடுத்துக் கொண்டு போ!என்று அமைதியாகச் சொன்னார்!

அவர்தான், இந்தியாவின் முதல் பெண்ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே!  அவரது இளம் கணவர், ஜோதிராவ் பூலே! இவர்களுக்குக் குழந்தை இல்லை! ஆனால், இப்போது அவர்களுக்குத்தான் எத்தனை கோடிக் குழந்தைகள்?!

ராட்டிய மாநிலம் சதாரா மாவட்டம், நைகான் கிராமத்தில் 1831, ஜனவரி-3ஆம் தேதி, பிறந்தவர் சாவித்திரிபாய்.  லட்சுமி, கண்டோஜி பாட்டீலின் மூத்த மகள், 9வயது சாவித்திரிக்கு, 13வயது ஜோதிராவ் பூலேயுடன் திருமணம் நடந்தது! ஜோதிராவ், தன்மனைவிக்குக் கல்வி தந்து, ஆசிரியப் பயிற்சியும் பெறச் செய்தார்.

சமூகப் போராட்டத்தில் ஈடுபட்டதால், உறவினர்களால் வெளியேற்றப் பட்ட பூலே இணையருக்கு, இஸ்லாமிய உறவுகள் கிடைத்தன! நண்பர் உஸ்மான் அடைக்கலம் தந்தார். அவரது சகோதரி பாத்திமா, ‘முதல் இஸ்லாமியப் பெண் ஆசிரியராக’  இவர்களோடு கல்விப் பணியில் இணைந்தார்! 

பெண் கல்விக்கான போராட்டங்கள்:   

தையல்,ஓவியம் முதலான  கைத்தொழில்களையும்  கல்வியோடு கற்பித்து பெண்களிடம் தன்னம்பிக்கையை வளர்த்தனர். 1848இல் வெறும் 9மாணவியரோடு தொடங்கிய பள்ளியில், 1854இல் 200 மாணவியர் சேர்ந்தனர்! பெண்கள் பள்ளிகள் பலவற்றை, பல பாடுபட்டுத் தொடங்கினர். நிதி உள்ளிட்ட தொல்லைகளை  எதிர்கொண்டும் தொடர்ந்து நடத்தினர்.

1852-இல் 'மகிளா சேவா மண்டல்' அமைப்பைத் நிறுவினர். 1855-இல் பிராமண விதவைகள், பெண்கள் குழந்தைகள் காப்பகம்,  விவசாயிகள் தொழிலாளர்க்கு இரவுப் பள்ளி தொடங்கினர்.  வெளியூர் மாணவிகளுக்குத் தங்கும் விடுதிகளை அமைத்தனர்.

இதனால், `இந்தியாவின் நவீன கல்வி - பெண் கல்வியின் அன்னை' என்று போற்றப்பட்டார் சாவித்திரி பாய்!  கைவிடப்பட்ட பெண்களுக்கான இல்லம்தொடங்கினர். குழந்தைக் கைம்பெண்கள்’, வாழ்க்கையோடு போராட ஒரே வழி கல்விதான் என்பதைப் புரிந்திருந்த பூலே இணையர். தம் வாழ்வைப் பெண் கல்விக்கே ஒப்படைத்தனர்.

சமூக நீதிப் போராட்டங்கள்:

கைம்பெண்களின் முடியை மழித்துவிடும் கொடிய வழக்கம் கண்டு வருந்தி, முடிவெட்டுவோரிடம் பேசி, ‘விதவைகளுக்கு மொட்டையடிக்க மாட்டோம்என்று அவர்களையே உறுதியெடுக்க வைத்தனர்! 1863- சிசுக் கொலை தடுப்பியக்கம் தொடங்கினர். 1873-ல் 'சத்ய ஜோதக் சமாஜ்' இயக்கத்தைத் தொடங்கி, புரோகிதம் இன்றி, திருமணங்கள் நடத்தப்பட்டன! இதில், ‘சமத்துவர் யாரும் உறுப்பினராகலாம்’  

1876- கொடிய பஞ்சத்தில். ஏழைகள் பலர் மாண்டது கண்டு, ஊர் ஊராக நிதி திரட்டி 52 இடங்களில் உறைவிடங்களும், உணவுக் கூடங்களும் அமைத்தனர்.

1890- பம்பாய்ப் பகுதியில் பிளேக்நோய் பரவியது. கொத்துக் கொத்தாகப் பலரும் பலியான போது, ஆங்கில அரசு ஆணையிட்டும், ‘ஒடுக்கப்பட்டவர்ளுக்கு' மருத்துவம் பார்க்க மறுத்தனர் மருத்துவர்கள்! அப்போது, தம் வளர்ப்பு மகனும் மருத்துவருமான யஸ்வந்தராவுடன் இணைந்து, மருத்துவம் பார்க்கத் தொடங்கினர் பூலே இணையர்! நோய் பாதித்த ஒரு சிறுவனத் தோளில் சுமந்து வந்து மருத்துவம் பார்த்த ஜோதிராவை, பிளேக் நோய் விழுங்கி விட்டது! இறுதிவரை இணைந்தே போராடி வாழ்ந்த தம் கணவருக்கு, சாவித்திரியே இறுதிச் சடங்குகள் செய்தார்!  'சத்ய ஜோதக் சமாஜ்' அமைப்பை, கணவர் மறைந்த பிறகும் - இறுதிவரை மனம் தளராமல் - தொடர்ந்து நடத்தினார்  சாவித்திரிபாய் பூலே!

களப்போராளியின் நினைவுகளோடு...  

    சாவித்திரிபாய் பூலே நல்ல கவிஞரும் கூட! மராட்டிய மொழியில் நவீன கவிதை  மரபைத் தொடங்கி வைத்தவர் அவரே! காவ்யா பூலே’, ‘பவன் காஷி சுபோத் ரத்னாகர்ஆகிய கவிதை நூல்கள் பின்னாளில் வெளிவந்தன.  “புறப்படு, கற்றிடுஎன்ற கவிதை, பெண்கள் - ஒடுக்கப்பட்ட  மக்களுக்கான  கல்வியின் வலிமையை ஓங்கி ஒலித்தது.  

1852-ஆங்கில அரசு சிறந்த ஆசிரியர் விருதுதந்தது. 1998, சாவித்திரி பாய் நினைவு நூற்றாண்டில் - பெண்கல்வியைத் தொடங்கிய பொன்விழா ஆண்டில் - இந்திய அரசு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டுப் பெருமை கொண்டது. 

2015-பூனே பல்கலைக்கழகம், இவரது பெயரைச் சூடி மகிழ்ந்தது.

       2017-கூகுள் நிறுவனம், ‘டூடுள்அமைத்துப் பெருமைப் படுத்தியது! 


இவ்வாறாக, பெண்கல்வி, சமூக சீர்திருத்தப் பணிகளில் இந்தியப் பெண்களின் எழுச்சி முகமாகத் திகழும் சாவித்திரி பாய் பூலே பிறந்த ஜனவரி 3ஆம் தேதியை, ‘பெண் ஆசிரியர் தினம்என்று அறிவித்துக் கொண்டாடுவதே கல்வி, பொதுவாழ்வில் பெண்களை ஈர்க்கும் அறிவிப்பாக இருக்கும். 

இப்போது, முனைவர் பட்ட -- பி.எச்.டி --  ஆய்வு செய்கின்ற பெண்களின் எண்ணிக்கையில், இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுத் திகழும் தமிழ்நாட்டில், இதற்கு அரசாணை வெளியிடுவது, உரிமையும் பெருமையுமான செயலாக இருக்கும். 

ஜனவரி 03, சாவித்திரிபாய் பூலே 195ஆவது பிறந்தநாள்

--------------------------------------------------

இக்கட்டுரையை  

இன்று  02-01-2026-வெள்ளிக் கிழமையே வெளியிட்ட

'இந்து தமிழ் திசை' ஆசிரியர் குழுவினர்க்கு

எனது நெஞ்சார்ந்த நன்றி, நன்றி, நன்றி.

(02-01-2026 மாலை 6மணிக்கு வலையேற்றப் பட்டது)

------------------------------------- 

கவிஞர் சிற்பி-90, நூறாண்டு வாழ்க! இந்து தமிழ் நாளிதழுக்கு நன்றி!

கவிஞர் சிற்பி - 90, நூறாண்டு வாழ்க!

--நா.முத்துநிலவன்--

தமிழில் 60ஆண்டாகப் படைப்புலகில் இருப்போர் ஓரிருவரே!

இரண்டு சாகித்திய விருதுகள் பெற்றோர் ஓரிருவரே!

படைப்புகளுக்காக பத்மஸ்ரீ விருது பெற்றோர் ஓரிருவரே!

அகாதெமி ஒருங்கிணைப்பாளரான தமிழாசிரியர் ஓரிருவரே!

புதிய சிந்தனைகளைப் படைக்கும் தமிழாசிரியர் வெகுசிலரே!

இதழ்ஆசிரியர் குழுவில் உள்ள படைப்பாளிகள் வெகுசிலரே!

தொண்ணூறு வயதிலும் தொடர்ந்து எழுதுவோர் வெகுசிலரே!

மரபுக் கவிதையோடு, புதுக்கவிதையும் எழுதுவோர் வெகுசிலரே!

கவிஉலகைப் புரட்டிப் போட்ட, ‘வாழும்  வானம்பாடி ஓரிருவரே!

----இவை அனைத்திலும் உள்ள 

பெருமைக்குரியவர் நம் சிற்பி ஒருவரே!

இலக்கிய அமைப்புகளோடு நட்பு பாராட்டி, அமைப்புக் கடந்த படைப்பாளிகளையும் ஊக்குவித்து வருவதே சிற்பி அவர்களின் சிறப்பு!  

1960கள் வரை, பழந்தமிழைப் பற்றியே எழுதி, வந்த தமிழ்க் கவிதை உலகில், உலகப் பார்வையோடு உள்ளூர் நடப்புகளையும், பாரதி சொல்வது போல, ‘எளிய பதம் எளிய சொற்களில் எழுதி, புதுமை வானில் சிறகடித்து வந்த வானம்பாடிகள் எனும் கவிஞர் குழு, புதிய சிந்தனை, புதிய வடிவில் தமிழுக்குப் புதிய ரத்தம் பாய்ச்சியது. அதில் முதன்மையானவர் சிற்பி! 1960களின் இறுதியில் வானம்பாடி - சிற்றிதழ்களைப் படித்த இளைஞர்கள் புதிதாய்ப் பிறந்தனர்!

கற்பனைக்குள்ளும் காமத்தினுள்ளும், பிற்போக்குத் தனத்தி னுள்ளும் புதைந்து புழுக்களாக நெளிகின்ற நிலையில், வானம்பாடிகள் தமது சமூக நோக்கில் பாரதி, பாரதிதாசனின் தற்கால வாரிசுகள் என்று வானம்பாடிகள் குழுவின் தொகுப்பாக வந்த வெளிச்சங்கள்’ (1973) நூலின் முன்னுரையில் காலஞ்சென்ற கவிஞர் ஞானி சரியாக மதிப்பிட்டு எழுதினார். இந்த நூலில், ‘நாங்கள்  எனும் வானம் பாடிகளுக்கான அறிமுகக் கவிதையை இப்படி எழுதினார் சிற்பி 

வானம் பாடிகள் நாங்கள்..

வசந்த மின்னல்கள் நாங்கள்!..

அந்த பாரதம் கௌரவர்களை எதிர்த்த

பஞ்ச பாண்டவர் கதை!

நாங்களோ, கௌரவங்களை எதிர்க்கும்

வர்க்கப் பாடகர்!

அன்னம்விடுதூது,  வள்ளுவம்,  கவிக்கோ,  கணையாழி,  சக்தி,        இதழ்களின் ஆசிரியர் குழுக்களில் இருந்து,  புதிய படைப்பாளிகளை எழுதவைத்தார். 

ஞானி, புவியரசு, தமிழ்நாடன், ஈரோடு தமிழன்பன், மீரா, தமிழவன், இன்குலாப், பாலா பொலும் 'வானம்பாடிகள்' இயக்கக் கவிஞர்களோடும், புதியவர்களோடும் இணைந்து செயல்பட்டார்!

2023-இல் எனது தமிழ் இனிது” தொடர், இந்து தமிழ் நாளிதழில் தொடங்கிய  வாரத்தில், என்னைப் பாராட்டி, ஊக்கப் படுத்திய தமிழ்கூறும் நல்லுலகின், முதல் அலைபேசிக் குரல் கவிஞர் சிற்பி உடையது!

90களை நெருங்கிய வயதிலும், அந்த மாமனிதர், 15நாளில், இந்து தமிழ் நாளிதழில் செவ்வாய் தோறும் ஒரு கட்டுரை என வெளிவந்த 50கட்டுரைகளையும் வரிவிடாமல் படித்து, மிகச் சிறந்த ஆறுபக்க முன்னுரை எழுதி அனுப்பிய அவரது பண்பில் ஒரு பாடமும் நான் கற்றுக் கொண்டேன். அது,  ஒரு முன்னுரை மட்டுமல்ல, பெரும் படைப்பாளி,  தனது அடுத்த தலைமுறைப் படைப்பாளிக்குக் கற்றுத் தரும் பாடம்.

காலை மணி 7. அந்த நேரத்தில் அவருக்கு அது தொந்தரவாக இருக்குமோ?’ என்ற தயக்கத்துடன் நான் போனால், குளித்து முடித்து, தனக்கே உரிய சந்தன வண்ண மேல்சட்டை, தும்பைப் பூவெனும் வெள்ளை வேட்டியில் நேர்த்தியான வடிவோடு இந்த 69ஐ வரவேற்றது அந்த 89!  

நான் மரபின் பிள்ளைபுதுமையின் தோழன்என்களம் - என்மண்என் பாத்திரங்கள் - என் மனிதர்கள் என் பின்புலம் - தமிழ்இலக்கியம்மற்றவையும் மற்றவர்களும் எனக்கு விருந்தினர் மட்டுமே! (1996-’இறகு’) என்று பிரகடனமாகச் சொன்ன சிற்பிஇன்று வரை அந்தத் தடத்திலேயே பயணம் செய்கிறார்

சிற்பிமண்ணில் நின்று நிலவைப் பாடும் மரபுக் கவிஞராகவும் நிலவில் ஏறி நின்று மண்ணைப் பாடும் புதுக்கவிஞராகவும் இருக்கிறார் என்பது மிகச் சரியான மதிப்பீடு. என் போல, கவிச்சிற்பிகளைச் செதுக்கிய தலைமைச்சிற்பி அவர்!

சிற்பியின் ‘சர்ப்பயாகம்’ நூலில் உள்ள  ‘சிகரங்கள் பொடியாகும்’ கவிதைசாதிக் கொடுமைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் ஒடுக்கப்பட்ட மக்களின் போர்முரசு!    

இது,    ஏற்கெனவே  வானம்பாடிகள் இதழில் வந்து,   வெளிச்சங்கள் தொகுப்பில் இடம் பெற்றதுதான். 

அது முதலில் வெளிவந்தபோது, புதுக்கவிதை வடிவில் வந்த முதல் தலித்தியக் கவிதையாகப் பேசப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான -புதுக்கவிதையின் முதல் போர்க்குரலாய் ஒலித்த வானம்பாடிகளின் சிகரக் கவிதைகளில் ஒன்று சிற்பி அவர்களின் சிகரங்கள் பொடியாகும்

என்னதான் பண்ணையார் குடும்பத்தில் பிறந்து,  வசதியில்  புரண்டு வளர்ந்திருந்தாலும்மேல்தட்டு வாழ்வியலில் திளைத்திருந்தாலும்என்குரல் மனிதக் கட்டுகளை உடைத்து, ‘குரலற்றவனின் குரலாய் ஒலிக்க வேண்டும் என்று நினைத்தேன்” என்று சிற்பி அவர்களே (விகடன்-03ஜனவரி2021)   சொல்வது, ஒரு வகையில் அம்பேத்கர் அவர்களின் மூக் நாயக் தானே?

தமிழ் இலக்கிய வரலாற்றில் சிற்பியின் ‘மெளன மயக்கங்கள்’ புதுக்கவிதை வடிவில் வெளிவந்த முதல் (1982) கதைக் கவிதை (Fiction Poetry) என்ற சிறப்பைப் பெறுகிறது.

கவிஞர் சிற்பியின் முதல் கவிதைத் தொகுப்பு, ‘நிலவுப்பூ’ 1963-இல் வெளிவந்ததுஏறத்தாழ ஐம்பது ஆண்டுக்கும் மேலாக, ஒரு சிறிதும் இடைவெளி விடாமல் கவிதை’ என்கிற ‘பிசாசோடு’ கூடிக் குலாவி வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே மிகப்பெரிய சாதனைதான்”- என்கிறார் இலக்கிய விமர்சகர் புதுச்சேரி க.பஞ்சாங்கம் அவர்கள். தற்போது இந்த ஆண்டுக் கணக்கு, அறுபத்திரண்டைத் தாண்டுவது ஒரு பெரும் சாதனை தானே?!

கால முட்டையின்

ஓடு பிளக்கிறேன்,

குஞ்சாய் நானே

குதித்து வருகிறேன்  எனும் அருமையான கற்பனையும் அழகான சொற்புனைவுமே சிற்பி கவிதைகளின் அடையாளம்.

மரபும் புதுமையும் கலந்த உரையாடல் தன்மையுடன் கூடிய மொழிநடையாக, தமது முத்திரையாக அடையாளம் கண்ட சிற்பி”- என்று கலைவிமர்சகர் இந்திரன் சொல்வதை நாம் அப்படியே ஏற்கலாம்!

கவிதை, கதை, நாடகம், சிறார் இலக்கியம், கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், மொழிபெயர்ப்புகள், நல்ல நூல்கள் பதிப்புகள், என இவர் இயங்கிய தளங்கள் தமிழுக்கு வளம் சேர்த்தன. இவரது தமிழ் இலக்கிய வரலாறு (2010) நூல் இலக்கிய ஆர்வலர்களுக்கு மட்டுமின்றி தேர்வாணையத் தேர்வுகளை எழுதுவோர்க்கும் வழிகாட்டி நூலாக அமைந்தது.

90வயதுக்குள் படைப்பும் தொகுப்புமாக இவர் தந்த படைப்புகள் ஏறத்தாழ 90என்பது வியப்பானது மட்டுமல்லஇளைய படைப்பாளிகளுக்கு எடுத்துக்காட்டும் தான்!

வையகம் காப்பவ ரேனும்  சிறு  

     வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும் என்று மலை  மடு இரண்டு எடுத்துக்காட்டுகளையும் அடுத்தடுத்து அடுக்குவான் பாரதி.     

இது பாரதியின் இயல்பே என்பதை வேறுசில பாக்களிலும் காண முடியும். சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என, அவன்கால அறிவியலின் உச்சம் தொட்டுப் பாடி, அடுத்தவரியில், அடிப்படைத் தேவையான சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம் என்பான்!  

இதுதான் பாரதி! சிற்பி பாரதி வழிவந்தவரல்லவா? நான் பாரதியன், எனக்கு அவனே குரு, அவன் எழுத்தே வேதம்,  வார்த்தை சட்டம், கவிதையே சத்தியம், அந்தப் பரவச அன்பின் வெளிப்பாடு இந்நூல்” என்று பாரதி கைதி எண்-253”- தனிக் கவிதைத் தொகுப்பே எழுதிவிட்டார் சிற்பி! மலையாள மகாகவி வள்ளத்தோளுடன் தமிழ் மகாகவி பாரதியை ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்து முனைவர் (பிஎச்.டி) பட்டம் பெற்றார்.

இதே போலத்தான் மகாத்மா”(2006) என ஒரு கவிதைத் தொகுப்பே எழுதிய சிற்பி, சாதாரண சித்தாள் பற்றியும் ஒரு கவிதை எழுதியிருக்கிறார் என்பது, அவரது கவிமனம் எங்கே நிலைத்து நிற்கிறது என்பதைக் காட்டும்.

கவிதை முழுவதும், மிக எளிய சிந்து வகையில்! இதோ அதில் சில கண்ணிகள்-  

இழுத்துக் கட்டிய முக்காட்டின் மேல்
     
தெருப் புழுதியின் பூச்சு - கொஞ்சம்
இங்கும் அங்கும் பார்த்து நின்றால்
     
கொத்த னாரின் ஏச்சு !
 
துணுக்குத் தங்கத்தை இணுக்கி வைத்த
     
தோட்டில் வறுமை சிரிக்கும் - அவள்
முணுமுணுத்திடும் தெம்மாங்கு இசைக்கு
     
முத்தமிழ் முந்தி விரிக்கும்

இழைத்த கறுப்பில் குழைத்த மேனி
     
லெட்சுமி சிற்றாள் கூலி - அவள்
உழைக்கும் கரத்தைப் பற்றிடும் காளை
     
உண்மையில் புண்ணிய சாலி  

---------(சிரித்த முத்துகள் - சிற்பி)                         

இந்தக் கவிதை மனம்தான் சிற்பி அவர்களின் சிறப்பு!

      கவிதைத் தொகுப்புகளை ஏராளமாக வெளியிட்டோர் தமிழில் பலருண்டு! ஆனால், “யாருக்காக எழுதுகிறோம்? அதை எந்த வடிவில் எழுதுவது?” எனும் தீர்க்கமான பார்வையோடு சிற்பி அவர்கள் எழுதுவதை, இளைய கவிஞர்கள் கவனித்துக் கற்றுக் கொள்ள வேண்டும்!

      தமிழால் பாரதி தகுதி பெற்றதும்,

       தமிழ்பாரதியால் தகுதி பெற்றதும்  

இவை - பாரதி பற்றிய பாரதிதாசனின் வரிகள்,  

அப்படியே சிற்பிக்கும் பொருந்தும்.              

சிற்பி அவர்களின் 90ஆவது பிறந்தநாள் இன்று!

நூறாண்டு கடந்தும் அவர்கள் வாழ வேண்டும்.

தமிழுக்கு இன்னும் நூறு படைப்புகளை அவர்கள் தருவதோடு, இன்னும் ஆயிரம் சிற்பக் கவிஞர்களை அவர்கள் செதுக்கித் தரவும் சிறப்பாக வாழ வேண்டும் என வாழ்த்துவோம்.

----------------------------------

(இன்று -29-7-2025-கவிஞர் சிற்பியின் 90ஆவது பிறந்தநாள்)

---------------------------------- 

இந்தக் கட்டுரையை இடம் கருதிச் சுருக்கி, --27-7-2025 நேற்றுமுன்தினமே-- வெளியிட்டு, சிற்பி அவர்களுக்கு உரிய பெருமையைத் தந்த இந்து தமிழ் நாளிதழின் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றியும் வணக்கமும்.

(நன்றி - இந்து தமிழ் நாளிதழ் - 27-7-2025 )

------------------------------------