முத்துநிலவன் பேச்சு


ஆசிரியருக்கும், பெற்றோருக்குமான கடமை எழுத்தாளருக்கும் உண்டு

புதுக்கோட்டை, ஆக. 16: ஆசிரியர், பெற்றோர் ஆகிய இருவர்களுக்குமான கடமை எழுத்தாளருக்கும் உண்டு என்றார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் நா. முத்துநிலவன்.
புதுக்கோட்டையில் அந்தச் சங்கம் சார்பில் அண்மையில் நடைபெற்ற 10-வது மாவட்ட மாநாட்டைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:
மாணவர்களின் எதிர்காலத்தை மதிப்பெண்களே தீர்மானிப்பதாக கல்வி நிறுவனங்கள் கருதுவதால்தான், பாடப் புத்தகத்தையே கதியாகக் கொண்டுள்ள அவர்களிடம் கலை, கலாசாரப் பண்புகள் காணாமல்போய்விட்டன. இதனால், சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளைக்கூட மாணவர்களால் அறிந்து கொள்ள முடியாமல், சமுதாயத்திலிருந்து விலகிவிடுகின்றனர்.
கலை, இலக்கியமற்ற கல்வி உருத்தேறாது. ஆகையால், பொதுப் பாடத் திட்டத்தைக் கொண்டுள்ள சமச்சீர் கல்வி இதைத் தடுத்து நிறுத்தும்.
உயர் கல்வியை அரசு அனைவருக்கும் இலவசமாக அளிக்க வேண்டும்.
கலையில்கூட மக்கள் இழிவான பார்வை கொள்கிறார்கள். ஆனால், அதையும் கடந்து அனைவரது திறமைகளையும் தமுஎகச அங்கீகரிக்கிறது என்றார் முத்துநிலவன். மாநாட்டுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கா. பிரகதீஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ரமா. ராமநாதன் முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளாளர் சு. மதியழகன் அறிக்கை வாசித்தார். மாநிலத் துணைச் செயலர் மதுக்கூர் ராமலிங்கம் தொடக்கவுரையாற்றினார்.
கவிஞர்கள் எல். வடிவேல், ஆர். வெள்ளைச்சாமி, பொன். கருப்பையா, களக்கமங்கலம் சக்திவேல், சரவணன், சுதாகர் ஆகியோர் பாடினர்.
விழாவில் பல்வேறு பரிசுகளைப் பெற்ற கவிஞர்கள் ஜீவி, தங்கம்மூர்த்தி, அ. செல்வராசு, சு.மதியழகன், சு. பீர்முகம்மது, ராசி. பன்னீர்செல்வம், ஆர். நீலா ஆகியோர் பாராட்டப்பட்டனர்.
கவிஞர்கள் இளையமனோகரன், ஸ்டாலின், எஸ்.எ. கருப்பையா, சிவக்குமார், பூபாளம் செந்தில்குமார், தனிக்கொடி, எஸ். இளங்கோ உள்ளிட்டோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். நாகஸ்சுர நளாயினியுடன் திண்டுக்கல் மாரிமுத்துவின் கட்டைக்கால் தவில் இசைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

First Published : 17 Aug 2011 08:00:58 PM IST – DINAMANI-Trichy Edition  

முத்துநிலவன் பேச்சு!



தொழில்நுட்ப அறிவில் மனித நேயம் தேவை!
தொழில்நுட்ப மாநிலக் கருத்தரங்கில் கவிஞர் முத்துநிலவன் பேச்சு!
புதுக்கோட்டை-ஆகஸ்ட்-06
         புதுக்கோட்டை அருகில் உள்ள கல்லூரியில் நடந்த ‘மாநிலம் தழுவிய தொழில்நுட்பக் கருத்தரங்கில்’ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் கவிஞர் நா.முத்து நிலவன், ‘தொழில் நுட்ப அறிவோடு மனித நேயம் கலந்து வரும்போதுதான் சமுதாய முன்னேற்றம் சாத்தியமாகும்’ என்று குறிப்பிட்டார்.
           மாநிலத் தொழில் நுட்பக் கருத்தரங்கு:
         புதுக்கோட்டை அருகில் உள்ள கைக்குறிச்சி; வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு முழுவதும்உள்ள தொழில்நுட்பக்கல்லூரிகள் பங்கேற்ற ‘மாநிலத்தொழில்நுட்பக் கருத்தாய்வு-2011’ எனும் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரித் தாளாளர் ஆர்.எம்.வீ.கதிரேசன் தலைமை தாங்கினார். தாளாளர்கள் பி.கருப்பையா, ஆர்.ஏ.குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
           விழா மலர் வெளியீடு: கருத்தரங்கில், கோவை, மதுரை, திருச்சி, சேலம், மேல்மருவத்தூர், ராஜபாளையம், விருதுநகர், சிவகாசி, கும்பகோணம், திருச்செங்கோடு, பட்டுக்கோட்டை, பெருந்துறை, குடியாத்தம், காரைக்குடி, உள்ளிட்ட 44 தொழில்நுட்பக் கல்லூரிகளிலிருந்து தலா இரண்டிரண்டு மாணவர்களின் தேர்வு செய்யப்பட்ட  ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய விழா மலர் வெளியிடப்பட்டது.
          விழா மலரை புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியின் முதுநிலை மேலாளர் கே.கிருஷ்ணக் குமார் வெளியிட கவிஞர் நா.முத்து நிலவன் முதல் மலரைப் பெற்றுக்கொண்டு மேலும் பேசியதாவது:
          ‘அறிவியல் தொழில் நுட்பம் வளர வளரத்தான் மனித சமுதாயம் மென்மேலும் முன்னேறும். கடந்த தலைமுறையை விடவும் இந்தத் தலைமுறை இளைஞர்கள் தொழில் நுட்ப அறிவில் மிகவும் ஆர்வம் காட்டிவருவதால் உலகம் முழுவதும் செல்லக்கூடிய வாய்ப்பையும் பெற்றிருக்கிறார்கள். ஒருகாலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து நிலத்தில் கிடந்த தமிழர்கள் இப்போது உலகின் ஐந்து கண்டங்களுக்கும் செல்வது தொழில் நுட்ப அறிவினால்தான். உலகின் முதல்தரப் பணக்காரராகப் பத்தாண்டுகளுக்குமேல் இருந்த பில்கேட்ஸின் முந்நூறுக்கும் மேற்பட்ட நாடுகளின் தொழிலகங்களில் முக்கியப் பொறுப்பில் இருப்பது இந்திய இளைஞர்கள்- அதிலும் குறிப்பாகத் தமிழ் இளைஞர்கள்- என்று எழுத்தாளர் சுஜாதா எழுதியது உண்மை!
            ஆனால், உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்ளின் அவர்களின் சிறந்த மௌனப் படமான ‘மாடர்ன் டைம்ஸ்’ படத்தில், வருவதுபோல மனிதன் ‘எந்திரங்களோடு பழகிப் பழகி, மனிதத் தன்மையை இழந்து தானும் ஒரு எந்திரமாகி வருவது’ சாப்ளின் காலத்தை விடவும் இப்போது அதிகரித்துவிட்டது.
            நூறாண்டுகளுக்கும் முன்னர், புகை வண்டி கண்டுபிடிக்கப்பட்டு இங்கிலாந்தில் முதன் முதலாகப் பயணத்திற்கு விடப்பட்ட சிறிது நாளில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினர் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார். அதாவது, ‘‘புதிதாக வந்திருக்கும் புகைவண்டி எனும் போக்குவரத்து எந்திரமானது பயங்கரமான ஓசை, மற்றும் புகையுடன் ஒரு பிசாசைப்போல ஓடிவருவதைப் பார்க்கும் ஆடு-மாடுகள் அஞ்சி நடுங்குகின்றன. மனிதர்களும் கூட அதிர்ச்சி அடைகிறார்கள். எனவே நமது பார்லிமெண்டானது புகைவண்டியின் வேகத்தை மணிக்கு 10கி.மீ வேகம் என்பதை 8கி.மீ. ஆகக் குறைக்க வேண்டும்!’’ பாருங்கள்! மணிக்குப் பத்து கி.மீ. வேகத்திற்கே அதிர்ச்சி அடைந்த காலம் போய் இப்போது மின்னல்வேக விமானங்களும் மணிக்கு ஆயிரக்கணக்கான கி.மீ. பாயும் ஏவுகணைகளும் வந்தது எப்படி? தொழில்நுட்ப வளர்ச்சிதான்! பாய்ச்சல் வேகத்தில் வளர்கிறோம் நாம்!
              ஆனால், ‘அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட் பண்பில்லா தவர்’ எனும் குறளுக்கு ஏற்ப தொழில் நுட்ப அறிவோடு மனிதநேயப் பண்பையும் வளர்க்காவிட்டால் அறிவியல் அழிவிற்கே நம்மை இட்டுச் செல்லும் ஆபத்தைத் தவிர்க்க முடியாது.
              கணினி விசைப்பலகை, கணிப்பான், மற்றும் கைபேசி, தொலைபேசி அனைத்தும் அறிவியல் கண்டுபிடிப்பே என்றாலும் இவை அனைத்திலும் 5 எனும் எழுத்தருகில் அல்லது இவ்வெழுத்துகளின் நடு மையத்தில் உள்ள விசைப் பொத்தானில் இரண்டு பக்கமும் இரண்டு புள்ளி அல்லது கோடு இருப்பதைப் பார்த்திருக்கலாம். அது கண்தெரியாதவர்களும் இந்தக் கருவிகளைப் பயன்படுத்தும் ஓர் உயரிய நல்ல நோக்கத்துடன் உலகம் முழுவதும் இவ்வாறே இக்கருவிகளின் புழக்கம் உள்ளது!
இதுபோலத்தான், அறிவியல் தொழில் நுட்பம் உலகப் பார்வையோடு, மனிதகுலம் முழுவதும் பயன்படுத்தும்படியானதாக உயர வேண்டும். அதுதான் மனித நேய வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும்”
             மேற்கண்டவாறு கவிஞர் நா.முத்து நிலவன் பேசினார். கருத்தரங்கில் புதுக்கோட்டையைச் சுற்றிலும் உள்ள தொழில் நுட்பக் கல்லூரிகள் பலவற்றின் முதல்வர், பேராசிரியர்களுடன் 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியரும் கலந்து கொண்டனர்.  முன்னதாகக் கல்லூரி முதல்வர் ஏ.வெங்கடேஷ் வரவேற்புரையாற்ற, துணை முதல்வர் எஸ்.கலியபெருமாள் நன்றி கூறினார்.
                             -----------------------------------------------
சற்றே சிலபல வரிகள் மாற்றங்களுடனும், சிலவற்றைச் சுருக்கியும் வெளியிட்டிருந்த நாளிதழ்களுக்கு நன்றி: தினமணி, தினமலர் தீக்கதிர் -06-8-2011
                             ---------------------------------------------


‘நல்லாசிரியர்’ விருது

தினமணியில் வெளிவந்த எனது கட்டுரை - நா.மு.

விண்ணப்பித்து 
வாங்குவதா விருது? (தினமணி-02-8-2011)
                       
தமிழக அரசு தரும்  நல்லாசிரியர்’ விருது ஒவ்வோராண்டும் செப்டம்பர்-5ஆம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவரது பெயராலேயே வழங்கப்படுகிறது. இந்த விருது மட்டுமன்றி, ‘கலைமாமணி’; விருது பற்றிய செய்திகளும் வரும்போதெல்லாம் அட இவருக்கா இந்த விருது?’ எனச் சிலர் பெயர்களைப் பார்த்து ஆச்சரியப் படுவதும்சில பெயர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைவதும் தொடர்கதையாகிவிட்டது! இதனால்இவ்விருதுகள் வரவர கேலிக்கூத்தாகிவிருது பெற்றவர்க்கும்,-ஏன்விருதுக்குமே கூட- மரியாதையற்ற நிலை உருவாகி வருகிறது! அரசுகள் மாறலாம்கட்சி-அரசியல் மாறலாம்ஆனால் மரபுசார்ந்த சிலமாண்புகளைக் காப்பாற்றும் பொறுப்பு நம் அனைவருக்குமே உண்டு.
                       சொல்லப்போனால்திரைக் கலைஞர்க்கும் ஆசிரியர்க்கும் அரசு விருது தருவதுபோலஎடுத்துக்காட்டான உழவர்களுக்;கும்,பொதுநோக்கில் சேவைபுரியும் அரசு ஊழியர்-மருத்துவர்க்கும்,புதுமைசெய்யும் இளைஞர்க்கும்நல்லவற்றைத் தரும் இதழ் மற்றும் செய்தியாளர்க்கும் நமது அரசு விருது வழங்கி கௌரவம் செய்தால் பல துறைகளிலும் உற்சாக ஊற்றுக் கிளம்பாதா என்ன
                       அரசியல்கடந்துமக்களால் மதிக்கப்படும் சான்றோர்புனிதமான பணிகளில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டோர் ஆகிய பெருமக்களைஅரசு தானே முயன்று தகவல் சேகரித்து,தகுதியானவரை அடையாளம்கண்டுஅழைத்துப்பாராட்டிவிருதுபெறும் அவரது தகுதிகளை அனைவரும் அறியச்சொல்லிஅவரது பணிதொடர வாழ்த்தி பின்னர் விருது தந்து அனுப்ப வேண்டும்.
                          ஆனால் இன்றுள்ள நிலை? ‘நல்லாசிரியரோ, ‘கலைமாமணியோ அவரே தனது தகுதிகளை எடுத்து விளம்பி --அவற்றுக்கான சான்றுகளையும் இணைத்து-- விண்ணப்பித்த பிறகு, ‘சிபாரிசுகளின் அடிப்படையில் தேர்வுசெய்துநூற்றுக் கணக்கானோரை வரிசையாக வரச்சொல்லி இலவச விநியோகம் போல விருது’ கொடுத்து அனுப்புவதில் என்ன கௌரவம் இருக்கிறதுஇதன் பலன்தான் என்ன?
             கடந்த ஆண்டு தமிழே தெரியாத தமன்னாவுக்கும்ஸ்ரேயாவுக்கும் தமிழ்நாடு அரசு கலைமாமணி’ விருது தந்தது நகைப்புக்கு இடமானது. கலைக்கு மொழிகிடையாது எனும் பொத்தாம் பொதுவான விளக்கம் போதாது. மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதுதான் தகுதி’ என்றால்,சர்க்கஸ் கோமாளிகளுக்குக் கொடுப்பதுதான் சரியானது! அவர்கள்படும் பாட்டுக்கு அங்கீகாரமாவது கிடைக்கும்!
           சிலர்-பலரின் சிபாரிசுகளால்தகுதியற்றவர்க்கும் வாரிவழங்கப்படும் விருதுகளால்சான்றோர் பலரும் விருதுகளைப் பார்த்து எள்ளி நகைப்பதும் சற்றே தள்ளி நடப்பதும் நடக்கும் தானே
முதலில் ஒரு கேள்வி: எனக்குக் கடன் வேண்டும்உரியமுறையில் திரும்பக் கட்டிவிடுவேன்“ என்று ஆசிரியர் அரசிடம் விண்ணப்பம் செய்யலாம், “எனக்குப் பணிஇடமாறுதல் வேண்டும் இந்தஇடம் கிடைத்தால் நல்லது” என்று அரசிடம் விண்ணப்பிக்கலாம். இவற்றை விட்டு, ‘எனக்கு விருது கொடுங்கள்’ என்று சுயமரியாதை உள்ள யாரும் விண்ணப்பம்’ போடுவார்களா என்னஏன் இது நமது அரசுகளுக்குப் புரிவதில்லை?
இப்போதுஇந்த விருதுகளைப் பெற விண்ணப்பம் போடும் பலரும்,அதை எப்படியாவது வாங்கிவிடச் செய்யும் செலவு-உள்ளிட்ட செயல்கள்’ விருதுகளே வெட்கப்படும்படியல்லவா உள்ளன?
          அப்படியானால், “இதுவரை விருதுபெற்ற யாருக்கும் சுயமரியாதை கிடையாதா?” என்றுகேள்வியைத் திருப்பினால்அப்படி எல்லாரையும் சொல்லிவிட முடியாது. பெரும்பாலோர் அப்படி இருந்தாலும்,சுயமரியாரை உள்ள சிலர்தம் மீது அன்பு கொண்டவர்களின் தொந்தரவு தாங்காமல்கையெழுத்தைப் போட்டுக் கொடுத்துவிட்டு விருதுவாங்க மட்டுமே மேடைக்கு வந்ததும் உண்டு! இப்படியான விருதை அவர்கள் பெரிதுபடுத்தாமல் நண்பர்களின் மகிழ்ச்சிக்காக ஏற்றுக் கொள்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. அப்படியானவர்களைச் சந்திக்கும்போது --விருதாளர்களைத் தேர்வுசெய்யும் முறை மற்றும் விருதுவழங்கும்-- முறை சரியல்ல என்றே அவர்களும் மனம் கசந்து சொல்கிறார்கள்.
           இலக்கியத்தில் இன்றும் எல்லாராலும் மதிக்கப்படும் -இந்தியஅரசின் கௌரவம் மிகுந்த இலக்கிய விருதான-- சாகித்திய அகாதெமிவிருதுக்கான தேர்வுக் குழுவில் நான் சில முறை இருந்திருக்கிறேன். அவர்கள் பல படிகளை வைத்திருக்கிறார்கள். முதல்கட்டத் தேர்வின் போதுபத்துப்பேர்களைக் கேட்பார்கள். பரிந்துரைக்கான புத்தகங்களை அனுப்பிவைப்பதோடு, ‘இந்த நூல்கள் தவிரவும்உங்கள் பார்வையில் பட்டவிருதுக்குத் தகுதியான நூல் என்று கருதுவதை நீங்களே வாங்கிக்கொண்டுஅந்த நூலின் தகுதிகளை எங்களுக்குத் தெரிவியுங்கள் அந்த விலையை நாங்கள் தந்துவிடுவோம்’ என்றும் நடுவர்களுக்குத் தெரிவிக்கப்படும். அறிவிக்கப்படும் வரை எழுத்தாளருக்குத் தெரியாமலே இது நடக்கும்! பலகட்டத் தேர்வு செய்தோரை அவர்களுக்குத் தெரிய வழியுமில்லை!
          இதேமுறையில்தான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் என் தலைமையி லான தேர்வுக்குழு, 1997ஆம் ஆண்டின் சிறந்தநாவலாக சாய்வு நாற்காலி’ நாவலைத் தேர்வுசெய்தது. மதுரை - திருப்பரங்குன்றத்தில் பல்லாயிரம் மக்கள் கலந்துகொண்ட விழாவில் நானே என் கையால் அந்த விருதை எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் அவர்களுக்கு வழங்கியபோது விருதுபெற்றவரைப் போலவே விருது தந்தவர்களும் மகிழ்ந்தோம். ஆதன்பின்னரே சாகித்திய அகாதெமி விருதும் அதே நாவலுக்காகக் கிடைத்ததை மதிப்பிற்குரிய படைப்பாளியான அவரே கூறி மகிழ்ந்தார்!
          இதேபோல 1993இல் வெளிவந்த எனது புதிய மரபுகள்’ கவிதை நூலுக்கு அந்த ஆண்டின் சிறந்த கவிதைத்தொகுப்புக்கான விருதை வழங்கிய தமிழ்நாடு கலை-இலக்கியப் பெருமன்றம் என்னிடம் எந்தவிதமான விண்ணப்பத்தையும் கேட்கவில்லை. அவர்களாகவே அழைத்துத் தந்தார்கள்.
தனி அமைப்புகளே தகுதியானநூல்தகுதியான ஆசிரியர்தகுதியான இலக்கியவாதிமுதலான பல விருதுக்குரிய தகவல்களைத் திரட்டிவிடும்போதுநமது அரசால் திரட்ட முடியாதா என்ன?நிச்சயமாக முடியும்.. தேர்வுக்குழுவினர் கொஞ்சம் விவரமானவர்களாகவும்சிரமம் பாராத வராகவும் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவராகவும்’ இருக்கவேண்டும். அவ்வளவே! விருதுக்குத் தேர்வுசெய்யும் குழுவை முதலில் சரியாகத் தேர்வு செய்துவிட்டால் எல்லாம் சரியாக நடக்க வழியண்டு
இன்னொன்று விருதுபெறுவோரின் வயது சார்ந்தது
           ஆசிரியப் பணியில் ஓய்வுபெற ஒன்றிரண்டு ஆண்டுகளே உள்ள,அல்லது ஓய்வு பெற்றுப் பணி நீட்டிப்பில் உள்ளவர்களுக்கே பெரும்பாலும் நல்லாசிரியர்விருது என்று புகழ்பெற்றுவிட்ட மாநில அரசின் சிறந்த ஆசிரியர்க்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுவிண்ணப்பத்தின் அடிப்படையில் தரப்படுகிறது. இந்த விருதை நாற்பது வயதுக்கும் முன்னதாகத் தர முடிந்தால்அவரதுநல்லாசிரியப் பணியை’ மீதமுள்ள ஆண்டுகளில் பள்ளிக்குழந்தைகளும் பயன்பெற உதவியிருக்காதா என்ன?  நிச்சயம் அதற்கொரு பாதிப்பு அவர்களிடம் இருக்கும். இதைவிட்டு முதியோர் உதவித்தொகை’ போல விருதுகளை ஓய்வுபெறும் வயதில் தந்து வீட்டுக்கு அனுப்புவதால்அவர்வேண்டுமானால், ‘ஓய்வுபெற்ற-மற்றும்-விருதுபெற்’ என்று சாகும்வரை போட்டுக் கொள்ளலாமே தவிர,விருதுபெற்ற முதியவரால் சமுதாயத்துக்கு -பணிபுரிந்த துறைக்கு- என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது?
             பொள்ளாச்சியில் இருந்துகொண்டுகவிஞர் சிற்பிஅவர்கள்மூத்தபடைப்பாளி ஒருவருக்கும் இளைய படைப்பாளி ஒருவருக்குமாக -இரு பிரிவுகளாக- விருதுடன் கூடிய ரொக்கப்பரிசுகளை ஆண்டுதோறும் தந்து கௌரவிப்பது போல தமிழகஅரசும் கலைமாமணிநல்லாசிரியர் விருதுகளை இளையவர்க்குத் தனியாகவும்மூத்தவர்க்குத் தனியாகவும் கூட வழங்கலாமே
             சான்றோரை கௌரவிப்பது தேவை அதைவிடவும் அவரதுபணி விருதுபெற்;ற பின்னரும் சமூகத்திற்கும் பள்ளிக்குழந்தைகளுக்கும் கிடைக்குமாறு அரசு யோசிக்கவேண்டாமாஇளைஞர்க்குக் கொடுத்து,ஒருவேளை அவர் தவறு செய்துவிட்டால்...விருதுக்கு அவமரியாதையாகிவிடுமே! என்றால்இப்போது விருதுபெற்றோரில் -விருதுபெற்ற பிறகும்-- தவறுசெய்து தண்டனை பெற்றவர்களும் உண்டே! குற்றப் பட்டியலில் பெயர் இடம்பெற்ற ஒருவருக்கு மத்திய அரசுபத்மஸ்ரீ’ விருது தந்ததும் நடந்ததே!
            அதோடுஅரசு விருதுபெற்றோர் காலமாகும் போதுஅந்தந்தத் துறைசார்நத அரசு உயர் அலுவலர்கள்-- ஏன் மாவட்ட ஆட்சியரே கூட-- வந்துஅஞ்சலி செலுத்திஅரசின் சார்பாக கௌரவிப்பது,அல்லது அரசின் சார்பாக இரங்கல் செய்தி வெளியிடுவது விருதுபெற்றவரின் குடும்பத்துக்கு மட்டுமல்ல விருதுக்கே கௌரவமாக இருக்குமே! இதையும் அரசு யோசிக்கலாமே?
           பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜனைத் தொடர்ந்து எஸ்.பி.பால சுப்பிரமணியனும் பத்மஸ்ரீ விருது பெற்றுவிட்டார். சுசிலாம்மா பத்மப+ஷன் விருதே பெற்றுவிட்டார். இவர்களின் தகுதியறிந்து அந்த விருதுகளைத் தந்த மத்தியஅரசுஇவர்களுக்கு முன்னோடியான எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ஏன் இன்னும் பத்மஸ்ரீ விருதுகூடத் தரவில்லை எனும் கேள்வி எழுவது நியாயம் தானேபாவம், அவர் இந்த விருது வாங்கும்“ தொழில் நுட்பம் தெரியாதவரோ என்னவோ?
            அரசுவிழாக்களில் பாடப்படும் நீராரும் கடலுடுத்த’ எனும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு மட்டுமல்லாமல் பல்லாயிரம் திரைப்பாடல்களுக்கு இசையமைத்துத் தந்த இசைமேதை ஏம்.எஸ்.வி. போலும் எண்ணற்ற மேதைகளும்நல்ல ஆசிரியர்களும் மட்டுமல்ல,விருதுக்கத் தகுதிவாய்ந்த உழவர்களும்;, அரசு ஊழியர்-மருத்துவர்களும்எடுத்துக்காட்டான இளைஞர்களும்இதழாளர் மற்றும் செய்தியாளர்களுமாய்ப் பற்பலர் விளம்பர வெளிச்சமே இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறார்கள்விருதுகளுக்காக ஏங்கி அல்ல,விருதுகளை அலட்சியப்படுத்தி விட்டு!
           தான் தரும் விருதுகளின் கௌரவத்தைக் காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை!அரசின் கடமையை உரிமையோடு எடுத்துச்சொல்ல வேண்டியது நம் கடமை! 
-------------------------------------
நன்றி : தினமணி – நாளிதழ் - 02-8-2011  
--------------------------------- 

‘மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்’


‘மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்’–காப்புப் பருவம் : தொடர்ச்சி

பாடல் எண்: 4 சங்கப் புலவர்கள், இளங்கோவடிகள், மணிவாசகர்

நாவேந்தி இறையன்கள வியலுரையி னோடுபல
நல்லிலக் கியங்க ளெல்லாம்
நற்றனிச் செந்தமிழில் நல்கியிசை மலைநின்ற
நல்லிசைப் புலவர் கோவும்,
மூவேந்த ரோடு,முந் நகர்பாடிக் கோவலனின்
மூத்தபெருங் காவியத்தை
முன்னுகுடி மகளாய கண்ணகியின் மேற்சொன்ன
மூவிளங் கோவடிகளும்,
வாவேந்து மந்திபுரை வன்னெஞ்ச மும்உருக
வண்டமிழ்ப் பொருளை இப்பார்
வரவேற்க வைத்தபுகழ் வாதவூர் அடிகளும்
வந்துகாத்(து) அருள்புரிகவே!
சாவேந்து நிலையிலருங் காவேந்தி நம்தமிழைக்
காத்தமறை மலையடிகளின்
தேடக் கிடைக்காத தேட்டத் தனைய,தமிழ்
தேரும்அறிவார் நெஞ்சையே!
--------------------------------------------------------------------------


மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ் - காப்புப் பருவம்: தொடர்ச்சி
பாடல் எண்: 5 சுந்தரனார், நாராயணசாமியார், திருவரங்கனார்

தன்னோடு செந்தமிழும் மண்ணோடு போகாமல்
தன்பின்னும் நின்றெண்ணவே
தண்டமிழி யக்கமதை மண்டிலம தில்தோற்றத்
தந்தையென வந்தடிகளை
மண்ணூடு மொழிகளில் மற்றபோ லழியாது
மன்னுமிள மைத்தமிழென
மார்தட்டி தமிழ்ச்செடியின் தூர்கட்டி வரும் மனோண்
மணியம் சுந்தரம் பிள்ளையும்
முன்னோடி நூல்தந்து, பண்ணோடி யல்கூறி,
மூத்ததமிழ் ஆசிரியனாய்
           முகிழ்நாரா யணசாமிப் பிள்ளையெனும் செம்மலும்,
                     முன்வந்து சேருமுன்னே,
 எண்ணூறா யினபோதும் எண்ணாமலே உதவி
இறுதியில் மருகராயும்
ஏய்ந்த திரு வரங்கமாம் வள்ளலும் நாடிவந்(து)
இன்றுகாத் தருள்புரிகவே!
----------------------------------------------------------------------------

மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ் - காப்புப் பருவம் தொடர்ச்சி

பாடல் எண்: 6 உ.வே.சா., பா.வே.மா., பரிதிமாற்கலைஞர்

எண்ணிலா ஆண்டுகளில் மண்ணோடு புனலுண்ண
எஞ்சியன சிதலுண்ணு முன்,
ஏடுகளைப் பாடுபட்(டு) எடுத்துப் பதிப்பித்த
உ.வே.சா. தாத்தாவுடன்,
உண்ணிலா ஒலியணுவொ(டு) ஒவ்வாத தமிழ்ஒலியில்
உயரய்தம் அயலோட்டுமென்(று)
ஊரார்க்(கு) உரைத்த ஒலியியல் மேதையாம்
பா.வே.மாணிக்க னாரும்,
பண்ணிலாக் கூகையுடன் பாவிசைக்கும் குயிலைப்
பார்த்துமணம் சேர்ப்போரிடை
பைந்தமிழ்த் தேன்சுவையை முந்துறக் கண்டகோ
பரிதிமாற் கலைஞர் தாமும்,
தெண்ணிலா எனமாந்தர்த் தேற்றற் கெழுந்து மடந்
தீர்க்குமறை மலையடிகளின்,
தேடக் கிடைக்காத தேட்டத் தனையதமிழ்த்;
தேன்பெருக அருள்புரிகவே!
-------------------------------------------------------------------------------
பா.வே.மா: ‘தமிழ் நெடுங்கணக்கில் உள்ள முப்பது எழுத்துகளும் ஒலிகளுமே
மக்களுக்கு இயற்கையாகத் தோன்றக் கூடியவை என்றும் முப்பது தமிழ்ஒலிகளைக் கொண்டே உலகின் அனைத்து மொழிகளின் ஒலிகளையும் ஒலிக்கலாம் என்றும் பா.வே.மாணிக்க நாயக்கர் அவர்கள் நுட்பமாக ஆய்வு செய்து விளக்கியுள்ளார்’ என --மறைமலையார் கூறுகிறார் (உரைமணிக்கோவை-பக்:67-‘தனித்தமிழும் கலப்புத் தமிழும்’)

பரிதிமாற்கலைஞர்: ‘வடமொழியின் தாக்குதலிலிருந்து, தமிழைக் காக்கும் பணியில் மறைமலையடிகளுக்கு முன்னோடி பரிதிமாற்கலைஞர். சாதி உணர்வுக்கு ஆட்படாத எவரும் இந்தச் சரித்திர உண்மையை மறைக்கவோ மறுக்கவோ இயலாது’ என்பவர் ம.பொ.சி. (நூல்: ‘தமிழும் கலப்படமும்’-இன்பநிலையம் வெளியீடு – பக்:23)
-----------------------------------------------------------------------------

சமச்சீர்க் கல்வி


வாராது போல்வந்த மாமணியைத் தோற்போமோ?’
-- நா.முத்து நிலவன் --
மிழ்நாட்டுப் பள்ளிகளில் சற்றேறக்குறைய ஒன்றரைக் கோடி மாணவர்கள் படிக்கிறார்கள்.  ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை படிக்கக்கூடிய மாணவ-மாணவியரும் அவர்தம் பெற்றோரும் என ஏறக்குறைய தமிழ்நாடே குழப்பத்தின் உச்சத்தில்  இப்போது தவிக்கிறது… 
புதிய அரசு கொண்டுவந்த சமச்சீர்க் கல்வித் திருத்தச் சட்டத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது. தமிழகஅரசு இதைஎதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. முந்தியஅரசு அச்சிட்டு அனுப்பிய புத்தகங்கள் தேக்கி வைக்கப்பட்டு, புதியஅதாவது கடந்த ஆண்டு இருந்த பாடத்திட்டப்படியான-- நூல்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. மெட்ரிக் பள்ளிகளோ, ‘அவர்களுக்கான நூலகளை அவர்களே வாங்கிக் கொடுக்கும் வேலையை -இந்த ஆண்டு இல்லைஎன்றிருந்த கொள்ளையை- பெரும்பாலும் செய்துமுடித்து விட்டார்கள்.. இவ்வளவுக்கும் காரணம், ‘சமச்சீர்க்கல்வித்திட்டத்தில் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் தரமாக இல்லைஎன்பதாக இன்றைய முதல்வர் கூறுகிறார், ‘அரசியல் காழ்ப்புஎன்று முன்னாள் முதல்வர் கூறுகிறார். 
பாடநூல்கள், கட்சிஅரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்கவேண்டும்என்று எல்லாரும் விரும்புகிறோம். ஆனால், இதுவரையான தமிழ்நாட்டுப் பாடப்புத்தகங்களில் அப்படி எந்தஆண்டும் இருந்ததில்லை என்னும் எதார்த்தத்தையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இதைப் பாடநூல்களை எழுதும் - மேற்பார்வை செய்து ஒப்புதல் வழங்கும் அந்தந்தப் பாடநூல்களின் ஆசிரியர்கள் அல்லவா முதலில் உணரவேண்டும்?! 
ரு புனிதமான பணியில் ஈடுபடுகிறோம் என்னும் பெருமிதமோ அதற்கான அக-புறத் தகுதியோ இல்லாதவர்கள் பாடநூல் எழுத வரும்போது அதற்கான பிரதிபலிப்பும்பாடநூலில் வெளிப்படத்தானே செய்யும்? வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றாங்க? ‘சட்டியில இருக்கிறது தானே அகப்பையில வரும்? பெரும்பாலும் பள்ளிக்கல்விக்கு நேரடித்தொடர்பில்லாத கல்லூரிப் பேராசிரியர்கள், மற்றும் ஆசிரியப் பயிற்சிநிறுவனப் பேராசிரியர்களே இதுவரை பாடநூல்களை எழுதி வந்துள்ளனர். இப்போதும் --சமச்சீர்க் கல்விபாடநூல்களிலும்-- இதுதானே நடந்தது? எவ்வளவுதான் மேதைகளாக இருந்தாலும் -தொடர்புடைய வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் நடத்திய நேரடிஅனுபவம் இல்லாதவர்கள்- புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு எழுதும் பாடநூல் எப்படிச்சரியாக இருக்கும்?  
பாடம் நடத்தும் ஆசிரியர்களைப் பாடநூலாசிரியர்களாகத் தேர்வுசெய்ய நினைத்த முந்திய அரசின் பள்ளிக்கல்வித்துறை, அவர்களை விண்ணப்பிக்கச் சொல்லி விளம்பரம் செய்தது. பிறகு பாடநூல் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்வும் நடத்தியதுதான் பெரும் வேடிக்கை! 

            ஆமாம்சாமிகள் மட்டும்அடுத்தஆண்டும்; --அதாவது 7,8,9,10 வகுப்புகளுக்கான சமச்சீர்க்கல்விபாடநூல் ஆசிரியர்குழுவில்-- தொடர்ந்து இடம்பிடித்தனர். கருத்துகளை பொருத்தமாகச் சொன்ன ஆசிரியரோடு நல்ல புதிய கருத்துகளை தமிழ் மாணவர்க்குத் தரவேண்டும் என்று துடிப்போடு 6ஆம் வகுப்புத் தமிழ்ப்பாட நூல் ஆசிரியர்குழுவில் இருந்த இரண்டு இளைஞர்களும் அடுத்த ஆண்டு அழைக்கப்படவில்லை! இளஞ்சிறுவரிடையே பெருந்தன்மைப் பண்பை வளர்க்க வேண்டிய ஆசிரியர்குழு, பணியை மட்டுமல்ல பெயரையும் இருட்டடிப்புச் செய்யும் அளவிற்குப் பெருந்தன்மையோடு இருந்ததுதான் சமச்சீர்க்கல்விப் பாடநூலாசிரியர் குழுவின் இலட்சணம்!  
இதுபோலும் சில்லறைத் தவறுகளுக்காகவோ, ‘தற்காலிக இழப்புகளுக்காகவோ வருந்தவில்லை! மாறாக சமச்சீர்க்கல்வி எனும் வாராதுபோல்வந்த மாமணியைத்தோற்போமோ?’ என்றுதான் அஞ்சுகிறேன்.

முந்திய அரசும் பெரும்ஈடுபாட்டோடு சமச்சீர்க் கல்வியைக்  கொண்டுவரவில்லை. கல்வியாளர்கள், சமூக-ஜனநாயக இயக்கங்களின் தொடர்ந்த போராட்டங்கள், தேர்தல் அறிக்கையில் உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டிய அரசியல்எனகலைஞர் கையில் எடுத்தாரே தவிர மெட்ரிக் பள்ளி முதலாளிகளின் உள்ளடிவேலைகளை அவரால் எதிர்கொள்ள இயலவில்லை.
            சமச்சீர்க்கல்வி ஒழியவேண்டும்என்று நினைப்பவர்களின் முதல் எதிரி தமிழ்வழிக்கல்விதான்.  கல்வியாளர் மட்டுமல்ல தேசநலனில் அக்கறைகொண்ட பலரும் சொல்லிச் சொல்லி மாய்ந்துபோ யிருக்கிறார்கள்காந்தியடிகள் சொன்னார்: எனக்கு ஒரு சர்வாதிகாரியின் அதிகாரம் இருக்குமானால், நான் இன்றே நம் சிறுவர்கள் அந்நிய மொழிமூலம் கற்பதை நிறுத்திவிடுவேன். தாய்மொழி மூலம் கற்பிக்கும்படிக் கட்டளையிடுவேன். இம்மாற்றத்தை எதிர்ப்பவர்களை வேலையிலிருந்து நீக்கிவிடுவேன்’ (ஹரிஜன் இதழ் நாள்:22-06-1947) அந்த அகிம்சாவாதியின் கடுமையைப் பார்த்தீர்களா? இதையே நமது பாரதி –‘தமிழருக்குகட்டுரையில், ‘தமிழா பயப்படாதே! ஊர்தோறும் தமிழ்ப்பள்ளிக் கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்என்றதை யார்கேட்டார்கள்? ஆங்கிலப் பள்ளிகளின் கொள்ளைஒருபக்கம் அதிகரிக்கும் போதே அவர்களின் அதிகார அட்டகாசமும் அதிகரிக்க ஆரம்பித்தது. அங்குபடிக்கும் தமிழ்ப்பிள்ளைகள் வகுப்பு நேரம் அல்லாத நேரங்களில்கூட இயல்பாகத் தமிழில் பேச முடியாதபடி அவர்களின் அடிமை மோகம்தலைவிரித்தாடியது!

தமிழகப் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி நிலையங்கள் யாருடைய பிடியில் இன்றும் இருக்கிறதென்பது ஊரறிந்த ரகசியம் தானே? இல்லாவிட்டால் பத்தாம்வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சியில் மாநில அளவில் தொடர்ந்து 26 ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கும் விருது நகரைவிடவும் ஈரோட்டிலும் திருச்செங்கோட்டிலும் ராசிபுரத்திலும் நாமக்கல்லிலும் மட்டும் இத்தனை பணக்காரமெட்ரிக் பள்ளிகளும், சிபிஎஸ்சி பள்ளிகளும் முளைத்துக் கிளைபரப்பியிருக்குமா? அல்லது டீம்டு யுனிவர்சிடிகள் தான் இத்தனை இருக்குமா? ஒரு மெட்ரிக் பள்ளியைத் தொடங்கி அடுத்த ஆண்டே ஆசிரியர்பயிற்சிப் பள்ளிஅடுத்த ஆண்டு ஆசிரியர்கல்லூரிஅதற்கடுத்த ஆண்டு பொறியியற்கல்லூரிதொடரும் ஆண்டுகளில் ஏனைய கல்லூரிகள் இறுதியாக டீம்டு யூனிவர்சிடிஎன வளர்ந்திருக்கும் இவர்களிடம் நாட்டு நலனை உள்ளடக்கிய தாய்மொழிவழிக் கல்வியையோ அல்லது சமச்சீர்க் கல்வியையோ எதிர்பார்க்க முடியுமா? மக்கள் நமது அரசிடம் தானே இதை எதிர்பார்க்க முடியும்

 படைப்பாக்கக் கல்விமுறைமற்றும் செயல்வழிக் கற்றல் முறைநான் பார்த்த வரை குழந்தைகளுக்கான மிகச்சிறந்த கல்விமுறை என்பதில் சந்தேகமில்லை. சமச்சீர்க்கல்வியின் மிகச்சிறந்த முதல் மூன்று வகுப்புகளுக்குப் பாடநூலுக்குப் பதிலாக அட்டைகள் வழி அவர்களே கற்கும் - ஆசிரியர் ஒரு நண்பரைப்போல அருகில் அமர்ந்துவழிகாட்டும் - அருமையான கல்விமுறை.. இதுவும் சமச்சீர்க் கல்விமுறையின் ஓர் அங்கம்தான். இதை ஒப்புக்கொள்ளாத ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் விளக்கி நடைமுறைப்படுத்த வேண்டிய அரசு இதில் முழுமூச்சாக ஈடுபாடு காட்டாதது ஏன்
சமச்சீர்க் கல்வி அறிமுகப்படுத்தும் முன்னதாகச் செய்ய வேண்டிய பணிகளில் முக்கியமான ஒரே மதிப்பெண் பட்டியல்’ 2009-10ஆம் கல்விஆண்டுமுதல் தரப்பட்டது. அதாவது 1100 மதிப்பெண்ணுக்குத் தேர்வு எழுதிய மெட்ரிக் மாணவர்க்கும். 600 மதிப்பெண்ணுக்குத் தேர்வு எழுதிய அரபி மற்றும் சமஸ்கிருத மாணவர்க்கும்,  500மதிப்பெண்ணுக்கே வகுத்துக் கணக்கிட்டு- ஒரே மாதிரியான மதி;ப்பெண் பட்டியல் வந்தது. இந்த 2011-12ஆம் கல்வி ஆண்டில், தேர்வுகளும் 500 மதிப்பெண்ணுக்கே என மாற்றக்கூடிய சமச்சீர்க் கல்விப் பாடநூல்கள் வந்திருக்க வேண்டும்.  இனி வரும் சமச்சீர்க் கல்வி ஆலோசனைக் குழுஇதுபற்றியும் முடிவெடுக்க வேண்டும். 
திரு. முத்துக்குமரன் குழு நூற்றுக்கும் மேற்பட்ட ஆலோசனைகளை முந்திய அரசுக்குத் தந்தது. அதில் ஒரு சில ஆலோசனைகளையே அரசு நடைமுறைப்படுத்தியது. அதில் சொல்லப்படாத நல்லபல கருத்துகளும் உள்ளன. சமச்சீர்க் கல்விப் பாடநூல்கள் மற்றும் தேர்வுகளை நடைமுறைப்படுத்திக் கொண்டே பிறவற்றைத் தொடர்ந்து செய்யவேண்டும். அதில் பொதுப்பள்ளி மிகமுக்கியமானது. பீகாரில் திரு.நிதீஷ்குமார் இதனை -இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்திய மாநிலம்-- எனும் சிறப்போடு நடைமுறைப்படுத்தி வருவதாகச் செய்திகள் சொல்கின்றன. 
யுனெஸ்கோ அறிக்கையின்படி, இன்றைய நிலையில் அனைவருக்கும் கல்விஎனும் இலக்கை 2015ஆம் ஆண்டில்கூட எட்டமுடியாத 40நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்துவிடக் கூடாது எனும் முனைப்போடு நமது மத்தியஅரசுடன், கல்வியாளர்களும், சமூகஆர்வலர்களும், சில முயற்சிகளை மேற்கொண்டனர். இந்தியாவில் ஆறிவொளி இயக்கங்களை நடத்திய அனுபவத்தோடு அனைவருக்கும் ஆரம்பக்கல்வி எனும் சில நல்ல திட்டங்களை முன்வைத்து அரசுக்கு உதவிவரும் அறிவியல் இயக்கம் போலும் சமூக இயக்கங்களை உரியவகையில் பயன்படுத்த அரசு தயங்கக் கூடாது.
மதுரைப் பகுதிப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் தோல்விகள் அதிகம்! ஏனென்று விசாரித்தால் பெரும்பாலான மேல்நிலை வகுப்புகளுக்குத் தமிழாசிரியர்கள் இல்லையாம்! உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக உயர்த்தப்படும்போது தமிழாசிரியர் பணியிடங்களை முந்திய அரசு நான்கு ஆண்டுகளாகவே தரவில்லை எனும் குற்றச்சாட்டும் உள்ளது. இதுபோலும் குறைகளைக் களைந்து, ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தை முன்னேறிய நாடுகள் பலவற்றில் இருப்பது போல 1:20 என இல்லாவிட்டாலும் முத்துக்குமரன் குழுவில் பரிந்துரைத்திருப்பதுபோல 1:30என்றாவது இட்டு, புதிய ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கித் தரவேண்டும்.

இன்னொரு வகையில் பார்த்தால், சமச்சீர்க் கல்வி என்பது கல்வி தொடர்பானது என்பதை விடவும் அது சமுதாயம் தொடர்பானது என்பதே சரியான பார்வை! இன்றைய வகுப்பறையே நாளைய சமுதாயம்! சமூக சமத்துவம் வந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருப்பவர்கள்தாம் - எல்லாவற்றிலும் தனியார் மயம் வரவேண்டும் என்று ஏங்கிக்கிடப்பவர்கள்தாம் - இடஒதுக்கீடே கூடாது என்பவர்கள்தாம் - தகுதி, திறமை எனும் பெயரில் ஏமாற்றி வருபவர்கள்தாம் சமச்சீர்க் கல்வியையும் கூடாது என்கிறார்கள்! நாம் கல்விமுறை மாற்றம் எனும் பெயரில் இவற்றை வரவேற்க வேண்டும் என்பதற்காகவே சமச்சீர்க் கல்வி வேண்டும் என்போம். உச்சநீதி மன்றத் தீர்ப்பை எதிர்பார்ப்போம். தீர்ப்பு எப்படி இருந்தாலும் நல்ல சமுதாயத்திற்கான நமது பணியில் கல்வியின் வழியான நமது பணி தொடர்ந்து நடக்கும் நடக்கவேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------------------------    

இந்தக் கட்டுரை தமிழக அரசின் சமச்சீர்க்கல்வித் திருத்தச் சட்டத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தவுடன், தமழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாகக் கிடைத்த செய்தி அறிந்து -கடந்த 13-06-2011 அன்று-- எழுதி நமது வலையில் வெளியிடப்பட்டது.

நம் நண்பர்கள் பலரும் நல்ல ஆலோசனைகளைப் பின்னூட்டமாக இட்டிருந்தார்கள்.மும்பைக் கவிஞர் புதிய மாதவி சொன்ன விமரிசனத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். கவிஞர் மு.முருகேஷ் சொன்னதைப் போல மறுநாள் ஜனசக்தி நாளிதழுக்கு அனுப்பி வைத்தேன். கடந்த 24-06-2011 அன்று ஜனசக்தியின் துணையாசிரியரும் கவிஞருமான தோழர் ஜீவபாரதி பேசினார். கட்டுரை நீளமாக இருப்பதால் எடிட்செய்து வெளியிடலாமா என்று கேட்டார். அதன் படி அடுத்த நாள் ஜனசக்தியில் வெளிவந்த கட்டுரை சரியாகவே எடிட் செய்யப் பட்டிருப்பதாக நான் உணர்ந்ததன் அடையாளமாக அப்படியே ஜனசக்தியில் வெளிவந்தவாறே- திருத்தி மீண்டும் நமது வலையில் வெளியிடுகிறேன்.

சரியாக கருத்துகளைச் சொன்ன கவிஞர் புதியமாதவிக்கும் கவிஞர் முருகேஷ_க்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. வெளியிட்டமைக்கு நன்றி: ஜனசக்தி நாளிதழ் -25-06-2011.

கல்வி 'புகட்டுவது' சரியா?


'ஏடு தூக்கிப் பள்ளியில் இன்று பயிலும் சிறுவரே, நாடு காக்கும் தலைவராய் நாளை திகழப் போகிறார்' என்று பெற்றோரும் சமு தாயமும் பெரிதாய் எதிர்பார்த்திருக்க, அவர் களில் பலர் பாதியிலேயே படிப்பை விட்டுவிட்டு ஓடுவதும், சிலர்வாழ்க்கையைத் தொடங்குவ தற்கு முன்பே தோற்றுவிட்டதாய் நினைத்து, தற்கொலையைத் தேடுவதும் ஏன்?
                சென்னையில் ஒரு பள்ளிமாணவர் தற்கொலை’, ‘புதுவையில் ஒரு மாணவிக்குத் தண்டனை தந்த ஆசிரியர் கைதுபோன்ற செய்திகள் தரும் பாடம் என்ன?
சுவையாக இருக்கவேண்டிய கல்வி, சுமையாகிப் போவது ஏன்? 
'நாளை பள்ளிக்கூடம் விடுமுறை' எனும் செய்திவந்தால், மாணவர்தம் மகிழ்ச்சிக்கூச் சலில் அந்தப் பிரதேசமே கிடுகிடுத்துப்போவது உண்மையா இல்லையா? உண்மைதான் எனில், பள்ளிக் கூடங்களைச் சிறைக்கூடங்களாக மாணவர் கருதும் நிலை ஏன் உருவாகிறது?
சுவைக்கும் கற்கண்டு போல இருக்கவேண்டிய கல்வி, சுமக்கும் கல்போல் மாறக் காரணம், பள்ளிச்சூழலா? பாடத்திட்டமா? ஆசிரியர்களா? இல்லை, அரசாங்கமா? என்று சிந்தித்துப் பார்த்தால், ‘ஏன் பெற்றோர்க்கு இதில் பொறுப்பில்லையா?’என்னும் கேள்வியும் எழுவதைத் தவிர்க்க முடியாது! அவர்களுக்கும் பொறுப்பு உண்டு. அனைவரும் முடிந்தவரை அலட்சியப்படுத்தியதன் விளைவுதான் தற்போதைய கல்வி நிலை!
ஆங்கிலப் பிரபுக்களுக்குத் தேவையா யிருந்தது, தொண்டூழியம் செய்யச் சில'கேள்வி கேட்கத் தெரியாத' கிளிப்பிள்ளைகள்தான்!அதற்கேற்ற பாடத்திட்டம் அவர்களுக்குச் சரி! சிந்தித்து, நாட்டு முன்னேற்றத்தில் பங்கேற்கும் செயல்வீரர்களை உருவாக்குவதற்கேற்ப, பாடத்திட்டம்  மாற வேண்டும்! அண்மையில் அண்ணாபல்கலைக்கழக விழாவொன்றில் பேசிய தமிழக முதல்வர் அவர்கள்,"சுய சிந்தனைக்கும், புதிய கண்டுபிடிப்புக்கும் ஊக்கமளிக்கும் வகையில் பாடத்திட்டத்தையும் கற்பிக்கும் முறைக ளையும் மாற்றியமைக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்கள்! வரவேற்கத் தக்க கல்விக் கருத்து! அதற்கேற்ப செயல்திட்டம் வகுத்து, நடைமுறைப் படுத்தினால், மாணவர்கள் இன்றைய கல்வியைச் சுமையாகக் கருதும் நிலையில் மாற்றம் வருவதோடு, சுவையாகக் கற்கவும் தொடங்குவர். அத்தகைய அறிவார்ந்த குழந்தைகளால்தான் நாளைய சமூகம் நல்ல சமூகமாகும் என்பதில் சந்தேகமென்ன?
நமது அறிவியல் அறிஞரும், குடியரசுத் தலைவருமான மேதகு அப்துல் கலாம் அவர்களின், 'அறிவியல் தொழில்நுட்பம்' பற்றிய கட்டுரையை, பத்தாம்வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் முதல்பாடமாக வைத்திருப்பது, பயிலும் மாணவர்க்கு மட்டுமல்ல பயிற்றுவிக்கும் ஆசிரியர்க்கும்கூட மகிழ்ச்சி தரும் அனுபவமாகும்.  ஆயினும், மனப்பாடத்தேர்வு முறையும் அதையே கவனப்படுத்தும் மதிப்பீட்டுமுறையும் மாற்றப்படாதவரை பாடநூல் மாறுவதால் மட்டும் எந்தப்பலனும் இராது என்பதே கல்வியாளர் கருத்து.
                பெரும்பாலான தனியார் மெட்ரிக் பள்ளிகளிலும், சிலஅரசுப்பள்ளிகளிலும் கூட 9,11ஆம் வகுப்புகளை நடத்தும் வழக்கமே இல்லை! அந்தமாணவர்க்கு, முறையே10, 12ஆம் வகுப்புப் பாடங்களே இரண்டுவருடங்களும் நடத்தப்படுவது ஊரறிந்த ரகசியமாக உள்ளது! இரண்டு வருடமும் ஒரே புத்தகத்தை உருப்போட்டமாணவர்கள், தொழிற்கல்வி நுழைவுத் தேர்வுகளில் உருப்படாதமதிப்பெண் எடுக்கும் ரகசியமும் இதுதான்! அந்தந்த வயதிற்கும், உளவியல்- சொல்லாற்றல்-பொது கவனிப்புத் தன்மைக்கும் ஏற்றவாறு பாடங்கள் தயாரிக்கப்படுவது உண்மை யெனில், இந்தப்பள்ளிகள் இந்த வகுப்புகளையே புறக்கணித்துவிட்டு-ஒரே தாண்டாகத் தாண்டி-அடுத்த வகுப்புக்கு மாணவர்களைக் கடத்திகொண்டு போவது எப்படி அனுமதிக்கப் படுகிறது?
இப்படியான பள்ளிகளில், மாணவர்கள் மனப்பாட எந்திரமாக மாற்றப்படுவதன்றி வேறுவழி யென்ன? பாடமும் புரியாமல்,மனப்பாடமும் செய்ய முடியாமல் மாணவர்கள் படும் அவதியும், 'முடியாத' மாணவர்கள் கடுமையான தண்டனைக்கு ஆளாவதும் பள்ளிக் கூடத்தையே வெறுப்பதும், வாழ்க்கையே வெறுத்துப்போவதுமான நிலைமை தொடர்கதையாகிறது! எப்படியாவது மதிப்பெண் வாங்கவைக்கும் எந்திரம்தானா ஆசிரியர்கள்?
9மற்றும் 11 ஆம் வகுப்பு பாடங்களை நடத்தாத பள்ளிகளை, பள்ளிக் கல்வித்துறை கண்டறிந்து, அந்தப்பள்ளிகள் பாடப்புத்தகங்களை முழுவதும் நடத்தி, ஆண்டுத் தேர்வுக்குப் பிறகே அடுத்த வகுப்புப் பாடங்களைத் தொடங்க வேண்டும் என்பதை அறிவுறுத்த வேண்டும்.
தேர்வு முறையில் நிச்சயமாகச் சில மாற்றங்களைக் கொண்டுவரலாம். நூறுவகை வினாத்தாள்களைத் தயாரித்து வைத்துக்கொண்டு, ஒரேவகுப்பு மாணவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை வினாத்தாள் வீதம் கொடுப்பது எனும் 'வினாவங்கி'-முறையில் தேர்வை நடத்தினால், 'பிட்' அடிப்பது, 'காப்பி' அடிப்பது, 'பின்தொடர்வது' (paper chasing) போன்ற தேர்வு முறைகேடுகளைக் களையமுடியும். அதோடு, திருத்தப்பட்ட தாள்கள் அனைத்தையுமே மாணவர்க்குக் கொடுத்துவிடுவது எனில், முறைகேடுகள் முற்றிலும் ஒழிந்துபோகும். ஆசிரியர் 'மூடு'க்கு ஏற்ப மதிப்பெண் வழங்கவும் இயலாது. மாணவர்- பெற்றோர்  மனஅமைதியும் குலையாது. ஆண்டுமுழுவதும் இதேமுறை கடை பிடிக்கப் படுமானால்,ஆண்டுத்தேர்வு பற்றிய அச்சமும் எழாது.
மருத்துவம், பொறியியல், போன்ற தொழிற்கல்வி வகுப்புகளுக்கான சேர்க்கைகளை முதலில் துவங்கிவிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டால், தற்போது தேவையில்லாமல் 'தொழிற் கல்வி' இடம் கிடைக்குமோ இல்லையோ எதற்கும் கலைக்கல்லூரியிலும் ஓர்இடம் பிடித்துவைப்போம்' எனும் வீண் செலவும் தவிர்க்கப்படும். கலைக் கல்லூரிகளில் அனாவசியமாக நடந்துவரும் மாணவர் 'பாட மாறுதல்-இடமாறுதல் பிரச்சினை' சீராகும்.மாணவர்க்குக் காலமும், பெற்றோர்க்குக் காசும் மிஞ்சும்!
ஆரம்ப வகுப்புகளிலிருந்தே சுமாராக எழுதத்துவங்கும் மாணவர் சுவடிகளில், அவ்வப்போது 'நன்று', Good! என்று, எழுதுவதும், குறிப்பாக அவர்கள் எழுதும்போது அருகில்செசூழ், மற்ற மாணவர்கள் நடுவில் வைத்துப் பாராட்டுவதும் நல்ல பலனைத் தரும். குறிப்பாகச் சிறுவர்களைத் தொட்டு ஆதரவாகப்பேசினால், தவறு செய்த மாணவர் நெகிழ்ந்துவிடுவது உறுதி. 'கடிதோச்சி மெல்லஎறிக' என்பதே சிறந்தவழி என்பதை ஆசிரியர்களும் புரிந்துகொள்ள வேண்டும்!
கல்வி புகட்டப்படுவதல்ல! பூக்கவைப்பது! 'கல்வி' எனும் சொல்லே, 'உள்ளிருக்கும் திறனை வெளியே கொண்டுவருவதுஎனும் ஆழ்ந்த இனிய பொருளைக் கொண்டதுதானே? மாட்டுக்கு மருந்து புகட்டுவதும், மாணவர்க்குக் கல்வி புகட்டுவதும் ஒன்றல்லவே?
              கல்விநிறுவனங்களில் ஒழுக்கத்தையும், கட்டுப்பாடுகளையும் வளர்க்க உண்மையிலேயே நினைத்தால், பள்ளி-கல்லூரிகளில் நடப்பதாகக் காட்டும் ஆபாசக் கூத்துகளை சின்ன-பெரிய திரைகளில் மட்டும் அனுமதிப்பது எப்படி?
கல்வி நிறுவனங்களைக் காட்டிலும் வலிமையாக மாணவர்களைப் பாதிக்கவல்ல திரை ஊடகங்களை அரசுகளே கட்டுப்படுத்த முடியாதபோது, கல்வி நிறுவங்கள் மட்டும் என்ன அந்தரத்தில் நின்று மந்திரம்போட்டா மாணவர்களைக் கட்டுப்படுத்த முடியும்?
பாட நோட்டுகளில் கூட திரைப்பட நடிகர்-நடிகைகளை அட்டையில் போட்டுப் பிஞ்சுகளை நஞ்சாக்கியும் காசுபண்ணும் நிறுவனங்களை அரசாங்கமல்லவா தடைசெய்ய வேண்டும்?
பகலில் பெரும்பாலான நேரம் பள்ளியில்தான் மாணவர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான் என்றாலும், வீட்டு-நாட்டுச்சூழலின் பாதிப்பை முற்றிலுமாக மாற்றிவிடும் நிலைமையிலா நமது பள்ளிகளும் கல்லூரிகளும் இருக்கின்றன?
வாழ்க்கையைக் கொடுக்கும் பாடங்களை மருந்துபோலத் தருகிறோம்! கல்வி சுமையாகிறது! வாழ்க்கையைக் கெடுக்கும் படங்களை விருந்துபோலத் தருகிறோம்! வாழ்க்கையே சுமையாகிறது!
                திரைப்படங்களை மட்டுமல்ல, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களைக் கூட மாணவர்களும் பெற்றோரும் பார்க்கப் பயிற்சி தேவை. அதோடு, பத்திரிகை இதழ்களில் வரக்கூடிய அறிவு சார்ந்த செய்திகளையும் பாடத்திட்டத்தில் சேர்த்துப் பயில்வது தொடர்பாகவும் யோசிக்கவேண்டும்.
அறிவியல் கண்டுபிடிப்பின் உச்சமாக உள்ள கணினியை இன்றைய மாணவர்கள் சரியாகப் பயன்படுத்த வழிகாட்டுவது மிகவும் அவசியம். கணினி வலைதளங்களில் ஏராளமான அறிவுத் தகவல்கள் கொட்டிக்கிடந்தாலும், இளமைக்கே உரிய பலவீனத்தைப் பயன்படுத்தி, ஆபாசங்களையே காட்டிக் காசுபறிக்கும் கணினிமையங்களைக் கட்டுப்படுத்த சட்டமேதும் இல்லை! சரி, புதிய சட்டங்களை உருவாக்குவதுபற்றியோ, தடைசெய்யப்பட்ட வலைதளங்கள் ('A' Websites) மீண்டும் 'தமிழ்' பெயருடனே வருவதைத் தடுக்கவோ எந்த நடவடிக்கையும் எடுத்திருப்பதாகத் தெரியவில்லையே?
மாணவப் பருவத்துக்கே உரிய புதியன காணும்ஆர்வத்தைப் புரிந்து, கல்வி உண்மையிலேயே புதுமையானதாக இருந்து, கற்றல் அனுபவமும் இனிமையானதாக இருந்தால், எந்த மாணவரும் நன்கு கற்றுக்கொள்ள முடியும். வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்த மொழிப்பாடங்கள் உதவுகின்றன, வாழ்க்கைச் சிக்கல்களைப் புரிந்துகொள்ளும் வாழ்வியல் அறிவைத்தர அறிவியல், கணித, சமூகப் பாடங்கள்உதவுகின்றன. இதை மாணவர் உணருமாறு அந்தந்த வகுப்புப் பாடங்கள் அந்தந்த வயதுக்கேற்ப இருப்பதும், பயிற்றுமுறை இனிமையானதாக இருப்பதும் மிக அவசியம்.
இந்தப் படிப்புத்தான் எனக்கு கவுரவமான வாழ்க்கையைத் தரும்என்று மாணவரை நம்ப வைப்பதும் முக்கியம். இதில்தான் சமூகச்சிக்கல் குறுக்கிடுகிறது. படிப்பு குறைந்தாலும் பணம் இருந்தால் உயர்கல்வி உண்டு எனும் உணர்வில்தான் பணக்கார மாணவர்கள் தாமும் படிக்காமல், படிக்க நினைப்பவரையும் விடாமல் ஜாலியாக இருக்குமிடமாகப் பள்ளியை நினைப்பது, படிக்க நினைக்கும் மாணவரையும் விடாமல் பள்ளிச்சூழல் கெடக் காரணமாகிவிடுகிறது.
கல்வியை, அடுத்த தலைமுறையை உருவாக்கும் கருவியாக நினைக்கும் நல்ல கல்வி நிறுவனமும், உண்மையும் திறமையும் மிகுந்த ஆசிரியர்களின் உழைப்பும் மதிக்கப்பட வேண்டும். நல்லாசிரியர் விருதுகளும், ஆசிரியர்தின விழாக்களும் எந்திர கதியாக இருப்பதைக் கைவிட்டு, உணர்வு பூர்வமாக ஆக்கபூர்வமாக நிகழ அலுவலர்கள் கூடுதல் உணர்வுடன் பணியாற்றுவது நல்லபலனைத்தரும். 

-- நா. முத்து நிலவன்-2003