“தமிழ் இனிது” - இரு குறுங்கட்டுரைகள் -7,8.

 தமிழ்இனிது -(8)- 25-7-2023 

அக நக முக நகபாடல் உச்சரிப்பு சரியா

( நன்றி : இந்து தமிழ் நாளிதழ் - 25-7-2023 செவ்வாய்) 

--------------------------------------
---------------------------------------

      பொன்னியின் செல்வன்-2 பாடல் இது. குடை பிடித்திடும் நெடுமரச் செறிவே, பனி உதிர்த்திடும் சிறுமலர்த் துளியேஇளங்கோ கிருஷ்ணன் பாடல் அழகு! ஆனால், எழுத்தை, பாடல் முழுவதும் ga என்றே பாடுகிறார் சக்திஸ்ரீ கோபாலன். mugil, magal, punnagai இவ்வாறு!  “இப்பாடலின் க உச்சரிப்பு சரியா” என்று  பலரும் கேட்கிறார்கள்..

புகழ்பெற்ற,முகத்தில் முகம் பார்க்கலாம்” (படம்-தங்கப்பதுமை-1959), “நறுமுகையே” (படம்-இருவர்-1997) போன்றவற்றில் இல்லாத (ga) ஒலி, இதில் எப்படி வந்தது? (‘தமிங்கில’ மொழி பெயர்ப்பை விட்டு விடுவோம்!)

இந்தியில் Khanaஉணவு, Ghanaபாடல்!  தெலுங்கில் Mugguகோலம் Mukkuமூக்கு! என ஒலி மாறினால் பொருள் மாறுவதே அதிகம். தமிழ்ச்சொல், உச்சரிப்பு வேறுபட்டும் பொருள் மாறுவதில்லை. அதனால், “அகநக முகநக” உச்சரிப்பு மாறினாலும் பொருள் மாறவில்லை. எனினும் கலை சொல்லித் தரும் ஆசாரம்தானே கலாசாரமாகும்?  (பாவம், பாவம் போலும் சில சொற்களில் வடமொழி, ஆங்கிலத் தாக்கமே இங்கு தமிழ் உச்சரிப்பைத் தாக்குகிறது! இதில்தான் கவனம் தேவை)

எழுத்து -

gha என ஒலிப்பதுங்கம், (ங்க-இன எழுத்தை அடுத்து),

ha என ஒலிப்பதுகாகம், (நெடிலை அடுத்து)

kha என ஒலிப்பதுக்கம் (அதே ஒற்றை அடுத்து)

ka என ஒலிப்பதுகலை, காலை, அகம், முகம் (சொல்லின் முதலில் வரும்போது அழுத்தமாகவும், இடையில் வரும்போது நெகிழ்வோடும்முகத்தில் முகம் பார்க்கலாம் பாடல் போல)  

அடுத்த எழுத்தால் ஒலி மாறுவது சரியா எனில், தாய்க்கு மகனாக இருப்பவனே, தன் மகளுக்குத் தந்தை, மாப்பிள்ளைக்கு மாமா, இணையருக்கு கணவர் எனில், ஒருவருக்கே இத்தனை பெயரா? என்று கேட்பதில்லையே! இதுதான் வாழ்வியல் முறை!

தியாகம், ரட்சகன் போல வடசொல்லைத் தமிழில் சொல்லும் போது, எழுத்தை Ga என்று ஒலிப்பதே தவறான வழக்கு. அந்த பாதிப்பில் தமிழ்ச் சொல்லையும் க (ga) என்பது தமிழ்மரபு அல்லவே! கிரந்த எழுத்து உச்சரிப்புப் பற்றித் தனியாக விரிவாகப் பேச வேண்டும்.    

சிறப்பு-அழுத்தம் தந்து, ஷிரப்பாக” சொல்வது சிரிப்பாகிவிடும்!

உடல்சூட்டை, காய்ச்சல் சுரம் (சுர்-வெப்பம்) என்று சரியாகச் சொல்வர் படிக்காதவர்! அதை ஜூரம் என்றும், சீன நாட்டிலிருந்து வந்த சீனியைக் கூட ஜீனி என்றும் படித்தவர்கள் சொல்கிறோம்!

 (ka) எழுத்து, அடி நா, அடி அண்ணத்தைப் பொருந்தஉருவாகும் என்கிறது தொல்காப்பியம் (எழுத்து-பிறப்பியல்-89) சரியான உச்சரிப்பை, பள்ளி ஆசிரியரை அடுத்து, காட்சி ஊடகமே கற்றுத்தர முடியும்! இன்றைய காட்சி ஊடகர், இதில் கவனமாக இருந்தால் நல்லது.

வாருங்கள், “அகநக முகநக” அழகாகப் பாடுவோம்! தமிழ் இனிது!


( நன்றி : இந்து தமிழ் நாளிதழ் - 18-7-2023 செவ்வாய்)

தமிழ் இனிது –(7)–

தமிழில் எழுதிப் பழகுவோம்!

தொலைக்காட்சி விளம்பரங்களின் கீழே, ‘சித்தரிக்கப்பட்டதுஎன்று ஒரு வரியைப் பார்க்கலாம். சித்திரம்சித்திரிக்கப்படும்என்பதே சரியானது.  ‘கத்திரிக்கோல்’ வேறு, ‘கத்தரிக்காய்’ வேறு தானே? அகராதிகள் இவ்விரண்டு சொற்களையும் இரண்டு மாதிரியும் சொல்கின்றன! ஒருவேளை, இந்தக் குழப்பத்தில்தான்  அந்தச் சொல் சித்தரிக்க’ப் பட்டிருக்குமோ!?

     ‘வணக்கத்தை முதற்கண்தெரிவிக்க வேண்டியவர், ‘முதற்கண் வணக்கம்’ ‘இரண்டாம்கண் வணக்கம்’(?) என்றால், மூன்றாம் கண் திறக்குமா? ‘முயல்கிறேன்என்பதைமுயற்சிக்கிறேன்என்று பிழையில் சிக்’குவது ஏன்?!  

முக்காலமும் நடக்காது என்பதைச்சொல்ல வருபவர், ‘ஒருகால்என்பதை, ‘ஒருக்காலும் நடக்காதுஎன்கிறார்! மறு கால் மட்டும் நடக்குமோ?

பிழை திருத்தம்செய்பவரே, ‘பிழைத் திருத்தம்என்று பிழை செய்தால் அவரைத்தான் திருத்த வேண்டும். இது ஒரு சிறுகுறைதான், ஆனால், திருத்தாமல் விட்டால் அதுவேகுற்றம்ஆகிவிடும்! ஏனெனில், தெரியாமல் செய்வதுதவறு’, தெரிந்தே செய்வதுதான்தப்பு’!

சிகப்பா? சிவப்பா?வறுமையின் நிறம் சிவப்பு’(1980), ‘சிவப்பு மல்லி’(1981) திரைப்படங்கள் வந்த பின்னும், ‘நான் சிகப்பு மனிதன்’(1985) என்றொரு படம் வந்து, அதிக கவனம் பெற்றது! ‘கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள, நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப’’ என்னும் (தொல்காப்பியம்-855) இலக்கணத்தை விடவும், கல்வித் துறையை விடவும், ஊடகங்களுக்கே பரவு திறன் அதிகம் என்பதால் ஊடகங்களின் பொறுப்புக் கூடுகிறது அல்லவா?

பத்திரிகை’ ‘பத்திரிகையாளர்களை,பத்திரிக்கை’ ‘பத்திரிக்கையாளர்’ என்றே எழுதுகிறார்கள்! நல்ல தமிழில்செய்தித்தாள்’, ‘செய்தியாளர்என்பது இன்னும் சிறப்பல்லவா? ‘கல்யாணப் பத்திரிக்கைஎன்றால், ‘திருமண அழைப்பிதழ்என்பது இன்னும் அழகல்லவா!

பாராளுமன்றமா?  நாடாளுமன்றமா?

பாராளுமன்றம்பழைய வழக்கு! ‘உலகை ஆள்வதுஎன்று பொருள்! நாடாள்வது நாடாளுமன்றம்தானே? சொல்லின் பொருள் அறிவதும், அது சரியெனில் ஏற்பதும் தானே சரி? ‘ப்ளாட்ஃபாம்’ ‘நடைமேடைஆனதும், ‘சீரியல்’ ‘நெடுந்தொடர்ஆனதும் அப்படி வந்த அழகு தமிழ்தான்!

நம்மைச் சுழற்றியடிக்கும் காற்று, நம் தலையில் குப்பையைக் கொட்டி விட்டுப் போவது இயல்பு! பிறகு நம்மை நாமே தூய்மை செய்து கொள்கிறோம் அல்லவா? அதுபோல, அரசியல், பொருளியல் பண்பாட்டு, வாழ்க்கை மாற்றம் காரணமாக நம் கண், காதுகளில் தானே வந்து விழும் தவறான தமிழ்ச் சொற்களைத் திருத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

தவறாகவே எழுதினாலும் தவறில்லை! ‘Tq’, ‘Nandri’ Gd-n8  என்று தமிங்கில’ எழுத்தில் எழுதுவதை விடவும், தமிழில் முயன்று, தவறாக எழுதி,  திருத்திக் கொள்வது நல்லது! புரிந்து எழுதினால் தவறு நேர வாய்ப்பில்லை! தீர்ப்புகளே திருத்தப் படும் போது, தவறுகளைத் திருத்த முடியாதா என்ன?

கணினித் தமிழ்ப் பிழைகளைத் திருத்த, தமிழ்நாடு அரசு விருது பெற்ற நீச்சல்காரனின் இணையத்தளம் (http://www.neechalkaran.com/) பேருதவி செய்கிறது.

எதையுமேபதட்டத்துடன் செய்வது தவறு! பதறுதல்-‘பதற்றம்என்பதே சரி! அதற்காகப் பதற்றமாகவே இருக்கவும் தேவையில்லை! ஏனெனில் தமிழ், படிக்கப் படிக்க எளிது! பருகப் பருக இனிது!  

--------------------------------------------------------------------------------------------- 


 

தமிழ் இனிது –(6) நன்றி “இந்து தமிழ்“ திசைகாட்டி (செவ்வாய்தோறும்)

 தமிழ் இனிது –(6)

“மாசறு பொன்னே”  ஐந்து விளக்கம்!

ழகும் ஆழமும் நிரம்பிய கலை-இலக்கியம் புத்துணர்ச்சி ஊட்டும். கவிதையே கலைகளின் அரசி என்பார் புதுமைப்பித்தன்.   

இனிய தமிழ்க் கவிதையில் அப்படி “ஒரு சோறு பதம்” பார்ப்போமா?

நெஞ்சை அள்ளும்” சிலப்பதிகாரத்தில் கண்ணகி-கோவலன் முதலிரவு! அதை, இளங்கோவடிகள் பாடுவது  நுட்ப-அழகின் நுனிமுனைக் கொழுந்து!

‘‘மாசறு பொன்னே வலம்புரி முத்தே

காசறு விரையே கரும்பே தேனே ...”

...மலையிடைப் பிறவா மணியே என்கோ

அலையிடைப் பிறவா அமுதே என்கோ

யாழிடைப் பிறவா இசையே என்கோ

தாழிருங் கூந்தல் தையால் நின்னை!’’

இதுதான் கோவலன் சொன்னது!  ஆறு வரியில் ஐந்து நுட்பம் பாருங்கள்-

(1)  சாதாரண வர்ணனைதங்க மேனி, முத்துச் சிரிப்பு, சந்தன வாசம்,

கரும்பு, தேனின் சுவை மாணிக்கம், அமுதம் என கிடைத்தற்கரிய பேரழகு! சிரிப்பு யாழிசையோ?! என ரசித்துப் பாடும் காதல் மொழிகள்! (ஒவ்வொன்றிலும் சிறந்த என்பதற்கான அடைமொழிகள்... கவனிக்க)

(2)  ஐந்து திணை பொன், முத்து, கரும்பு, தேன் - முறையே குறிஞ்சி, நெய்தல், மருதம், முல்லை எனும் நான்கு திணை, நானிலம் தழுவிய காதல்! (காதல் மனைவியைப் பிரிவுக்குரிய பாலைத் திணையில் நினைக்கக்கூட விரும்பாமல் தவிர்த்தான் போலும்! “இந்தக் கோவலனா, பின்னர் அவள் வாழ்வையே பாலையாக்கினான்?!” என்று படிப்போரைச் சிந்திக்க வைத்து, கதைக்குள் இழுக்கும் காவிய உத்தி!)

(3)  ஐந்து புலன்கண்அருகில் கண்டு, காதருகில் மெல்அசைவு கேட்டு, இதழமுதம் உண்டு, நறுமணம் உயிர்த்து, உடல் தழுவி மகிழும் ஐவகை நுகர்வும் (குறள்-1101) இதில் வருகிறது, அறிந்தவர் அறிவாராக!

(4)  நாடகத் தமிழ்அழகை வியந்து அவன் பாட, அவள் புன்னகைக்க, அவன் அணைக்க, மெல்லத் திறந்த இதழ்வழி நறுமணம் வர, முத்தாடி  இதழ்பருக, அவள் நாணித் தலைகுனிய, வரிகளில் விரிவதோ நாடகம்!  

(5)  கண்ணகி பெயர்க்காரணம்கோவலன் இவ்வளவு வியந்து மகிழ்ந்து பலபடப் பாராட்டியும், கண்ணகி ஒரு சொல்கூடப் பேசவில்லை! அவள் நகுவது(சிரிப்பது)கூடக் கண்ணால்தான்! அவள் பெயர் கண்ணகியல்லோ!

இதற்கும் மேல் இயற்கையன்றி, செயற்கை சாராத கற்பனைச் சொற்புனைவு!

எல்லாம் சரிதான்

முதலிரவை எட்டிப் பார்த்துக் கவிதை எழுதலாமா? எனில், அதுதான் படைப்பாளிக்கு உலகம் வழங்கிய பெருமைக்குரிய உரிமை! அதை உணர்ந்து எழுதுவார் நின்று நிலைப்பார், இளங்கோவடிகள் போல!

பொருளற்ற கவிதை புனைவோர், “ஒருநாளில் எட்டுத்தேர் செய்யும் ஆற்றல் மிக்கவன், ஒரு மாதம் முயன்று ஒரே ஒரு தேர்க்கால் மட்டும் செய்தால் அதில் எத்தனை மடங்கு நுட்பம் இருக்கும்” (புறநானூறு-87-ஔவையார்) என்பது உணர்ந்து எழு(து)க கவிஞர்களே! தமிழ் இனிது!

(நன்றி – இந்து தமிழ் நாளிதழ் 11-7-2023 செவ்வாய்)

------------------------------------------------ 


---------------------------------------------------------------------------------